Subscribe

BREAKING NEWS

21 May 2018

மீண்டும் மீண்டும் நம்மை அழைக்கும் குழந்தைவேல் சுவாமிகள் - உழவாரப் பணி அறிவிப்பு

அனைவருக்கும் வணக்கம்..


வருகின்ற ஞாயிற்றுக்கிழமை ஷஷ்டி தினத்தன்று (20/5/2018) சிவன் மலை ஆண்டவர் திருக்கோயிலில்,காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ஐந்து கால பூசையும் மதியம் சாதுக்களுக்கு மாகேஸ்வர பூசையும் நம் "தேடல் உள்ள தேனீக்களாய்" குழுவின் சார்பாக செய்ய உள்ளோம் என்று வலைத்தளத்தில் செய்தி அறிவித்து இருந்தோம். இன்று காலை  அனைத்து பூசைகளும் முடித்து சென்னை திரும்பினோம்.

நாம் நேற்று செய்த உலக நன்மைக்கான பூசை எள்ளளவு கூட எந்த குறையுமின்றி நடந்தேறியது. நிகழ்வின் துளிகளை இங்கே சிறு குறிப்பாக தருகின்றோம்.

1. 5 கால பூசைக்கும் நம் தளம் சார்பாக உபயம் செய்தோம்
2. 3 கால பூசை ( கால சந்தி, உச்சி காலம், சாயரட்சை ) நேரில் கண்டு அருள் பெற்றோம்
3. உற்சவருக்கென நம் தளம் சார்பில் அபிஷேகம் பூசை செய்தோம்
4. நம் தள உறவுகள் அனைவரும் பிரார்த்தித்தோம்
5. சிவன் மலை..சிறிய மலை போன்று இருந்தாலும் ஏறும் போது திருக்கழுக்குன்ற மலை போல் இருந்தது.
6. சென்ற ஆண்டு நாள் முழுதும் ஒரே பூசை ஓதிமலையில் கண்டோம், அதே போல்  இம்முறை ஒரு நாள் முழுதும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை கந்தனிடத்தில் இருந்தோம். கனவிலும் வேல் மறவேன் சென்று நமக்குத் தோன்றியது.
7. நம் தளம் சார்பில் மதியம் நடைபெற்ற அன்னதானத்திற்கு ரூ.2500 அளித்தோம். சுமார் 250 நபர்கள் உணவு உண்டது நேரில் கண்டோம்.
8. பஞ்ச பூத வழிபாடான தீப வழிபாட்டை இங்கு அஷ்ட திக்கு விளக்குளாக ஏற்றாமல், ஒவ்வொரு சந்நிதியிலும் ஏற்றினோம்.
9. சிவ வாக்கியருக்கு விளக்கேற்றி வழிபட்டபோது சிவமே உணர்ந்தோம். போகருக்கு எப்படி பழனியோ, சிவன் மலைக்கு சிவ வாக்கியரே ஆவார்.
10. சிவ புராணம் அச்சிட்ட தொகுப்பை அங்கு வந்த அனைவருக்கும் வழங்கினோம்.

நம் அனுபவத்தை விரைவில் தனிப் பதிவாக அளிக்க குருவருள் புரியட்டும். இன்று காலை ஆயில்யம். மிக  மிக சிறப்பாக கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் அருள் பாலிக்கும் அகத்தியருக்கும் ஆயில்ய பூசை செய்து நம் தளத்தில் உள்ள உறவுகள் அனைவர்க்கும் சங்கல்பம் செய்தோம்.

இவையெல்லாம் ஒரு புறமிருக்க ,இதோ. நாம் அனைவரும் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் உழவாரப் பணி பற்றிய அறிவிப்பை இங்கே தருவதில் நாம் மகிழ்ச்சி கொள்கின்றோம். உழவாரப் பணி - உள்ளத்தை உயர்த்தும் பணி, அகத்தை திருத்தும் பணி என்று சொல்வது சாலச் சிறந்தது. நாம் செய்யும் உழவாரத்தின் சிறப்பு கண்டு சில கோயில்களில் தாமாகவே நமக்கு அழைப்பு விடுகின்றார்கள். அடுத்த மாதம் நம்மை அழைப்பது நம் தாயார் தான்.சரி..இந்த மாதத்திற்கு வருவோம்.

அதே போல் குழந்தைவேல் சுவாமிகள். பரபரக்கும் சென்னையில் அதுவும் குறிப்பாக மயிலாப்பூரில் பேரானந்தத்தை தன் இருப்பால் பரப்பிக் கொண்டிருக்கும் மகான். ஜாதகத்தையே சாதகமாக மாற்றும் வல்லமை படைத்தவர் குழந்தைவேல்  சுவாமிகள். பரபரக்கும் சென்னை வாழ்வியல் ஓட்டத்தில் மனதில் அமைதியை தவழ செய்வதற்கென்றே அருள் புரிபவர் இவர். சொல்லில் அடங்கா சுகானுபவம் தருபவர். நியாயமான பிரார்த்தனைகள் உடனே நிறைவேற்றித் தருவதில் வல்லவர் என சுவாமிகளின் அருளை அடுக்கி கொண்டே போகலாம். நம் தளம் சார்பாக சென்ற ஆண்டு நம் குழந்தைவேல்  திருக்கோயிலில் உழவாரம்  செய்தோம். சுவாமிகளை பற்றி  மூன்று  பதிவு ஏற்கனவே தந்துள்ளோம். சித்தர்கள், மகான்களை பதிவில் அடக்க முடியுமா என்ன? இதெல்லாம் நம் புரிதலுக்குக்கே. இதோ இம்முறையும் நம்மை உழவாரப் பணி செய்ய அழைத்துள்ளார்.


உழவாரப் பணி அறிவிப்புக்கு முன்பாக குழந்தைவேல் சுவாமிகள் பற்றி அறிவோம்.


கயிலையே மயிலை. மயிலையே கயிலை என்று போற்றப்படும் மயிலாப்பூர் எப்போதும் பரப்பாக இருக்கும். இங்கு கபாலீஸ்வரர் கோயில், ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், ஆதி கேசவப் பெருமாள் கோயில், மாதவப் பெருமாள் கோயில் என கோயில்கள் உண்டு. இங்கே அமைதி ததும்ப, பேராற்றாலை பெருங்கருணையோடு உணர்த்த குழந்தைவேலர் குடி கொண்டுள்ளார் என்பது உறுதி.

மிக மிக சிறிய கோயில். கூட்டம் அதிகளவில் இருக்காது. ஆனால் அளவற்ற அருள் வெளிப்பாடு இருக்கும்.இது போன்ற உயிர்நிலை கோயிலை நாம் இங்கு மட்டும் தான் கண்டுள்ளோம். பொதுவாக சித்தர் கோயில்களில் வியாபார நோக்கம் இருக்காது. அது இங்கே கண்கூடு. 

திருமயிலை குழந்தைவேல் சுவாமிகள் பல ஞானிகளுக்கு ஞான குருவாக இருந்தவர். இன்றும் இருந்து கொண்டிருக்கிறார். சித்தர்களுக்கு ஆதி என்று ஒன்று இருக்கும். ஆனால் அந்தம் அவர்களுக்கு கிடையவே கிடையாது.

இரண்டாம் பராந்தக சோழன் காலத்தில் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன் எழுப்பப்பட்ட வேளச்சேரி தண்டீஸ்வரம் சிவன் கோவில். 19 ம் நூற்றாண்டில் கவனிப்பார் இன்றி பழுதடைந்து போய் இருந்தது. அப்பொழுது சிதம்பரத்தில் இருந்து வந்த பெரிய சுவாமிகள் தான் இந்த தண்டீஸ்வரம் கோவிலை புதிப்பித்து கட்டினார்.

முற்றும் துறந்த சிதம்பரம் பெரிய சுவாமிகள். தொழிலார்களுக்கு விபூதியை தான் கூலியாக கொடுத்தார். அந்த விபூதி. அவர், அவர் செய்த உழைப்பிற்கு ஏற்றவாறு பணமாக மாறியது.பல அதிசயங்கள், அற்புதங்களை செய்த சிதம்பரம் பெரிய சுவாமிகளின் உயிர்நிலை கோவில். வேளச்சேரி குரு நானக் பஸ் ஸ்டாப் அருகில் இருக்கிறது.

பிறவியிலேயே ஞானியாக இருந்த அந்த சிதம்பரம்  பெரிய சுவாமிகளின் குரு தான் குழந்தைவேல் சுவாமிகள். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன். துறையூர் வீர சைவ மடத்தின் பீடாதிபதியாக இவர் இருந்தார்.பல சித்த புருஷர்களின் பிறப்பு  பற்றிய குறிப்புகள் அகப்படுவது இல்லை. அதே போல் குழந்தைவேல் சுவாமிகள் பற்றிய முழுமையான குறிப்புகளும் கிடைக்கவில்லை.

பறவைகள் பறந்து சென்ற வானில் அவற்றின் தடயங்களைத் தேடுவது எத்தனை? அபத்தம். அந்தத்தை  (ஜீவசமாதி) மட்டும் மானுடர்க்கு அருள்பாலிக்க அடையாளமாய் விட்டுச் செல்கின்றனர் சித்தர்கள். அதை தான் நாம் பார்க்க வேண்டும்.

குழந்தைவேல் சுவாமிகளும் சரி. அவரது சீடரான முத்தையா சுவாமிகளும் சரி. அவர்களின் புகைப்படங்களை கூட விட்டு செல்லவில்லை. அந்தத்தை அவர்களின் ஜீவ சமாதியை மட்டுமே விட்டு சென்றுள்ளார்கள்.

குழந்தைவேல் சுவாமிகள், அவரது சீடரான முத்தையா சுவாமிகள் இருவருமே ஜீவ சமாதி அடைந்து 180 வருடங்களுக்கு மேல் ஆகி இருந்தாலும். இந்த கோவில் 116 ஆண்டுகளுக்கு முன் தான் துறையூர் வீர சைவ மடத்தால் கட்டப்பட்டது. குழந்தைவேல் சுவாமிகளின் வரலாறை சரியான ஆவணங்களுடன். துறையூர் வீர சைவ மடத்தினர் வெகு விரைவில் வெளியிட உள்ளார்கள்.


அடியேன் கேள்விப்பட்ட வரை ஜாதங்களில் மிகப்பெரிய அளவில் தோஷங்கள் இருந்த பலர். இவரை வழிபட்ட பின் அந்த தோஷங்கள் யாவும் நீங்கி இன்று மகிழ்ச்சியான வாழ்வு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.  தினமும் நவசிவாய மந்திரத்தை ஒரு 5 முறையேனும் சொல்லும் அடியார்கள். சித்தர்களையும் வழிபடுவார்களே ஆயின். அந்த அடியார்களின் ஜாதகம் மாறி விடும். நல்ல விதமாக.

பக்தியோடு சிவனின் திருவடிகளை தொழும் அடியார்கள் யார் எல்லாம் இந்த குழந்தைவேல் சித்தரை தொழுகிறார்களோ. அத்தகைய சிவனடியார்களுக்கு  கோள்களால் ஏற்படும் கோளாறுகள் அனைத்தையும் நீக்குவதில் இந்த சித்தர் வல்லவர்.

நாமும் சென்ற ஆண்டு உழவாரப்பணி நிறைவில் ஜாதகம் வைத்து வழிபாடு செய்தோம். பிரார்த்தனை இன்று நிறைவேறி உள்ளது. மிகப் பெரும் பாக்கியம் பெற்றோம். இதோ, மீண்டும் நன்றி சொல்ல இருக்கின்றோம். 

குழந்தைவேல் சுவாமிகள், சித்தரை மாதம் 13-ம் நாள் பூச நட்சத்திரத்தில் ஜீவ சமாதியடைந்தார். ஜீவசமாதியில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. அவரது சீடரான முத்தையா சுவாமிகள், எப்பொதும் தமது குருவைத் தொழுதுகொண்டே இருக்கவேண்டுமென்று விரும்பியதால் அவரது சமாதி குழந்தைவேல் சுவாமிகள் சமாதியின் முன் அமையப் பெற்றிருக்கிறது. அவரது விருப்பப்படி அவரது சமாதியின் மீது நந்தி பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது.


உழவாரப் பணி மற்றும் கூட்டு வழிபாடு அறிவிப்பு:


விளம்பி வருட வைகாசி  மாத சுவாதி   நட்சத்திர நாளில் (27/05/2018) ஞாயிற்றுக்கிழமை அன்று நம் "தேடல் உள்ள தேனீக்களாய்"குழுவின் சார்பாக உழவாரப் பணி மற்றும் கூட்டு வழிபாடு மயிலாப்பூரில்  உள்ளகுழந்தைவேலர்  சுவாமிகள் திருக்கோவிலில்  நடைபெற உள்ளது.
இறை அன்பர்கள் தங்கள் வருகையை 7904612352 /  96772 67266⁠ எண்களில் உறுதி செய்யவும்.மேலதிக விபரங்களுக்கு அழைப்பிதழை பார்க்கவும்.





எப்படி செல்வது?

மயிலாப்பூர் டேங்க்( கபாலீஸ்வரர்) பேருந்து நிறுத்தத்தில் இறங்கவும். பின்பு அங்கிருந்து தெற்கு மாட வீதியில் நேரே நடக்கவும்.குளம் தாண்டியும் நடக்க வேண்டும். லட்சுமி பவன் தாண்டி,அங்கே வலது புறமாக ஒரு தெரு பிரியும்.அந்த தெரு சித்திரக் குளம் மேற்கு தெரு.ஆரம்பத்திலேயே சில பூக்கடைகள் காணப் படும்.


சித்திரக் குளம் மேற்கு தெரு வழியாக சற்று தூரம் நடந்தால்,அங்கே வலது புறமாக ஒரு தெரு பிரியும்.அந்த தெரு வழியாக சென்றால் உங்களுக்கு கோவில் தெரியும். கோவில் அறிவிப்பு பலகை தெரியம். தங்களின் வசதிக்காக கூகுளை வழிகாட்டி இணைப்பு படங்கள் இணைத்துள்ளோம்.






உழவாரப் பணி சேவைக்கு வரும் அன்பர்கள் தங்களால் முடிந்த அளவு நல்லெண்ணெய் வாங்கி வரவும். மதிய உணவு மற்றும் இன்ன பிற ஏற்பாடுகளுக்காக அன்பர்களின் எண்ணிக்கை தேவைப்படுகின்றது.எனவே மறவாது தங்கள் வருகையை அலைபேசி மூலம் உறுதிப்படுத்தவும்.
தொடர்புக்கு - ராகேஷ் - 7904612352/ சந்திரசேகரன் - 9677267266


அனைவரும் வருக ! இறை அருள் பெறுக !

- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் 

மீள்பதிவாக :-

சித்திரை பூசத்தில் குழந்தைவேல் சுவாமிகளிடம் சரண் அடைவோம் - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_21.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

 ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

 என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html



No comments:

Post a Comment