Subscribe

BREAKING NEWS

16 April 2022

ரமணரின் அவதார நோக்கமே வேறு

 

அது ஹிட்லர் அட்டகாசம் செய்த காலம், உலகமே அவனை வெறுத்த காலம், அவனை பற்றி அந்த திருவண்ணாமலை முனியிடம் கேட்டார்கள், அவர் அமைதியாக சொன்னார்.



"சிலரின் செயல்பாடுகள் அவர்கள் செய்வது போல தோன்றினாலும் காலத்தை மாற்ற வந்த கர்மாக்களை சுமப்பார்கள்கர்மாக்களை அவன் கழிக்கின்றான், எல்லாம் நல்லதற்கே"

அந்த வார்த்தை பின்னாளில் ஹிட்லருக்கு பின் ராக்கெட் யுகம் எழும்பியது, அணுயுகம் எழும்பியது, ஏகபட்ட நாடுகளுக்கு சுதந்திரம் கிடைத்தது, பிரிட்டன் எனும் பெரும் ராஜ்ஜியம் சரிந்தது என உலகம் உணர்ந்தது. 

 

(உண்மையில் இந்த உலகை மாற்றி வைத்தவன் ஹிட்லர், இவ்வளவு வேகமாக உலகம் மாற பெரும் காரணம் அவன்)அந்த முனிவன் சொன்னது முழுக்க உண்மையாயிற்று முக்காலமும் உணர்ந்த ஞானிக்கே அந்த வரிகள் சாத்தியம், அந்த ஞானி ரமண மகரிஷி தவமும் விரதமும் யோகமும் சனாதான தர்மத்தின் அடித்தளமான. மாபெரும் தியானத்தால் ஒருவன் தெய்வநிலை அடையமுடியும் என்பது இங்கு எக்காலமும் போதிக்கபட்ட தத்துவம். 

 

இதனால்தான் ஒவ்வொரு தெய்வத்தின் அமைப்பும் ஒரு தியான நிலையினை போதித்து கொண்டே இருக்கின்றது, ஆயிரம் தத்துவங்கள் அதில்அடங்கியிருக்கின்றன.கடவுள் உன்னுள்ளும் என்னுள்ளும் எல்லா உயிருள்ளும் அசைவன அசையாதன எல்லாவற்றிலும் இருக்கின்றார். என சொன்ன மதம் அது உலகில் நீ செய்யவேண்டியதெல்லாம் கவனித்தல், மிக சரியான பார்வை, அதனை உன்னிப்பாய் செய்யும் பொழுது இறைசக்தியினை உணர்வாய், உலகில் பார்வையாளனாய் இரு என சொன்ன மதமும் அதுவே மிக சரியான அவதாரங்களும் ஞானிகளும் அதை பின்பற்றும் பொழுது அவர்கள் தங்களின் தெய்வ சக்தியினை உணர்த்தினார்கள்.

பஞ்சு எரியும் இயல்பு கொண்டது ஆனால் நீரில் எரியாது, நெருப்பு உரசினால்தான் எரியும் என்பது போல சில தெய்வாம்சமான இயல்பினை கொண்ட மகான்கள் அந்த பயிற்சியால் ஞானத்தில் எரிந்து ஜோதியாய் மின்னுவார்கள்.இந்த திருநாடு ரிஷிகளின் பூமி, யோகிகள், பரமஹம்சர்கள், மகரிஷிகளின் தாய். இங்கு உருவான ரிஷிகள் ஏராளம் நாம் காணாத ரிஷிகள் பல யுகங்களுக்கு முன்னால் வாழ்ந்து அடையாளமிட்டு அரூபிகளானார்கள் எனினும் நம் கண்முன் கண்ட மகா மக ரிஷி ரமணர் வியாசர், வசிஷ்டர் வரிசையில் வந்த மாபெரும் முனி அவர். கடந்த நூற்றாண்டில் இந்நாட்டின் ஆன்மீக சூரியனாக ஒளிர்ந்தவர் அவர். ஞானி என்பதற்கும் இறைவனில் கலந்தவர் என்பதற்கும் அவர்தான் எடுத்துகாட்டு.

 

அந்த மகா முனியின் தவமும் அருளும் அதனால் இந்நாடும் நாட்டுமக்களும் பெற்ற ஞான ஒளி கொஞ்சமல்ல,அவர் மதுரை பக்கம் திருச்சுழி எனும் கிராமத்து பிறப்பு, மிக சிறுவயதிலே மரணத்தின் அனுபவத்தை பெற்று அந்த ஞானத்தில் திருவண்ணாமலை நோக்கி ஓடிவந்து அந்த ஞானபூமியிலே தன் ஞானவாழ்வினை தொடங்கியவர்.ஆம், 12 வயதிலே ஞானத்தை தேடியவர் அவர்.கோவணம் கட்டிய கவுதாம்பீனி கோலத்தில் அவர் தவவாழ்க்கை தொடங்கியபொழுது வயது 14க்குள்தான் இருந்தது, கடவுளை அப்பொழுதே தவகோலத்தில் தேட தொடங்கி கடும் தவத்தில்இறங்கியிருக்கின்றார்,தவமென்றால் சாதாரண தியானம் அல்ல. தன்னை சுற்றி புற்று வளர்வதை கட அறியா அளவு கடும் தவம்

அவரை அடையாளம் கண்ட சன்னியாசிகளே அவரை மீட்டெடுத்து வந்தனர், ஆதியில் அவர் பட்ட கல்லெறியும் பைத்தியம் என விரட்டபட்ட காட்சிகளும் கொஞ்சமல்ல

பட்டை தீட்டபட்டபின் ஒளிரும் வைரம் போல, பாய்ந்த நீர் அணையில் அடங்கி அமைதியாவதை போல கடும் தவத்துக்கு பின் ஒளிர ஆரம்பித்தார் ரமணர் அவரின் வாழ்வினை போதனையினை விளக்க ஆரம்பித்தால் எழுதி முடியாது, அவ்வளவு பெரும் வரலாறு அது மிக சுருக்கமாக சொல்வதாக இருந்தால் எந்த ஞானிக்கும் சற்றும் குறையாத தவ யோக வாழ்வு ரமணருடையது ஆன்மீகத்தின் எல்லா கேள்விக்கும் அவரிடம் பதில் இருந்தது, எதுவுமே அவருக்கு சிக்கலாக இல்லை. அந்த மனம் ஞானகடலாய் ஆன்மீக மழை பொழிந்தது, அந்த ஞானசூரியன் எல்லா இருட்டுக்கும் ஒளிகொடுத்தது.பெரும் மக்கள்திரள் அவரை நோக்கி வந்தார்கள், அவர்களுக்கு மிக சுருக்கமான மொழியில் சட்டென ஞானத்தை உணரவைத்தார். அவரின் மகிமையினை மெல்ல உணர்ந்த மக்கள் அவருக்கு ஆசிரமம் அமைத்து கொடுத்தனர்.



அவர் எல்லா உயிரையும் நேசித்தார் , அங்கு வளர்ப்பு விலங்குகளோடு வாழ ஆரம்பித்தார், அந்த இடமே ரமணாசிரமம்.திருவண்ணாமலை எவ்வளவு பெரும் ஞானபூமி என்பது அவராலே விளங்கிற்று, இந்தியாமுழுக்க அவருக்கு பக்தர்களும் பின்பற்றுவோரும் உருவாயினர். ஏன் அயல்நாட்டில் இருந்தே ஆயிரகணக்கானோர் வந்தனர்.

 

ரமணரின் அவதார நோக்கமே வேறு என்பதால் அவர் அமைதியாக புரட்சி செய்தார், பேசாமலே ஏன் திருவண்ணாமலை தாண்டி ஒரு அடி எடுத்து வைக்காலமே மாபெரும் புரட்சியினை அவரால் அமைதியாக செய்யமுடிந்தது.அவர் வாழ்வில் அவர் செய்த அற்புதங்களும் இன்னும் மாபெரும் அதிசயங்களும் எந்த மகானுக்கும் குறைந்தவை அல்ல, மிக பெரிய அற்புதங்கள் அவை.ரமணரால் தீர்ந்த நோய்களும், வாழ்வு பெற்றோரும் ஏராளம் ஏராளம் , சாட்சிகள் தாராளம்.

ஞானம் என்றால் என்ன? கடவுளை அடைதல் என்றால் என்ன கேள்விக்கு, உன்னில் இருக்கும் "நான்" எனும் அகந்தையினை கொன்றுவிடு, நான் என்பதையே கொன்று பிரபஞ்சத்தில் கரைந்துவிடு அதன் பின் நீயும் பிரபஞ்சமும் வேறல்ல என அவர் விளக்கியதெல்லாம் உலகின் ஒப்பற்ற ஞானம்.ரமணரின் வாழ்வின் மகா மகா உச்சம் பால் பிராண்டன். அந்த ஒற்றை மனிதனின் தேடலை கொண்டே ரமணரின் அருமையினை விளக்கிவிடலாம்.அந்த பிரிட்டானியன் கடவுளை தேடினான், அவனின் கேள்விக்கு கிறிஸ்தவ மதம் சரியான பதிலை வழங்கவில்லை அவன் ஞானமான கேள்விகளை கேட்க கேட்க கிறிஸ்தவ மேலிடத்துக்கு எரிச்சல் வந்தது.

 

கடவுளுக்கு கீழ்படி கேள்வி கேட்காதே என்பதுதான் அவர்களின் தத்துவம் என்பதால் கேள்வி எழுப்பாதே , எழுப்பாமல் கீழ்படி இல்லையேல் நரகம் அடைவாய் என மிரட்டினர்.அவனோ அம்மதத்தில் இருந்தே அகன்று ஓடி தேடினான்.அவனின் தேடலுக்கு மேற்கத்திய கிறிஸ்தவம் பதிலளிக்கா நிலையில் யூதமதம் வந்து தேடினான், அம்மதமோ நாங்கள் கடவுளின் மக்கள் நாங்கள் மட்டுமே கடவுளின் மக்கள் என விரட்டிவிட்டது.

யூத ரபி எனும் போதகர்களும் அவனுக்கு ஞானம் வழங்கவில்லை,அவன் இஸ்லாமியரிடம் தஞ்சமடைந்தான், அங்கும் அவன் தெளியவில்லை. அது ஏக இறைவன் மதமாயினும் சமூக சமத்துவம் எல்லோரும் சமம் என சமூகத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் மதமாயிருந்தது ஆன்மாவினை தேட அதிகம் சொல்லவில்லை என வெளியேறினான் பிராண்டன் எகிப்து பிரமீடுகளில் நள்ளிரவில் தவமிருந்தான், அங்கொரு மகானின் ஆவி வந்து உன் கேள்விக்கு இங்கு விடையில்லை என விரட்டிவிட்டது, அந்த ஆவியின் பல விளக்கங்கள் அவனுக்கு புரியவில்லை எகிப்தின் மாந்திரீகங்களெல்லாம் கண்கட்டு சித்துக்கள், அவையெல்லாம் வெறும் மாய விளையாட்டுக்கள் ஞானம் வழங்குபவை அல்ல என்பதையும் உணர்ந்தர்.

 

மந்திரங்களும் மாய ஆவிவிளையாட்டும் ஞானம் அல்ல, அவை உலகில் ஒன்றையும் சாதிக்காது என்பதும், அவையெல்லாம் பெரும் சக்திக்கு கட்டுபட்டது என்பதும் அவருக்கு விளங்கிற்று.அதன்பின் புத்தகுருக்களிடம் தஞ்சமடைந்தான், அவர்களும் அன்பே கடவுள் என சொல்லி அனுப்பி வைத்தனர்.இமயமலையெங்கும் சுற்றினான், கங்கை கரையில் நீந்தினான் அவனின் தேடலுக்கான விடை இல்லை, இரை தேடும் கழுகு போல பறந்துகொண்டே இருந்தான்.காஞ்சி பெரியவரிடம் ஞானம் தேடி கடவுளை தேடி அவன் சரணடைந்தபொழுது அவர் அவனை ரமணரிடம் அனுப்பி வைத்தார்.

 

கடைசியாக திருவண்ணாமலைக்கு வந்தான், ரமணரை சந்தித்தான்.ரமணர் அவன் தேடலை நொடியில் தீர்த்துவைத்தார், கடவுள் கண்ணுக்கும் உடலுக்கும் தெரிய கூடியவரல்ல, அடைய கூடியவரும் அல்ல, மனதால் உணரவேண்டியவர் எனும் ஞானம் அவனுக்கு அங்கே உதித்தது.அவர் அர்ஜூனன் வில்போல் கேள்விகளை தொடுத்தான், நைல் நதிபோல் பிரவாகமாய் பொங்கினான், ரமணர் அவனுக்கு தெளிவான விளக்கத்தை களங்கமில்லா சூரியனாய் கொடுத்துகொண்டே இருந்தார்.அவரிடம் தான் ஞானம் பெற்றுவிட்டதாக சொல்லி மகிழ்ந்து இந்தியாவில் சித்தியடைந்து மகிழ்ச்சியுடன் ஐரோப்பா திரும்பி தன் அனுபவங்களை புத்தகமாக வெளியிட்டான்.அதிலிருந்து திருவண்ணாமலைக்கு ஐரோப்பாவில் கடும் மரியாதை தோன்றியது, காசி போல புண்ணிய ஷேத்திரமாக அம்மக்கள் அதை குறித்து கொண்டு ஓடிவந்தனர், இன்றளவும் அது தொடர்கின்றது.திருவண்ணாமலை வருவோர் முதலில் தேடும் இடம் ரமணாஷிரமே. அந்த அளவு அந்த ஞானகடலாய் அது திகழ்கின்றது.கிறிஸ்துவத்தை கொண்டு வந்து இங்கு அழிச்சாட்டியம் செய்த ஐரோப்பியருக்கே சனாதான தர்ம பெருமைகளை சொல்லி கொடுத்து அங்கு பரப்ப வழிசெய்த யோகி ரமணர்.

 

ரமண மகரிஷிக்கு முதலில் புற்றுநோய் வந்தது, 10 ஆண்டுகள் அவர் அதனால் பாதிக்கபட்டும் அவருக்கான காலம் இருந்தது, பின்பு அவதார நோக்கம் நிறைவேறிற்று.புற்றுநோய் கட்டிக்கான சிகிச்சையில் மயக்க மருந்து இன்றி அவரின் கட்டி அறுவைசிகிச்சை செய்யபட்டது மகா அசாத்தியமான விஷயம், ரமணரால் எப்படி சாத்தியாயிற்று என்றால் அவரின் கடும் தவமும் உடலையும் ஆன்மாவினையும் பிரித்து பார்த்த அந்த ஞான யோககர்மா எனும் சித்தியுமாகும்.

இதுதான் அதாவது மனதையும் உடலையும் ஒரு ஞானியால் ஆன்ம சித்தி பெற்றவனால் விலக்கி பார்க்கமுடியும் என்கின்றது தர்மம், அதை திருநாவுக்கரசர் செய்தார் பல ஞானியர் செய்தார்கள்.ரமணரும் செய்தார், அந்த அளவு அவரின் யோக பயிற்சி உடலை மனதில் இருந்து ஒதுக்கி வைக்கும் அளவு மகா உன்னதமாய் இருந்திருக்கின்றது.

அவரின் வாழ்வில் இதெல்லாம் யானை புல்கட்டு தூக்கியது போல மிக சாதாரணம்.ரமணர் அதிகம் பேசியவரும் அல்ல, ரமணர் ஊர் ஊராய் சுற்றியவருமல்ல. ஆனால் ஏன் உருவானார்?

ஞானிகளும் யோகிகளும் உரிய காலத்தில் உரிய காரணங்களுக்காக அவதரிப்பர்.ரமணரின் பிறப்பு சாதாரண காலம் அல்ல, உலகபோர்கள் தொடங்கி நவீன அழிவு காலத்தில் உலகம் அடியெடுத்து வைத்த காலம் இந்தியா சுதந்திர போராட்டம் மதகலவரம் பிரிவினைவாதம் மதமாற்றம் என குழப்பத்தின் உச்சத்தில் இருந்த காலம்.கூடவே நாத்திகவாதம் தலையெடுத்த காலம், அது உலகை அச்சுறுத்த தொடங்கிய காலம், விஞ்ஞானமும் நாத்திகவாதத்துக்கு உரம்போட்டு வளர்த்த கொடும்காலம்.

 

அந்த காலத்தில்தான் அந்த அவதாரம் இங்கு வந்தது, அது பல காரணங்களுக்காக தவமிருந்தது ரமணரால் இங்கு இந்துமதம் ஒரு அடையாளம் கண்டது, அந்த தத்தளித்த கப்பல் ஒரு நங்கூரமாய் அவரில் நம்பிக்கை கொண்டது.நாத்திகமும், மிஷனரிகள் அட்டகாசமும் இன்னும் பலவும் தமிழகத்தை சுழன்றடிக்க தொடங்கிய காலத்தில் மிக சரியான எதிர்சவாலாய் திருவண்ணாமலை அந்த ஞானமகனை பெற்றெடுத்து வளர்க்க தொடங்கியது.ரமணர் மிகபெரும் மகானும் தீர்க்கதரிசியுமாய் இருந்தார், ஒரு காலத்தில் தென்னாடு வந்து ஞான மார்க்கத்தை சமபடுத்திய அகத்தியரின் தொடர்ச்சி அவர்.ஞானியரின் வாழ்வு அவர்கள் வாழும் காலத்தில் அல்ல, அவர்கள் காலத்துக்கு பின்பே காரணம் உணரபடும்.ரமணர் இங்கு நாத்திக காலத்தில் அமைதியாய் ஞானஜோதியினை ஏற்றிவைத்த மகான், இந்தியா அடிமைபட்டு கிடந்த காலத்தில் ஞானமார்க்க தத்துவத்தை மிக சரியான காலத்தில் சொல்ல வந்த மகான்.மிக சரியான விஷயங்களை உரிய காலத்தில் சொல்லிவிட்டு அவர் சென்றுவிட்டார்

ஆம், இந்நாடு சுதந்திரம் பெற்றபின்புதான் அவரின் ஆன்மா பிரிந்தது. இனி இந்து தர்மம் வாழும் என்ற நிம்மதியுடனேதான் அவர் சமாதிநிலை அடைந்தார்.அவரின் போதனையே ஐரோப்பாவில் ஒளிர்ந்து ஏராளமான ஐரோப்பியரை திருவண்ணாமலைபால் இழுத்து வந்தது.அவரை தொடர்ந்தே ஏகபட்ட ஞானிகளும் மகான்களும்.திருவண்ணாமலையினை தேடிவந்து உருவானார்கள்.விசிறிசாமியார் எனும் யோகிராம் சுரத்குமார் என்பவரும் அந்த தொடர்ச்சியே,அந்த விசிறி சாமியே பாலகுமாரன் போன்றோர் அற்புத ஆன்மீக படைப்புகளை படைக்க காரணம், அண்ணாமலையார் கோவில் போல பாலகுமாரனின் ஆன்மீக படைப்புகள் எல்லா காலத்திலும் நிற்கும்.இன்னும் ஏராளமான மவுன ரிஷிகள் சித்தர்கள் அவர் வழியில் உண்டு, இன்னமும் வருவார்கள்.ரமணரால் இங்கு இந்துமதம் தளைத்தது, ஆதி சங்கரருக்கு பின் இங்கு தோன்றிய பெரும் மகான் ரமணர்.பன்னெடுங்காலத்துக்கு தேவையான காரியத்தை , பல்லாயிரம் ஆண்டுகளுக்கு தேவையான ஞானத்தை இங்கே விட்டுசென்ற மகான் அவர்,பெரும் ஞான சர்க்கரை மலையினை அவர் ஏற்படுத்தினார், இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்த மானிட எறும்புகளுக்கு அது போதும்,அணுசக்தியில் இயங்கும் விண்வெளி வாகனம் தொடர்ந்து பல வருடம் பிரபஞ்சத்தில் பறக்க சக்தி இருப்பது போல, ரமணர் கொடுத்த சக்தி சில யுகங்களுக்கு தாங்கும்.காலத்தால் வந்த ஞானமகன் அவர் கோவணம் கட்டி அந்த பழுத்த ஆன்மீக ஜோதி நிற்கும் அந்த திருகோலம், சிலுவையில் இயேசு தொங்கிய அந்த காட்சிக்கும், பெரும் ஞானியான பட்டினத்தார் கௌதாம்பீனியக நின்ற கோலத்தின் தொடர்ச்சியாகும்.நாம் கண்முன் கண்ட பெரும் அவதாரம் ரமணர். விட்டுபோன இந்து ராஜரிஷிகளின் தொடர்ச்சியாக வந்து இங்கு பார்வையிட்டு சென்றவர்.அந்த ஆசிரமத்தில் அவர் சமாதியினை பல்லாயிரம் பேர் அனுதினமும் வணங்குகின்றார்கள், அவர் காலத்தில் உலகை மிரட்டிய ஹிட்லர் இருந்தான், ரஷ்ய‌ ஸ்டாலின் இருந்தான், அமெரிக்காவின் ஐசன்ஹோவர் இருந்தார், சர்ச்சில் இருந்தார்.இந்நாட்டிலும் காந்தி இருந்தார், ஈரோட்டு ராம்சாமி இருந்தார் இன்னும் யாரெல்லாமோ இருந்தார்கள், டாட்டாவும் இருந்தார், ராக்பெல்லரும் இருந்தார்.ஆனால் உலகம் ரமணரின் சமாதியினையே தேடி வந்து வணங்குகின்றது, ஆன்மீக ஞானியின் மகா அடையாளம் இதுதான்.ரமணர் இறந்த அன்று, அவர் உயிர் பிரிந்தநொடியில் அவர் உடலில் இருந்து பெரும் ஒளி ஒன்று பிரிந்து திருவண்ணாமலை ஆலயத்தை அடைந்ததை கண்ணால் பார்த்த சாட்சிகள் ஏராளம்.

ஆம் அண்ணாமலையாரே அந்த ஆத்மாவினை இங்கு அனுப்பினார், உரிய காலம் முடிந்ததும் அந்த ஆத்மா வந்த இடத்துக்கே எல்லோர் கண்ணும் காணும்படி சென்றது.கண்ணன் உயர்த்திய கோவர்த்தன மலைக்கும், அனுமன் சுமந்த சஞ்சீவி மலைக்கும், ரமணர் அடையாளமான திருவண்ணாமலைக்கும் ஒரு வித்தியாசமுமில்லை

ரமண உபதேசம் நம்மை மலைபோல் காக்கும், நோய்க்கு மருந்தாகும், வாழ்வுக்கு வழியாகும், நள்ளிரவில் விளக்காகும்.ரமணர் அதிகம் பேசவில்லை, ஆனால் பேசவைத்திருகின்றார். அவர் பெரும் அதிசயம் எதையும் கட்டளையிடவில்லை ஆனால் அவரை அண்டியோருக்கு அதிசயங்கள் தானாக நடந்திருக்கின்றன.இந்தியாவின் மிகபெரும் அவதாரம் ரமணர் என்பதில் சந்தேகமில்லை, அவதாரங்கள் மிகபெரும் நோக்கத்துக்காக பிறப்பவை, யாரும் செய்யமுடியா விஷயங்களை செய்பவவை, உலகத்தின் மொத்த சுமையினையும் சுமப்பவை பல்லாயிரம் வருடத்துக்கு ஒரு முறை வரும் அவை ஏகபட்ட வருடங்களுக்கான தத்துவங்களை செயல்களை செய்துமுடித்துவிட்டு கிளம்பிவிடும்.அந்த மாபெரும் தானிய குவியலை தின்று முடிக்க மானிட குருவிகளுக்கு பல்லாயிரம் வருடம் வேண்டும்.ரமணரின் வாழ்வும் அதை சொல்கின்றது.ரமணரின் அருகாமையில் எல்லோருக்கும் அமைதி கிடைத்தது. வாழ்வின் எல்லா பாதிப்புக்கும் இழப்புக்கும் இகழ்ச்சிக்கும் உள்ளானோர் கூட அவர் அருகாமையில் அவர் சந்நிதியில் அமைதி பெற்றனர்.ஆம் அமைதி, முழு மன அமைதி, நிரந்தரமான நிர்மூலமான மன அமைதி தேடித்தான் ஓடுகின்றது மானிட இனம் மானிடனின் குறைந்த பட்ச தேவை அதுவே. அந்த குறைந்த பட்ச நிம்மதிக்குத்தான் மாயையில் சிக்கி உலகை சுற்றிவந்து எங்கும் கிடைக்காமல் தவித்து நிற்கின்றது மானுடம்.நிம்மதி என்பது பொருளில் அல்ல, மாயையில் அல்ல அவனவன் மனதிலே இருக்கின்றது என சனாதன தர்மம் சொன்னதை வாழ்ந்து காட்டி நிரூபித்து ஜோதியாய் ஜொலிக்கின்றார் ரமணர்

 

அன்பு, அது ஒன்றுதான் அனைத்துக்கான ஆதாரம். அன்பில் அமைதிவரும், அமைதியில் ஞானம் வரும், ஞானத்தின் உச்சியில் நான் எனும் அகங்காரத்தை வென்றவனே ஞானி எல்லோரும் வாழ்ந்து,முடித்து,களைத் ஒதுங்கும் அந்த நிழலுக்கு இளம் வயதிலே சென்று அமர்ந்திருகின்றார் ரமணர், தன்னை தேடிவருவோர்க்கெல்லாம் அள்ளி அள்ளி அதை கொடுத்திருக்கின்றார்.திருவண்ணாமலை என்பது கங்கை கரைக்கும் , இமயமலைக்கும் குறையாத ஞான பூமி எனும் அசைக்க முடியாத உண்மையினை நிரூபித்தவர் ரமணர் ,ரமணர் அதிகம் பேசவில்லை, ஆனால் அவரை பற்றி பேசாமல் ஆன்மீகம் என்பதே இல்லை.

அந்த ஒரு அணையா தீபம் இனி காலந்தோறும் ஆயிரம் விளக்குகளை ஏற்றிகொண்டே இருக்கும்.

இந்துமத பெருமையினை ஆலய மணியாக, அலை கடலாக, மலை உச்சி இரவு தீபமாக, வானில் சுடராக‌ என்றும் அறிவித்து கொண்டிருக்கும் அந்த ஞானமகனின் குருபூஜை நாள் வியாசர், சங்கரர் போல காலத்தால் வந்து எக்காலமும் நிலைத்துவிட்டவர் ரமணர், அவருக்கு ஆத்மார்த்தமான அஞ்சலிகள் இந்த ஞானபெருமகனும் 60 ஆண்டுகாலம் ஆசிரமம் நடத்தினார், அவருக்கு பின்னரான 70 காலமாக அது செயல்படுகின்றது

 

ஒரு சர்சை? ஒரு குற்றசாட்டு, ஒரு முணுமுணுப்பு உண்டா?ஒருகாலமும் வராது, பரம்பொருள் அதை நடத்தி வந்தான், இன்னும் நடத்தி வருவான்.காரணம் அது ஆடம்பரம் மேலோ, பகட்டின் மேலோ கட்டபடவில்லை மகா தூய்மையான‌ துறவின் மேல் கட்டபட்டிருக்கின்றது.ரமணர் எனும் ஞானமுனி ஒரு பெரும் விளக்கு, திருவண்ணாமலையில் எரியும் மிகபெரிய ஞான விளக்கு, அந்த விளக்கின் ஜோதியில் எக்காலமும் சனாதானதர்மத்தின் ஞானவழியும், பரிசுத்தமான ஒளியும் உலகுக்கு தெரிந்து கொண்டே இருக்கும்.

02 February 2021

பழைய சீவரம் மலைக்கோயில்...

 

பழைய சீவரம் மலைக்கோயில்

பாலாறு, செய்யாறு, வேகவதி ஆறு இம்மூன்றும் சங்கமிக்கும் இடத்தின் வடகரையில் மலைக்கோயில் அமைந்துள்ள கிராமம் பழையசீவரம்.  செங்கல்பட்டிலிருந்து காஞ்சீபுரம் செல்லும் சாலையில் பழைய சீவரம்  பேருந்து நிறுத்தத்திற்கு  அருகில் உள்ள சிறிய மலைமேல் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. 


தைத்திங்கள் இரண்டாம் நாள் இவ்வுற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது.  பொங்கலன்று இரவு காஞ்சிபுரத்தில் இருந்து புறப்பட்டு சுமார் 70 கி.மீ தூரம் பயணம் செய்து பழைய சீவரத்தை அடைகின்றார் காஞ்சி வரதர்.








சீவரம்.  ஊர் பெயரிலேயே பழைய என்ற சொல் உள்ளது. பல்லவர் காலம் தொட்டு பழைமை மிக்க ஊராக பழைய சீவரம் திகழ்ந்துள்ளது. முதலாம் பராந்தக சோழன் காலம் (கி.பி.907-957) இவ்வூர் முற்கால சோழரது ஆட்சியில் இருந்துள்ளது. கோப்பரகேசரி முதலாம் பராந்தகனின் 15வது ஆட்சி கல்வெட்டு (கி.பி.922) இவ்வூரில் கிடைத்துள்ளது. 

இவ்வூர் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் (கி.பி. 1080-1) சீயபுரம் என வழங்கப்பட்டது. மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் சீயபுரம் என்ற ஊர் திரிபுவன வீர சதுர்வேதி மங்கலம்  என்று மாற்றப்பட்டுள்ளது. திரிபுவன வீரன் என்பது மூன்றாம் குலோத்துங்க சோழனுடைய விருது பெயராகும். இடைச்சோழர் காலத்தில் ராஜேந்திர சோழன் பெயரில் ராஜேந்திர சோழ விண்ணகர் என்று அழைக்கப்பட்டுள்ளது. இவ்வூர் இறைவன் ராஜேந்திர சோழ விண்ணகர ஆழ்வார், திருமாலிருஞ்சோலை ஆழ்வார் என்று சோழர் காலத்தில் அழைக்கப்பட்டுள்ளார். கி.பி.1729-ல் ஜீயபுர லக்ஷ்மி நரசிம்மர் என இறைவன் வழங்கப்பட்டுள்ளார். சோழர்கள் முதல் தனி நபர்கள் வரை பலர் இக்கோயிலுக்கு தானம் தந்துள்ளனர்.

சுமார் 300 வருடங்களுக்கு முன்னர் வட இந்தியர்கள் யாத்திரை வந்தனர். அதில் ஒருவருக்கு தீராத வயிற்றுவலி இருந்திருக்கிறது. இங்கு வரும்போது இறைவன் கனவில் தோன்றி, இவ்விடத்தில் ஒரு மண்டலம் தங்கினால் நோய் குணமாகும் என்று கூறியுள்ளார். அதன்படியே இங்குள்ள பிப்பிலி மரத்தினடியில் தங்கி, ஆற்றில் நீராடி ஒரு மண்டலம் வழிபட்டிருக்கிறார். நோயும் நீங்கி இருக்கிறது. அதன் பிறகு கோயிலின் ஒரு முக்கிய பிரமுகராக அவர் இருந்திருக்கிறார்.

பழைய சீவரம் இது ஒரு மலைக்கோவிலாகும் . கோவில் வரை அனைத்துவிதமான வாகனங்களும் சென்றுவர பாதை உள்ளது. மூலஸ்தானத்தில் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் மேற்கு திருமுகமாக வீற்றருள்கிறார். இக்கோயில் மூலஸ்தானம், விமானம், அந்தராளம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், கொடிமரம், பலிபீடம், திருச்சுற்று பிராகாரம், கருடாழ்வார் சந்நதி, யாகசாலை, கண்ணாடி அறை, மடப்பள்ளி, ராஜகோபுரம், நான்குகால் மண்டபம், வாகன மண்டபம், ஆகிய பகுதிகளைக் கொண்டு விளங்குகிறது. இக்கோயில் மூலஸ்தானம் செவ்வக வடிவுடையது. மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் லட்சுமி நரசிம்மர் இடக்காலை மடித்து வலக்காலை தொங்கவிட்டு பத்மபீடத்தில் ஊன்றிய நிலையில் சதுர்புஜங்களுடன் ஸ்ரீலட்சுமி தேவியை இடது தொடையின் மீது அமர்த்தி ஆலிங்கனம் செய்த வண்ணம் மேற்கு திசையை நோக்கி அருட்பாலிக்கிறார். நரசிம்மரின் மேல் வலக்கரம் கத்தரி முத்திரையில் சக்கராயுதத்தைப் பற்றியுள்ளது. அவ்வாறு மேல் இடக்கரம் கத்தரி முத்திரையில் சங்கினை ஏந்தியுள்ளது.
கீழ் வலக்கரம் அபயஹஸ்தம் காட்டுகிறது. கீழ் இடக்கரம் இடது தொடையில் வீற்றிருக்கும் திருமகளை ஆலிங்கனம் செய்த வண்ணம் அமைந்துள்ளது. அத்ரி மகரிஷிக்கு காட்சி தந்த நரஹரி இவர். நரசிம்மரின் திருமுக மண்டலம் சிம்ம முகமாக அமைந்துள்ளது. சிங்கபிரானின் தலையை கிரீடமகுடம் அலங்கரிக்கிறது. திருமார்பில் மகரகண்டிகையும், கௌஸ்துபமும் அலங்கரிக்கிறது. புஜங்களில் கேயூரமும், பாஜிபந்தமும், முன்கரங்களில் வளைகளும், நாபியின் மேல் உதரபந்தமும், இடையிலிருந்து முழங்கால் வரை வஸ்திர அலங்காரமும் பாதங்களில் பாதசரமும் அணிந்து வனப்போடு காட்சியளிக்கிறார்.

இங்கு தனிக்கோயில் நாச்சியார்  அகோபிலவல்லித் தாயார் என்ற பெயரில் பத்மா சனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார்கள். உற்சவராகிய இவரது மேற்கரங்கள் இரண்டும் தாமரை மலரை தாங்கிய வண்ணம் காட்சியளிக்கிறது. கீழ்கரங்கள் இரண்டும் அபய ஹஸ்தத்திலும், வரத ஹஸ்தத்திலும் அமைந்துள்ளது. பெருமாளுக்கு இடப்புறம் உள்ள ஆண்டாள் திரிபங்கியாக நின்ற கோலத்தில் தரிசனம் அளிக்கிறார். இவளது வலக்கரம் நீலோற்பலமலரைப் பற்றியுள்ளது. இடக்கரம் லம்ப கரமாக நீண்டுள்ளது. தலையில் வசீகரிக்கும் ஆண்டாள் கொண்டையும், காதுகளில் குண்டலங்களும், கழுத்திலும், மார்பிலும் ஆபரணங்களும், இடையில் கச்சையும் அணிந்து திரிபங்கியாக ஆண்டாள் அற்புத வடிவில் அருட்கோலம் கொண்டுகாட்சியளிக்கிறாள்.



அங்கிருந்து மேலும் மலை உச்சிக்கு  சென்றால் ஒரு சிவாலயம் அமைக்கப்பட்டுள்ளது அருள்மிகு தையல் நாயகி உடனுறை அருள்மிகு வைத்யநாத ஈஸ்வரர். ஒரு பைய ஸ்வாமி மண்டபமும் உள்ளது.அங்கிருந்து கீழே பார்க்கும்போது இயற்கையின் அழகை மிக ரம்மியமாக ரசிக்க முடியும் . முடிந்தால் ஒருமுறை நீங்களும் ஒருமுறை சென்று வாருங்கள்.

25 January 2021

விதியை மாற்றும் சிவ சிந்தனை...

நமது விதிப்படிதான் அனைத்தும் நடக்கிறது,  அதை மாற்ற முடியாது என்கிற கருத்து பலரை ஆட்டிப்படைக்கிறது. ஆனால் அதை மாற்ற முடியும். இந்த மண்ணில் யாவரும் நல்ல வண்ணம் வாழலாம்எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவில்லை என்று உணர்த்துவதே இந்த பதிவின் நோக்கமாகும். ஆனால் இது மந்திரத்தில் மாங்காய் வரவழைக்கும் முயற்சியல்லஉங்கள் எண்ணங்களையும் சிந்தனை ஓட்டத்தையும முற்றிலும் மாற்ற நடக்கும் வேள்விஅதனை நினைவில் வைத்திருங்கள்!

இந்தக் கதையை நீங்கள் ஏற்கனவே படித்திருக்கலாம்கேட்டிருக்கலாம்.

அவர் ஒரு பிரபல ஜோதிடர். அவர் ஒருவருடைய ஜாதகத்தை கணித்து ஒரு விஷயத்தைச் சொன்னால்அது அந்த பிரம்மாவே சொன்னது போல் அந்தளவு ஜோதிடத்தில் பாண்டியத்துவமும், நிபுணத்துவமும் பெற்றவர்,எனவே அவரை சந்தித்து தங்கள் ஏதிர்கால பலன்களை தெரிந்துகொள்ள பலரும் பல ஊர்களில் இருந்தெல்லாம் மக்கள் வருவார்கள்.

தனது ஏதிர்காலம் குறித்து மிகவும் கவலை கொண்ட ஒரு ஏழைக் கூலித்தொழிலாளி அந்த ஜோதிடரை சந்தித்தார் .

நான் மிகவும் வறுமையில்  இருக்கிறேன்கடன் பிரச்சினை வேறு என்னை வாட்டுகிறது, எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் வேறுஅவர்களை எப்படி கரையேற்றப்போகினறேன் என்று தெரியவில்லை.  நான் நன்றாக வாழ ஏதாவது வழி இருக்கிறதா என்று என் ஜாதகத்தைப் பார்த்துச் சொல்லுங்கள்என்று தன் ஜாதகத்தை கொடுத்தார் அந்த ஏழை தொழிலாளி.

ஜோதிடரும் அந்த ஏழை தொழிலாளியின் ஜாதகத்தைக் கணிக்கத் தொடங்கினார்சோழிகளை உருட்டிப்போட்டார்கட்டங்களை ஆராய்ந்தார்ஒருகட்டத்தில் ஜோதிடரின் முகம் மிகவும் சுருங்கிப்போனது.

பிறகு தொழிலாளியிடம்,”ஐயா எனக்கு இன்றைய தினம் மிகவும் முக்கியமான பணி ஒன்று இருக்கிறது. உங்கள் ஜாதகத்தை சற்று விரிவாக ஆராய வேண்டி இருக்கிறது.எனவே இந்த ஜாதகம்  என்னிடமே இருக்கட்டும்.நீங்கள் இன்று போய் நாளை இந்நேரத்திற்கு வாருங்கள் .நான் உங்களுக்கு அனைத்தையும் சொல்லிவிடுகிறேன்என்றார்.

சரிங்க ஐயா நான் நாளைக்கு வருகின்றேன்இப்போ ஏதாச்சும் தரணுமா ஐயா?”என்று ஜோதிடரிடம் கேட்டார்.

அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்...நாளைக்கு வரும்போது கொடுங்க போதும்...

ரொம்ப நன்றிங்க ஐயா... நான் நாளைக்கு வர்ரேன்...

தொழிலாளி அங்கிருந்து புறப்பட்டார்.

 

அப்போது அங்கு வந்த ஜோதிடரின் மூத்த மகள்,அப்பா...ஏன் அவர்கிட்ட அவசர வேலை இருக்குன்னு சொல்லி அனுப்பினீங்கஇன்னைக்கு எனக்கு வேலை இல்லைமுழுக்க முழுக்க வர்றவங்களுக்கு ஜாதகம் பார்த்து பலன் சொல்லப்போரேன்னு காலையில  சொன்னீங்க?”என்று கேட்டாள்.

அதற்கு ஜோதிடர்,”அம்மா..அவரது ஆயுட்காலம் இன்றிரவு முடியப்போகிறதுஅவரது ஜாதகம் உணர்த்துவது அதைத்தான்மேலும் சோழி உருட்டிக்கூட பார்த்துவிட்டேன்பரிகாரம் செய்வற்கு அவருக்கு அவகாசம் இல்லைஇதை அவரிடம் தெரிவிக்க மனமில்லைஅதனால் தான் பொய் சொல்லி அவரை இங்கிருந்து அனுப்பினேன்...பாவம்.ஏன்றார் ஜோதிடர்.

இதற்கிடையில் அந்த தொழிலாளி தனது ஊரை நோக்கி வயல்வெளிகளுக்கு இடையே நடந்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென வானம் மேகமூட்டமாகி இருள் சூழ்ந்து.சிறிது நேரத்தில் மழை தூற ஆரம்பித்தது பின்பு வலுப்பெற்று இடியுடன் பலத்த மழை கொட்டியதுவயல்வெளிகளுக்கு இடையே ஒதுங்க இடமின்றி ஓட்டமும் நடையுமாக விரைந்து நடக்க ஆரம்பித்தார் . சற்று தூரத்தில் ஆள் அரவமற்ற ஒரு பாழடைந்த ஒரு கட்டிடம் இருந்ததுஅங்கே ஓடி ஒதுங்கினார். அந்த தொழிலாளி.பார்த்தால் அது ஒரு பாழடைந்த சிவன் கோவில் ஈசன் குடியிருக்கும் கோவில் இப்படி கவனிப்பாறற்று சிதிலமடைந்து இருக்கிறதேநான் மட்டும் பணவசதியுடன் இருந்தால் இந்தக் கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்துவிடுவேன். என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டார்.

அத்துடன் அவர்  நிற்காமல் கோவிலை புதுப்பிப்பதுபோலவும்கும்பாபிஷேகம் செய்வது போலவும்,சிவன் முன் நின்று வணங்குவது போலவும் தன் எண்ணத்தினை ஓடவிட்டார் கற்பனையாக.

அந்தச் சிந்தையோடு தன் தலைக்கு  மேலே பார்த்தபோது அங்கே  ஒரு நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து அவரைக் கொத்த தயாராக இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். ,ஒரு வினாடிகூட தாமதிக்காமல் அம்மண்டபத்தை விட்டு வெளியே ஓடினார் .

இவர் வெளியே வந்ததும்தான் தாமதம், பேரிடி அம்மண்டபத்தின் மீது விழுந்து அம்மண்டபம் தரைமட்டமானது.

அதில் உருண்டோடிவந்த ஒரு சிறிய கல் இவரது காலை லேசாக காயப்படுத்தியதுஅந்த அதிர்ச்சியில் மீளாத அவர் தன் வீட்டை நோக்கி பயணித்தார். பொழுதும் இருண்டுபோனது.

வீட்டுக்கு வந்த அவர் தன் மனைவி மக்களிடம் தனக்கு நடந்ததை திகிலுடன் கூறினார்.

 

 மறுநாள் மாலை வழக்கம்போல் ஜோதிடரைச் சந்திக்கச் சென்றார்தொழிலாளியைப் பார்த்த ஜோதிடருக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லைஅவரை வரவேற்று அமரவைத்துவிட்டு ,ஒருவேளை நாம் சரியாக பலன் கணிக்கவிலையோ என்று சந்தேகத்துடன் மீண்டும் அவரின் ஜாதகத்தினை ஆராய்ந்தார். அவர் கணக்கு சரியாகவே இருந்தது பின் எப்படி பிழைத்தார்?.இதுபோன்ற கண்டத்திலிருந்து தப்பிக்கவேண்டுமென்றல்,அந்த நபர் சிவன் கோவில் ஒன்றைகக் கட்டி அதற்கு கும்பாபிஷேகம் செய்திருக்க வேண்டும்.அதற்கான புண்ணியத்தினை பெற்றிருக்க வேண்டுமே?என்று ஜோதிட நூல்களில் சொல்லப்பட்டிருகிறதுஅனால் இவரோ பரம ஏழைஇவரால் எப்படி கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்திருக்கமுடியும்?அதுவும் ஒரு இரவுக்குள்?என்று பலவாறு சிந்தித்துக்கொண்டு ,”நேற்றிரவு என்ன நடந்தது?”என்று அவரிடம் கேட்டார்.

அவர் தான் சென்றபோது மழை பொழிய தொடங்கியதையும் , அப்போது  ஒரு பாழடைந்த சிவாலயத்தின் பக்கம் தான் ஒதுங்கியதையும் கூறினார்.

மேற்கொண்டு என்ன நடந்தது என்று ஜோதிடர் ஆர்வமுடன் கேட்க இவர் அந்த சிதிலமைடைந்த கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்வதுபோல் கனவுகண்ட விஷயத்தையும் கூறினார்.

ஜோதிடருக்கு அடுத்தநொடி அனைத்தும் விளங்கிவிட்டதுஇவர் மனதளவில் செய்ய நினைத்த கோவில் புனரமைப்பும்கும்பாபிஷேகமுமே இவருக்கு முழுமையான பலன்களை தந்து ஈசனருளால் அவரது விதி மாற்றி அமைக்கப்பட்டதை உணர்ந்துகொண்டார்.

இது உங்களுக்கு மறு ஜென்மம் அதுவும் ஈசன் கொடுத்ததுஇனி உங்களுக்கு எந்த குறையுமிருக்காது போய் வாருங்கள் என்று வழியனுப்பி வைத்தார் ஜோதிடர்.

நம்மிடம் தோன்றும் நல்ல சிந்தனைகள் நம் தலைவிதியையே மாற்றும் என்பதற்கு இந்த கதை ஒரு எடுத்துக்காட்டு.

இது ஏன் உங்களது வாழ்விலும் நடக்காது?

நிச்சயம் நடக்கும்.அதற்கு நீங்கள் சிவபுண்ணியச் செயல்களில் தொடர்ந்து ஈடுபடவேண்டும்.அனுபவித்தே தீர வேண்டும். என்று விதி இருந்தால் கூட சிவ சிந்தனை உங்களது விதியை மாற்றவல்லது.


 சிவ சிவ என்கிலர் தீவினையாளர்

 சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்

 சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்

 சிவ சிவ என்னச் சிவகதி தானே

திருமூலரின் திருமந்திரம்

பொருள்:-

 பாவிகள், சிவன் (கடவுள்) நாமத்தை உச்சரிக்க மாட்டார்கள்; பாவம் செய்தவர்களும் சிவ, சிவ என்ற நாமத்தை உள்ளன்போடு உச்சரித்தால் பாவங்கள் போகும். சிவன் நாமத்தை உச்சரித்தால் மனிதனும் தேவர் ஆகிவிடுவான். தொடர்ந்து சிவன் நாமத்தை உச்சரிப்பவர்கள் சிவனுடன் ஒன்றிவிடுவார்கள்.


தண்டரை ஸ்ரீ காமாட்சி உடனுறை ஸ்ரீ கைலாசநாதர்

ஆலயத்தை புதுபிக்க வழி கிடைத்ததா?

அன்று மாலை வீடு திரும்பிய நாங்கள் உண்மையில் சிவ சிந்தனை உள்ள அடியார்களை நாம் ஒன்று திரட்டியாக வேண்டும்? என தீர்மானித்து நமது வாட்சாப் குழு நண்பர்களிடம் பேசியபோது சுமார் பத்து பேர்மட்டும் முழு ஈடுபாட்டுடன் இருப்பவர்களை தேர்ந்தெடுத்தோம் ,தனியாக தண்டரை கோவில் பெயரில் ஒரு தனிக்குழுவை ஏற்படுத்தி உண்மையில் சிவ சிந்தனை உள்ள நண்பர்களை மட்டும் இதில் இணைக்க திட்டமிட்டோம். நாம் நினைத்ததை விட மிக நல்ல அடியார்கள் மேலும் மேலும் நமது நண்பர்கள் மூலம் இந்த குழுவில் இணைந்தார்கள்   இணைத்தது யார்?அந்த சிவமல்லவா..









நமது முதற்கட்ட பணியானது கோவிலின் உள்ளே புதர் மண்டிக்கிடக்கும் இடத்தினை சுத்தம் செய்து முழுவதும் கான்க்ரீட் தரை அமைத்து  சுமார் ஒருஅடி உயரம் உயர்த்த  வேண்டும்.

இதற்க்கு ஜல்லி , எம் சாண்ட், சிமன்ட், ஆள் கூலி என   சுமார் 50,000 ருபாய் தேவைப்படுகிறது ,அடுத்து கோவில் உட்பிரஹார, மற்றும் கோபுர புனரமைப்பு, நுழைவு வாயில் கதவு சரி செய்தல்  ,எலெக்ட்ரிகல், வண்ணம் பூசுதல் பின்பு கும்பாபிஷேகம் என அப்பப்பா நீதான்பா வழி காட்டனும்...

இதோ முதல் அடி எடுத்து வைத்துவிட்டோம் !..

நமது குழுவின் அடியார்களின் பெருங்கருணையால் முதற்கட்ட பணிக்குத்தேவையான உதவி கிடைத்துவிட்டது .தங்களால் முடிந்த தொகை மற்றும் தங்கள் நண்பர்களிடத்தில் கேட்டு பெற்றது அப்படி இப்படி என முதற்கட்ட பணிகளுக்குத்தேவையான பண உதவி கிடைத்துவிட்டது இதோ தைமாதம் 4 தேதி /ஆங்கிலம் 17/01/2021 அன்று பூஜை போடப்பட்டு திருப்பணிகள் தொடங்கின,திருப்பணிகள் மின்னல்  வேகத்தில் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட பணிகளுக்கு பொருளுதவி, பண உதவி, இன்னும் அநேக உதவிகள் செய்த, செய்துகொண்டிருக்கின்ற அன்பு சிவனடியார்களும் அவர்களது அன்பு குடும்பமும் நீடூழி நிம்மதியுடன் வாழ நமது குழுவின் சார்பாக எல்லாம் வல்ல அந்த ஈசனிடம் வேண்டுகிறோம்.

மேலும் இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டம்,என அடுத்தடுத்த பணிகளுக்குத்தேவையான உதவிகள் கிடைத்திட ஈசன் அருள்புரிவார் என அவன் பெயரில் பொறுப்பினை விடுத்து நமது கடமையினை செய்வோம் வாருங்கள்.

நன்றி.