Subscribe

BREAKING NEWS

31 January 2019

சித்தர்கள் அறிவோம் : சத்குரு ஸ்ரீ ராம பரதேசி சுவாமிகள்

அனைவருக்கும் வணக்கம்.

சித்தர்கள்.

நம்மை வாழ்விக்க வந்தவர்கள். பார்ப்பதற்கு பித்தர்கள் போன்று தோன்றலாம். சிவத்தை ஜீவனில் உணரும் போது பித்தம் தெளிந்து சித்தம் வெளிப்படும். சிலர் குருவாக, சிலர் சற்குருவாக, சிலர் சத்குருவாக என வாழையடி வாழையாய் ஞானம் போதிக்க வருபவர்கள். சென்னையில் மட்டுமா சித்தர் பரம்பரை உள்ளது என்று நினைத்த நமக்கு தமிழ் நாடு என்ற அளவில் விரிந்து பார்த்தோம். அத்தனையும் தாண்டி பாண்டிச்சேரியில் இன்னும் உயிர்ப்பாக சித்தர்களின் அருளை உணர முடிகின்றது.

சென்னையும், புதுச்சேரியும் சித்தர்கள் உலாவும் புண்ணிய பூமி. இந்த உலகிலே எங்கெங்கோ நாம் பிறந்திருக்கலாம். ஆனால் இந்தியாவில் பிறந்து நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்றால் அது நம் முன்னோர் செய்த புண்ணியமே. இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் நாம் பிறந்து வாழ்ந்து கொண்டிருப்பது அதனினும் புண்ணியமே.

தமிழ்நாடு முழுதும் ஜீவன் முக்தர்களின் அரசாட்சி தான். திரும்பிய இடமெங்கும் உயிர்நிலை கோயில்கள். சென்னை முதல் கன்னியாகுமரி வரை சித்தர்களின் ராஜ்ஜியம் தான். அந்த வரிசையில் சென்னை என்றால் நமக்கு மிக மிக நெருக்கமாக சதானந்தர். இவரைத் தாண்டி பாரத்தால் சென்னையில் சாங்கு சித்தர், வேளச்சேரி மகான், பட்டினத்தார் என நீளும் பட்டியலில் திருஒற்றியூர் பற்றி சொல்ல இந்த ஒரு பதிவு போதாது.

அந்த வரிசையில் நாம் பாண்டிச்சேரி சித்தர்களைப் பற்றி பல முறை கேள்வியுற்றோம். ஆனால் தரிசிக்க ஏங்கினோம். அப்போது தான் வில்லியனூரில் உள்ள  ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்லம் சென்று இரண்டு முறை ஆயில்ய ஆராதனை கண்டோம். அப்போது திரு.சுவாமிநாதன் ஐயாவின் வழிகாட்டலின் படி, மூன்று உயிர்நிலை கோயில் தரிசனம் பெற்றோம். சென்ற மாதம் அகத்தியர் ஜெயந்தியை  ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்லத்தில் கொண்டாடினோம். வெகு நாட்கள் கழித்து நம் TUT நண்பர்களோடு ஆன்மிக யாத்திரை. அன்றைய தினம் முழுதும் அவனருள் கிடைத்தது. சுமார் 4 சித்தர் கோயில்களை தரிசித்தோம்.அவற்றுள் இன்று நாம் காண இருப்பது சத்குரு ஸ்ரீ ராமபரதேசி சுவாமிகள் தரிசனமே.



புதுச்சேரியில் இருந்து வில்லியனூர் செல்லும் வழியில் சுல்தான் பேட்டை திருப்பத்தில் வலப்புறத்தில் ஸ்ரீ ராம் பரதேசி சுவாமிகளின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. சமாதி மேடையில் மீதுள்ள மாடத்து கற்பக அறையில் இராம பரதேசி சுவாமிகளின் திரு உருவம் அழகாக செதுக்கப்பட்டு உள்ளது.

அந்த சித்தரின் திருவுருவத்திற்குக் கீழ் உள்ள மேடையில் முன்புறத்தில் தமிழில் அமைந்த கல்வெட்டு ஒன்று பதிக்கப்பட்டு உள்ளது. தங்கள் ஊருக்கு புதிதாக சாமியார் வந்துள்ளதை கண்ட மக்கள், இவரை யார் என்று கேட்க , இவர் அவர்களுக்கு “ராம் ராம்” என்று பதில் அளித்தார். இதனால் இவரை ராமபரதேசி சுவாமிகள் என்று அழைத்தனர்.
இவர், பாம்பு கடித்து விஷம் தலைகேறி இறந்து கிடந்த விவசாயின் உடலை “ராம் ராம்” என்று அழைத்து அவனை தூங்கி எழுந்தவர் போல எழச்செய்தார். இங்கே பௌர்ணமி பூஜை, வியாழக்கிழமை குரு பூஜை ஆகியவை சிறப்பாக செய்யபடுகின்றன வானத்தில் பறந்த சித்தர் ஒரு சிவன் கோயில்… அதன் அருகே பிரும்மாண்டமான ஒரு மைதானம். அந்த மைதானத்தில் ஒரு பழைய தேர். அதன் அருகில் பல சிறுவர்கள் களித்துக் கொண்டிருந்தனர். ஒருவன் சக்கரத்தின் மேல் ஏறினான், ஒருவன் அதற்குள் ஒளிந்து கொண்டான். இதையெல்லாம் பார்த்தபடி அமர்ந்திருந்தார் ஒரு சித்த புருஷர். குழந்தைகளைப் பொறுத்த வரையில் அவர் ஒரு தாடித்தாத்தா.
சித்தர் பேசினார் “குழந்தைகளே இந்தத் தேரையே இப்படித் தடவித் தடவிப் பார்க்கிறீர்களே! இதை விடப் பல மடங்கு பெரிய தேரைப் பார்த்திருக்கீர்களா? அதுதான் திருவாரூர் கோயிலின் தேர்”

“தாத்தா தாத்தா, நாங்கள் அதைப் பார்க்க வேண்டுமே எங்களை அழைத்துப் போங்கள்”
“போடா ராமு, அவர் என்ன ஏரோப்பிளேனா பறந்து போவதற்கு?”
“குழந்தைகளே, இந்தத் தாத்தா இப்போது ஏரோப்பிளேன் மாதிரி பறந்து உங்களை அழைத்துப் போகப் போகிறேன். என் முதுகில் ஏறிக் கொள்ளுங்கள்”
குழந்தைகளும் அவசர அவசரமாக அவர் தோளிலும் முதுகிலும் ஏறிக் கொள்ள சித்தர் பறந்தார், ஒரு சில நிமிடங்களில் திருவாரூர் வந்து விட்டார். குழந்தைகள் பிரமிப்பில் மூழ்கினர். ஆவல் தீர அந்தத் தேரைப் பார்த்துக் களித்து பின் திரும்பவும் அவர் முதுகில் அமர, சித்தர் பறந்து முதலில் இருந்த இடத்திற்கே வந்தார்.

இதைச் சாமானிய மனிதனால் செய்ய முடியுமா? சந்தேகமில்லாமல் ஒரு சித்தரால்தான் செய்ய முடியும். அந்தச் சித்தர்தான் வில்லியனூரில் இருந்த “ஸ்ரீராம் பரதேசி ஸ்வாமிகள்”. ‘ரிஷி மூலம் நதி மூலம்’ கேட்கக் கூடாது என்பார்கள், இவரது பெற்றோர்கள் யார் என்று தெரியாது.
இவர் நிச்சயமாக வட நாட்டைச் சேர்ந்தவர்தாம். இவர் சிறு வயதில் தனியாக தன் இஷ்டப்படி திரிந்து வந்தார், பாசம் என்பதே தெரியாமல் தானே வளர்ந்து வந்தார்.
ஒரு நாள் அவர் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. இவர் தன் இருப்பிடம் விட்டுக் கொஞ்சம் தூர காலாற நடந்து வரும் போது, அங்கு ஒரு முதியவரைச் சந்தித்தார், அந்த முதியவர் ஆசையுடன் இவரை அழைத்தார்.

“என்ன செய்வது என்று தெரியாமல் இப்படிச் சுற்றிக் கொண்டு இருக்கிறாயே! என் அருகே வா, உனக்கு ஞான ஒளி கிடைக்கும் நேரம் வந்து விட்டது. உனக்குப் பரப்பிரும்ம உபதேசம் செய்கிறேன்” என்று கூறி அவர் காதில் ஒரு மந்திரத்தை உச்சரித்தார். பின் அவர் உடல் முழுவதும் தடவினார். உச்சந்தலையில் முத்தம் கொடுத்தார், பின், “நீ பெரும் துறவியாய் வருவாய், போய் வா” என்று சொல்லி விட்டு நகர்ந்து சென்று விட்டார்.

ரமண மகரிஷியைப் போல் அப்போது அவருக்கு பதினாலு வயதுதான். அன்றைய தினத்திலிருந்து அவர் மாறினார். வெறும் கோவணம் கட்டிக் கொண்டு பசி தாகம் மறந்து தூக்கமில்லாமல் தியானத்தில் அமர்ந்தார். இவர் சென்று பூஜை செய்த ஊர் வில்லியனூர். திருக்காமீசர் என்ற ஈச்வரனும், கோகிலாம்பாள் என்ற திரு நாமமுடைய அம்பாளும் அருள் புரியும் கோயில்தான் அது. இந்த ஆலயத்திற்கு அவர் அடிக்கடி வந்து அங்கப்பிரதட்சிணம் செய்வார். சில சமயம் அவர் உடலே இதில் தேய்ந்து விடும். அந்த இடம் தான் இன்று தெய்வீக ஸ்தலமாக, புனித ஜீவ பீடம் அமைந்த இடமாக விளங்குகிறது, இவரே ஸ்ரீராம் “பரதேசி சுவாமிகள்”. ஸ்ரீராம் பரதேசி ஸ்வாமிகளின் தபோவனம் புதுச்சேரி வில்லியனூர் சாலையில் சுல்தான் பேட்டை அருகில் மூலக்கடை என்ற இடத்தில் இருக்கிறது.

இது ஒரு காலத்தில் வில்வமரக் காடாக இருந்ததாம். அங்கே சுயம்புவாக ஒரு லிங்கம் தோன்றியதாம். அங்கு ஒரு பசு தினமும் வந்து அதன் மேல் பால் சுரந்து வழிபட்டதாம். பின்னர் சோழ மகாராஜா இந்தக் கோயிலைச் சிறப்பாகக் கட்டி வழிபட்டாராம்.
இந்தச் சித்தர் செய்த அதிசயங்கள் பல. இவர் இடுப்பில் வைக்கோலைக் கட்டிக் கொண்டு, திருக்கோயிலை வலம் வரும் போது சிறுவர்களைக் கூப்பிட்டுத் தன்னை இழுக்கச் சொல்வார். பின் மண்ணை அள்ளி எடுத்து அதை மிட்டாயாக மாற்றி, அதை சிறுவர்களுக்கு வழங்குவார். ஒரு நாள், ஒரு இளைஞனைப் பாம்பு கடித்து விட்டது, மக்கள் அவனைத் தூக்கி இவர் முன் கொண்டு வந்து போட்டார்கள். இவர் கண் மூடித் தியானம் செய்து கடித்த பாம்பை வரவழைத்தார், பின் அதை, தான் கடித்துப் பரப்பிய விஷத்தை உறிஞ்சித் தன்னுடைய அலுமினியத் தட்டில் உமிழச் செய்தார். பாம்பும் அவர் சொன்னபடியே செய்ததை எல்லோரும் வியப்பால் சிலை போல் நின்று பார்த்துக் கொண்டிருந்தனர்.

சித்தரோ அந்த விஷத்தைக் குடித்து விட்டார், அவர் உடம்புக்கு ஒன்றும் ஆகவில்லை, இவர் தொட்ட இடமெல்லாம் வளமுற்றன. இவர் ஆசிகளால் பலர் பயனடைந்தனர். இவர் பிரும்ம நிலை அடைந்து விட்டால் தனக்குத் தானே ஸ்ரீராம் என்று கூறித் தன்னையே அர்ச்சித்துக் கொள்வாராம். ஆகையால் கூட இவரது பெயரும் ஸ்ரீராம் என்று வந்திருக்கலாம்.

சுவாமிகள் 1838-வது வருடம் மரங்கள் அடர்ந்த சோலை நடுவில் ஜீவபீடக் குழி பறித்து அதில் தான் அமர்ந்த பின், அதை குச்சிகளால் நிரப்பி, பின் மண் போட்டு மூடும்படி கேட்டுக் கொண்டார். அந்த மண்ணை பிற்பாடு எடுத்தால் மிட்டாயாக மாறும் என்றார், அதே போல் சில சிறுவர்கள் அதைச் செய்து பார்க்கையில், அந்த மண் மிட்டாயாக மாறியது என்கிறார்கள் மக்கள்.
இதெல்லாம் நடந்து முப்பது ஆண்டுகள் ஓடிய பின். புதுச்சேரியில் பிரஞ்சு ஆதிக்கம் வந்த போது, அந்த இடத்தில் ரயில்வே லைன் அமைத்து, அதற்குப் பின் ஒரு கட்டிடம் கட்டுவதற்காக கூலித் தொழிலாளி கடப்பாரையினால் அந்த இடத்தைத் தோண்ட, இரத்தம் பீறிட்டது. தொழிலாளிகள் பயந்து வேலையை நிறுத்தி விட்டனர்.



பின் மேலதிகாரிகள் வந்து பார்த்த போது, அங்கே ஒரு ரிஷியைப் பார்த்தனர். அவரிடத்திலிருந்து “ராம்ராம்” என்ற ஒலி கேட்டது. அவரது உடல் தங்கம் போல் ஜொலித்தது. எல்லோரும் அவரை வணங்கினர். பின் மருத்துவர் வந்து பரிசோதித்துப் பார்க்கையில் நாடித்துடிப்பு எல்லாம் ஒழுங்காய் இருந்ததாம். அவரை அப்படியே தூக்கி ஒரு கருங்கல் பீடம் அமைத்து அதற்குள் அமர்த்தி விட்டனர். பின் கோபுரம் கட்டி அற்புதமானதொரு ஜீவபீடத்தையும் ஏற்படுத்தி விட்டனர்.
ஜீவபீடம் உட்புறம் எட்டுக் கோணங்கள் கொண்டது, உள்ளே “மஹாத்மா ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் சாலிவாஹன சஹாப்தம் 1868″ என்ற கல்வெட்டு உள்ளது. கோயிலில் இவருக்கு ஒரு சிலை உள்ளது. நீண்ட ஜடாமுடி, தாடி, நீண்ட கைகள் , வலக்கால் மடக்கி இடக்கால் தொங்கும் நிலை. காந்தச்சுடர் கண்கள், அழகான மேனி, அவரது திருக்கோலத்தைப் பார்த்தால் நம் கை தானாகவே கூப்பி வணங்க முற்படுகிறது, அங்கே அவ்வளவு சக்தி நிலவுகிறது.
இவரைத் தரிசித்தால் பல பிணிகள் அகலுகின்றன. சரும வியாதி நீங்குகிறது. விஷக்கடிகளுக்கு இவரது விபூதி மருந்தாகிறது. பௌர்ணமியன்று அவர் வெளியே வந்து அந்தக் கோயிலை வலம் வருவதாக அங்கிருக்கும் மக்கள் சொல்லுகின்றனர். அந்த அற்புத மகானைக் காண அவசியம் அங்கே சென்று வர வேண்டும்.

சரி. இனி நாம் பெற்ற தரிசனத்தை இங்கே தருகின்றோம். பெற்றுக் கொள்ளுங்கள்.


 வில்லியனூர் செல்வதற்கு பாண்டிச்சேரி முதல் விழுப்புரம் சாலையில் வரும் போது, பெரம்பை என்ற ஊர் தாண்டி இடப்பக்கம் திரும்பினால் சத்குரு ஸ்ரீ ராமபரதேசி சுவாமிகள் தரிசனம் பெறலாம். முன்பெல்லாம் பரதேசி என்ற சொல்லை நாம் ஏளனமாக பார்த்ததுண்டு. சற்று ஆராய்ந்து பார்த்தால் பரதேசி என்றால் அந்த கடவுளை கண்டவர்கள் என்று பொருளாக தோன்றுகின்றது. பரத்தை கண்டு பேசி இருப்பதால் பரதேசி என்று இருக்குமோ?

பொதுவாக மகான்களின் ஆலயத்தில் பெரிய ஆடம்பரம் இருக்காது, சத்தம் இருக்காது. அது போல் மிக மிக ஆழமாய் அன்பினை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார் சுவாமிகள்.




 திருக்கோயில் உள்ளே சென்றதும் நமக்கு சுவாமிகள் நேரே அருள் தருகின்றார். தரிசித்து விட்டு, அப்படியே கோயிலை சுற்றினோம்.








கேட்டதை வழங்கும்   சத்குரு ஸ்ரீ ராம பரதேசி சுவாமிகளின் ஆசியைப் பெறுங்கள். வேறேன்ன வேண்டும் நமக்கு?








 கோயில் முழுதும் சித்தர்களின் அருளே. கண்ணைக் கவரும் சித்தர்களை கண்டோம்.சத்குரு ஸ்ரீ ராமபரதேசி சுவாமிகள் திருவடிகள் போற்றி ! போற்றி !! என உளமார வேண்டினோம்.





 தரிசனம் பெற்று அப்படியே அமர்ந்து மௌனித்தோம். சுமார் 10 நிமிடங்கள் ....உள்ளூர உள்ளுணர்வு கட உள் என்றது. 






அப்படியே அடுத்த கோயிலுக்கு சென்றோம். புதுவையில் மட்டும் 41 சித்தர்கள் உள்ளதாக நமக்கு தகவல் கிடைத்தது.


புதுவையில் ஜீவசமாதி அடைந்து அருள் ஒளிவீசும் 41சித்தர்கள் 

1 ஸ்ரீ தொள்ளகாது சுவாமிகள் , ஸ்ரீ மணக்குள விநாயகர் ஆலயம் புதுவை ,
2 . ஸ்ரீ மகான் படேசாஹிப் சுவாமிகள் சின்னபபுசமுதிரம் , கண்டமங்கலம்
3 .ஸ்ரீ சிதானந்த சுவாமிகள் கருவடிக்குப்பம் புதுவை
4 .ஸ்ரீ குரு அக்கா சுவாமிகள் வைத்திக்குப்பம் ,புதுவை .
5 ஸ்ரீ நாராயண பரதேசி சுவாமிகள் , வைத்திக்குப்பம், புதுவை .
6.ஸ்ரீ கம்பளி நான தேசிக சுவாமிகள் , தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை , புதுவை .
7 .ஸ்ரீ கதிர்வேல் சுவாமிகள், 3 வது குறுக்குத்தெரு , பிருந்தாவனம் , புதுவை .
8 . ஸ்ரீ சக்திவேல் பரமானந்த சுவாமிகள் , கராமணிகுப்பம், புதுவை
9 .ஸ்ரீ சந்தானந்தா சுவாமிகள் சிருங்கேரிமடம் செரேதோப்பு எதிரே எல்லைபில்லைசாவடி புதுவை
10 .ஸ்ரீ சுப்ரமணிய அபிநவசசிதானந்தா சுவாமிகள் ,சிருங்கேரிமடம் செரதொப்பு எதிரே எல்லைபில்லைச்சாவடி , புதுவை .
11 ஸ்ரீ பெரியவர்களுக்கு பெரியவர் சுவாமிகள் தட்டஞ்ச்சாவடி, புதுவை
12 . ஸ்ரீ வேதானந்த சுவாமிகள் ,திருவள்ளுவர்நகர், முத்தியால்பேட்டை புதுவை .
13 . ஸ்ரீ சடையப்பர் சுவாமிகள் வழுதாவூர் சாலை ,ராணி மருத்துவமனை எதிரே , புதுவை
14 .ஸ்ரீ மௌலனசாஹிப் சுவாமிகள் , முல்லா வீதி புதுவை 15 . ஸ்ரீ நாகலிங்க சுவாமிகள் ,அம்பலத்தடையார் மடம்வீதி புதுவை .
16 .ஸ்ரீ மண்ணுருட்டி சுவாமிகள் தென்னஞ்சாலை ரோடு சுப்ப்ரயபிள்ளை சமுத்திரம் புதுவை .
17 .ஸ்ரீ தேங்காய் சுவாமிகள் வில்லியனூர் புதுவை
18 ஸ்ரீ ராமபரதேசி சுவாமிகள் சுல்தான்பேட்டை வில்லியனூர் புதுவை .
19 . ஸ்ரீ பவழக்கொடி சித்தர் சுவாமிகள் . சோம்பட்டு. திருக்கனூர் வழி புதுவை .
20 . ஸ்ரீ ரங்கசாமி சித்தர் சுவாமிகள் சோம்பட்டு திருக்கனூர் வழி , புதுவை .
21 . ஸ்ரீ தட்சணாமூர்த்தி சுவாமிகள் , பள்ளிதென்னல், புதுவை
22 .ஸ்ரீ குருசாமி அம்மாள் சுவாமி எ அரியூர் , புதுவை
23. ஸ்ரீ ல ஸ்ரீ அருள் சக்தி அன்னையீன் சித்தர் பீடம் , பிள்ளையர்குப்பம், கிருமாம்பாக்கம் , புதுவை
24 . ஸ்ரீ ல ஸ்ரீ உலகநாத களரானந்த சுவாமிகள் சோரியங்குப்பம் பள்ளி பாகூர் ,புதுவை
25 . ஸ்ரீ அப்பர் சுவாமிகள் எம்பலம். புதுவை .
26 . ஸ்ரீ மகான் வண்ணரபரதேசி சுவாமிகள் ஒதியம் பட்டு புதுவை
27 .ஸ்ரீ வியோமா சுவாமிகள் கன்னுவாபேட்டை, வில்லியனூர் புதுவை .
28 .ஸ்ரீ கணபதி சுவாமிகள் , கருவடிக்குப்பம் , எடயஞ்சாவடி , புதுவை
29 .ஸ்ரீ சிவபிரகாச சுவாமிகள் நல்லாத்தூர் எம்பலம், புதுவை .
30 ஸ்ரீ அழகர் சுவாமிகள், தென்னம்பாக்கம் புதுவை .
31 . ஸ்ரீ கழுவெளி சித்தர் சுவாமிகள் , திருச்சிற்றம்பலம் இரும்பை .புதுவை
32 ஸ்ரீ சிவஞ்ன பாலய சித்தர் சுவாமிகள் , பொம்மையார் பாளையம் புதுவை .
33 ஸ்ரீ சிவஞ்ன பால சித்தர் சுவாமிகள் ,மைலம் முருகம் கோவிலுக்கு வலபுறம் ,.
34 ஸ்ரீ சுப்பராய பரதேசிஸ்வமிகள் , மைலம் (மூலவர் இருக்குமிடத்தில் ஜீவசமாதி)
35 . ஸ்ரீ பகவந் சுவாமிகள் , புதுப்பாளையம் கடலூர்.
36 .ஸ்ரீ தயானந்த சுவாமிகள் , புதுப்பாளையம் கடலூர்.
37 ஸ்ரீ தேவராஜ் சுவாமிகள் , வன்னியனல்லூர் ,சூனம்பேடு 38 ஸ்ரீ சத்குரு நித்தியானந்த சுவாமிகள் கோழிப்பாக்கம் அன்னகிரமாம் அருகே பட்டாம்பாக்கம்
39 ஸ்ரீ கந்தசாமி சுவாமிகள் காரணப்பட்டு .
40 ஸ்ரீ லக்ஷ்மண சுவாமிகள் புத்துப்பட்டு காலாப்பட்டு
41 குண்டலினி சித்தர் திருவக்கரை திருக்கனூர் அருகில்

இந்த 41 சித்தர்களும் ஜீவசமாதி அடைந்து அருள் ஒழி வீசி கொண்டிருக்கிறார்கள் ....... இந்த சித்தர்களின் அருள் ஆசி பெற ....
தரிசிக்க வருகைதாருங்கள் உள்ளம் தெளிவடையும். மீண்டும் அடுத்த உயிர்நிலைக்கோயிலில் சந்திப்போம்.

சத்குரு ஸ்ரீ ராமபரதேசி சுவாமிகள் திருவடி போற்றி! போற்றி !!



மீள்பதிவாக:-

சத்குரு ஸ்ரீ ராமபரதேசி சுவாமிகள் தரிசனம் பெறுவோம்  - https://tut-temple.blogspot.com/2018/02/blog-post_15.html

 சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temple.blogspot.com/2018/12/blog-post_14.html  


தெய்வத் திருமகன் ஸ்ரீ குழந்தையானந்த சுவாமிகளின் 86 ஆவது ஆராதனை அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/09/86.html

பட்டதாரிச் சித்தரே சரணம் - ஸ்ரீலஸ்ரீ சுப்பைய சுவாமிகள் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_8.html

பாண்டமங்கலம் காசி விசாலாட்சி உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவில் - http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_21.html

ஶ்ரீஶ்ரீஶ்ரீ சொரக்காய சுவாமி! 116−வது மஹா குருபூஜை மற்றும் கலச பூஜை மஹோத்சவம் - http://tut-temple.blogspot.com/2018/08/116.html

ஸ்ரீ பைரவச் சித்தரின் அருள் மழையில் நனைவோம்.- http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_34.html

கசவை கண்ட கயிலைமூர்த்தியே போற்றி...- http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_22.html

இச்சையில் தீ வைத்தால் தீட்சை பெறலாம் - ஸ்ரீ மச்சமுனி சித்தர் ஜெயந்தி விழா - http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_5.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 161 ஆம் ஆண்டு அவதார திருவிழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/07/161.html


பாரத்தைக் குறைத்து பரத்தை உணர்த்தும் பரஞ்சோதி பாபா - 7- ஆம் ஆண்டு மகா குருபூஜைப் பேரானந்த வழிபாடு - http://tut-temple.blogspot.com/2018/06/7_27.html

 உன்னுள் உத்தமனைக் காணும் வழி - மஹான் சங்கு சித்தர் அவர்களின் 119 ஆவது குரு பூஜை - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_13.html

அருள்மிகு சோமப்பா சுவாமிகளின் 50 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/06/50.html

என்னை நீ ஆள்வாய் சிவப்பிரகாச இறைவநல் தேசிக மணியே! - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_5.html

திருச்சி வரகனேரி பிர்மரிஷி ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள் குருபூஜை - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_1.html

ஸ்ரீ கண்ணையா யோகி குரு பூஜை - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_79.html

மண் உண்ட மகான் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மல்லையா சுவாமிகள் - http://tut-temple.blogspot.in/2018/05/blog-post_89.html

மீண்டும் மீண்டும் நம்மை அழைக்கும் குழந்தைவேல் சுவாமிகள் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/05/blog-post_21.html

சித்திரை பூசத்தில் குழந்தைவேல் சுவாமிகளிடம் சரண் அடைவோம் - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_21.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

 ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

 என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

உன்னுள் உத்தமனைக் காணும் வழி சாகாக் கல்வி - http://tut-temple.blogspot.com/2017/07/blog-post_4.html

ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே !  - http://tut-temple.blogspot.com/2018/03/blog-post_76.html

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு 21/05/2018  - http://tut-temple.blogspot.com/2018/05/21052018.html

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_22.html

அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை -புரட்டாசி -2017- http://tut-temple.blogspot.in/2017/09/2017.html

அகத்திய முனிவரின் பஞ்ச யாக ஷேத்திரம் - பஞ்செட்டி சதய பூஜை அழைப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_74.html

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!! - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_89.html

கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 28/2/2018 - http://tut-temple.blogspot.in/2018/02/2822018.html

29 January 2019

அருள்மிகு இளங்கிளி நாயகி உடனுறை ஸ்ரீ ஆட்சீஸ்வரர் சுவாமி - கும்பாபிஷேக அழைப்பிதழ் (10/02/2019)

இறை அன்பர்களே...

பாடல் பெற்ற தலங்கள் என்ற பதிவு நம் தலத்தில் கண்டு வருகின்றோம். அந்த வகையில் திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில், திருநெடுங்களம்,திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில்,திருமூக்கீச்சரம் பஞ்சவர்ணேசுவரர் கோயில்,திருஆனைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில், அச்சிறுபாக்கம் ஸ்ரீ ஆட்சீஸ்வரர் கோயில், திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்,உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் கோயில் என பார்த்தோம். இதில் அச்சிறுபாக்கம் ஸ்ரீ ஆட்சீஸ்வரர் கும்பாபிஷேகத்திற்கு காத்துக் கொண்டிருக்கின்றார். கும்பாபிஷேக அழைப்பிதழ் நமக்கு கிடைத்து விட்டது.  விரைவில் அறிவிப்பு செய்கின்றோம் என்று சொல்லி இருந்தோம். இதோ. இன்றைய பதிவில் மீண்டும் ஸ்ரீ ஆட்சீஸ்வரர் தான்.




தல வரலாறு: 

வித்யுந்மாலி, தாருகாட்சன், கமலாட்சன் என்ற மூன்று அசுரர்கள் முறையே பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் மூன்று கோட்டைகளைக் கட்டி வாழ்ந்து வந்தனர். இந்த கோட்டைகளுக்கு விமானம் போல் நினைத்த இடங்களுக்குச் செல்ல வசதியாக சிறகுகளும் இருந்தன. இந்த முப்புரங்களையும் வைத்துக் கொண்டு இந்த அசுரர்கள் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தனர். தேவர்கள் அசுரர்கள் தொல்லை பொறுக்கமுடியாமல் சிவபெருமானிடம் முறையிட்டனர். மூன்று அசுரர்களையும் அழிக்க சிவபெருமான் பூமியைத் தேராக்கி, நான்கு வேதங்களையும் குதிரைகளாக்கி, பிரம்மாவை சாரதியாக்கி, சூரிய சந்திரர்களை சக்கரங்களாக்கி மற்ற எல்லா உலகப் படைப்புகளையும் போர் புரிவதற்கான ஒவ்வொரு உறுப்பாகி புறப்பட்டார். ஆனால் அவ்வாறு புறப்படுவதற்கு முன்பு முழுமுதற் கடவுளான விநாயகரை வணங்க தேவர்கள் மறந்தனர். அதனால் தேரின் அச்சை விநாயகர் முறித்து விட்டார். தேர் அச்சு முறிந்ததற்குக் காரணம் விநாயகர் தான் என்பதை உணர்ந்த சிவன் அவரை வேண்டினார். தந்தை சொல் கேட்ட விநாயகர் தேரின் அச்சை சரியாக்கினார். அதன் பின் சிவபெருமான் திரிபுர அசுரர்களை அழித்தார். தேர் அச்சு இற்று (முறிந்து) நின்ற இடமாதலால் இத்தலம் அச்சு இறு பாக்கம் என்று அழைக்கப்பட்டு நாளடைவில் மருவி தற்போது அச்சிறுபாக்கம் என்று அழைக்கப்படுகிறது.

இங்குள்ள சன்னதிகள் விபரம் பின்வருமாறு..


மீண்டும் ஒருமுறை காலையில் சென்று வர மனம் ஏங்குகின்றது. 






 கும்பாபிஷேகத்திற்கு தயாராகிக் கொண்டிருப்பதால் ஸ்ரீ ஆட்சீஸ்வரர்  தவிர அனைத்து மூர்த்தங்களும் துணியால் மூடப்பட்டு இருந்தார்கள். அன்னையின் தரிசனம் மட்டும் பெறவில்லை.மற்றபடி நமக்கு நல்ல தரிசனம் கிடைத்தது. நம் தல அன்பர்கள் அனைவருமாக பிரார்த்தனை செய்யப்பட்டது.  கும்பாபிஷேகத்திற்கு என நம்மால் இயன்ற தொகை கொடுத்தோம். இந்த பதிவை படிக்கும் அன்பர்கள் ஏதேனும் இத்தலத்திற்கு செய்ய விரும்பினால் நேரிடையாக கோயிலுக்கு சென்று உதவவும். இல்லையேல் நம் தளத்தை தொடர்பு கொள்ளவும்.



     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "துன்னு பொழில் அம் மதுரத் தேன் பொழியும் அச்சிறுபாக்கத்து, உலகர் தம் மதம் நீக்கும் ஞான சம்மதமே" என்று போற்றி உள்ளார்.
திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு
பெரிய புராணப் பாடல் எண் : 1132
இன்புற்றுஅங்கு அமர்ந்துஅருளி
         ஈறுஇல்பெருந் தொண்டருடன்
மின்பெற்ற வேணியினார்
         அருள்பெற்றுப் போந்துஅருளி
என்புஉற்ற மணிமார்பர்
         எல்லைஇலா ஆட்சிபுரிந்து
அன்புற்று மகிழ்ந்ததிரு
         அச்சிறுபாக் கத்து அணைந்தார்.
         பொழிப்புரை : இன்புற்ற நிலையில் அப்பதியில் விரும்பி எழுந்தருளியிருந்து, எல்லை இல்லாத பெருந்தொண்டர்களுடனே, மின்போன்ற சடையையுடைய சிவபெருமானின் திருவருள் பெற்று, அங்கிருந்து நீங்கி, எலும்பு மாலைகளை அணிந்த அழகான மார்பை யுடைய இறைவர் எல்லையில்லாத வண்ணம் ஆட்சி செய்து அன்பு பொருந்தி மகிழ்ந்து எழுந்து அருளியுள்ள அச்சிறுபாக்கத்தைச் சேர்ந்தார்.
பெ. பு. பாடல் எண் : 1133
ஆதிமுதல் வரைவணங்கி
         "ஆட்சிகொண்டார்" எனமொழியும்
கோதுஇல்திருப் பதிகஇசை
         குலவியபா டலில்போற்றி,
மாதவத்து முனிவருடன்
         வணங்கிமகிழ்ந்து இன்புற்றுத்
தீதுஅகற்றுஞ் செய்கையினார்
         சின்னாள்அங்கு அமர்ந்துஅருளி.
         பொழிப்புரை : பழமையுடைய சிவபெருமானை வணங்கி `ஆட்சி கொண்டார்\' எனக் கூறும் நிறைவையுடைய குற்றம் இல்லாத திருப்பதிகத்தைப் பண்பொருந்தி விளங்கும் திருப்பாடல்களால் போற்றி, மாதவமுடைய முனிவர்களுடன் வணங்கி, மகிழ்ந்து, இன்பம் அடைந்து, தீமையை நீக்குவதே தம் செய்கையாகக் கொண்டருளிய ஞானசம்பந்தர், சில நாள்கள் அங்கே தங்கியிருந்து,
         குறிப்புரை : இப்பதியில் அருளிய பதிகம் `பொன் திரண்டன்ன\' (தி.1 ப.77) எனும் தொடக்கம் உடைய குறிஞ்சிப் பண்ணிலமைந்த பதிகமாகும். பதிகப் பாடல் தொறும், `அச்சிறுபாக்கமது ஆட்சிகொண் டாரே\' எனவருதலை ஆசிரியர் கொண்டெடுத்து மொழிந்துள்ளார்.
திருஞானசம்பந்தர் திருப்பதிகம்
1.077   திருஅச்சிறுபாக்கம்           பண் - குறிஞ்சி
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
பொன்திரண்டுஅன்ன புரிசடைபுரள,
         பொருகடல்பவளமொடு அழல்நிறம்புரைய,
குன்றுஇரண்டுஅன்ன தோள்உடைஅகலம்
         குலாயவெண்ணூலொடு கொழும்பொடி அணிவர்,
மின்திரண்டுஅன்ன நுண்ணிடைஅரிவை
         மெல்லியலாளையோர் பாகமாப்பேணி
அன்றுஇரண்டுஉருவம் ஆயஎம்அடிகள்
         அச்சிறுபாக்கம் அதுஆட்சிகொண்டாரே.
         பொழிப்புரை :அச்சிறுபாக்கத்தைத் தான் ஆட்சிபுரியும் இடமாகக் கொண்டுள்ள இறைவர், தமது, முறுக்கேறிய பொன் திரண்டாற் போன்ற சடை, அலைகள் பெருங்கடலில் தோன்றும் பவளக் கொடியையும், தீ வண்ணத்தையும் ஒத்துப் புரள, குன்றுகள் போன்ற இரண்டு தோள்களோடு கூடிய மார்பகத்தில் விளங்கும் வெண்மையான முப்புரிநூலோடு வளமையான திருநீற்றையும் அணிந்து, மின்னல் போன்ற நுண்ணிய இடையினையுடைய மென்மைத்தன்மை வாய்ந்த அரிவையாகிய பார்வதிதேவியை ஒரு பாகமாக விரும்பி ஏற்று, ஓருருவில் ஈருருவாய்த் தோன்றும் அடிகளாவார்.
பாடல் எண் : 2
தேனினும் இனியர், பால்அன நீற்றர்
         தீங்கரும்புஅனையர், தம் திருவடிதொழுவார்
ஊன்நயந்துஉருக உவகைகள் தருவார்,
         உச்சிமேல்உறைபவர், ஒன்றுஅலாது ஊரார்,
வானகம்இறந்து வையகம்வணங்க
         வயங்கொளநிற்பதுஓர் வடிவினை உடையார்,
ஆனையின்உரிவை போர்த்த எம்அடிகள்
         அச்சிறுபாக்கம் அதுஆட்சிகொண்டாரே.
         பொழிப்புரை :அச்சிறுபாக்கத்தை, தான் ஆட்சிபுரியும் இடமாகக் கொண்டுள்ள இறைவர், தேனினும் இனியவர். பால் போன்ற நீறணிந்தவர். இனிய கரும்பு போன்றவர். தம் திருவடிகளை மெய்யுருகி வணங்கும் அன்பர்கட்கு உவகைகள் தருபவர். அவர்களின் தலைமேல் விளங்குபவர். இடபவாகனமாகிய ஓர் ஊர்தியிலேயே வருபவர். வானுலகைக் கடந்து மண்ணுலகை அடைந்து அங்குத் தம்மை வழிபடும் அன்பர்கள் நினைக்கும் செயலை வெற்றிபெறச் செய்து நிற்கும் வடிவினை உடையவர். யானையின் தோலைப் போர்த்தியவர். அவர் எம் தலைவராவர்.
பாடல் எண் : 3
கார்இருள்உருவம் மால்வரைபுரையக்
         களிற்றினது உருவுகொண்டு, அரிவைமேல்ஓடி
நீர்உருமகளை நிமிர்சடைத்தாங்கி,
         நீறுஅணிந்து ஏறுகஉந்து ஏறியநிமலர்,
பேரருளாளர், பிறவியில் சேரார்,
         பிணிஇலர், கேடுஇலர், பேய்க்கணம்சூழ
ஆர்இருள்மாலை ஆடும் எம்அடிகள்
         அச்சிறுபாக்கம் அதுஆட்சிகொண்டாரே.
         பொழிப்புரை :அச்சிறுபாக்கத்தைத் தாம் ஆட்சிபுரியும் இடமாகக் கொண்டுள்ள இறைவர், உமையம்மை பெண் யானை வடிவு கொள்ளத்தாம் காரிருளும், பெரிய மலையும் போன்ற களிற்றுயானை வடிவம் தாங்கிச் சென்று அவளோடு கூடியவர். நீர்வடிவமான கங்கையை மேல்நோக்கிய சடைமிசைத் தாங்கியவர். நீறுபூசி விடையேற்றில் மகிழ்ந்து ஏறிவரும் புனிதர். பேரருளாளர். பிறப்பிறப்பிற் சேராதவர். பிணி, கேடு இல்லாதவர். பேய்க்கணங்கள் சூழச் சுடுகாட்டில் முன்மாலை யாமத்தில் நடனம் புரியும் எம் அடிகளாவார்.
பாடல் எண் : 4
மைம்மலர்க்கோதை மார்பினர்எனவும்,
         மலைமகள்அவளொடு மருவினர்எனவும்,
செம்மலர்ப்பிறையும் சிறைஅணிபுனலும்,        
         சென்னிமேல் உடையர், எம் சென்னிமேல் உறைவார்,
தம்மலர் அடிஒன்று அடியவர்பரவ,
         தமிழ்ச்சொலும்வடசொலும் தாள்நிழல்சேர,
அம்மலர்க்கொன்றை அணிந்த எம்அடிகள்
         அச்சிறுபாக்கம் அதுஆட்சிகொண்டாரே.
         பொழிப்புரை :அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டுள்ள இறைவர் குவளை மலர்களால் இயன்ற மாலையைச் சூடிய மார்பினர் எனவும், மலைமகளாகிய பார்வதி தேவியை இடப்பாகமாகக் கொண்டுள்ளவர் எனவும், சிவந்த மலர் போலும் பிறையையும், தேங்கியுள்ள கங்கை நீரையும் தம் சடைமுடி மீது உடையவர் எனவும், எம் சென்னி மேல் உறைபவர் எனவும், தம் மலர் போன்ற திருவடிகளை மனத்தால் ஒன்றி நின்று அடியவர்கள் பரவவும் தமிழ்ச் சொல், வடசொற்களால் இயன்ற தோத்திரங்கள் அவர்தம் திருவடிகளைச் சாரவும் அழகிய கொன்றை மலர் மாலையை அணிந்தவராய் விளங்கும் அடிகள் ஆவார்.
பாடல் எண் : 5
விண்உலாமதியம் சூடினர் எனவும்,
         விரிசடை உள்ளது வெள்ளநீர் எனவும்,
பண்உலா மறைகள் பாடினர் எனவும்,
         பலபுகழ்அல்லது பழிஇலர் எனவும்,
எண்ணல் ஆகாத இமையவர் நாளும்
         ஏத்துஅரவங்களோடு எழில்பெறநின்ற
அண்ணல் ஆன்ஊர்தி ஏறும்எம்அடிகள்
         அச்சிறுபாக்கம் அதுஆட்சிகொண்டாரே.
         பொழிப்புரை :அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டுள்ள இறைவர் வானிலே உலாவும் திங்களைச் சூடியவர் எனவும், அவர்தம் விரிந்த சடைமுடியில் கங்கை நீர் வெள்ளம் தங்கி உள்ளது எனவும், இசை அமைதியோடு கூடிய நான்கு வேதங்களைப் பாடியவர் எனவும், பலவகையான புகழையே உடையவர் எனவும், பழியே இல்லாதவர் எனவும் எண்ணற்ற தேவர்கள் நாள்தோறும் தம்மை ஏத்த அரவாபரணங்களோடு, மிக்க அழகும் தலைமையும் உடையவராய் ஆனேறு ஏறிவரும் எம் அடிகள் ஆவார்.

பாடல் எண் : 6
நீடுஇரும்சடைமேல் இளம்பிறைதுலங்க,
         நிழல்திகழ்மழுவொடு நீறுமெய்பூசி,
தோடுஒருகாதினில் பெய்து, வெய்துஆய
         சுடலையில்ஆடுவர், தோல் உடையாக,
காடுஅரங்காகக் கங்குலும்பகலும்
         கழுதொடுபாரிடம் கைதொழுதுஏத்த
ஆடுஅரவுஆட ஆடும் எம்அடிகள்
         அச்சிறுபாக்கம் அதுஆட்சிகொண்டாரே.
         பொழிப்புரை :அச்சிறுபாக்கதில் ஆட்சி கொண்டுள்ள இறைவர் தமது நீண்ட பெரிய சடைமேல் இளம்பிறை விளங்க, ஒளிபொருந்திய மழுவோடு, திருநீற்றை மேனிமேல் பூசி, ஒரு காதில் தோடணிந்து கொடிய சுடலைக் காட்டில் ஆடுபவர். புலித்தோலை உடையாக அணிந்து இரவும், பகலும் பேய்க்கணங்களும், பூதகணங்களும் கைகளால் தொழுதேத்தப் படமெடுத்தாடும் பாம்புகள் தம் மேனிமேல் பொருந்தி ஆடச் சுடுகாட்டைத் தமது அரங்கமாகக் கொண்டு ஆடும் எம் அடிகள் ஆவார்.
பாடல் எண் : 7
ஏறும் ஒன்றுஏறி, நீறுமெய்பூசி ,
         இளங்கிளை அரிவையொடு ஒருங்கு உடன்ஆகி,
கூறும்ஒன்றுஅருளி, கொன்றை அம் தாரும்,
         குளிர்இளமதியமும், கூவிளமலரும்,
நாறுமல்லிகையும், எருக்கொடுமுருக்கும்,
         மகிழ்இளவன்னியும் இவைநலம்பகர
ஆறும்ஓர்சடைமேல் அணிந்த எம்அடிகள்
         அச்சிறுபாக்கம் அதுஆட்சிகொண்டாரே.
         பொழிப்புரை :அச்சிறுபாக்கத்தில் ஆட்சிகொண்டுள்ள இறைவர், ஆனேறு ஒன்றில் ஏறித்தம் திருமேனிமேல் நீறுபூசி இளையகிளி போன்ற அழகிய பார்வதிதேவியாருக்குத் தம் உடலில் ஒரு கூறு அருளி இருவரும் ஒருவராய் இணைந்து திருமுடிமேல் கொன்றை மாலை, குளிர்ந்த இளமதி, வில்வம், பிற நறுமலர்கள் மணங்கமழும் மல்லிகை, எருக்கு, முருக்கு, மகிழ், இளவன்னி இலை ஆகியஇவை மணம் பரப்ப, கங்கையாற்றைச் சடைமேல் அணிந்துள்ள எம் அடிகள் ஆவார்.
பாடல் எண் : 8
கச்சும்ஒள் வாளும் கட்டிய உடையர்
         கதிர்முடி சுடர்விடக் கவரியும் குடையும்,
பிச்சமும் பிறவும் பெண்அணங்குஆய
         பிறைநுதலவர்,தமைப் பெரியவர்பேண,
பச்சமும் வலியும் கருதிய அரக்கன்
         பருவரை எடுத்ததிண் தொள்களை அடர்வித்து
அச்சமும் அருளும் கொடுத்த எம்அடிகள்
         அச்சிறுபாக்கம் அதுஆட்சிகொண்டாரே.
         பொழிப்புரை :அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டுள்ள இறைவர் ஒளி பொருந்திய வாளைக் கச்சிலே பொருத்தி இடையில் ஆடையாகக் கட்டியுள்ளவர். ஒளி பொருந்திய முடி சுடர்விடக்கவரி, குடை, பீலிக்குஞ்சம் முதலியவற்றோடு பெண்களைக் கவரும் பிறை மதியை முடியிற்சூடி விளங்குபவர். பெருமை உடைய அடியவர் தம்மை விரும்பி வழிபடுமாறு, தம் அன்பு வலிமை ஆகியவற்றைக் கருதித்தன்னைப் பெரியவனாக எண்ணிப் பெரிய கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த இராவணனின் தோள்களை அடர்த்து அவனுக்குத் தம்பால் அன்பையும் அருளையும் கொடுத்த எம் அடிகள் ஆவார்.
பாடல் எண் : 9
நோற்றலார்ஏனும், வேட்டலார்ஏனும்,
         நுகர்புகர்சாந்தமொடு ஏந்தியமாலைக்
கூற்றலார்ஏனும் இன்னவாறுஎன்றும்
         எய்தல்ஆகாததொர் இயல்பினைஉடையார்
தோற்றல்ஆர்மாலும் நான்முகம் உடைய
         தோன்றலும் அடியொடு முடிஉறத்தங்கள்
ஆற்றலாறல் காணார் ஆய எம்அடிகள்
         அச்சிறுபாக்கம் அதுஆட்சிகொண்டாரே.
         பொழிப்புரை :அச்சிறுபாக்கத்தில் ஆட்சிகொண்டுள்ள இறைவர் தவம் செய்யாராயினும், அன்பு செய்யாராயினும் நுகரத்தக்க உணவு, சந்தனம், கையில் ஏந்திய மாலை இவற்றின் கூறுகளோடு வழிபாடு செய்யாராயினும் இத்தகையவர் என்று அறியமுடியாத தன்மையும் அடைய முடியாத அருமையும் உடைய இயல்பினராய் மாலும் நான்முகனும் பன்றியும் அன்னமுமாய்த் தோன்றி அடியையும் முடியையும் தங்கள் ஆற்றலால் காண இயலாதவாறு உயர்ந்து நின்ற எம்அடிகள் ஆவார். எனவே நோற்பவருக்கும் அன்பு செய்பவருக்கும் வழிபடுவோருக்கும் அவர் எளியர் என்பது கருத்து.
பாடல் எண் : 10
வாதுசெய்சமணும் சாக்கியப்பேய்கள்
         நல்வினைநீக்கிய வல்வினையாளர்,
ஓதியும்கேட்டும் உணர்வினை இலாதார்
         உள்கல் ஆகாததுஓர் இயல்பினை உடையார்
வேதமும்வேத நெறிகளும் ஆகி
         விமலவேடத்தொடு கமலமாமதிபோல்
ஆதியும்ஈறும் ஆய எம்அடிகள்
         அச்சிறுபாக்கம் அதுஆட்சிகொண்டாரே.
         பொழிப்புரை :அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டுள்ள எம் அடிகள் நல்வினைகளைச் செய்யாது வல்வினைகள் புரிபவரும் ஓதியும் கேட்டும் திருந்தாத உணர்வோடு தர்க்கவாதம் புரிபவருமாகிய சமணர்களும் சாக்கியப் பேய்களும் நினைத்தும் அறிய முடியாத இயல்பினை உடையவர். வேதமும் வேதநெறிகளும் ஆகியவர். தம்மை வழிபடுவார் மலங்களை நீக்கும் வேடம் உடையவர். தாமரை மலரும் திங்களும் போன்ற அழகும், தண்மையும் உடையவர். உலகின் முதலும் முடிவும் ஆனவர்.
பாடல் எண் : 11
மைச்செறி குவளை தவளைவாய் நிறைய   
         மதுமலர்ப் பொய்கையில் புதுமலர் கிழியப்
பச்சிற வெறிவயல் வெறிகமழ் காழிப்
         பதியவர் அதிபதி கவுணியர் பெருமான்,
கைச்சிறு மறியவன் கழல்அலால் பேணாக்
         கருத்துஉடை ஞானசம் பந்தன தமிழ்கொண்டு
அச்சிறு பாக்கத்து அடிகளை ஏத்தும்
         அன்புடை அடியவர் அருவினை இலரே.
         பொழிப்புரை :கருநிறம் பொருந்திய குவளை மலர்கள் தவளைகளின் வாய் நிறையுமாறு தேனைப் பொழியும் மலர்கள் நிறைந்த பொய்கைகளும், புதுமலர்களின் இதழ்கள் கிழியுமாறு பசிய இறால் மீன்கள் துள்ளி விழும் பொய்கைகளை அடுத்துள்ள வயல்களும் மணம் கமழும் சீகாழிப்பதியினர்க்கு அதிபதியாய் விளங்கும் கவுணியர் குலத்தலைவனும், கையின்கண் சிறிய மானை ஏந்திய சிவன் திருவடிகளையன்றிப் பிறவற்றைக் கருதாதகருத்தினை உடையவனும் ஆகிய ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகத்தைக் கொண்டு அச்சிறுபாக்கத்து அடிகளை ஏத்தும் அன்புடை அடியவர் நீக்குதற்கரிய வினைகள் இலராவர்.

திருச்சிற்றம்பலம்



வண்ணப்பூச்சுகளின் அலங்காரத்தில் ராஜ கோபுரம்.

கும்பாபிஷேக அழைப்பிதழ் எங்கே என்று நீங்கள் தேடுகின்றீர்களா? இதோ கீழே பகிர்கின்றோம்.





எப்படி செல்வது:

அச்சிறுபாக்கம் ரயில் நிலையம் சென்னை எழும்பூர் - விழுப்புரம் ரயில் மார்க்கத்தில் இருக்கிறது. அச்சிறுபாக்கம் சிறிய ரயில் நிலையம் ஆனதால் அநேக ரயில்கள் இங்கு நிற்பதில்லை. ஆகையால் அச்சிறுபாக்கத்திறகு முந்தைய ரயில் நிலையமான மேல்மருவத்தூரில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோவில சுமார் 4 கி.மி. பயணம் செய்தால் அச்சிறுபாக்கம் கோவிலை அடையலாம். சென்னையில் இருந்து செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்தூர் வழியாக திண்டிவனம் செல்லும் சாலையில் மேல்மருவத்தூரை அடுத்து வரும் நிறுத்தம் அச்சிறுபாக்கம். அங்கு இறங்கி இடப்பக்கம் பிரியும் ஊருக்குள் செல்லும் சாலையில் சுமார் அரை கி.மி. சென்றால் கோவிலை அடையலாம். சென்னையில் இருந்து சுமார் 96 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் உள்ளது.



மீள்பதிவாக :-

பாடல் பெற்ற தலங்கள் (9) - வரம் தரும் வயலூர் முருகன் - https://tut-temple.blogspot.com/2019/01/9.html 

 பாடல் பெற்ற தலங்கள் (8) - கற்குடியில் விழுமியானைக் கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே - https://tut-temple.blogspot.com/2018/12/8.html

 பாடல் பெற்ற தலங்கள் (7) - திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில் - http://tut-temple.blogspot.com/2018/11/7.html

பாடல் பெற்ற தலங்கள் (6) - கும்பாபிஷேகத்திற்கு காத்துக் கொண்டிருக்கின்றார் அச்சிறுபாக்கம் ஸ்ரீ ஆட்சீஸ்வரர் - http://tut-temple.blogspot.com/2018/10/6.html

பாடல் பெற்ற தலங்கள் (5) - திருஆனைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில் - http://tut-temple.blogspot.com/2018/09/5.html

பாடல் பெற்ற தலங்கள் (4) - திருமூக்கீச்சரம் பஞ்சவர்ணேசுவரர் கோயில் - http://tut-temple.blogspot.com/2018/08/4.html

பாடல் பெற்ற தலங்கள் (3) - திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில் - http://tut-temple.blogspot.com/2018/07/3.html

பாடல் பெற்ற தலங்கள் (2) - திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில் - http://tut-temple.blogspot.com/2018/06/2.html

பாடல் பெற்ற தலங்கள் (1) - திருநெடுங்களம் - http://tut-temple.blogspot.com/2018/05/1.html