Subscribe

BREAKING NEWS

02 April 2020

பஞ்ச பட்சி சாஸ்திர இரகசியம்...

பஞ்ச பட்சி சாஸ்திரம் என்றால் என்ன?

இறையருள் இல்லாமல் பஞ்ச பட்சி சாஸ்திரம் மட்டுமல்ல. வேறு எந்த சாஸ்திரமும் நமக்கு கைவராது. ஆகையால் இறைவனை வணங்கித் தொழுது விட்டு இந்த அபூர்வ பதிவை உலகம் அறிய  பகிர்கிறேன்....


இந்த இரகசியத்தின் அருமையை எனக்கு முதன்முதலில் தெரியபடுத்தியவர் நமது குழுவில் முக்கிய உறுப்பினராக இருக்கும் திருமதி,மாலதி ராஜ்குமார் அவர்கள்,எங்கள் இருவருக்கும் ஆன்மிகம் சம்பந்தமாக மணிகணக்கில் விவாதங்கள் நடக்கும் அது அறிவியல் சார்ந்ததாகவும் இருக்கும்.அப்படி ஒருமுறை விவாதம் நடக்கும்போது இந்த பஞ்சபட்சி சாஸ்திரம் பற்றிய விவாதங்களும் நடைபெற்றது. என்னுடைய விவாதம் அதெல்லாம் சரியாக யாராலயும் நூற்றுக்கு நூறு சரியாக கணிக்க முடியாது என்பதாகும் ஆனால் அவர்கள் அதெல்லாம் விடுங்க இந்தக் பஞ்சபட்சி சாஸ்திரம்  மட்டும் உங்க வாழ்க்கையில ஒருவாட்டி பயன்படுத்திப்பாருங்கள் அப்படின்னு சொன்னாங்க அதை எப்படி பார்க்கணும் எப்படி? அப்படிங்கிற அட்டவணையும் எனக்கு மெயிலில் அனுப்பி வச்சாங்க... சரி இது என்ன தான் நடக்குது  காசா? பணமா? ஒரு முறை டெஸ்ட் பண்ணி பார்த்துக்கலாம்னு என்னுடைய ஒரு சுப நிகழ்ச்சிக்காக சோதித்துப் பார்த்தேன் முதலில் சோதித்து பார்த்ததில் அது தவறாகவே அமைந்தது.

 மீண்டும் ஒருநாள் அவர்களுடன் பேசும்போது இந்த விவாதத்தை பற்றிய தகவல்கள் பரிமாறிக் கொண்டோம் எனது பக்கம் விவாதம் சாதகமாக இருந்ததால் நானும் விடாப்பிடியாக விவாதித்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவர்களோ விடாப்பிடியாக நீங்கள் இதை கணிப்பதில் ஏதோ தவறு செய்து இருக்கிறீர்கள் என்று ஆணித்தனமாக அவர்கள் கூறிக்கொண்டிருந்தார்கள். என்ன தவறாக இருக்கும்? என்று மீண்டும் விவாதம் தொடர்ந்தது அப்போதுதான் நீங்கள் சரியாக 100% உங்கள் பட்சி ஆட்சியில் இருக்கும் போது ஒரு காரியத்தை செய்து பாருங்கள் அதாவது நீங்கள் ஒரு காரியத்தை தொடங்கும் அந்தநேரம் உங்களது பட்சி 100% உச்சத்தில் இருக்க வேண்டும் இதுதான் அவர்கள் சொன்ன அடுத்த ரகசியம். 
சரி மீண்டும் ஒரு நல்ல சுப நிகழ்வுகளுக்காக காத்துக்கொண்டிருந்தேன் அந்த நாளும் வந்தது நானும் சரியாக 100% என்னுடைய   பட்சி உச்சத்தில் இருக்கும் அந்த நேரத்தை தேர்வு செய்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து துவங்கினேன். என்ன ஒரு மிகப் பெரிய ஆச்சரியம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது அதிலிருந்து இன்றுவரை நான் இந்த பஞ்சபட்சி சாஸ்திரத்தை ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து எனது  நாட்காட்டியில் ஒட்டி வைத்துள்ளேன் முக்கியமான செயல்களை செய்யும்போது நான் இவை தற்போது பார்த்து வருகின்றேன் உண்மையில் பயனுள்ளதாக இருக்கிறது நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்.

பட்சி தெரிந்தவனிடம் பகை கொள்ளாதே என்பது முதுமொழி. இந்த சாஸ்திரம் தெரிந்தவரை பகைத்துக் கொண்டால் தன் மீது பகை கொண்டவரை வீழ்த்தும் வல்லமை  அவர்களுக்கு இருக்கும். அவ்வளவு சக்தி வாய்ந்தது. இதைப் படிப்பவர்கள் யாரும் தீய காரியத்திற்கு பயன்படுத்த வேண்டாம் என மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். அதே நேரத்தில் அரைகுறையாகப் புரிந்துக் கொண்டு  சோதனை செய்து தனக்குத் தானே பிரச்சினையைத் தேடிக்கொள்ளாதீர்கள்.

மனித உடலில் இயங்க கூடிய உள் உறுப்புகளுக்கு பல்வேறு வழிகளிலிருந்து சக்தி கிடைக்கும் வகையில் மனித உடல் அமைப்பு அமைந்துள்ளது.

மனிதனின் உடல் உறுப்புகளில் இருந்து வரும் நரம்புகளின் தொடர்பு மற்றும் நரம்புகளின் முடிச்சுகள் மனிதனின் கண், காது உள்ளங்கை மற்றும் கால் பாதங்களில் வந்தடைகிறது. மனிதனின் அகத்தை வெளிப்படுத்தும் புறவழி உறுப்பே கண்கள்தான். இயற்கையின் தோற்றத்தையும், மற்றவையையும் ஊர்ஜிதப்படுத்துவதும் கண்கள்தான்.

எதையும் முதலில் அங்கரிப்பது கண்கள் மூலமாகத்தான். அழகான உறுப்பே கண்கள். மனிதனின் உடல் உறுப்புகளில் ஏற்படும் பிரச்சினைகளுக்கும் மற்றும் நோய்களுக்கும் நாடி பார்த்து நோயை கணிப்பது போல மனிதனின் கருவிழியை வைத்தும் நோயை கணிக்கலாம்.

கருவிழித் திசுக்களில் ஏற்படும் புள்ளிகள், கோடுகள், நிற மாற்றங்கள் கருவிழித் திசுக்களின் ஒருங்கிணைப்பு மாற்றங்கள் ஆகியவற்றைக் கொண்டு உடல் உறுப்புகளின் பாதிப்புகளை துல்லியமாக கண்டு தீர்வு காணலாம். கண்களின் கருவிழிக் கொண்டு நோய் அறிந்து காது, உள்ளங்கை, கால் பாதங்களில் உள்ள வர்ம புள்ளிகள் தூண்டப்படுவதின் மூலமாக நோயினை குண்படுத்த முடியும்.

கருவிழியில் மருத்துவம் எப்படி உருவானது?

பஞ்சபட்சிகளில் ஒன்றான ஆந்தையை மையமாகவும் இதன் கண்களின் கருவிழியில் ஏற்பட்ட மாற்றத்தை கொண்டும் தான் கருவிழியில் மருத்துவம் உருவானது. கால் உடைந்த ஆந்தைக்கு காலில் கட்டு போடுவதற்கு முன் ஆந்தையை வைத்தியர் பார்த்தபோது அந்த ஆந்தையின் கண்ணின் கருவிழியில் ஒரு புள்ளி இருப்பதை கண்டறிந்தார். அதை வைத்து சிகிச்சை அளித்தார். இதில் ஆந்தையின் கால் குணமானது. உடனே அப்புள்ளி மறைந்தையும் கண்டார்.

அதே போலவே ஒரு மனிதனுக்கு ஏற்பட்ட விபத்தின் போது அவன் கருவிழியில் இதைப்போன்ற மாற்றம் ஏற்பட்டதையும் பின்பு அந்த மனிதனின் காயம் சரியானதும் அவன் கண்ணின் கருவிழி சரியானதையும் கண்டார்.

இந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டுதான் நோயை நிர்ணயம் செய்ய ஒரு புதிய யுத்தியை கண்டறிந்து கையாண்டார்கள்.

கருவிழியின் மூலம் நோய் அறியும் மருத்துவம் கி.பி. 1837-ம் ஆண்டில் இருந்து இன்று வரை நடைமுறையில் உள்ளது.

அதே போல பஞ்சபட்சி சாஸ்திரம் ஓர் மனிதனின் வாழ்க்கை முறையையும், வசதி வாய்ப்பையும் மற்றும் அவனின் நோய் தன்மையையும், உள் உறுப்புகளில் எந்த உறுப்பு பாதித்துள்ளது என்பதையும், அவன் உடலில் எந்த சக்கரம் சரியாக   இயங்கவில்லை என்பதையும் கூற முடியும். மகாபாரத்தில் சாகதேவன் சோதிட சாஸ்திரம் கையாண்டார்.

கிருஷ்ண பகவான் பஞ்சபட்சி சாஸ்திரத்தை கையாண்டார் என்று சாஸ்திரம் கூறுகிறது. அதே போல ராமயணத்தில் பலவகை கலைகளையும் அறிந்த ராவணனும் பஞ்சபட்சி சாஸ்திரம் அறிந்தவர் ஆவார்.

இவர்கள் பஞ்ச பட்சிசாஸ்திரம் அதிகம் கையாண்டுயுள்ளனர்.

இந்த அபூர்வ சாஸ்த்திரங்களை யோகிகள் "ஞானிகள்" முனிவர்கள் சித்தர்களும் பல்லாயிரம் வருடங்களாக மிகவும் இரகசியமாக பயன்படுத்தியும் பாதுகாத்தும் பயிற்சி அளித்தும் வந்துள்ளனர்.

இவைகளை பல வருடம் தம்முடனே இருந்து தொண்டுகள் செய்துகுருவின் திருப்பாதமே கதி என இருந்து வரும் விசுவாசமுள்ள சீடனுக்கு மட்டும் இக்கலைகளின் அரிய இரகசியங்களை உபதேசித்து வந்துள்ளனர்.

இதில் பஞ்சபட்சி சாஸ்திரம் எனப்படும்  மகத்துவம் வாய்ந்த இக்கலை ஆதியில் எம்பெருமான் ஈசன் அன்னை மகாசக்தி உமையவளுக்கு உபதேசித்த அபூர்வ கலையாகும்.

தமிழ்க் கடவுளாகிய சுப்பிரமணியர் சூரபத்மனுடன் போரிட்டு அவனை வெல்ல முடியாமல் போகவே அவனை சம்ஹாரம் செய்யும் பொருட்டு தாயாகிய மகாசக்தியால் சுப்பிரமணியருக்கு உபதேசித்த உன்னத கலையாகும் "பஞ்ச பட்சி சாஸ்திரம்" இதனையே சூரனை வதம் செய்ய  முருகனுக்கு அன்னை மகாசக்தி வேல் கொடுத்ததாக சொல்வர்.

சூரனை வதம் செய்து வெகு காலம் சென்ற பின்பு குருமுனியாகிய அகத்திய முனிவருக்கு முருகப் பெருமான் பஞ்ச பட்சி சாஸ்த்திரத்தை உபதேசம் செய்தார்.

அகத்தியரும் மற்ற சித்தர்களுக்கு  உபதேசித்தார் இக்கலையைப் பயின்ற சித்தர்களும் தம்மிடம் உள்ள உண்மையான சீடர்களுக்கு மட்டும் குருவழி உபதேசம் அளித்து வந்துள்ளனர்.  

பஞ்ச பட்சி சாஸ்திரம் என்பது ஜோதிடக்கலையிலும் மேலான மிகவும் துல்லியமான ஒரு காலக்கணிதம் ஆகும்.இது பஞ்ச பூத சக்திகளை அடிப்படையாகக் கொண்டு இயங்குவது ஆகும். 

நவக்கிரகங்கள், பன்னிரு இராசிகள், இருபத்தேழு நட்சத்திரங்கள் ஆக மொத்தம் - 48- இவை அனைத்தையும் ஐந்து பட்சிக்குள் (பறவைகள்)அடக்குவதே இதன் சூட்சும இரகசியமாகும்.

பஞ்சபூதம் எனப்படும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனப்படும் ஐந்து வித மாபெரும் பிரபஞ்ச சக்திகளை பஞ்சபட்சி எனப்படும். வல்லூறு,ஆந்தை, காகம், கோழி, மயில், என ஐந்து வித பறவைகளாக மாற்றி அமைத்து இக்கலையை உருவாக்கியது இறைவனின் வல்லமையாகும்.

சரம்  தெரிந்தவனிடம்  சரசமாடாதே 

பட்சி தெரிந்தவனிடம்  பகைகொள்ளாதே 

பல்லி சொல்பவனிடம் பதில் பேசாதே 

என்பது பெரியோர் வாக்குவாகும்.

மேற்கண்டபடி  பஞ்சபட்சி தெரிந்தவனை பகைத்துக் கொண்டால் பகைத்தவனை எளிதில் சாய்க்கும் வல்லமை அவனுக்கு உண்டு என்பதால்தான். இன்றும் தென் தமிழகத்தில் இக்கலையின் இரகசியம்  அறிந்த ஆசான்கள் ஒரு சிலர் மட்டுமே உள்ளனர். இக்கலையினைப் பயன் படுத்தி சேவல் சண்டை, ஆட்டுகிடா சண்டை, சிலம்பம் , பிரச்சனை வழக்குகள், போன்றவற்றில் தன்னைச் சார்ந்தவர்களை மட்டும் வெற்றி பெற வைத்து வருகின்றனர். 

அதே சமயம் பஞ்சபட்சி கலையின் சூட்சும சக்தியைப் பயன்படுத்தி வாழ்வில் மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ள ஒருவரைவாழ்வில் மிகவும் உச்ச நிலையில் உயர்த்தி பணம்,பதவி,புகழ், ஆகிய வற்றை  எளிதில் அடைய வைக்க முடியும்.மேலும் பஞ்சபட்சி நுட்பத்தினை அறிந்தவன் ஜெகத்தை ஆள்வான், அவனை எவரும் வெல்ல முடியாது என்பது உறுதியிட்ட உண்மையாகும்.

இக்கலையை பயன்படுத்தி மாந்திரீக அஷ்ட கர்மம் ஆடலாம். செய்தொழில், காரியங்கள், வாழ்க்கையில் முன்னேற்றம்,  புதுவித திட்டங்கள் போன்றவற்றை உடனே நடைமுறைக்கு கொண்டு வரவும், தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறவும் முடியும்.

மேலும், நவக்கிரகங்களின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் வல்லமை இக்கலைக்கு உண்டு. நாள், திதி, நட்சத்திரம், யோகம், கரணம், நேரம், லக்கினம், போன்ற அனைத்து தோஷங்களும் பஞ்சபட்சியினைக் கட்டுப் படுத்த இயலாது.

பஞ்ச பட்சி சாஸ்திரம் என்றால் என்ன?
*********************************************

பட்சிகள் மொத்தம் ஐந்து. 
அவை முறையே 
(1)வல்லூறு.
(2)ஆந்தை.
(3)காகம்.
(4)கோழி.
(5)மயில்.

முதலில் யாருக்கு என்ன பட்சி என்று பார்ப்போம். ஒருவரின் நட்சத்திரத்தின் மூலம் பட்சியை நிர்ணயிக்கலாம். இது நட்சத்திரப் பட்சி எனப்படும். அவை கீழ் கண்டவாறு வரும்....

வல்லூறு
***********
அஷ்வினி,
பரணி,
கார்த்திகை,
ரோகிணி,
மிருகசீரிஷம்     
         
ஆந்தை
**********
திருவாதிரை,
புனர்பூசம்,
பூசம்,
ஆயில்யம்,
மகம்,
பூரம்    
              
காகம்
********
உத்தரம்,
ஹஸ்தம்,
சித்திரை,
சுவாதி,
விசாகம்    
                           
கோழி
********
அனுஷம்,
கேட்டை,
மூலம்,
பூராடம்,
உத்ராடம்     
                        
மயில்
********
திருவோணம்,
அவிட்டம்,
சதயம்,
பூரட்டாதி,
உத்ரட்டாதி,
ரேவதி

இதுதான் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. நட்சத்திரம் தெரியாதவர்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து தங்களுடைய (அல்லது பிறருடைய) பட்சிகளை முடிவு செய்யலாம். இவை அட்சரப் பட்சிகள் எனப்படும்.

வளர்பிறை
*************

அ, ஆ - வல்லூறு

(ராமன், கலைவாணன் இப்படி, அதாவது ராமன் என்னும் பெயரில் ரா முதல் எழுத்து. அதை ர் + ஆ என்று பிரிக்கலாம். அதே போல் கலைவாணன் என்னும் பெயரில் முதல் எழுத்து க. இதை க் + அ என்று பிரிக்கலாம். இப்படியே மற்ற எழுத்துகளுக்கும் பார்த்துக் கொள்ளலாம்.) 

இ, ஈ - ஆந்தை

உ, ஊ - காகம்

எ, ஏ - கோழி

ஒ, ஓ - மயில்

தேய்பிறை
*************

அ, ஆ - கோழி 

இ, ஈ - வல்லூறு

உ, ஊ - ஆந்தை

எ, ஏ - மயில்

ஒ, ஓ - காகம்

         ஒருவர் தொழில் நிமித்தமாகவோ வேறு எதற்காகவேனும் தங்களுடைய பட்சியின் நிலையறிந்து செயல்பட்டால் அதில் வெற்றி நிச்சயம் பெறலாம். இந்த பட்சிகளின் தொழில்கள் என்று அரசு, ஊண், நடை, துயில், சாவு என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலைகளில் பட்சிகளின் பலம் கீழ் கண்டவாறு இருக்கும் என்று சொல்லலாம்

அரசு  - 100% பலம்
ஊண் - 80%      “
நடை -   50%    “
துயில் - 25%    “
சாவு     - 0%     “

         ஒவ்வொரு பட்சிக்கு பகல்/இரவு நேரம் 5 பிரிவாக பிரிக்கப் பட்டு அந்த நேரத்தில் மேற்கண்ட எந்த நிலையில் இருக்கிறது என்று சொல்லப் பட்டிருக்கிறது. 

       இது தவிர இந்த பட்சிகளுக்கு மிகவும் பலவீனமான நாட்கள் (செயல் இழந்து விடும் நாட்கள் - Death Days) என்று இருக்கிறது. இவை படுபட்சி நாட்கள் எனப்படும். இந்த நாட்களில் எந்த முக்கியமான வேலை,  புது முயற்சி, சுப காரியம், பிரயாணம், மிகவும் Risk ஆன  ஆப்பரேஷன், மருத்துவ சிகிச்சை இவை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. இவை பகல், இரவு இரண்டு வேளைகளுக்கும் பொருந்தும்.

வளர்பிறை - படுபட்சி நாட்கள்
***********************************

வல்லூறு - வியாழன், சனி

ஆந்தை - ஞாயிறு, வெள்ளி

காகம் - திங்கள்

கோழி - செவ்வாய்

மயில் - புதன்

தேய்பிறை படுபட்சி நாட்கள் 
*********************************

வல்லூறு -செவ்வாய்

ஆந்தை -திங்கள்

காகம் -ஞாயிறு

கோழி -வியாழன், சனி

மயில் -புதன், வெள்ளி

       அடுத்து இந்த பட்சிகளுக்கு ஊண் பட்சி நாட்கள் (Ruling Days) என்று இருக்கின்றன. அந்த நாட்களில் அந்த பட்சி பலமாக இருக்கும். முன்பு சொன்ன படு பட்சி நாட்களுக்கு நேர் எதிரானது. மேலே விலக்கச் சொன்ன எல்லாக் காரியங்களையும் மேற்கொள்ள ஏதுவான நாள். இவை படு பட்சி நாட்கள் போல் இல்லாமல் பகல் இரவு இரு வேளைகளுக்கும் வெவ்வேறாக இருக்கும். அவை கீழ்கண்டவாறு:-

வளர்பிறை
*************

பகல் - ஊண்பட்சி நாட்கள் (Ruling Days)

வல்லூறு - ஞாயிறு, செவ்வாய்

ஆந்தை - புதன், திங்கள்

காகம் - வியாழன்

கோழி - வெள்ளி

மயில் - சனி

இரவு - ஊண்பட்சி நாட்கள் (Ruling Days)

வல்லூறு - வெள்ளி

ஆந்தை -ஞாயிறு

காகம் -ஞாயிறு, செவ்வாய்

கோழி - திங்கள், புதன் 

மயில் -வியாழன் 

தேய்பிறை
*************

பகல் - ஊண்பட்சி நாட்கள் (Ruling Days)

வல்லூறு -வெள்ளி

ஆந்தை - வியாழன் 

காகம் -புதன்

கோழி - ஞாயிறு, செவ்வாய்

மயில் - திங், சனி

இரவு - ஊண்பட்சி நாட்கள் (Ruling Days)

வல்லூறு -ஞாயிறு, செவ்வாய்

ஆந்தை - புதன்

காகம் - வியாழன்

கோழி - திங்கள், சனி 

மயில் -வெள்ளி 

      இந்த படு பட்சி நாட்களில் உங்களுடைய பட்சி குறிப்பிட்ட நேரத்தில் அரசு என்ற நிலையில் இருந்தாலும் எந்த பிரயோஜமும் இல்லை. அதே நேரத்தில் ஊண் பட்சி நாட்களில் சாவு என்ற நிலையில் இருந்தாலும் அது பலமிழந்ததாக ஆகாது.

    அடுத்து பட்சிகளின் பொதுவான பல நிர்னயங்களைப் பார்ப்போம். பட்சிகளின் பலம் இறங்குமுகமாக கீழ் கண்டவாறு:
(1) காகம்
(2) ஆந்தை
(3) வல்லூறு
(4) கோழி
(5) மயில்
அதாவது காகம் எல்லாவற்றிலும் பலமிக்கது என்றும் மயில் மிகவும் பலவீனமானது என்று இதன் மூலம் முடிவுக்கு வரலாம்.

        இது எதற்கு என்றால் உங்களது பட்சி மயில் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் பட்சியை விட பலமான ஆந்தை, காகம் இவற்றைத் தங்களது பட்சியாகக் கொண்டுள்ளவர்களுடன் நீங்கள் போட்டி போட்டு ஜெயிப்பது கடினம். ஆனால் பலவீனமான உங்கள் பட்சிக்கு ஊண் பட்சி நாட்களாக இருந்து, எதிராளியின் பட்சி படு பட்சியாக இருந்தால் உங்களுக்குதான் வெற்றி. இதை தற்காப்புக்காக பயன் படுத்தலாம் என்பதற்காகச் சொல்கிறேன். பிறருக்கு தீங்கு செய்வதற்காக அல்ல.

           அந்த கால கட்டத்தில் எதிராளிக்கு பில்லி, சூனியம், ஏவல் செய்பவர்கள்,  அல்லது ஏதாவது ஒரு வகையில் கெடுதல் செய்ய நினைப்பவர்கள், பஞ்ச பட்சி தெரிந்தவர்களிடம் கேட்டு தனக்கு ஊண் பட்சி நாளும், எதிராளிக்கு படு பட்சி வரும்படி பார்த்துக் கொள்வார்கள். அல்லது பஞ்ச பட்சி தெரிந்தவர்கள் தங்களை நாடி வருபவர்களிடம் இந்த நாட்களைத் தேர்ந்தெடுத்து சொல்வார்கள். தீமைக்கு மட்டுமல்ல. நல்ல காரியங்களுக்கும் பயன்படுத்தலாம். பயன்படுத்த வேண்டும்.

                  தனக்கு சாதகமாக காரியம் சாதித்துக் கொள்ள நினைப்பவர்கள், (வீண், வம்பு, வழக்கு என்று மாட்டிக் கொண்டவர்கள்,  அதிகாரிகளைச் சந்தித்து உதவி கேட்க நினைப்பவர்கள்) இந்த பட்சியின் நிலையறிந்து நடந்தால் நன்மை அடையலாம். ஊண் பட்சி நாட்களில் வேலைக்கு மனு செய்தால் சாதகமான பதிலை எதிர் பார்க்கலாம்.

               படு பட்சி நாட்கள் என்பது மிகவும் மோசமான பலன்களைக் கொடுக்கக் கூடியது என்று பார்த்தோம். இதனுடைய கொடிய பலன்களிலிருந்து தப்பிக்க ஒரு பரிகாரம் சொல்லியிருக்கிறார்கள். ஓம் நமசிவய என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபம் செய்து விட்டு சென்றால் அதன் கடுமை குறையும் என்று. (இதை மசிவயந, சிவயநம, நசிவயம  என்று 125 வகையில் மாற்றி சொல்லலாம். பலன் ஒன்றுதான்.) ஆயினும் முழுமையாக படு பட்சி நாளின் கடுமையை கட்டுப்படுத்தி விட முடியாது என்பது என் கருத்து.

              நாளும் கோளும் சிவனடியார்களை ஒன்றும் செய்து விட முடியாது என்று கோளறு திருப்பதிகத்தைப் பாடி தன் பயணத்தைத் தொடர்ந்த  திருஞானசம்பந்தரே அதன் பிடியில் இருந்து தப்ப முடியாமல் போய் விட்டது. நாமெல்லாம் எம்மாத்திரம்.

பறவைகள் ஐந்து. அதன் தொழில்கள் ஐந்து என்று ஏற்கனவே பார்த்தோம். எந்த பறவை எந்த நாளில் எந்த நேரத்தில் என்ன தொழில் செய்யும் என்று பார்ப்போம். ஒரு நாளில் மொத்தம் 24 மணி = 60 நாளிகை. பகல் = 30 நாளிகை, இரவு = 30 நாளிகை. அது ஐந்து பறவைகளுக்கும் ஐந்து பிரிவாக பிரிக்கப்பட்டு பகல் (அல்லது இரவில்) தன் தொழிலைச் செய்ய ஒவ்வொரு பறவையும் 6 நாழிகைகள் எடுத்துக் கொள்ளும். 6 நாழிகைகள் என்பது 2 மணி 24 நிமிடங்கள். முதல் 6 நாழிகை ஊண் என்றால் அடுத்த 6 நாழிகை நடை அல்லது வேறு ஒரு தொழில் என்று வரும்.

உண்மையில் உற்றுக் கவனித்தீர்களானால் வளர் பிறை பகல் தொழில் முறையே ஊண், நடை, அரசு, துயில், சாவு என்று வரும். இரவு ஊண், அரசு, சாவு, நடை, துயில் என்று வரும். அதே போல் தேய்பிறை பகல் ஊண், சாவு, துயில், அரசு, நடை என்றும் இரவில் ஊண், துயில், நடை, சாவு, அரசு என்ற இந்த வரிசையில் வரும். எல்லா பட்சிகளுக்கும் வளர்/தேய் பிறைகளில் ஞாயிறு செவ்வாய், ஒரே மாதிரியான தொழில் இருக்கும். வளர் பிறைகளில் திங்கள், புதன் தேய்பிறைகளில் திங்கள், சனி, பட்சிகளின் தொழில் ஒரே மாதிரி இருக்கும். மற்ற கிழமைகளில் அந்தந்த கிழமைக்கு தகுந்தாற்போல் மாறி வரும். 

அதிகம் குழப்ப விரும்பவில்லை. கீழே ஒரு அட்டவணை தந்திருக்கிறேன் அதைப் பார்த்துக் கொள்ளுங்கள். சூரிய உதயம் காலை 6 மணி என்ற நிலையில் இதைத் தந்திருக்கிறேன். நீங்கள் இருக்கும் நாட்டில் சூரிய உதயம் 6.30 மணி என்றால் அந்த நேரத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.

வல்லூறு - வளர்பிறை

நட்பு : மயில், ஆந்தை
பகை : காகம், கோழி 

வல்லூறு - தேய் பிறை

நட்பு : மயில், காகம்
பகை : ஆந்தை, கோழி 

ஆந்தை - வளர்பிறை

நட்பு : வல்லூறு, காகம்
பகை : மயில், கோழி

ஆந்தை - தேய்பிறை

நட்பு : கோழி, காகம்
பகை : வல்லூறு, மயில்

காகம் - வளர்பிறை

நட்பு : ஆந்தை,கோழி
பகை : வல்லூறு, மயில்

காகம் - தேய்பிறை

நட்பு : ஆந்தை, வல்லூறு
பகை : மயில், கோழி

கோழி - வளர்பிறை

நட்பு : மயில், ஆந்தை
பகை : காகம், வல்லூறு 

கோழி - தேய்பிறை

நட்பு : மயில், ஆந்தை
பகை : காகம், வல்லூறு

மயில் - வளர்பிறை

நட்பு : வல்லூறு, கோழி
பகை : ஆந்தை, காகம்

மயில் - தேய்பிறை

நட்பு :  வல்லூறு, கோழி
பகை : ஆந்தை, காகம்

ஊண் பட்சி நாட்களை மஞ்சள் நிறத்திலும், படு பட்சி நாட்களை சிவப்பு நிறத்திலும் இரண்டும் கலந்து வந்தால் ஆரஞ்சு நிறத்திலும் highlight செய்து உள்ளேன்.






நட்பு பட்சியாக உள்ளவர்களுடன் கூட்டு சேர்வது நன்மை பயக்கும். பகை உள்ளவர்களிடம் சற்று தள்ளியே இருப்பது நல்லது.

“அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் உள்ளது” என்பது சித்தர்களின் வாக்கு. பிரபஞ்சமானது பஞ்ச பூதங்களாலானது என்பதை சித்தர்கள் கண்டறிந்தார்கள். அது போல் மனித உடலானது பஞ்ச பூதங்களாலானது என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர்.

ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரனுக்கு உடல் காரகன்,மனோக்காரகன் என்று பெயர்.மனித உடலிலும்,மனதிலும் ஏற்படும் மாற்றங்களுக்கு சந்திரனின் சுழற்சியே காரணம் என்பதை சித்தர்கள் கண்டறிந்தார்கள்.மனிதர்களின் உடற்கூறு அவர்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத்திற்கு தகுந்தாற்போல் அமைந்தூள்ளது என்பதையும் கண்டறிந்தார்கள். உடலை இயக்குவது உயிர் காந்த ஆற்றலாகும். அந்த உயிர் காந்த ஆற்றாலானது சந்திரனினின் சுழற்சிக்கு தகுந்தார்போல் சில நேரங்களில் வலிமையடைவதையும்,சில நேரங்களில் வலுவிழந்துபோவதையும் கண்டறிந்தார்கள்.

உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமையாக இருக்கும்போது, எண்ணிய எண்ணங்கள் எளிதில் நிறைவேறுவதையும், உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமை குன்றியிருக்கும்போது, எண்ணிய எண்ணங்கள் நடைபெறாமல் தடைபடுவதையும் அனுபவத்தில் கண்டறிந்தார்கள்.

உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமையாக இருக்கும்போது, உடல் வலிமை,மனவலிமை கூடுவதையும், உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமை குன்றியிருக்கும்போது, உடல் வலிமை,மனவலிமை குறைவதையும் அனுபவத்தில் கண்டறிந்தார்கள். உடலில் ஏற்படும் இத்தகை மாற்றங்கள் ஒரு குறிப்பிட்ட கால சுழற்சியில் இயங்குகிறது என்பதையும்,அந்த கால சுழற்சிக்குத்தகுந்தார் போல் செயல்பட்டால் வாழ்க்கையில் எப்பொழுதும் வெற்றி  நடை போடலாம் என்பதையும் மானிடர்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு அதை பஞ்ச பட்சி சாஸ்திரம் என்னும் தலைப்பில் உலகுக்கு வெளிப்படுத்தினார்கள்.
“பஞ்ச”என்றால் “ஐந்து” என்று பொருள். “பட்சி” என்றால் “பறவை” என்று பொருள். “சாஸ்திரம்” என்றால் “எழுதப்பட்டவைகளை செயல்படுத்திப்பார்த்தால் உண்மை விளங்கும்” என்று பொருள்.

பஞ்ச பட்சிகள் என்பவை வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் ஆகிய ஐந்து பறவைகளாகும்.

பஞ்ச பட்சி சாஸ்திரத்தில் ஜென்ம நட்சத்திரம் தெரிந்தவர்களுக்கு ஜென்ம நட்சத்திர அடிப்படையிலும், ஜென்ம நட்சத்திரம் தெரியாதவர்களுக்கு அவரவர்களுடைய பெயரின் முதல் எழுத்தில் அமைந்துள்ள உயிர் எழுத்தின் அடிப்படையிலும் பட்சி நிர்ணயம் செய்யப்படுகிறது.

தமிழ் எழுத்துக்களை சித்திர எழுத்துக்கள் என தமிழறிஞர்கள் குறிப்பிடுவர். தமிழ் உயிர் எழுத்துகளில் குறில் வடிவமுடைய “அ, இ, உ, எ, ஒ” ஆகிய ஐந்து எழுத்துக்கள் என்ன வடிவத்தில் அமைந்துள்ளனவோ,அதே வடிவத்தையொத்த பறவைகள் பஞ்ச பட்சிகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

அ - வல்லூறு
இ - ஆந்தை
உ - காகம்
எ - கோழி
ஒ - மயில்.

மனித உடல் பஞ்ச பூதங்களால் ஆனது. அந்த பஞ்ச பூதங்களின் செயல் பாட்டையே, பஞ்ச பட்சி சாஸ்திரம் விளக்குகிறது.

நிலம் - வல்லூறு
நீர் - ஆந்தை
நெருப்பு - காகம்
காற்று - கோழி
ஆகாயம் - மயில்.

         பஞ்ச பூதங்களைக்கட்டுப்படுத்தும் ஆற்றல் பஞ்சாக்ஷரம் என்னும் சிவ மந்திரத்திரத்திற்கு உண்டு. எனவே பஞ்சாக்ஷரம் ஜெபிப்பவனை யாராலும் வெற்றிகொள்ள முடியாது என்பதை இந்த சாஸ்திரம் ரகசியமாக வெளிப்படுத்துகிறது.

ந - வல்லூறு
ம - ஆந்தை
சி - காகம்
வ - கோழி
ய - மயில்.

பஞ்சாக்ஷர மந்திரத்திற்குரிய தேவதையான சிவபெருமானே,இந்த பஞ்ச பட்சி சாஸ்திரத்தை முதலில் தன் குமரனான முருகப்பெருமானுக்கு அசுரர்களை அழிக்கும் பொருட்டு உபதேசித்தார் எனவும்,முருகன் அதை அகத்தியருக்கு உபதேசித்தார் எனவும்,அகத்தியர் பதினென் சித்தர்களுக்கு உபதேசித்தார் எனவும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் உதவியுடன் கீழ்கண்ட காரியங்களை செய்யலாம்.

(1)   உடலிலிருந்து நோய் நீக்குதல்.
(2)   பிறர் உடலில் நோயை உண்டாக்குதல்.
(3)   மனோவிகாரங்களிலிருந்துதன்னை தற்காத்துக்கொள்தல்.
(4)   பிறர் மனதை கட்டுப்படுத்துதல்.
(5)   எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்தல்.
(6)   பிறர் எண்ணங்கள் நிறைவேறாமல் தடுத்தல்.
(7)   போட்டிகளில் வெற்றியடைதல்.
(8)   எதிரிகளை வெல்லுதல்.
(9)   தாம்பத்தியஉறவில் பெண்ணை திருப்திபடுத்துதல்.
(10) ஆருட பலன் கூறுதல்.
(11) கிரக தோசங்களுக்கு பரிகாரம் செய்தல்.
(12) சுப காரியங்களுக்கு நல்ல நேரம் தேர்ந்தெடுத்தல்.
(13) வர்மம் நீக்குதல்,வர்மத்தால் எதிரிகளைதாக்குதல்.!!!.

எனக்கு தெரிந்து இன்று இத் தெய்வீகக் கலையின் அதிசூட்சும இரகசியங்கள் அறிந்த ஆசான்கள் வெகுசிலர் மட்டும் தான் உள்ளனர்.    

உண்மையான மெய்குருவிடம் சென்று பணிந்து இக்கலையை கற்கும் ஒருவனை பஞ்சபூத சக்திகள் துணை நின்று காக்கும். அவன் வாழ்வில் மேன்மை பெற்று சீரும் சிறப்புடன் வாழ வகை செய்யும். அதே சமயம் இக்கலையின் மூலமாக சத்ருக்களை துன்புறுத்தவோ, அழிக்கவோ நினைத்தால் ஏழு ஜென்ம பாவ வினைகள் வந்து சேரும். என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.


No comments:

Post a Comment