Subscribe

BREAKING NEWS

08 November 2018

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2

அனைவருக்கும் வணக்கம்.

ஜீவ நாடி அற்புதங்கள் என்ற தொடர் பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். நம் தளத்திற்கு முருகன் அருள் முன்னின்று நடத்துவதால் தான், இந்த முறை சஷ்டி விரதம் மேற்கொள்ள நமக்கு முருகப் பெருமான் ஆணையிட்டுள்ளார். இதோ மீண்டும் இரண்டாம் பகுதியில் ஜீவ நாடி அற்புதங்கள் தொடர்கின்றது.

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 1 ல் நம் அன்பர் ஒருவர் திருமண விஷயமாக ஜீவ நாடி படிக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் படித்திருப்பீர்கள். அவருக்கு ஜீவ நாடி படிக்க உத்திரவு கிடைத்ததும் அவர் இணையத்தில் ஜீவநாடி பற்றி தேடுதல் வேட்டை நடத்தியுள்ளார். இதே போன்ற தேடுதல் அவர் பலமுறை செய்த போது, அவருக்கு திருஅண்ணாமலையில்  நடைபெறும்  மகேஸ்வர பூசை  பற்றிய பதிவு கண்ணில் பட்டுள்ளது. இந்த பூசை பற்றி அறியவும்,செய்வதற்கும் நாம் கொஞ்சமாவது புண்ணியம் செய்திருக்க வேண்டும் எனவும், இந்த பூசை செய்தால் நாம் செய்த அனைத்து தீய கர்மாக்களின் தீங்கும் நம்மை விட்டு அகன்று முன்னோர்களின் ஆசி கிட்டும் எனவும் செய்திகள் கிடைத்தது.

உடனே திருஅண்ணாமலை ஆசிரமத்திற்கு அலைபேசியில் அழைத்து மேற்கொண்டு அந்த அன்பர் விபரங்கள் கேட்ட போது, பூசைக்கு ஆகும் பொருட்களை பட்டியலிட்டு மொத்தம் சுமார் பத்தாயிரம் செலவாகும் என்று கூற, நம் அன்பர் யாம் பொருளை ஏற்பாடு செய்துவிட்டு தொடர்பு கொள்வதாக கூறி விட்டு, மீண்டும் ஜீவ நாடி தேடலில்  மூழ்கலானார். ஜீவ நாடி படிக்க உள்ள செய்திக்கும், இந்த மகேஸ்வர பூசைக்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் கேட்பது நம் காதில் விழுகின்றது. முருகனின் விளையாட்டை பொறுத்திருந்து பாருங்கள்.

இப்போது நம் அன்பருக்கு ஜீவ நாடி படிக்க உத்திரவு கிடைத்து விட்டது. அந்த நாளும் வந்தது. ஈரோடு அருகே உள்ள அந்தியூர் சென்று அங்கிருந்து மந்தை முருகன் கோயிலை அடைந்தார். அங்கு ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி அருள்பாலிக்கின்றார். கோயிலின் பின்னே உள்ள மலையும், இயற்கையும் நம்மை அங்கே நிலை பெற செய்யும் என்பது கீழே உள்ள காட்சிகளைப் பார்த்தல் தெரியும்.






ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தியை 27 முறை வலம் வந்து அங்கே அவருடைய ஜீவ  நாடி படிக்க நம் அன்பர் காத்திருந்தார். முருகன் அருள் முன்னிற்க, அழைப்பு வந்ததும் உள்ளே சென்றார் நம் அன்பர். முதல் முறை ஜீவ நாடி பார்க்கப் போகிறோம் என்ற பதட்டம் ஒரு புறம். நல்வாக்கு முருகனிடமிருந்து வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஒரு புறம். சிலருக்கு அவர்களுடைய நேரம்,காலம், கிரக நிலை பொறுத்து நாடி வராது போவதும் உண்டு. இது போல் அமைந்து விட்டால் என்ன செய்வது? அதனால் தான் இங்கே ஜீவ நாடி பார்க்க செல்லும் முன்பு தினமும் நம்மால் இயன்ற வரை ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தியை போற்றி வருதல் நலம்.

சுமார் 1 நொடிப் பொழுதில் பரஸ்பரம் அறிமுகம் நடந்தது. அடுத்து ஜீவ நாடி படிக்கப்பட்டது. அன்பரின் பெயர் உரைக்கப்பட்டது. வீட்டின் நிலை சொல்லப்பட்டது. அன்பரின் தொழில்நிலையும் வந்தது. அன்பருக்கோ திருமண உறவு பற்றி கேட்க ஆசை. முதல் திருமண உறவு  எப்போது முடியும்? இரண்டாம் திருமணம் எப்போது நடக்கும் என்பது போன்ற அடுக்கடுக்காய் கேள்விகள் இருந்தது. அடுத்து தான் முதல் திருமண உறவு முறியும், அடுத்த திருமணம் பற்றி இப்போது பதில் இல்லை என வந்தது. முதல் திருமண வாழ்க்கைக்கு கர்மக்கணக்கே காரணம். இது தீர வழி ஒன்று சொல்கிறேன் என்று கூறினார். அன்பருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. அன்பர்க்கு மட்டுமல்ல. நமக்கும் தான். திருஅண்ணாமலை மகேஸ்வர பூசை செய்ய சொல்லி பரிகாரம் வந்தது. ஏதோ விட்ட குறை, தொட்ட குறை ;போலவே இது இருந்தது. ஏற்கனவே நம் அன்பர் இது பற்றி பேசியதை பதிவின் ஆரம்பத்தில் சொல்லி இருக்கின்றோம். பரிகாரம் முடித்து 10 மாதம் முடித்து ஜீவ நாடி கேட்க மீண்டும் உணர்த்தப்பட்டது.


வணக்கம் சொல்லி அங்கிருந்து அன்பர் விடை பெற்று வந்தார். பின்னர் நான்கைந்து மாதங்களில் மகேஸ்வர பூசைக்கான தொகையை தயார் செய்து திருஅண்ணமலை குடும்பம் சகிதமாக சென்று மகேஸ்வர பூசை செய்தார். பூசை செய்து இரண்டு மாதங்களில் நீதிமன்றத்தில் இழுத்துக்கொண்டிருந்த விவாகரத்து வழக்கு முடிவுக்கு வந்ததது. வழக்கில் தீர்ப்பு நம் அன்பர் பக்கம் சாதகமாக வந்தது.  சுமார் நான்காண்டுகளாக தீர்க்கப்படாதிருந்த இந்த பிரச்சினை ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தியின் அருளால் முழுமை பெற்றதாக சொன்னார்.இதோ அடுத்த மறுமணம் சார்ந்து ஜீவ நாடி கேட்க சென்று வருகின்றார். அனைத்தும் முருகன் அருளாலே தான்.

ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி ஆலயத்தில் அமாவாசை பூசை வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. சில விபரங்களை மேலே இணைத்துள்ளோம். இங்கு சுமார் 30 அடி உயர் வேல் ஒன்று உள்ளது. இந்த வேலிற்கு பூசை செய்வதை காண நமக்கு கண் கோடி வேண்டும். எப்போது வாய்க்குமோ என்று தெரியவில்லை.





அடுத்த பதிவில் ஜீவ நாடி அற்புதங்கள் மீண்டும் தொடரும்.

மீள்பதிவாக:

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - http://tut-temple.blogspot.com/2018/10/1_27.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (22/10/2018 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - http://tut-temple.blogspot.com/2018/10/22102018.html

No comments:

Post a Comment