Subscribe

BREAKING NEWS

18 June 2017

தேவகியின் துயரத்துக்கு என்ன காரணம் ?



மகாவிஷ்ணுவின் அவதாரமான  ஸ்ரீ கிருஷ்ணரை குழந்தையாகப் பெறும் பாக்கியம் செய்தவர்கள் வசுதேவர் - தேவகி தம்பதி...

அப்படிப்பட்டவர்கள் சிறையில் கிடந்து தங்கள் குழந்தைகளின் மரணத்தைப் பார்த்து ஏன் கதறி அழ வேண்டும் ?

அதற்குக் காரணம் இருக்கிறது...




தட்சனின் பெண்களான திதி, அதிதி இருவரும் மகரிஷி காச்யபரின் மனைவியர். இளையவள் அதிதிக்குப் பிறந்தவன் இந்திரன். மகா பராக்கிரமசாலி. திதிக்கும் இயல்பாகவே குழந்தை பெறும் ஆசை ஏற்பட்டது.

திதி காச்யபரிடம் ‘‘இந்திரனைப் போல், சகல உலகங்களும் போற்றும் ஒரு குழந்தை எனக்குப் பிறக்க வேண்டும்!’’ என்று கேட்டாள்.

‘‘அப்படியானால், தேவி விரதத்தை முறைப்படி கடைப்பிடி!’’ என்றார் காச்யபர்.

அதன்படி விரதம் மேற்கொண்ட திதி கருவுற்றாள். இதனால் அதிதியின் நெஞ்சில் வஞ்சம் குடி கொண்டது. பொறாமை மிகுந்த அதிதி, தமக்கையின் கருவை அழிக்கத் தீர்மானித்தாள்.

எனவே தன் மகன் இந்திரனிடம் ‘‘பெரியம்மாவின் வயிற்றில் வளரும் குழந்தையால் உனது பதவிக்கு ஆபத்து ஏற்படும். சகல உலகமும் திதியின் குழந்தையைப் போற்றிப் புகழும்!’’ என்று கூறினாள்.

தனது பதவி பறி போகுமோ என்ற பயம் இந்திரனுக்கு வந்ததால் பெரியம்மாவின் மீதுள்ள பாசம் அவனிடம் மறைந்தது. இதன் விளைவு சிசுவைக் கர்ப்பத்திலேயே கொல்லத் தீர்மானித்து திதியை அணுகினான்.

திதி, சிறந்த தேவி பக்தை. அதனால், நல்லவன் போல் நடித்து அவளுக்குப் பணிவிடை செய்து தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள தகுந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான் இந்திரன்.

ஒரு நாள் பூஜை செய்து கொண்டிருக்கும்போது அசதியின் காரணமாக திதிக்குத் தூக்கம் வந்தது. எனவே, வாயைத் திறந்தவாறு தூங்கினாள் திதி.




இது தான் சந்தர்ப்பம் என்று இந்திரன் மிகவும் சிறிய உருவம் கொண்டு அவள் வாயினுள் நுழைந்து கர்ப்பப்பையை அடைந்தான். உள்ளிருந்த சிசுவை துண்டுகளாக்கினான். அதன் பின் அங்கிருந்து வெளியேறியவன், தன் தாய் அதிதியிடம் நடந்ததைத் தெரிவித்தான்.

கண் விழித்த திதி, கர்ப்பம் கலைந்ததை உணர்ந்தாள். ஆசையாகச் சுமந்த சிசு அழிந்து விட்டதை தங்கையிடம் தெரிவிக்க விரைந்தாள்...

அங்கே அதிதி, தன் மகனது தீரச் செயலைப் பாராட்டி மகிழ்வது கண்டு அதிர்ந்தாள். சகோதரியும் அவள் மகனுமே தன் சிசுவுக்கு எமன்களானதை அறிந்து கதறி அழுதாள்.

கோபம், ஆத்திரம் தாங்காமல் திதி, ‘‘நீ பெற்ற குழந்தைகளை, உன் கண் முன்பாக வரிசையாகக் கொல்வதைப் பார்க்கும் துர்பாக்கியசாலி ஆவாய். நீ சுமந்து பெற்ற மகனை வளர்க்க முடியாமல் தவிப்பாய். அப்படி நூறு மடங்கு புத்திர சோகம் உன்னைச் சேரட்டும்!’’ என்று சாபமிட்டாள்.

உடனே அதிதி, காச்யபரின் கால்களில் விழுந்து எல்லாவற்றையும் மன்னிக்குமாறு வேண்டினாள். அவளை திதியிடம் அழைத்து வந்தார் காச்யபர்.

இருவரையும் ஒரு சேரப் பார்த்த திதி ‘காச்யபரும் இந்தக் கொடுஞ்செயலுக்கு உடந்தை!’ என்று கருதி, ‘‘என் தங்கைக்கு நான் இட்ட சாபம் உங்களையும் சேரும்!’’ என்றாள்.

‘‘அவசரப்பட்டு விட்டாயே திதி!’’ என்று கலங்கிய காச்யபர், திதிக்கு ஆறுதல் கூறினார்.

திதி இட்ட சாபம் தான், பின்னாளில் அதிதி - காச்யபர் தம்பதியை, தேவகி - வசுதேவராகப் பிறக்க வைத்து துயரத்தில் துடிதுடிக்க வைத்தது. காரணம் இன்றி இவ்வுலகில் எதுவும் நிகழ்வதில்லை...


நன்றி:-திருமதி, ரமாசங்கர்.

No comments:

Post a Comment