Subscribe

BREAKING NEWS

25 July 2017

மனக் கஷ்டம் நீங்க..மயிலாண்டவர் திருக்கோவிலுக்கு வாங்க !

திருஒற்றியூர் !

ஆன்மிக பூமி.பற்பல அற்புதங்கள் நிகழ்ந்து வரும் அருள் நிறைந்த ஊர்.திருஒற்றியூர் என்றாலே வடிவுடையம்மன் ஆலயமும்,பட்டினத்தாரும்,வள்ளலாரும் நினைவிற்கு வருவார்கள்.இந்த புனித தலத்தில் நம் பாதம் பட இறை அருள் வேண்டும். ஒட்டுமொத்த ஆன்மிக சங்கம் இங்கே கிடைக்கின்றது.ஒன்றா..இரண்டா ? என அடுக்கும் அளவிற்கு சித்தர்களின் அருள்மழையில் நனைய முடிகின்றது.

வடிவுடையம்மன் கோவில் தரிசனம் பெற நமக்கு ஒரு நாள் தேவை. அந்த அளவிற்கு நாம் தரிசனம் செய்ய வேண்டும்.இங்கே 2 ன் சிறப்பு உள்ளது. இறைவன்,இறைவி,தல மரம்,தீர்த்தம் என இரண்டு இரண்டாய் உண்டு. எல்லாம் இரண்டு: திருவொற்றியூர் தலத்தில் மூலவர் ஆதிபுரீஸ்வரர், ஒற்றீஸ்வரர் என இரண்டு மூர்த்திகள் பிரதானம் பெற்றிருக்கின்றனர். தவிர, வடிவுடையாம்பிகை, வட்டப்பாறையம்மன், அத்தி, மகிழம் என இரண்டு தலவிருட்சம், பிரம்ம தீர்த்தம், அத்தி தீர்த்தம் என இரண்டு தீர்த்தங்கள், காரணம், காமீகம் என இரண்டு ஆகம பூஜை என்று இத்தலத்தில் இரண்டு என்ற எண்ணிக்கை பிரதானம் பெற்றிருக்கிறது. இந்த தலத்தில் தியாகராஜர் என்ற பெயரில் நடராஜர் அமர்ந்த நிலையில் நடனமாடுவது சிறப்பம்சமாகும். இங்குள்ள ஈசன் மாணிக்க தியாகர் என்று அழைக்கப்படுகின்றார். 27 நட்சத்திர லிங்கங்கள் இங்கே காணலாம். திரிபுர சுந்தரியான அம்பாளைப் போற்றி ஸ்ரீவடிவுடை மாணிக்கமாலை என்ற போற்றிப்பாடல்களை இயற்றிய பிறகு வடிவுடை அம்மன் என்று அழைக்கப்படுகிறார்.

தக்ஷிணாமூர்த்தி சுவாமிகள் ஜீவசமாதி, திருவொற்றியூர் டோல் கேட் ரோட்டில் உள்ள பரஞ்சோதி மகான் தர்கா,சங்கர மடத்துறவி மகா தேவேந்திரர் அதிஷ்டானம்,அகஸ்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட குபேரனால் வழிபடப்பட்ட கோவில்,தக்ஷிணாமூர்த்தி கோவில்,எண்ணூரில் பன்னண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சுயம்பு முத்தாரம்மன், சுயம்பு சித்தர்,பாடகச்சேரி பைரவ சுவாமிகள் அப்புடு சுவாமிகள்,ரோமச மகரிஷி சுயம்பு உருவம்,காக புஜண்டர் ஜீவசமாதி,பட்டினத்தார் சுவாமிகள் ஜீவசமாதி,வீரராகவ சித்தர் ஜீவசமாதி, குணங்குடி மஸ்தான் தர்கா என அருள் நிறைந்த ஊரே திருஒற்றியூர். காண கிடைக்க வேண்டுகின்றேன் திருஒற்றியூர் தரிசனம் !!!

திருஒற்றியூர் பற்றி பட்டினத்தார் சொல்வதைப் பாருங்களேன்.




இத்தகு சிறப்புமிக்க திருஒற்றியூர் தான் மயிலாண்டவர் திருக்கோவிலைத் தன்னகத்தே கொண்டிருக்கின்றது. இது போன்ற கோவில் இருப்பதை யாரும் அறிய மாட்டார்கள். நம்முடைய கடமை இது போன்ற சித்தர் பீடங்கள்,பழந் திருக்கோவில்கள் இவற்றை எல்லாம் அனைவரும் அறியும் வண்ணம் மிளிரச் செய்வதே.இது பற்றி பிருகு முனிவரின் வாக்கை காண்போம்.



ஆதியாம் பராபரத்தின் பாதம் போற்றி
அறிவிபேன் பிருகுயான் சீவ சாட்சி
ஒதிடுவேன் குருநாளில் முனிகள் சூழ்ந்த
ஒப்பில்லா சீவதலம் அறிந்து கொண்டு

Praying the Primordial Divine’s feet,
Will declare today, myself, Brighu, as witness,
On this Thursday, with Many Rishis and Munis surrounded,
An un-equalled, live piece of earth !!

கொண்டதொரு ஈசனார்க்கு பரிவாரங்கள்
குருமுனிக்கு சீடனாய் நின்ற சித்து
கொண்டதொரு சீவ மூர்த்தம் லிங்கமாக
குறிப்பான ஆகமங்கள் கடந்து ஞானம்

As a Parivara deity for Lord Shiva, (Lord Adhipureeswara)
is Agasthya’s disciple, and a Siddha,
as a Jeeva Samadhi / Peedam in Linga,
In state of bliss (Gnanam), after crossing Agamas!!

ஞானமுடன் வாசிக்கு உகந்த தடமே
ஞாலமதில் குருமுனிக்கு உகந்த சீடர்
ஊனமிலா மூலன் அம்சம் புசண்டன் அம்சம்
உயர்வான மூலம் சதயம் பூசை நன்மை

Temple is suitable for Pranayama.
In this world, Agasthya’s favourite Disciple,
With teachings of Thirumoolar and Kaga Bujandar.
Poojas on Moolam and Sadhayam stars are good!!

நன்மை பட அகத்தீசன் வழியும் வந்த
நல்லதொரு மார்கங்கள் கொண்டோர் யாவும்
உன்னதமாய் தலம் தேடி ஞானம் கொண்டு
உயர்வடைய செய்வாரே தன் விழிப்பு

Those who follow Agastheesan’s path, (Mahaguru Agasthyar)
and All who come in Paths of Goodness,
Will search this sthalam, come here and get Gnanam,
Siddha will elevate him with self-consiousness!!

விழிப்பு நிலை சகசர யோகம் சித்து இப்போ
வாக்குரைபோம் மாந்தர்க்கும் அறியும் வண்ணம்
வழக்கில்லா நிலை ஜெயமும் உந்தனுக்கு
வழி அளிக்க வல்ல சித்து சீவம் முற்றே !!!


Self-consiousness and Sahasra yoga will be blessed.
Shall declare now, that humans understand,
Rid of problems, with thy victory,
Will this Siddha bless you !!!


கோவிலைப் பற்றி பார்க்கும் முன்பு, உரோம மகரிஷி பற்றி சிறிது காண்போம்.பதிவின் இறுதியில் முக்கியமான அறிவிப்பு இணைத்துள்ளோம்.காரணமின்றி காரியமில்லை என்பது தெளிவாய் உணர்த்தப்படுகின்றது.

எத்துணையோ மகான்களும் ரிஷிகளும் வந்துபோன பூமியிது .உரோமச மகரிஷி :உரோம ரிஷி 


உரோம ரிஷி சித்தர்களில் முதன்மையானவரும், கும்பமுனி, குறுமுனி என்று அழைக்கப்பட்டவருமான அகஸ்திய மகரிஷியின் சீடர்களில் முக்கியமானவர் உரோமச ரிஷி.

இவருக்கு சிவபெருமானை நேரில் தரிசித்து அவருடைய அருளாசியைப் பெற வேண்டும் அப்படியே முக்தியடைந்து விட வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது.

இவரது தன் ஆசையை தனது குருவான அகத்திய முனிவரின் மூலமாகவே நிறைவேற்றிக் கொள்ள விரும்பி அகஸ்திய முனிவரிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தார்.

அகத்திய மகரிஷியும் அவரின் ஆசையை நிறைவேற்ற அவரிடம் உறுதியளித்தார். இதன்படி அகஸ்திய முனிவர் தாமிரபரணி ஆற்றில் ஒன்பது தாமரை மலர்களை மிதக்க விடுவதாகவும், இந்த ஒன்பது தாமரை மலர்களும் தாமிரபரணி ஆற்றங்கரையின் ஓரத்தில் ஒவ்வொன்றாக கரை ஒதுங்கும் என்றும், அவை கரை ஒதுங்கும் இடங்களில் சங்கு முகத்தினால் நீராடி நவக்கிரகங்களின் வரிசையில் சிவபெருமானை வழிபட்டால் சிவபெருமானின் காட்சி கிடைத்துவிடும் என்றும் அதன் மூலம் அவர் முக்தி அடையலாம் என்றார்.

அதன் பிறகு ஒன்பது தாமரை மலர்களை தாமிரபரணி ஆற்றில் மிதக்க விட்டார். உரோமச ரிஷியும் அந்த மலர்களைத் தொடர்ந்து சென்றார். அந்த மலர்களில் ஒன்று பாபநாசம் எனும் இடத்தில் கரை ஒதுங்கியது.

உரோமச ரிஷியும் அகத்திய மகரிஷி சொன்னபடி அந்த இடத்தில் சிவபெருமானுக்குப் பூஜைகள் செய்து வழிபட்டார். இதையடுத்து ஒவ்வொரு மலர்களும் சேரன் மகாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, திருவைகுண்டம், தென் திருப்பேரை, ராஜபதி. சேர்ந்த பூ மங்கலம் எனும் ஊர்களின் தாமிரபரணி ஆற்றங்கரையில் கரை ஒதுங்கியது.
அந்த ஊர்களிலெல்லாம் உரோமரிஷி சிவபெருமானை வழிபட்டார். அகஸ்திய முனிவர் சொன்னபடி சிவபெருமான் உரோம ரிஷிக்குக் காட்சியளித்து அவருக்கு முக்தியும் அளித்தார்.
உரோமரிஷி தாமிரபரணி ஆற்றங்கரையில் தாமரை மலர்கள் வழிபட்ட ஊர்களில் சிவாலயங்கள் இருக்கின்றன. இந்த ஒன்பது ஊர்களும் நவ கைலாயங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இவற்றில் முதல் மூன்று ஊர்களான பாப நாசம், சேரன் மகாதேவி, கோடக நல்லூர் ஆகிய இடங்கள் மேலக்கைலாயங்கள் என்றும்,

அடுத்த மூன்று ஊர்களான குன்னத்தூர், முறப்பநாடு, திருவைகுண்டம் ஆகியவை நடுக்கைலாயங்கள் என்றும்,

கடைசி மூன்று ஊர்களான தென்திருப்பேரை, ராஜபதி, சேர்ந்தபூமங்கலம் கீழ்க்கைலாயங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

இந்த நவ கைலாய ஊர்களிலுள்ள சிவாலயங்களில் வழிபாடு செய்பவர்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்கும் என்று இந்துமத புராணங்கள் சொல்கின்றன.
தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றங்கரையில் இந்த நவ கைலாயக் கோவில்கள் உள்ள ஒன்பது ஊர்களும் இருக்கிறது. நவ கைலாயங்களுக்குச் சென்று சிவபெருமானை வழிபடுவோம். சிவபெருமான் அளிக்கும் அனைத்துப் பலனையும் பெறுவோம்.
உரோமபுரியிலிருந்து ஞானத்தை நாடி தென் தமிழ்நாட்டிற்கு வந்தார் எனவே உரோம ரிஷி என்றொரு கருத்தும், இல்லை, இவரின் உடலில் ரோமம் அதிகம் இருந்த காரணத்தால் உரோம முனி என பெயர் பெற்றிருக்கிறார் என்றொரு கருத்தும் நிலவுகிறது. 





ஆனால் அவரோ

தன்னைப்பற்றி...
"கால் வட்டம் தங்கி மதி அமுதப் பாலைக்
கண்டு பசியாற்றி மண் சுவடு நீக்கி
ஞால வட்டம் சித்தாடும் பெரியோர் பதம்
நம்பினதால் உரோமன் என்பேர் நாயன் தானே "
பால்: : யோக நிலையில் இருக்கும் போது நாம் சிரசில் ஒழுகும் அமிழ்தம் .
ஞால : பரிசுத்த மெய்ஞஞானம்
பதம் : பாதம் இந்தப் பாடல் அவரது உரோம ரிஷி ஞானம் நூலில் இருந்து...
இந்த ஞானவானின் ஞானத்தை அவரின் பாடல்களே நமக்கு காட்டி தருகின்றன.
இதோ ஒரு பாடல்...

தியானத்தைப் பற்றி...
செலுத்துவது முண்ணாக்கி லண்ணாக் கையா!
சென்றேறிப் பிடரிவழித் தியானந் தோன்றும்;
வலுத்ததடா நாலுமுனக் கமுத மாச்சு;
மவுனமென்ற நிருவி கற்ப வாழ்க்கை யாச்சு;
சொலித்திருக்கும் பன்னிரண்டி லிருத்தி யூது
சோடசமாம் சந்த்ரகலை தேய்ந்து போச்சு;
பலித்ததடா யோகசித்தி ஞான சித்தி
பருவமாய் நாடிவைத்துப் பழக்கம் பண்ணே.

போலிகளைப் பற்றி....
மூடாமல் சிறுமனப் பாடம் பண்ணி
முழுவதுமவன் வந்ததுபோல் பிரசங் கித்து
வீடேதிங் குடலேது யோக மேது
வீண்பேச்சாச் சொல்லி யல்லோ மாண்டு போனார்?
காடேறி மலையேறி நதிக ளாடிக்
காய்கிழங்கு சருகுதின்று காமத் தீயால்
சூடேறி மாண்டவர்கள் கோடா கோடி
சொருபமுத்தி பெற்றவர்கள் சுருக்க மாச்சே.

தவநிலையைப் பற்றி...
சொருபமுத்திக் கடையாளம் ஏதென் றக்கால்
சுடர்போலக் காணுமடா தூல தேகம்;
அருபமுத்தி யிடமல்லோ பிரம ஞானம்
அபராட்ச மென்றுசொல்லுங் சிரவ ணந்தான்
பருபதத்தை அசைப்பனெனச் சிற்றெ றும்பின்
பழங்கதைபோ லாச்சுதிந்த யோகம் விட்டால்
வெறுங்கடத்தி லீப்புகுந்த வாறுபோல
வேதாந்த மறியாத மிலேச்சர் தாமே
என உரோம ரிஷி ஞானம் கூறுகிறது.

"காடேரி மலையேறி நதிகளாடி
காய் கிழங்கு சருகு தின்று காமத் தீயால்
சூடேறி மாண்டவர்கள் கோடா கோடி
சொருப முத்தி பெற்றவர்கள் சுருக்க மாச்சே "
சித்தர்களாக,ரிஷிகளாக, குருமார்களாக பலரும் வேடமிட்டு, காடுகளுக்கு சென்று ,செழித்து வளர்ந்த கிழங்குகளை தின்று, நதிகளில் நீராடி இறுதியில் காமத் தீயில் அகப்பட்டு முத்தி பெறாமல் மாண்டவர் பலரே எனவும் அவர்களிடையே ஞானம் பெற்று சித்து நிலையை அடைந்தவர் சிலரே எனவும் உரோம ரிஷி ஞானம் சொல்கிறது.
இவர் சிங்கி வைப்பு,
உரோம ரிஷி வைத்திய சூத்திரம்,
வகார சூதிரம்,
உரோம ரிஷி முப்பு சூத்திரம்
போன்ற நூல்களை எழுதியுள்ளார்.
நல்லோர் தாள் போற்றி!
நாயகன் தாள் போற்றி !! 


தாடியினால் தங்கம் தந்த உரோமரிஷிஅஷ்டமா சித்தி பெற்ற 18 சித்தர்களில் ஒருவர். இவர் புசுண்ட மாமுனிவரின் சீடராவார். இவரின் உடல் முழுவதும் உரோமம் முளைத்திருந்தபடியால் உரோமமுனி என்று காரணப் பெயர் பெற்றார். ஒரு பிரம்மா இறந்தால் இவருடைய மயிர் ஒன்று உதிரும். இவ்வாறு மூன்றரைக் கோடி பிரம்மாக்கள் இறந்தால் மட்டுமே இவருடைய வாழ்நாள் முடியும். ஒரு உரோமமுனி இறந்தால் அஷ்டகோண (8 கோண) முனிவருக்கு ஒரு கோணல் நிமிரும் என்று கூறுவர். இவர் கும்பகோணத்தை அடுத்த கூந்தலூரில் தங்கி தவம் செய்து வரும்போது தாடி வழியே பொன் வரவழைத்து அனைவருக்கும் கொடுத்து வந்தார். ஒரு சமயம் தாடி வழியே பொன் வருவது நின்று விடவே அந்த தாடியை உடவே நீக்கிவிட்டு இறைவனை வழிபட நீராடாமல் திருக்கோயிலை அடைந்தார். நீராடாமல் இறைவனை தரிசிக்க வந்த உரோமமுனியை விநாயகரும் முருகனும் தடுத்தனர். இதைக் கண்ட சித்தர் கோவில் வாயிலிலேயே நின்றார். புறத்தூய்மையை விட அகத்தூய்மையே சிறந்தது என்பதை மெய்பிக்கும் வண்ணம் இச்சித்தருக்கு கோவிலின் வெளியிலேயே இறைவன் தரிசனம் தந்ததாக கூறுவர். உரோமமுனி அற்புதமான பாடல்களைப் பாடியுள்ளார். இவர் பாடல்களில் உவமை நயங்களும் சிலேடைகளும் அதிகம்.இவர் செம்படவ தந்தைக்கும், குறத்தாய்க்கும் பிறந்ததாக போகர் தனது நூலில் குறிப்பிடுகிறார். இவர் புசுண்ட முனிவரின் சீடராவார். போகர் சீனதேசத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததுபோல, இவர் உரோமாபுரியுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தார் இதனால் உரோம ரிஷி என்று அழைக்கப் பட்டார். இவர் கும்பகோணதிட்கு அருகிலுள்ள கூந்தலூர் என்னுமிடத்தில் தங்கியிருந்த பொது தாடி வழியாக பொன் வரவழைத்து கொடுத்ததாக சொல்லப்படுகிறது. 

"உரோம ரிஷி ஞானம் " என்ற பெயரில் இவர் எழுதிய நூலில் மொத்தமாக பதின்மூன்று பாடல்களே இடம் பெற்றிருக்கின்றன.
வகார சூதிரம்
உரோம ரிஷி வைத்தியம் 1000
உரோம ரிஷி பூஜா விதி
உரோமரிஷி
பஞ்சபட்சி சாத்திரம்
ஆகிய நூல்களை இவர் எழுதியதாக சொல்லப் படுகிறது. 


உரோமமுனி இயற்றிய நூல்கள்
1. உரோமமுனி வைத்தியம் - 1000
2. உரோமமுனி சூத்திரம் - 1000
3. உரோமமுனி ஞானம் - 50
4. உரோமமுனி பெருநூல் - 500
5. உரோமமுனி குறுநூல் - 50
6. உரோமமுனி காவியம் - 500
7. உரோமமுனி மூப்பு சூத்திரம் – 30
8. உரோமமுனி இரண்டடி - 500
9. உரோமமுனி சோதிட விளக்கம்
10. நாகாரூடம்
11. பகார சூத்திரம்
12. சிங்கி வைப்பு
13. உரோமமுனி வைத்திய சூத்திரம் ஆகியன. 


உரோமமுனி தியான செய்யுள்
கனிந்த இதயம், மெலிந்த உருவம்,
சொரிந்த கருணை, சொல்லில் அடங்குமோ?
அலையும் மனதை அடக்கி அருள் அள்ளியே
தருவாய் தாடியில் தங்கம் தந்த தெய்வமே
தங்கள் திருவடி சரணம். 



மகத்துவமான, விசேஷமான ரோமசமகரிஷி என்கிற மிகுந்த மகத்துவம் வாய்ந்த மாமுனிவர் தனது சக்தியின் ஒரு பகுதியை இந்த தர்மம் மிகு சென்னையில் சேமித்து வைத்துள்ளார்.


இந்திரன், பிரும்மா என அனைத்துமே தேவலோகத்தில் இருக்கும் பதவிகள். இந்த பூமியில் பிறந்து மிக அதிகமான புண்ணியம் செய்த ஆற்றல் மிக்க ஆத்மாக்களே இந்திரனாக,பிரும்மாவாக மாறுவார்கள் என்று நமது வேதாகமங்கள் சொல்கின்றன.

நமது அனைவரின் ஆயுளையும் தீர்மானிக்கும். பிரும்மாவின் ஆயுள் 7 கோடியே 20 லக்ஷம்.

ரோம பெயர் காரணம்- ரோமம் என்றால் முடி. கரடியின் உடலில் உள்ள முடியை விட இவர் உடலில் அதிகமாக முடி இருக்கும் என்று மகா பாரதம் போன்ற நூல்கள் சொல்கின்றன.

ரோம மகரிஷியின் மகத்துவம்

ஒரு பிரும்மாவின் ஆயுள் முடிந்ததும். அதாவது 7 கோடியே 20 லக்ஷம் ஆண்டுகளுக்கு ஒருமுறை ரோமச மகரிஷி உடலில் இருந்து ஒரு முடி கீழே உதிருமாம்.

ரோமச மகரிஷி அவராகவே தனது உடலில் இருந்து ஒரு முடியை கிள்ளி எறிந்தால்? அடுத்த நொடியே பிரும்மாவின் ஆயுள் முடிந்தது.

இத்தகைய பேராற்றல் மிகுந்த ரோமச மகரிஷியின் கோவில் திருவொற்றியூரில் இருக்கிறது.

திருவொற்றியூரில் உள்ள எல்லையம்மன் கோவில் தெருவில் ரோமச மகரிஷி அருள் பாலிக்கிறார்.

மிக முக்கியமான ஒரு விஷயம். இங்கே ரோமச மகரிஷி ஜீவசமாதி அடையவில்லை.

பலகோடி பிரும்மாக்களின் ஆயுளை தனது உடலில் உள்ள முடிகளில் சுமந்து கொண்டிருக்கும் இவர் ஜீவசமாதி அடைய வேண்டிய அவசியம் இல்லை. சிவபெருமான் பல ஸ்தலங்களில் சுயம்புவாக தோன்றியதை போல் ரோமச மகரிஷி இந்த திருவொற்றியூரில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் சுயம்புவாக தோன்றினார். 





நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் இந்த திரு உருவம் ரோமச மகரிஷியின் சுயம்பு திரு உருவம்.

இந்த ரோமச மகரிஷியை அகஸ்திய முனிவர் வழிபட்டு இருக்கிறார்.

ராமபிரான் வழிபட்டு இருக்கிறார்.

பல இடங்களில் ஜீவசமாதி அடைந்த காகபுஜண்ட மகரிஷி ரோமச மகரிஷியை இங்கே வழிபட்டு அதே இடத்தில் ஜீவசமாதியும் அடைந்து இருக்கிறார். மானுட ஆத்மா போல் மகான்களின் ஆத்மா ஒரே இடத்தில் முடங்கி கிடக்காது.

திருவொற்றியூரில் உள்ள சில நாஸ்திக, வேறு மதத்தை சேர்ந்த சில மாபாவிகள் ரோமச மகரிஷி கோவிலையும், கோவிலுக்கு சொந்தமான இடத்தையும் கொள்ளையடிக்க பல முயற்சி செய்தனர்.

அந்த தீய சக்திகளை ரோமச மகரிஷி தூள், தூள் ஆக்கினார்.

அப்பொழுது பல அமானுஷ்ய சம்பவங்கள் நடந்தது.

இதெல்லாம் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் தான்.


என்ன அன்பர்களே..படிக்க படிக்க புல்லரிக்கின்றதா? இது தான் சித்தர்களின் அருள்.அவர்களின் அருளை ஒரு பதிவில் அடக்க முடியுமா? முடியவே முடியாது.இனி இந்த திருக்கோவில் பற்றி அறிந்து கொள்வோம்.

இந்த மயிலாண்டவர் கோவிலில் அம்பாள் சன்னதி இல்லை. சிவபெருமான் மட்டும் உள்ளார். இந்த சிவா லிங்கமே காக புசுண்டர் ஜீவ சமாதி என்று சொல்லப் படுகின்றது.ரோமச மகரிஷி பஞ்ச பட்சி சாத்திரத்தை எழுதினார். அதில் "மயில் " வெகுவாக குறிப்பிடத்தக்கது.எனவே தான் இந்தக் கோவிலுக்கு மயிலாண்டவர் என்ற பெயர் ஏற்பட்டது.





இந்த கோவில் பார்ப்பதற்கு மாடம் போல் உள்ளது. அதாவது மாட வடிவில் கோவில் உள்ளது.இந்த மாட கோவிலுனுள் ரோமச மகரிஷி அருள் பாலிக்கின்றார்.சொல்லில் வடிக்க இயலாத நிலையில் ரோமச மகரிஷி  தவ நிலையில் இருக்கின்றார்.சற்று ஏறக்குறைய 3-4 ஆதி உயரத்தில் உள்ளார்.வெகு நீண்ட ஜடாமுடியுடன் உள்ளார்.ஜடாமுடியை நன்கு உற்று பார்த்தால் சிவ லிங்கங்களை பார்க்க முடிகின்றது. மொத்தத்தில் ஜடா முடியில் இரண்டு சிவலிங்கங்களை பொதிந்து வைத்துள்ளார்.

தாடியும் அழகாய்,டிரிம் செய்து காட்சி அளிக்கின்றார்.கழுத்தில் ஒரு உருத்திராக்க மாலை அணிந்து உள்ளார்.வலது கையில் வரத முத்திரையிலும்,இடக் கையில் ஒரு சொம்பும்,கரண்டியும் கொண்டு காட்சி தருகின்றார்.இது நோய்களை தீர்க்க அருள் தரும் நிலையன்றோ? வரத முத்திரையில் எங்களின் பயம் நீக்கவும், இடக்கையில் நோய்,நொடி நீக்கும் வல்லமை கொண்ட முனி நீர் தானே !

அத்தி மரம் இந்த திருத்தலத்தின் தல விருட்சமாக உள்ளது. இந்த கோவிலினுள் உள்ள கோசாலை தங்களின் பார்வைக்கு.





கோவிலை சுற்றியுள்ள வண்ணப் படங்கள் அழகோ அழகு.கண்ணை மட்டும் கவர வில்லை. நம் கருத்தையும் அல்லவா கவருகின்றது 






ரோம மகரிஷி - கேட்கக் கிடைத்தவை :





1. கண்ணகி அம்மன் மதுரையை எரித்து விட்டு,சென்னை வந்த போது,அவரை "வட்டப்பாறை அம்மன் " என்ற அருள் நிலையில் ரோம மகரிஷி வடிவுடையம்மன் கோவிலில் பிரதிஷ்டை செய்தார்.மேலும் அம்மனின் உக்கிரத்தை குறைக்க,ஸ்ரீ ஆதி சங்கரர் இங்கே வந்து,ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்து,சாந்த சொரூபிணியாக மாற்றியதாக தகவல்.

2. திருஒற்றியூர் ஆதிபுரீஸ்வர் கோவிலில் லிங்க பிரதிஷ்டை செய்வதற்கு,தொண்டைமான் சக்ரவர்த்திக்கு உதவினார்.

3. படம்பக்கநாதர் என்ற திருப்பெயரை  ஆதிபுரீஸ்வரருக்கு வழங்கியவர் இவரே.

4. மாசி மக நட்சத்திர நாளில், மகரிஷி சித்தர்களின் நெறிமுறைப்படி இந்த பரவெளியில் கலந்து உள்ளார்கள்.

5. உரோம மகரிஷி,இந்த உலகம் படிக்கப்பட்டது முதல் யுகயுகத்தும் வாழ்கின்ற யோகி ஆவார்

6. உலகம் முழுவதும் பயணம் செய்துள்ளார்கள்.சதுரகிரியில் இப்போதும் இருந்து அருள் வழங்கி வருவதோடு,18 சித்தர் பெருமக்களுக்கும்குருமுகமாய் இருந்து வருகின்றார்கள்(18 சித்தர்களின் பெயர்கள் ஒவ்வொரு சித்தர் வழியில் மாறுபடும் )

7. திருக்கழுக்குன்றத்தில் உள்ள "சங்கு தீர்த்தம்" இவரால் உருவாக்கப்பட்டது.

8. சதுரகிரியில் உள்ள சுயம்பு இரட்டைலிங்கங்களுக்கு சந்தன மஹாலிங்கம் மற்றும் சுந்தர மஹாலிங்கம் என்ற திருப்பெயர் இவரால் வழங்கப் பட்டது.

9. காசி விஸ்வநாதர் மனித உரு கொண்டு, இங்கே வந்து இவரை தரிசித்தார்.மகரிஷி அவரைக் கண்டு,அதன் பொருட்டு தங்கத்தால் ஆன விஸ்வநாதர் கொண்டு,திருஒற்றியூர் கடற்கரையில் சில யுகங்களுக்கு முன்பு, கோவில் காட்டினார்.அந்த கோவில் கடலிலே பல யுகங்களுக்கு முன்பு உள்வாங்கப்பட்டது.

10. ராமர் மற்றும் ராவணர் இவரை த்த்ரேதா யுகத்தில் தரிசித்துள்ளனர்.பாண்டவர்கள் துவாபர யுகத்தில் தரிசனம் செய்துள்ளனர்

11. இவரின் உடலில் இருந்து ஒரு முடி விழுந்தால் பிரம்மவின் ஆயுள் முடிவதற்கு அர்த்தம்.இது நமது கால அளவில் பல கோடி ஆண்டுகளுக்கு சமம்.தற்போது வரை சில முடிகள் விழுந்துள்ளன.

12. இவர் ராஜ ரிஷி ஆவார்.பற்பல கோவில்களை உருவாக்கியுள்ளார்.

13. தற்போது நீர் வறண்டு காணப்படும் பாலாறு,இவரால் உருவாக்கப்பட்டது.

14. மயில்,காகம்,ஆந்தை,கருடன்,சேவல் முதலிய 5 பறவைகளைக் கொண்டு பஞ்ச பட்சி சாஸ்த்திரம் உருவாக்கியுள்ளார்.

15.  ரோமம் என்றே சொல்லடா ! ரோம பிள்ளை சொல்லடா ..தலைநிமிர்ந்து நில்லடா என்ற புகழ் பெற்ற வரிகள், நாம் அனைவரும் அவரின் பிள்ளைகள் என்பதை நினைவூட்டுகின்றது.

16. முடிவாக, மஹாகுரு அகத்தியர் மற்றும் இடைக்காடர் இங்கே வந்து, ரோம மகரிஷியை வழிபட்டுள்ளார்கள்.

கோவில் அமைவிடம் :

#98, எல்லை அம்மன் கோவில் தெரு,திருஒற்றியூர்,சென்னை -19

எப்படி செல்வது?

திருஒற்றியூரில் உள்ள எல்லை அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.முதலில் அங்கே  சென்று,அந்த தெருவிலே சுமார் 50 மீட்டர் தொலைவு சென்றால் அங்கே,பல கடை மற்றும் வீடுகளுக்கு இடையில் ஒரு கோவிலுக்கான வாயில் இருக்கும். அங்கே வழிகாட்டி பலகையும் இருக்கும்.அதனுள்ளே 3 2 அல்லது 3 வீடுகளுகள் தாண்டி சென்றால், நம் துயர் நீக்க, ரோம மகரிஷி காத்துக் கொண்டிருக்கின்றார்.





முக்கிய அறிவிப்பு :

ரோம மகரிஷி ஆடி சுவாதி நட்சத்திர 9ம் ஆண்டு விழா வரும் 30.07.2017 ம் தேதி அருள்மிகு மயிலாண்டவர் திருவக்கோவிலில் நடைபெற உள்ளதால் ,அனைவரும் கலந்து கொண்டு ரோம மஹரிஷியின் அருள் பெறும் படி கேட்டுக் கொள்கின்றோம்.விழா அழைப்பிதழ் கீழே இணைக்கப்பட்டுள்ளது.












முந்தைய பதிவுகளுக்கு :


மருதேரியில் ஸ்ரீ பதஞ்சலியின் ஆசிகள் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_15.html


No comments:

Post a Comment