Subscribe

BREAKING NEWS

22 July 2017

TUT தளத்தின் 100 ஆவது சிறப்புப் பதிவு - தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே!


மெய்யன்பர்களே.



TUT தளத்தின் 100 ஆவது பதிவு. எதைப்பற்றி பகிர இருக்கிறோம் என்று யோசித்தோம். இன்றைய கலியுகத்தில் ஒவ்வொருவரும் சிக்கித் தவிப்பது சிறந்த குருமார்கள் இல்லாமால் தானே. குருவருள் கூட்டுவிக்க, குருவைப் பற்றியே எழுதலாம் என விரும்பினோம்.

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே!

- திருமந்திரம்


இன்றைய காலகட்டத்தில் ஆன்மிகமும்,ஆரோக்கியமும் பற்பல வழிகளில் பெருகி விட்டன. ஆனாலும் மக்களின் துயர் நீங்கும் பாடில்லை.ஆரோக்கியம் பற்றி வேறொரு பதிவில் பேசுவோம்.இன்று நாம் பேச இருப்பது ஆன்மிகம் பற்றிய செய்திகளே.உங்களை சுற்றி உள்ள உறவுகளிடம்,நட்புகளிடம் ..ஏன் ? உங்களிடம் கேட்டுப் பாருங்க..ஆன்மிகம் என்றால் என்ன? என்று

உடனே பல தடாலடி பதில்கள் தான் வரும். ஆன்மிகம் என்பது

வானத்தில் பறப்பது, நீரில் நடப்பது,செப்பிடுவித்தை காண்பிப்பது,காயகல்பம் செய்வது, பின்னால் ஒளி வட்டம் தெரிவது,குண்டலினி எழுப்புவது,வாசியை வசப்படுத்துவது என்று அடுக்குவார்கள்.இதுவா? உண்மை ஆன்மிகம்.இல்லை ..இல்லவே இல்லை. இப்படித்தான் நம் சைவமும்,வைணவமும்,சித்தர் நெறியும் சொல்கின்றதா?


நம்மை சாதாரணமாக.. மிகவும் சாதாரணமாக..இருக்கச்செய்வதே ஆகும். கற்பனையில் மிதக்கும் நம்மை நிஜத்தில் சாதாரணமாக நடக்கச் செய்வதே ஆன்மிகம்.அமைதியே இல்லாத நம்மை....சிறப்பாகவும் முழுமையாகவும் அமைதியாகவும் வாழச்செய்வதே ஆன்மிகம்"



இதைத் தவிர  ஆன்மிகம் வேறு ஒன்றுமே இல்லை. வாழும் நிலையுணர்ந்து,தொண்டாற்றி இன்பம் கண்டு வாழும் நிலையே ஆன்மிகம்.

அன்பர்களே இப்போது புரிந்து கொண்டீர்களா? இது தான் உண்மையான ஆன்மிகம். இந்த ஆன்மிகத்தில் அடுத்து நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டியது குரு பற்றிய செய்திகளே.ஆம் இன்று ஆசிரியரையும்,குருவையும் போட்டுக் குழப்பி வைத்திருக்கின்றோம்.குருவே சிவம் என்பது ஆழ்ந்த அனுபவம்.இந்த அனுபவம் பெறவே நாம் பிறப்பெடுத்து இருக்கின்றோம்.நமது உடலின் தந்தை நமக்கு யார் என்று தெரியும்.என்றாவது உயிரின் தந்தை பற்றி சிந்தித்ததுண்டா? சிந்தியுங்கள்.

குருவிலே காரண குரு,காரிய குரு என்றும் சொல்கின்றார்கள்.சத் குரு,சற்குரு என்றெல்லாம் கூற நாம் கேட்டு இருப்போம்.இந்த பதிவின் மூலம் நாம் குரு யார் என்பதைத் தெள்ள தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றோம். குருவின் அருளாலே தொடருவோம்.

குரு..குரு என்கின்றோம்? குரு என்றால் யார்? அவர் நமக்கு என்ன செய்வார்? குருவின் மகிமை என்ன? என்ற ஏகப்பட்ட கேள்விகளுக்கு,குருவும்,ஆசிரியரும் என்ற நிலையில் காண்போம்.


குரு என்ற சொல்லில் கு என்ற எழுத்துஅறியாமையையும் , ரு என்பது அழித்தலையும்  குறிக்கும். ஆக குரு என்பவர்அறியாமையை  அழித்து மெய்யுணர்வு புகட்டுபவர் ஆவார்.மேலும் கு என்பது சத்துவ,ராஜச, தாமச குணங்களை  கடந்தவர் என்று,குணாதீத நிலைமையையும், ரு என்பது ரூபாதீதம்  எனும் உருவை  கடந்த நிலையினைக் குறிக்கும். ஆக, குரு என்பவர் குணங்களையும் , ரூபத்தையும்  கடந்த பரப்பிரம்மமே ஆவார்.இதனைத் தான் குருவே சிவம் என முன்னரே தொட்டுக் காட்டினோம்.



"குருவே சிவம் எனக் கூறினன் நந்தி
குருவே சிவம் என்பது குறித்து ஓரார்
குருவே சிவனும் ஆய்க் கோனும் ஆய் நிற்கும்
குருவே உரை உணர்வு அற்றது ஓர் கோவே."


நடைமுறையில், நம்மில்  பெரும்பாலானவர்களுக்கு ஆசிரியர் யார், குரு யார் என்பதைத் தீர்மானிப்பதில் தடுமாற்றம் காணப்படுகின்றது.

ஆசிரியரைக் குரு என்பதும் குருவை ஆசிரியர்  என்பதுமாக நாம் குழப்பமடைந்துள்ளோம். பல சந்தர்ப்பங்களில் ஆசிரியர் ஒருவரை அவருக்கு விசேட மதிப்பைக் கொடுப்பதற்காக குரு என்றும் குறிப்பிடுகின்றோம்.

கலை உலகில் இந்தப் பிரயோகத்தை நாம் காணலாம். உதாரணமாக, நடனக் கலையைக் கற்பிக்கும் நடன ஆசிரியரை நடன அரங்கேற்ற மேடைகளில் குரு எனக் கௌரவிக்கப்படுவதைக் காணலாம்.

ஒருவர் ஆசிரியரா அல்லது குருவா எனத் தீர்மானிப்பதில் அடிப்படையாகக் கொள்ளப்படும் உண்மை  எது? என்பது தான் ஆசிரியருக்கும் குருவுக்குமான வேறுபாட்டைக் கொடுக்கின்றது.



மாதா,பிதா, குரு, தெய்வம் என்பதில் குறிப்பிடப்படும் குரு என்பவர் ஆசிரியராக இருப்பின் ஒருவருக்கு எத்தனை குருக்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ளல் வேண்டும். அதேபோன்று 'தாரமும் குருவும் தலைவிதிப்படி' என்பதில் தாரம் ஒன்று ,குரு ஒன்று என்பது வெளிப்படையானதே.

இதிலிருந்து ஒரு விஷயத்தை  நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம். அதாவது, நாம் பல ஆசிரியர்களைப் பெற்றுக்கொள்கிறோம் ஆனால் குரு, தாரத்தைப் போல் அமைய வேண்டியதாகின்றது என்பதே. இங்கு அமையவேண்டியது என்பது எமது தேடலின் அடிப்படையில் இடம்பெறுகின்றது என்பதாகும்.

இப்போது ஒரு ஆசிரியரின் செயற்பாடு என்ன என்பதைப் பார்ப்போம். ஒரு ஆசிரியர் தான் கற்றுக்கொண்ட அறிவை மாணவர்களுக்கு மாற்றம் செய்பவராவார். அதாவது, ஒரு தலைமுறையில் இருந்து இன்னொரு தலைமுறைக்கு அறிவை (Knowledge) மாற்றம் செய்பவர் ஆசிரியராவார்.

இவ்வாறு அறிவை மாற்றம் செய்யும் ஆசிரியர்கள் தமது அறிவை பாடசாலை மாணவர்களுக்கு மாற்றம் செய்பவர்கள் மட்டுமல்ல, கொள்கைகள், கோட்பாடுகள், தத்துவங்கள் என முன்னோர்கள் கூறியவற்றைக் கற்றுப் பெற்ற அறிவை பிறருக்கு மாற்றம் செய்பவர்களும் ஆசிரியர்களே.

இதே போன்றே கலைகளிலும் தாம் கற்றுக் கொண்ட அறிவை இன்னொருவருக்கு மாற்றும் போது அவரும் ஆசிரியராகின்றார். அப்படியாயின் குரு என்பவர் யார்?

குரு என்பவர் ஒரு தலைமுறையில் இருந்து இன்னொரு தலைமுறைக்கு புரிந்துகொள்ளலை (understanding) கொடுப்பவராவார். இங்கே அறிவுப்பரிமாற்றம் இடம் பெறுவதில்லை. அறிவுப்பரிமாற்றமானது மனம் சார்ந்தது.

ஆனால் குருவால் கொடுக்கப்படும் புரிந்துகொள்ளல் என்பது உள்ளுணர்வு சார்ந்ததோடு ஒவ்வொருவருக்கும் பிரத்தியேகமானதாயும், தனித்துவமானதாயும், வார்த்தைகளின் விளக்கங்களுக்கு அப்பாற் பட்டதாயும் அமையும்.



எனவே ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு அறிவை மாற்றம் செய்பவர் ஆசிரியர், ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு புரிந்து கொள்ளலைக் கொடுப்பவர் குரு.

எமக்குக் கிடைப்பது அறிவு சார்ந்ததா அல்லது உள்ளுணர்வு சார்ந்ததா என்பதன் மூலம் கொடுப்பவர் ஆசிரியரா அல்லது குருவா என்பதைத் தீர்மானிக்கலாம்.

இன்னும் சற்று விளக்கமாக,ஆசிரியர் மற்றும் குரு இவர்களைப் பற்றி காண்போம்.





1. ஆசிரியர் உனது வளர்ச்சிக்கான பொறுப்பை ஏற்கிறார் 
குருவோ உனது வளர்ச்சிக்கான பொறுப்பை நீயே ஏற்க வைக்கின்றார் 

2. உன்னிடம் இல்லாததையும்,நீ வேண்டுவதையும் ஆசிரியர் தருகிறார்.
உனக்குத் தேவையற்றவற்றை குரு உன்னிடமிருந்து அகற்றுகின்றார்.

3.மாணவனிடம் கீழ்ப்படிதல்,கட்டுப்பாடு இரண்டையும் ஆசிரியர் எதிர்பார்க்கிறார்.
சீடனிடமிருந்து நம்பிக்கையையும்,பணிவையும் குரு எதிர்பார்க்கிறார்.

4. அஞ்ஞானமனும் ஆடையால் மறைக்கப்பட்ட உலகியல் வாழ்க்கைப் பயணத்திற்கு ஆசிரியர் உன்னை தயாராக்குகிறார் 
அஞ்ஞானமனும் ஆடையைக் கிழித்தெறிந்து,உன்னை நிர்வாணமாக்கி,ஆத்மாவை உணரும் அகமுக வாழ்க்கைக்கு குரு உன்னை ஆயத்தம் செய்கின்றார்.

5. உலகியல் வாழ்வெனும் பாதையில் வழிகாட்டியாக வருபவர் ஆசிரியர்.
ஆன்மிக வாழ்வுக்கான பாதையை சுட்டிகாட்டுபவர் குரு.




6. ஆசிரியர்,மாணவனை உலகியல் வாழ்வில் வெற்றி பெற செய்கிறார்
 குரு ,சீடன் முக்திப் பயணம் செய்ய வழிவகுகின்றார்.

7. உலகைப் பற்றியும்,அதன் இயல்பு பற்றியும் கற்பிப்பவர் ஆசிரியர்.
 குரு, தனது சீடனுக்கு அவனைப் பற்றியும்,அவனது மெய் வடிவம் பற்றியும் உபதேசிக்கிறார்.

8. ஆசிரியர்,உலக வாழ்க்கையை வாழ்வது எப்படி என்று மாணவனுக்கு கற்பிக்கிறார் 
   குரு உனக்கும்,உலகுக்கும் உள்ள தொடர்பு பற்றி விளக்குகிறார்.

9. ஆசிரியர்,மாணவனுக்கு உலகியல் அறிவைப் புகட்டி,அவனது அகந்தையை வளர்க்கிறார்.
குரு,சீடனிடம் உள்ள உலகியல் அறிவை அடியோடு அகற்றி,அவனது அகந்தையை நீக்குகிறார்.

10. ஆசிரியர்,மாணவனுக்கு அறிவை புகட்டுகிறார்.
குரு, ஆத்மாவை உணருமாறு சீடனை உருவாக்குகிறார்.



11. ஆசிரியர், மாணனை புத்திக்கூர்மை உள்ளவாறு ஆக்குகிறார்.
 குரு,சீடனை திறந்த,களங்கமற்ற மனமுள்ளவனாக ஆக்குகிறார். 

12. ஆசிரியர், மாணவனின் வளமான உலக வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறார்.
 குரு சீடனின் அமைதியான,தெளிவான வாழ்விற்கு வழிசெய்கின்றார் 

13. ஆசிரியர் மாணவனின் மன இயக்கத்தை ஊக்குவிக்கிறார் 
 குரு சீடனின் ஆத்மாவைத் தொட்டு,அதை நீ உணரச் செய்கின்றார்.

14. ஆசிரியர்,மாணவனுக்கு அனுபவ அறிவை அளிக்கிறார் 
 குரு சீடனை விவேகமுள்ளவனாக ஆக்குகிறார்.

15. ஆசிரியர் மாணவனுக்கு அறிவு முதிர்ச்சியைத் தருகிறார்.
குரு,சீடன் கபடமற்ற,தூய நிலைக்குத் திரும்ப வழி செய்கிறார்.



16. பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது எவ்வாறு என்று ஆசிரியர் கற்பிக்கிறார் 
மன உறுதியுடன் பிரச்சினைகளிலிருந்து வெளியேறுவது எவ்வாறு என்பதை குரு உணர்த்துகின்றார்.

17. ஆசிரியர் முன்பே முறைப்படுத்தப்பட்ட வழியிலேயே சிந்திக்கிறார்.
 குரு பன்முக விசார ரீதி கொண்டவர்.

18. மாணவன் தவறு செய்தால், ஆசிரியர் கடுமையாக தண்டிக்க கூடும்.
சீடன் தவறு செய்தால் குருவின் தண்டனை கருணையோடு கூடியதாக இருக்கும்.

19. ஆசிரியர் மாணவர் உறவு,தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான உறவு போன்றது.
தாய் சேய்க்கும் இடையான உறவே குருவிற்கும் சீடனுக்கும் உடனான உறவு.

20. மாணவன்,ஆசிரியரைத் தேடி செல்கிறான்.
குரு சீடனைத் தேடி சென்று,அவனை ஏற்றுக் கொள்கின்றார்.



21. மாணவனின் கேள்விக்கு ஆசிரியர் பதில் அளிக்கின்றார்.
சீடனின் பதிலுக்கு எதிர் கேள்வி கேட்டு,சீடன் விஷத்தை தெளிவாக புரிந்து கொண்டிருக்கின்றானா என்பதை குரு ஆராய்கிறார்.


22. ஆசிரியர் மாணவனின் இலட்சியத்தை நோக்கி,அவனது கைபிடித்து அழைத்து செல்கிறார்.
குரு தான் வாழ்ந்து காட்டுவதன் சீடனுக்கு நல்ல உதாரணமாகிறார்.

23. படிப்பு நிறைவுற்ற மாணவன்,தனது ஆசிரியருக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறான் 
குருவின் ஆன்மிக உபதேசத்தால் ,தன்னை அறியும் சீடன்,குருவின் அருளுக்கு என்றென்றும் கடன்பட்டவனாகிறான்.

24. ஆசிரியர் கற்பித்ததை நன்கு படித்து தேர்ச்சி பெரும் மாணவன் பல்கலைக்கழக பட்டம் பெறுகிறான்.
குருவின் உபதேசத்தின் பயனாக அனுபூதி பெரும் சீடன் அதைக் கொண்டாடுகிறான்.

25. மாணவனின் வாழ்வில் ஏற்படும் சிக்கல்களில் இருந்து விடுபட ஆசிரியர் உதவுகிறார்.
சீடனின் வாழ்வில் வரும் சிக்கல்களை குரு  அடியோடு அளிக்கின்றார்.









மேற்கண்ட செய்திகளை மீண்டும் மீண்டும் படியுங்கள்,அப்போது  தான் நமக்கு குருவின் அருமை புரியும்.குரு நிந்தனை செய்தோமே..இனியாவது செய்யாமல் குருவின் மகத்துவம் அறிவோம். மீண்டும் மீண்டும் படித்தால் தான்,குருவின் அருள்,குரு கடாட்சம்,திருவருள் போன்ற நிலைகள் பற்றி நாம் தெளிவாக இருப்போம்.மேற்கொண்டு கேள்வி பதில் பாணியில் குருவின் அருள்,ஆற்றல்,இன்பம்,ஈதல்,உள்ளம் என குருவின் மாண்பை அறிய இருக்கின்றோம்.

 குருவே சிவம். சிவமே குரு ஆவார்
குருவருள் இல்லாமல் திருவருள் கிட்டாது.
குருவே சிவம் என கூறினன் நந்தி என்பது  திருமூலர் வாக்காகும்.





தலம், தீர்த்தம், மூர்த்தி இந்த மூன்றையும் முறையாக வழிபடுபவர்களுக்கு சற்குரு வாய்ப்பார் இது தாயுமான சுவாமிகள் வாக்காகும்

1. குரு எல்லாம் குருவா ?
எல்லா குருவும் குரு அல்ல.குருமுன் உன் மனம் நின்றாலே அவர் உனக்கு குருவாவர்.குருவிடம் உன் மனம் பேச வேண்டும்.குருவிடம் பணம் பேசக் கூடாது

2. குருவை தேடுபவர் யார்?
குருவைத் தேடுபவர் இறைவனைத் தேடுகிறான்.குருவைத் தேடுபவன் தன்னைத் தானே ( தன்னை அறிந்தால் மட்டுமே குருவையும், சிவபெருமானையும்) அறிகிறான்.

3. குருவின் தகுதியை சோதிப்பவன் யார்?
குருவின் தகுதியை சோதிப்பவன் துடுப்பு இல்லா படகோட்டி போல ஆவான்

4. குருவைக் கண்டால் என்னவாக உருவாகிறான்?
குருவைக் கண்டவன் உருப்பெறத் தொடங்குகிறான்.குருவை ஏற்பவன் குருவின் சீடனாகிறான்.

5. குரு முழுமையானவராக சாட்சி என்ன?
குருவை முழுமையானவராக அறிய, அவர் மெய்( எப்போதும் சிவத்தையே நினைத்துக் கொண்டிருப்பது) ஞானமே சாட்சி

6. குரு என்பவர் யாருக்காக?
குரு என்பவர் மக்களுக்காக ( ஆன்மா ஈடேறுவதற்காக) வந்த இறைவனால் ( ஆன்ம அறிவு இடம் கொண்டு) அமர்த்தப்பட்டவர்

7. குருவிடம் என்ன கிடைக்கும்?
குருவால் திருவருள் கிட்டும்.

8. குரு என்பவர் யார்?
குரு என்பவர் மெய் ஞானத் திறவுகோல் ஆவார்

9. குருத்துவம் என்றால் என்ன?
குருத்துவம் தனித்துவம் ஆனது.

10. குருகடாட்சம் யாரிடம் சேர்க்கும்?
இறைவனிடம் சேர்க்கும்.



11. நல்ல குருவை அறிவது எப்படி?
சுயநலம், ஆடம்பரம், பாரபட்சம் அற்ற எளிமை, ,இனிமை, தெய்வீகம்
அமைதி, சாந்தம் நற்பண்பின் வடிவுமானவர் குரு ஆவார்

12. குருவாக ஆவதற்கு வயது உண்டா?
தெய்வீக தெளிவு இருந்தால் போதும்.

13. குருவில் ஆண் பெண் உண்டா?
தெய்வீக வழியில் நாடவும்.- அறியாமை என்ற இருளை மறையச் செய்ய - யார்
வேண்டுமானாலும் இருக்கலாம்.

14. குரு தன்மை என்ன?
இறைத்தன்மை நிறைந்தவர்.

15. குருவால் தெய்வீகத்தை காட்ட முடியுமா?
முடியும் நீ தகுதி உடையவனாய் இருந்தால்.

16. குருவுக்கு தகுதி வேண்டுமா?
கடவுளை காட்டவேண்டும் உணர முடியாததை உணர்த்தும் போது உணர்ந்து கொள்ள
வேண்டும் நீ உணரவும் தகுதி உள்ளவனாக வேண்டும்.

17. குரு ஞானம் எப்படிப்பட்டது?
காலத்தில் உன்னை மீட்பது,காலம் கடந்தும் வாழ்வதும்,மறைந்த  பின்னும் வாழவைக்க வாழ்வது

18. குரு ஞானத்தை வெல்ல முடியுமா?
குரு ஞானத்தில் நீ வெற்றியடைந்தால் உன் வெற்றி குருவின் வெற்றியை பன்மடங்காக்கும்

19. உண்மை குருவை பரிசோதித்துக் கொண்டே இருக்கலாமா?
பரிசோதித்துக் கொண்டே இருக்கலாம்,நீ  முன்னேறாமல் இருப்பாய்

20. குருவை நம்ப என் மனம் மறுக்கிறது ஏன்?
முதலில் உன்னை நம்பு, பிறகு குருவை நம்பு

21. குரு சேவை எதற்கு?
குரு சேவை குருவுக்கு அல்ல....
அவருக்குள் இருக்கும் அருளுக்கும்மெய்ஞானத்திற்கும் உன் சேவை சமர்ப்பணம் ஆகிறது. குரு சேவையே இறைவன் சேவை.

22. குரு ஆடையை வைத்து எடை போடலாமா?
குரு என்பவர் ஆடை அணிகலன்களில் இல்லை. பணிவும், பண்பும், சொல்லும்
செயலும் ஒன்றாக இருக்கும் தெய்வீகம். தெய் வீகத்திற்கு ஆடை அலங்காரம் தேவையில்லை.

23. குருவுக்கு மற்றோர் பெயர் கூறுங்கள்?
குரு என்பவர் பாவ விமோட்சகர்.அறியாமையை நீக்கி ஞானத்தை அருள்பவர்

24. குரு உருவம் எப்படிப்பட்டது?
குரு என்பவர் மனித உருவில் உயர் நிலையை உடையவர். ஒரு இறைவனின் சாத்வீக குணமே சாந்தமான தெய்வீகமே குருவின் உருவம்.

25. குருவை நாம் தேடிச் செல்ல வேண்டுமா?
இறைதேடல், இறைதாகம், இறைப்பசி, இருந்தால் நீ தேடுவாய்




26. குரு என்பவர் கடவுளா?
உன்னுள் கடவுள் ஒழிந்து இருக்கிறார்.குருவினுள்  கடவுள் நிறைந்து இருக்கிறார்

27. ஒழிந்து இருப்பதின் அர்த்தம் என்ன?
எல்லாம் கடந்தவர் கடவுள்.கடவுளை அறிந்தால் குருவைத் தேடமாட்டாய்.
உன்னுள் ஒழிந்தவனை தேடுவாய் நீ ஒளிரும் வரை

28. குரு என்பவர் எதற்கு?
குரு என்பவர் கடவுளுக்கும் நமக்கும் உள்ள தெய்வீகத் தொடர்பை
ஏற்படுத்துவதற்கும்.மாயை நிலையை விலக்கி மன இருளை அகற்றுவார் .

29. குரு கடவுளை அறியச் செய்வாரா?
குரு கடவுளை உன்னுள் தெரியச் செய்வார்.

30. குருவின் மகத்துவம் என்ன?
தான் அறிந்ததை பிறர் அறியச் செய்வது ( யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்)




31. குருவை சோதிக்கலாமா?
அது நெருப்பாக இருந்தால் உன்னைச் சுடும்.

32. குருவை எவ்வாறு அறிவாய்?
மெய்யை மெய் அறியும்

33. குரு கடாட்சம் பெற என்ன வேண்டும்?
குரு கடாட்சம் பெற நற்பண்பு தெய்வபக்தியும் வேண்டும்.

34. குரு பக்தி எப்படிப்பட்டது?
குரு பக்தி குழந்தை தாய்மீது வைக்கும் அன்பு போன்றது.(கன்று இடம் பசு காட்டும் அன்பு போல)
தாய்மை தெய்வத்தின்(பிறப்பிடம்)

35. குருவிடம் போக மனப்போராட்டம் இருக்கலாமா?
முதலில் குருவிடம் சரணடைய மனப்போராட்டம் மாண்டுபோகும்.

36. தெய்வீக குருவை எவ்வாறு அறிவாய்?
அவரைக் காண மனம் துடிக்கும்
அவரை ஒவ்வொரு கனமும் காண மனம் ஏங்கும்
ஒரு நாள் ஒரு பொழுதேனும் அவரை நினைக்கும்
அவர் முன் அமர மனம் ஏங்கும்
அவரைப் பிரியாது இருக்க மனம் மறுக்கும்
அவர் முன் மனம் அடங்கும்
அவர் சொல்வதை கேட்டு ரசித்து நல்வழியில் நடக்கும்.

37. குருவாக பணம் வேண்டுமா?
குருவாக நல்ல மனம் மட்டுமல்ல இறைவனின் உணர்நிலையுடன் உள்ளவரே குருவாவர்.

38. குருவைப் பார்ப்பாயா? குருவை சுற்றியுள்ளவரை பார்ப்பாயா?
உன் வியாதிக்கு மருத்துவரையே அறிய வேண்டும்.
சுற்றியுள்ளவர்களிடம் நற்பண்புகளை பார்க்க  வேண்டும். குரு உன்னை அறிந்துக்கொள்வார்

39. குருவுக்கு ஜாதி உண்டா?
சுவாசம் ஒன்றே.

40. குருவிடம் ஜாதி பார்க்கலாமா?
இறைவனிடம் ஜாதி பார்க்கலாமா ( ஒன்றே குலம் ஒருவனே தேவன்)






41. குருவுக்கு தனித்தனி தெய்வம் உண்டா?
குரு தனித்துதான் இருப்பார்கள். குருவுக்கு தனி தெய்வம் இருக்கலாம். குரு
காட்டும் தெய்வம் ஒன்றே.

42. குருவிடம் பிற மதத்தவர் போகலாமா?
குரு என்பவர் மதம் சார்ந்தவர் அல்ல
எல்லாம் கடந்தால் குருவாக முடியும்
எல்லாம் கடந்தால் தான் குருவாக பிரகாசிக்க முடியும்.




43. குருவால் உலகிற்கு என்ன பயன்?
அன்பான உலகம், பகையில்லா குடும்பம், தெய்வீகமான மனம்,அமைதி எங்கும் நிலவும்.

44. குரு சீடனால் உலகிற்கு பயன் என்ன?
குருவால் நற்சீடனும் சீடனால் குருவும் உருவாகிறார்கள்.இவர்களால் மட்டுமே இறைபுகழ் ஆன்மீகம் பரவுகிறது.

45. குருவை யார் தேர்வு செய்கிறார்கள்?
குருவை கடவுள் நிர்ணயம் செய்கிறார்

46. குரு சிஷ்ய துரோகம் பாவமா?
தெய்வ நிந்தனைக்கு உரியது. பல இழிபிறப்பைத் தரும்.

47. குருவாக ஏற்க மறைந்தவர்களை தேர்வு செய்யலாமா?
மறைந்தவர் என்றாலும் உன் மனம் மானசீகமாக ஏற்க வேண்டும்.

48. குருவாக முதல் தகுதி என்ன?
எப்போதும் இறை உணர்நிலையில் சமாதி நிலை அடைபவரே.

49. குரு பட்டம் யார் தருவார்?
இறை பக்தர்கள் மூலம் இறைவன் குருபட்டம் தருவார்.

50. என் குரு நீயே என்றால் நம்பலாமா?
குருவால் பயனடைந்தால் மட்டுமே குரு என்பான்.ஒருவனால்  வஞ்சபுகழ்ச்சிக்கு கூட குருவை தன்னைவிட உயர்த்த முடியாது.
இது இறைவன் தீர்ப்பு.

51. குரு கிடைக்காதவன் யார்?
வழி இருந்தும் குருடே. அவன் மகாபாவி

52. குரு இல்லாது இறைவனில் கலந்தவன் யார்?
உலகம் உடல் எல்லாம் மறந்து தெய்வத்தையே நினைப்பவன்.
இவனே இறைவன் விரும்பிய மனிதன்

53. நம்முடைய பாதி வயதில் குருவிடம் செல்ல சந்தர்ப்பம் அமைவது ஏன்?
கர்மபலன் இன்றி செயல்பயன் கடவுளையும் குருவையும் நிர்ணயமாகும்.

54. குருவே இல்லாது ஆன்மீகத்தில் ஜெயிக்க முடியுமா?
பிறப்பிலேயே ஜென்மபலன், கர்மபலன், யோகபலன், ஆன்மீகப்பலன்
கூடியவனாக இருக்க வேண்டும்.

55. குருவிடம் பயின்றவன் யோகி ஆக முடியுமா?
முதலில் சன்னியாசியாகி பின் யோகியாக முடியும்

56. குரு சன்யாசம் தரலாமா?
குருவின் முதல் கடமையே சன்னியாசியை உருவாக்குவதே.

57. குரு பெரியவரா? சன்னியாசி பெரியவரா?
குருவே பெரியவர். குருவை மிஞ்சிய சிஷ்யனும் உண்டு.

58. குரு எவ்வாறு வெளிப்படுகிறார்?
சிஷ்யர்களை, சன்னியாசிகளை, சாதுக்களை உருவாக்கும் போது ஒரு குரு வெளிப்படுகிறார். சன்னியாசத்தில் தெய்வம் வெளிப்படும்.தெய்வீகம் குருவில் வெளிப்படும்.

59. குருவுக்கு நிறம் தேவையா?
குருவுக்கு மனம் அதிலும் தெய்வீக குணம் மட்டுமே வேண்டும்

60. குருவுக்குள் அடங்கியது எது?
பிரபஞ்சமே அண்டம் அண்டமே ஆண்டவன். ஆண்டவனையே
உள் அடக்கியவன் குரு.






61. குரு இறையை அடக்கி வாழ்வாரா?
குரு முதலில் தன்னை அடக்கி வாழ்வார்

62. இறைவனை அடைவதற்கு ஞானம் தேவையா?
இறைவனை அடைவதற்கு தேடல்கள் மடடுமே,ஞானம் தேவையில்லை.

63. குருவிடம் விஞ்ஞானம் செல்லுமா?
குருவிடம் விஞ்ஞானம் செல்லாது. ஏனெனில் விஞ்ஞானம் என்பது
மாயை குருவின் தெய்வீகம் என்பது உண்மையின் உண்மை.

64. குரு நேசம்?
சிவ நேசம்.

65. குருவின் பதி?
சிவபதியே ஆவாள்.

66. குருவால் முக்தி தர முடியுமா?
குருவால் பக்தியையும் முக்தியையும் காட்ட முடியும்.

67. ஞான குரு என்றால் என்ன?
தியானத்தில் ஞானம் கிடைக்கும்.ஞானத்தில் தெளிவு கிடைக்கும்
குருவே ஞானம்.

68. குரு எதையாவது தேடுவாரா?
தேடுவார் நல்ல சிஷ்யனை.

69. குரு சிஷ்யனை ஏன் தேட வேண்டும்?
இறை அமுதைப் பருக ஆள் வேண்டாமா

70. நான் குருவாக முடியுமா?
முடியும் 'நான்' என்பதை அறிந்து ;நான்' என்பதை மறந்தால்

71. குருவுக்கு ஞானம் எங்கிருந்து கிடைக்கிறது?
இறைவனிடம் இருந்தே கிடைக்கிறது
உலகின் தேவை அனைத்தும் இறைவனிடமிருந்தே பெறப்படுகிறது.

72. குருவுக்கு 'நான்' என்பது இருந்தால் என்ன?
நான் என்பதற்கு இரண்டு நிலைகள் உண்டு.
நான் - அகங்காரம்
நான் - தெய்வீகம்
அகங்காரம் மனித இயல்பு
தெய்வீகம் தெய்வீக இயல்பு
இதனை ஆத்மபலன் மிக்கவரே அறிய முடியும்.

73. குரு ஜடநிலையா?
எல்லாம் மறந்தவர்கள். அதாவது துறந்தவர்கள் எல்லாம்
இல்லாது இருந்தாலும் ஒன்றானவனிடம் ஒன்றாதல் ஆகும்.

74. குரு சம்மந்தம் நமக்கு வேண்டுமா?
உன் மனம் ஏற்றவாறே சம்மதம்.

75. குருவிடம் குருட்டு நம்பிக்கை வைக்கலாமா?
உண்மை குருவிடம் வைக்கும் நம்பிக்கை தெய்வத்தையே போய் சேரும்.

76. குரு உன்னதம் எவ்வாறு அறிவது?
தேன் சொரியும் மலர் - மலர் தேடும் வண்டு
குருவே மலர் - உன்னதம் தேன்

77. குருவைத் தேடி கூட்டம் செல்வது ஏன்?
நற்பொருள் ஞானம் - மெய் தன்னால் பரவும்.

78. குருவுக்குள் கோயில் கொள்வது எது?
இறைவன்

79. குருவானவர் பேதம் பார்ப்பாரா?
இறைவனிடம் பேதம் கிடயாது.

80. குரு பாவத்தை போக்குவாரா?
குரு பாவத்தை அறிந்து தெளியச் செய்வார். பாவத்தை அனுபவித்து
கழிக்கச் செய்வார். பாவம் கழிக்காது ஆண்டவனிடம் போக முடியாது.




81. குருவுக்கு சிஷ்யன் தட்சணையாக பணம் தர வேண்டுமா?
குருவுக்கு மனதையும் உன்னையும் கொடு. மனமுள் பணம் பறந்து போகும்.

82. குருவுக்கு சிஷ்யன் ஆற்றும் கடமை யாது?
நல்ல பண்புள்ள சிஷ்யனாக இருப்பதுவே குருவுக்கே பெருமை.

83. குருவிடம் சிஷ்ய பாரபட்சம் உண்டா?
குரு ஒரு ஜீவகாந்தம் (பரகாந்தம் - குரு) இரும்பாக இருந்தாலும்
துரும்பாக இருந்தாலும் ஈர்த்து கொள்ளும். இரும்பும் பின் காந்தமாகும்.

84. குரு சிஷ்யன் வளர்வதை எவ்வாறு அறிவார்?
முளை நெல்லின் மூக்கை அறியலாம்

85. குரு சிஷ்யனை சன்னியாசம் பெற வற்புறுத்தலாமா?
தெய்வீக நாட்டம் இருந்தால் குருவிடம் சரண் புகுவான்.
இறைவன் அவனுள் புகுந்து கொள்வார்.

86. குரு சிஷ்யனை அறிய முடியுமா?
தாய் அறியா சூழ் உண்டோ, தெய்வம் அறியாத நிலை உண்டா

87. குருவுக்கு சிஷ்யன் பிரியமாகுவது ஏன்?
மாறாத தெய்வீக பணிவு, பணிவுடன் மதிப்பும் மரியாதையும்

88. குருவிடம் சிஷ்யன் முழுமையான சரணடையக் காரணம்?
குருவுக்குள் இருக்கும் கடவுள் என்னும் பெரும் கருணையாளன்.

89. குருவுக்கு முன் தாயை ஏன் வைத்தார்கள்?
தயாபரன் தாயுமாகிறான்.

90. குருவின் முதல் குரு யார்?
முதல் குரு உன் தாயே.




91. குருவுக்கு கல்வி தேவையா?
தெய்வத்தை அறிய கல்வி தேவையில்லை

92. குரு தந்தையாக முடியுமா?
எல்லாம் ஆகியவன் எல்லாம் ஆக இருப்பதால்

93. குரு கற்றவராக இருக்க வேண்டுமா?
குருவின் தெய்வீகத்தை படிக்கவே முடியாது.கல்வி ஒரு உபகரணமே.

94. குரு வேதம் கல்லாதவராக இருந்தால் என்ன?
ஒருங்கிணைந்த மனம் மட்டுமே போதும். பக்தன் பயபக்தியுடன்
இறைவனை மூச்சாக மூச்சில் இருந்தாலே போதும்.

95. குரு வேதம் ஓத வேண்டுமா?
மானசீக பூஜையுடன் மானசீகமாக இறைவனாகவே இருப்பார்.

96. குருவிடம் சென்றால் நீ சித்தனாகலாமா?
குருவின் சிவநெறியை கடைபிடித்தால் சித்தனாகலாம்.

97. குருப்பயிற்சியில் சாதனை முக்கியமா?
பயிற்சியில் தவம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை, வைராக்கியம் அவசியம்.

98. குரு ஜாதி பார்க்கலாமா?
சிவமாகியவர்.

99. குரு ஜாதி பார்த்து அருள் புரிவாரா?
இறைவன் சாதி பார்த்தா அருள் புரிந்தான்.

100. குருவுக்கு வேஷம் உண்டா?
குரு அதுவே தெய்வம். வேஷம் அல்ல நேசம்



101. குரு சோதனை செய்வாரா?
சோதனை செய்வார் இறைவன் செய்ய நினைத்தால்.

102. குருவை மறந்தால்?
தெய்வம் மறக்கும்

103. குருவிடமிருந்து விலகியவன்?
தெய்வத்திடமிருந்து விலகிடுவான்.

104. குருவை வஞ்சிப்பது?
தெய்வக் குற்றம்

105. குருவுக்கு பின்னால் புறம் பேசுவது?
மிகப் பெரிய பாவம்.அரசன் அன்று கேட்பான் தெய்வம் நின்று கொல்லும்.
தெய்வம் தண்டனை தராது- உன்னைக் கொல்லும்.

106. குருவை தாழ்வாக விமர்ச்சிப்பது?
நற்குருவை தாழ்வாக விமர்ச்சிப்பது தாழ்ந்த மனமுடையவனால்
மட்டுமே முடியும். அது அவன் அழிவிற்கு வழி வகுக்கும்.

107. குருவிடம் மந்திரம் திருடலாமா?
குருவிடம் மந்திரத்தை தந்திரமாகக் கூட வாங்க கூடாது. தந்திர
திருட்டே ஆனாலும் அதற்கேற்ற பலனே இறை தருவார்.

108. குருவின் வெளிப்பாடு யாது?
குருவின் வெளிப்பாடு மெய் ஞானம், தெளிந்த தெய்வீகம், குரு பிரம்மாக இருப்பார்.

109. குருவை வஞ்சபுகழ்ச்சி செய்யலாமா?
எல்லாம் புகழும் இறைவனுக்கே

110 . குரு வணக்கம் யாரைச் சாரும்?
குரு வணக்கம் குருவைச் சாரும். குரு இறைவனுக்கு சமர்ப்பணம் செய்வார்.




111. நற்குரு எதை தனதாக்கி கொள்வார்?
இறைவனை மட்டுமே தனதாக்கி கொள்வார்.

112. குரு சேவை கர்மவினை கழியுமா?
குரு சேவையே இறைசேவை, இறைசேவையாக நீ நினைத்தால்
கர்மவினை கழியும்.

113 . குரு கர்மவினையை கழிப்பாரா?
குரு கர்மவினையை குறைப்பார்.கழிக்க முடியாது.

114. குரு தவறு செய்து மறைத்து புகழ் பெற முடியுமா?
குருவாக இருக்க முடியாது.

115. குரு தவறு செய்யலாமா?
நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே.

116. குரு பாடம் யாரிடம் எல்லாம் கற்கலாம்?
மனிதனில் இருந்து நாய் எறும்பு தேனீ நரி புலி சிங்கம்
நாய் - நன்றி, எறும்பு - உழைப்பு, தேன்- சேமிப்பு, நரி -தந்திரம்
புலி -பதுங்கி பின் தாக்குதல்,சிங்கம்- பசியின்றி புசிக்காது,
ஒவ்வொன்றினதும் நற்குணங்கள் ஆகும்.

117. குரு சொல் கேளாதவன்?
தெய்வம் சொல் கேளாதவன்

118. குருவின் மகத்துவம்?
மெய்யை வெளிப்படுத்துவது (மெய் என்பது பரம்பொருள்)

119. குரு எதற்குச் சமம்?
தெய்வநிலை எதற்கும் ஈடாகாது. கடவுளாக தோன்றும் குருவே,
இறைவனுக்கு நிகர் இறைவனே.

120. குருவால் உன் ஜென்மத்தை உணர்த்த முடியுமா?
உன் ஜென்மத்தை உணர்த்த முடியும்.






121. குருவாக யாரையும் மனம் ஏற்க மறுத்தால் என்ன செய்ய?
உன் ஜென்ம பலன், குரு இன்றி இறை தேட முடியாது.

122. குரு வாழ்க்கையை நாம் பின் நோக்கி பார்க்கலாமா?
குருவிடம் ரிஷிமூலம் நதிமூலம் பார்க்காதே.

123. குரு வாழ்வியலில் எவ்வித வழிகாட்டி?
துறவிக்கு தெய்வீக வழிகாட்டி, இல்லற வாசிக்கு வாழ்க்கை நெறிகாட்டி.

124. குரு பேசும் போது நாம் பேசலாமா?
நீ பேச நினைப்பதை அவர் பேசுவார்.

125. குருவிடம் என்ன கேட்கலாம்?
உலக இன்பத்தை தவிர தெய்வீகத்தை யாசிக்கலாம்.

126. குருவிடம் நம் குறைகளை சொல்லலாமா?
சொல்லலாம் குறையை மறந்து புது மனிதனாய் அவர் முன்அமர்ந்து உபதேசம் கேள்.

127. குரு மனவிழிப்படையச் செய்பவரா?
ஆம் ...உன் ஆத்துமாவை காட்டி மனவிழிப்படையச் செய்வார்.

128. குருவை எப்படி நிர்ணயிக்கிறார் இறைவன்?
இறைவன் பல கோடி மக்களில் ஒருவரை மட்டுமே குருவாக தேர்வு செய்கிறார். இதுவும் ஜென்ம பலனே.

129. குரு சித்தனானால் என்ன ஆகும்?
புத்தி சிவத்தோடு இருந்து விட்டால் சித்தனாகலாம்.

130. குருவின் மன்னிக்க முடியாத தவறு உண்டா?
காமம் - மன்னிப்பே இல்லை, ஆண் பெண்ணாக இருப்பினும் பாவத்தின்
சம்பளம் மரணமும் மரணத்தை விட கொடிய அவமானமும் மிஞ்சும்.

131. குரு சுகபோகமாக வாழலாமா?
குரு சுகமாக வாழலாம். ஆனால் போகம் இறைக்கு உரியதல்ல.

132. குருவிடம்தான் மந்திரம் வாங்க வேண்டுமா?
குரு உன் உயிர் பலன், எண்ணபலன், உடல்பலன், அறிவு பலன் கருதியும் மந்திரம் தருவார்.

133. குரு சொன்ன இடத்தில் தான் மந்திரம் உச்சரிக்க வேண்டுமா?
ஆம்... குரு சொல்லை தட்டாதே.

134. குரு சொல்லிய மந்திரத்தை விட்டு இறை நாமம் செல்லலாமா?
மந்திரத்தை மட்டுமே உச்சரிக்க வேண்டும்.

135 . குருவிடம் மந்திரம் மாற்றிக் கொள்ள நினைக்கிறேன் சரியா?
மந்திரம் மாற்றும் அதிகாரம் குருவிற்கு மட்டுமே.

136. குருவை மானசீகமானவராக அறிய முடியுமா?
குரு மூலம், ரிஷி மூலம் பார்க்காதே.

137. குரு திகட்டுவாரா?
தெய்வம் திகட்டாது.

138. குரு செயல் அனைத்தும் என்ன?
அனைத்தும் தெய்வத்தின் கட்டளையே.

139. குரு செய்ய நினைப்பதை யார் செய்வார்?
சிஷ்யன் செய்து முடிப்பான்.

140. சிஷ்யன் எவ்வழி?
குரு எவ்வழியோ சிஷ்யனும் அவ்வழியே

141. குரு சிஷ்யனும் எந்த பரிமாற்றத்திற்கு உரியது?
கொடுக்கலும் வாங்கலும் இறைவன் நீதி.

142. குரு மௌனத்தில் இருப்பதன் இரகசியம் என்ன?
மௌனத்தில் இறை தொடர்பில் இருப்பது

143. குரு வேலை என்ன?
மாயை திரையை விலக்கி தெய்வீகம் மிளிர வைப்பார்

144. குருவை அறியாது விமர்ச்சிப்பது ஏன்?
விமர்சிப்பவன் மூடன். முட்டாள்

145. குருவை மாற்றலாமா?
மாற்றக்கூடாது.

146. குரு உபதேசம் என்ன?
உன்னை அறியச் செய்வது.மேலும் இறைவனை சுட்டி காட்டுவது

147 . குருவுக்கு நன்மதிப்பிற்கு உரிய சிஷ்யன் உண்டா?
உண்டு, தெய்வ ரகசியம்.

148. குருவின் பணி என்ன?
ஆன்மீக உலகை உருவாக்குதல்.

149. குரு பக்தி எது?
குரு வழியை பின்பற்றுதல் குரு பக்தி.

150. குரு எப்போது உருவாகுகிறார்?
இறைவனின் ஆணைப்படி யோகத்தில் - வழி மெய் ஞானம் பெற்று .

151. குரு முன் அமர்ந்தால் பல சந்தேகம் வருகிறது ஏன்?
அஞ்ஞானத்தை போக்கவே, பயனுள்ள கேள்வி பதில் அறிந்து கொள்ள,குருவின் நேரத்தை வீணாக்காதே.

152. குருவின் வார்த்தையை அப்படியே நம்பலாமா?
இறைவன் வார்த்தையே.

153. குரு யோகி வித்தியாசம் என்ன?
குரு - விடிவிப்பவர்-விடியல் தருபவர் 
யோகி - அருள்பவர்

154. உலகில் முதல் குரு யார்?
உலகில் முதல் குரு இயற்கையே.

155. குடும்பப் பெண் குருவாகலாமா?
இறைவனின் மாற்று உருவே.

156. குருவுக்கு பாத பூஜை செய்யலாமா?
குருவுக்குள் இருக்கும் தெய்வீகத்திற்கு சமர்ப்பணம் செய்வது

157. குரு எவ்வாறு இருக்க வேண்டும்?
எல்லா உயிர்களிடத்தும் பெருங்கருணையோடு அன்பு செழுத்த வேண்டும்

158. குருவின் குணம் என்ன?
குரு எப்போதும் சாத்வீக குணமாகவே இருக்க வேண்டும்

159. குரு எவ்வாறு தனது சீடரை வழி நடத்த வேண்டும்?
பொய் அகற்றி மெய் காட்டி திரிபு அற ஐயத்தை போக்கி நன்முறையில் வழி காட்ட வேண்டியது குருவின் கடமையாகும்



   வித்யாகுரு - ஆன்மா ( உயிர்) ஈடேறுவதற்கு ( சைவ சித்தாந்தம், சைவ திருமுறை கற்றுக் கொடுப்பவர்)

 கிரியாகுரு -  திருமடத்தின் மூலம் குருமகா சந்நிதானம் மூலம் குரு உபதேசம் பெற்று அனுதினமும் பூஜைகள் செய்வது

 ஞானகுரு - சமயக்குரவர்கள் நால்வரில் யாரேனும் ஒருவரை மானசீகமாக வணங்குவது) இந்த மூவரும் அவசியம் இருக்க வேண்டும்

இந்த மூன்று குருவும் அவசியம்.இவர்களின் அருளின்றி சிவத்தை உணர இயலாது.




என்ன அன்பர்களே..குருவை பற்றி முழுதும் புரிந்து உணர்ந்து கொண்டீர்களா? இந்த பதிவை ஒருமுறை அல்ல ..பலமுறை படியுங்கள்.பல முறை படித்தால் தான் குருவின் தன்மை நம் மனதுள் இறுத்தி,குருவின் பாதம் சரணம் புக முடியும்.குருவின் அருளாலே குருவின் தாள் வணங்கி அடுத்த பதிவில் சந்திப்போம்.



மேலும் குருவருள் பெற்றிட  -முந்தைய பதிவுகளுக்கு 

ஞானத்தை யாரிடம் கற்பது? - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_71.html


குருவருள் இன்றேல், திருவருள் இல்லை - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_3.html


அருளை அள்ளித்தரும் நவயோகி,தவ யோகி,சிவ யோகி ஸ்ரீமத் சதானந்தபிரம்ம குருதேவதத் சுவாமிகள்- http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_82.html


உன்னுள் உத்தமனைக் காணும் வழி சாகாக் கல்வி - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_4.html


ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html


No comments:

Post a Comment