Subscribe

BREAKING NEWS

12 February 2019

வாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (17)

அனைவருக்கும் வணக்கம்.

 ஒவ்வொரு மாதத்தையும் வாழ்வாங்கு வாழ தொடர் பதிவு இன்றி நாம் கடக்க இயலாது. வாழ்வாங்கு வாழ என்ற தொடர்பதிவு இன்று பதினேழாம்   பதிவை எட்டி உள்ளது. இந்த தொடர்பதிவை தொடர்ந்து வாசித்து அதனை கருத்தில் கொள்பவர்கள் கண்டிப்பாக ஆன்மிகத்தில் புதிய நிலை தொடுவார்கள் என்பது உறுதி. ஆன்மிகத்தில் மட்டுமல்ல, நடைமுறை வாழ்க்கையிலும் புது நிலை அடைவார்கள். நாமும் இங்கேதான் உளியால் செதுக்கப்பட்டு வருகின்றோம்.


கேள்வி - உலகாய இன்பங்கள் நிலையற்றவை என்றும் சொல்கிறீர்கள், இன்பங்களை நிறைவாக அனுபவிக்க வேண்டும் என்றும் சொல்கிறீர்கள். குழப்பமாக உள்ளது?

இராம் மனோகர் -எது இன்பம் ? அது தெரிந்து விட்டதா உங்களுக்கு !!!? நீங்கள் எதையெல்லாம் இன்பம் என்று கருதுகிறீரளோ.. அவையெல்லாமே ஒரு விதமான வலிதான். மெல்லிய வலி இன்பம்.... வலி மிகும் பொழுது அது துன்பம் அவ்வளவுதான். நாங்கள் என்ன சொல்கிறோமென்றால்... இயற்கை தந்த இன்பங்களை உங்கள் சுய இயல்பில் நின்று கொண்டு அனுபவியுங்கள் என்றுதான் சொல்கிறோம். ஒரு நல்ல மனிதனாக தனக்கும், தன்னைச் சார்ந்தவர்களுக்கும் நன்மை பயக்கும் செயல்களைச் செய்வதே இன்பம். நன்றாகப் பதிவை வாசிப்பதில்லை. நுணிப் புல் மேய்ந்து விட்டு குழப்பமாக இருக்கிறது என்று சொல்வது தவறு.
நான் என்ன சொன்னேன் ? ''காமம், கோபம், குரோதம், பொறாமை, பேராசை போன்ற தீய குணங்கள்தான் துன்பம் தரும். அன்பு, கருணை, இரக்கம், பேதமற்ற சமத்துவமான மனநிலை இவைகள்தான் இன்பம் தரும்'' என்று சொல்லியிருக்கிறேனா இல்லையா ?
'' நீ நல்லது செய்தால் உன் வாழ்க்கை நன்மையாக, சந்தோசமாக, இன்பமாக அமையும், தீயது செய்தால் உன் வாழ்க்கை முழுவதும் துன்பமாகத்தான் இருக்கும். இந்த வாழ்க்கையில் நல்லறிவோடு, நல்ல செயல்கள் புரிந்து துன்பமின்றி வாழ வேண்டும்'' என்றுதானே சொல்லியிருக்கிறேன் !!? பிறகு ஏன் உங்களுக்குக் குழப்பம் வருகிறது ?

இன்பம் துன்பம் என்பது புறவுலகில் இல்லை. புறவுலகம் ஒரே இயல்போடு இயங்கிக் கொண்டிருக்கிறது. நாம்தான் இருமையின் பாற்பட்டு இரண்டு விதமான மனப்பாங்குகளுக்கிடையே ஊசலாடிக் கொண்டிருக்கிறோம். ஒரே விஷயம் ஒருவருக்கு இன்பமாகவும், மற்றொருவருக்கு துன்பமாகவும் இருக்கிறதை நாம் பார்க்கிறோமா இல்லையா ? அதற்குக் காரணமென்ன மனப்பாங்குதானே ? ஆக பொறாமையும், கோபமும், வெறுப்பும் உள்ள மனதிற்கு எல்லாம் துன்பமாகத்தான் தோன்றும் என்பது புலப்படுகிறதா இல்லையா !!??

அது மட்டுமா !! ஒரு பொருள் கிடைத்து, அதை அனுபவிக்கும் பொழுது இன்பமடைகிறோம். அதே பொருள் நம்மை விட்டுப் போய் விட்டால் துன்பம் கொள்கிறோம். இதற்கும் மனப்பான்மைதானே காரணமாக இருக்கிறது. உலகப் பொருளில் கட்டுண்டு கிடக்கும் வரை மனம் இன்ப துன்ப நுகர்வுகளால் ஏற்படும் தடுமாற்றத்திலிருந்து விடுபடவே முடியாது. பயணம் செல்கிறோம். தாகம் எடுக்கிறது. தடாகத்தில் இறங்கி நீரை அருந்தி தாகம் தணிந்து, சுகம் கொள்கிறோம். தடாகத்திற்கும் நமக்குமான தொடர்பு அதோடு முடிவடைந்து விட்டது. மேலும் பயணத்தை தொடர வேண்டும், இலக்கை அடைய வேண்டும் என்றால் முன்னேறி போய்க் கொண்டே இருக்க வேண்டுமா இல்லையா ? தடாகத்தின் மீது பற்று கொண்டு, அங்கேயே தங்கி விட்டால், நம் பயணத்தின் நோக்கம் நிறைவேறுமா ?
இயற்கையில் இன்பங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால், நாம் அவைகளையெல்லாம் அறிகின்றோமில்லை. குறிப்பிட்ட சில விஷயங்கள் மட்டுமே இன்பம் என்று கருதி, அவற்றிலேயே உழன்று கொண்டு, பற்று கொண்டு, பேராசை கொண்டு, கிடைக்காத பொழுது பொறாமை, கோபம், குரோதம், வெறுப்புக்கு ஆளாகி நாம் துன்பமடைவதோடு, மற்றவர்களையும் துன்பப்படுத்துகிறோம்.



''யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.''
ஆக இன்பம் அனுபவிக்க வேண்டும். ஆனால், பற்று கொள்ளாதே என்பது கோட்பாடு. இன்பம் அனுபவிக்க வேண்டும். அதற்கு துணை நிற்கும் கருவிகளோடு அறிவார்ந்த இணக்கமும் கொள்ள வேண்டும். அதே சமயம் எதன் மீதும், எச்சமயத்திலும் பற்று கொள்ளாமல் இருக்கவும் வேண்டும். இதுவே அறிவுடமை. அதுவே மனநிறைவைத் தரும்.மனதோடு கூடி இத்தகைய நிறைவான மனநிலையில் வாழ்ந்து பழகியவர்கள்தான் மனதற்ற நிலையில் பூரணத்துவத்தை நிறைவாக உணர முடியும். இன்பம் துய்ப்பதிலே அளவும், நெறி முறையும் கடைபிடித்து வாழ்வதுதான் அற வாழ்க்கையாகிறது. அத்தகைய வாழ்க்கைதான் இன்பமயமானது. 

கேள்வி - மெய் ஞானத்தைப் பற்றி நீண்ட விளக்கங்கள் தருகிறீர்கள். ஆனால் உங்கள் மெய் ஞானிகளும் ஒருவருக்கொருவர் மாறுபட்டுக் கிடந்த நிலைதானே இருந்திருக்கிறது? ஆன்மீகமே அறியாத வெளி நாட்டுக்காரர்கள் விஞ்ஞானத்தில் முன்னேறி, அணுவைக் கண்டறிந்து, அதன் ஆற்றலைப் பயன்படுத்தி நம்மை விட வேகமாக முன்னேறி விட்டார்களே?

இராம் மனோகர் - விஞ்ஞான முன்னேற்றம் என்பது சௌகர்யமாக இருப்பது போலத் தோன்றுகிறது. ஆனால், அதனால்தான் இந்த உலகமே அழியப் போகிறது என்று விஞ்ஞானிகளே சொல்கிறார்கள். இதை நீங்கள் மறுக்க முடியுமா ? மெய்ஞானிகளின் முரண்பாடுகளுக்குக் காரணமாக இருந்தது அவரவர் பெற்றிருந்த ஞானத்தின் தரத்தினாலேதானே தவிர, வேறொன்றுமில்லை. ஏகதேசம் விஞ்ஞானிகளின் நிலையும் கூட அதுதான். பாருங்கள்... ஒரு விஞ்ஞானி புறப் பொருட்களை பகுத்து ஆராய்ந்து ஒரு முடிவை முன் வைக்கிறார். பிறகு வேறொரு விஞ்ஞானி வந்து பழைய கருத்தை மீறிய புது கருத்தை முன் வைத்து பழைய கருத்தை முறியடிக்கிறார். இப்படித்தானே விஞ்ஞான முன்னேற்றம் என்பதுவும் ஏற்பட்டுள்ளது !!?
என்னதான் விஞ்ஞான முன்னேற்றம் என்பது ஏற்பட்டாலும், ஆதி மூலத்தைப் பற்றிய உறுதியான, தெளிவான முடிவுக்கு இன்றளவும் யாராலும் வர முடியவில்லை. ஆனால் மெய்ஞானிகள் அவ்வாறல்ல. மெய்ஞானிகள் தங்கள் எண்ணம், மனம், சொல், செயல் போன்றவற்றை உள்முகமாக ஆராய்ந்து ஆதி மூலத்தைப் பற்றி பல்வேறு கருத்துக்களை சொல்லியிருக்கிறார்கள். அவற்றில் முரண்பாடுகள் இருந்தாலும், ஒரு விஷயத்தில் அனைவரும் ஒருமித்த கருத்தோடு ஒரே தளத்தில் நிற்கிறார்கள். அது என்னவென்றால், அனைத்திற்கும் ஆதாரமான மூல சக்தி(பரமாணு) ஒன்றுதான். அதுவே இந்த அண்ட சராசரங்கள் யாவுமாக விரிந்து நிற்கின்றது என்பது.

அதை அவர்கள் பரமாத்மா என்றும், அல்லா என்றும், பரம்பொருள் என்றும், பரம பிதா என்றும், பேராற்றல் என்றும், பேரறிவு என்றும் பல பெயர்களில் அழைக்கிறார்கள். இது இவ்வாறு இருக்க நம் கேள்வி என்னவென்றால், எதிலிருந்து நாம் வந்தோமோ, அதை ஏன் நம்மால் அறிய முடியவில்லையே ? என்பதுதான். அதற்கான விடை என்னவென்றால், ஒரு விஞ்ஞானி ஒரு பொருளின் மூலத்தை அறிய வேண்டுமானால் அதை பிளந்து சூக்கும நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். அப்படியானால் சூக்கும நிலையில் உள்ள பல பொருட்கள் கூடிதான் பருப்பொருள் உருவாகியிருக்கிறது என்பது தெளிவாகிறதல்லவா ?

அதைப் போலவே புறப் பொருள்களில் லயித்திருக்கும் மனதை உள்முகமாக செலுத்தி, சூக்கும நிலைக்கு அதாவது மனதை புத்திக்கும், புத்தியை சித்தத்திற்க்கும், சித்ததத்தை நான் என்ற நிலைக்கும் கொண்டு போய் நிலை நிறுத்தும் பொழுது, அதி சூக்குமமாக விளங்கும் ஆன்மாவை அடைந்து, அதன் மூலம் பேரான்மாவை கண்டறிய முடியும் என்கிறார்கள் மெய்ஞானிகள். எந்த வித செலவுமில்லை, யாருக்கும், எதற்கும் அழிவுமில்லை. இதுதான் மெய்ஞானத்தின் சிறப்பு. மேலும் எல்லாம் வெளி நாட்டுக்காரன்தான் கண்டு பிடித்தான் என்று நினைப்பது உங்கள் அறியாமைதான்.
அதைப் போலவே வெளி நாட்டில் ஆன்மீகம் இல்லை என்று சொல்வதும் அப்படித்தான். எல்லா நாட்டிலும் ஆன்மீகம் இருக்கிறது. ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த யாத்ரிகர்களும், வியாபாரிகளும் நமது சித்தர்களின் ஏடுகளைக் களவாடிச் சென்றுதான் நிறைய புதுப்புது கருவிகளைக் கண்டு பிடித்தார்கள் என்று சொல்வதுண்டு. அவ்வளவு ஏன் சிறிது காலத்திற்கு முன்பு கடவுள் துகளைக் கண்டு பிடித்து விட்டோம் என்று விஞ்ஞானிகள் கூறினார்களே !! அந்த கடவுள் துகள் எனப்படும் அணுத் துகளுக்கு அவர்கள் வைத்த பெயர் என்ன தெரியுமா ? ஹிக்ஸ் - போஸான். இதில் ஹிக்ஸ் என்பது இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானியின் பெயர்.

போஸான் என்ன தெரியுமா ? கல்கத்தாவைச் சேர்ந்த சத்யேந்திரநாத் போஸ் எனப்படும் இந்திய விஞ்ஞானியின் பெயர்தான் அது. இரண்டு விஞ்ஞானிகளின் பெயர்தான் கடவுள் துகளுக்கு சூட்டப்பட்டுள்ளது. இதில் நமக்கு என்ன சிறப்பு ? என்று கேட்டால்... 1924ல் இந்த ஆராய்ச்சிக்கு பிள்ளையார் சுழி போட்டவர் நம் நாட்டைச் சேர்ந்த இளம் விஞ்ஞானி சத்தியேந்திரநாத் போஸ்தான். இவர்தான் முதன் முதலில் 1924ஆம் ஆண்டு, தனது 30வது வயதில் அணு விஞ்ஞானியான ஐன்ஸ்டீனுக்கு அணுவைக் குறித்த ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை அனுப்பினார்.
அவரும், ஐன்ஸ்டீனும் இணைந்து செய்த ஆராய்ச்சிக்குப் பெயர் என்ன தெரியுமா ? ''ஐன்ஸ்டீன் - போஸ் கண்டேன்செட்'' என்பதாகும். அந்த ஆராய்ச்சியின் முடிவுதான் ஹிக்ஸ் - போஸான் என்ற கடவுள் துகள். அது மட்டுமல்ல இந்த ஆராய்ச்சி நடந்த செர்ன் ஆராய்ச்சி கூடத்தில் ஆறடி உயரம் கொண்ட நமது நடராஜர் சிலை ஒன்று நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. அணுவுக்கும் சிவனுக்கும், அணு இயக்கத்திற்கும் நடராஜரின் கூத்துக்கும் உள்ள தொடர்பை, நுட்பத்தை மேல் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகளே ஏற்றுக் கொண்டார்கள். இது நம் மெய்ஞானிகளின், மெய் ஞானத்தின் சிறப்பல்லவா ?

வெளி நாட்டுக்காரன்தான் அதைக் கண்டு பிடித்தான், இதைக் கண்டு பிடித்தான் என்று சொல்வதை முதலில் நிறுத்துங்கள். மெய் ஞானமோ. விஞ்ஞானமோ இரண்டுக்கும் ஆதாரமாக விளங்குவது ஞானம்தான். மெய் ஞானம் என்பது உள் முகமாக அடையப்படுவது. விஞ்ஞானம் என்பது புறப் பொருட்களை ஆராய்வதால் பெறக் கூடியது. விஞ்ஞானத்திற்கு முடிவு இல்லை. இந்த உலகம் உள்ள அளவும் விஞ்ஞான முயற்சிகள் இருந்து கொண்டேதான் இருக்கும். சிற்றறிவால் பூரணத்துவத்தை அடைய முடியாது. மெய் ஞானம் என்பது அவ்வாறல்ல. அது பூரணத்துவத்தை ஏற்படுத்த வல்லது, நிலையானது. அது ஞானம் அடைந்தவரை முக்தி நிலைக்குக் கொண்டு போய் சேர்ப்பிக்கும். இதை உணர்ந்து கொள்ளுங்கள், அதன் வழி செல்லுங்கள்.


நண்பர் ஒருவர் வீட்டிற்குப் போயிருந்தேன். தற்செயலாக அவர் எழுதிய நோட்டு ஒன்றைப் படிக்க நேர்ந்தது.
பையூரிலே யிருந்து பாழூரிலே பிறந்து
மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறியேன்
மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறிந்தால்
பையூரும் மெய்யூரும் என் கண்ணம்மா பாழாய் முடியாதோ.!?!என்ற
அழுகணிச் சித்தரின் பாடலை நண்பர்

பையூரிலே யிருந்து பொய்யூரிலே பிறந்து
மெய்யூர் போவதற்கு வேதாந்த வீடறியேன்
மெய்யூர் போவதற்கு வேதாந்த வீடறிந்தால்
பையூரும், பொய்யூரும் என் கண்ணம்மா பாழாய் முடியாதோ !!??!!

என்று எழுதி வைத்திருந்தார். பாடலில் சில வார்த்தைகள் மாற்றப்பட்டுள்ளதே என்று கேட்டேன். என் நண்பரோ, இதுதான் சரியான அழுகணிச் சித்தர் பாடல் என்று அவருடைய குருநாதர் எழுதிக் கொடுத்ததாகச் சொன்னார். இது பற்றிய மேலும் சில விளக்கங்களையும் கண்ணுற்றேன். சுவாரஸ்யமாக இருந்தது. சரி உங்களோடு பகிர்ந்து கொள்வோம் என்று
தோன்றியது.
பையூர்(கருப்பை) --- பொய்யூர் (பூமி) --- மெய்யூர்(முக்தி)
----------------------------------------
ஒரு ஜான் இடம் _ 19 கோடியே 70 லட்சம் சதுரமைல் _ முடிவில்லாதது.
முழுவதும் இருள் _ பாதி இருள் பாதி வெளிச்சம் _ முழுவதும் ஒளி
முழு நித்திரை _ பாதி நித்திரை பாதி விழிப்பு _ முழு விழிப்பு
மனமும் உடலும் போகா நிலை _ மனம் போகும் உடல் போகாது _ மனமும் உடலும் போகும்
நீரில் இருத்தல் _ நிலத்தில் இருத்தல் _ ஆகாயவாசம்
இருந்து வளர்தல் --- நடந்து வளர்தல் -- ஒரே நிலை
ஒரே இடத்தில் ---- பல இடங்களில் --- நீக்கமற எங்கும்
2 ஜான் வளர்ச்சி -- 8 ஜான் வளர்ச்சி -- கணக்கு இல்லை
மலஜலஇரத்த வீடு _ மண் கல் உலோக வீடு _ பேரொளி வீடு
10 மாத வாழ்வு --- பல வருட வாழ்வு -- நித்திய வாழ்வு
இப்படி நித்தியமாக வாழ வேண்டிய மனித இனம் தனது இயற்கை விரோத செயல்களால்(பாவம்) மரணத்தை அடைந்து அநித்தியமான வாழ்வை அடைகிறது. நித்தியான வாழ்வை அடைவதற்கான வழியை அறிந்து விட்டால் பையூரும், பொய்யூரும் பாழாய்ப் போகும். அதாவது பரவெளியில் ஐக்கியமாகும்.

நன்றி : திரு.இராம் மனோகர் ஐயா 



மீள்பதிவாக :-


வாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (16) - https://tut-temple.blogspot.com/2019/01/16.html

வாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (15) - http://tut-temple.blogspot.com/2018/12/15.html
வாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (14) - http://tut-temple.blogspot.com/2018/09/14.html

வாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (13) - ஞான ஆசிரியர்கள் தின விழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/08/13.html

வாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (12) - http://tut-temple.blogspot.com/2018/07/12_7.html

 வாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (11) - http://tut-temple.blogspot.com/2018/06/11.html
வாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (10) -http://tut-temple.blogspot.com/2018/05/10.html
வாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (9) - http://tut-temple.blogspot.in/2018/04/9.html
வாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (8) - http://tut-temple.blogspot.in/2018/02/8.html
வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (7) - http://tut-temple.blogspot.in/2018/01/7_22.html
 வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (6) - http://tut-temple.blogspot.in/2017/12/6.html
வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (5) - http://tut-temple.blogspot.in/2017/11/5.html
வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (4) - https://tut-temple.blogspot.in/2017/10/4.html
வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (3) - https://tut-temple.blogspot.in/2017/09/3.html
வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (2) - http://tut-temple.blogspot.in/2017/08/2.html
வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (1) - http://tut-temple.blogspot.in/2017/07/1.html

No comments:

Post a Comment