Subscribe

BREAKING NEWS

04 January 2019

வாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (16)

அனைவருக்கும் வணக்கம்.

 ஒவ்வொரு மாதத்தையும் வாழ்வாங்கு வாழ தொடர் பதிவு இன்றி நாம் கடக்க இயலாது. வாழ்வாங்கு வாழ என்ற தொடர்பதிவு இன்று பதினாறாம்  பதிவை எட்டி உள்ளது. இந்த தொடர்பதிவை தொடர்ந்து வாசித்து அதனை கருத்தில் கொள்பவர்கள் கண்டிப்பாக ஆன்மிகத்தில் புதிய நிலை தொடுவார்கள் என்பது உறுதி. ஆன்மிகத்தில் மட்டுமல்ல, நடைமுறை வாழ்க்கையிலும் புது நிலை அடைவார்கள். நாமும் இங்கேதான் உளியால் செதுக்கப்பட்டு வருகின்றோம்.

தோழி - பெண்களுக்கு யோக சாதனங்கள் கை கூடாது. பக்தியும், நாம ஜெபமுமே அவர்களுக்குரிய மார்க்கம் என்று எனது நெருங்கிய தோழி சொல்கிறார். அது சரியான தகவலா ஐயா ?

இராம் மனோகர் - குண்டலினியையே பெண் சக்தியாகத்தான் உருவகப்படுத்தியிருக்கிறார்கள். வாலையை வணங்காமல் எவருமே குண்டலினியை கிளப்ப முடியாது என்பது சித்தர்கள் வாக்கு. வாலையும் பெண்(குமரி) சக்திதானே ! நம் உடலில் தலைப் பகுதியில் விளங்கும் ஆன்மா என்பது பரமாத்மாவாகிய ஆண் சக்தி என்றும், மூலாதாரத்தில் விளங்கும் உயிர் பெண் சக்தியாகிய குண்டலினி என்றும் சொல்வார்கள். இன்னொரு தகவல் என்ன தெரியுமா ? பரமாத்மா மட்டுமே ஆண் என்றும், மற்ற ஜீவராசிகள் அனைத்தும் பெண்தான் என்று வைணவம் சொல்கிறது. பெண்களுக்குத்தான் எளிதில் குண்டலினி கிளம்பும் என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. குண்டலினி யோகத்தைப் பற்றி ஔவையைப் போல விளக்கமாக யாரும் சொல்லவில்லை. ஏதோ ஒரு பக்திப் பாடல் என்று எண்ணிக் கொண்டு படிப்பவர்களுக்கு, அதைப் பற்றி எந்த அறிவும் கிடையாது. அதில் காணும் ஒவ்வொரு வரியும் குண்டலினி யோக இரகசியம்.


தனது குண்டலினி யோக அனுபவத்தை அப்படியே விளக்கியிருப்பார். ஐம்புலன்களோடு தொடர்பு கொள்கிற பொழுது மனம் விழிப்பு நிலையில் தடுமாற்றம் அடைகிறது. இந்த ஜாக்கிரதை அவஸ்தையிலும், கனவு எனப்படும் சொப்பன அவஸ்தையிலும்தான் தடுமாற்றமும், சலனமும் ஏற்படுகிறது. ஆழ்ந்த உறக்கத்தில் தடுமாற்றமும் இல்லை, சலனமுமில்லை. எனினும் அது சொல்லாட்சியற்ற ஒரு மறதி நிலைதான். எனவே ஆழ்ந்த உறக்கத்தால் ஜட உடலுக்குத்தான் பயனேற்படுமே தவிர, மனதிற்கு எந்தப் பலனுமில்லை. ஆனால், இந்த மூன்று நிலைகளையும் கடந்த ஒரு நிலை இருக்கிறது. அதுதான் ஆன்ம நிலை. அதாவது துரிய நிலை. மனம் பிராணனில் அடங்கி விட, சித்தம் அருள் உணர்வில் ஒன்றி நிற்கும் நிலை அது.
இந்த உணர்வில் மெய்ஞானம் துளிர்க்கும் பொழுது அது துரியாதீதம் எனப்படுகிறது. இந்த நிலையை கணபதி எனக்கு அருளினார் என்கிறார் ஔவை.

ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணை இனிது எனக்கருளிக்
கருவிகள் ஒடுங்கும் கருத்திணை அறிவித்து
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து

தலமொரு நான்கும் தந்தெனக்கு அருளி
மலமொரு மூன்றின மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி

ஆறுதாரத் தங்குச நிலையும்
பேறா நிறுத்தி பேச்சுரை அறுத்தே
இடை பிங்கலையின் எழுத்தறிவித்து
கடையில் சுழுமுனை கபாலமும் காட்டி

மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவி லுணர்த்திக்
குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

மூலாதாரத்தின் மூண்டெழு கனலை
நாவால் எழுப்பும் கருத்தறிவித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி

இடைச்சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற் சக்கரத்தின் உறுப்பையும் காட்டி
சண்முக தூலமுஞ் சதுர்முக சூட்சமும்
எண்முகமாக இனிதெனக்கு அருளிப்

புரியட்ட காயம் புலப்பட எனக்கு
தெரிஎட்டு நிலையும் தெரிசனப் படுத்தி
கருத்தினில் கபால வாயிற் காட்டி
இருத்தி முத்தி இனிதெனக்கு அருளி

என்னை அறிவித்து எனக்கு அருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயந்
தேக்கியே எந்தன் சிந்தை தெளிவித்து

இருள்வெளி இரண்டிற்கும் ஒன்று இடமென
அருள் தரும் ஆனந்தத்து அழுத்திஎன் செவியில்
எல்லையில்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள் வழிகாட்டிச்

சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அனுவிற் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி

வேடமு நீறும் விளங்க நிறுத்திக
கூடும் மெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்

தத்துவ நிலையை தந்து எனை யாண்ட
வித்தக வினாயக விரை கழல் சரணே !!!

என்று பாடுகிறார். ஐம்புலன்களைக் கட்டறுத்த பிறகு கணபதி என்வெல்லாம் அருளினார் ? சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்கிற ஐந்து பொறிகளையும் எப்படி அடக்குவது என்று கற்பித்தார். தத்துவங்களை உணர்த்தி, கருவிகளை ஒடுக்குவதற்கான நுட்பமான யுக்திகளை உணர்த்தினார். நல்லது, கெட்டது என்ற இரு வினைகளையும் நீக்கி, மாயையின் இருளைப் போக்கினார். சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு நிலைகளிலும் என்னை செலுத்தி, ஆணவ மலத்தை வேருடன் அறுத்தார். இந்த தேகத்தில் உள்ள ஒன்பது வாயில்களையும் அடைக்கும் உபாயத்தைக் காட்டினார்.

இடைகலை, பிங்கலை நாடிகளின் இயல்பையும், அதில் உலாவும் பிராண வாயுவை ஸுஷும்னை நாடியில் செலுத்தும் வழிகளையும், அந்தச் ஸுஷும்னை நாடியின் வழியாக குண்டலினியை மேல் நோக்கித் தலைக்குச்ஐ செலுத்தும் முறைகளையும், அதன் அனுபவங்களையும் விளக்கினார். அதை ஆறு ஆதாரங்களில் பொருந்துகின்ற நிலைகளிலும், பெறுதற்கரிய பேறாக நிலை நிறுத்தம் செய்தார். மூலாதாரத்தில் விளங்கும் குண்டலினி சக்தியை துயிலெழச் செய்து, அஜபை என்ற மந்திரத்தால் அதை மேல் நோக்கிச் செலுத்தும் வழியையும் கற்பித்தார். அமுதம் ஊற்றெடுக்கும் சகஸ்ராரப் பெருவெளியையும் காட்டினார்.



இதை விட என்ன ஆதாரம் வேண்டும் !!??!! ஔவைக்கு கணபதி கிடைத்தது போல, பெண்களுக்கும் தக்க குரு கிடைத்தால், அவர்களும் குண்டலினி யோகத்தில் வெற்றி பெற முடியும்.


நண்பர் - கலியுகத்தில் தியானம் செய்வதை விட நாம ஜெபம் செய்வதுதான் நல்லது எனறு சொல்கிறார்களே ...... அது உண்மையா ? நாம ஜபம் செய்யும் முறை பற்றி சற்று விளக்கவும்.

இராம் மனோகர் - முதலில் ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள், மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு விட்டு அது நல்லதா ? இது நல்லதா ? என்று குழம்பிக் கொண்டிருப்பது எப்பொழுதுமே நல்லதில்லை. ஆன்மீக வழியில் சென்ற நம் முன்னோர்கள் இத்தகைய நடைமுறைகளை எதற்காக வடிவமைத்து வைத்திருக்கிறார்கள் என்பதைப் பற்றி தனக்குத் தானே சிந்தித்துப் பார்க்க முதலில் பழகிக் கொள்ள வேண்டும். ஒரு வேளை நமது யூகம் தவறாகக் கூட போய் விடக் கூடும். பரவாயில்லை, வேறு யார் மூலமாவது சரியான விடை கிடைக்கும் பொழுது நம் கருத்தை நாம் மாற்றிக் கொள்ளலாம். ஆனால், யாரோ ஒருவர் சொல்கிறார் என்பதற்காக நம் நடைமுறைகளை, சாதனங்களை மாற்றிக் கொண்டேயிருக்கக் கூடாது. பிறகு நம்மால் எந்த வகையிலும் முன்னேற்றமடைய முடியாமல் போய் விடும்.

சரி, ஜபம் என்றால் என்ன ? ஏதேனும் ஒரு மந்திரத்தையோ, நாமத்தையோ மீண்டும் மீண்டும் உச்சரித்துக் கொண்டேயிருப்பது ஜபம். சரி, மந்திரம் என்றால் என்ன ? மனதை திடப்படுத்துவது மந்திரம். அதாவது சிதறி ஓடுகிற எண்ண அலைகளை தடுத்து, ஒரே நிலையில் நிறுத்துவதற்கு மந்திரங்கள் பயன்படுகின்றன. அப்படியானால் தியானம் செய்கிறவர் எதற்காக ஜபம் செய்ய வேண்டும் ? தியானம் செய்கிறவர் மனம்தான் ஏற்கனவே ஒரு நிலைப்பட்டு விட்டதே ! ஆக தியானத்திற்கு முன் ஒருவர் பழக வேண்டியதுதான் ஜபம் என்பது தெளிவாகிறது அல்லவா ? ஜபத்தினால் கிட்டும் பலன்தான் தியானம்.

சைவ ஆகமங்கள் ஜபத்திற்கும், ஜப மாலைக்கும் நிறைய விதி முறைகளை வகுத்து வைத்திருக்கின்றன. நம்மைப் போன்ற சாமானய பக்தர்களுக்கு அதில் சொல்லப்பட்டுள்ள பல வகையான ஆகம விதிமுறைகளைக் கடைபிடிப்பது இயலாத காரியம். அதே சமயம் ஒரு குருவை நாடினால், அவர் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து, உபதேசித்து அருளுவார். அதாவது தீட்சை தரும் பொழுது அதற்கான எல்லா வழிமுறைகளும் கற்றுவித்தருளுவார்கள். அவ்வாறு இயலாத பட்சத்தில் இஷ்ட தெய்வத்தையோ, குல தெய்வத்தையோ, ரிஷகளையோ, சித்தர்களையோ, மகான்களையோ மனதில் குருவாக வரித்துக் கொண்டு ஜபத்தைச் செய்யலாம்.
உடல் சுத்தம், மனசுத்தம், ஸ்தான சுத்தம் அவசியம். ஜபமாலை 108 மணிகளுடையதாகவோ, 54 அல்லது 27 மணிகளை உடையதாகவோ இருக்கலாம். ஜபமாலை இல்லாதவர்கள் விரலகளால் எண்ணுவார்கள். அதை விட விரலிறைகளால் எண்ணிக் கொள்வது 8 மடங்கு பலன்களைத் தரும் என்று சொல்லப்பட்டுள்ளது. மேலும்,

புத்திர தீபமணி மாலை 10 மடங்கு பலன் என்றும்,
சங்குமணி மாலை 100 மடங்கு பலன் என்றும்,
பவளமணி மாலை 1000 மடங்கு பலன் என்றும்,
ஸ்படிகமணி மாலை 10,000 மடங்கு பலன் என்றும்,
முத்துமணி மாலை 1,00,000 மடங்கு பலன் என்றும்,
தாமரைமணி மாலை 10,00,000 மடங்கு பலன் என்றும்,
பொன்மணி மாலை 10,000,000 மடங்கு பலன் என்றும், தருப்பைப் பவித்திர முடிச்சு மாலை 100,000,000 மடங்கு பலன் என்றும்,
ருத்திரக்ஷமணி மாலை இவையனைத்தையும் விட அநேக மடங்கு பலன் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

ஜபத்தின் பொழுது ருத்திராக்ஷத்தை தரிசித்து விட்டு ஜபம் செய்தவர்களுக்கு இலட்சம் மடங்கு பலன் கிட்டும், ருத்திராக்ஷத்தை ஸ்பரிசித்து விட்டு ஜபித்தால் கோடி மடங்கு பலன் கிட்டும். சரீரத்தில் தரித்தவர்கட்கோ ஆயிரங் கோடி மடங்கு பலன் உறுதி. கையில் கொண்டு ஜபித்தவர்கட்கோ அநந்த கோடி பலன் குவியும். இந்த ருத்திராக்ஷ மணி மாலையை எப்படி கோர்க்க வேண்டும், எப்படி ஜபிக்க வேண்டும் என்பதெல்லாம், அது இனியும் நிறைய இருக்கிறது. எனவே ருத்திராக்ஷ மாலையை அணிந்து கொண்டு ஜபம் செய்வதே நமக்கு போதுமானது.
இப்படிப்பட்ட ஜபமானது மூன்று வகைப்படும். அவை உரை, மந்தம், மானதம் என்பனவாம். உரை என்பது அருகில் இருப்பவர்கள் காதுகளில் விழுகின்ற அளவுக்கு மெதுவாக ஜபிப்பதாகும். மந்தம் என்பது தன் காதுக்கு மட்டும் கேட்கும் வண்ணம் நாநுனி தீண்ட ஜபிப்பதாகும். மானதம் என்பது ஒருமை பொருந்திய மனதோடு மனதினால் ஜபிப்பதாகும். உரை என்கிற முறையில் ஜபிப்பவர்கள் ஆட்காட்டி விரலிலும், மந்தம் என்கிற முறையில் ஜபிப்பவர்கள் நடு விரலிலும், மானதம் என்கிற முறையில் ஜபிப்பவர்கள் மோதிர விரலிலும் மனிகளை வைத்து, பெருவிரலால் தள்ளி ஜபிப்பார்கள். உரை என்கிற வாசகத்திற்கு நூறு மடங்கு பலமும், மந்தம் பதினாயிரம் மடங்கு பலமும், மானதம் கோடி மடங்கு பலமும் தரும்.

காமிய ஜபமாயின் மணிகளைக் கீழ் நோக்கித் தள்ளி ஜபிப்பர். முக்தி வேண்டி ஜபிப்பவர்கள் மணிகளை மேல் நோக்கித் தள்ளி ஜபிப்பர். ஜபிக்கும் பொழுது இடகலை ஓடுமாயின் போகமுண்டாகும். பிங்கலை ஓடுமாயின் முக்தி உண்டாகும். சுழுமுனை ஓடின் புத்தி, முக்தி இரண்டும் உண்டாகும். வீட்டிலிருந்து ஜபித்தால் ஜபிக்கின்ற அளவே எண்ணிக்கை. திருநந்தவனத்திலிருந்து ஜபித்தால் ஒன்று ஆயிரமாகும். மலை மேல் அமர்ந்து ஜபித்தால் ஒன்று பதினாயிரமாகும். நதிக் கரையில் அமர்ந்து ஜபித்தால் ஒன்று இலட்சமாகும். சிவாலயத்தில் அமர்ந்து ஜபித்தால் ஒன்று கோடியாகும். சிவ சந்நிதியிலிருந்து ஜபித்தால் ஒன்று பலகோடியாகும் என்றறிக.
மரப்பலகை, வஸ்திரம், கம்பளம், மான்தோல், புலித்தோல், தருப்பை போன்றவைகளை ஆசனமாகக் கொள்ள வேண்டும். சட்டை அணிந்து கொண்டோ, சிரத்தில் துண்டோ, வேஷ்டியோ கட்டிக் கொண்டோ, போர்த்திக் கொண்டோ, தலை முடியை விரித்துக் கொண்டோ, கௌபீனம் தரியாமலோ, விரலிலே பவித்திரம் தரியாமலோ, பேசிக் கொண்டோ, இருளில் இருந்து கொண்டோ, நாய், பன்றி, கழுதை, புலையர் போன்றவர்களை அருகில் வைத்துக் கொண்டோ ஜபம் செய்யலாகாது. ஜபம் செய்யும் பொழுது கோபம், களிப்பு, கொட்டாவி, தும்மல், நித்திரை, சோம்பல், வாதம் முதலியவை ஆகாது.

இன்னும் இன்னும் நிறைய இருக்கிறது. ஓரளவு முக்கியமானவற்றைத் தொகுத்து சொல்லியிருக்கிறேன். குருமுகமாக ஜபிக்க ஆரம்பிப்பது மிகவும் நல்லது. முடியாதவர்கள் இதைப் படித்து உடல் சுத்தம், மன சுத்தம், இருப்பிட சுத்தம் கொண்டு ஜபித்து பயனடையுங்கள். திருச்செந்தூர் சென்று மூலவருக்கு எதிரே உள்ள சுவரில் ஒரு துவாரம் இருக்கும், அதில் முருகப்பெருமானை குருவாக வரித்துக் கொண்டு, காதைக் கொடுத்து, அலைகடலின் ஓங்கார நாதத்தை மந்திர தீட்சையாகப் பெற்றுக் கொண்டும் ஜபிக்க ஆரம்பிக்கலாம். திருச்சிற்றம்பலம்.


நன்றி : திரு.இராம் மனோகர் ஐயா 


மீள்பதிவாக :-

வாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (15) - http://tut-temple.blogspot.com/2018/12/15.html


வாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (14) - http://tut-temple.blogspot.com/2018/09/14.html


வாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (13) - ஞான ஆசிரியர்கள் தின விழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/08/13.html

வாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (12) - http://tut-temple.blogspot.com/2018/07/12_7.html

 வாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (11) - http://tut-temple.blogspot.com/2018/06/11.html

வாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (10) -http://tut-temple.blogspot.com/2018/05/10.html

வாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (9) - http://tut-temple.blogspot.in/2018/04/9.html

வாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (8) - http://tut-temple.blogspot.in/2018/02/8.html

வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (7) - http://tut-temple.blogspot.in/2018/01/7_22.html

 வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (6) - http://tut-temple.blogspot.in/2017/12/6.html

வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (5) - http://tut-temple.blogspot.in/2017/11/5.html

வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (4) - https://tut-temple.blogspot.in/2017/10/4.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (3) - https://tut-temple.blogspot.in/2017/09/3.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (2) - http://tut-temple.blogspot.in/2017/08/2.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (1) - http://tut-temple.blogspot.in/2017/07/1.html

No comments:

Post a Comment