Subscribe

BREAKING NEWS

01 April 2019

நாட்டமிகு தண்டிக்கும் அடியேன்

அனைவருக்கும் வணக்கம். 

இன்றைய பதிவில் தண்டியடிகள் நாயனார்  பற்றி அறிய உள்ளோம். சென்ற ஆண்டு ஒவ்வொரு மாத அடியார்களின் பூசை என்று தொகுத்து அளித்தோம். சில பல காரணங்களால் தொடர முடியாமல் பொய் விட்டது. நம் மீது தவறு தான். இது போல் மீண்டும் நேரா வண்ணம் பார்த்துக் கொள்கின்றோம். ஆனால் இந்த ஆண்டு கூடுமானவரையில் அடியார்களின் பூசை தொகுத்து தந்து வருகின்றோம்.

இன்று பங்குனி சதயம். மேற்கத்திய கலாச்சாரத்தில் மூழ்கி இன்று முட்டாள்கள் தினம் கொண்டாடுவது மனம் வருந்த தக்கது. அடியார்களின் வாழ்வில் நிகழ்ந்த செய்திகளை படித்துப் பாருங்கள். பிரமித்துப் போவீர்கள். இப்படி எல்லாம் நடந்ததா? என்று நாமே ஆச்சர்யம் கொள்வோம்.இந்த புண்ணிய பூமியில் அடியார்களுக்கு ஈசன் அருளை வாரி வழங்கி இருக்கின்றார். ஆனால் இன்று நாம் இவற்றை பெரிய கேள்விக்குறியோடு பார்க்கின்றோம். இன்று ஈசனின் திருவிளையாடல் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. இது நம் ஊனக் கண்களுக்கு தெரிவதில்லை. கண் என்றதும் தான் இன்று சிந்திக்கும் அடியார்க்கும் கண்ணிற்கும் சம்பந்தம் உண்டு.

முதலில் சுருக்கமாக அறிவோம்.



தண்டியடிகள் திருவாரூரில் பிறந்த பெரும் பேறுடையவர். இவர் ‘இறைவன் திருவடிகளை மனத்துட் கொண்டு நோக்கும் அகநோக்கு ஒன்றே போதும்’ என்று கருத்தினை வலியுறுத்துவது போன்று, பிறக்கும்போதே பார்வையை இழந்திருந்தார். தண்டியடிகள் திருவாரூர்ப் பூங்கோயிலில் தேவாசிரியமண்டபத்தினுள் அடியார்களை வணங்கிவிட்டு, இறைவன் முன் வலம் வந்து, காதலாகி, நமச்சிவாய அன்புடையவராய்த் திருத்தொண்டுகள் பல செய்து வந்தார்.

ஆரூர்த் திருக்கோயிலின் மேற்புறத்திலுள்ள திருக்குளம் பக்கம் எங்கும் சமணர்களின் பாழிகள் பெருகிக் குளத்தின் இடம் வரவரக் குறைவடைந்தது. இதனை அறிந்த தண்டியடிகள், திருக்குளத்தை முன்போற் பெருகத்தோண்ட எண்ணினார். குளத்தில் இறங்கி மண்ணை வெட்டியெடுத்துக் கயிற்றைப் பற்றி ஏறிக் கரையிலே போடுவாராயினார். இவ்வாறு நாள்தோறும் தண்டியடிகள் குளத்தினைத் தோண்டக் கண்டு சமணர்கள் பொறாது அவரை அடைந்து ‘மண்ணைத்தோண்டினால் சிற்றுயிர்கள் இறந்துவிடும், வருத்தல் வேண்டாம்’ என்றனர். அதுகேட்ட தண்டியடிகள் ‘திருவில்லாதவர்களே, இந்தச் சிவதொண்டின் பெருமை உங்களுக்குத் தெரியவருமோ’ என்றனர். அமணர்கள் அவரை நோக்கி, ‘சிந்தித்து இந்த அறத்தினைக் கேளாத நீ செவியும் இழந்தனையோ’ என்று இகழ்ந்துரைத்தனர். அதுகேட்ட தண்டியடிகள் ‘மந்த உணர்வும், விழிக்குருடும், கேளாச்செவியும் உமக்கே உள்ளன. நான் சிவனுடைய திருவடிகளை அல்லலால் வேறு காணேன்; அதனை அறிவதற்கு நீர் யார்? உங்கள் கண்கள் குருடாகி உலகெலாம் காண யான் கண்பெற்றால் நீர் என்ன செய்வீர்? என்றார். அதுகேட்ட சமணர், ‘நீ உன் தெய்வத்தருளால் கண்பெற்றாயாகில் நாங்கள் இந்த ஊரில் இருக்கமாட்டோம்’ என்று சொல்லி அவர் கையிலுள்ள மண்வெட்டியைப் பறித்து நட்டதறிகளையும் பிடுங்கி எறிந்தனர்.

தண்டியடிகள் ஆரூர்பெருமான் முன் சென்று ‘ஐயனே! இன்று அமணர்களால் அவமதிக்கப்பட்டு வருந்தினேன். இவ்வருத்ததைத் தீர்தருள வேண்டும்;’ என முறையிட்டுத் தமது மடத்திற்குச் சென்றனர். இன்று பணிசெய்ய முடியவில்லையே என்ற வருத்தத்தால் அழுதுகொண்டு துயின்றார். அன்றிரவு ஆரூரிறைவர் அவரது கனவில் தோன்றி, ‘தண்டியடிகளே உன் மனக்கவலை ஒழிக! உன் கண்கள் காணவும், அமணர்கள் கண்கள் மறையுமாறும் செய்கின்றோம்’ என்று அருளிச் செய்து, சோழ மன்னர் கனவில் தோன்றி ‘தண்டி என்பவன் நமக்குக் குளந்தோண்ட அதற்குச் சமணர்கள் இடையூறு விளைவித்தனர். நீ அவனிடத்திலே சென்று அவன் கருத்தை முடிப்பாயாக’ என்று பணித்து மறைந்தருளினார்.


வேந்தன் விழித்தெழுந்து இறைவர் திருவருளை போற்றிப் பொழுது புலர்ந்ததும் தண்டியடிகளை அடைந்து, அவர் நிகழ்ந்தன சொல்லக்கேட்டு அமணர்க்கும், தண்டிக்கும் இடையே நிகழ்ந்த அவ்வழக்கைத் தீர்க்க எண்ணினான். அமணர்களை அழைத்து அவர்கள் கருத்தை அறிந்துகொண்டான். பின்னர் அமணர்களை அழைத்து தன்னுடன் வரத் தண்டியடிகளாருடன் குளக்கரையை அடைந்தான். வேந்தன் தண்டியடியாரை நோக்கி, ‘பெருகும் தவத்தீர்! நீர் சிவனருளால் கண் பெறுதலைக் காட்டுவீராக’ என்றான். அதுகேட்ட தண்டியடிகளார், ‘தான் சிவனுக்குப் பொருந்திய அடியேன் என்றால் இன்று என் கண்கள் ஒளி விளங்கப் பெற்று அமணர்கள் தங்கள் கண்களை இழப்பர். அதனால் ஆராய்ந்த மெய்பொருளும் சிவபதமே ஆகும்’ என்று சொல்லித் திருவைந்தெழுத்தை எடுத்தோதிக் குளத்தில் மூழ்கிக் கண்ணொளிபெற்று எழுந்தார். அங்கிருந்த அமணர்கள் கண் ஒளி இழந்து வழி தெரியாமல் தடுமாற்றமுற்றனர், ‘பழுதுசெய்து அமண் கெட்டது’ என்றுணர்ந்த மன்னன், தன் ஏவலாளரைப் பார்த்து, தண்டியடிகளோடு ஒட்டிக் கெட்ட சமணர்களைத் திருவாரூரினின்றும் அகன்று போம்படி துரத்துவீராக’ எனப்பணித்தான். கண் கெட்ட சமணர்கள் குழியில் விழுந்தவரும், புதரில் முட்டுப்பட்டவரும், உடுத்த பாய்களை இழப்பவரும், பிடித்த பீலியை இழப்பவருமாய் ஓட்டமெடுத்தனர். பின் திருக்குளத்தின் கரைகளைச் செம்மைபெறக் கட்டித் தண்டியடிகளை வணங்கிச் சென்றான். அகக்கண்ணேயன்றிப், புறக்கண்ணும் பெற்ற தண்டியடிகளார் இறைவனைப் போற்றித் திருவைந்தெழுத்தோதித் திருப்பணிகள் பல புரிந்து திருவடி அடைந்தார். 

இன்னும் சற்று விளக்கமாக நாம் விளங்கிக் கொள்வோம்.


திருவாரூரில் அவதரித்தவர் தண்டியடிகள். இவர் பிறப்பிலேயே கண் ஒளி இல்லாதவர். தீவிர சிவ பக்தரான இவர், அகக் கண்ணால் இறைவனைக் கண்டு வழிபட்டு வந்தார். தினமும் இறைவனின் ஆலயத்தை வலம் வந்து, ‘நமசிவய’ எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்து, சிவதொண்டு செய்து வாழ்ந்தார். அவர் வழிபட்டு வந்த சிவன் கோவிலின் திருக்குளம் சீர்கேடாய் இருந்தது. குளத்தைச் சுற்றி சைவ எதிர்ப்பாளர்கள் சிலர் இருந்ததே இதற்கு காரணம்.

இதுபற்றி அறிந்த தண்டியடிகள், மனம் வருந்தினார். குளத்தை சுத்தம் செய்ய முன் வந்தார். குளத்தின் நடுவில் ஒரு தறியும், குளக்கரையின் மேட்டில் ஒரு தறியும் நட்டு, இரு தறிகளையும் இணைக்கும்படி கயிறு ஒன்றை கட்டினார். கயிற்றைப் பிடித்தபடியே குளத்தில் இறங்கி மண்ணை கூடையில் எடுத்து வந்து கரை மேட்டில் கொட்டி, தூர்வாரும் பணியைச் செய்தார். அந்த நேரத்தில் அவர் நாவு, பஞ்சாட்சரத்தை உச்சரித்தபடி இருந்தது.

தண்டியடிகளின் இந்தத் தொண்டால், வெகு விரைவிலேயே குளத்தில் தண்ணீர் பெருகத் தொடங்கியது. இதைக் கண்டு பொறாமை கொண்ட சிலர், தண்டியடிகளிடம் வந்து பணியை நிறுத்தும்படி கூறினர்.

அவரோ, ‘இது ஈசனுக்குரிய திருப்பணி.. நிறுத்துவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை’ என்றார்.

ஆனால் அந்த சைவ எதிர்ப்பாளர்கள், ‘உனக்கு கண் இல்லை என்றால், காதும் கேட்கவில்லையா? நாங்கள் சொல்வதை கேட்டு இங்கிருந்து போய்விடு’ என்று மிரட்டினர்.

தண்டியடிகள், ‘நான் ஈசனின் திருவடியை மட்டுமே காண்கிறேன். அவனருளால் என் கண் ஒளிபெற்று, உங்கள் கண் ஒளி இழந்தால் என்ன செய்வீர்கள்?’ என்றார்.

 ‘அப்படி ஒன்று நடந்தால், நாங்கள் இந்த ஊரிலேயே இருக்க மாட்டோம்’ என்று கூறிய எதிராளர்கள், தண்டியடிகளை அங்கிருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.

மனமுடைந்த தண்டியடிகள், ஈசனின் சன்னிதி முன்பு அமர்ந்து தன்னுடைய நிலையைச் சொல்லி முறையிட்டார். அப்படியே உறங்கியும் போனார். அவரது கனவில் தோன்றிய ஈசன், ‘உன் மனக்கவலையை விடு. உன்னுடைய சபதம் நாளை நிறைவேறும்’ என்று அருளினார்.

சிவபெருமான் அத்தோடு நில்லாமல், அந்தப் பகுதியை ஆண்ட மன்னனின் கனவிலும் தோன்றி, ‘தண்டி என்னும் அன்பன் எமக்கு குளம் சீர்செய்யும் பணிபுரிந்தான். அவனுக்கு சிலர் இடர் செய்தார்கள். நீ போய் அதை சரி செய்’ என்றார்.

மன்னன் திடுக்கிட்டு எழுந்தான். இறைவனின் கருணையை எண்ணி மகிழ்ந்தார். அதிகாலையிலேயே தண்டியடிகள் இருக்கும் இடத்திற்குச் சென்றான். நடந்தது அனைத்தையும் கேட்டறிந்தான்.

எதிர்ப்பாளர்களை வரவழைத்து விசாரணை நடத்தினான். அவர்கள், ‘தண்டி கண் ஒளி பெற்றால், நாங்கள் இந்த ஊரை விட்டே போய் விடுகிறோம்’ என்றனர்.

அவர்களின் சபதத்தை ஏற்ற தண்டியடிகள், திருக்குளத்தை நோக்கிச் சென்றார். பின்னர் சிவனின் நாமத்தை உச்சரித்தப்படி திருக்குளத்தில் மூழ்கினார். அவர் எழுந்தபோது, அவரது கண்கள் ஒளி பெற்றிருந்தன. அதே நேரம் எதிர்ப்பாளர்களின் கண்கள் பார்வையை இழந்தன. தண்டியடிகளின் இறை பக்தியை எண்ணி அனைவரும் பரவசம் அடைந்தனர்.



எதிர்ப்பாளர்கள் அனைவரும் தங்கள் நிலையை எண்ணி வருந்தியபடி ஊரை விட்டே புறப்பட்டு போய்விட்டனர். அதன்பிறகு பல காலம் இறைவனுக்கு தொண்டு செய்து வந்த தண்டியடிகள் நாயனார், இறுதியில் சிவபதம் அடைந்தார்.

                                             நாட்டமிகு தண்டிக்கும் அடியேன் 

 மீண்டும் சந்திப்போம்.
மீள்பதிவாக:-


அறைகொண்டவேல் நம்பி முனையடுவார்க் கடியேன் - https://tut-temple.blogspot.com/2019/03/blog-post_16.html

கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன்  - https://tut-temple.blogspot.com/2019/03/blog-post_1.html

இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன் - https://tut-temple.blogspot.com/2019/02/blog-post_22.html
மார்ச் மாத அடியார்கள் பூசை - https://tut-temple.blogspot.com/2018/02/blog-post_28.html

மே மாத அடியார்கள் பூசை - https://tut-temple.blogspot.com/2018/05/blog-post_11.html

No comments:

Post a Comment