Subscribe

BREAKING NEWS

13 August 2017

வேல்மாறல் அகண்ட பாராயணம்

வேல்மாறல்!

வேல்மாறல் என்று இணைய வெளியில் கிடைத்த தொகுப்புகளில் இருந்த ஒரு முக்கியமான,அடிக்கோடிட்டு உணரவேண்டிய வார்த்தை - வினைகள் தீர்க்கும் வேல்மாறல் என்ற பதமே. நாம் செய்த தீவினையை அறுப்பதற்கு வேல்மாறல் என்ற சர்வ ரோக நிவாரணி உதவும் என்பது இங்கே நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.இது கவசமாய் இருந்து நம்மை காக்கும்.கலியுகத்தில் நமது பிணிகளுக்கு – அது உடல் பிணியானாலும் சரி, வினைப் பிணியானாலும் சரி – உற்ற மருந்தாக விளங்குவது ‘வேல்மாறல்’ என்னும் மஹாமந்த்ரமே ஆகும்.மேலும் இந்த பதிவை நீங்கள் படிக்கிறீர்கள் என்றாலே நீங்கள் கொடுத்து வைத்தவர் என்று தான் கொள்ளவேண்டும்.







 கலியுகத்தில் தர்மதேவதையின் நிலை!

தர்மமானதை ஒரு பசுவாக முதலில் உருவகப்படுத்திக்கொள்ளுங்கள்.
நான்கு யுகங்களில் முதல் யுகம், கிருத யுகம். இந்த யுகத்தில் மனிதர்கள் யாவரும் தத்தமது தர்மங்களை பூரணமாக கடைபிடிப்பவர்களாக இருப்பார்கள். தர்ம தேவதை திருப்தியோடு இருக்கும்.


அடுத்த யுகமான திரேதா யுகத்தில், மனிதர்களுக்கு தர்மத்திலுள்ள பற்று குறையும். அந்த யுகத்தில், பசு ரூபத்தில் உள்ள தர்ம தேவதை தனது ஒரு காலை இழந்து மற்ற மூன்று கால்களுடன் சிரமப்படும். அதாவது தர்மம் உலகில் முழுமையாக இல்லாது ஆங்காங்கு குறைந்துகாணப்படும்.
அடுத்த யுகம் துவாபர யுகம். இந்த யுகத்தில் தர்மம் மேலும் குறையும். மனிதர்களில் துர்குணம் கொண்டவர்கள் மிகுதியாக இருப்பார்கள். தர்மத்தின் கால்களில் இன்னொன்று குறையும். இரண்டு கால்களோடு ஒரு பசு எவ்வளவு சிரமப்படும் என்று யோசித்து பாருங்கள். அவ்வளவு சிரமம் துவாபர யுகத்தில் தர்மத்திற்கு ஏற்படும்.
தற்போது நடப்பது நான்காவது யுகமான கலியுகம். இதில் தர்மம் மூன்று கால்களை இழந்து ஒற்றைக்காலுடன் திண்டாடும். அதாவது உலகில் அதர்மம் முக்கால் பங்கு ஓங்கியிருக்கும். அதாவது ஆங்காங்கே தர்மம் திண்டாடிக்கொண்டிருக்கும். இப்போது கலியுகம் தொடங்கி 5100 வருடங்கள் ஆகின்றன. இப்போதே தர்மத்தின் திண்டாட்டத்தை உணர முடிகிறது. இன்னும் கலியுகத்தில் பாக்கி ஆண்டுகள் இருக்கின்றன.
இனி போகப் போக தர்மத்தின் உயிர் ஊசலாடிக்கொண்டிருப்பதை காண முடியும்.
கண்ணிருந்தும் குருடர்களாக மக்கள் வாழும் காலகட்டம் இது.


இப்படி தர்மத்தின் மீதும் ஆன்மீகத்தின் மீதும் தெய்வத்தின் மீதும் பற்றுக்கள் குறைந்துவிட்ட ஒரு காலகட்டத்தில் ‘வேல்மாறல்’ போன்ற ஒரு சர்வ ரோக வினை நிவாரணியை பற்றி உங்களுக்கு தெரியவருகிறது, அது குறித்த செய்திகள் பற்றி  அறிந்து கொள்ளும் வாய்ப்பு  கிடைக்கின்றது  என்றால், நீங்கள் பாக்கியசாலிகள் தானே?


 ‘வேல்மாறல்’ தொடரில் நாம் அடுத்த பகுதிக்கு செல்லும்  முன்னர் ‘வேல்மாறல்’ நிகழ்த்திய அற்புதம் குறித்து ஒரு இணையத்தில் படித்த அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறோம்.

 காப்பாற்றியது ‘வேல்மாறல்’ பாராயணம்!

பெரம்பூரில் சுமார் 10 ஆண்டுகள் வசித்த என் அண்ணன், தன் மகனின் பணி இடமாற்றத்தின் காரணமாக பெங்களூருவுக்கு குடி பெயர்ந்தார்.
அங்கு, பொங்கலுக்கு முதல் நாள் கடைத்தெருவுக்குச் சென்றபோது விபத்தில் சிக்கிய என் அண்ணன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ‘ஓரிரு நாட்கள் கழித்தே எதுவும் சொல்ல முடியும்!’ என்று மருத்துவர் கள் கை விரித்து விட… தகவல் அறிந்த நாங்கள் அதிர்ந்தோம். பத்து நாட்கள் சுய நினைவு இல்லாமல் கிடந்தார் அண்ணன். அவர் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை.
இந்த நிலையில் என்னைச் சந்திக்க வந்த சிநேகிதி ஒருவள், ‘வேல் மாறல்’ (அருண கிரியாரது வேல்வகுப்பை ஒரு பாராயண முறையாக அமைத்தார் வள்ளி மலை ஸ்ரீசச்சி தானந்த சுவாமிகள். அதுவே வேல்மாறல்) புத்தகத்தைக் கொடுத்து தொடர்ந்து படிக்கச் சொன்னாள். நானும் விடாமல் ‘வேல் மாறல்’ பாராயணம் செய்து வந்தேன்.


தைக் கிருத்திகை அன்று கோயிலுக்குச் சென்று, அர்ச்சனை செய்து அண்ணன் குணமாக வேண்டி முருகனை பிரார்த்தித்தேன். அப்போது, அவர் மேல் சாத்தப்பட்டிருந்த மாலையில் இருந்து ரோஜா ஒன்று கீழே விழுந்தது; மகிழ்ந்தேன். வீடு திரும்பும்போது, கையில் வேல் & உடம்பு முழுவதும் திருநீறுடன் சிறுவன் ஒருவன் எதிர்ப்பட்டான். எனக்கு மெய்சிலிர்த்தது. விசாரித்தால் பள்ளியில் மாறு வேடப் போட்டிக்குச் செல்வதாகக் கூறினான் அவன். எது எப்படியோ… எனக்கு சாட்சாத் அந்த முருகப் பெருமானையே நேரில் தரிசித்தது போல் இருந்தது! கண்ணீர் மல்க, ‘முருகா!’ என கை கூப்பி வணங்கி விட்டு, வீடு வந்து சேர்ந்தேன். அன்று மாலையே, ‘அண்ணனின் உடல் நிலையில் முன்னேற்றம்; இனி கவலை இல்லை!’ என்று மருத்துவர்கள் சொன்னதாக தகவல் வந்தது. எல்லாம் வேல்மாறல் பாராயணம் செய்ததன் பலன்!


 (- பி. ராஜலெக்ஷ்மி, சென்னை-61 | www.sirukathaigal.com)

என்ன அன்பர்களே. மெய் சிலிர்க்கின்றதா? வாருங்கள். வேலாயுதம் பற்றி சிறிது காண்போம்.


வேல் வினைகளை வேரறுக்க வல்லது. ‘வேலுண்டு வினையில்லை” என்பது அருளாளர் வாக்கு. ‘அச்சம் அகற்றும் அயில் வேல்’ எனச் சிறப்பிக்கிறார் குமரகுருபரர். ‘வினை ஓட விடும் கதிர்வேல் மறவேன்’ என்று கந்தரநுபூதியும், ‘வினை எறியும் வேல்’ என்று திருப்புகழும் போற்றுகின்றன.

முருகப் பெருமானுக்கே உரிய ஞானசக்தி வேலாயுதம். வேல் என்ற சொல் 'வெல்’ என்ற முதல் நிலை நீண்ட தொழிற்பெயர். வெல்லும் தன்மையுடையது வேல். தன்னை ஏந்தியவருக்கு நிச்சயம் வெற்றியைத் தருவதால், அதற்கு 'வெற்றிவேல்’ என்று பெயர். எல்லாவற்றையும் வெல்வது வேலாயுதம். இந்த வேல் வெளிப்பகையை மட்டுமல்ல, உட்பகையையும் அழிக்கும்.
பாம்பன் சுவாமிகள் இதனை 'படை அரசு’ என்று போற்றுவார். 'படைநாயகம்’ என்றும் பெயருண்டு. வேலைக் குறிக்கும் சொற்கள் பல உள்ளன. அவை: அயில், ஆரணம், உடம்பிடி, எஃகம், எஃகு, குந்தம், சக்தி, ஞாங்கர், மதங்கு, வாகை, விட்டேறு.


முருக வழிபாட்டுக்கும் முந்தையது வேல் வழிபாடு என்பார்கள். வேலுக்கென்றே தனிக்கோயில் அமைத்து வழிபட்டிருக்கிறார்கள் நம் முன்னோர். அதற்கு 'வேற்கோட்டம்’ என்று பெயர். 'கோடு’ என்றால் மலை (கிளை என்றும் பொருள் உண்டு. பல கிளைகளால் அமைக்கப்பட்ட வழிபாட்டிடம் என்றும் கூறுவர்). அக்காலத்தில் மலைப் பகுதியில் அமைந்த கோயிலை கோட்டம் என்று அழைத்தனர்.

ஆக, வேலாயுதத்தைப் போற்றி வணங்க நம் வினைகள் யாவும் நீங்கும். ‘வேலின்றி கந்தனைப் பூஜை செய்தால் பயன் வீண்படுமே… (வேல் அலங்காரம்)’, ‘வேல் வடிவாம் தெய்வமே’, ‘வேல் தெய்வமே’ ‘அயில் தெய்வமே’ என்றெல்லாம் குறிப்பிடுவதால் வேலனே வேலாகும்; வேலே வேலனாவான் என்பது புலனாகும். வேல் வழிபாடே திருவருளை எளிதில் பெறச் செய்யும்.

வேலுக்கு உகந்த வழிபாடுகளில் ஒன்று வேல்மாறல் பாராயணம்.




அருணகிரிநாத சுவாமிகள் அருளிச் செய்துள்ள திருவகுப்புகளுள் ‘மணி, மந்திரம், ஔஷதம்’ என்று பெரியோர்கள் குறிப்பிடும் மூன்று வகுப்புகள் முதன்மையானவை. அவை: சீர்பாத வகுப்பு  – மணி வகுப்பு 2. தேவேந்திர சங்க வகுப்பு -  மந்திர வகுப்பு, 3. வேல் வகுப்பு -  ஔஷத (மருந்து) வகுப்பு.
இவற்றுள் உடல் நோய், மன நோய், உயிர் நோய் ஆகிய மூவகைப் பிணிகளுக்கும் உற்ற மருந்தாகி, அவற்றை உடனே தீர்த்தருளவல்ல ஆற்றல் படைத்தது ‘வேல் வகுப்பு’ என்று வள்ளி மலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள் குறிப்பிடுவார்.


வேல் வகுப்பின் பதினாறு அடிகளை மேலும் கீழுமாகவும், முன்னும் பின்னுமாகவும் ஏறி இறங்கி வருவது போல் மாறி மாறி வர அமைத்து, அதனை நான்கு மடங்காக (16×4 = 64) அறுபத்து நான்கு அடிகளாக அமைய வைத்து, அந்த பாராயண முறையை ‘வேல்மாறல்’ என்று தொகுத்து அளித்தவர் வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள் ஆவார்.







இந்த பாராயண முறை அமைப்பை அறியுமுன் வேல்வகுப்பு பாடலைக் காண்பது அவசியம்.

வேல் வகுப்பு


1. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை கருத்தகுழல் சிவத்தஇதழ்
    மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும்

2. பனைக்கைமுக படக்கரட மதத்தவள கஜக்கடவுள் பதத்(து) இடு(ம்)நி
    களத்துமுளை தெறிக்கவரம் ஆகும்

3. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு கவிப்புலவன் இசைக்(கு)உருகி
    வரைக்குகையை இடித்துவழி காணும்

4. பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல் ஒழித்தவுணர் உரத்துதிர நிணத்தசைகள்   
    புசிக்கஅருள் நேரும்

5. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக  பதிக்கும் விதிதனக்கும்அரி தனக்கும்நரர்
    தமக்கும்உறும்   இடுக்கண் வினை சாடும்

6. சுடர்ப்பரிதி ஒளிப்பநில ஒழுக்குமதி ஒளிப்ப அலை அடக்குதழல் 
    ஒளிப்பஒளிர்  ஒளிப்பிரபை வீசும்

7. துதிக்கும்அடி யவர்க்கொருவர் கெடுக்கஇடர்   நினைக்கின்அவர் 
    குலத்தைமுதல் அறக்களையும் எனக்கொர்துணை ஆகும்

8. சொலற்கரிய திருப்புகழை உரைத்தவரைஅடுத்தபகை அறுத்தெறிய 
    உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும்

9. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி படைத்தவிறல் 
    படைத்தஇறை  கழற்குநிகர் ஆகும்

10. தலத்தில்உள கணத்தொகுதி  களிப்பின்உண வழைப்பதென மலர்க்கமல 
      கரத்தின்முனை  விதிர்க்கவளை வாகும்

11. தனித்துவழி நடக்கும்என திடத்தும்ஒரு  வலத்தும்இரு புறத்தும்அரு 
      கடுத்திரவு  பகற்றுணைய தாகும்

12. சலத்துவரும் அரக்கர்உடல்  கொழுத்துவளர் பெருத்தகுடர் 
      சிவத்ததொடை எனச்சிகையில்  விருப்பமொடு சூடும்

13.திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்துடையும் உடைப்(பு)
    அடைய அடைத்துதிரம் நிறைத்துவிளை யாடும்

14. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்த சிறை முளைத்ததென 
     முகட்டின்இடை பறக்கஅற விசைத்ததிர ஓடும்

15. சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில் வெகு குறைத்தலைகள்
      சிரித்தெயிறு கடித்துவிழி  விழித்தலற மோதும்

16. திருத்தணியில் உதித்தருளும்  ஒருத்தன்மலை   விருத்தன் என 
      துளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன் வேலே

வேல் வகுப்பு பொழிப்புரை:

1. ஆழ்ந்த அகன்ற நுண்ணியதாய் இருக்கும் வேல், கூரியதாய் நீண்டு ஒளிரும் வள்ளியம்மையின் கண்ணுக்கு ஒப்பாகும். (வள்ளிப் பிராட்டியாரின் கடைக்கண் நோக்கால் விளையும் பயன்களை வேல் அருளும் என்பது குறிப்பாகும்.)

2. பனை மரம் போல் நீண்ட துதிக்கை, சித்திரங்களோடு விளங்கும் அலங்காரத் துணியை அணிந்துள்ள முகம், கன்னங்களிலிருந்து ஒழுகும் மதநீர்ப் பெருக்கம் ஆகியவற்றோடு, வெண்மை நிறம் வாய்ந்த யானையாகத் திகழும் ஐராவதத்தின் அதிபதியான இந்திரனது கால்களில் பூட்டியிருந்த விலங்கில்… அதனைப் பூட்டுவதற்கு ஆதாரமாக இருந்த ஆணியைத் தெறிக்கச்செய்யும் வேல் ஆற்றல் மிக்க அரமாகும்.

3. சிறந்த ஞானத்துடன் பழைமை வாய்ந்த மதுரைத் தமிழ்ச் சங்கப் பலகையில் விளங்கிய ஒப்பற்ற நக்கீரர் இசைத்த திருமுருகாற்றுப்படைக்கு உருகி, அவர் அடைபட்டிருந்த குகையை இடித்துத் தள்ளி அவரை வெளியேற்றும்.

4. பசியினால் துன்பமுற்றுப் பேய்கள் அங்கங்களை விசைத்தும், விதிர்த்தும், முடக்கியும், உதறியும் புலம்பி உணவு வேண்டி அழுவதைத் தவிர்த்து, அசுரர்களின் வளமிக்க ரத்தத்தையும் சதைகளையும் அவை உண்டு களிக்குமாறு அருளும்.

5. தேவர்கள், முனிவர்கள், இந்திரன், பிரமன், திருமால், உலக மக்கள் ஆகியவர்களுக்கு நேரிடும் துன்பத்தையும், அதற்கு மூலகாரணமான பூர்வகர்ம வினைகளையும் தாக்கி அழிக்கும்.

6. ஒளிவிடும் சூரியன், குளிர்ந்த கிரணங்களை வீசும் சந்திரன், கடல் பொங்கிக் கரைகடந்து சென்று உலகத்தை அழிக்காதபடி அதனை அடக்கிக் கொண்டி ருக்கும் வடவாமுகாக்கினி ஆகியவற்றை, ‘வேலின் ஒளிப் பிரபாவத்தின் முன் நம் ஒளி எம்மாத்திரம்’ என்று வெட்கப்பட்டு நாணி ஒளியச் செய்யும் வண்ணம், தனது பேரொளிச் சோதியை எங்கும் பிரகாசிக்கச் செய்யும்.

7. தன்னைப் புகழ்ந்து போற்றும் அடியார்களை யாராவது கெடுக்க நினைத்து அவர்களுக்குத் துன்பம் இழைக்க மனதில் நினைத்த மாத்திரத்திலேயே, அந்த பகைவரது குலத்தையே வேருடன் அழித்துவிடும். எனக்கு ஒப்பற்ற பெருந் துணையாகி அருள்பாலிக்கும் (ஆகவே, வேலை வணங்குவதையே வேலையாகக் கொண்டவர்களுக்கு மற்றவர்களால் எந்த விதத்திலும் துன்பம் அணுகாது.)

8. சொற்களால் விவரிக்க முடியாத பெருமையுடைய முருகனது திருவடியைப் புகழ்ந்து போற்றும்
திருப்புகழ்ப் பாக்களை ஓதுபவர்களிடம் நிகழ்கின்ற பகையை அழிக்க, கோபித்து ஆக்ரமித்துக் கிளம்பும்.

9. அலங்கார ஆரவாரத்துடன் அடியார்களின் உயிரைக் கவர யமன் வந்தால், எருக்கம் பூ மாலையையும் சந்திரனையும் சூடிய முடியுடைய சிவபெருமானின் பேராற்றல் மிக்க திருவடிக்கும் ஒப்பாக நின்று உதவும்.

10. உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் பெருமகிழ்ச்சி பெறும் அளவுக்கு உணவளிக்க நேரிடும்போது, மலர்ந்த தாமரை மலருக்கு ஒப்பான முருகன் திருக்கரத்தில் இருந்தபடியே… அவர் அதன் நுனியை லேசாக அசைத்தவுடன், உணவுப் பொருள்களை விளைத்துச் சேகரித்து வளைத்துக்கொண்டு சேர்த்துவிடும். (வேல் பசியைப் போக்கும்; வறுமையின்றி வாழ வைக்கும்; நமது கருத்தறிந்து முடிக்கும்; நாம் நினைப்பதையெல்லாம் நிறைவேற்றும்)

11. துணையின்றித் தனியாகச் செல்லும் எனது வலது இடது பக்கங்களிலும், முன் – பின் பக்கங்களிலும் உடன் நின்று இரவு பகல் எப்போதும் துணையாக நின்றருளும்.

12. சினந்து வந்த அசுரர்களின் உடம்பில் கொழுத்துத் தடித்திருந்த பெரிய குடல்களைச் சிவந்த பூமாலை போல் தனது முடியில் ஆவலோடு சூடிக்கொள்ளும். (வினைகளையும் அடியோடு அழிப்பது வேல் ஒன்றே)

13. அலைகளை வீசுகின்ற கடலில் உடைப்பு உண்டு பண்ணியும், அதில் நிறைந்துள்ள நீரையெல்லாம் ஒரு நொடியில் குடித்தும், அந்த உடைப்பு முழுவதையும் அடைத்து அங்கு அசுரர்களின் ரத்தத்தை நிரப்பியும் விளையாடும்.

14. குலிசாயுதத்துடன் விளங்கும் இந்திரன், முன்னொரு காலத்தில் திசைகளில் உள்ள மலைகளில் இருந்து அறுத்துத் தள்ளிய இறக்கைகள் மீண்டும் அம்மலைகளிடம் முளைத்து விட்டனவோ என்று ஐயுறும்படி, அண்டத்தின் உச்சியிலே அளவிலா வேகத்துடன் எல்லா உலகங்களும் அதிர்ச்சியுற்று நடுங்கும்படி விரைந்து செல்லும். (வேலின் அளவிலா ஆற்றல் அநேக அதிசயம் வாய்ந்தது.)

15. சினம் கொண்டு அசுரர்கள் எதிர்த்த போர்க் களத்தில் அளவற்ற அறுப்பட்ட தலைகள் சிரிக்கும்படியாகவும், கண்களை உருட்டி விழித்துப் பார்க்கும்படியாகவும், வாய்கள் அலறும்படியாகவும், அசுரர்களோடு சாடும்.

16. திருத்தணிகையில் உயிர்களின் அக இருள் அகல ஞான சூரியனாகத் தோன்றி அருளும் ஒப்பற்றவனும், குறிஞ்சிக் கிழவனும், உயிருக்குயிராய் எனது உள்ளக் குகையில் உறைபவனும், கருணை உருக்கொண்டு ஆதிக்கு ஆதியாய் நிற்கும் முதல்வனுமான… திரோதான சக்தியாகிய மயிலைச் செலுத்தி நடத்தும் குகப்பெருமானின், ஞானமே உருக்கொண்ட திருவருட் சக்தியாகிய வேலே!




வேல்மாறல் பாராயணம்

பொழிப்புரையுடன் வேல் வகுப்பு பாடல் தொகுப்பை படித்து  மகிழ்ந்தீர்களா?!  இனி, வேல்மாறல் பாராயண முறையை அறிவோம்.

அருணகிரியார் அருளிய ‘வேல் வகுப்பு’ பாடல்களின் பதினாறு அடிகளை மேலும் கீழும் ஆகவும், முன்னும் பின்னும் ஆகவும் ஏறி இறங்கி வருவது போல் மாறி மாறி வர அமைத்து, 64 அடிகள் கொண்ட வேல்மாறலாக தொகுத்து அருளியிருக்கிறார் வள்ளிமலை சச்சிதானந்த ஸ்வாமிகள்.

16வது அடியாகிய ‘திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை விருத்தன் என (து) உள்ளத்தில் உறை கருத்தன் மயில் நடத்து குகன் வேலே’ என்ற வேல் மஹா மந்திர அடி முதலில் 12 முறையும், நிறைவில் 12 முறையும், நடுவில் 64 முறையும் ஆக மொத்தம் 88 முறை ஓதப்பெறுகிறது.
இந்த 16வது அடி எழுவாய் ஆக அமைய, முதல் பதினைந்து அடிகள் யாவும் பயனிலையாக வருமாறு 16ம் அடியை ஒவ்வொரு அடியிலும் சேர்த்துப் படித்தால் அந்த வரி முழுமை பெறுகிறது. இதுதான் இந்த வேல் வகுப்பின் அபூர்வ அமைப்பாகும்.

வேல்மாறல் பாராயணம் பற்றிய கோப்புகள் இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இணைப்பின் மூலம் உபயோகம் செய்யவும்.(பதிவின் நீளம் கருதியே )

வேல்மாறல் பாராயணம் - doc வடிவில்

வேல்மாறல் பாராயணம் - PDF வடிவில்

வேல்மாறல் பாராயணம் செய்வதற்கு உதவியாக youtube வீடியோ இணைத்துளோம். இந்த காணொளியில் பாராயணம் செய்வதற்கு வசதியாக  பாடல் வரிகளும் இணைத்துள்ளார்.





வினைகள் தீர்க்கும் வேல்மாறல்!

ஞ்சாட்சரம் (திருவைந்தெழுத்து), சடாட்சரம் (திரு ஆறெழுத்து) போன்ற மந்திர எழுத்துக்களை ஐங்கோண, அறுகோணச் சக்கரங்கள் கட்டங்களுக்குள் அமைய அடைத்து, அந்த யந்திரங்களைப் பூஜை செய்வதால் உயர்ந்த பலன்கள் கிடைக்கும் என்பார்கள் பெரியோர்கள். அந்த முறையில் இந்த ‘வேல்மாறல்’ அமைப்பையும் வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் உருவாக்கியுள்ளார்.

வேல்மாறல் பாராயணம் மன ஒருமைப்பாடு என்ற ஏகாக்ர சித்தத்தை உண்டாக்கும் வல்லமை உடையது. பொதுவாக மன ஒருமைப்பாட்டுடன் மந்திரங்களை உச்சரித்து வழிபடும்போது உண்டாகிற அதிர்வு அலைகளை வேல் மாறல் பாராயணத்தில் உணர முடியும். பயத்தினாலும், மனச் சிதைவாலும் உண்டாகும் ஏவல், வைப்பு, பில்லி, சூனியம், பேய், பிசாசு பிடித்தல் போன்ற அவஸ்தை துக்கங்களிலிருந்து விடுவிக்க வேல்மாறல் பாராயணம் கைகண்ட மருந்தாகும்.



வேல்மாறலை பக்தி, சிரத்தை, மன ஒருமைப்பாட்டுடன் குறைந்தது ஒரு மண்டல காலம் அதாவது 48 நாட்கள் விடாமல் தொடர்ந்து தினமும் காலையோ அல்லது மாலையோ ஒரு முறையாவது பாராயணம் செய்வது மிகவும் அவசியம். (வைத்தியர்கள் நோய்க்கு உரிய மருந்தை ஒரு மண்டலம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடுவார்கள் அல்லவா? அம்முறையிலே வேல்மாறல் பாராயணத்தையும் தொடர்ந்து செய்ய வேண்டும்) இதனை ஆண், பெண் மற்றும் சாதிமத பேதம் இல்லாமல் யாவரும் பாராயணம் செய்யலாம். நோய், வாழ்க்கைச் சிக்கல் முதலான பிரச்னைகள் இல்லாதவர்கள்கூட இதனைப் பாராயணம் செய்வதால் மேலும் மன உறுதி மன மகிழ்ச்சி, மன நிறைவு உண்டாகும் என்பதில் ஐயமில்லை.


வேல்மாறல் அகண்ட பாராயணம் - அறிவிப்பு 

இத்தகு  வாய்ந்த வேல்மாறல் பாராயணம் - அகண்ட பாராயணமாக வருகின்ற ஆடி - கிருத்திகை (15/08/2017) செவ்வாய்க் கிழமை அன்று நடைபெறுகின்றது. இந்நிகழ்வு அன்று காலை 6 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் காலை 6 மணி வரை வேல்மாறல் பாராயணம் செய்வர். முருகன் அருள் பெறவும், இதுவரை நாம் செய்துள்ள வினைகள் தீர்ந்து,வேலாயுதம் தரிசனம் பெற,இந்நிகழ்வில் கண்டிப்பாக பங்குபெறும்படி கேட்டுக் கொள்கின்றோம்.






பத்திரிக்கை உதவி - திரு.ராஜ்குமார் 

எப்படி செல்வது ?

பேருந்தில் வருவதாக இருந்தால், நங்கநல்லூர் மாடர்ன் ஸ்கூல் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, சுமார் 10 நிமிட நடையில் ஸ்ரீ பொங்கி மடாலயம் அடையலாம். நங்கநல்லூர் மாடர்ன் ஸ்கூல் பேருந்து நிறுத்தம், ஆஞ்சநேயர் கோவில் தாண்டி தான் வரும்.தங்களின் குறிப்புக்காக வரைபடம் இணைத்துள்ளோம்.








முந்தைய பதிவுகளுக்கு :-

வெற்றியைத் தரும் வேலவா போற்றிhttp://tut-temple.blogspot.in/2017/08/blog-post_6.html

சரணம் சரணம் சண்முகா சரணம்! - கூட்டுப் பிரார்த்தனை நிகழ்வின் துளிகள்http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_12.html

64 வது நாயன்மார்http://tut-temple.blogspot.in/2017/06/64.html

சரணம் சரணம் சண்முகா சரணம்! - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்புhttp://tut-temple.blogspot.in/2017/06/blog-post_4.html

No comments:

Post a Comment