Subscribe

BREAKING NEWS

03 December 2018

வாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (15)

அனைவருக்கும் வணக்கம்.

ஒவ்வொரு மாதத்தையும் வாழ்வாங்கு வாழ தொடர் பதிவு இன்றி நாம் கடக்க இயலாது என்று நாம் சொல்லி இருக்கின்றோம். ஆனால் கடந்த இரு மாதங்களில் நாம் தவறி விட்டோம். இனி இது போல் நேரா வண்ணம் பார்த்துக் கொள்கின்றோம்.வாழ்வாங்கு வாழ என்ற தொடர்பதிவு இன்று பதினைந்தாம் பதிவை எட்டி உள்ளது. இந்த தொடர்பதிவை தொடர்ந்து வாசித்து அதனை கருத்தில் கொள்பவர்கள் கண்டிப்பாக ஆன்மிகத்தில் புதிய நிலை தொடுவார்கள் என்பது உறுதி. ஆன்மிகத்தில் மட்டுமல்ல, நடைமுறை வாழ்க்கையிலும் புது நிலை அடைவார்கள். நாமும் இங்கேதான் உளியால் செதுக்கப்பட்டு வருகின்றோம்.


கேள்வி - ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை புறத்தே தேடித் தேடி வாழ்நாட்களை வீணாக்கி மாண்டு போன மாந்தர்கள் கோடி என்கிறார் சித்தர் சிவவாக்கியர். நீங்களோ புறவழிபாடாகிய பக்தியைக் கொண்டும் முக்தியை அடையலாம் என்று சொல்கிறீர்கள். யோக மார்க்கத்தில் சென்று ஒருவன் வாசியைப் பிடித்து, குண்டலினியை மேலேற்றி, கண்டமாகிய விசுத்தியை கடந்து செல்லும் பொழுதுதான் அவன்தன் வினைகளை வேரறுக்க முடியும். பக்தி மார்க்கத்தில் இது எவ்வாறு சாத்தியமாகும் ?



இராம் மனோகர் - மார்க்கங்களைப் பற்றிய சரியான புரிதலின்மையால் நீங்கள் இவ்வாறு கருதுகிறீர்கள். சரியை, கிரியை, யோகம், ஞானம் என்கிற நிலைகள் அனைத்துமே ஜீவனின் மனோபரிபாகத்திற்குத் தக்கவாறு பிறவித் தொடராகவும் அமைவதுண்டு. தான் கண்ட மார்க்கம் மட்டுமே சிறந்தது என்கிற தீவிர மார்க்கப் பற்று உடையவர்கள்தான் பிறவித் தொடராக அடுத்த நிலைகளை அடைகிறார்கள். ஆனால், இந்த மார்க்கங்கள் யாவுமே முக்தி நிலை அடைவதற்கான படித்தரங்கள்தான் என்பதை ஒருவன் ஐயம் திரிபற உணர்ந்து விட்டால், அவன் மார்க்கங்களை ஒரு உபாயமாக மட்டுமே கருதுவான். தன் நிலை உயரும் பொழுது அடுத்த நிலையை கண்டு, அதில் முனைப்பாகச் செயல்படுவான்.

சித்தர்கள், ரிஷிகள் அனைவருமே பக்திமான்கள்தான். அவர்கள் ஒன்றும் கடவுள் மறுப்பாளர்களல்ல. சித்தர் சிவவாக்கியர் சிவலிங்கம் பற்றியும், ஐந்தெழுத்து மந்திரம் பற்றியும், ராம நாமம் பற்றியும் விரிவாகப் பேசுகிறார். வடிவம், பெயர், செயல்பாடுகள் வேண்டுமானால் வேறாக இருக்கிறதே தவிர அவர்களுக்கு பக்தியில்லை என்று சொல்வது ஏற்புடையதல்ல. உருவங்கள் என்பது ஒரு புற அடையாளங்கள் மட்டுமே. மனதிற்கு அவை ஒரு பற்றுகோல் அவ்வளவுதான். பிறவித் தொடராக அமைந்த அந்தப் பிறவியில் அவர்களுக்கு யோகமும், ஞானமும் அமைந்திருப்பதால், அவர்கள் அவற்றைச் சிலாகித்துப் பேசுகிறார்கள். மேலும் அவர்கள் யந்திரம், தந்திரம், மந்திரம், ஔசதம் என்கிற யுக்திகளைக் கொண்டுதான் சித்தி நிலையை அடைந்தார்கள். கவனித்துப் பார்த்தால் இவையனைத்திலும் புறச் செயல்களில் நேர்த்தியும், ஒழுங்கும், முனைப்பும், ஆற்றலும், அறிவும் அமைந்திருப்பதைக் காணலாம். பக்தியின் நிலையும் இதுதான்.

சித்தர்கள் சொல்வது என்னவென்றால் மார்க்கப் பற்று கொண்டு உழலாதே, அடுத்த நிலைக்கு உயர்ந்து செல் என்பதுதான். அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது முனைப்பாக பக்தி யோகத்தைக் கடை பிடித்திடும் ஒருவர் இந்த நாலு படித்தரங்களையும் எளிதில் கடந்திடுவார் என்பது நிதர்சனம். பக்தி யோகம் என்றாலே அது இந்த நாலு நிலைகளையும் உள்ளடக்கியதுதான். பக்தியில் சரியை இருக்கிறது, கிரியை இருக்கிறது, யோகம் இருக்கிறது, ஞானமும் எட்டப்படுகிறது. மிகச் சிறந்த பக்திமான்களின் வாழ்க்கை வரலாற்றை படிக்கும் பொழுது இந்த உண்மை நமக்குப் புலப்படும். இறைவன் இருக்கிறான் என்ற நம்பிக்கையிலும், அவன் மீது கொண்ட அன்பிலும் உறுதியாக நின்று, செயல்பட்டு, சித்த சுத்தியடைவது பக்தி மார்க்கம். இறைவன் எப்படி இருக்கிறார் என்று பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து, அறிந்து, நம்பிக்கையோடும், முனைப்போடும் செயல்பட்டு, சித்த சுத்தியடைவது சித்தர்களின் யோக மார்க்கம். சாமான்ய மனிதனுக்கு பக்தி யோகமே உகந்ததாகக் கருதப்படுகிறது.

இப்பொழுது நாம் அடுத்த கேள்விக்கு வருவோம். அதற்கு மேற்கோளாக திருஞான சம்மந்தப் பெருமான் பாடலை எடுத்துக் கொள்வோம். அவருக்கு பிறவித் தொடராக இயல்பாகவே ஞானம் கிடைத்தது. எனினும் உலக மக்கள் உய்யும் பொருட்டு, அவர் பக்தி யோகத்தை முன்னிறுத்தி வாழ்ந்து காட்டி விட்டுச் சென்றார். அவருக்கு இளமையிலேயே இறையருளால் ஞானம் கிட்டியது. சரியையைக் கடைபிடித்தார், கிரியையைக் கடைபிடித்தார், ஞானமும், யோகமும் கைவரப் பெற்றார். இறைவனோடு இரண்டறக் கலந்தார். இங்கே யோகம் என்பது யோக சாதனங்களைக் குறிக்கவில்லை, இணைப்பைக் குறிக்கிறது. இறைவன் மீது பக்தி செலுத்துவதால் மானிடர்கள் அடையும் பேரின்ப நிலைகளைப் பற்றிய அவரது பாடலை இங்கே ஆதாரமாக முன் வைக்கிறேன்.

அரியு நம்வினை யுள்ளன வாசற
வரிகொண் மாமனி போற்கண்டம்
கரிய வன்றிகழுங்கர வீரத்தெம்
பெரிய வன்கழல் பேணவே.
தங்கு மோவினை தாழ்சடை மேலவன்
திங்க ளோடுடன் சூடிய
கங்கை யான்றிக ழுங்கர வீரத்தெம்
சங்க ரன்கழல் சாரவே.

அழகிய வரிகள் அமைந்த கறுத்த நீல மணி கண்டம் உடையவனாகவும், தாழ்ந்து தொங்கும் சடைமுடியில் கங்கையை சூடியவனாகவும் விளங்கும் எம்பெருமானாகிய இறைவனின் திருவடிகளைத் துதித்தால் நம் வினைகள் அழியும், குற்றங்கள் ஒழியும் என்பது பொருட் சுருக்கம். இவையாவும் சூக்கும யோக இரகசியங்களேயாகும். நீங்கள் கேள்வியில் குறிப்பிட்டது போல வாசியைப் பிடித்து, குண்டலினியை மேலேற்றி, கண்டமாகிய விசுத்தியை கடந்து செல்லும் பொழுதுதான் ஒருவன் தன் வினைகளை வேரறுக்க முடியும் என்கிற கருத்துதான் இங்கே விளக்கப்படுகிறது. பக்தியால் தான் அடைந்த அந்த நிலையையே அவர் விளக்குகிறார். ஞானிகள் நம் உடலையே மூன்று பிரிவுகளாகக் காண்கிறார்கள். அது எவ்வாறு எனில், அண்டம், பிண்டம், கண்டம் என்பதாகும். அதாவது, அண்டமாகிய சிரசையும் பிண்டமாகிய உடலையும் இணைக்கும் கழுத்துப் பகுதியே கண்டம். பிரபஞ்சத்தின் இயக்கம் இந்த மூன்று பகுதிகளிலும் ஒன்று சேர இயங்குவதில்லை. தனித்தனியே பிரிந்து இயங்குகின்றன. இவற்றை ஒருங்கிணைக்க ஞானியர்கள் கண்ட வழிமுறைகளே மார்க்கங்கள்.

கழுத்துக்கு மேலே உள்ள சிரசு அண்டம் எனப்படும். இதிலே கண், மூக்கு, செவி, நாக்கு, பொருமூளை என்கிற சகஸ்ராரம், சிறுமூளை, உச்சிஸ்தானம் என்றழைக்கப்படும் பிரம்மரந்திரம், அண்ணாக்கு எனப்படும் சிறுநாக்கு மற்றும் ஞான இந்திரியங்கள் எனப்படும் சப்த, ஸ்பரிச, ரூப, ரச, கந்தமும் இதிலே அடக்கம். உற்றுப் பார்த்தால் பஞ்ச இந்திரியங்களும் இதில் அடங்கியுள்ளது. அந்தகரணங்கள் எனப்படும் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் இவை யாவும் இங்கிருந்துதான் பஞ்ச புலன்களின் வழியாக செயல்படுகின்றன. மனிதனின் ஓய்வில்லாத எண்ண அலைகளும் இங்கிருந்துதான் உதயமாகின்றன. இதை மேல் மனம் என்று சொல்வதுவும் உண்டு. பரமாத்மாவின் இருப்பிடமும் சிரசின் மத்திய பாகத்தில் பிரம்மரந்திரத்தில் உள்ளது. அதை ஆத்ம லிங்க ஸ்தானம் என்பார்கள். சித்தாகாசம் மற்றும் பரமாகாசம் இங்குதான் உள்ளது. பிரபஞ்சத்தின் அதிசூக்குமமான சக்திகள் அனைத்தும் அண்டப் பகுதியில் அடக்கம். சாதனங்களால் நம் சக்தியானது கீழிருந்து மேல் நோக்கி ஏற வேண்டும். அதாவது பிண்டத்தையும் தொண்டத்தையும் ஒருங்கிணைத்து, அந்த சக்தியை அண்டத்தோடு இணைத்தால், பரமாத்மா, ஜீவாத்மா இணைப்பு வெற்றியாகும்.
நம் கழுத்துக்கு கீழே உள்ள பகுதியான பிண்டத்தில் இதயம், நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், உணவுக்குழாய், வயிறு, உதரவிதானம்,குடல், நாபி, குதம், குய்யம் என்று அனேக உறுப்புகள் அடங்கி உள்ளன. இதில் நடுமையமாக நாபி விளங்குகிறது. நாபி, குதம், குய்யம் இம்மூன்றும் இணைந்த முக்கோண ஸ்தானமே அக்னிகுண்டம். இங்குதான் இரத்தம் உற்பத்தியாவதாகச் சொல்லப்பட்டுள்ளது. கீழ்மனதின் செயல்களாகிய தேகப்பற்று, மலக் குற்றங்கள், வினை நுகர்வுகள் ஆகிய எல்லாம் கூடிய மாய மலங்கள் யாவும் செயல்படுவது பிண்டத்திலேதான். பசி, தாகம், மலம், மூத்திரம், சளி போன்ற உபாதைகள் மற்றும் கர்பத்தில் உருவாகும் பிண்டத்தின் உற்பத்தி மற்றும் அழிவுக்குக் காரணமாய் விளங்கும் ஜாடாராக்கினியும் பிண்டத்தில்தான் செயல்படுகிறது. மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம் ஆகிய சக்கரங்களின் ஆளுமையில் பிண்டம் இயங்குகிறது.



இனி நம் கழுத்துப்பகுதியே கண்டம் எனப்படுகிறது. அண்டத்தையும் பிண்டத்தையும் இணைத்தாலும், இரண்டையும் பிரித்து தனித்தனியே இயங்க வைப்பதும் கண்டமே. அண்டம், பிண்டம் இரண்டையும் இணைக்கும் இணைப்பு சக்தியாக கண்டம் விளங்குவதால் இதை ஜீவ பிரம்ம ஐக்கிய ஸ்தானம் என்று சித்தர்கள் கூறுவார்கள். விசுத்திச் சக்கரம் மற்றும் தைராய்டு சுரப்பி கண்டப் பகுதியில்தான் அமைந்துள்ளது. மனிதனின் பேசும் சக்தியின் ஸ்தானமாக கண்டம் விளங்குகிறது. மனிதனின் பிரபஞ்ச ஆராய்ச்சி இங்கிருந்துதான் தொடங்குவதாக யோக நூல்கள் யாவும் கூறுகின்றன. சாதனையில் பூத வாக்கு மறைந்து அருள் வாக்கு தோன்றுவதும் இங்குதான். இதைத்தான் கண்ட சித்தி அல்லது ஶ்ரீகண்டம் என்பார்கள். தோள்கண்டம், நீள்கண்டம் இரண்டின் இணைப்பே ஶ்ரீகண்டம். அதாவது கண்டம் என்றால் துண்டுபட்டது என்பார்கள். அகண்டம் என்றால் துண்டுபடாதது. அதனால்தான் எல்லையற்ற பெருவெளியை அகண்டாகாரம் என்பார்கள். சௌந்தர்ய லஹரியில் கண்டம் மத்தியமா எனச் சொல்லப்பட்டுள்ளது.

தோள் கண்டம் என்பது ஆக்ஞா ஸ்தானம். நீள்கண்டம் என்பது விசுத்தி ஸ்தானம். விசுத்தி ஸ்தானம் மனிதனுக்கு மேன்மை அளிக்கும் இடமாகும். இது அண்ணாக்குக்கு கீழ்பகுதியில் அமைந்துள்ளது. பூத வாக்காக கண்ட த்வனியாக, பேசும் சக்தியாக இயங்கி மனிதனுக்கு சத்ருவாக இருக்கம் நீள்கண்டம் அருள் வாக்காக மாறி கண்ட த்வனி அழிந்து அநாகத த்வனி தோன்றுகிறது. எனவே இதை வினை தாண்டிய இடம் என்பர். தோள் கண்டம், ஜடமனம் எனப்படும் ஆக்ஞாவின் தலைப்பகுதி நெற்றியின் நடுமையம். கால் பகுதி நெஞ்சுக் குழி. இந்த நெஞ்சுக் குழியில் இருந்தே மும்மலங்களாகிய வாதம், பித்தம், கபம் மற்றும் தசவாயுக்களின் பிரிவினை, மும்முடிச்சாகிய சத்வம், ராஜசம், தாமசம் என்கிற முக்குணங்களின் பிரிவினை யாவும் செயல்படுகின்றன. ஆக்ஞாவின் தலைப் பகுதியாகிய நெற்றியின் நடு மைய ஸ்தானத்தில் மனிதனின் மூன்று நிலைகளாகிய விழிப்பு நிலை, கனவு நிலை, உறக்க நிலை தோன்றி மனிதனை நிலை தடுமாறச் செய்கின்றன. மனிதனை நான்காவது நிலையாகிய துரியநிலையை அடைய விடாமல் தடுப்பது ஆக்ஞாவே.

ஒவ்வொரு சுவாசத்தையும் பிராணன், மனம் என இரண்டாகப் பிரித்துவிடுவது ஆக்ஞாவின் வேலையே. எனவேதான் இதை ஜென்மத் திரை என்பார்கள். ஆணவ நினைவும், அகங்காரத்தின் வசிப்பிடமும் ஆக்ஞாவே. அதனால்தான் ஆக்ஞாவாகிய தோள் கண்டத்தை அவ்வளவு எளிதில் வெல்ல முடியாது என்றும் கூறுவதுண்டு. இதன் மாய வலையில் சிக்கித் தவிக்கும் பக்தி, யோக சாதனையாளர்கள் ஏராளம். ஶ்ரீவித்தை என்ற வழி முறையில் சோமக்கலை என்ற சித்தியின் மூலமாகச் யோகிகள் ஆக்ஞாவை மூடிவிடுவார்கள். அதன் பின் சித்த விருத்தி ஏற்பட்டு அவர்கள் சோம வட்டத்துக்குள்ளே பிரவேசித்து சோம்பானம் அருந்துவார்கள். கேசரி முத்திரை, கேசரி சித்தி, சோமவட்டம் போன்ற சாதனங்களின் வெற்றி வைபவங்களுக் கெல்லாம் கண்டம்தான் நுழைவு வாயில். ஆகாய தத்துவமும் அப்புத் தத்துவமும் கண்டத்தில் அடக்கம். பொதுவாக மானிடர்க்கு தோள்கண்டத்தையும், நீள்கண்டத்தையும் ஶ்ரீகண்டத்தால் இணைப்பது சாத்தியமில்லாமல் போகிறது. காரணம் கரும வாசனைகள், வினை நுகர்வு, தீ வினை,சஞ்சிதம் இவைகளால் முட்டி மோதி அலைந்து கொண்டே இருப்பதினாலாகும். மனிதனின் பிராணன் தோள் வளைவுக்குக் கீழே இறங்கி குதம் வரை செல்வதே ஜென்ம சத்ரு எனப்படும் பிறப்பும் இறப்பும்.
எவரொருவருக்கு குண்டலினியானது கண்டத்தைக் கடந்து மேலே செல்கிறதோ, அவர் வினைகள் கண்ட ஸ்தானத்தில் சக்தியால் எரிக்கப்பட்டு விடும். வாசி யோகத்தாலும், யந்திர, தந்திர, மந்திர, ஔசதங்களாலும் இதை நடத்திக் காட்டியவர்கள் சித்தர்கள். ஒருவன் பக்தியால் தானும் இந்நிலையை அடைந்து விடலாம் என்றுதான் திருஞான சம்மந்தர் இந்தப் பாடலின் மூலமாக விளக்குகிறார். அடுத்த பாடல்களையும், விளக்கங்களையும் பார்க்கும் பொழுதுதான் அவர் கூறுவதில் உள்ள உண்மைத் தன்மையும், நுட்பமும் உங்களுக்கு விளங்கும். விளங்குவதோடு மட்டுமல்ல பிரமிப்பையும் ஏற்படுத்தித் தரும்.

ஏதம் வந்தடை யாவினி நல்லன
பூதம் பல்படை யாக்கிய
காத லான்றிக ழுங்கர வீரத்தெம்
நாதன் பாத நணுகவே.

பஞ்சபூதங்களைப் படைகளாக அமைத்துக் கொண்டு சிருஷ்டியையும், ஒடுக்கத்தையும் நிகழ்த்தும் இறைவனின் இரு திருவடிகளை(அகரம், உகரம்) அடைவோரைப் பாவங்கள், குற்றங்கள் வந்தடையமாட்டா. அகரம் எழுத்துகளில் முதன்மையானது. எண்களில் எட்டாகும். ஆண் பாலாகவும், தொழிலில் சிவமாகவும், சூரியனாகவும், 12 கலையாகவும், அக்னியாகவும், விந்தாகவும், வலக்கரமாகவும், அண்ணாக்காகவும் அறியப்படுகிறது. உகரம் எண்ணில் இரண்டாவதாகவும், பெண் பாலாகவும், தொழிலில் சக்தியாகவும், சந்திரனாகவும், 16 கலைகளாகவும், நீராகவும், நாதமாகவும், இடக்கரமாகவும், உண்ணாக்காகவும் அறியப்படுகிறது. இவை யாவும் யோக இரகசியங்களே.



பறையு நம்வினை யுள்ளன பாழ்பட
மறையு மாமணி போற்கண்டம்
கறைய வன்றிக ழுங்கர வீரத்தெம்
இறைய வன்கழ லேத்தவே.

நீலமணி போலக் கண்டத்தை உடையவனாகிய எம் இறைவனுமாகிய சிவபெருமான் திருவடிகளை ஏத்த நம் பவவினைகள் யாவும் நீங்கும். சஞ்சிதமாக உள்ளன யாவும் மறையும். அதாவது முன் வினைகள் யாவும் அழியும். இன்றைய பாவங்களும் நம்மை அணுகவொட்டாது. எல்லா உயிர்களுக்கும் உள்ளே இருந்து கொண்டு ஐந்தொழில் செய்பவர் நம் இறைவனே ஆவார். அதாவது உடற் படைப்பு ஆக்கல், வளர்ச்சி காத்தல், உடற் பற்று ஒழித்தலாவது அழித்தல், பக்குவம் அல்லது உட்கனிவித்தல் என்பது மறைத்தல், பேரின்ப சித்தி வழங்குதல் என்பது அருட்செய்தலாகவும் ஐந்தொழிலாக அதாவது திருநடனமாக விளக்கப்படுகிறது. பக்குவம் நிகழாத வரை ஆக்கல், காத்தல், அழித்தல் என்கிற மூன்று தொழில்களும் புற உடலிடத்தும், மறைத்தல், அருளல் என்கிற இரண்டும் அக உயிராகிய ஜீவனிடத்தும் சதா வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும். இந்த ஐந்தொழில் நடனத்தை இறையனார் எங்கிருந்து கொண்டு நிகழ்த்துகிறார் ? அந்த இடமே சிற்சபை எனப்படும். இந்த சிற்சபை என்பது அகண்டவெளியாகிய பொற்சபையின் ஒரு சிற்றணுவே ஆகும். இந்த சிற்சபைதான் மாமணி மன்றம் எனப்படுகின்றது. எனவே கண்டம் கடந்து, மாமணி மன்றமடைந்து, சிவனோடு சக்தியை இணைத்து விடும் பொழுது பழைய வினைகள் அழிவதோடு, புதிய வினைகளும் சாதகனை அணுகுவதில்லை.

பண்ணி னார்மறை பாடல னாடலன்
விண்ணி னார்மதி லெய்தமுக்
கண்ணி னானுறை யுங்கர வீரத்தை
நண்ணு வார்வினை நாசமே
நிழலி னார்மதி சூடிய நீள்சடை
அழலி னாரழ லேந்திய
கழலி னாருறை யுங்கர வீரத்தைத்
தொழவல் லார்க்கில்லை துக்கமே
வண்டர் மும்மதின் மாய்தர வெய்தவன்
அண்ட னாரழல் போலொளிர்
கண்ட னாருறை யுங்கரவீ ரத்துத்
தொண்டர் மேற்றுயர் தூரமே
புனலி லங்கையர் கோன்முடி பத்திறச்
சினவ லாண்மை செகுத்தவன்
கனல வன்னுறை கின்ற கரவீரம்
எனவல் லார்க்கிட ரில்லையே
வெள்ளத் தாமரை யானொடு மாலுமாய்த்
தெள்ளத் தீத்திர ளாகிய
கள்ளத் தானுறை யுங்கர வீரத்தை
உள்ளத் தான்வினை யோயுமே
செடிய மண்ணொடு சீவரத் தாரவர்
கொடிய வெவ்வுரை கொள்ளேன்மின்
கடிய வன்னுறை கின்ற கரவீரத்
தடிய வர்க்கில்லை யல்லலே
வீடி லான்விளங் குங்கர வீரத்தெம்
சேடன் மேற்கசி வாற்றமிழ்
நாடு ஞானசம் பந்தன சொல்லிவை
பாடு வார்க்கில்லை பாவமே

வேதங்களினாலும், பாடல்களினாலும் விளக்கிட முடியாதவர், பிரம்மனாலும், திருமாலாலும் உணர்ந்தறிய முடியாதவர், சுயம் பிரகாசி, ஆதியும் அந்தமும் அற்றவர், தோற்றமும் முடிவும் காண முடியாத மெய்ப் பொருளாகிய நம் சிவ பெருமானைப் பணிந்தால் நம் மும்மலங்கள், முக்குணங்கள், மூன்று அவத்தைகள், ஐம்புலன் உணர்வுகளும் அந்தக் கரணங்களுமாகிய ஒன்பது தலைகள்
(தளைகள்) யாவற்றையும் கடந்து, பிரம்மரந்திரத்தைக் கடந்து, சகஸ்ராரப் பொருவெளியாகிய பொற்சபையை அடைந்து, இறைவனோடு இரண்டறக் கலந்து பேரின்ப நிலையை அடையலாம். எனவே முக்தியானாலும் சரி, சித்தியானாலும் சரி இவற்றை அடைவதற்கு பக்தியோகமும் ஒரு சிறந்த மார்க்கமாகவே அறியப்படுகிறது.

நன்றி : திரு.இராம் மனோகர் ஐயா 



மீள்பதிவாக :-

வாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (14) - http://tut-temple.blogspot.com/2018/09/14.html

வாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (13) - ஞான ஆசிரியர்கள் தின விழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/08/13.html


வாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (12) - http://tut-temple.blogspot.com/2018/07/12_7.html

 வாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (11) - http://tut-temple.blogspot.com/2018/06/11.html

வாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (10) -http://tut-temple.blogspot.com/2018/05/10.html

வாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (9) - http://tut-temple.blogspot.in/2018/04/9.html

வாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (8) - http://tut-temple.blogspot.in/2018/02/8.html

வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (7) - http://tut-temple.blogspot.in/2018/01/7_22.html

 வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (6) - http://tut-temple.blogspot.in/2017/12/6.html

வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (5) - http://tut-temple.blogspot.in/2017/11/5.html

வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (4) - https://tut-temple.blogspot.in/2017/10/4.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (3) - https://tut-temple.blogspot.in/2017/09/3.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (2) - http://tut-temple.blogspot.in/2017/08/2.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (1) - http://tut-temple.blogspot.in/2017/07/1.html

No comments:

Post a Comment