Subscribe

BREAKING NEWS

01 August 2018

ஆடி மாதம் பொறந்தாச்சு..

பிறந்தது ஆடி...பணிவோம் தாயை நாடி..

இதோ...ஆடி மாதம் பிறந்து விட்டது. இந்த பதிவை நாம் சென்ற மாதமே கொடுக்க விரும்பினோம். ஆனால் சற்று காலம் தாழ்த்தி அனுப்ப வேண்டியதாகி விட்டது. சென்ற வருடத்தை நாம் சற்று நினைத்துப் பார்க்கின்றோம்.

சென்ற ஆண்டு ஆடி அமாவாசை அன்று அன்னம்பாலிப்பு செய்தோம். அமாவாசை அன்னதானம் சென்ற ஆடி அமாவாசையில் தான் தொடங்கியது. விளையாட்டாய் தான் ஆரம்பித்தோம். அவனின் விளையாட்டில் இப்போது நாம் உள்ளோம்.எத்தனை எத்தனை அனுபவங்கள். ஒவ்வொரு முறை இந்த நிகழ்வில் நம்மிடம் யார் உணவு பெறுவார்கள் என்று ஏங்குவோம். பின்னர் அனைத்தும் குருவருள் என்று விட்டு விடுவோம். யாருக்கு வேண்டுமோ அவர்களே நம்மிடம் வந்து பெற்றுக் கொள்வர். இந்த ஓராண்டில் திரு.மோகன் என்ற அன்பரை துவக்க நாட்களில் கண்டோம். அதற்கடுத்து நெடு நாட்களாகியும் காண முடியவில்லை.

ஒவ்வொரு முறை அன்னம்பாலிப்பு செய்யும் போதும் கண்கள் அவரைத் தேடும். ஆனால் அவரை பார்க்கவே முடியவில்லை. இப்படியான சூழலில், இரண்டு வாரங்களுக்கு முன்னர் நாம் ஊருக்கு செல்ல கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தில் இருந்தபோது, சுமார் 11 மணி அளவில் அங்கே வந்தார். அவரிடம் கேட்டோம், அன்றைய தினமும் அமாவாசை தான். காலையில தான் அன்னம்பாலிப்பு செய்தோம்.உங்களை நெடுநாட்களாக காண முடியவில்லை என்று. பின்னர் பாக்கெட்டில் துழாவி கையில் கிடைத்த பொருளை அவரிடம் கொடுத்தோம். பரம திருப்தி உண்டானது.

இது போல் மற்றொரு சம்பவம், போகர் ஜெயந்தி என்று நினைக்கின்றேன். வீடு நோக்கி சென்று கொண்டிருந்த போது, தீடீரென ஒருவர் உணவு வாங்கித் தாருங்கள் என்று கேட்டார். நாமும் வாருங்கள் என்று கூட்டிக் கொண்டு உணவகம் சென்று பார்த்தல் ஆளையே காணோம். பின்னர் அப்படியே விட்டுவிட்டு அன்றாட பணியில் மூழ்கி, அடுத்த நாள் அன்னம்பாலிப்பு செய்தோம். அன்றும் போகரின் நட்சத்திரம் இருப்பதாய் உணர்ந்தோம். யாருக்கு முந்திய நாள் இரவு உணவு கொடுக்காது விட்டோமோ, அவரே கூடுவாஞ்சேரி ரயில் நிறுத்தத்தில் இருந்தார். நமக்கு அப்படியே தூக்கி வாரிப் போட்டது.இது போல் ஒன்றா? இரண்டா? பல சம்பவங்கள் அடங்கும்.

நம்முடன் AVM கைகோர்த்தவுடன் அன்னம்பாலிப்பு வேறொரு நிலையை எட்டியது. இவை எல்லாம் அனைவரும் அறிந்ததே.மீண்டும் முழு வீச்சில் தொடர குருவருள் வேண்டுகின்றோம். உறுதுணையாய் இருக்கும் AVM குழுவிற்கும், உணவு ஏற்பாடு செய்து தரும் திரு.சிவகுமார் அவர்களுக்கும் இந்த பதிவின் வாயிலாக நன்றி சொல்லி மகிழ்கின்றோம். இந்த ஆடி அமாவாசையிலும் அன்னம்பாலிப்பு கட்டாயம் அடுத்த வாரம் வருகின்ற சனிக்கிழமை அன்று குருவருளால் நடைபெறும்.

அடுத்து ஆடி என்றாலே..அம்மன் தரிசனம் தான்.சென்ற ஆண்டு கோவை வனபத்ரகாளி தரிசனம், தேனி வீரபாண்டி கௌமாரிஅம்மன் தரிசனம் என்று பட்டையைக் கிளம்பினோம்.இதோ..இந்த ஆண்டில் வரும் சனிக்கிழமை அன்று பர்வதமலை சென்று அம்பாள் தரிசனம் பெற காத்திருக்கின்றோம்.

எத்தனை எத்தனை ரூபங்கள். காமாட்சி,மீனாட்சி,விசாலாட்சி,ஈஸ்வரி,கருமாரி,காளி,சூலினி ,பத்ர காளி,சாமுண்டீஸ்வரி,மூகாம்பிகை,சங்கரி,பர்வதவர்த்தினி,அகிலாண்டேஸ்வரி,பகவதி,மகாகாளி,
அபிராமி,மஹாலட்சுமி,பைரவி,பராசக்தி,திரிபுரசுந்தரி என்று.அனைத்தும் நாம் ஒருங்கே கூடுவாஞ்சேரி வேலி அம்மன் ஆலயத்திலும், மாமரத்து விநாயகர் ஆலயத்திலும் ஒருங்கே கண்டு வருகின்றோம்.

இனி..ஆடி மாத சிறப்புகளை அறிவோம்.

ஆடிப் பெருக்கு, ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை, ஆடி 18, ஆடி விரதம், ஆடித் தள்ளுபடி என ஆடி மாதம் என்பது மக்களுக்கு கொண்டாட்டங்கள் நிறைந்தது.

 பயிர்கள் விதைத்தல், கூழ் ஊற்றுதல், எல்லை தெய்வங்களுக்குத் திருவிழா நடத்துதல் என ஆடி மாதம் முழுவதும் தமிழகமே விழாக் கோலம் பூண்டிருக்கும். ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்தவர்களின் சிறப்பு மாதமாக ஆடி ஆக்கப்பட்டு அது சார்ந்த உற்சவங்களும் விரதங்களும் இம்மாதத்தில் களை கட்டுகின்றன. ஆனால் ஆடியின் சிறப்பு வெறும் மத நம்பிக்கை சார்ந்ததாகத் தொடங்கப்படவில்லை. ஆடிப் பட்டம் தேடி விதை, ஆடிக் காற்றில் அம்மியும் நகரும் போன்ற பழமொழிகள் நமக்கு அம்மாதத்தில் நிகழும் இயற்கை மாற்றங்களையும் சிறப்புகளையுமே உணர்த்துகின்றன.

ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றும் அம்பாள் மாதம் என்றும் சிறப்பித்து கூறுவார்கள். ஏனெனில், இந்த மாதத்தில் அம்மன், அம்பாள், ஆண்டாள், சக்தி பீடங்களிலும் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் நடைபெறுவது வழக்கம். திருவிழாக்களுடன் விரத வழிபாடுகளும் களை கட்டி விடும். மேலும், அம்மன் கோயில்களில் அலகு குத்தி காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்து வழிபடுதல், சிறப்பு பூஜைகள் செய்தல், தீ மிதித்தல்... என பக்தர்கள்  விதவிதமான நேர்த்திக்கடன்களை செலுத்தி வழிபடுவார்கள். முக்கியமாக, கோயில்களிலும் வீடுகளிலும் கூழ் ஊற்றுதல் போன்றவையும் நடக்கும்.

ஆடிப்பெருக்கு - (03/08/2018)

ஆடி மாதம் 18ஆம் தேதி ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. காவிரி முதலான நதிக்கரைகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். இந்த நாளில் ஆறுகளில் கூடும் பெண்கள் மாங்கல்ய பலம் வேண்டி புதிதாக திருமாங்கல்யச் சரடினை மாற்றி நதி அன்னையை வணங்குகின்றனர். ஆடி மாதத்தில் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால்தான் 'ஆடிப்பட்டம் தேடி விதை' என்று கூறுகின்றனர். ஆடி மாதத்தில் விதை விதைத்து தை மாதத் துவக்கத்தில் அறுவடை செய்வார்கள். 

ஆடிக்கூழ் 

உடல்சூட்டினைத் தணித்து நமக்கு ஆரோக்கியத்தைத் தருவது கூழ். எனவேதான் ஆடி மாதத்தில் வேப்பிலையும், கூழும் முக்கியத்துவம் பெறுகின்றன. ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு சிறப்பான நாட்களாகும். இந்த நாட்களில் அம்மன் ஆலயங்களில் கூழ் ஊற்றி கொண்டாடுவார்கள்.

ஆடி அமாவாசை (11/08/2018)

 ஆடி அமாவாசை, முன்னோர்களை ஆராதிக்க உகந்த நாளாகும். ஜோதிட ரீதியாக தந்தையான சூரியனும் தாயான சந்திரனும் தாய் வீடான கடகத்தில் ஒன்றாக இணையும் நாளே ஆடி அமாவாசை. பித்ரு சாபம் நீங்கும் ராமேஸ்வரம் உள்ளிட்ட புண்ணிய நீர் நிலைகளில் முன்னோர்களுக்குரிய தர்ப்பண காரியங்களைச் செய்து வழிபட வேண்டும். இதனால் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடையும். பித்ரு சாபம் நீங்கி பிள்ளைகளின் வாழ்வு சிறக்கும். 

ஆடிப்பூரம் (13/08/2018)

ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது தேவிக்குரிய திருநாளாகும். மானிடத்தை இன்னல்களில் இருந்து மீட்பதற்கு உலகன்னை இவ்வுலகிலே தோன்றிய நாள் ஆடிப்பூரம் எனக் கருதுவர். இந்நாளில் தேவி உலகிற்கு விஜயம் செய்து மக்களுக்கு அருள் புரிவாள் என்று நம்பப்படுகிறது. வெள்ளிக்கிழமை அன்று வரும் ஆடிப்பூரம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்நாளிலேயே ஆண்டாள் பிறந்ததாக கருதப்படுகிறது. அதனால் ஆடிப்பூரத்தன்று வைணவ கோவில்களில் ஆண்டாளுக்கு சிறப்பு பூசை நடைபெறும். திருமணமாகாத பெண்கள் இந்நாளில் ஆண்டாளை கும்பிட்டால் அவர்களுக்கு விரைவில் திருமணமாகும் என்பது நம்பப்படுகிறது. 

நாக சதுர்த்தி (14/08/2018)

கருடபஞ்சமிக்கு முன்பு சதுர்த்தி திதி அமையும் நாள் நாகசதுர்த்தி நாளாகும். இந்நாளைப் பற்றி சதுர்வாக சிந்தாமணி எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாற்கடலிருந்து வெளிவந்த ஆலகாலத்தினை சிவபெருமான் உண்ட தினமாக இந்நாள் கருதப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் இந்நாளில் தம்பிட்டு எனும் உணவுப்பொருளை தயார் செய்து இறைவனுக்குப் படைக்கின்றார்கள்.

இந்நாளில் அட்ட நாகங்களான வாசுகி, ரட்சகன், காளிங்கன், மணிபத்ரன், ஜராவதன், திருதராஷ்டிரன், கார்க்கோடகன், தனஞ்சயன் ஆகியவர்களை வணங்க வேண்டும். நாக தேசத்திற்காக இந்த நாளில் நாக கற்களை வழிபடுதல், புற்றுக்கு பால் ஊற்றுதல் போன்ற பூசைகளை  செய்கின்றனர்.

ராகு கேது தோசங்களால் திருமணம் நடக்காதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த நாகங்களை வழிபடுகின்றனர். நாகப்பிரதிகளுக்கு புது துணி கட்டி பாலால் அபிசேகம் செய்கின்றனர்.சிலர் அருகிலுள்ள நீர் நிலைகளிலிருந்து நீரெடுத்துவந்து அவைகளுக்கு அபிசேகம் செய்கின்றார்கள்.

ஆடி அல்லது ஆவணி வளர்பிறை சதுர்த்தியை நாக சதுர்த்தி என்கின்றனர். இந்தநாளில் விரதமிருந்து நாகப் பிரதிகளுக்கு பூசை செய்கின்றனர். இந்த விரதத்தினை நாகசதுர்த்தி விரதம் என்கின்றனர்.

நாகங்கள் தீண்டி இறந்த சகோதர்களுக்கு உயிர் தர ஒரு பெண் நாகராஜனை வேண்டிக்கொண்டாள். அவரது வேண்டுகோளுக்காக அவளது சகோதர்களை நாகராஜன் உயிர்ப்பித்த நிகழ்வினை தொன்மமாக கருதுகிறார்கள்.

இந்த நாகசதுர்த்தி நாளில் நாகர் கோயில் நாகராஜா கோயில், பரமக்குடி நயினார் கோயில், நாகப்பட்டினம் நாகநாதர் கோயில் மற்றும் கும்பகோணம் நாகநாதர் கோயில் போன்றவற்றில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.


கருட பஞ்சமி (15/08/2018)

கருட பஞ்டமி என்பது ஆடி அம்மாவைசையை அடுத்து வருகின்ற பஞ்சமி திதியாகும்.இது காஷ்யபர்- வினதை தம்பதிகளுக்கு கருடன் பிறந்த தினமாகும். இந்த நாளில் திருமாலின் வாகனமான கருடனை வணங்குவதும், திருமாலை வணங்குவதும் வைணவர்கள் செய்கின்ற செயலாகும். இந்நாளில் விரதம் இருந்து பூசை செய்தால் கருடனைப் போல பலசாலியாகவும், அறிவு நிறைந்தும் பிள்ளைகள் பிறப்பார்கள் என்பது நம்பிக்கை.

இந்த நாளில் ஆதிசேசனுக்கும் பூசை செய்வது வழக்கமாகும். சாக்தத்தில் கவுரி அம்மனை நாகவடிவில் இன்று வழிபடுகின்றனர்.
தொன்மம்

பிரம்ம தேவரின் மகனான காஷ்யபருக்கும் அவருடைய மனைவி கத்ருவுக்கும் நாகர்கள் பிறந்தார்கள். மற்றொரு மனைவியான வினதைக்கு கருடன் பிறந்தது. ஒரு முறை கத்ருவுக்கும், வினதைக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. அந்தப் போட்டியின் படி ஜெயித்தவர்களுக்கு தோற்றவர்கள் அடிமையாக வேண்டும்.

கத்ரு இந்திரனிடமிருந்து அமர்தக் கலசத்தினைக் கொண்டுவந்தால், கருடனின் தாயுடன், இரு பிள்ளைகளையும் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்துவிடுவதாக கூறினாள். அதனால் மகிழ்ச்சியடைந்து தேவலோகத்திலிருந்து அமர்தக் கலசத்தினைப் பெற்றுவந்தான். 

இது போன்று ஒவ்வொரு மாத சிறப்புகளை நமக்கு தொகுத்து வழங்க ஆசை தான். ஆனால் நேரமும் மற்ற விஷயங்களும் ஒத்துழைக்க வேண்டுமே..இருப்பினும் அவனிடம் பிராத்திப்போம்.

இது ஒரு புறமிருக்க, நாம் வருகின்ற ஆடி அமாவாசை அன்று குருவின் அருளால் மோட்ச தீப வழிபாடு செய்ய உள்ளோம். நேரம்,இடம் போன்றவை தனிப்பதிவில் அளிக்கின்றோம். நமக்கு அருளப்பட்டது நம் குழுவில் உள்ள ஒவ்வொருவரின் புண்ணியப் பலனே ஆகும். மேலும் அன்றைய தினம் அமாவாசை அன்னம்பாலிப்பு நடைபெற உள்ளது. அகத்தியர் ஆயில்யம் பூசையும் உண்டு.நம் தளத்திற்கு ஆடிமாதம் கொண்டாட்டம் தான். உழவாரப் பணியும் சேர இருக்கின்றது.அனைத்தும் அவர் அருள் தான் அன்றி, நம் கையில் ஒன்றுமில்லை.


கூடுவாஞ்சேரி வேலி அம்மன் ஆலயத்தில் நடைபெற உள்ள ஆடிப்பூரம் பற்றிய செய்தி மேலே.

இதோ. மாமரத்து விநாயகர் கோயிலின் அழைப்பிதழ் கீழே.



மேலே கொடுத்துள்ள நாட்களை குறித்து வைத்துக் கொண்டு ஆலயங்களுக்கு சென்று அம்மனை மனதார வழிபடுங்கள். இயலாத சூழ்நிலை என்றால் குறைந்தபட்சம் வீட்டிலாவது விளக்கேற்றி வழிபாடு செய்யவும்.

- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

மீள்பதிவாக:

பிறந்தது ஆடி...பணிவோம் தாயை நாடி..- http://tut-temple.blogspot.com/2017/07/blog-post_16.html

வளங்களை அள்ளித் தருகின்றாள் வனபத்ர காளி - http://tut-temple.blogspot.com/2017/07/blog-post_12.html

இன்று - ஒருவர் சொல்ல மற்றொருவர் கேட்க வேண்டிய பக்திக் கதை - http://tut-temple.blogspot.com/2017/07/blog-post_21.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22/07/2017 - http://tut-temple.blogspot.com/2017/07/22072017.html

கேட்ட வரம் அருளும் வீரபாண்டி கௌமாரிஅம்மன் - http://tut-temple.blogspot.com/2017/08/blog-post_60.html

ஆடி மாத சிறப்பு தரிசனம் - வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோவில் - http://tut-temple.blogspot.com/2017/08/blog-post_1.html


No comments:

Post a Comment