Subscribe

BREAKING NEWS

01 August 2017

ஆடி மாத சிறப்பு தரிசனம் - வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோவில்


“ஆதியீறில்லாள் கன்னிக் களித்ததுங் கரந்தாணாகி
மீது காரணத்தாள் கன்னியீச் சுரமாயிற்றென்று
சூதனா ரருளக் கேட்டுக் தொழுதனர் முனிவர்
பின்னர் தாதுலாம் வேப்பந் தார்
ஆன்றனிக் கொலு அமர்ந்தாம் உனன்றே”

தேனி மாவட்டத்திலுள்ள வீரபாண்டி எனும் ஊரில் கௌமாரியம்மன் கோயில் அமைந்திருக்கிறது.
முல்லை நதியின் வனப்பில் உள்ள ஊர் வீரபாண்டி. சுகந்த காற்றும், பசுஞ்சோலை மரங்களும், முல்லை நதி பாயும் வீரபாண்டி இயற்கை அன்னையின் கொடையே.இன்றொரு நாள் போதுமா? என்றொரு பாடல் கேட்டிருப்போம்.அதே போல், வீரபாண்டியின் அழகையும், கௌமாரியம்மன் அருளையும்,கண்ணீஸ்வரமுடையாரின் கருணையையும் பெற இன்றொரு நாள் போதுமா? என்று கேட்கத் தூண்டுகின்றது.

தென்றல் தவழும் தேனியில் பற்பல திருக்கோவில்கள் உள்ளன.எங்கே ? யாராவது சொல்லுங்கள் பார்ப்போம் என்றால் வீரபாண்டி கௌமாரியம்மன் கோவிலுக்கு  தனி இடம் உண்டு.தேனியில் பிறந்து வளர்ந்த ஒவ்வொரு வரும் கண்டிப்பாக வீரபாண்டி கௌமாரியம்மன் தரிசனம் பெற்றிருப்பர்.

பாண்டிய மன்னனுக்குக் கண் பார்வை தந்த இந்தக் கோயிலில் வணங்கிச் செல்பவர்களுக்கு அம்மை மற்றும் கோடைக்கால அனைத்து வெப்ப நோய்களும் நீங்கி விடும் என்கின்றனர்.கோயிலின் தீர்த்தமாக கோயிலுக்கு அருகே ஓடும் முல்லை நதியின் நீர் பயன்படுத்தப்படுகிறது.கோயில் குறித்த தகவல்கள் சின்னமனூர் அரிகேசரி நல்லூர் தல புராணத்தில் பதினான்காம் படலத்தில் இடம் பெற்றிருக்கிறது. கோயில் கோபுரத்தில் இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகிகளான மகாத்மா காந்தி, கஸ்தூரிபா காந்தி, ஜவஹர்லால் நேரு, நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் ஆகியோரது உருவச் சிலைகள் கோபுரத்தில் இடம் பெற்றுள்ளன என்பது போன்ற பற்பல சிறப்புகள் ஆலயம் வீரபாண்டி கௌமாரியம்மன்.


அன்றைய ‘அளநாடு’ என்று அழைக்கப்பட்ட நாட்டின் ஒரு பகுதியே இன்றைய வீரபாண்டி ஆகும். ஆதிநாளில் ஒரு அசுரனை வெல்வதற்காக உமாதேவி அம்சம் பெற்ற கௌமாரியம்மன் தவம் இருந்தார். இன்று கோவில் கொண்டிருக்கும் இடம் முன்பு அடர்ந்த காடாக இருந்தது. அங்கே தவமிருந்த கௌமாரியைக் கண்டு ஒரு அசுரன் தன் கைவாளை விட்டு விட்டு சப்தமில்லாமல் தூக்கிச் செல்ல முயன்றான்.

இதனை அறிந்த தேவி பக்கத்தில் இருந்த அருகம்புல்லை எடுத்து அசுரன் மீது வீச அப்புல்லே முக்கழுப்படை என உருவெடுத்து அவனை இரு கூறாய் பிளந்ததாம். அவ்வமயம் தேவர்கள் மலர் தூவி கௌமாரியைத் தெய்வமாக்கியதாக ஸ்தல வரலாறு உள்ளது.



வீரபாண்டி மன்னன் மதுரையில் ஆட்சி செய்த போது ஊழ்வினையால் தனது இரண்டு கண்களின் ஒளியை இழக்க நேரிட்டது. கடவுளின் அருளை வேண்டினான். இறைவன் அவன் கனவில் தோன்றி இன்றைய வீரபாண்டி தலம் இருக்கும் இடத்தினை சுட்டிக்காட்டி, வைகைக்கரை ஓரமாகச் சென்று நிம்பா ஆரணியத்தில் உமாதேவி அம்சம் பெற்ற ஸ்ரீ கௌமாரியை வணங்கச் சொல்கிறார். மன்னன் கோவிலுக்கு சென்று அவள் தாழ் வணங்க கண் ஒளி பெற்றதாக வரலாறு கூறுகிறது.




சப்த கன்னியரில் ஒருவர்

இக்கோவிலில் அம்மன் கன்னி தெய்வமாகக் காட்சி அளிக்கிறார். கௌமாரி என்பது சப்த கன்னி தெய்வங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கண்நோய் கண்டவர், அம்மை வந்தவர்கள் அம்மனைத் தூய உள்ளத்துடன் வழங்கி, தீர்த்தம் பெற்றுச்சென்றால் தீராத நோயும் தீர்ந்து விடுகிறது என்று பக்தர்கள் நம்புகின்றனர். ஸ்தலவிருட்சமாக வேப்பமரம் உள்ளது. திருக்கோவில் முன்பு கருப்பணசாமி கோவில் அமைந்துள்ளது.

இதுவே காவல் தெய்வமாக உள்ளது. காவல் தெய்வத்தை அடுத்துள்ள முன் மண்டபத்தை கடந்து பிரதான வாசல் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கம்பத்தடி மண்டபம் அமைந்துள்ளது. இந்த கம்பத்தடி மண்டபத்தில் தான் சித்திரை திருவிழாவிற்காக கம்பம் நடப்படுகிறது. கம்பத்தடி மண்டபத்தை கடந்து சென்றால் மகா மண்டபம் உள்ளது. இந்த மகா மண்டபத்தினை கடந்து முன் செல்லும் போது கருவறையில் நமக்கு அன்னை கௌமாரி கன்னி தெய்வமாக சுயம்புவாக காட்சி தருகிறார்.



பிரகாரத்தைச் சுற்றி வரும் பொழுது தெற்கே விநாயகர், கன்னிமார் தெய்வமும், வடக்கே நவக்கிரக மண்டபமும் அமைந்துள்ளது. இக்கோவிலில் சித்திரைத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கேரளத்தில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் திருவிழாவிற்கு வருகை தருகின்றனர். அம்மனுக்கு முல்லை பெரியாறு ஆற்றில் இருந்து நீர் எடுத்து வந்து கோவில் வளாகத்தில் திருவிழாவிற்காக நிறுவப்பட்டுள்ள முக்கொம்பில் பக்தர்கள் நீர் ஊற்றுகின்றனர்.

பெரியாறு ஆற்றில் குளித்து விட்டு பக்தர்கள் கையில் அக்கினிச் சட்டி ஏந்தி அம்மனுக்கு நன்றி கடன் செலுத்துகின்றனர். மேலும் ஆயிரம் கண் பானை சுமர்ந்து வருதல், மாவிளக்கு படைத்தல் என இப்படியும் பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தி வருகின்றனர்.




தினம் ஒரு பட்டு

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் முதல் செவ்வாய் கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி 22வது நாள் 8 நாட்கள் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறுகிறது. இதில் கொடியேற்றம் நடந்த நாள் முதல் 21நாட்கள் அம்மன் விரதம் இருப்பார். 21நாட்களும் அம்மனுக்கு மாவு பூஜை மட்டுமே நடைபெறும். நெய்வேத்தியமாக காப்பு அரிசி மட்டும் படைக்கப்படும்.
கொடியேற்ற நாள் முதல் திருவிழா முடியும் வரை கொடி கம்பமாக நடப்படும் அத்தி மரத்தாலான முக்கொம்புக்கு மண் கலயத்தில் முல்லை பெரியாற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து ஊற்றுவது முக்கிய ஐதிகமாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த அத்திமர முக்கொம்பையே அம்மன் சிவனாக பூஜிக்கிறாள்.




அத்திமரக்கம்பம் நடப்பெற்றதிலிருந்து திருவிழா முக்கிய நாட்கள் தொடங்கும் வரை உள்ள 21நாட்கள் அத்திமர முக்கொம்பிற்கே மாவு பூஜை நடைபெறுவது சிறப்பு அம்சமாகும். சித்திரை திருவிழா நடைபெறும் எட்டு நாட்களிலும் சன்னதி இரவு, பகல் என 24 மணிநேரமும் திறக்கப்பட்டிருக்கும் திருவிழாவில் தினமும் அம்மன் ஒரு பட்டு உடுத்தி பக்தர்களின் மனதைக் குளிரச் செய்கிறார்.





சித்திரைத் திருவிழா

இந்தக் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் போது மட்டும் 24 மணி நேரமும் கோயிலில் வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த அம்மனிடம் நேர்த்திக் கடனாக வேண்டிக் கொண்டவர்கள் அக்கினிச் சட்டி எடுத்து காணிக்கை செலுத்துகின்றனர். சிலர் நாக்கில் அலகு குத்துதல் எனும் சிறிய வேலைக் குத்திக் கொண்டு அக்கினிச் சட்டி எடுக்கின்றனர். சிலர் ஆயிரம் கண் பானை எடுத்து காணிக்கையாகச் செலுத்துகின்றனர். சிலர் உடல் முழுவதும் முல்லை ஆற்றின் கரையில் உள்ள சேற்றைப் பூசிக் கொண்டு கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்கின்றனர். சித்திரைத் திருவிழாவின் போது அனைத்துப் பக்தர்களும் முல்லை ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்துச் சென்று அம்மன் கோயிலில் இருக்கும் முக்கொம்புவிற்கு ஊற்றிவிட்டு அதன்பிறகு அம்மனை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

கோயிலுக்கு நேர்த்திக் கடனாக ஆடு, கோழி போன்றவை பலியிட்டு அசைவ உணவு அன்னதானம் செய்யும் வழக்கம் கடைப்பிடிக்கப் படுகிறது. (பொதுவாக மாரியம்மன் கோயில்களில் ஆடு, கோழி பலியிடப்படுவதில்லை என்றாலும் இந்த அம்மனை அசைவ உணவு உண்பவர்கள்தான் அதிகமாக வணங்கி வருகின்றனர் என்பதால் இந்த வழக்கம் காவல் தெய்வமாக இருக்கும் கருப்பசாமியின் பெயரில் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் பலரும் மாரியம்மனுக்குத்தான் பலியிடும் வழக்கத்தை நேர்த்திக்கடனாக செய்து வருகின்றனர்.)

சித்திரைத் திருவிழாவின் போது அம்மன் அன்ன வாகனம், சிம்ம வாகனம், காமதேனு வாகனம், கருட வாகனம், குதிரை வாகனம் போன்றவற்றில் பக்தர்களுக்குக் காட்சி அளிக்கிறார். சித்திரைத் திருவிழாவில் வெள்ளிக்கிழமையன்று பூவால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் ஊர்வலமாகக் கொண்டு வரப்படுகிறார். பூப்பல்லக்கில் நகர உலா வரும் அம்மனைக் கண்டு தரிசிக்கவும், அம்மன் அருள் பெறவும் அதிக அளவில் மக்கள் வருகின்றனர்.

சித்திரைத் திருவிழாவின் போது பொழுது போக்கிற்காக ராட்டினங்கள், சர்க்கஸ் மற்றும் பல வேடிக்கை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் போன்றவை 24 மணி நேரமும் நடந்து கொண்டிருக்கிறது. கோயிலுக்கு வரும் இந்தப் பகுதி மக்கள் வாங்கிச் செல்வதற்காக குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்கள், ஆடை அணிகலன்கள், வீட்டிற்குத் தேவையான பொருட்கள் என்று பல வகையான வணிகக் கடைகள் தற்காலிகமாக அமைக்கப்படுகின்றன.


 பொழுதுபோக்கு அம்சம்

வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா என்றாலே பக்திக்கு எவ்வளவு பிரசித்தி பெற்றதோ அதே அளவிற்கு பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் பிரசித்தி பெற்றது. திருவிழாவின் போது கோவில் அருகில் உள்ள திடலில் அமைக்கப்படும் ராட்டினங்களும், கலை நிகழ்ச்சிகளும், அலங்கார பொருட்கள் விற்பனை நிலையங்களும் பக்தர்களை வெகுவாக கவரும். குறிப்பாக ராட்டினங்கள் அனைத்தும் சிறுவர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது
கோடை விடுமுறை கொண்டாட்டத்தில் சிறுவர், சிறுமிகளுக்கு இந்த ராட்டி னமும், கலை நிகழ்ச்சிகளும் நல்லதொரு பொழுது போக்கு அம்சமாக திகழ்ந்து வருகிறது.


முல்லை ஆறு 


தீச்சட்டி பிரார்த்தனை 


முளைப்பாரி 


தாயே சரணம் 



முல்லையாறு மேம்பாலம் 


முல்லையாற்றின் அழகு 


ஜோராக பஞ்சு மிட்டாய் விற்பனை 


புல்லாங்குழல் விற்பனை 




தேர் 


ராட்டினம் 

 பயண வசதி

தேனியிலிருந்து கம்பம் செல்லும் சாலையில் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் வீரபாண்டிக்கு இந்த வழியே செல்லும் அனைத்துப் பேருந்துகளும் நின்று செல்கின்றன.

இனிமேல் தொடரும் பதிவுகளில் நம்முடைய தரிசனம் அனுபவத்தை இணைத்து காணலாம்.

முந்தைய பதிவுகளுக்கு:-

 பிறந்தது ஆடி...பணிவோம் தாயை நாடி..http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_16.html




No comments:

Post a Comment