Subscribe

BREAKING NEWS

17 March 2019

வாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (18)

அனைவருக்கும் வணக்கம்.

 ஒவ்வொரு மாதத்தையும் வாழ்வாங்கு வாழ தொடர் பதிவு இன்றி நாம் கடக்க இயலாது. வாழ்வாங்கு வாழ என்ற தொடர்பதிவு இன்று பதினேழாம்   பதிவை எட்டி உள்ளது. இந்த தொடர்பதிவை தொடர்ந்து வாசித்து அதனை கருத்தில் கொள்பவர்கள் கண்டிப்பாக ஆன்மிகத்தில் புதிய நிலை தொடுவார்கள் என்பது உறுதி. ஆன்மிகத்தில் மட்டுமல்ல, நடைமுறை வாழ்க்கையிலும் புது நிலை அடைவார்கள். நாமும் இங்கேதான் உளியால் செதுக்கப்பட்டு வருகின்றோம்.


கேள்வி - தாய் தகப்பனை இழந்த நான் அவர்கள் படத்தை பூஜை அறையில் வைத்து வழிபடுவது தவறா ?

இராம் மனோகர் - "மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ, ஆசார்ய தேவோ பவ, அதிதி தேவோ பவ" என்பது தைத்ரீயோபநிஷத்தின் வாக்கு. '‘அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம்’' என்பது தமிழ் மூதாட்டி ஔவையின் வாக்கு. ''.ந மாது: தைவதம் பரம்'' - சாணக்ய நீதி. எனவே நீங்கள் உங்கள் தாயாரின் படத்தை பூஜையறையில் மாட்டி வைத்திருப்பதில் தவறொன்றுமில்லை. இறைவனே தாயை சிறப்பிக்கும் விதமாகத் தாயுமானவனாக வந்தார் என்பதையும் நினைவில் கொள்க. இறைவன் சூக்குமம் என்றால் பெற்றோர் ஸ்தூலம். இரண்டுக்கும் எந்த வேறுபாடுமில்லை.
கேள்வி - உங்களது பதிவுகளால் யாருக்காவது மனமாற்றம் ஏற்படும் என்று நினைக்கிறீர்களா ? உங்கள் மனம் மாற்றமடைந்து உள் முகமடைந்து விட்டதா ?

இராம் மனோகர் - எனது பதிவுகளைப் படிப்பதாலோ, நல்ல புத்தகங்களை வாசிப்பதாலோ அல்லது மற்றவர்களின் அனுபவங்களை கவனித்து அறிந்து கொள்வதாலோ மனமாற்றம் ஏற்பட்டு விடும் என்று சொல்வதிற்கில்லை. வாழ்வின் இரகசியத்தை, உண்மையை அவைகளால் முழுவதுமாக வெளிப்படுத்த இயலாது. அவை வெறும் வழிகாட்டுதல்கள் மட்டுமே. கைகாட்டி மரத்தைப் போல வழிகளைச் சுட்டிக் காட்டும் அவ்வளவுதான். அவரவர் தங்களது சொந்த வாழ்க்கை அனுபவங்களின் மூலமாகத்தான் கற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு கற்றுக் கொள்வதோடு தனக்குத் தானே மனமாற்றங்களையும் ஏற்படுத்திக் கொள்ள முடியும். அப்படியானால் கைகாட்டி மரத்தின் தேவை என்ன என்று கேட்க முடியுமா ? சுட்டிக் காட்டுவது மட்டுமே அதன் செயல். கைகாட்டி மரம் பழையதாக இருக்கிறது, சாய்வாக இருக்கிறது, உடைந்திருக்கிறது, நீளமாக இருக்கிறது, குட்டையாக இருக்கிறது என்று ஏதாவது ஒரு காரணத்தை முன்னிட்டு அது காட்டும் திசைக்கு எதிர் திசையில் செல்வோமேயானால், நம் பயணம் நிறைவு பெறாது. யாருக்குத் தேவையோ அவர்கள் எடுத்துக் கொள்வார்கள்.

நீங்கள் கேட்டது போலவே பலரும் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். நீங்கள் நல்ல மனப்பக்குவம் பெற்று விட்டீர்களா ?'' ஆன்மீகத்தில் உங்கள் நிலை என்ன ? என்றெல்லாம் பலவிதமாகக் கேட்டிருக்கிறார்கள். உண்மையிலேயே நான் சொல்கிறேன், எனக்கு அதைக் குறித்து ஒன்றும் தெரியாது. அதைக் குறித்து நான் சிந்தித்தது கூட இல்லை. ஆனால், எனக்குத் தரப்பட்டதை நான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். எனக்குச் சொல்லித் தந்தபடி நானும் வாழ்ந்து பார்க்கிறேன். வாழ்க்கை அனுபவங்கள் எனக்குக் கற்றுத் தரும் பாடங்களை ஏற்று, உள்வாங்கி என் எண்ணங்களை, செயல்களை, சொற்களை சீரமைத்துக் கொள்கிறேன். அனுபவங்கள் யார் மூலமாக வருகிறது என்பதை விட, அதிலிருந்து பெற்றுக் கொள்ளக் கூடிய பாடத்தின் மீதுதான் நான் என் கவனத்தை முழுவதுமாகச் செலுத்துகிறேன். இது குறித்து பேசும் பொழுது பள்ளிக் காலத்தில் நல்லொழுக்க வகுப்பில் ஆசிரியர் கூறிய கதை ஒன்று நினைவிற்கு வருகிறது.

புதிதாக கிருஸ்தவ மதத்தை தழுவிய ஒருவரைப் பற்றி ஊரில் உள்ள அனைவரும் வியந்து பேசினார்கள். அவருக்கு கிருஸ்தவ நம்பிக்கையை ஏற்படுத்திய பாதிரியாரின் கவனத்திற்கும் அந்த செய்திகள் சென்றன. எனவே அவர் அந்த மனிதரின் நிலையைப் பற்றி அறிந்து கொள்ள ஆவலுற்றார். எனவே ஒரு ஓய்வு நாளில் அவரை வரவழைத்து உடல் நலம், குடும்ப நலம் பற்றியெல்லாம் விசாரித்துவிட்டு, அவரிடம் சில கேள்விகளைக் கேட்டார் பாதிரியார். முதலில் உனக்கு பத்துக் கட்டளைகள் தெரியுமா என்று கேட்டார். அந்த மனிதரும் பத்து கட்டளையா ? அப்படி எதுவும் எனக்குத் தெரியாதே !! என்றார். சரி பத்துக் கட்டளைகள் தெரியாது, திருச் சபைக் கட்டளைகள் எத்தனை என்றாவது தெரியுமா ? எனக் கேட்டார் பாதிரியார். அதுவும் தெரியாது என்ற பதிலே வந்தது. சரி பரவாயில்லை கர்த்தர் கற்றுத் தந்த ஜெபமாவது தெரியுமா ? எனக் கேட்டார் பாதிரியார். அதுவும் தெரியாது. சரி ஜெபமாலை சொல்லத் தெரியுமா ? தெரியாது. எல்லாம் போகட்டும், பைபிளைப் பற்றியாவது தெரியுமா என்று சலிப்போடு கேட்டார் பாதிரியார். அதற்கும் தெரியாது என்ற பதிலே வந்தது. இதனால் ஆத்திரமடைந்த பாதிரியார், பிறகு உனக்கு என்னதான் தெரியும் ? என்று கத்தினார்.

அதற்கு அந்த மனிதர் ஐயா, இயேசுவை ஏற்றுக் கொளவதற்கு முதல்நாள் வரையிலும், என்னுடைய வேலை முடிந்ததும் நான் நேராகச் சாரயக் கடைக்குச் செல்வேன். சம்பாதித்த பணம் முழுவதையும் குடித்து விடுவேன். அளவுக்கு அதிகமாகக் குடித்து விடுவதால் போதை தலைக்கேறி விடும். எப்படியோ வீட்டிற்குச் சென்று விடுவேன். சம்பளப் பணம் முழுவதையும் இப்படிக் குடித்துத் தீர்த்து விட்டாயே ? இந்தக் குழந்தைகளின் உணவுக்கு என்ன செய்வது ? என்று அழும் மனைவியை அடிப்பேன், தடுக்க வரும் குழந்தைகளையும் காலால் உதைத்துத் தள்ளுவேன். காலையில் கண் விழிக்கும் பொழுது அவர்கள் காயங்களைப் பார்த்துதான் இரவில் என்ன நடந்தது என்பதே எனக்குத் தெரிய வரும். தன்னிலை மறந்து ஒரு மிருகத்தைப் போல வாழந்து வந்தேன். ஆனால், இப்பொழுதெல்லாம் அப்படியில்லை. உங்கள் கிருபையால் நான் முற்றிலும் மனிதனாக மாறி விட்டேன். வேலை முடிந்ததும் குழந்தைகளுக்கு ஏதாவது திண்பண்டங்களும், உணவு தயாரிப்பதற்கான பொருட்களையும் வாங்கிக் கொண்டு நேராக வீட்டிற்குச் செல்கிறேன். என் மனைவி என்னை மிகவும் அன்போடு கவனித்துக் கொள்கிறாள். என் குழந்தைகளை நான் அன்போடு அரவணைத்து மகிழ்கிறேன். இதற்காகத் தினமும் நானும், என் மனைவி, குழந்தைகளும் காலையும் மாலையும் இயேசப்பாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வளவுதான் எனக்குத் தெரியும் என்றார் அப்பாவியாக.

இதைக் கேட்ட பாரதியார் வாயடைத்து நின்றாராம். நான் பதிவுகள் மூலம் சொல்ல விரும்புவது இத்தகைய மாற்றத்தைதான். மன மாற்றம் என்பது வாழ்க்கை மாற்றத்தைதான். வாழ்க்கையில் அமைதியும், தன்னிறைவும் வந்து விட்டால், மனம் தானே தன்னிலையை உணரத் துவங்கும். எனது பதிவுகள் நிச்சயமாக மற்றவர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என நான் நம்புகிறேன். படிக்கிறவர்கள் மனதில் அது நல்ல ஆன்மீக நாட்டத்தை உருவாக்கும் என்பதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறது. என்றேனும் ஒரு நாள் இதன் மூலம் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைப் பெறுவார்கள் என்பதில் சந்தேகமேயில்லை. நல்லத் தரமான புற வாழ்க்கையே அகநோக்கு முயற்சிக்கு அடித்தளமாக அமைகிறது. அதற்கான விதைகளைத்தான் நான் தூவிக் கொண்டிருக்கிறேன். அதற்கான சமயம் வரும் பொழுது, அது முளைத்து, கிளர்ந்தெழும். வாழ்வு செழிக்கும், வளம் பெருகும், அமைதி நிலைத்திடும். அதுவே ஆனந்தமுமாகும்.


கேள்வி - இவர் மகான்தான் ஞானிதான் நம் குறை நீக்க வந்த குருதான் என்பதை எப்படிக் கண்டு கொள்வது?

இராம் மனோகர் - உண்மையில் ஞானியாக இருந்தால் அவரும் உங்களைப் போலவே நல்ல சீடனைத் தேடிக் கொண்டுதானிருப்பார். இந்த விஷயத்தைப் பொருத்த வரை நீங்கள் முற்றிலும் மனத் தூய்மை உடையவராக இருந்தால் மட்டுமே உங்கள் கணிப்பு சரியாக இருக்கும். ஒரு பாடல் உண்டு !!!

''உண்டால் அம்ம, இவ்வுலகம், இந்திரர்;
அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்
தமியர் உண்டலும் இலரே முனிவிலர்;
துஞ்சலும் இலர், பிறர் அஞ்சுவது அஞ்சிப்,
புகழ்எனின், உயிருங் கொடுக்குவர்; பழியெனின்,
உலகுடன் பெறினும், கொள்ளலர்; அயர்விலர்;
அன்ன மாட்சி அனைய ராகித்,
தமக்கென முயலா நோன்தாள்,
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.''



இது புறநானூறு பாடல். அமிழ்தமே கிடைத்தால் கூட, அதைத் தான் மட்டுமே உண்ண வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர், வெறுப்பு இல்லாதவர், கோபம் கொள்ளாதவர், உலகமே கிடைக்கும் என்றாலும் கூட பழிச் செயலைச் செய்யாதவர், தனக்கென் வாழாமல் பிறர் நலனுக்காக உழைத்து வாழ்பவர். இப்படி ஒருவரைக் காணக் கிடைத்தால் நீங்கள் உடனே கண்டு கொள்ளுங்கள் அவர்தான் நீங்கள் சொல்கிற மாகான், ஞானி, குரு எல்லாம்.
கேள்வி - ஒரு வேளை அது நீங்களாகவே இருக்கலாம் அல்லவா?
இராம் மனோகர் - வரம் கொடுத்தவன் தலையில கைய வச்சானாம் !!! அந்தக் கதை போலல்லவா இருக்கிறது !!!? இவற்றில் ஒரு தகுதி கூட அதாவது உயர்ந்த குணம் கூட என்னிடம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. இன்னும் கேவலமான, கீழ்மையான குணங்கள் நிறைய இருப்பதாகவே உணர்கிறேன்.

கேள்வி - கேவலம் என்று சொன்னவுடன் ஒரு கேள்வி நினைவுக்கு வருகிறது பிராணாயாமத்தில் கும்பகம் என்று சொல்கிறார்களல்லவா அதை ஏன் கேவலமான கும்பகம் என்று சொல்கிறார்கள்?

இராம் மனோகர் - ஹலோ அது கேவலமான கும்பகமில்லை. கேவல கும்பகம். அகராதியைப் புரட்டிப் பாருங்கள். நீங்கள் நினைக்கிற கேவலமல்ல இது. இதற்கு வேறு பொருள். இணையற்ற, தன்னிகரற்ற, மோட்சம் தரவல்ல என்பதாகும் இதற்குப் பொருள். அதாகப்பட்டது யோகத்தில் மனது சஞ்சலமடையக் காரணங்களான ரேசக, பூரகங்கள் பிராணனுக்கு எந்த இடத்தில் ஏற்படாதோ அந்த கும்பக நிலையை கேவல கும்பகம் என்பார்கள். கும்பகத்தில் முதன்மையானதும் அதிக பலன் தரக்கூடியதும் கேவல கும்பகமாகும்.

இதைப் பயின்றவர்கள் வாழ்நாளை நீட்டிக்கலாம். கேவல கும்பகப் பயிற்சியால் பிராணன் கட்டுப்படுகிறது. இதோடு சேர்த்து மூன்று வகை பந்தங்களையும் கையாளும் போது வேறு எங்கும் போக முடியாமல் அடைக்கப்பட்ட பிராணன் ஒருமுகப்படுகிறது. இதனால் கிளம்பும் குண்டலினியானது பிராணனை இழுத்துக் கொண்டு சுழுமுனை நாடி வழியாக ஓடி ஆறு ஆதாரங்களையும் கடந்து சகஸ்ராரப் பெருவெளியை அடைகிறது.

வெளியே காற்றை விட்ட பிறகு உள்ளே இழுக்காமலும் கும்பகம் செய்வார்கள். அதை கேவல கும்பகம் என்று சொல்வார்கள். பூரக, ரேசகங்களுடன் செய்யும் கும்பகத்தை சஹீத கும்பகம் என்பார்கள். சஹீத கும்பகத்தில் நல்ல பயிற்சி பெற்றவர்களுக்கு மட்டுமே கேவல கும்பகம் ஏற்படடும். அது அனுபவத்தினால் உண்டாகும். இந்த கேவல கும்பகத்தினால் மூலசக்தி எழும்பும். முன்னேற்றம் அடைய அடைய சுக்ஷும்னா நாடியில் உள்ள தடைகள் நீங்கி, நோயற்ற வாழ்வும், நீண்ட ஆயுளும் ஏற்படும். பிரம்ம முகூர்த்தம், அதிகாலை, மாலை,முன் இரவு, பின் இரவு வேளைகளில் பயிற்சி மேற்க்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

யோக சாதனைகள் முழுமை பெற பந்தங்கள் மிக முக்கியமானவையாகும். கழுத்தின் கீழ் ஜாலாந்திர பந்தம், வயிற்றின் கீழ் உட்டியாணம், மூலாதாரத்தில் மூலாதார பந்தம் இந்த மூன்று பந்தங்களும் கூடிய கேவல கும்பகத்தை எவர் ஒருவர் முறையாக பயிற்சி செய்கிறாரோ, அவரைக் கண்டு காலன் அஞ்சுவான். கும்பகத்தில் மூச்சை இழுத்து நிறுத்திய பின் தொண்டைக்குக் கீழே தடுத்து நிறுத்துவது ஜாலாந்திர பந்தம். இரண்டு கால்களையும் ஒரு அடி அகட்டி நின்று, இரண்டு கைகளையும் தொடையின் மீது வைத்து, நாபிக்கு கீழ் உள்ள வயிற்றுப் பகுதியைத் தளர்த்தி, உள்ளிழுத்து, முதுகுத்தண்டுவடம் நோக்கி கும்பகம் செய்வது உட்யாண பந்தம் எனப்படும். சித்தாசனத்தில் அமர்ந்து குதத்தை உள் நோக்கி இழுத்து, மூச்சை மேலே இழுத்து, இடக்கால் வைத்திருக்கும் மத்திய பாகத்தை உள்ளிழுத்து சுருக்க வேண்டும். இதுவே மூலபந்தமாகும்.
இந்த மூவகை பந்தங்களையும் கேவல கும்பகத்தோடு செய்யும் போது கழுத்து, வயிறு, மூலாதாரம் ஆகிய இடங்களில் பிராணன் கட்டப்படுவதால் குண்டலினி மேல் எழுகிறது. அது ஒவ்வொரு ஆதாரமாகக் கடக்கும் போது சாதகனுக்கு சகல சித்திகளும் உண்டாகி, முக்தி நிலை அடைவான். இதை மனோலயம் என்பார்கள். இந்த மூவகை பந்தங்களை செய்வதற்கு தேகபலம் அவசியமாகும். அதற்காகவே அஷ்டாங்க யோகத்தில் நான்காம் நிலையான பிராணாயாமத்திற்கு முன்பு மூன்றாம் நிலையாக ஆசனம் சொல்லப்பட்டுள்ளது.

''மூலத்துவாரத்தை முக்காரமிட்டிரு
மேலைத் துவாரத்தின் மேல் மனம் வைத்திரு வேலொத்த கண்ணை வெளியில் விழித்திரு
காலத்தை வெல்லுங் கருத்திது தானே.'' -திருமந்திரம்-583.

இந்த கேவல கும்பக முயற்சியால் மும்மலங்களும் நீங்கும். அதே நிலையில் மூக்கின் நுனியைப் பார்த்தவாறு கண்களை பாதி அளவு மூடி சாதனை செய்யும் போது மகா முத்திரை எற்படுகிறது. மூலாதாரத்தை இப்பயிற்சியில் அடைத்து மூலபந்தம் செய்வது அவசியம். இதை அமதஸ்கம், ஆகுஞ்சனம் என்று சொல்வார்கள். இந்த கேவல கும்பகப் பயிற்சியின் மேன்மையைப் பற்றி திருமூலர், பதஞ்சலி முனிவர், சிவவாக்கிய சித்தர் போன்ற பல சித்தர்களும் ஆதிசங்கரரும் வெகுவாக புழ்ந்து பாடுகிறார்கள்.


நன்றி : திரு.இராம் மனோகர் ஐயா 



மீள்பதிவாக :-


 வாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (17)  - https://tut-temple.blogspot.com/2019/02/17.html

வாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (16) - https://tut-temple.blogspot.com/2019/01/16.html
வாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (15) - http://tut-temple.blogspot.com/2018/12/15.html


வாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (14) - http://tut-temple.blogspot.com/2018/09/14.html

வாழ்வாங்கு வாழ- தொடர்பதிவு(13) - ஞான ஆசிரியர்கள் தின விழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/08/13.html

வாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (12) - http://tut-temple.blogspot.com/2018/07/12_7.html

 வாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (11) - http://tut-temple.blogspot.com/2018/06/11.html

வாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (10) -http://tut-temple.blogspot.com/2018/05/10.html

வாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (9) - http://tut-temple.blogspot.in/2018/04/9.html

வாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (8) - http://tut-temple.blogspot.in/2018/02/8.html

வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (7) - http://tut-temple.blogspot.in/2018/01/7_22.html

வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (6) - http://tut-temple.blogspot.in/2017/12/6.html

வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (5) - http://tut-temple.blogspot.in/2017/11/5.html

வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (4) - https://tut-temple.blogspot.in/2017/10/4.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (3) - https://tut-temple.blogspot.in/2017/09/3.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (2) - http://tut-temple.blogspot.in/2017/08/2.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (1) - http://tut-temple.blogspot.in/2017/07/1.html

No comments:

Post a Comment