Subscribe

BREAKING NEWS

06 March 2019

பாடல் பெற்ற தலங்கள் (11) - திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோயில்

இறை அன்பர்களே...

பாடல் பெற்ற தலங்கள் என்ற பதிவு நம் தலத்தில் கண்டு வருகின்றோம். அந்த வகையில் திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில், திருநெடுங்களம்,திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில்,திருமூக்கீச்சரம் பஞ்சவர்ணேசுவரர் கோயில்,திருஆனைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில், அச்சிறுபாக்கம் ஸ்ரீ ஆட்சீஸ்வரர் கோயில், திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்,உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் கோயில் என பார்த்தோம். பாடல் பெற்ற தலங்கள் வரிசையில் சைவத் தலங்களாக பார்த்து வருகின்றோம். சைவம்,வைணவ பாகுபாடு நமக்கேது? இந்த தொடர்பதிவிலேயே வைணவத்தலங்கள், திருப்புகழ் தலங்கள் என தொடர விரும்புகின்றோம்.

அந்த வரிசையில் இன்று திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோயில்







திருவேற்காடு என்றதும் அநேகருக்கு அங்குள்ள தேவி கருமாரி அம்மன் ஆலயம் தான் நினைவிற்கு வரும். ஆனால் அதே திருவேற்காட்டில் பாடல் பெற்ற சிவஸ்தலமான வேதபுரீசுவரர் ஆலயம் இருப்பது பலருக்கு தெரிந்திருக்காது. தேவி கருமாரி அம்மன் ஆலயத்திலிருந்து சுமார் 1 கி.மி தொலவில் உள்ள சிவாலயத்திற்குச் செல்ல நல்ல சாலை வசதி உள்ளது. நான்கு வேதங்களும் வேல மரங்களாய் நின்று இறைவனை இஙகு வழிபட்டதால் இத்தலம் வேற்காடு என்று பெயர் பெற்றது.




இது சுமார் 2,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது.
இத்தல முருகப்பெருமான், அருணகிரிநாதரின் 'திருப்புகழ்' பாடல் பெற்றவர். தொண்டை மண்டலத் தேவாரத் திருக்கொயில்களில் 23 வது கோயிலாகத் திகழ்கிறது. 12 பாடல்களால் திருஞான சம்பந்தர் பாடித் துதித்த திருவிடம்; சேக்கிழார் போற்றிய திருத்தலம் எனப் பல சிறப்புகளைக்கொண்டது இந்த வேதபுரீஸ்வரர் கோயில்.





கிழக்கு நோக்கி உள்ள ஆலய முகப்பு கோபுரம் ஐந்து நிலைகளை உடையதாகும். கிழக்கு கோபுர வாயில் வழியாக உள்ளே துழைந்தவுடன் உள்ள விசாலமான வெளிப் பிரகாரத்தில் கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவற்றைக் காணலாம்.

அவற்றின் பின் உள்ள 2-வது வாயில் மூலமாக உள்ளே சென்றவுடன் நேர் எதிரே மூலவர் வேதபுரீஸ்வரர் லிங்க உருவில் கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார். லிங்க உருவின் பின்புறம் சுவற்றில் சிவன் பார்வதி திருமணக் காட்சி புடைப்பு சிற்பமாக காணபாடுகிறது. அகத்திய முனிவருக்கு சிவபெருமான் திருமணக் கோல காட்சி கொடுத்த தலங்களில் திருவேற்காடும் ஒன்று. ஆலய உட்பிரகாரத்தின் இடது புறம் அகத்தியர் மற்றும் சூரியன் திருமேனிகள் காட்சி தருகின்றன. தெற்கு உட்பிரகாரத்தில் நால்வர் சந்நிதி மற்றும் 63 நாயன்மார்களின் உருவச் சிலைகளைக் காணலாம். மேற்கு உட்பிரகாரத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அநபாயச் சோழன் ஆகியோரின் உருவச் சிலைகளைக் காணலாம். வடக்குப் பிரகாரத்தில் தெற்கு நோக்கிய இறைவி பாலாம்பிகை சந்நிதி உள்ளது. மேலும் உட்பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர், கணபதி, தட்சினாமூர்த்தி, பிரம்மா மற்றும் துர்க்கை ஆகியோர் கோஷ்ட தெய்வங்களாக காணப்படுகின்றனர். 

கிழக்கு வெளிப் பிரகாரத்தில் வலதுபுறம் மேற்கு நோக்கிய சனீஸ்வர பகவான் தனி சந்நிதி இருக்கிறது. ஆலய கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் வலதுபுறத்தில் இந்த சனீஸ்வரன் சந்நிதி உள்ளது. அதன் அருகில் மூர்க்க நாயனாரும் தனி சந்நிதியில் காட்சி தருகிறார். இத்தலத்திலுள்ள முருகன் தன் கையில் வேல் இல்லாமல் வில்லும் அம்பும் ஏந்தியவாறு ஒரு காலை மயிலின் மீது வைத்துக்கொண்டு நின்றபடி பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இந்த ஆலயத்தின் தல விருட்சம் வெள் வேல மரம். தீர்த்தம் வேலாயுத தீர்த்தம்.

இத்தலம் முருகப் பெருமானின் வாழ்க்கையோடு சம்பந்தம் உடையதாகும். பிரணவத்திற்கு பொருள் கூற முடியாத பிரம்மாவை முருகப் பெருமான் கைது செய்துவிட்டார். அதனால் படைப்புத் தொழில் தடைபட்டது. சிவபெருமான் நந்தியை முருகனிடம் அனுப்பி பிரம்மாவை விடுதலை செய்யும்படி கூறச் செய்தார். ஆனால் முருகன் அதற்கு சம்மதிக்கவில்லை. இதைத் தெரிந்து கொண்ட சிவபெருமான் தானே நேரில் வந்து முருகனிடம் பிரம்மாவின் படைப்புத் தொழில் தடைபடுவதால் ஏற்படும் சிக்கல்களை விளக்கி பிரம்மாவை சிறையிலிருந்து விடுதலை செய்தார். நந்தி மூலம் சொல்லி அனுப்பியும் தன் சொல்லிறகு கட்டுப் படாத முருகனை தண்டிக்கும் பொருட்டு திருவேற்காட்டிற்குச் சென்று அங்கு தன்னை வழிபட்டு வரும்படி ஆணையிட்டார். அதன்படி முருகனும் திருவேற்காடு வந்து ஒரு தீர்த்தம் ஏற்படுத்தி சிவனை வழிபட்டார். கருவறை மேற்குப் பிரகாரத்தில் உள்ள முருகன் சந்நிதியில் முருகனுக்கு முன்னால் ஒரு சிவலிங்கம் இருப்பதைக் காணலாம். இத்தகைய அமைப்பை வேறு எங்கும் காண முடியாது. முருகன் ஏற்படுத்திய தீர்த்தம் வேலாயுத தீர்த்தம் என்ற பெயரில் ஆலயத்தின் உள்ளே இருக்கிறது. இத்தலத்திலுள்ள முருகப்பெருமான் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப் பெற்றுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது 2 பாடல்கள் உள்ளன.

இத்தலத்தில் உள்ள நவக்கிரக சந்நிதி பத்ம பீடத்தில் எண்கோண வடிவில் அமைந்துள்ளது சிறப்பிற்குரியது. இத்தலம் நவக்கிரக தோஷங்கள் நீங்குவதற்குரிய ஒரு பரிகாரத் தலமாகும்.

இத்தலத்தில் பராசர முனிவர் இறைவனை வழிபட்டுள்ளார். இம்முனிவர் ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் புலமை பெற்றவர். எனவே ஜோதிடம் சொல்வதை தொழிலாகக் கொண்டவர்கள், ஜோதிடத்தில் புலமை பெற விரும்பவர்கள், ஜோதிடம் கற்க விரும்புவர்கள் ஆகியோர் இத்தல இறைவனை வழிபடுதல் நன்மை தரும்.


63 நாயன்மார்களில் ஒருவரான மூர்க்க நாயனார் அவதரித்த மண்.இவர் சிவனடியார்களுக்கு உணவு கொடுத்து வரும் சிவத்தொண்டைத் செய்து வந்தார். நாளடைவில் இவரின் செல்வம் யாவும் இவரின் இந்த சிவத்தொண்டில் கரைந்துவிட, சூதாட்டத்தில் ஈடுபட்டு அதன் மூலம் வரும் செல்வத்தை சிவனடியார்களுக்கு உணவிட செலவு செய்து தனது திருத்தொண்டை தொடர்ந்து நடத்தினார்.




இத்தலத்தில் அகத்திய முனிவர் வழிபட்டு சிவபெருமானின் திருமண திருக்கோலத்தைக் கண்டதால், இத்தலம் ஒரு திருமண தடை நீங்கும் தலமாக விளங்குகிறது. மேலும் இத்தலம் நவக்கிரக தோஷம் தீக்கும் தலமாகவும் உள்ளது. ஆதிசேஷனும் இத்தல இறைவனை வழிபட்டுள்ளதால். இத்தலத்தில் அரவம் தீண்டி யாரும் மரிப்பதில்லை என்று தல புராணம் விவரிக்கிறது.





 சந்திரர், சூரியர், தாமரை வடிவில் நவகிரகங்கள் உள்ளனர். பிராகாரத்தின் தென்புறத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, பிள்ளையாரைத் தனித் தனியாகத் தரிசிக்கலாம். சைவக் குரவர்கள் நால்வர், 63 நாயன்மார்கள் வரிசையாக எழுந்தருளியிருப்பது பரவசத்தைத் தருகிறது. மேற்குப் புறத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அநபாய சோழன், சேக்கிழார், வடக்கே சண்டிகேஸ்வரர், நின்ற கோலத்தில் பிரம்ம தேவன், துர்க்கை முதலிய தெய்வங்களும் எழுந்தருளி இருக்கின்றனர்.
















கருவறையின் பின்புறத்தில் லிங்கோத்பவர் அருள்புரிகிறார். மாத சிவராத்திரி நாள்களில் மாலை வேளையில் அவருக்கு 5 நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் வாழ்க்கை இனிதாகும். கல்வி, ஞானம், செல்வம், இறையருள் கிட்டும்.



பாலாம்பிகை தெற்கு நோக்கியபடி தனிச் சந்நிதியில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். அருகில் நடராஜர், சிவகாமி அம்பாள் உள்ளனர். அம்பிகை சந்நிதி அருகில் பைரவர் உள்ளார். இவரை சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டுவந்தால் அஷ்டமச் சனி, ஏழரைச் சனி, 'அர்த்தாஷ்டமச் சனி' பாதிப்புகள் விலகும்.

சனீஸ்வரருக்குத் தனிச் சந்நிதி பெரிதாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அருணகிரிநாதர், மூர்க்க நாயனாருக்கும் தனிச் சந்நிதிகள் உள்ளன.

முருகப் பெருமான், சுப்பிரமணியராகக் காட்சியளிக்கிறார். சூரசம்ஹாரம் முடிந்த பின்னர், சூரபத்மனைக் கொன்ற பாவம் நீங்க வேலால் கிணறு உருவாக்கி (வேலாயுதத் தீர்த்தம்), இத்தலத்தில் உள்ள வேதபுரீஸ்வரரை வழிபட்டார். அந்த 'ஸ்கந்த லிங்கம்' முருகனுக்கு முன்பாகவே வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து 9 ஞாயிற்றுக்கிழமைகள் அல்லது கார்த்திகை மாத ஞாயிறு, திங்கள்கிழமைகளில் நீராடி வேதபுரீஸ்வரரை வழிபட்டால் தோல் சம்பந்தமான நோய்கள் அகலும் என்பர். பிராகாரத் தூணில் ஐந்துதலை நாகம் குடைப்பிடிக்க, காலடியிலும் நாகத்துடன் தேவி கருமரியம்மன் வீற்றிருக்கும் சிற்பம் சிறப்பு வாய்ந்தது.







சம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது


1. ஒள்ளிது உள்ளக் கதிக்கு ஆம் இவன் ஒளி
வெள்ளியான் உறை வேற்காடு
உள்ளியார் உயர்ந்தார் இவ்வுலகினில்
தெள்ளியார் அவர் தேவரே.
 
2. ஆடல் நாகம் அசைத்து அளவில்லாது ஓர்
வேடங் கொண்டவன் வேற்காடு
பாடியும் பணிந்தார் இவ்வுலகினில்
சேடர் ஆகிய செல்வரே. 
 
3. பூதம் பாடப் புறங்காட்டு இடை ஆடி
வேத வித்தகன் வேற்காடு
போதும் சாந்தும் புகையும் கொடுத்தவர்க்கு
ஏதம் எய்துதல் இல்லையே.

4. ஆழ்கடல் எனக் கங்கை கரந்தவன்
வீழ்சடையினன் வேற்காடு
தாழ்வு உடை மனத்தால் பணிந்து ஏத்திட
பாழ்படும் அவர் பாவமே. 

5. காட்டினாலும் அயர்த்திடக் காலனை
வீட்டினான் உறை வேற்காடு
பாட்டினாறல் பணிந்து ஏத்திட வல்லவர்
ஓட்டினார் வினை ஒல்லையே.

6. தோலினால் உடை மேவ வல்லான் சுடர்
வேலினான் உறை வேற்காடு
நூலினால் பணிந்து ஏத்திட வல்லவர்
மாலினார் வினை மாயுமே. 

7. மல்லல் மும்மதில் மாய்தர எய்ததோர்
வில்லினான் உறை வேற்காடு
சொல்ல வல்ல சுருங்கா மனத்தவர்
செல்ல வல்லவர் தீர்க்கமே. 

8. மூரல் வெண்மதி சூடும் முடியுடை
வீரன் மேவிய வேற்காடு
வாரமாய் வழிபாடு நினைந்து அவர்
சேர்வர் செய் கழல் திண்ணமே. 

9. பரக்கினார் படு வெண்தலையில் பலி
விரக்கினான் உறை வேற்காட்டூர்
அரக்கன் ஆண்மை அடரப்பட்டான் இறை
நெருக்கினானை நினைமினே. 

10. மாறிலா மலரானொடு மாலவன்
வேறு அலான் உறை வேற்காடு
ஈறு இலா மொழியே மொழியா எழில்
கூறினார்க்கு இல்லை குற்றமே.
 
11. விண்ட மாம்பொழில் சூழ் திருவேற்காடு
கண்டு நம்பன் கழல்பேணிச்
சண்பை ஞானசம்பந்தன செந்தமிழ்
கொண்டு பாடக் குணமாமே.






ஆலய முகவரி :-

அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோவில்
திருவேற்காடு அஞ்சல்
திருவள்ளூர் மாவட்டம்
PIN - 600077

இவ்வாலயம் காலை 6-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.





எப்படி செல்வது?

சென்னை - பூவிருந்தமல்லி பிரதான சாலையில் சுமார் 17 கி.மி. பயணம் செய்து 
வேலப்பன் சாவடி என்ற இடம் அடைந்து, பிறகு வலது புறம் பிரியும் ஒரு 
கிளைச்சாலை வழியாக சுமார் 3 கி.மி. சென்றால் இந்த சிவஸ்தலத்தை அடையலாம். 
சென்னை நகரின் பல பகுதிகளிலிருந்தும் திருவேற்காடு செல்வதற்கு பேருந்து 
வசதிகள் உள்ளன. திருவேற்காடு பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1 கி.மி. 
தொலைவில் ஆலயம் உள்ளது.


மீள்பதிவாக :-


 பாடல் பெற்ற தலங்கள் (10) - திருநணா சங்கமேசுவரர் கோயில் -
 https://tut-temple.blogspot.com/2019/02/10_23.html


பாடல் பெற்ற தலங்கள் (9) - 
வரம் தரும் வயலூர் முருகன் - https://tut-temple.blogspot.com/2019/01/9.html

பாடல் பெற்ற தலங்கள் (8) - 
கற்குடியில் விழுமியானைக் கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே - https://tut-temple.blogspot.com/2018/12/8.html

பாடல் பெற்ற தலங்கள் (7) - 
திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில் - http://tut-temple.blogspot.com/2018/11/7.html

பாடல் பெற்ற தலங்கள் (6) - 
கும்பாபிஷேகத்திற்கு காத்துக் கொண்டிருக்கின்றார் அச்சிறுபாக்கம் ஸ்ரீ ஆட்சீஸ்வரர் - http://tut-temple.blogspot.com/2018/10/6.html

பாடல் பெற்ற தலங்கள் (5) - 
திருஆனைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில் - http://tut-temple.blogspot.com/2018/09/5.html

பாடல் பெற்ற தலங்கள் (4) - 
திருமூக்கீச்சரம் பஞ்சவர்ணேசுவரர் கோயில் - http://tut-temple.blogspot.com/2018/08/4.html

பாடல் பெற்ற தலங்கள் (3) - 
திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில் - http://tut-temple.blogspot.com/2018/07/3.html

பாடல் பெற்ற தலங்கள் (2) - 
திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில் - http://tut-temple.blogspot.com/2018/06/2.html

பாடல் பெற்ற தலங்கள் (1) - திருநெடுங்களம் - http://tut-temple.blogspot.com/2018/05/1.html


No comments:

Post a Comment