Subscribe

BREAKING NEWS

25 January 2018

தேடல் உள்ள தேனீக்களாய் - இரண்டாம் ஆண்டு விழா அழைப்பிதழ்

அனைவருக்கும் வணக்கம்.

நம்முடைய வாழ்க்கைப் பயணத்தில் சில நிகழ்வுகள் நம்மையறியாது நம்முள் சிலவற்றை நிகழ்த்தும். அது போன்ற ஒரு பயணமே தேடல் உள்ள தேனீக்களாய் குழு, அதன் சேவைகள், தளப் பதிவுகள் என்று. இங்கே நாம் நம்மைப் பற்றிய சுய புராணம் பாட விரும்பவில்லை. ஆனால் நாம் எப்படி தேடல் உள்ள தேனீக்களாய் குழுவில் பயணத்தை தொடர்ந்து வருகின்றோம் என்ற நினைவுகளை இங்கே பதிவு செய்ய விரும்புகின்றோம்.

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், நானும் எனது அலுவலக நண்பர்களும் இணைந்து, பிப்ரவரி மாதம் அன்னதானம் செய்ய முற்பட்டோம், உடனே எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுத்தோம். அலுவலக நண்பர்களின் உதவியுடன் சுமார் 10 உணவுப் பொட்டலங்கள் தயார் செய்து, கடவுளின் ஆசி பெற்று, கூடுவாஞ்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் நேரில் சென்று, உணவின்றி இருப்பவர்களுக்கு கொடுத்தோம். மன நிறைவாய் இருந்தது. இதே போல் தொடர்ந்து அன்னசேவை செய்தோம். அடுத்து வந்த நிகழ்வுகளில், உணவகங்களில் 5 இட்லி, 1 வடை, தண்ணீர் பாக்கெட் என தயார் செய்து கொடுத்து வந்தோம்.

நாம் கூடுவாஞ்சேரி வந்து சுமார் இரண்டாண்டு கடந்த நிலையில், இங்கே வள்ளலார் கோயில் இருப்பது பற்றி அறியவில்லை. ஆனால் முதல் அன்னசேவை முடித்து செல்லும் போது, வள்ளலார் கோயில் கண்ணில் தென்பட்டது. அருட்பெருஞ்ஜோதியை வழிபட்டு, அங்கே நடைபெறும் அன்னசேவை பற்றி கேட்டு தெரிந்து கொண்டோம். உறவுகளின் உதவி அதிகமாய் இருந்த போது, இங்கே அன்னசேவை செய்தோம்.

மாதங்கள் செல்ல,செல்ல உழவாரப் பணி செய்ய விரும்பினோம். உடனே குருவின் அருளினால் பெருங்களத்தூரில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் கோயிலில் எங்களால் இயன்ற அளவில் உழவாரப் பணி செய்தோம்.முதன் முதலாக செய்த உழவாரப் பணி, உள்ளத்தில் இன்னும் தித்திப்பாய் உள்ளது. சுமார் 10 பேர் கொண்ட குழுவில் இறங்கி பணியை செய்தோம். அடுத்த அன்னசேவையை வள்ளலார் நெறி பரப்பும் கொளப்பாக்கம் சந்தானம் ஐயா மூலம் திருப்போரூர் முருகன் கோயிலில் செய்தோம்.

அடுத்த அன்னசேவை கூடுவாஞ்சேரி வள்ளலார் கோயில் என தொடர்ந்தது. பின்னர் இங்கிருந்து தான் பிருகு மகரிஷியின் அருளும்,சித்தர்களின் வழிகாட்டலும் தொடங்கியது.

மாதம் மாதம் அன்னசேவை மட்டும் தொடர்ந்து கொண்டே வந்தது. அப்போது அகத்தியர் லோபாமுத்ரா கல்யாண தீர்த்தம் கோயில்,அத்ரி மலை செல்ல வழிகாட்டல் கிடைத்தது. இதில் சில அகத்திய அடியார்கள் நம்முடன் இணைந்தார்கள். அருமையான தரிசனம், அகத்தியரின் அன்பில் திளைத்த தருணம் என உணர்ந்தோம்.

பின்னர் பெருங்களத்தூரில் உள்ள ஆதீஸ்வரர் சேவை நிறுவனம் சென்று, அவர்களுக்குத் தேவையான பாத்திரங்கள், காய்கறிகள் என வாங்கி கொடுத்தோம், அங்கிருக்கும் ஒரு சிறுமி பள்ளிக்கட்டணம் செலுத்தினோம். இந்த கால கட்டத்தில் அன்னசேவையானது நாம் வழக்கமாக செய்யும் நேரடி வழங்குதல், கூடுவாஞ்சேரி வள்ளலார் கோயில் என தொடர்ந்தது. புதியதாக புழக்கத்தில் வந்த ரூ.2000 வந்ததும் நாம், நம் தளம் சார்பாக செய்த முதல் காரியம். அன்னசேவைக்காக கொடுத்ததே.இது போல் இன்னும் இன்னும் ஏகப் பட்ட தருணங்கள்.

2017 ஆண்டு பொங்கல் முடித்து, அப்படியே இரண்டாம் ஆண்டின் தொடக்கத்தை கொண்டாட நினைத்தோம். இதனை மரம் நடு விழாவாக செய்ய குருவின் அருள் கிடைத்தது. வார்தா புயலும் வெளுத்து வாங்கி விட்டதால், நம்மால் இயன்ற விழிப்புணர்வை திரு.முல்லைவனம் ஐயா அவர்களோடு செய்ய முற்பட்டோம். நாட்கள் செல்ல செல்ல , கடைசியாக இரண்டாம் ஆண்டு விழா தொடக்கம் சிறிய அளவில் சுமார் 50 மரக்கன்றுகளை கூடுவாஞ்சேரியில் இருந்து செல்லும் நெடுஞ்சாலையில் சரியாக Zoho நிறுவனத்தில் வெளியே நட்டோம். மன நிறைவான தருணம் அது.

இவ்வாறு தொடர்ந்த பயணம், மார்ச் 2017 க்கு பிறகு பேரிடியாக நின்று விட்டது, 2017 ஆம் ஆண்டு சில தழும்புகளை உடலில் ஏற்படுத்தி விட்டது, தேடல் உள்ள தேனீக்கள் அப்படியே ஓரிடத்தில் நின்று விட்டது. மிகவும் சமாளிக்க முடியாத கால கட்டம், அப்படியே விட்டு விட்டோம். அப்படியே நாட்கள் நகர்ந்தது. ஏன் நமக்கு மட்டும் இப்படி என்று கூட யோசித்தோம்? தேடல் உள்ள தேனீக்கள் குழு அவ்வளவு தானா? நிறைவுக்கு வந்து விட்டோமா? என்றெல்லாம் ஆயிரமாயிரம் கேள்விகள் நெஞ்சை துளைத்தன.

அப்போது தான் வாழ்க்கை என்றால் என்ன என்று புரிந்தது. நம்முடன் இருந்த சக உறவுகள் நமக்கு புது ரத்தம் பாய்ச்சினர். குருவின் அருள் பற்றி உணர்ந்தோம்.இதோ நம்முடன் சில மகளிர் அணியினர் சேர்ந்தனர். நாம் வாழும் காலம் கொஞ்சமே..இதற்குள் தேடல் உள்ள தேனீக்களாய் மீண்டும் தேன் தேடி பயணிக்க செய்ய வேண்டும் என்று தோன்றியது.

பெருங்களத்தூர் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமத்தில் உழவாரப் பணி செய்தோம். அகத்தியர் வனம் மலேஷியா குழுவினர் நம்மோடு அன்னதானம் செய்ய விரும்பினர், நமக்கு தோளோடு தோள் தந்தார்கள்.
குருவின் அருளினால், கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலுள் அருள்பாலிக்கும் அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை என தொடர்ந்தோம். இது நாள் வரை சேவையில் எங்குமே இடர்ப்பாடு வந்ததில்லை.

அப்படியே ஆன்மிக யாத்திரையாக உழவாரப்  பணியோடு ஓதியப்பர் தரிசனம், சித்தர்களின் ராஜ்யமான சதுரகிரி யாத்திரை, பாவங்கள் போக்க பாப விநாசம் தரிசனம் என்று மூன்று யாத்திரைகள் மேற்கொண்டோம்.

உழவாரப்பணியைப் பொறுத்த வரை, பெருங்களத்தூர் சதானந்த சுவாமிகள் ஆசிரமம், மயிலை குழந்தைவேலர் திருக்கோயில், திருமால் மருகன் ஆலயம், துளசீஸ்வரர் ஆலயம், கந்தலீஸ்வரர் கோயில், திருஊரகப் பெருமாள் கோயில் என தொடர்ந்து வருகின்றோம்.

அன்னசேவையும் கூடுவாஞ்சேரியில் ஆரம்பித்தோம், இப்போது தனியாக வண்டியில் வைத்து வேளச்சேரி போன்ற சுற்றுப்புறங்களில் செய்து வருகின்றோம். சென்ற முறை சைதாப்பேட்டை பகுதிக்கு சென்றோம். அன்னசேவையில் நம்மோடு கைகோர்த்துள்ள மலேஷியா அகத்தியர் வனம் குழுவிற்கு நன்றி. மேலும் அன்னசேவையில் உறுதுணையாய் இருக்கும் சிவகுமார் அவர்களுக்கும் நன்றி.

அகத்தியர் ஆயில்யம் பூசையும் மாதந்தோறும் மெருகேறி வருகின்றது. முதல் பூசையில் சுமார் 5 நபர்களோடு ஆரம்பித்த பூசை தற்போது சுமார் முப்பது நபர்களுக்கு மேல் வந்து ,தரிசனம் பெரும் அளவிற்கு அகத்தியர் அருள் பாலித்து வருகின்றார்.சென்ற மாதம் நடைபெற்ற மகா குரு பூசையில் உலக மக்கள் இன்புற்று வாழ வேண்டி, 108 விளக்கேற்றி வழிபட்டோம்.இது தவிர , மருதேரி பிருகு மகரிஷி ஆசிரமத்திற்கு நம்மால் இயன்ற சேவையை செய்து வருகின்றோம்.

நம் குழுவின் முக்கிய பணியாக இது நாள் வரை நாம் கை கொள்வது உழவாரமும், அன்னதானமும். இப்போது அகத்தின் ஈசன் வழிபாடும் சேர்ந்து வருகின்றது. இது தவிர அமாவாசை அன்னதானமும் செய்து வருகின்றோம், சென்ற அமாவாசை அன்னதானம் தேனியில் சுமார் 10 உறவுகளுக்கு வழங்கப்பட்டது.

இதோ. நாம் மூன்றாம் ஆண்டில் இந்த பிப்ரவரியில் அடியெடுத்து வைக்கின்றோம். இரண்டாம் ஆண்டு விழாவை நம்மால் இயன்ற ஒரு சிறிய விழாவாக கொண்டாட இருக்கின்றோம். இந்த விழாவில் அகத்தியர் கீதம் ஒலித்தட்டு வெளியீடும், சத்சங்கமும், அன்பர்கள் சந்திப்பும்,கலந்துரையாடலும் உள்ளது.அழைப்பிதழை இணைத்துள்ளோம். அனைவரும் வந்து, விழாவினை சிறப்பிக்குமாறு தேடல் உள்ள தேனீக்களாய் குழுவின் சார்பாக கேட்டுக் கொள்கின்றோம்.



தேடல் உள்ள தேனீக்களாய் குழு - TUT இரண்டாம் ஆண்டு விழா & "அகத்தியர் கீதம்" ஒலி குறுந்தகடு வெளியீட்டு விழா


இடம்: சதானந்த சுவாமிகள் ஆசிரமம், பெருங்களத்தூர்
நேரம் : காலை 9 மணி முதல் மதியம் 1:00 மணி வரை


காலை 9:00    இறை வணக்கம் - திருமதி. ரமா சங்கர்
            9:05    வரவேற்புரை - திருமதி. மாலதி ராஜகுமார்
            9:10    வாழ்த்துரை - திரு.ஹரிமணிகண்டன் அவர்கள், பெருங்களத்தூர்
            9:20    சிறப்பு விருந்தினர் உரை - சிவத்திரு.வேதகிரி அவர்கள்,திருமுறை & திருப்புகழ் சொற்பொழிவாளர்,சைதை   - திருமுறைச்
                       சிந்தனைகள்
            10:30  TUT உழவாரப் பணி பேனர் வெளியீடு - திரு.சு.சுரேஷ் பிரியன் அவர்கள், நால்வரின் பாதையில் (276 திருமுறை பாடல் பெற்ற
                       திருத்தல  யாத்திரைக் குழு )
           10:40  சிறப்பு விருந்தினர் உரை- திரு.K.செல்வக்குமார்  அவர்கள், இயற்கை நல்வாழ்வியல் அறக்கட்டளை,சின்னமனூர் -
                      தொண்டாற்றி இன்பம் காண்போம்
           11:45  TUT அன்னதானம் பேனர் வெளியீடு - திரு.முல்லைவனம் அவர்கள்,இயற்கை ஆர்வலர் & நிறுவனர், ட்ரீ பேங்க்
           11:50  "அகத்தியர் கீதம்" ஒலி குறுந்தகடு வெளியீடு - திரு.முல்லைவனம் & திரு.சுரேஷ் பிரியன் - முதல் குறுந்தகட்டை பெறுபவர் -
                      செல்வி. சௌமியா
           12:00  அன்பர்கள் அறிமுகம் மற்றும் அனுபவ உரை
           12:30  மரியாதை செய்தல்
           12:45  நன்றியுரை - திரு. R. ராகேஷ்,TUT
            1:00    அன்னம்பாலிப்பு
------------------------------------------------
நிகழ்ச்சி தொகுப்பு: M.R.ரித்திஷ் பரத்
நிகழ்ச்சி ஏற்பாடு : திரு. N.சந்திரசேகரன் & தேடல் உள்ள தேனீக்களாய் குழு - TUT 
மேலும் விபரங்களுக்கு : 7904612352  / 9677267266
இது நாள் வரை நாம் சேவையில் ஈடுபட்ட நிகழ்வின் துளிகளை இங்கே சிறிதாய் இணைத்துள்ளோம்.



 




















இந்த அழகிய தருணத்தில் நம்மோடு உறுதுணையாகவும், உற்றதுணையாகவும் இருந்து வரும் பொருளாதாரம், தள உதவி, உழவாரப்பணி போன்ற நிகழ்வுகளில் உடல் உழைப்பைத் தந்து, நமக்கு ஆக்கமும்,ஊக்கமும் அளிக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் இங்கே நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஏற்கனவே சொன்னபடி, இதோ நீதி நெறியோடு 

பயனற்றவை ஏழு 

ஆபத்துக்கு உதவா பிள்ளை அரும்பசிக்கு உதவா அன்னம் 
தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்திரம் அறியாப் பெண்டிர் 
கோபத்தை அடக்கா வேந்தன் குருமொழி கொள்ளாச் சீடன் 
பாபத்தைத் தீராத் தீர்த்தம் பயனிலை ஏழுந்தானே 

முந்தைய பதிவிற்கு :

 எங்களின் ஓராண்டு பயணம்..  - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_18.html

No comments:

Post a Comment