Subscribe

BREAKING NEWS

19 June 2018

பாவ புண்ணியக் கணக்குகள் பார்க்கலாமா?

அனைவருக்கும் வணக்கம்.

நம் தளத்தின் ஆரம்பத்தில் நூல் அறிமுகம் என்று சில பதிவை பார்த்திருப்பீர்கள். அதில்
 "ஜீவ அமிர்தம்" பருகலாமே!  என்ற தலைப்பிலான பதிவில் "ஜீவ அமிர்தம்"  மாத இதழ் பற்றியும்,  மானுட நண்பனாய் "சன்மார்க்க நேசன்" என்ற பதிவில் சன்மார்க்க நேசன் என்ற மாத இதழ் பற்றியும்.  பிழைத்தலில் இருந்து வாழ்தல் நோக்கி - ஒரு நூல் அறிமுகம்  என்ற தலைப்பில் "சிந்திப்போம் சிந்திக்க வைப்போம் " என்ற நூல் பற்றியும்,  ஐந்தே ரூபாயில் ஆரோக்கியம் பெறலாமே - இம்மாத புத்தக அறிமுகம்  என்ற பதிவில் இயற்கை மருத்துவம் மாத இதழ் பற்றியும் கண்டிருக்கின்றோம். இதுவரை நாம் தொகுத்த நூல்கள் இதோ

1. ஜீவ அமிர்தம்
2. சன்மார்க்க நேசன்
3. சிந்திப்போம் சிந்திக்க வைப்போம்
4. இயற்கை மருத்துவம்

இந்த வரிசையில் இன்றைய பதிவில் இடம் பெறப் போவது "பாவ புண்ணியக் கணக்குகள் " என்ற நூலே ஆகும்.




மனித வாழ்க்கையில் சம்பாதிக்க வேண்டியவை புண்ணியங்களும், ஆசீர்வாதங்களும்! சம்பாதிக்ககூடாதவை சாபமும், பாவமும்!

முடவனை மூர்க்கன் அடித்தால், மூர்க்கனை முனி அடிக்கும். பலரது பாவத்தையும், சாபத்தையும் பெறுகிறவர்கள் வெளியில் தெரியாமல் பூமியில் இருந்து அடித்துத் தூக்கி எறியப்படுகிறார்கள்.

நூலின் உள்ளே...

கண் திருஷ்டி, மாந்திரீகம் யாரைப் பாதிக்கும்? கூலி,வேலி, தாலி, மனிதன் சிக்கிக்கொள்ளும் பிரச்னைகள்! உச்சிக்குழி ரகசியம்!  ஞானத்திற்கு வழிகாட்டும் வேளாண்மை!

வாழும் கடவுள் யார்? ஆன்ம இரகசியம்!-தண்டனை உடலுக்கா, ஆன்மாவுக்கா? பணம் பணம் என்று ஓடுகிறார்கள்! கடைசியில்...

கடந்த ஜென்மம், மறுபிறப்பு! உணவில் அசைவம் சேர்க்கலாமா? ஆன்மா,உயிர் வேறுபாடு? எரிப்பதா? புதைப்பதா? மேலும் பல தலைப்புகளுக்கு ஞான விடை தருகிறது. என்று அட்டைப்படத்தில் போட்டிருந்தார்கள். நம்மை அப்படியே தூக்கி வாரிப்போட்டது. உடனே நூல் ஒன்றை இணைய வழியே வாங்கினோம்.



மேலும் ஆசிரியர் இந்நூலில் மானுடப் பிறப்பு முதல் இறப்பு வரையிலான நிகழ்வுகளோடு சுற்றுச் சூழலுக்கும் மதிப்பளித்து மரம் வளர்த்தலின் புனிதத்தையும் வேளாண்மை மாண்பையும் அறிவுறுத்தி ஆறறிவு முதல் ஓரறிவு உயிர்கள் வரை அனைத்தையும் உற்று நோக்கி, அவற்றின் செயல்பாடுகளை உணர்த்தியமை மிகுந்த பாராட்டுக்குறியது.

எளிதில் புரிதிறனை அளிக்காத பொருண்மையுடைய தத்துவங்களை யதார்த்தமான வாழ்வியல் நிகழ்வுகளோடு கசப்பான மருந்தை இன்சுவையுடன் வழங்குவதற்கேற்ப மன்னுயிர் வாழ்வு மேன்மையடைவதற்கான வழிமுறைகளை இயம்பியமை போற்றுதலுக்குறியது.
ஆன்ம உணர்வுகளைத் தெளிந்த சிந்தனையுடன் உலகளாவிய பார்வையுடன் உணர்த்தியமை தத்துவ உலகிற்கு இந்நூல் ஒரு மைல் கல்லாகத் திகழ்கின்றது.

மனித உணர்வுகளுக்கான ஞானவிடைகளை இன்னும் சற்று இலக்கிய உவமைகளுடன், (திருமந்திரம், தாயுமானவர், பட்டினத்தார்) அமைந்திருப்பின், இந்நூல் மட்டற்ற பொலிவுடன் ஆய்வுலகிற்கு வரப்பிரசாதமாக அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.


னித வாழ்விற்கு இன்றியமையாத அறிவுப்பூர்வமான உணர்வுகளை மிக ஆழமாக, அழகாக, நுணுக்கமாக, எளிமையாக, தெளிவாக, நிறைவாக கொண்டு இந்நூல் அமைந்துள்ளது. யதார்த்தமான வாழ்வியல் சூழலில் மனித உணர்வுகள் ஆளுமை நிறைந்த நேர்மறையான சிந்தனையுடன், எதிர்மறை சிந்தனைகளை அகற்றி, அவரவர் வினைபயனுக்கேற்ப பாவ புண்ணியங்களை அடைவார்கள்; இவ்வுலகில் மக்கள் அறியாமை எனும் இருண்மையில் மூழ்கியுள்ள அக இருண்மையை நீக்கி ஆன்மபலம் நிறைந்த ஞானத்தின் வடிவமாக, உயிரின் அடிநாதமாகிய பெற்றோரைப் போற்றினால் உன்னத உயர்வை அடையலாம் என்பதை ஆணித்தரமாக உணர்த்தியுள்ளார்.முதலில் பெற்றோரை வணங்குங்கள் என்று கூறியது நம்மை ஆழப்படுத்தியது. காலில் விழுந்து ஆசி வாங்குதல் என்பது எவ்வளவு பெரிய ஆசி என்று நமக்கு அதற்கு பின்தான் புரிந்தது. கை குலுக்குதலை முதலில் விட்டு, நெஞ்சில் இரு கரம் கூப்பி வணக்கம் செலுத்த பழகுங்கள். நம்மை விட மூத்தோர் எனில் காலைத் தொட்டு வணங்குங்கள்.






மனித வாழ்வியற்கான பிரச்சனைகள்; அப்பிரச்சனைகளிலிருந்து தன்னைக் காத்து மீள்வதற்கான நெறிமுறைகளையும்; சமூகத்தின் அவலங்களுக்குக் காரணிகளாகிய சாமியார் முதல் ஆன்ம உணர்வற்ற மனிதர்கள், அறியாமை உள்ளங்கள் என்றும்; வாழ்விற்குப் பணம் அவசியமானது;ஆனால் பணமே வாழ்க்கை அல்ல என்பதையும்; வாழ்வியலை வரமாகவும் சாபமாகவும் மாற்றுவது மனித ஆன்ம அறிவுப்பூர்வமான ஆக்க உணர்வுகளால் இயலும் என்பதைப் புலப்படுத்தியுள்ளார். ஒருவன் நல்லவனாகவும், கெட்டவனாகவும் வாழ சூழ்நிலை தான் காரணம் என்பதை நறுக்குத் தெறித்தார் போல் மேலே கூறியுள்ளார்.



பாவமும்,சாபமும் வேண்டாம், சம்பாதிக்க வேண்டியது ஆசிர்வாதமும், புண்ணியங்களுமே என்பது தான் இந்த நூல் சொல்லும் அடிப்படைக் கருத்து.


சில நிகழ்வுகள், மனிதனின் அறிவுக்கு (Intelligence) எட்டாத நிலையில்தான் ஞானம் (wisdom) பிறக்கிறது. அறிவு என்பது உடல் வலிமையை போன்றது எனில், ஞானம் மனவலிமையைப் போன்றது. உடல் வலிமையை, அதன் பொலிவை கண்களால் காண இயலும். மனவலிமையை உணரவே இயலும்.  அறிவு மனசாட்சியை மீறி விடும். ஞானம் மனசாட்சியாய் செயல்படும். அறிவு ஒன்றின் மீது பற்றுக்கொள்ளும். ஞானம் எல்லாவற்றோடும் பழகும், எதன் மீதும் பற்றுக்கொள்ளாது. அறிவை, அழிவுக்கும் பயன்படுத்தலாம். ஞானத்தால் அது முடியாது. 
.
அறிவு பாவ,புண்ணியங்களை ஏற்றுக் கொள்ளாது. நாட்டில் பாவ புண்ணியங்கள் நடமாடுவதற்கு ஆதாரம் இருக்கா? சாட்சி இருக்கா? என வினா எழுப்பும். ஞானம் பாவ, புண்ணிய கணக்குகளையே அடிப்படை ஆதாரமாக எடுத்துக் கொள்ளும். அறிவு பிரார்த்தனைகளை, ஆசீர்வாதங்களை நம்பாது. ஞானம் பிரார்த்தனைகளை, ஆசீர்வாதங்களை மீறாது.
.
அறிவு வளர்ச்சியால் மனிதன் காட்டுமிராண்டி வாழ்விலிருந்து வசதியான சூழல்களை உருவாக்கினான். அதே மனிதன் ஞானம் பெற்றதால்தான்…ஈவிரக்கம், அன்பு, கருணை போன்ற விலைமதிப்பில்லா உணர்வுகள் தோன்றின.  மனித சமூகத்தில் அமைதி விளைந்தது. மனிதனில் அற்றல் நல்வழிக்கு திருப்பிவிடப்பட்டன. ஆலம் விழுதுகளைப் போல் ஞான ஆற்றல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பூமியில் இன்றும் பதிந்துகிடப்பதன் விளைவே…சமூகம் வாழத்தக்கதாக இருக்கிறது.
.
மனித சமூகத்தில் பல ஆயிரம் ஆண்டுகளாக உயிரோடு இருக்கும் சொற்கள்…பாவம், புண்ணியம். ’பாவம், பழிசொல்லுக்கு ஆளாகாதே’ என பெரியவர்கள் அலறுவார்கள். ஏனென்றால் அதன் வலிமை அப்படி. இந்த வார்த்தைகள் விஞ்ஞான கண்களுக்கு விளங்காதவைதான். ஞானத்தால் மட்டுமே அதை உணர இயலும்.
.
மாப்பிள்ளையும், பெண்ணும் நன்கு படித்திருப்பார்கள். உரிய வயதை எட்டியிருப்பார்கள். ஆரோக்கியமான வாழ்க்கை முறை, உணவு, போன்றவற்றில் குறையிருக்காது. நெருங்கிய சொந்தமாக இருக்காது. மகப்பேறு ஆலோசனைகளைப் பிரபல மருத்துவரிடம் பெற்றிருப்பார்கள். குழந்தை பிறக்கும். வளர்ந்தால் ஊமை எனத் தெரிய வரும். இந்த குறைபாட்டிற்கு விஞ்ஞானம் எந்த காரணமும் சொல்ல முடியாமல் தடுமாறும். மெய்ஞான நிலையில் உயர்ந்து நிற்கும் ஒரு பூக்காரக்கிழவி சொல்வாள், ’என்ன பாவமோ, என்ன மிச்சமோ குழந்தை இப்படி பிறந்திருச்சே’ என்பாள்.
.
இந்த உலகில் கேடை விதைப்பவர்கள், கேடையே கூலியாக பெறுகிறார்கள். நன்மை செய்பவர்கள், நன்மையையே பெறுகிறார்கள். எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் இந்த கணக்கு நேர் செய்யப்படுகிறது. இதில் அரசன் முதல் ஆண்டி வரை வேறுபாடு கிடையாது. இதையை கலியன்பூங்குன்றனார், ’தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்றார்.
.
வைணவ சமயத்தில் என்ன பாவத்திற்கு என்ன தண்டனை என பட்டியலிடும் ஒரு நூலாக கருட புராணம் விளங்குகிறது. பாவ, புண்ணியங்களைப் பேசாத சமயங்கள் இல்லை.
.
வாழ்க்கையில் சம்பாதிக்க வேண்டிய செல்வம் பணமல்ல, பொன்னல்ல, மனையல்ல, புண்ணியங்களே. புண்ணியங்களைச் சம்பாதிக்காத ஒருவர், எத்தகைய மதிப்பு வாய்ந்த செல்வங்களை சேர்த்திருந்தாலும் பின்வரும் தலைமுறைகளில் தண்ணீரில் சேமித்த உப்பு மூட்டைகளைப் போலதான்.  சம்பாதிக்கும் சொத்தை தலைமுறைகள் மட்டும் காத்துவிட இயலாது. அதை காக்க பெருமளவு புண்ணியங்கள் இருக்க வேண்டும்.
.
சொத்துக்கள் அழியக்கூடியது. கைமாறக் கூடியது. திருடப்படக்கூடியவை. புண்ணியங்கள் அழியாதவை. தலைமுறைகளை தாண்டி பின் தொடர்பவை. ஒரு மனிதன் வாழ்க்கையில் சம்பாதிக்க வேண்டிய முதன்மையானவை புண்ணிய வாழ்க்கை மேற்கொண்டோரை, ஞானிகளை, கண்டறிந்து அவர் பாதம் பணிந்து பெறும் ஆசீர்வாதங்களும், அதோடு நேரடியாகச் செய்யும் புண்ணியக் காரியங்களும்தான், முதன்மையான சம்பாதித்தியம் என நான் கருதுகிறேன்.
.
ஒரு மனிதன் வாழ்க்கையில் சம்பாதிக்கவே கூடாதது பாவங்களும், சாபங்களும். இதைச் சம்பாதித்தவன் அரசனாக இருந்தாலும், அழிவையே பெறுவான்.
.
இந்த பாவம் எப்படியெல்லாம் ஒரு மனிதனை வந்தடையும் என்பதற்கு ஒரு விளக்கம் சொல்கிறேன்.
நடிகை ஒருவர், வாழ்க்கையில் பல சோதனைகளை, அவமானங்களை, சில துரோகங்களை சந்தித்து நடிகையாக பரிணமித்திருப்பார். அவருடைய வாழ்வில் மகிழ்ச்சி, நிம்மதியைத் தவிர மற்றவை பூரணமாகக் கிடைத்திருக்கும். ஆனாலும் மனது வெறுமையைத் தழுவும். வாழ்வில் தோற்றுவிட்டதாகக் கருதுவார். வேஷ வாழ்க்கை அசூசையாகப்படும். இப்படியொரு வாழ்க்கை வேண்டாம் என முடிவெடுப்பார். தூக்குக் கயிற்றில் உயிரை விடுவிப்பார். அதோடு ‘என் சாவுக்கு யாரும் காரணமில்லை. எனக்கு வாழ பிடிக்கவில்லை’ என கடிதமும் எழுதி வைத்து விடுவார். அந்த நடிகையின் மரணத்தால் சட்டம் யாரையும் தண்டிக்காது. தண்டிக்கவும் முடியாது.
.
ஆனால், தன்னையே மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு அப்பெண்ணைத் துன்பக்கேணிக்கு அழைத்துச்செல்ல யாரெல்லாம் தொடக்கம் முதல் உடன் சென்றார்களோ, யாரெல்லாம் பொய் வார்த்தைக்கூறி ஏமாற்றினார்களோ, நம்பிக்கை தந்து துரோகம் செய்தார்களோ, அவளுடைய வாழ்க்கையை ஒருநாள், அரைநாள் தவறாக கையாண்டர்களோ… அனைவருக்கும் அந்த நடிகையின் தற்கொலையால் பாவப்பங்கைத் தங்கள் செயலுக்கு தக்கவாறு பெறுவர்.
.
இந்த பாவபங்கைப் பெறும் கூட்டத்தில் ஒருவர், சமுதாயத்தில் நல்லவர் எனும் இமெஜைப் பெற்றுப்பார். அவரது குடும்பத்தில் ஒரு பிரச்னை நிகழும்போது, சாமானிய மக்கள் பேசிக்கொள்வார்கள்…’அவரு ரொம்ப நல்ல மனுஷங்க. அவரு பொண்ணுக்குப் போய் இப்படி ஆயிடுச்சே.. கடவுள் நல்லவங்களத்தான் சோதிக்கிறாரு’. என்பார்கள். சம்மந்தப்பட்ட நபருக்கே தெரியாது, தன்னுடைய பாவ கணக்கு எங்கிருந்து எழுதப்பட்டது என்பது. இறந்துபோன நடிகையின் படுக்கையறையில் யாரோ ஒருவர் நுழைவற்கு இவரது பணம் பயன்பட்டிருக்கும்.  ’அதன் விளைவுதான் இது’ என்பதை அறிவுகொண்டு அறிய இயலாது.
.
பாவத்தையும், சாபத்தையும் சாமானியர்களை விட பொறுப்பில் இருப்பவர்கள், அதிகாரத்தில் இருப்பவர்கள்,  ஆட்சியில் இருப்பவர்கள்தான், எளிதில் சம்பாதிக்கும் வாய்ப்புக்கொண்டவர்கள். தவறாக நீதி சொன்ன பழி பாவத்திற்கு ஆளாகி விட்டோமே என்னும் அதிர்ச்சியே அந்நாளைய மதுரை பாண்டிய மன்னனை மரணம் தழுவியது. ஆட்சியில், அதிகாரத்தில் இருப்பவர்களின் கீழ் பணி செய்பவர்கள் செய்யும் பாவச் செயல்களின் பங்கு அரசன் வரை பகிர்ந்து விடும். உலக வரலாற்றை கூர்ந்து கவனியுங்கள். வானாளவிய அதிகாரங்களைச் சுவைத்த பலர், இறுதியில் மோசமான தண்டனைகளையும் பெற்று இருப்பார்கள்.
.
ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளுக்கு ஒப்பாகும் என சொல் உண்டே, அந்த சொல் எத்தனை உண்மையானது.
.

இன்னும் எளிமையாக எடுத்துச் சொன்னால்…வாகனங்களில் செல்வோருக்கு டயர் பஞ்சர் ஆவது வழக்கமானதுதான். இதில் புண்ணியம் மிகுந்தவர்களும் தப்ப மாட்டர். பஞ்சர் ஆகும். திரும்பிப் பார்த்தால் கடையும் தென்படும். பாவம் மிகுந்தவர்களுக்கு அதே பஞ்சர் நடு இரவில் நிகழும். அவ்வளவுதான். எந்த ஒரு செயலையும், எந்த ஒரு முடிவையும் அறிவு நிலையிலிருந்து எடுப்பதை விட ஞான நிலையிலிருந்து செயல்படுதலே புண்ணியம்.

இதற்கு மேலும் நம்மால் கருத்துக்களை சொல்ல இயலவில்லை. யாணன் ஐயா அவர்கள் பாவ புண்ணியக் கணக்குகள் நூலில் மேற்கோள் காட்டிய படங்களை கீழே இணைத்துள்ளோம். அனைத்தும் பாவ புண்ணிய கணக்குளை சரியாக செய்கின்றன.































ஒவ்வொரு கருத்துக்களையும் மீண்டும் மீண்டும் படித்துப் பாருங்கள். ஒரே நாளில் படித்து புரிந்து கொள்ள இயலாதவை இவை. தினமும் அசை போடுங்கள். பிறகென்ன பாவக்கணக்குகளை கழித்து விட்டு, புண்ணியக் கணக்குகளை கூட்ட அல்லது பெருக்க பழகி கொள்வீர்கள். 


இந்த பதிவை நீங்கள் படிப்பதோடு மட்டுமின்றி, உங்கள் சுற்றம், நட்பு வட்டாரத்தில் பகிருங்கள், இதனைப் பற்றி பேசுங்கள். இதுவும் ஒருவகையில் பாவக் கணக்கை கழித்து, புண்ணியக் கணக்கை தொடங்குவது போலத் தான். என்ன? புண்ணியக்கணக்கைத் தொடங்கலாமா?

நன்றி : திரு.யாணன் ஐயா அவர்கள்

மீள்பதிவாக:-

"ஜீவ அமிர்தம்" பருகலாமே!  - http://tut-temple.blogspot.com/2017/06/blog-post_30.html

 ஐந்தே ரூபாயில் ஆரோக்கியம் பெறலாமே - இம்மாத புத்தக அறிமுகம் - http://tut-temple.blogspot.com/2017/11/blog-post_15.html

மானுட நண்பனாய் "சன்மார்க்க நேசன்" - http://tut-temple.blogspot.com/2017/08/blog-post_10.html

பிழைத்தலில் இருந்து வாழ்தல் நோக்கி - ஒரு நூல் அறிமுகம் - http://tut-temple.blogspot.com/2017/07/blog-post_47.html

No comments:

Post a Comment