Subscribe

BREAKING NEWS

08 June 2018

வாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (11)

அனைவருக்கும் வணக்கம்.


 வாழ்வாங்கு வாழ என்ற தொடர்பதிவு இன்று பதினொன்றாவது பதிவை எட்டி உள்ளது. இந்த தொடர்பதிவை தொடர்ந்து வாசித்து அதனை கருத்தில் கொள்பவர்கள் கண்டிப்பாக ஆன்மிகத்தில் புதிய நிலை தொடுவார்கள் என்பது உறுதி. நாமும் இங்கேதான் உளியால் செதுக்கப்பட்டு வருகின்றோம். இன்றைய பதிவில் நாம் நம் நடைமுறை வாழ்வியல் சார்ந்த கேள்விகளை பார்ப்போம். 

கேள்வி - வீட்டிலும் சரி, அலுவலகத்திலும் சரி நான் சொல்வதை யாரும் புரிந்து கொள்வதே இல்லை. எவ்வளவுதான் சகித்துப் போனாலும், பிணக்கங்களும், பிளவுகளும், மனக் கசப்பும்தான் மிஞ்சுகிறது. நான் என்னதான் செய்வது?


இராம் மனோகர் - இன்றைய நடைமுறை வாழ்வில் அனைவரோடும் ஒத்துப் போவது என்பது சற்று கடினமான சமாச்சாரம்தான். பிணக்கங்களும், பிளவுகளும், முரண்பாடுகளும் தவிர்க்க இயலாதவைகளாக இருக்கின்றன. விளைவுகளும் விபரீதமாகவே அமைந்து விடுகின்றன. இத்தகைய பிரச்சனைகள் எதனால் ஏற்படுகின்றன என்பதைப் புரிந்து கொண்டால் ஓரளவுக்கு இவற்றிலிருந்து விடுபட்ட மன அமைதியைப் பெற முடியும். பொதுவாக மனக்கசப்புகள் எதனால் ஏற்படுகின்றன என்று பார்த்தால், முக்கியமான நான்கு காரணங்களைக் கூறலாம்.
சுயநலம், கொடுத்த வாக்கை மீறுவது, புரிதலின்மை, பிடிவாதம் இந்த நான்கும்தான் முக்கியமான காரணங்கள். மனிதன் என்றால் அவனிடம் சுயநலம் கொஞ்சமாவது இருக்கத்தான் செய்யும். ஆனால், ஒருவருடைய சுயநலம் மற்றவருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பொழுதுதான் சிக்கல் வந்து விடுகின்றது. எங்கே சுயநலம் அதிகமாக இருக்கிறதோ அங்கே வெறுப்பும், கருத்து வேறுபாடுகளும் இருந்தே தீரும். சுயநலம் மேலோங்கி இருப்பவர்களுக்கு மற்றவர்கள் சந்தோசமாக இருந்தால் பொறுக்காது. மற்றவர்களுடைய வளர்ச்சியை, இலாபத்தைக் கெடுப்பதில் இவர்களுக்கு நிகர் இவர்கள்தாம்.

வேறு வழியே இல்லை. இவர்களை விட்டு வெகு தூரம் விலகி இருப்பதுதான் நல்லது. ஆனால், மற்ற மூன்று விஷயங்களும் மாற்றிக் கொள்ளத் தக்கவைகள்தாம். சரியான ரீதியில் அவர்கள் குறைகளை அவர்களுக்கு உணர்த்தி விடுவோமேயானால், மாற்றத்தை எதிர்பார்க்கலாம். ஆனால், ஒரு விஷயத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டும். ஒருவரிடம் உள்ள குறைகளைத் திருத்த வேண்டும் என்று நாம் நினைத்து செயல்படும் பொழுது, அவர்களது குறைகளை மட்டும் பெரிதுபடுத்திக் கூறாமல், நிறைகளையும் பாராட்டி உற்சாகப்படுத்தும் யுக்தியை கடைபிடிக்க வேண்டும்.
இது ஒரு இணக்கமான சூழலை இருவருக்குமிடையில் ஏற்படுத்தித் தரும். நிறைகுறைகளைப் பேசுபவன்தான் நண்பன். குறைகளை மட்டும் பேசினால் ஒருவன் மற்றவர்களால் எதிரியாகவே கருதப்படுவான். ஒவ்வொரு மனிதனும் தன்னைத் தானே பெறுமையாகவே கருதிக் கொள்வான். அவனவனுக்கென்று சுய கௌரவமும், தான் என்ற எண்ணமும் இருக்கத்தான் செய்யும். இவற்றிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நம் அணுகுமுறையை அமைத்துக் கொள்வது நல்லது. மிரட்டுதல், அச்சுறுத்துதல், பரிகாசம் செய்தல், மற்றவர்கள் முன் அவமானப்படுத்துதல் போன்ற ரீதியிலான செயல்கள் மேலும் சிக்கலை பெரிதுபடுத்தி விடும்.



ஒரு சில நேரங்களில் எந்த ஒரு பிரச்சனை எழுந்தாலும் உடனடியாக அதற்கு தீர்வைத் தேட நினைக்கும் பொழுது கூட பிரச்சனை பெரிதாகி விடுதுண்டு. இரு பக்கமும் மனமானது உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருக்கும் பொழுது எடுக்கப்படும் எந்தத் தீர்வும், முடிவும் சுமூகமாக இருக்காது. எனவே பொறுமையைக் கையாள்வதோடு, பிரச்சனையை ஆறப் போடுவது மிகவும் நல்லது. தவிர்க்க முடியாத பட்சத்தில் உடனடியாக முடிவு எடுத்தே ஆக வேண்டும் எனும் பொழுது, கலந்து பேசி, நேர்மையாக விவாதம் செய்து, பொறுமையாக, அமைதியாகப் பேசுவது நல்லது.
ஆனால், இவை அனைத்தும் மற்றவர்களுக்கு மட்டுமே என்பதல்ல. தவறு நம்மிடமும் இருக்கிறதா என்பதையும் நாம் சற்று சுயபரிசோதனை செய்து பார்த்துக் கொள்ளத்தான் வேண்டும். தவறையெல்லாம் நம் மீது வைத்துக் கொண்டு, மற்றவர்களிடத்தில் நியாயம் பேசப் போனால், மேலும் மனக்கசப்பும், அவமானமும்தான் ஏற்படும்.


நண்பர் - அறியாமையால்தான் துன்பம் வருகின்றது என்பது யாருக்குதான் தெரியாது. அறியாமை ஏன் வருகின்றது, அதை எப்படி அழிப்பது என்று சொன்னால்தானே படிப்பவர்களுக்குப் புரியும்?

இராம் மனோகர் - அறியாமையால்தான் துன்பம் வருகின்றது என்பது தெரிந்து விட்டால் பிறகு இந்தக் கேள்வியின் அவசியம் என்ன இருக்கிறது !? காரணம் தெரிந்து விட்டது இனி அந்த அறியாமையை அகற்றி விட வேண்டுமேயல்லாது அதாவது அறிய வேண்டியதை அறிந்து கொள்ள வேண்டுமேயல்லாது அறியாமை ஏன் வந்தது என்று தேடிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது !? ஐயா, ஒருவனிடம் பணம் இல்லை என்று வைத்துக் கொள்வோம். அவன் செய்ய வேண்டியது என்ன ? உலகமெங்கும் பணம் இருக்கிறது. தனக்கு மட்டும் அது இல்லை என்றால், அது தனது அறியாமைதான் என்பதை முதலில் அவன் உணர வேண்டும். அறியாமை என்றால் என்ன ? அறியாமை என்றால் ஒரு விஷயத்தைப் பற்றி அறியாமலிருப்பதுதான் அறியாமையே தவிர வேறொன்றுமில்லை. பணத்தை எப்படி அடைவது என்பதை அவன் அறியாமலிருக்கிறான் அவ்வளவுதான்.

அதை அவன் அறிந்து கொள்வானேயாகில், பணத்தைத் தேடி அவன் அலைய வேண்டியதில்லை. பணம் அவனைத் தேடி வரும். இது ஒரு உதாரணம் அவ்வளவுதான். இது எல்லா விஷயங்களுக்கும் பொருந்தும். இந்த உலக வாழ்க்கை என்பது பல கோணங்களை உடையது. பல பரிமாணங்களாலானது. ஆனால், நாம் என்ன செய்கிறோம் ? ஒரே கோணத்தில் நம் வாழ்க்கையை வாழ்ந்து விட்டுப் போய் விடுகிறோம். மற்ற கோணங்களில் கவனத்தை செலுத்துவதில்லை. இதுதான் அறியாமை. செக்கு மாடு சுத்துவது போல ஒரே மாதிரியான எண்ணங்கள், செயல்கள், சொற்கள் என்றுதான் நம் வாழ்க்கை இருக்கிறது. பிறகு மற்ற கோணங்களை, வாழ்க்கையின் நுட்பங்களை அறிந்து கொள்வது எவ்வாறு சாத்தியமாகும் ? இது நான் சொல்லி உங்களுக்கு வரும் திறமையல்ல. இயல்பாகவே வர வேண்டும்.

ஏனெனில் தெளிந்த அறிவு அதாவது ஞானம் என்பது எல்லோருக்குள்ளும் இருக்கிறது. பழக்கங்களால், இயல்புகளால் நமக்கு நாமே பலவிதமான தடைகளை, மறைப்புகளை ஏற்படுத்திக் கொண்டு, ஒரு குகை மனிதனைப் போல வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தடைகளை தகர்த்து எறியுங்கள், மறைப்புகளை அழித்து நீக்கி விடுங்கள். அறிவு பிரகாசிக்கும். அறிவு பிரகாசிக்கும் அளவு மனம் அனைத்து விஷயங்களின் நுட்பங்களையும், மெய்யான தன்மைகளையும் உணர்ந்து கொள்ளும். அறிவை வெளியிலிருந்துதான் பெற்றுக் கொள்கிறோம் என்று நினைப்பதுதான் இருப்பதிலேயே பெரிய அறியாமை. அறிவு நமக்குள்தான் இருக்கிறது. அதைத் துலங்கச் செய்வதுதான் அறிவுடமை.

கேள்வி - இறைவனிடம் என்ன கேட்பதென்றே தெரியவில்லை. நல்லவனும் இறைவனை வேண்டுகிறான்,கெட்டவனும் இறைவனை வேண்டுகிறான். இறைவன் யாருக்குத்தான் கொடுப்பார்?



இராம் மனோகர் - அது இறைவன் பாடு !!! அந்தக் கவலை நமக்கெதற்கு ?இறைவனிடம் என்ன கேட்க வேண்டும் என்றே நமக்கேத் தெரியவில்லை!!! இந்நிலையில் மற்றவர்கள் பற்றி கவலைப்படுவதால் யாதொரு பயனுமில்லை. பிறந்ததும் நமக்குத் தெரியாது, என்று இறப்போம் என்றும் நமக்குத் தெரியாது. இப்படிப்பட்ட நிலையில், இந்தக் குறுகிய கால வாழ்வில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை நாம்தான் நம் அறிவைக் கொண்டு தீர்மானிக்க வேண்டும். இறைவனிடம் இனி கேட்பதற்கு ஒன்றுமில்லை. அவர் தர வேண்டியதனைத்தையும் தந்து விட்டார். அவற்றை நாம் பயன்படுத்தும் விதத்தில்தான் நம் வாழ்க்கை அமைகிறது. எனவே எது வேண்டும் ? அதை எப்படி அடைய வேண்டும் ? அடைந்தவற்றை எப்படி உபயோகிக்க வேண்டும் என்பது நம் பொறுப்புதான்.

பிறகு ஏன் இறைவனை வணங்க வேண்டும் ? என்ற கேள்வி வரும். அதாவது எதைச் சார்கிறதோ அதுவாக மாறி விடுவது நம் மனதின் இயல்பாக இருக்கிறது. எனவே நம் மனம் இறைவனைச் சாரும் பொழுது, இறைவனின் அருட்குணங்களெல்லாம் நம்மை வந்து அடைகின்றன. எனவேதான் நாம் இறைவனை நாடி நின்று வணங்குகிறோமே தவிர, மேலும் இறைவனிடமிருந்து ஏதேனும் திரவியங்களைப் பெற்றுக் கொள்வதற்காக அல்ல. ''அரிது அரிது மானிடராய்ப் பிறத்தலரிது'' என்ற ஔவையின் வாக்கிற்கிணங்க இந்த மானிடப் பிறவியென்பது கிடைத்தற்கரிய புனிதப் பிறவியாகும். அப்படிப்பட்ட இந்தப் பிறவியைப் பெற்ற நாம் என்ன செய்ய வேண்டும் ? இந்தப் பிறப்பில் செய்கிற செயல்களை எல்லாம் நல்லனவாகவே செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால்தான் மீண்டும் பிறவாமை என்கிற நிலை வந்து வாய்க்கும்.

ஆனால் நடப்பது என்ன ? ஓடி ஓடி பொருட்களைத் தேடி அடைவதற்கும், அவற்றைச் சேமித்து வைப்பதற்குமே நம் காலம் சரியாகி விடுகின்றது. சொல்லப் போனால் அதற்கே இந்த வாழ்நாள் போதவில்லை. அதற்கென மீண்டும் பல பிறவிகளை எடுக்க வேண்டியதிருக்கிறது. இதற்கிடையே அந்தப் பொருட்களை அடைவதற்கு நாம் செய்யும் தீய செயல்கள் ஏராளம். இதுதான் செல்வம் உடையவர்கள் நிலைமை. இது பற்றி நாலடியார் சொல்லும் பொழுது...

''உண்ணான் ஒளிநிறான் ஓங்கு புகழ்செய்யான்
துன்னருங் கேளிர் துயர்களையான் - கொன்னே
வழங்கான் பொருள்காத் திரும்பானேல், அ ஆ
இழந்தானஎன் றெண்ணப் படும்.''
என்கிறது. இப்படி ஈட்டிய பொருட்களையும், ஞானத்தையும் தானும், தன் சந்ததியினர் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்று எண்ணி சேமித்துப் புதைத்து வைத்துக் கொள்ளும் சுயநலம் மிக்க மனிதர்கள்தாம் இங்கே ஏராளம் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட மனிதர்களுக்கு இந்த மனிதப் பிறவி அமைந்துதான் என்ன பயனிருக்கிறது சொல்லுங்கள் !? ஒன்றுமே இல்லை.
இல்லறத்தில் உழன்று உழன்று உடல் சோர்ந்து விடுகின்றது. உழைத்து, உழைத்து சரீரம் கெட்டு விடுகின்றது. பற்றுகளும்,பாசபந்தங்களும் தளைக்கின்றன. இதனால்தான் சான்றோர்கள் அனைவருமே இந்த பிறவி போதும். இனி ஒரு பிறவி வேண்டாம் என்கிறார்கள். எனவே இறைவனிடம் நாம் கேட்க வேண்டியது இவற்றிலிருந்து விடுதலையைத்தானே தவிர, பொருட்களையோ, அற்ப சுகங்களையோ அல்ல. அதற்கு நாம் என்ன செய்வது ? ஞானிகளின் கூட்டத்தில் கலக்க வேண்டும். இறைவன் புகழைப் பாட வேண்டும், கேட்க வேண்டும். எவ்வளவுதான் பொருள் சேர்த்தாலும் மன நிம்மதி என்பது அதனால் வாராது. நமக்கென்று உள்ள ஒரே வழி பரம்பொருள் தியானம் மட்டுமே. ''மனதை அமைதிப்படுத்தும் தியான அனுபூதியை விரைவாக எனக்குத் தா இறைவா'' என்றுதான் இறைவனிடம் நாம் வேண்ட வேண்டும். அதுவே வலுவான சங்கல்பமாகி நம் மனதை ஒருநிலைப்படுத்தி அமைதி நிலையில் நிலைக்கச் செய்யும். நம் வாழ்வையும், இல்லறத்தையும் நெறிப்படுத்த தியானத்தால் மட்டுமே கூடும்.

''தொந்தி சரிய மயிரே வெளிறநிரை
தந்த மசைய முதுகே வளையஇதழ்
தொங்க வொருகை தடிமேல் வரமகளிர் நகையாடி
தொண்டு கிழவ னிவனா ரெனஇருமல்
கிண்கி ணெனமு னுரையே குழறவிழி
துஞ்சு குருடு படவே செவிடுபடு செவியாகி
வந்த பிணியு மதிலே மிடையுமொரு
பண்டி தனுமெ யுறுவே தனையுமிள
மைந்த ருடைமை கடனே தெனமுடுக துயர்மேவி
மங்கை யழுது விழவே யமபடர்கள்
நின்று சருவ மலமே யொழுகவுயிர்
மங்கு பொழுது கடிதே மயிலின்மிசை வரவேணும்''

என்பார் அருணகிரி நாதர். மனிதப் பிறவி கிடைத்து விட்டது. பத்து மாதம் கருவறையில் தியானத்தில் இருந்து, வேண்டி, விரும்பி, மனிதனாகப் பிறந்தாகி விட்டது. வளர வளர உடலும், அறிவும், எண்ணங்களும் கூடவே வளர்கின்றன. ஆனால், வாழ்வின் பயனென்ன, நோக்கமென்னவென்று ஒருநாள், ஒரு பொழுதாகிலும் சிந்திக்கிறோமா ? இல்லையே ! ஏனெனில் இங்கு வழிகாட்ட நமக்கு யாருமில்லை. யாரை வழிகாட்டியாகப் பெறுவது ? குழப்பம் வேண்டாம். இறைவனே நமக்கு வழிகாட்டி. இறைவனே நமக்கு உற்ற துணை. திக்கு தெரியாமல் தவிப்பவர்களுக்கு தெய்வமே துணை., ஆனால், நம்பிக்கை வேண்டும். நம்பிக்கை இருந்தால் வழிகாட்டுதல் நடக்கும். காலம் தாழ்த்துவதால் பிறவிகள் நீளும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

வயதாகி விடும். வயதாகி விட்டால் உடல் உறுப்புகள் செயலிழந்து விடும். முடி நரைத்து, தொந்தி சரிய, பற்கள் விழுந்த வாய் ஒரு குழி போலத் தெரிய, உதடுகள் பிதுங்கி வெளியே தொங்க, ஊன்றுகோலை ஊன்றி நீ நடந்து வரும் பொழுது மற்றவர்கள் உன்னைக் கண்டு எள்ளி நகையாடுவார்கள். இருமி இருமியே உன் சக்தியெல்லாம் வீணாகிப் போகும். வைத்தியர் வீட்டு வாசலிலேயே குடியிருக்கும் படி ஆகிப் போகும். உறவினர்கள் எல்லாம் வேதனை அடைவார்கள். நம்மை ஒரு தொல்லையாகவும் நினைப்பார்கள்.

''வைகலும் வைகல் வரக்கண்டும், அஃது உணரார்,
வைகலும், வைகலை வைகும் என்று இன்புறுவர்-
வைகலும் வைகல் தம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்து உணராதார்.''

எனவே மனிதா சக்தியிருக்கும் பொழுதே மேன்மையை நாடு. அதற்கான வழியைத் தேடு. உண்மையை நோக்கி ஓடு. அவ்வாறு செய்தாயானால், உயிர் மங்கும் காலத்தில் யமபடர்கள் உன்னைக் கண்டு ஓடுவார்கள்.

ஆகவே மனிதா மனிதப் பிறவியின் நோக்கமென்ன என்பதை உணர்ந்து கொள். இறைவன் நம்மை இன்பங்களை அனுபவிக்கவே படைத்தான். ஆனால், அது மட்டுமே படைப்பின் நோக்கமல்ல. இங்கு நாம் நுகர்வது இன்பமுமல்ல. தாமரை தண்ணீரில்தான் பூக்கின்றது. தண்ணீர்தான் அதற்குத் தாய். ஆதவன்தான் அதற்குத் தந்தை. எனினும் அந்தத் தாமரையைப் பறித்து தண்ணீரில் போட்டால், ஓரிரு நாளில் அழுகி விடும். தரையில் போட்டால் சூரியன் அதை காய்ந்த சருகாக ஆக்கி விடுவான். அது போல தங்கள் தங்கள் நிலைகளில் இருந்து தவறியவர்கள், தங்கள் உண்மை நிலையை உணராதவர்கள் அந்தத் தாமரையைப் போல அழிந்து போவார்கள் என்பதை உணர்ந்து கொள். இறை சிந்தனைதான் தண்ணீர், இறையருள்தான் ஆதவனின் ஒளி. தாமரை உன் இதயம். இதை என்னாளும் மறவாதே.

நன்றி : திரு.இராம் மனோகர் ஐயா 

மீள்பதிவாக :-

வாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (10) -http://tut-temple.blogspot.com/2018/05/10.html

வாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (9) - http://tut-temple.blogspot.in/2018/04/9.html

வாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (8) - http://tut-temple.blogspot.in/2018/02/8.html

வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (7) - http://tut-temple.blogspot.in/2018/01/7_22.html

 வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (6) - http://tut-temple.blogspot.in/2017/12/6.html

வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (5) - http://tut-temple.blogspot.in/2017/11/5.html

வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (4) - https://tut-temple.blogspot.in/2017/10/4.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (3) - https://tut-temple.blogspot.in/2017/09/3.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (2) - http://tut-temple.blogspot.in/2017/08/2.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (1) - http://tut-temple.blogspot.in/2017/07/1.html


No comments:

Post a Comment