Subscribe

BREAKING NEWS

23 August 2017

AVM & TUT இணைந்த அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின்


நாம் ஏற்கனவே அறிவித்ததை இங்கே நினைவு கூற விரும்புகின்றோம். முதல் முறையாக  அகத்தியர் வனம் மலேஷியா குழுவோடு இணைந்து சென்ற ஆடி மாதம் அன்னதானம் செய்தோம்.முதலில் ஞாயிற்றுக் கிழமை அன்று செய்ய முடிவெடுத்தோம். ஆனால் பின்பு  சனிக்கிழமை செய்யலாம் என்று குருவருளாலே தீர்மானிக்கப் பட்டது.இந்த பதிவில் அன்று நடைபெற்ற அனுபவத்தை தர முயற்சி செய்கின்றோம்.



முதலில் அன்னதானம் முடித்து விட்டு அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை பார்த்தால், கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நல்ல அடை மழை. அன்று வைத்து இருந்தால், நம்மால் செல்ல முடியுமா? என்று ஒரு சந்தேகம் ஏற்பட்டு இருக்கும் என்பது உண்மையே. ஆனால் இது சனிக்கிழமை நடைபெற்றதால் அனைத்தும் சுபமாய் இருந்தது.இதைத்தான் காரணமின்றி காரியமில்லை,நாம் ஒன்று நினைக்க,தெய்வம் ஒன்று நினைக்கும் என்று சொல்வார்கள்.என்ன? நாம் உணர்ந்து கொள்ள சில காலம் தேவைப்படுகின்றது.

 திதிகளில் சிறந்தது துவாதசி திதி. மாதங்களில் சிறந்தது மார்கழி.  மந்திரங்களில் சிறந்தது காயத்ரி  அது போல் தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பார்கள்.இதை எளிதாக சொல்லிவிடலாம் ,ஆனால் அனுபவித்து செய்யும் போது தான் இதன் உண்மை புரியும்.அன்ன தானம் பற்றி மேலும் சிறிது உணர்ந்து விட்டு,அன்றைய அன்னதான நிகழ்வின் துளிகளை பார்ப்போம்.மகா பெரியவா அன்ன தானம் பற்றி கூறிய செய்திகள் தொடர்கின்றது.

தர்மங்களில் தலையானது தானமே! : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

ரந்தி தேவன் கதையிலிருந்தும், உஞ்சவ்ருத்திப் பிராம்மணன் கதையிலிருந்தும் என்ன தெரிகிறதென்றால் தனக்கென்று ஒன்றுமே வைத்துக்கொள்ளாமல் தானம் பண்ண வேண்டும்;தன் ப்ராணனே போனாலும் ஸரி, இன்னொரு ஜீவனை நம் உயிரைக் கொடுத்தாவது காப்பாற்ற வேண்டும் என்ற த்யாக தத்வம் தெரிகிறது. இன்னொன்று என்ன தெரிகிறதென்றால், ஒருத்தர் கஷ்டத்தில் இருக்கிறபோது அவர் என்ன ஜாதி, என்ன மதம், நல்லவரா – கெட்டவரா என்று இதையெல்லாம் ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருக்காமல், யாராயிருந்தாலும், எப்படிப் பட்டவராயிருந்தாலும் நம்மாலான உபகாரத்தைப் பண்ணி, கஷ்டம் நிவ்ருத்தியாவதற்கு ஸஹாயம் பண்ண வேண்டும் என்பது.

வித்யாஸங்கள் பார்க்கவேண்டிய இடத்தில் பார்த்துத்தான் ஆகவேண்டும். சாஸ்த்ரப்படி லோக க்ஷேமத்துக்காக ஏற்பட்ட அதிகார பேதங்களைக் காப்பாற்றத்தான் வேண்டும். ஆனால் கஷ்டம், துக்கம் என்று வருகிற போது வித்யாஸமே பார்க்கக் கூடாது.
குறிப்பாக, அன்னதானத்தைப் பற்றிச் சொல்கிறபோது ‘யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின்’ என்றே திருமந்திரத்தில் சொல்லியிருக்கிறது.

”யாரானாலும் எவரானாலும், நாராயண ஸ்வரூபம்” என்று ரந்திதேவன் அன்னதானம் செய்தான். மஹாதாரித்ரியத்தில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த இளையான் குடிமாற நாயனாரிடம் ஒரு சிவனடியார் பிக்ஷை கேட்டு வந்தபோது அவர், ஈஸ்வரனே இப்படி வந்திருக்கிறான் என்று நினைத்தார். கொட்டுகிற மழையிலே வயலுக்குப் போய் அங்கே விதைத்திருந்த நெல்லையே மறுபடி பொறுக்கி எடுத்துக்கொண்டு வந்து சிவனடியாருக்கு பிக்ஷை பண்ணினார். வாஸ்தவத்திலேயே அந்த சிவனடியார் பரமேஸ்வரன்தான். அப்படியே காட்சி கொடுத்தார். இது பெரியபுராணக் கதை.

எல்லா தானங்களிலும் அன்னதானம் விசேஷம். பகவானும் கீதையில் (3.13) எவன் தனக்காக மட்டும் ஆஹாரம் தேடிச் சாப்பிட்டுக் கொள்கிறானோ அவனுடைய பாபத்தையும் முழுக்க அவனேதான் அநுபவித்தாக வேண்டும்; வேறு யாரும் அதில் பங்கு எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்கிறார். பிறனுக்குப் போடாமல், தான் மட்டுமே தின்கிறவன் சாதம் சாப்பிடவில்லை, பாபத்தையே புஜிக்கிறான் என்கிற மாதிரிச் சொல்கிறார்.

அன்னதானத்துக்கு என்ன விசேஷம் என்றால் இதிலேதான் ஒருத்தரைப் பூர்ணமாகத் திருப்திப்படுத்த முடியும். பணம், காசு, வஸ்த்ரம், நகை, பூமி, வீடு இந்த மாதிரியானவற்றை எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக் கொள்கிறவன் அதற்குமேல் தந்தாலும், ‘வேண்டாம்’ என்று சொல்லமாட்டான். அன்னம் போடுகிற போதுதான் ஒருத்தன் என்னதான் முட்ட முட்டச் சாப்பிட்டாலும், ஓர் அளவுக்கு மேல் சாப்பிட முடியாது. ‘த்ருப்தோஸ்மி : போதும்’ என்று சொல்கிறான். அந்த அளவுக்கு மேல் போய் விட்டால், ”ஐயையோ! இனிமேல் போடாதீர்கள்” என்று மன்றாடவே செய்கிறான். இம்மாதிரி ஒருத்தன் பூர்ண மனஸோடு திருப்தி தெரிவிக்கிறபோதுதான் தாதாவுக்கும் தானத்தின் பலன் பூர்ணமாகக் கிடைக்கும்.

நேராக உயிரோடு உடம்பைச் சேர்த்து வைத்து ரக்ஷிப்பதும் அன்னம்தான். அதனால்தான் ‘உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தாரே’ என்று சொல்லியிருக்கிறது. மணிமேகலையில் இப்படி அன்னதான விசேஷத்தைச் சொல்லியிருக்கிறது. இது பௌத்த ஸம்பந்தமான காப்பியம். பௌத்தம், ஜைனம் எல்லாமே கலந்தாங்கட்டியாக வைதிக ஸம்பிரதாயங்களோடு சேர்ந்திருப்பதாகவே தமிழில் உள்ள ஐம்பெருங்காப்பியங்களிலிருந்து தெரிகிறது. மணிமேகலைக்கு காஞ்சீபுரத்தில் அக்ஷயபாத்திரம் கிடைத்து, அதை அவள் வைத்துக்கொண்டு ஸகல ஜனங்களின் பசிப்பிணியையும் போக்கினாள். இதற்கு அநேக யுகங்கள் முந்தியே இதே காஞ்சீபுரத்தில் ஸாக்ஷாத் அம்பாளும் இதே அன்னதானத்தைப் பண்ணியிருக்கிறாள். ஜகன்மாதா இங்கே, ‘இரு நாழி நெல் கொண்டு எண் நான்கு அறம் இயற்றினாள்’ என்று சொல்லியிருக்கிறது.

எண் நான்கு அறம் என்றால் முப்பத்திரண்டு தர்மங்கள். தர்மம் என்றால் மநுஷ்ய வாழ்க்கை நெறிகள் எல்லாமும்தான் என்றாலும், பொது வழக்கில் ‘தானம்’ என்ற ஒன்றுக்குமட்டுமே ‘தர்மம்’ என்ற பேரும் வந்துவிட்டது. தர்மங்களில் இது அத்தனை உசத்தியான இடத்தைப் பெற்றுவிட்டது! ‘தான-தர்மம்’ என்று சேர்த்தே சொல்கிறோம். ‘தர்மம் போடு தாயே!’ என்றுதான் பிச்சைக்காரர்கள் கூடச் சொல்கிறார்கள். தர்மசாலை என்றாலே அன்னசத்திரந்தான். வேதப் பிரமாணத்துக்கு ஸமதையான சிறப்புப் பெற்ற அவ்வை வசனத்திலும் ‘ஈதல் அறம்’ என்று தானத்தையே தர்மம் என்று equate பண்ணியிருக்கிறது.

இதிலே ஒரு வேடிக்கை, அதாவது பரஸ்பர விருத்தம் (முரண்பாடு) மாதிரி ஒரு அம்சம். தானம் என்று பண்ணினால் அதை வாங்கிக் கொள்ளவும் ஒருத்தன் இருந்தாகணும். Donor இருந்தால் Donee-யும் இருக்கணும். ஆனால் தானம் கொடுப்பதை ரொம்பவும் சிறப்பித்துச் சொல்கிற அதே சாஸ்திரங்களே தானம் வாங்குவதை மிகவும் தாழ்வானதாகச் சொல்லியிருக்கின்றன. ”நான் கொடுக்கிறவனாகவே எப்போதும் இருக்கணும்; வாங்குகிறவனாக ஒருபோதும் இருக்கக்கூடாது”- யாசிதாரச்ச நஸ்ஸந்து மா ஸ்ம யாசிஷ்ம கஞ்சந – என்றே பிரார்த்தனை இருக்கிறது. ஆத்திசூடியிலும் “ஈவது விலக்கேல்” என்றவுடனேயே “ஏற்பது இகழ்ச்சி” என்றும் வருகிறது. ஏற்பதற்கு ஒருத்தன் இல்லாவிட்டால் எப்படி ஈவது? யாசகன் இல்லாமல் தாதா ஏது?

அக்ஷர-த்வய-மப்யஸ்தம் நாஸ்தி நாஸ்தீதி யத் புரா |
ததேவ தேஹி தேஹீதி விபரீத-முபஸ்திதம் ||
என்று ஸ்லோகமிருக்கிறது. ”நாஸ்தி, நாஸ்தி” (இல்லை, இல்லை) என்கிற இரண்டு எழுத்துக்களை* எவன் முன் ஜன்மாவில் சொல்லி யாசகர்களை விரட்டி அடித்தானோ, அவனே மறு ஜன்மாவில் ”தேஹி தேஹி” என்கிற இரண்டு எழுத்துக்களை சொல்லிக்கொண்டு பிச்சைக்காக அலைகிறான் என்று அர்த்தம். இங்கே ஈகையின் சிறப்பு, ஏற்பதன் இகழ்ச்சி இரண்டும் தெரிகிறது. பகவானே யாசகம் கேட்கவேண்டி வந்ததே என்று ‘உடம்பைக் குறுக்கிக் கொண்டு’ தான் வாமனரூபமாக ஆகி மஹாபலியிடம் போனான் என்கிறார்கள்.

இப்படி யாசகம் வாங்குவதை ரொம்பவும் இழிவாகச் சொன்னதற்குக் காரணம் அத்யாவசியமிருந்தாலொழிய பிறத்தியானைப் பிடுங்கக் கூடாது என்பதால்தான். ஸம்பாத்தியம் அவனவனும் உடம்பாலோ புத்தியாலோ உழைத்துப் பெறத்தான் பாடுபடணும். அவனவனுடைய வீட்டின் நல்லது கெட்டத்துகளுக்கான செலவுகளையும் எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு அவனவனேதான் ஸேமித்துக் கொள்ளணும். தவிர்க்கமுடியாத unemployment, வியாதி வக்கை, நிராதரவான நிலையில்தான் யாசகம் வாங்க வேண்டும்.

பொதுக்காரியங்களுக்கு யாசகம் வாங்கித்தான் ஆக வேண்டியிருக்கும். இங்கே தாதா என்று individual-ஆக (தனி நபராக) ஒருத்தன் இருந்தாலும், ‘யாசகன்’ என்று individual -ஆக எவனும் கீழ்ஸ்திதியில் இல்லை. ஆனால் இந்தமாதிரி பொதுப் பணிகளில்கூட, ஒரு ஆஸ்பத்திரி கட்டுவது, ஆலயத் திருப்பணி செய்வது என்றால்கூட அத்யாவசியத்துக்கு அதிகமாக ஓஹோ என்று plan போடாமல், கலெக்ஷன் என்று பறக்காமல், பல பேரைப் பிடுங்கி எடுக்காமல், அளவாகத் திட்டம் போட்டுக் கொண்டு, கூடிய மட்டும் பஹிரங்கப்படுத்தாமல், அவரவர்கள் தங்களுக்குள்ளேயே செலவுகளைப் பகிர்ந்து கொள்ளப் பார்க்கிறதே சிலாக்யம்.

முன்னாளில் வேதமும் யஜ்ஞமும் பூஜையும் தியானமும் வித்யாதானமுமே ஒரு ப்ராம்மணனின் 24 மணி ‘ஆகுபேஷன்’ ஆகிவிட்டதால், அவனுடைய குடும்ப போஷணைக்காக மற்றவர்கள் தானம் தருவதை வாங்கிக் கொள்ள அவனுக்கு அதிகாரமிருந்தது. ஸந்நியாஸி ஸதாகாலமும் ஸாதனை பண்ணணும்;அதோடு அவனுக்கு பிக்ஷை விதித்திருக்கிறது. மற்றபடி யாசக விருத்தி ரொம்பவும் நிஷித்தந்தான்……..

முப்பத்திரண்டு வகையான அறங்களை, அதாவது தானங்களை சாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கிறது. முதலில் ஜனங்களுக்கு ”உணவீதல்”, அப்புறம் பசுக்களுக்கு இரை கொடுப்பது, இப்படியே சொல்லிக்கொண்டு போய் தர்ம சத்திரம் கட்டுவது, நந்தவனம் வைப்பது, வைத்யசாலை வைப்பது, குளம் வெட்டுவது என்றெல்லாம் சொல்லிக் கடைசியில் ரொம்பக் குறைச்சலான திரவியச் செலவில் செய்கிற தண்ணீர்ப் பந்தல் கைங்கர்யத்தோடு முடித்திருக்கிறது. சிரமும் இதில்தான் குறைச்சல். சிரமமும் செலவும் குறைச்சல் என்றாலும், வாயும் தொண்டையும் வற்றி வருகிறவர்களுக்கு ஜில்லென்று புனர்ஜீவன் தருகிற மாதிரி தண்ணீர்ப்பந்தல் வைத்து மோர்த் தீர்த்தம் தருவது மஹா பெரிய புண்யமாகும். நம் பெரியவர்கள் தலைமுறைத் தத்வமாகச் செய்து வந்த இம்மாதிரியான நல்ல விஷயங்களை, சின்னச் சின்ன ஸூக்ஷ்மமான தர்மங்களையெல்லாம் இப்போது நாம் மறந்து விட்டோம்.

காஞ்சீபுரத்தில் அம்பாள் தானே இந்த தர்மங்களையெல்லாம் நடத்தி நமக்கு வழி காட்டியிருக்கிறாள். அங்கே காமாக்ஷியம்மன் கோயிலில் அன்னபூர்ணிக்கு ஒரு ஸந்நிதி இருக்கிறது. இது தவிர காமாக்ஷியே அன்னதானம் மட்டும் இல்லாமல் முப்பத்திரண்டு தர்மங்களையும் செய்திருக்கிறாள். திருவையாற்றிலும் அம்பாள் தர்மஸம்வர்த்தனியாக, அறம் வளர்த்த நாயகியாக இருக்கிறாள்.

மநுஷ்யர்களுக்குள் ஜாதி, யோக்யதை முதலானவைகளைப் பார்க்காமல் உபகாரம் பண்ண வேண்டும் என்பது மட்டுமில்லை. இம்மாதிரி மனித இனம் மட்டுமின்றி, ஸகல ஜீவராசிகளுக்கும் சிரமங்கள் தீரவேண்டும் என்று சொல்லித்தான் ரந்திதேவன் பஞ்சமனுக்குத் தீர்த்தத்தை வார்த்தான்.

அன்னதானம் ஒரு புண்ணிய காரியம். மகா பெரியவாவின் அருளுரைகளை படித்துவிட்டு,நாம் சும்மா இருக்கலாமா? யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் என்ற வரிகள் நேற்று  நடைபெற்ற அமாவாசை அன்னதானத்தை சற்று நினைவூட்டுகின்றது. வாருங்கள் அன்பர்களே ! நிகழ்விற்கு செல்வோம்.

இந்த அன்னதானத்தில் மிகப்பெரும் உறுதுணையாய் இருந்தவர் சமையல் செய்து கொடுத்து உதவியவர்.அவரிடம் நாம் ஏற்கனவே ஒரு மூன்று மாதங்களுக்கு முன்பு, அன்னதானம் செய்வது பற்றியும்,தங்களின் உதவி தேவை பற்றியும்  வந்தோம்.ஆனால் நேரம் தான் கூடி வரவில்லை. அகத்தியர் வனம் மலேஷியா  தொடர்பு கொண்டபோது, நாம் உடனே ஏற்கனவே பேசியவரிடம் தொடர்பு கொண்டு தெரிவித்தோம்.அவரும் சரி எண்டு கூறி, நிகழ்வினை பிரமாதம் செய்து விட்டார்.


சனிக்கிழமை காலை சுமார் 11 மணி அளவில் வேளச்சேரி சென்று விட்டோம்.  உணவு தயாரிக்கும் இடத்திற்கு சென்றோம்.வழக்கமாக உணவினை,பொட்டலமாக்கி கொடுப்பது வழக்கம்.இந்த முறை அப்படியே உணவினை பாத்திரத்தோடு வண்டியில் ஏற்றி,செல்லுமிடமெல்லாம் தட்டில் வைத்து பரிமாறலாம் என்று திட்டம். நம் TUT குழுவிலிருந்து மகளிர் அணியினர் சார்பாக திருமதி.பரிமளம் நம்மைத் தொடர்பு கொண்டு, வேளச்சேரி வருவதாக சொன்னார்கள்.சரியாக வண்டியில் உணவினை ஏற்றி,அனைவரும் கிளம்பினோம்.வண்டியில் மொத்தம் 5 பேர் சென்றோம்.மற்ற மூவரும்,சமையல் நிபுணர் உதவியால் வந்தார்கள்.














வண்டியில் உணவும்,குருமா பாத்திரமும்,சாப்பிடுவதற்கு தட்டுகளும் எடுத்துக்கொண்டு கிளம்பினோம்.ஏறி உட்கார்ந்தால் ,வெயில் அதிகமாக இருந்தது. அப்படியே பொறுத்துக்க கொண்டு வண்டியைக்கிளப்பி,வேளச்சேரி 100 அடி சாலை வழியாக புறப்பட்டோம்.அங்கே உள்ள சிக்னல் ஓரமாக வண்டியை நிறுத்தி, சாலையில் காரில் போவோரிடம் பொம்மைகள்,புத்தகங்கள் விற்கும் சிறார்களுக்கு உணவிட்டோம்.சுமார் 5,6 உணவுப் பொட்டலங்கள் கொடுத்திருப்போம்.
பின்பு அப்படியே வலதுகை வளைவின் மூலம் வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷன் சென்றோம்.செல்லும் வழியில் இருந்த சில நபர்களுக்கு உணவினை வழங்கினோம்.












சற்று படங்கள் சரியாக எடுக்க முடியவில்லை.போகின்ற வழியில் அப்படியே எடுத்த படங்களை இங்கே இணைத்துள்ளோம். வேளச்சேரி தொடர்வண்டி நிலையம் அருகில் இருந்த இரண்டு பேருக்கு, உணவினை கொண்டு சென்று வழங்கினோம்.அடுத்துதான் ஒரு தடுமாற்றம். அங்கே உணவினை எடுத்து தட்டில் போட ஆரம்பித்தது தான் தாமதம்.அங்கிருந்த ஆட்டோ ஒட்டுனர்கள் நீ..நான் என்று உணவு வாங்க  விட்டார்கள்.எங்கள் மூவரால் சமாளிக்க முடியவில்லை.நமக்கும் அனைவருக்கும் கொடுக்க  ஆசை தான்.இருப்பினும், ஆதரவற்ற உள்ளங்களுக்கு கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றெண்ணி, வண்டியை கிளப்பி விட்டோம். பின்னர் அப்படியே மடிப்பாக்கம் செல்லும் சாலையில் ஒரு யு-டர்ன் அடித்து  வேளச்சேரி  .செல்லும் வழியில் சரியாக மேம்பாலம் தாண்டி,சிக்னலில் சிலருக்கு உணவு கொடுத்தோம்.வெயில் சற்று அதிகமாக அடிக்க ஆரம்பித்து விட்டது.















பின்பு வேளச்சேரியை அடைந்து, திருவான்மியூர் செல்லும் சாலையைப் பிடித்தோம்.அங்கே ஒரு இடத்தில்  ஓரங்கட்டி, சுமார் 20 பேருக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கினோம். வருகின்ற மக்களுக்கு ஈடு கொடுக்க எங்களால் முடியவில்லை.இங்கே சாலையோர பாதசாரிகள் சிலருக்கு வழங்கினோம் என்பது குறிப்பிடத்தக்கது.அங்கு முடிந்ததும்,அப்படியே திருவான்மியூர் பயணிக்க தொடங்கினோம்.வெயிலை சமாளிக்க முடியவில்லை.வேறென்ன? அன்று சூரிய குளியல் தான்.போகும் வழியில் உள்ள குப்பை அள்ளுவோர்,மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்டுளோர் போன்றோரை நிப்பாட்டி உணவு கொடுத்தோம்.

அங்கே உள்ள ஒரு மசூதியில் ஒரு பெரியவருக்கு உணவு கொடுத்தோம். அப்போது அங்கே வந்த ஒரு இஸ்லாமிய பெரியவர்,பக்கத்தில் உள்ளோருக்கு கூச்சப்படாது கொடுங்கள்.அப்போது தான் மர மண்டைக்கு சற்று உரைத்தது.இங்கே சமயங்களுக்கு பகுப்பேது ? அன்பை விதைக்கும் போது,யாராவது குறுக்கிடுவார்களா என்ன?


















திருவான்மியூர் நெருக்கி செல்லும் வழியில், டைடெல் பார்க் செல்லும் வழியில் சிலருக்கு,அப்புறம் டைடெல் பார்க் தாண்டி உள்ள வழியில் சிலருக்கு என உணவு வழங்கலானோம்.மனதில் ஒரு திருப்தி இருந்தது.ஒன்று இந்த நிகழ்வு கூடுவாஞ்சேரி தாண்டி நடைபெறும் முதல் நிகழ்வு.இரண்டு சற்று பட்ஜெட் அதிகம்.மூன்றாவது அகத்தியர் வனம் மலேஷியா குழுவோடு இணைந்து செய்வது .நான்காவது இது போல் வண்டியில்  நடத்திய பூரண தான நிகழ்வு.இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

உடனே சில படங்களை எடுத்து நம் TUT whatsapp குழுவிற்கு பகிர்ந்தோம்.சில நிமிடங்களில் அழைப்பு மணி ஒலித்தது.மறுமுனையில் நம் நண்பர் திரு.வெங்கடேஷ்,கல்பாக்கம்.பரஸ்பர நலம் விசாரிப்புக்கு பிறகு,அன்னதானத்திற்கு ரூ 1000 வங்கி கணக்கில் செலுத்துவதாக கூறி,உடனே செலுத்தி விட்டார்.மகிழ்ச்சிக்கு அளவேது? அவன் அருள் இன்றி இது போல் நடக்குமா?




























மகிழ்ச்சியைப் பாருங்கள்.இதற்கு ஈடு இணை ஏதும் இவ்வுலகில் உண்டா?  உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் அல்லவா?நேற்றைய அமாவாசை அன்னதானத்தில் இது போன்று ஒரு நிகழ்வு.நெஞ்சை அகல மறுக்கின்றது.அது பற்றி வேறொரு பதிவில் பேசுவோம். தற்போது வரை சுமார் ஒரு 80 பேருக்கு உணவளித்து இருப்போம். மீதம் ஒரு 30 பேருக்கு உணவு இருந்தது.மணி சுமார் பிற்பகல் 1 மணி . அப்படியே வண்டியை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலுக்கு செல்லலாம் என்று ஓட்டுநர் கூறினார்.நமக்கு அது சரி என்று தோன்றியது.


                   இவர்கள் இங்கே கேட்பது அன்பினைத் தான் அன்றி வேறொன்றும் இல்லை




அங்கே சென்று வண்டியை நிறுத்தியது தான் தாமதம்.அங்கேயும் கூட்டம் தான்.மனது சற்று வலித்தது.ஒரு வாய் உணவிற்கு இப்படி ஏங்குபவர்கள் இருக்கின்றார்கள் எனும் போது கண்ணில் சற்று நீர்த்துளி எட்டிப்பார்த்தது.அனைவர்க்கும் முடிந்த வரை இருக்கும் உணவை அங்கே கொடுத்துவிட்டு,திருப்தியாய் ஒரு பூரண தான நிகழ்வை நடத்திக் கொடுத்த எம்பெருமானுக்கு, மருந்தீஸ்வரரின் கோபுரம் நோக்கி நன்றி சொல்லி அங்கிருந்து கிளம்பினோம்.
















                                           தென்னாடுடைய சிவனே போற்றி


                                          எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி




முதலில் அகத்தியர் வனம் மலேஷியா குழுவில் உள்ள அன்பர்களின் பாதம் தொட்டு வணங்கி நன்றி கூறுகின்றோம்.ஏனெனில் இப்படியொரு நிகழ்வினை நடத்திட முதல் தூண்டுகோல் அவர்கள் தான்.
அடுத்து,நிகழ்வில் கலந்து கொண்டு உறுதுணையாய் இருந்த திருமதி.பரிமளம் அவர்களுக்கு நன்றி.
அடுத்த நன்றியும் ,வணக்கங்களும் திரு.சிவகுமார் அவர்களுக்கு தான்.இவர் தான் அன்றைய நிகழ்வின் ஆட்டநாயகன். நாம் பணம்  கொடுக்காமலே, உணவை சமைத்து கொடுத்தார்.முன் பணம் கொடுத்ததற்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.உணவை பார்த்ததும்,அதன் தரமும்,மணமும் ..சொல்ல வார்த்தைகள் இல்லை.அவருடைய வண்டியை இலவசமாக கொடுத்து, அவருடைய பங்காக உணவுத் தட்டுகள் வாங்கி கொடுத்து, மூன்று நபர்களை எங்களுடன் அனுப்பி வைத்தார்.அவர்கள் வரவில்லை என்றால் எங்களுக்கு  திண்டாட்டம் தான்.இது தான் குருவின் கருணை என்பது.இந்த பதிவை படிக்கும் நல்லுள்ளங்களும்,TUT குடும்ப உறவுகளும், உங்கள் குடும்ப சுப விழாவிற்கான சமையல் தேவை என்றால் திரு.சிவகுமாரை அணுகவும். சொல்ல மறந்து விட்டேன்.சுமார் 120 பேருக்கு உணவிற்கு எவ்வளவு செலவாகவும்.? சரியாக அரிசி மற்றும் காய்கறிகள் வாங்கிய செலவாக ரூ.1200 மட்டும் பெற்றுக் கொண்டார்.அவரின் குணநலனுக்கு இதுவே சான்று.

நாம் நற்செயல்  செய்ய ஓரடி எடுத்து வைத்தால்,இறைவன் நம்மை நோக்கி ஓரடிக்கு மேல் எடுத்து வைத்து,நல்ல உறவுகளை கொடுப்பார்.அதற்கு இந்த நிகழ்வே சான்று.மேலும் TUT குடும்ப உறவுகள் அனைவருக்கும் நன்றி.

நன்றி

1. திரு.ஷண்முகம் ஆவடையப்பா அவர்கள்

2. அகத்தியர் வனம் மலேஷியா குழு உறவுகள்

3. திரு.சிவ குமார்

4. திருமதி.பரிமளம்


முந்தைய பதிவுகளுக்கு:-


ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22/07/2017 - http://tut-temple.blogspot.in/2017/07/22072017.html

உங்கள் உணவிலிருந்து ஒரு கவளம் கொடுங்கள் போதும் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_80.html

எங்களின் ஓராண்டு பயணம்..http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_18.html

No comments:

Post a Comment