Subscribe

BREAKING NEWS

23 December 2017

அகத்தியரைத் துதி, அவர் மாற்றுவார் உன் விதி- (2)

மெய்யுணர்வாளர்களே.

அனைவருக்கும் வணக்கம். " பொதிகை வேந்தே வருக " என்று தலைப்பில் நாம் சென்ற நவம்பர் மாதம்
ஸ்ரீ அகத்தியர்  ஞானம் இல்லத்தில் அருள்பாலிக்கும் அகத்தியர் ஆயில்ய ஆராதனை பற்றி கண்டோம், கேட்டோம், உணர்ந்தோம், அருள் பெற்றோம் என்றே சொல்ல வேண்டும். அந்த பதிவின் தொடர்ச்சியாக இங்கே மென்மேலும் அருள் பெறுவோம். குருவருள் நம்மை முன்னின்று வழி நடத்தட்டும். அதற்கு முன்பாக அகத்தியர் பற்றி சில குறிப்புகளை இங்கே தொகுத்து தருகின்றோம்.

 பதினென் சித்தர்களில் முதல் சித்தராக விளங்குபவர் ஸ்ரீ அகத்திய மாமுனி ஆவார்.

சிவபெருமான் - பார்வதி அம்மையின் திருமணத்தின் போது வடபால் தாழ்ந்து தென்பால் உயர்ந்தது. அதனால் உலகைச் சமன்படுத்த வேண்டித் தென்திசை பொதிகை மலைக்கு சிவபெருமானால் அனுப்பப்பட்டவர் ஸ்ரீ அகத்திய பெருமானார்.

 திருத்தணிகையம்பரியை (திருத்தணி) அடைந்த எந்தை தணிகேசப் பெருமானை வழிபட்டு செந்தமிழ் புலமையையும், ஐந்து இலக்கணம், கணிதம், சித்த மருத்துவம், முதலியவைகளை பெற்று அவற்றிற்கும் மேலான சிவஞானத்தை எய்தினார்.
ஸ்ரீ சரஸ்வதியின் குருவான (ஸ்ரீ ஹயக்ரீவர் மூர்த்தியிடம் ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம் உபதேசம் கற்றவர்.

ஸ்ரீ பராசக்தியின் அனைத்து சக்தி பீடங்களையும் வழிபட்டவர்.

சிவபெருமான் பார்வதி தேவியின் திருமண கோலங்களை பல்வேறு தலங்களில் தரிசிக்கும் பேறு பெற்றவர்.

ஸ்ரீ அகத்தியர் - ஸ்ரீ உலோபமுத்ரா தேவி திருமண வைபோகம்

சிவ பூஜையில் உன்னத நிலையை அடைந்தவரும், காசி ராஜாவின் அருமை புதல்வியுமான லோபமுத்ரா தேவி சிவ பூஜையில (சைவம்) உன்னத நிலையை அடைந்தது போல் சக்தி பூஜையில் (சாக்தம்) பரிப பூரண நிலையை அடைய விரும்பினார். லோபமுத்ரா தேவியின் அயராத பூஜைகளால் மகிழ்வுற்ற சிவபெருமான் அசரீரி வாக்காய் "மகளே! உன்னுடைய பூஜையால் யாம் மகிழ்வுற்றோம். உமது திருமண வயதில் உமது விருப்பம் நிறைவேறும். உன்னை மணக்கப் போகும் மணாளன் சக்தி உபாசனையில் உன்னத நிலையை பெற்றவன். அவனது நேத்ர தீட்சையால் (கண்) உன்னுடைய சக்தி பூஜை பூரணம் அடையும். அதுவரையில் சிவ பூஜைகளை செய்து வருவாயாக" என்று அருளினார். அதன்படி சிவ பூஜைகளை லோபமுத்ராதேவி சிரம்மேற்கொண்டு செய்து வந்தார்.
ஸ்ரீ உலோபமுத்ரா தேவி உரிய திருமண வயதை அடைந்த உடன் காசி ராஜா தன் ஆருயிர் மகளின் திருமணத்தை நிறைவேற்ற ஸ்ரீ உலோபமுத்ரா தேவியின் விருப்பத்தை கேட்க, அதற்கு ஸ்ரீ உலோபமுத்ரா தேவி சக்தி உபாசனையில் உன்னத நிலையை பெற்ற ஒருவரையே மணக்க விரும்புவதாக தெரிவித்தார். காசி ராஜன் தன் மகளின் தெய்வீக நிலை கண்டு அகமகிழ்ந்து தன்னுடைய குல குருவிடம் ஸ்ரீ உலோபமுத்ரா தேவியின் எண்ணத்தைக் கூறினார். குல குரு அதை ஆமோதித்து சக்தி உபாசனையில் உன்னத நிலையை அடைந்தவர் ஸ்ரீ அகத்தியர் ஒருவரே எனக் கூறி அவரது பெருமைகளை காசிராஜனிடம் எடுத்து கூறினார். இதனால் பெரிதும் மகிழ்வுற்ற காசிராஜா தன் குல குருவின் அனுமதியுடன் சகல பரிவாரங்கள் புடைசூழ பொதிகை மலைக்குச் சென்றார்.
பொதிகை மலை ஆசிரமத்தில் ஸ்ரீ அகத்திய பெருமானார் பிரம்ம முகூர்த்த பூஜைகளை தன் சீடர்களுடன் நிறைவேற்றிக் கொண்டு இருக்கும்போது சிவபெருமான் சக்தி சமேதராய் எழுந்தருளி அகத்திய மாமுனியே பன்னெடுங்காலமாக எமது திருமண கோலத்தை பல தலங்களில் கண்டு மகிழ்வுற்றாய். இப்போது உன்னுடைய திருமண கோலத்தை நாங்கள் காண விரும்புகிறோம் என அருளினார். பின்னர் ஸ்ரீ அகத்தியர் ஸ்ரீ உலோபமுத்ரா தேவி திருமணம் சிவபெருமான், பார்வதி தேவி, காசி ராஜா மற்றும் அனைவரது முன்னிலையில் இனிதே நடந்தேறியது.
இத்தகைய பெருமை வாய்ந்த ஸ்ரீ அகத்தியர் ஸ்ரீ உலோபமுத்ரா தேவியருக்கு, முக்தி தரும் நகர் ஏழினுள் முக்கிய நகராம் நகரேஷ { காஞ்சி என்று மகாகவி காளிதாசரால் புகழப் பெற்றதும், சப்த ரிஷிகள் வழிபட்டதும், ஷண்மதத்தில் (ஆறு மதம்) நான்கு மதங்கள் சங்கமிப்பதும் சைவம் - பஞ்ச பூதத் தலங்களுள் ப்ருதி (மண்) ஸ்தலம், சமயக்குரவர்களால் (நால்வர்) பதிகம் பெற்ற தலமும், சாக்தம் - 108 சக்தி பீடங்களில் நாபிஸ்தானமாக விளங்குவதும், வைணவம் - 108 திவ்ய தேசத்தில் பதினைந்து திவ்ய தேசங்களைக் கொண்டதும், கௌமாரம் - கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்தபுராணம் அரங்கேறியதும், ஸ்ரீ அகத்தியருக்கு பங்குனி உத்திர நன்னாளில் சிவபெருமான் பார்வதி தேவியர் தமது திருமண கோலத்தில் காட்சி அளித்ததுமாகிய இத்தகைய காஞ்சிபுரத்தில் உள்ள பாலாற்றங்கரைக்கு அருகில் திருவண்ணாமலை மாவட்டம் தூசி கிராமத்தில் வேண்டியவர்க்கு வேண்டியவற்றை அருளும் அபிராமி உடனுறை அபிமூர்த்தீஸ்வரர் ஆலயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளில் மட்டுமே உள்ள ஸ்ரீ அகத்தியர் - ஸ்ரீ உலோபமுத்ரா தேவி ஆலயம் பழமையை பறைசாற்றும் வகையில, தொன்மைவாய்ந்த கட்டிட கலையில் முற்றிலும் கருங்கற்களால் நிர்மாணிக்கப்பட உள்ளது. எட்டு திசைகளை குறிக்கும் வகையில் எட்டு யானைகள், இந்த ஆலயத்தை தாங்கி நிற்பது போல் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ரிஷிகள், ஞானிகள், யோகிகள் ஆற்றங்கரையோரம் வாசம் புரிவதை கருத்தில் கொண்டு (காஞ்சி ஸ்ரீ மகாபெரியவாள் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமிகள் மணிமண்டபம் அருகில்) அமைந்து உள்ளது.
ஸ்ரீ அகத்திய மாமுனிவர் திரிசடையுடன் அமர்ந்த கோலத்தில் வலது கையில் சின் முத்திரை, ஜபமாலையுடனும், இடது கையில் கமண்டலத்துடனும் காட்சி அளிக்கிறார். ஸ்ரீ உலோபமுத்ரா தேவி அமிர்தகலசம் தாங்கி பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஆலயம் குடமுழுக்கு முடிந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. தற்போது பிரகாரத்திருப்பணிகள் நடைபெற இருப்பதால் பக்தர்கள் அனைவரும் தங்களால் இயன்ற நன்கொடையை அளித்து ஸ்ரீ உலோபமுத்ரா சமேத ஸ்ரீஅகத்திய மாமுனியின் அருளுக்கு பாத்திரர்களாகும்படி கோயில் நிர்வாகம் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. 
  • 1) அகத்தியர் சென்னைக்கு மிக அருகில் உள்ள பஞ்சேஷ்டி எனும் இடத்தில் ஐந்து மஹா யாகங்கள் செய்ததாகவும் பின்னர் பொதிகை வழியாக சென்று அனந்தசயனம் எனும் கேரளாவில் உள்ள அனந்த பத்மனாப ஸ்வாமி கோவிலில் ஐக்கியம் அடைந்ததாகவும் தெரிகிறது. மேலும் மஹாவிஷ்ணு அனந்த சயனத்தில் இருக்கும்போது பத்மநாபனின் வலது கை சிவலிங்கத்தை தழுவியதாக இருக்கும். ஆனால் சில படங்களில் பத்மனாபனின் கை அகத்தியரின் தலையில் வைத்து ஆசீர்வதிப்பதை போல் காணப்படுகிறது. இந்நிலையில் பார்க்கும் பொழுது திருவனந்தபுரம் அனந்த பத்மநாபஸ்வாமி திருக்கோவில் அகத்தியரின் ஐக்கியம்  உள்ள இடம் என உறுதியாகக் கூறலாம். 

  • 2) அகத்தியரால் இராமபிரானுக்கு வெற்றி கிடைக்கும் பொருட்டு அகத்தியரால் உபதேசிக்கப்பட்டதே "ஆதித்திய ஹிருதயம்" எனும் ஸ்லோகம் ஆகும். இதை பாராயணம் செய்த பிறகே இராமபிரான் இலங்கையை வென்றார் என்பது உண்மை. மேலும் இவ்விடத்தில் அகத்தியர் இராமபிரானுக்கு உபதேசித்தது சிவ கீதை எனும் நூலாகும். 

  • 3) திருநெல்வேலி புராணத்தின் படி தமிழ் நாட்டை சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் அகத்தியருக்கு கொடுக்க அகத்தியர் பாண்டியனுக்கு கொடுத்ததாக புராணம் கூறுகிறது. 







  • 4) அகத்தியருக்கு தாமிரபரணி ஆறு சிவ மூர்த்தியால் கொடுக்கப்பட்டது. 


  • 5) திருவிளையாடல் புராணத்தின் படி தேவர்களை வருத்திய விருத்ராசுரன் இந்திரனது வஜ்ராயுதத்திற்கு பயந்து கடலில் ஒளிந்து கொள்ள தேவர்கள் அகத்தியரை வேண்ட அகத்தியர் சமுத்திர ஜலத்தை தன் கைகளால் ஏந்தி குடிக்க சமுத்திரத்தில் இருந்த விருத்ராசுரன் வெளிப்பட அவனை இந்திரன் வென்றதாகவும் பின் மீண்டும் கடலை அகத்தியர் விடுவித்ததாகவும் மதுரை திருவிளையாடல் புராணம் கூறுகிறது. 


  • 6) அகத்தியர் பன்னிரண்டு வருடங்கள் நீரில் படுத்து தவம் இருந்ததாக கூறுகிறது உத்ர இராமயணம் 




  • 7) இராம மூர்த்திக்கு இலங்கையை வெல்லும் நிலையில் திவ்ய பாணங்களைக் கொடுத்து அப்பாணங்களின் வரலாற்றையும் கொடுத்தவர் அகத்தியராவார். 




  • 8) சிவ அனுகிரகத்தால்் சிவா பூஜை செய்வதற்காக கமண்டலத்தில் கங்கையைப் பெற்றுக்கொண்டு திரும்பி வருகையில் மாயாமபுரத்தின் அருகில் மலை உருவாக இருந்த க்ரௌஞ்சன் மாயையில் பட்டு அதனிடம் இருந்து எழுந்து அவனை மலை உருவாகவே இருக்க சாபம் அளித்து பின் குமாரக் கடவுளாகிய முருகனின் வேலால் பிளவுபட சாபவிமோசனம் செய்து காசி ஸ்தலத்தை அடைந்தவர் அகத்தியர். 


  • 9) கந்த மூர்த்தியை எண்ணி தவம் புரிந்து சகல கலைகளையும் பெற்றவர். 





  • 10) சூரியனிடமிருந்து தமிழைக் கற்றவர் அகத்தியர். 





  • 11) சுவேரனின் குமாரியாகிய காவிரியை மணந்தவர்.(இவளே உலோபமுத்ரா என காவிரி புராணம் கூறும். இவளை விதர்வ நாட்டு புத்திரி என பாரதம் கூறும். 




  • 12) அகத்தியர் வண்டு உரு கொண்டு புஷ்பங்களில் இருந்து தேனை எடுத்து சிவ பூஜை செய்ததால் ஈங்கோய் மலை எனும் ஸ்தலம் உண்டாயிற்று ( திருசெங்கோட்டு புராணம் ). 




  • 13) விஷங்களுக்கு என்று அகத்தியரால் ரிக் வேதத்தில் ஒரு கீதம் செய்யப்பட்டு இருக்கிறது. 






  • 14) தூங்கி எயில் எழுந்து தொடித்தோல் செம்பியன் எனும் மன்னன் காலத்தில் அவன் ஆண்ட காவிரி பூம்பட்டிணத்தில் அகத்தியர் இந்திர விழாவை எடுத்திட்டார் என மணிமேகலை கூறுகிறது. 





  • 15) அகத்தியரின் மாணவர்கள் தொல்காப்பிய முனிவர் அதன் பொருட்டு ஆசான் தூராலிங்கன் செம்பூட்சேய், வையாபிகன், வாய்த்தியன், பணம்பாரன், கழாரம்பன், அவிநயன், காக்கைப் பாடினியன், நற்றத்தன், வாமனன். 





  • 16) அகத்தியருக்கு கும்பமுனி, குருமுனி, கலசயோனி என பல நாமங்கள் உண்டு. 





  • 17) அகத்தியர் எனும் பெயருக்கு பொருள் விந்திய மலையை அடக்கியவர் என்பதாகும். 

  • 18) இவர் செய்த நூல்கள் அகத்தியம், வைத்திய நூல்கள் பெருந்திரட்டு ஆயுர்வேத பாஷ்யம், விதிநூல் மூவகை காண்டம், அகத்திய சிந்தாமணி, செந்தூரம் முந்நூறு மணி, நாலாயிரம், சிவ ஜாலம் சக்தி ஜாலம், சண்முக ஜாலம், வைத்திய கண்ணாடி, அகத்திய ரத்னாகாரம், வைத்தியம் ஆயிரத்து ஐநூறு, ஆயிரத்து அறனூறு கர்ம வியாபகம், தரிசில் புஷ்பம் இருநூறு தண்டகம், பட்சினி, நாடி, மேலும் அகத்திய சம்யிதை எனும் வைத்திய வகை நூல் இவரால் செய்யப்பட்டது.






பதிவின் இடையிடையே அகத்தியர் ஞானம் இல்லத்தில் நடைபெற்ற அகத்தியர் ஆயில்ய ஆராதனையின் நிகழ்வின் துளிகளை இணைத்துள்ளோம். அனைவரும் கண்டு அருள் பெற்று இருப்பீர்கள் என்று நம்புகின்றோம். சந்தனம்,திருநீறு, பன்னீர் அபிஷேகம் என்று அபிஷேகம் களை கட்டியது. இரு கண்களில் நம்மால் காண இயலவில்லை. காட்சிக்குள் அடங்கும் நிலையா அது? அபிஷேகம் முடிந்த பின், அலங்காரம் நடைபெற்றது. சுவாமிநாதன் ஐயா அவர்கள் மிக மிக பொறுமையாக அலங்காரம் செய்தார்கள். பூஜை முழுதும் உதவியாக இரு சிறார்கள், எங்குமே யாம் இப்படி கண்டதில்லை. சிறுவர்கள் பூஜைக்கு இடையூறாக இருப்பார்கள் என்று தான் நாம் கேள்விப்பட்டு இருக்கின்றோம். இங்கே அந்த பேச்சு உடைக்கப் பட்டிருக்கின்றது. சித்தர்கள் எதுவும் செய்வார்கள் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். சித்தம் உணர,உணர நம்மில் உள்ள பித்தம் தெளியும்.

அலங்காரம் முடிந்ததும், கூட்டு வழிபாடு நடைபெற்றது. பிரார்த்தனை சமர்ப்பித்த ஒவ்வொருவரின் பெயர் கூறி, அவர்களின் நியாயமான கோரிக்கையை சொல்லி வழிபாடு செய்தார்கள், அனைவரும் ஒன்று சேர்ந்து சிவ புராணம் பாடி, அகத்தியர் 108 போற்றிகளை போற்றி , சில பதிகங்களைப் பாடினோம். இதோ அனைவரும் எதிர்பார்க்கும் தீப ஆராதனை உங்களுக்காக












 தீப ஆராதனை முடித்து, மீண்டும் அகத்தியரின் தரிசனம் பெற்றோம்.

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்தஆ ரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் றனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே என்று மனதுள் துதித்தோம்.


இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் என்று அகத்தியரை சிக்கெனப் பிடித்தோம் என்றே சொல்ல வேண்டும்.










  
 பூஜை முடிந்து , அருள் பிரசாதங்களை பெற்றுக் கொண்டு, சில கோரிக்கைகளை மீண்டும் சமர்ப்பித்து விட்டு, கீழிறங்கினோம்.

மனதுள் புது தெம்பு பிறந்தது.
அகத்தியரைத்  துதிஅவர் மாற்றுவார் உன் விதி

என்று மனதுள் ரீங்காரம் இடுவதை உணர்ந்தோம். கண்ணிற்கு விருந்தாய் அபிஷேகம், செவிக்கு விருந்தாய் துதிப் பாடல்கள், உயிருக்கு விருந்தாய் அகத்தியரின் அருள். வேறென்ன வேண்டும் நமக்கு இது போதும் இறைவா!



No comments:

Post a Comment