Subscribe

BREAKING NEWS

03 April 2018

பங்குனி மற்றும் சித்திரை மாத அடியார்கள் பூசை

அன்பிற்கினிய அடியார்களே.

அனைவருக்கும் வணக்கம். இந்த பதிவில் ஏப்ரல்  மாதத்தில் நடைபெற உள்ள சிவ அடியார்களின் பூசை பற்றியும், அடியார்க்கு அடியாரைத் திகழ்கின்றவர்களைப் பற்றியும் காண உள்ளோம்.இந்த  மாதத்தில் ஏழு  அடியார்களின் பூசை வருகின்றது. இதில் காரைக்கால் அம்மையாரின் பூசை பங்குனி மாத சுவாதி நட்சத்திரத்தில் நிறைவு பெற்றுள்ளது. ஏனைய பூசை விபரங்களை இங்கே சமர்ப்பிக்கின்றோம்.

பங்குனி - சதயம் - தண்டியடிகள் 
சித்திரை - பரணி - சிறுத்தொண்டர் நாயனார் 
சித்திரை - ரோகிணி - மங்கையர்க்கரசியார் 
சித்திரை - திருவாதிரை - விறன்மிண்ட நாயனார் 
சித்திரை - கிருத்திகை  இசைஞானியார் 
சித்திரை  - சுவாதி - திருகுறிப்புத்தொண்டர்

பங்குனி - சதயம் - தண்டியடிகள் - ஏப்ரல் 12

“நாட்டமிகு தண்டிக்கும் அடியேன்” – திருத்தொண்டத் திருத்தொகை



தண்டியடிகள் திருவாரூரில் பிறந்த பெரும் பேறுடையவர். இவர் ‘இறைவன் திருவடிகளை மனத்துட் கொண்டு நோக்கும் அகநோக்கு ஒன்றே போதும்’ என்று கருத்தினை வலியுறுத்துவது போன்று, பிறக்கும்போதே பார்வையை இழந்திருந்தார். தண்டியடிகள் திருவாரூர்ப் பூங்கோயிலில் தேவாசிரியமண்டபத்தினுள் அடியார்களை வணங்கிவிட்டு, இறைவன் முன் வலம் வந்து, காதலாகி, நமச்சிவாய அன்புடையவராய்த் திருத்தொண்டுகள் பல செய்து வந்தார்.

ஆரூர்த் திருக்கோயிலின் மேற்புறத்திலுள்ள திருக்குளம் பக்கம் எங்கும் சமணர்களின் பாழிகள் பெருகிக் குளத்தின் இடம் வரவரக் குறைவடைந்தது. இதனை அறிந்த தண்டியடிகள், திருக்குளத்தை முன்போற் பெருகத்தோண்ட எண்ணினார். குளத்தில் இறங்கி மண்ணை வெட்டியெடுத்துக் கயிற்றைப் பற்றி ஏறிக் கரையிலே போடுவாராயினார். இவ்வாறு நாள்தோறும் தண்டியடிகள் குளத்தினைத் தோண்டக் கண்டு சமணர்கள் பொறாது அவரை அடைந்து ‘மண்ணைத்தோண்டினால் சிற்றுயிர்கள் இறந்துவிடும், வருத்தல் வேண்டாம்’ என்றனர். அதுகேட்ட தண்டியடிகள் ‘திருவில்லாதவர்களே, இந்தச் சிவதொண்டின் பெருமை உங்களுக்குத் தெரியவருமோ’ என்றனர். அமணர்கள் அவரை நோக்கி, ‘சிந்தித்து இந்த அறத்தினைக் கேளாத நீ செவியும் இழந்தனையோ’ என்று இகழ்ந்துரைத்தனர். அதுகேட்ட தண்டியடிகள் ‘மந்த உணர்வும், விழிக்குருடும், கேளாச்செவியும் உமக்கே உள்ளன. நான் சிவனுடைய திருவடிகளை அல்லலால் வேறு காணேன்; அதனை அறிவதற்கு நீர் யார்? உங்கள் கண்கள் குருடாகி உலகெலாம் காண யான் கண்பெற்றால் நீர் என்ன செய்வீர்? என்றார். அதுகேட்ட சமணர், ‘நீ உன் தெய்வத்தருளால் கண்பெற்றாயாகில் நாங்கள் இந்த ஊரில் இருக்கமாட்டோம்’ என்று சொல்லி அவர் கையிலுள்ள மண்வெட்டியைப் பறித்து நட்டதறிகளையும் பிடுங்கி எறிந்தனர்.

தண்டியடிகள் ஆரூர்பெருமான் முன் சென்று ‘ஐயனே! இன்று அமணர்களால் அவமதிக்கப்பட்டு வருந்தினேன். இவ்வருத்ததைத் தீர்தருள வேண்டும்;’ என முறையிட்டுத் தமது மடத்திற்குச் சென்றனர். இன்று பணிசெய்ய முடியவில்லையே என்ற வருத்தத்தால் அழுதுகொண்டு துயின்றார். அன்றிரவு ஆரூரிறைவர் அவரது கனவில் தோன்றி, ‘தண்டியடிகளே உன் மனக்கவலை ஒழிக! உன் கண்கள் காணவும், அமணர்கள் கண்கள் மறையுமாறும் செய்கின்றோம்’ என்று அருளிச் செய்து, சோழ மன்னர் கனவில் தோன்றி ‘தண்டி என்பவன் நமக்குக் குளந்தோண்ட அதற்குச் சமணர்கள் இடையூறு விளைவித்தனர். நீ அவனிடத்திலே சென்று அவன் கருத்தை முடிப்பாயாக’ என்று பணித்து மறைந்தருளினார்.

வேந்தன் விழித்தெழுந்து இறைவர் திருவருளை போற்றிப் பொழுது புலர்ந்ததும் தண்டியடிகளை அடைந்து, அவர் நிகழ்ந்தன சொல்லக்கேட்டு அமணர்க்கும், தண்டிக்கும் இடையே நிகழ்ந்த அவ்வழக்கைத் தீர்க்க எண்ணினான். அமணர்களை அழைத்து அவர்கள் கருத்தை அறிந்துகொண்டான். பின்னர் அமணர்களை அழைத்து தன்னுடன் வரத் தண்டியடிகளாருடன் குளக்கரையை அடைந்தான். வேந்தன் தண்டியடியாரை நோக்கி, ‘பெருகும் தவத்தீர்! நீர் சிவனருளால் கண் பெறுதலைக் காட்டுவீராக’ என்றான். அதுகேட்ட தண்டியடிகளார், ‘தான் சிவனுக்குப் பொருந்திய அடியேன் என்றால் இன்று என் கண்கள் ஒளி விளங்கப் பெற்று அமணர்கள் தங்கள் கண்களை இழப்பர். அதனால் ஆராய்ந்த மெய்பொருளும் சிவபதமே ஆகும்’ என்று சொல்லித் திருவைந்தெழுத்தை எடுத்தோதிக் குளத்தில் மூழ்கிக் கண்ணொளிபெற்று எழுந்தார். அங்கிருந்த அமணர்கள் கண் ஒளி இழந்து வழி தெரியாமல் தடுமாற்றமுற்றனர், ‘பழுதுசெய்து அமண் கெட்டது’ என்றுணர்ந்த மன்னன், தன் ஏவலாளரைப் பார்த்து, தண்டியடிகளோடு ஒட்டிக் கெட்ட சமணர்களைத் திருவாரூரினின்றும் அகன்று போம்படி துரத்துவீராக’ எனப்பணித்தான். கண் கெட்ட சமணர்கள் குழியில் விழுந்தவரும், புதரில் முட்டுப்பட்டவரும், உடுத்த பாய்களை இழப்பவரும், பிடித்த பீலியை இழப்பவருமாய் ஓட்டமெடுத்தனர். பின் திருக்குளத்தின் கரைகளைச் செம்மைபெறக் கட்டித் தண்டியடிகளை வணங்கிச் சென்றான். அகக்கண்ணேயன்றிப், புறக்கண்ணும் பெற்ற தண்டியடிகளார் இறைவனைப் போற்றித் திருவைந்தெழுத்தோதித் திருப்பணிகள் பல புரிந்து திருவடி அடைந்தார்.



சித்திரை - பரணி - சிறுத்தொண்டர் நாயனார்  - ஏப்ரல் 17

சிறுத்தொண்ட நாயனார் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் 63 நாயன்மார்களில் ஒருவர் ஆவார். இவர் இரண்டாம் புலிகேசியை வெற்றி கொண்ட சேனாதிபதியாக நரசிம்ம பல்லவரிடம் பணியாற்றினார் என்பதையும் குறிப்பிட வேண்டும். காவிரி வளநாட்டில் திருச்செங்கோட்டங்குடியில் மாமாத்திரர் குலத்தில் தோன்றியவர் பரஞ்சோதியார். இவர் ஆயுள் வேதக்கலையிலும், வடநூற்கலையிலும், படைக்கலத் தொழிலிலும் நிரம்பிய பயிற்சியுடையவர், யானையேற்றம், குதிரையேற்றம், ஆகியவற்றிலும் வல்லவர். உள்ளம் நிறைந்த கலைத்துறைகள் ஒழிவின்றிப் பயின்றதனால் சிவன்கழலைச் சிந்தித்துப் போற்றுதலே மெய்ந்நெறியாவதெனத் தெளிந்துவர். ஈசனடியார்க்குப் பணிசெய்தலை இயல்பாகக் கொண்டவர்.


சேனாதிபதியாக

நரசிம்ம பல்லவரிடம் சேனாதிபதியாய்ப் போர்முனையிற் பகையரசர்களை வென்று அரசனால் நன்கு மதிக்கப்பட்டவர். இவர் மன்னர் பொருட்டு வட திசையில் படையெடுத்துச் சென்று, வாதாபி நகரத்தை அழித்து அங்கிருந்து பலவகை நன்மணிகளையும், செல்வங்களையும், யானை, குதிரை, முதலியவற்றையும் கைப்பற்றித் தம்வேந்தனிடம் கொணர்ந்தார். அரசன் இவரது வீரத்தையும், ஆண்மையினையும் அதிசயித்து புகழ்ந்து பாராட்டினார். அந்நிலையில் பரஞ்சோதியாரை நன்குணர்ந்த அமைச்சர்கள், ‘அரசே! இவரிடம் சிவபெருமானுக்குத் திருத்தொண்டு செய்யும் இயல்பு நிரம்பியிருப்பதால் போரில் இவரை எதிர்க்கவல்லார் எவருமில்லை என்றனர். இச்செய்தியைக் கேள்வியுற்ற வேந்தன், “உம்பர் பிரான் அடியாரை உணராதே கெட்டொழிந்தேன், வெம்பு கொடும் போர்முனையில் விட்டிருந்தேன், என அஞ்சிப் பரஞ்சோதியாரை நோக்கி, எம்பெருமான்; எனது பிழையைப் பொறுத்தருள வேண்டும்” என இறைஞ்சினார்.
மன்னன் இறைஞ்சியதும் பரஞ்சோதியாரும் முன் வணங்கி ‘அரசே! எனது தொழிலுக்கேற்ற பணியினைச் செய்வேன். அதற்கு என்ன தீங்கு’ என்றார். அறம்புரி செங்கோலனாகிய வேந்தன், அவருக்கு நிறைந்த நிதிக்குவையும், நீடு விருத்திக்கான நல்நிலம், ஆனிரை ஆகியவற்றை அளித்து வணங்கி, நீர் உம்முடைய திருத்தொண்டின் நிலைமையினை நானறியாதபடி கொண்டு நடத்தினீர். இனி உம்முடைய மனக்கருத்துக்கு இசையத் திருத்தொண்டு செய்வீராக’ என விடைகொடுத்தனுப்பினார்.

சிவத் தொண்டராக

மன்னவனிடம் விடைபெற்ற பரஞ்சோதியார், தமது பதியாகிய திருச்செங்காட்டங்குடியினை அடைந்தார். அங்கு கணபதீச்சரத்து இறைவரை இறைஞ்சிச் சிவத்தொண்டுகளை வழுவாது செய்திருந்தார். இவர் திருவெண்காடு நங்கையை மணம் முடித்தார். நங்கையாருடன் மனையறத்தினை இனிதே நிகழ்த்தி நாள்தோறும் சிவனடியார்களுக்குத் திருவமுது செய்வித்துப் பின் தாம் உண்ணலை வழக்கமாகக் கொண்டிருந்தார். பரஞ்சோதியார் சிவனடியார்களை விரும்பி பொழுது அவர் மிகச் சிறியராகப் பணிந்து ஒழுகியமையால் சிறுத்தொண்டர் என அழைக்கப்பட்டார். இவருக்கு சீராளத்தேவர் என்னும் திருமைந்தர் அவதரித்தார். அப்பிள்ளைக்கு ஐந்து வயது வந்தபொழுது பள்ளியிற் கல்வி பயிலவைத்தார். அந்நாளில் திருஞானசம்பந்தப் பிள்ளையார் இறைவனை வழிபடத் திருச்செங்காட்டங்குடிக்கு எழுந்தருளினார். ஆளுடைய பிள்ளாயாரும் பேரன்பினாற் சிறந்த சிறுத்தொணடருடன் நண்பினால் அளவளாவி மகிழ்ந்தனர். கணபதீச்சரப் பெருமானைத் தாம்பாடிய ‘பைங்கோட்டு மலர்புன்னை’ என்னும் முதற்குறிப்புடைய திருப்பதிகத்தில் சிறுத்தொண்டரைச் சிறப்பித்துப் பாடினார்.

பைங்கோட்டு மலர்ப்புன்னைப் பறவைகாள் பயப்பூரச்
சங்காட்டந் தவிர்த்தென்னைத் தவிராநோய் தந்தானே
செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டன் பணிசெய்ய
வெங்காட்டு ளனலேந்தி விளையாடும் பெருமானே.

இறைவனின் திருவிளையாடல்

சிறுத்தொண்டரது உண்மை அன்பை நுகர்ந்தருள விரும்பிய சிவபெருமான், பைரவ அடியாராக வேடந்தாங்கித் திருச்செங்காட்டங் குடியை அடைந்தார். பைரவசுவாமியார் செஞ்சடையினைக் காளமேகம் போன்று கருமயிர்த்திரளாக முடித்திருந்தார். அக்கருங்குஞ்சியிலே தும்பைப் பூக்கள் சூடியிருந்தார். திருச்சடையிலுள்ள இளம்பிறையைத் திருநீற்றுப் பொட்டாக நெற்றியிலிட்டார். செக்கர் வானத்தை அந்தி இருள் மறைப்பது போல, செம்மேனியை மூடிக் கருஞ்சட்டை அணிந்தார். இடக்கையிற் சூலம் ஏந்தினார். இத்தகைய கோலத்துடன் சிறுத்தொண்டரது வீட்டு வாயிலை அடைந்து ‘தொண்டர்க்குச் சோறளிக்கும் சிறுத்தொண்டர் இவ்வீட்டில் உள்ளாரோ? என வினவி நின்றார். அம்மொழியினைக் கேட்ட சந்தனத்தாதியார் முன்வந்து வணங்கி, ‘அவர் அடியாரைத் தேடி வெளியே சென்றுள்ளார். எம்மை ஆளான உடையவரே! வீட்டினுள் எழுந்தருள்வீராக’ என வேண்டினார். வந்த பைரவ சுவாமியார் அவரை நோக்கி, ‘மாதர்கள் இருக்கும் இடத்தில் நாம் தனியே புகமாட்டோம்’ என்றார். அது கேட்ட திருவெண்காட்டு நங்கையார். ‘இவ்வடியவர் போய்விடுவாரோ’ என்று அஞ்சி விரைந்து உள்ளிருந்து வீட்டு வாயிலிற்கு வந்து ‘எம்பெருமானே! அம்பலவர் அடியாரை அமுது செய்விப்பதற்கு அடியார் எவரையும் காணாமல் வெளியே சென்றுள்ளார்; தேவரீர் இங்கு எழுந்தருளியதனைக் கண்டால் தாம்பெற்ற பெரும்பேறெனக் கொள்வார். இனிச் சிறிதும் தாமதிக்கமாட்டார்; இப்பொழுதுதே வந்துவிடுவார். தேவரீர் வீட்டினுள் எழுந்தருளி இருப்பீராக’ என இறைஞ்சினார்.

அதுகேட்ட பைரவர் ‘மாதரசியே நம் உத்தரபதியாயுள்ளோம், சிறுத்தொண்டரைக் காணவந்தோம். அவரின்றி இங்கு தங்க மாட்டோம். கணபதீச்சரத்து ஆத்தி மரத்தின் கீழ் இருக்கின்றோம். அவர் வந்தால் நாம் வந்த செய்தியைச் சொல்வீராக’ எனக் கூறிச் சென்று திருவாத்தி மரநிழலின் கீழ் அமர்ந்தருளினார்.


அடியார்களைத் தேடி வெளியே சென்று திரும்பிய சிறுத்தொண்டர் அடியார் ஒருவரையும் காணாமையை மனைவியாருக்குச் சொல்லி வருந்தினார். அப்பொழுது மனைவியார், ‘உத்தராபதியாகிய பைரவ அடியார் ஒருவர் வந்த செய்தியைக் கூறினார். சிறுத்தொண்டர் விருப்புடன் விரைவாகச் சென்று ஆத்தியின் கீழமர்ந்த அடியார் திருவடிகளைப் பணிந்து நின்றார். பணிந்து நின்ற சிறுத்தொண்டரை நோக்கிய பைரவ சுவாமியார் “நீரோ பெரிய சிறுத்தொண்டர்?” என வினவினார். சிறுத்தொண்டர் அவரை நோக்கி வணங்கி, திருநீறு, உருத்திராக்கமுடைய அடியார்களைப் பணிந்து போற்றுவதற்குரிய தகுதி இல்லாதவனாயினும் சிவனடியார்கள் கருணையினால் என்னை அவ்வாறு அழைப்பர்” என்று கூறிப் பின் “இன்று சிவனடியார்களை அமுது செய்விக்க விரும்பி எங்கு தேடியும் காணப்பெற்றிலேன்’ தவத்தால் உம்மைக் கண்டேன். அடியேன் வீட்டில் எழுந்தருளி அழுது செய்தருளல் வேண்டும்’ என வேண்டிக் கொண்டார். அதுகேட்ட பைரவர், சிறுத்தொண்டரை நோக்கி, ‘தவச்செல்வரே! உம்மைக் காணும் விருப்புடன் இங்கு வந்தோம். நாம் உத்தராபதியோம். எம்மைப் பரிவுடன் உண்பிக்க உம்மால் முடியாது; செய்கை அரியது;’ என்று கூறினார். ‘தேவரீர் அமுது செய்யும் இயல்பினை அருளிச் செய்யும். விரைந்து உணவு அமைக்கச் செய்வேன். சிவனடியார் கிடைக்கப் பெற்றால் தேட ஒண்ணாதனவும் எளிதில் உளவாகும்; அருமையில்லை’ என்று சிறுத்தொண்டர் உரைத்தார். அதனைக் கேட்ட பைரவப் கோலப் பெருமான், ‘எம் அன்புக்குரிய தொண்டரே! நாம் ஆறுமாதத்திற்கு ஒருதடவை பசுவைக் கொன்று உண்ணுவது. அதற்குரிய நாளும் இன்றேயாகும். உம்மால் எம்மை உண்பிக்க முடியாது’ என்றார். அதுகேட்ட சிறுத்தொண்டர், ‘மிகவும் நன்று, மூவகைப் பசு நிரையும் என்னிடமுள்ளன. பெரியீர், உமக்கு அமுதாகும் பசு இதுவெனத் தெரிவித்தால் நான் போய் விரைந்து போய் சமைத்துக் காலம் தப்பாமல் வருவேன் என்று கைதொழுதார்.

 பைரவர் அவரை நோக்கி, ‘நாம் உண்ணக் கொல்லும் பசு நரபசு; உண்பது அஞ்சு பிராயத்துள்; அது உறுப்பில் மறு இல்லாதிருத்தல் வேண்டும்;’ எனக் கூறினார். பின்னர். கேட்ட சிறுத்தொண்டரும் ‘யாதும் அரியதில்லை அருளிச்செய்யும்’ என்றார். ஒரு குடிக்கு ஒருமகனாக சிறுவனை மனமுவந்து தாய்பிடிக்க தந்தை அரிந்து குற்றமின்றி அமைத்த கறியினை நாம் உண்பது’ எனக் கூறினார். அதைக் கேட்ட சிறுத்தொண்டர் எம்பெருமான் அமுது செய்யப்பெறில் அதுவும் அரிதன்று’ என்றார். அடியவர் இசையப்பெற்ற களிப்பால் அவர் திருவடிகளை வணங்கி வீட்டை அடைந்தார்.
வீட்டு வாயிலில் கணவர் வருகையை எதிர்பார்த்து நின்ற மனைவியார், அவரது மலர்ந்த முகங்கண்டு வந்த அடியாரைப் பற்றி வினவினார். சிறுத்தொண்டர், ‘ஒரு குடிக்கு ஒரு மகனாயும் ஐந்து வயதுடையவனாயும் உறுப்பில் ஊனமற்றனாயுமுள்ள பிள்ளையைத் தாய்பிடிக்க தந்தை மகிழ்ச்சியுடன் அரிந்து கறிசமைத்தால் தாம் திருவமுது செய்வதாகக் கூறினார்’ என்றார். அதுகேட்ட கற்பிற்சிறந்த மனைவியார், பெரிய பைரவத் தொண்டர் அமுது செய்யப் பெறுவதற்கு இங்கு உரிய வகையால் அமுதளிப்போம்.’ எனத் தமது சம்மதத்தை முன்னர் புலப்படுத்தி பின்னர் ஒருவனாகி ஒருகுடிக்கு வரும் அச்சிறுவனைப் பெறுவது எவ்வாறு? என வினவினார். சிறுத்தொண்டர் மனைவியாரின் முகத்தை நோக்கி, ‘இத்தகமையுடைய பிள்ளையை நினைவு நிரம்பிய நிதி கொடுத்தாலும் தருவார் இல்லை? நேர் நின்று தம்பிள்ளையைத் தாமே அரியும் தாய் தந்தையார் இருக்கமாட்டார்கள். ஆகவே நான் உய்ய நீ பெற்ற மைந்தனை இங்கு அழைப்போம்’ என்றார். சிறுத்தொண்டர் மனமகிழ்ந்து தம் மைந்தர் வேதம் ஓதச் சென்ற பள்ளிக்குச் சென்றார். பாதச் சலங்கை ஒலியெழுப்பச் சீராளதேவர் ஓடிவந்து தந்தையைத் தழுவிய நிலையில், சிறுத்தொண்டர் மைந்தனை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு விரைந்தார். மைந்தனை எதிர்ச்சென்று வாங்கிய வெண்காட்டு நங்கையார் பிள்ளையைத் தலைசீவி, முகம்துடைத்துத் திருமஞ்சனமாட்டிக் கோலஞ் செய்து கணவர் கையிற் கொடுத்தார்.

பிள்ளையைக் கையிற்கொண்ட சிறுத்தொண்டர், அடியார்க்குக் கறியமுதாம் என்று மைந்தனை உச்சிமோவாது, மார்பிலணைத்து முத்தம் கொள்ளாது, அடியார்க்கு அமுதமளிக்க அடுக்களையிற் செல்லாது, வேறிடத்திற் செல்வாராயினார் ஒன்றிய உள்ளத்தாராகிய சிறுத்தொண்டரும் அவருடைய மனைவியாரும் தாம் செய்யப்போகும் செயலின் உண்மையினை உலகத்தார் உள்ளாவாறு அறியும் உணர்வுடையாரல்லர் என்று கருதி, மறைவிடத்திற் சென்று புகுந்தனர். பிள்ளையைப் பெற்ற தாயார் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தார். உலகை வென்ற தந்தையார் பிள்ளையின் தலையைப் பிடித்தார். மெய்த்தாயார் பிள்ளையின் கிண்கிணிக்கால் இரண்டினையும் மடியின் புடையில் இடுக்கிக் கொண்டார். அதனைக் கண்ட மைந்தன் பெற்றோர் முகம்நோக்கி மகிழ்ந்து நகைத்தனன். தனிமா மகனைத் தந்தையார் கருவிகொண்டு தலையரிவாராய் இருவர் மனமும் பேருவகை எய்தி அரியசெயல் செய்தனர். வெண்காட்டு நங்கையார், அறுத்த தலையின் இறைச்சி அமுதிற்கு ஆகாதென்று கழித்து அதனை மறைத்து நீக்குமாறு சந்தனத் தாதியார் கையில் கொடுத்துவிட்டு மற்றைய உறுப்புக்களின் இறைச்சிகளையெல்லாம் அறுத்துப் பாகம்பண்ணி வேறு கறிகளும் சமைத்துச் சோறும் சமைத்துக் கணவருக்குத் தெரிவித்தார்.

சிறுத்தொண்டர், ஆர்வத்துடன் விரைந்து சென்று திருவாத்தியின் கீழிருந்த பைரவ சுவாமிகளை வணங்கி, ‘தேவரீர் அடியேன் இல்லத்திற்கு எழுந்தருளி அமுது செய்தருள வேண்டும்’ என்று ஆர்வத்தோடு அழைத்தார். ‘தேவரீர் பசித்தருளக் காலந்தாழ்த்தினேன் ஆயினும் தேவரீர் சொல்லியவண்ணம் திருவமுது சமைத்தேன். எண்ணம் வாய்ப்ப எழுந்தருள வேண்டும்’ என வேண்டினார். வறியோன் இருநிதியும் பெற்று உவந்தாற்போல அடியவரைத் தம் வீட்டிற்கு அழைத்து வந்தார். வெண்காட்டு நங்கையார் கொணர்ந்த தூய நீரினால் அடியார் பாதங்களை விளக்கிய சிறுத்தொண்டர் அந்நீரை உள்ளும் பருகி புறம்பும் தெளித்தார். தூப தீபங் காட்டி வணங்கினார். மனைவியாருடன் அடியாரை வணங்கி நின்று ‘திருவமுது படைக்கும் வகை எவ்வாறு’ என வினவினார். ‘இனிய அன்னமுடன் கறிகள் எல்லாம் ஒப்படைக்க’ என்றார் பயிரவர். அவர் கூறிய வண்ணம் திருவெண்காட்டு நங்கையார் பரிகலந்திருத்தி வெண்துகில் விரிப்பில் செந்நெற்சோறும் கறியமுதும் படைத்தார். அதனைக் கண்ட பைரவர் அவரை நோக்கி, 'சொன்ன முறையிற் கொன்ற பசுவினது உறுப்பு எல்லாவற்றையும் கொண்டு சுவை நிரம்பக் கறியாக்கி வைத்தீரோ?' என்றார். தலை இறைச்சி திருவமுதுக்கு ஆகாதென்று கழித்துவிட்டோம்' என்றார் வெண்காட்டு நங்கையார்.
 'அதுவும் கூட நாம் உண்பது' என்றார் பைரவர். அதுகேட்டுச் சிறுத்தொண்டரும் மனைவியாரும் திகைத்து நின்றனர்.

அப்பொழுது சந்தனத்தாதியார், 'அந்தத் தலையிறைச்சி, வந்த தொண்டர் அமுது செய்யும் பொழுது நினைக்கவரும் என்று முன்னரே கறியாக்கி வைத்துள்ளேன்' என்று சொல்லி எடுத்துக்கொடுத்தார். திருவெண்காட்டு நங்கையார் முகமலர்ந்து அதனை வாங்கிப் பரிகலத்திற் படைத்தார். அதன்பின் பைரவர், சிறுத்தொண்டரைப் பார்த்து 'இங்கு நமக்கு தனியே உண்ண ஒண்ணாது, இறைவனடியார் இப்பக்கத்தே உள்ளாரை அழைத்துவாரும்' என்றார். அதுகேட்ட சிறுத்தொண்டர் 'அடியார் அமுது செய்ய இடையூறு இதுவோ' என்று வருந்தினார். வீட்டின் புறத்தே சென்று பார்த்தார். அடியார் ஒருவரையும் காணாது முகத்தில் வாட்டம் பெருக முதல்வரை வணங்கி 'இகத்தும் பரத்தும் இனியாரைக் காணேன். நானும் திருநீறு இடுவாரைக் கண்டு இடுவேன்' என்றார். அதுகேட்ட பைரவர் 'உம்மைப்போல் நீறிட்டார் உளரோ? நீர் உடன் உண்பீர்', என்று கூறித் திருவெண்காட்டு நங்கையாரை நோக்கி, வேறொரு பரிகலம் இடச் செய்து 'வெம்மை இறைச்சிச்சோறு இதனில் மீட்டுப்படையும்' என்றார். அவரும் அவ்வாறே படைத்தார். உடனமைந்த சிறுத்தொண்டர், அடியாரை உண்பிக்கவேண்டி தாம் உண்ணப்புகுந்தார். அதுகண்ட பைரவர் அவரைத் தடுத்தருளி, 'நாம் ஆறுமாதம் கழித்து உண்போம். நாம் உண்ணுமளவும் பொறுத்திராது நாளும் சோறு உண்ணும் நீர் முன்பு உண்பது ஏன்? நம்முடன் இருந்துண்ண மகவினைப் பெற்றீராயின் அம்மைந்தனை அழையும் என்றார். அதனைக் கேட்ட சிறுத்தொண்டர் 'இப்போது அவன் உதவான்' என்றார். நாம் உண்பது அவன் வந்தாலேதான் அவனை நாடி அழையும்' பைரவர். அச்சொற்கேட்டுத் தரியாது சிறுத்தொண்டர் மனைவியாரோடும் புறத்தே போய் அழைத்தனர். அவர் மனைவியாரும் தலைவர் பணியில் தலைநிற்பவராய் 'செய்மணியே! சீராளா! வாராய். சிவனடியார் நாம் உய்யும் வகையால் உடனுண்ண அழைக்கின்றார்' என்று ஓலமிட்டழைத்தனர். அப்பொழுது பரமன் அருளால் பள்ளிக்கூடத்தினின்று ஓடுவருபவனைப் போன்று சீராளதேவர் வந்தார். வந்த புதல்வரைத் தாயார் தழுவியெடுத்தார். 'சிவனடியார் அமுது செய்யப் பெற்றோம்' என்னும் மகிழ்ச்சியால் கணவர் கையில் கொடுத்தார்.


வந்த மைந்தரை அழைத்துக் கொண்டு அடியாரை அமுது செய்விப்பதற்கு உள்ளே புகுந்த சிறுத்தொண்டர் பைரவக் கோலத்தொண்டரைக் காணாதவராய்ச் சிந்தை கலங்கித் திகைத்து வீழ்ந்தார்; மனஞ்சுழன்றார். வெந்த இறைச்சிக் கறியமுதினைக் காணாது வெருவுற்றார். 'செய்ய மேனிக் கருங்குஞ்சுகத்துப் பயிரவர் நாம் உய்ய அமுது செய்யாது ஒளித்தது எங்கே?" எனத்தேடி மயக்கங் கொண்டு வெளியே சென்று பார்த்தார். அப்பொழுது மறைந்த அம்முதல்வர் உமையம்மையாரோடும், முருகனாகிய குழந்தையுடனும் விடை மீது அமர்ந்து இனிய கறியும், திருவமுதும் அமைத்தார் காண எழுந்தருளித் திருவருள் புரிந்தார். அன்பின் வென்ற தொண்டராகிய சிறுத்தொண்டரும், அவர் மனைவியாரும், சீராளதேவரும் தம் முன்னே தோன்றிய பெருமானை என்பும், மனமும் கரைந்துருக நிலமிசை வீழ்ந்து துதித்துப் போற்றினார்கள்.
சிவபெருமான், உமாதேவியாரும், முருகவேளும், அங்குத் தம்மை வழிபட்டு நின்ற சிறுத்தொண்டர், மனைவியார், மகனார், தாதியார் நால்வரையும் தம்மை என்றும் பிரியாது இறைஞ்சியிருக்கும் வண்ணம் உடன் கொண்டு திருக்கயிலையை அடைந்தருளினார்.

நுண்பொருள்

  1. குடிக்கொரு புதல்வனை மகிழ்ச்சியான மனத்துடன் குரூரமாகக் கொன்று உறுப்பரிந்து கறியமுது செய்யும் வல்வினை செயற்கரியதும் காரணம் காண்டற்கரியதுமான சிவத்தொண்டேயாகும். அது ஈசனடியார்க்காயின் எச்செயலும் அரியதில்லை எனக் காணும் உறைத்த மெய்த் தொண்டர்க்கு மிக இயல்பாக கைவரும் கருமமுமாகும்.
  2. கல்வி, வீரம், செல்வம், அரச அதிகாரம், சிவபக்தி என்பவற்றில் சிறந்திருக்கும் பெரியோர் சிவனடியாரிடத்தில் சிறிய தொண்டராய் பணிந்து நடப்பார்கள்.
  3. சிவதொண்டியற்றுவார்க்கு நேரும் சோதனைகள் அவர்தம் இயல்புக்கு ஏற்ற வண்ணெமே அமையும், போர்க்களத்தில் கொலைத்தொழில் செய்யவல்ல தொண்டர்க்கு அவ்வண்ணமே ஒரு சோதனை நேர்ந்தது. சோதனை அளிக்க வரும் பெருமானும் அதற்கேற்ற கோலம் பசு இறைச்சி வேண்டுதற் ஏற்ற ஒரு கோலமே.
  4. அரசரானவர் தொண்டுறுதிபடைத்தோரை அத்தொண்டுறுதி துலங்கும் வண்ணம், இயன்ற வசதிகள் அளித்து அரச கருமத்தின்றும் ஓய்ந்திருக்கச் செய்தல் சிறந்தது.
  5. அருள் தருதற்குப் பெருமாள் கொள்ளும் கோலம் அன்பர் நிலைக்குப் பொருந்தியதாக அமையும். சிறுத்தொண்டர், வெண்காட்டு நங்கை, சீராளர் என்போர்க்கு அருள்புரிய கொண்டகோலம் சோமாஸ்கந்த மூர்த்தமாயிருந்தல் காண்க. சந்தனத்தாதியாருக்கும் திருவடிப்பேறு அருளியமையும் சிறப்பே.
  6. சோதனைகள் எல்லாம் வரப்பிரசாதமாக நிறைவுறும்
சிறுத்தொண்ட நாயனார் குருபூசை : சித்திரைப் பரணி
“செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன்” – திருத்தொண்டத் தொகை.

சித்திரை - ரோகிணி - மங்கையர்க்கரசியார் - ஏப்ரல் 19



மங்கையர்க்கரசியார் என்பவர் அறுபத்து நான்கு நாயன்மார்களில் ஒருவராவர். சோழ இளவரசியான இவர், நின்றசீர்நெடுமாறன் என்ற பாண்டிய மன்னனை மணந்தார். பாண்டிய நாடு முழுவதும் சமண சமயம் பரவியிருந்த போது, சைவ சமயத்தினை பின்பற்றிய இருவர்களில் மங்கையர்கரசியாரும் ஒருவர். இதனால் சைவர்கள் மங்கையர்களுக்கு அரசி என்ற பொருளில் மங்கையர்கரசி என்று பிற்பாடு வழங்கினார்கள்.

பாண்டியனுடன் மணம்

மங்கையற்கரசியார் சோழமன்னனின் தவக்கொழுந்தாய் அவதரித்தார். அவர் சைவ ஒழுக்கத்தில் சிறந்தவராய் வளர்ந்து திருமணப் பருவம் அடைந்தார். சோழமன்னன் அவரை நின்றசீர்நெடுமாறன் என்னும் பாண்டிய மன்னனுக்கு திருமணஞ் செய்து வைத்தார்.

சமண இருள்

பாண்டிய மன்னன் தாம் செய்த தீவினைப் பயனாய் சமணசமயத்தைச் சார்ந்து ஒழுகினான். சமண அடிகள்மாரை அவன் பெரிதும் மதித்தான். குடிகளெல்லாரும் சமணராயினர். அரசவையில் குலச்சிறையார் என்னும் ஓரமைச்சர் தவிர மற்றையயோரெல்லாம் சமண சமயத்தவராகவே இருந்தனர். இவ்வண்ணம் சமண இருள் சூழ்ந்து சைவம் குன்றியிருந்தமை குறித்து மங்கையர்க்கரசியார் மனம் நொந்தார். அவர் பாண்டி நாடெங்கும் சைவ வாய்மை விளங்க வேண்டுமென்ற கருத்தினராய் இருந்தார்.

ஞானசம்பந்தர் வருகை

இவ்வாறிருக்கும் பொழுது திருஞானசம்பந்தப்பிள்ளையார், பாண்டி நாட்டுக்கு அடுத்த திருமறைக்காட்டிற்கு வந்திருப்பதாகக் கேள்விப்பட்டார். இந்நற்செய்தியைக் கேள்விப்பட்டதும் தன் மனக்கருத்து நிறைவுள்ளது எனக் களிப்புற்றார். சம்பந்தப்பிளையார் தொலைவில் இருந்தாலும் அவர்தம் திருவடியைக் கும்பிட்டதோர் மகிழ்ச்சி கொண்டார். அமைச்சரான குலச்சிறையாரோடு ஆலோசித்து சம்பந்தப்பெருமானிடம் பரிசனத்தாரை அனுப்பிவைத்தார். பரிசனத்தார் சென்று பரசமயக்கோளரியாரை வணங்கி மங்கையற்கரசியாரின் மனக்கருத்தைக் கூறினார்கள். சம்பந்தப்பிள்ளையாரும் பாண்டிநாட்டுக்கு எழுந்தருளத் திருவுளம் பற்றினார். சம்பந்தப்பிள்ளையார் பல திருப்பதிகங்களையும் வணங்கி மதுரையம்பதியை நெருங்கிய வேளையில் மங்கையற்கரசியாருக்கு நன்நிமித்தங்கள் தோன்றின. அப்போது திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் முத்துச் சிவிகை மீதமர்ந்து சிவனடியார் சூழ மதுரை வந்தணைந்தனர் என்ற செய்தியைக் கண்டோர் வந்து கூறினர். அந்த மங்கலகரமான செய்தியைச் சொன்னோர்க்கு மங்கையற்கரசியார் பரிசில் அளித்து மகிழ்ந்தார். அவ்வேளையில் குலச்சிறையாரும் வந்து அடிபணிந்து நின்றார். அவரிடம் ‘நமக்கு வாழ்வளிக்க வந்தவள்ளலை எதிர்கொண்டு அழைத்துவாரும்’ எனப் பணித்தார். தாமும் ஆலவாய் அண்ணலை வழிபட்டு வருவதாக அரசனிடம் கூறிச் சென்று நல்வரவளிப்பதற்காகக் காத்து நின்றார்.
ஆலவாயமர்ந்தபிரானை வணங்கும் அன்புறு காதலுடன் வருகின்ற சம்பந்தப்பிள்ளையாருக்கு எதிர்செல்லாது மங்கையற்கரசியார் ஒரு புறம் ஒதுங்கி நின்றார். வழிபட்டுத் திருப்பதிகமும் பாடிப் பரவி கோயில் முன்றில் வந்தபோது தலைமிசைச் குவித்தகையராய் முன்சென்றார். பிள்ளையாரது அருகில் நின்ற குலச்சிறையார் முன்வருமிவரே பாண்டிமாதேவியாரெனக் காட்டியதும் பிள்ளையார் விரைவோடும் அரசியார் பக்கமாகச் சென்றார். தேவியார், சிவக்கன்றின் செங்கமலப் பொற்பாத்தை வீழ்ந்து வணங்கினார். வீழ்ந்து கும்பிட்டுக் கிடக்கும் மங்கையர்க்கரசியார்ப் பிள்ளையார் பெருகிய அருளோடு கைகளால் எடுத்தார். எழுந்து கையாரத்தொழுது நின்ற அரசியார் கண்ணீர் மல்க “யானும் என்பதியும் செய்த தவம் என்கொல்” (அதாவது நானும் என்கணவரும் செய்த தவம் எவ்வளவு பெரியது) எனவாய் குழறிக் கூறிநின்றார். பிள்ளையாரும் “பரசமயச் சூழலில் தொண்டராய் வாழும் உங்களைக் காண வந்தோம்” என அருள் மொழி கூறினார்.
பிள்ளையார் அருள் பெற்றுப் பாண்டி நாடு உய்ந்ததென்ற உறுதியோடு அரசியார் அரண்மனை புகுந்தார். அன்று பள்ளியறைக்கு வந்த மன்னன் யாதும் பேசாமல் சோகமாயிருந்தான். அரசியார் “மன்ன! உமக்கு நேர்ந்ததென்ன?. துயரத்துடன் இருக்கிறீரே என விசாரித்தார். அதற்கு அரசன் “சோழ நாட்டுச் சிவவேதியர் ஒருவர் நமது அடிகள்மாரை வாதினில் வெல்ல வந்திருக்கின்றார். அவரை அடிகள் மார் ‘கண்டு முட்டு’ (அதாவது கண்டதால் துடக்கு) யான் அதனை ‘கேட்டு முட்டு’ (அதாவது கேட்டதால் துடக்கு) எனக் கூறினான். ‘வாதினில் வென்றவர் பக்கம் சேர்தலே முறை. அதன் பொருட்டுக் கவலை ஏன்?. கவலை ஒழிக’ என ஆறியிருக்கச் செய்தார் அரசியார். அரசனுக்கு ஆறுதல் கூறினாரேனும் அன்றிரவு கவலையுடனேயே இருந்தார். வஞ்சனையால் வெல்ல அமணரால் சம்பந்தப்பிள்ளையாருக்கு என்ன ஆபத்து நேருமோ எனபதே அவர்தம் கவலை. அவ்வாறு ஆபத்தேதும் நேரின் உயிர் துறப்பதே செய்யத்தக்கது எனும் உறுதியும் பூண்டார்.
அரசியார் அஞ்சியவண்ணமே அன்று இரவு அமண்தீயர் ஆளுடைய பிள்ளையார் உறைந்த (தங்கியிருந்த) மடத்துக்குத் தீவைத்தனர். இச்செய்தி மானியாருக்கு எட்டியபொழுது பெரிதும் மனம் வருந்தினார். தாமும் குலச்சிறையாரும் பிள்ளையாரை இத்தீயர் வாழும் நாட்டுக்கு வரவழைத்ததே பெரிதும் பிழையாயிற்று என்றும் இதற்குக் கழுவாய் மாழ்வதே எனவும் துணிந்தார். அப்பொழுது அமண்பாதகர் வைத்த தீயால் திருமடத்திற்குத் தீதொன்றும் ஆகவில்லை என்றறிந்து ஆறுதலுற்றார். இந்நிலையிலே மன்னன் வெப்புநோய் பற்றி பற்றி வருத்தும் செய்தியைக் காவலாளர் வந்து கூறினர். அதுகேட்ட அரசியார் விரைந்து அரசனிடம் சென்றார். மருத்துவராலும் அமண் அடிகளின் மந்திரத்தாலும் வெப்பம் சிறிதும் தணியாது அரசன் வருந்துவது கண்டு அச்சமுற்றார். பிள்ளையார் பொருட்டு வைத்த தீயே இவ்வண்ணம் வெப்புநோயாக வருத்துகிறதென எண்ணியவராய் “திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகளை அழைத்தாலே இந்நோய் தீரும்” எனக் கூறினார். “ஞானசம்பந்தன்” எனும் நாமமந்திரம் காதிற்புக்க அளவில் அயர்வு நீங்கி உணர்வு பெற்ற பாண்டியன் ‘அவரை அழைப்பீராக’ எனப் பணித்தான்.
அரசியார் அமைச்சருடன் அணையுடைத்துப் பாயும் வெள்ளம் போன்றதோர் அன்பு பெருவெள்ளத்துடன் ஆளுடையபிள்ளையார் தங்கியிருக்கும் திருமடத்தை அடைந்தார். அங்கு ஞானத்திருவுருவாயும், வேதகாவலராகவும், மண்ணில் வளரும் மதிக்கொழுந்தாகவும், சிவபெருமானது சீர் பாடும் ஏழிசை அமுதமாயும் தோன்றிய சிவபுரப்பிள்ளையைக் கண்களிப்பக் கண்டார். இச்சிவம்பெருக்கும் பிள்ளைக்கு அமணர் செய்த ஆபத்தை நினைத்துச் சலிப்படைந்தவராய் அடிகளில் வீழ்ந்து அழுது அரற்றினார். பிள்ளையார் ‘தீங்குளவோ?’ என வினவினார். அரசியார் ‘சமணர் செய்த தீச்செயல் அரசனுக்குத் தீப்பிணியாய் பற்றியது. இத்தீப்பிணியைத் தீர்த்து எமதுயிரும் மன்னவனுயிரும் காத்தருள வேண்டும்’ எனப் பணித்தார். ஆளுடைய பிள்ளையார் ‘ஒன்றும் நீர் அஞ்ச வேண்டாம், அமணரை வாதில் வென்று அரசனைத் திருநீறு அணிவிப்பேன்’ என உறுதி மொழி கூறினார்.

சம்பந்தப்பிள்ளையார் முத்துச்சிவிகையிலேறி அரண்மனைக்கு எழுந்தருள மங்கையற்கரசியாரும் சிவிகையிலேறி அரண்மனை வந்தார். பாண்டியமன்னன் சம்பந்தப்பிள்ளையாருக்குத் தனது தலைப்புறமாக ஓர் பொன்னாசனம் காட்டினான். செம்பொற்பீடத்தே வீற்றிருக்கும் சம்பந்தரைப் கண்டு பொறாத சமணர்கள் கோலும் நூலும் கொண்டு குரைத்தனர். அநேகராய் பிள்ளையாரைச் சூழ்ந்து பதறிக் கதறும் கொடுமை கண்டு மங்கையற்கரசியார் அரசனிடம் “இப்பாலன் வாயொரு பாலகரை அமணர்கள் திரளாகச் சூழ்ந்து கதறுவது அழகன்று; உங்கள் தீப்பிணியைப் பிள்ளையார் தீர்த்த பிறகு சமணர் வல்லமையுடையவராயின் வாது செய்யலாம்” எனக் கூறினர். அரசன் அதுவே நன்றென்று அமணரை நோக்கி “நீங்கள் செய்யத்தக்க வாது என் சுரநோயைத் தீர்த்தலே. அதனைச் செய்யுங்கள்” எனக் கூறினான். சமணரது மருந்து மந்திரமெல்லாம் மேலும் சுரத்தை அதிகரிக்கவே செய்தன. சம்பந்தப்பிள்ளையார் திருநீற்றுப்பதிகம் பாடிப் பூசிய திருநீறு மன்னனைக் குணமாக்கியது. அமணர்கள் இவ்வாதத்தில் தோற்றதுடன் அனல்வாதம், புனல்வாதம் என்பவற்றிலும் தோற்றுக் கழுவேறினர். பாண்டிய மன்னனுக்குப் பரமசமய கோளரியார் திருநீறு அளித்தார். அதுகண்டு மதுரை மாநகரத்துள்ளோரெல்லாம் மங்கல நீறணந்து சைவராயினர். தம்மனக்கருத்து முற்றிய மங்கையற்கரசியார், சம்பந்தப் பெருமான், பாண்டியமன்னன் ஆதியாரோடு அங்கயற்கண்ணி தன்னோடுமமர்ந்த ஆலவாயண்ணலை வழிபட்டு மகிழ்ந்தனர்.
சம்பந்தப்பிள்ளையார் ஆலவாய்ப் பெருமானை வழிபட்டிருந்த நாளெலாம் மங்கையற்கரசியாரும் சென்று அவர்தம் திருவடிகளை வழிபடும் பாக்கியம் பெற்றார். சம்பந்தப் பிள்ளையார் தென்தமிழ் நாட்டுத் திருத்தலங்கள் பலவற்றையும் வழிபடும் ஆராக்காதலால் புறப்பட்ட பொழுது பாண்டிமாதேவியாரும், மன்னன், மந்திரியார் ஆகியோரும் அவருடன் சேர்ந்து சென்றனர். திருப்பரங்குன்றம் ஆகிய தலங்களை வழிபட்டுக் குலச்சிறையார் அவதரித்த தலமாகிய திருமணமேற்குடியைச் சென்றடைந்தனர். அத்தலத்தை வழிபட்ட பின் சம்பந்தப்பெருமான் சோழநாட்டுத்தலங்களை வழிபடப் புறப்பட்டார். மங்கையற்கரசியாரும் அவருடன் சேர்ந்தோரும் பிள்ளையாருடன் செல்ல ஒருப்பட்டனர். பிள்ளையார் அவர் தம் பேரன்பிற்கு உவப்புற்றனரெனினும் அவர்களது கடமையினை வற்புறுத்தும் முறையில் “நீங்கள் பாண்டிநாட்டிலிருந்து சிவநெறியைப் போற்றுவீராக” எனப் பணித்தருளினார். அவர்களும் ஆளுடையபிள்ளையின் ஆணையை மறுத்தற்கஞ்சி தொழுது நின்றனர். பிள்ளையார் விடையீந்து சோழநாடு சென்றதும் மதுரை வந்து சிவநெறியைப் போற்றி இருந்தனர்.
திருநாவுக்கரசு சுவாமிகள் திருவாலவாயிறைவரைத் தரிசித்திருந்த காலத்தில் தாமும் தம் பதியாரோடு சென்று அவர் திருப்பாதத்தைப் பணியும் பாக்கியம் பெற்றார். மன்னனுக்கு நெடுங்காலம் சைவவழித்துணையாயிருந்த மங்கையற்கரசியார் மன்னவனோடு ஈசன் இணையடி அடைந்தார்.

நுண்பொருள்


  • எந்நிலையிலும் சைவ ஒழுக்கத்தைப் பேணுதல் மங்கையர் மரபு.
  • திருநீற்று நெறிவளர்க்கும் மங்கையர் மனக்கருத்து, திருவருளால் நிறைவுறும்.
  • மங்கையார் சைவ வாய்மைபிழைக்கும் கணவர் பழிதீர்ப்பார்.
  • நாயன்மாரை வழிபடுவது நாட்டுக்கு நலன் தருவதாகும்.
  • அரச திருவுடைய மங்கையரால் நாட்டில் சைவம் ஓங்கும்.
  • தொண்டுறுதி கொண்ட மங்கையர் போற்றப்படுவர்.

    “வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்” – திருத்தொண்டத் திருத்தொகை.



  • சித்திரை - திருவாதிரை - விறன்மிண்ட நாயனார் - ஏப்ரல் 21





    “விரிபொழில்சூழ் குன்றையர் விறன்மிண்டர்க் கடியேன்” – திருத்தொண்டத் தொகை
    சேரநாட்டுச் செங்குன்றூரில் வேளான்குடி விளங்க அவதரித்தவர் விறன்மிண்டர். அவர் சிவனடியே பற்றாகப் பற்றி ஏனைய பற்றெல்லாவற்றையும் முற்றாகத் துறந்தவர். சிவனடியாரிடத்தே பெரும் பக்தி பூண்டவர்.
    திருத்தலம் தோறும் சென்று வழிபாடாற்றும் வழக்கமுடைய இப்பக்தர் முதலில் திருக்கூட்டத்தை வணங்கிப் பின்னரே கோயிலுட் சென்று வழிபடும் நியமத்தினர். இக்கொள்கையை விடாதுபின்பற்றும் விறன்மிண்டர் சேரநாட்டுத் தலங்களை வழிபட்டு சோழநாட்டுத் திருத்தலங்களையும் வணங்கும் காதலால் திவாரூர்த்தலத்தை அடைந்து அங்கு சில நாள் தங்கினார். அந்நாளில் திருவாரூர்த் தேவாசிரிய மண்டபத்தில் வீற்றிருந்த திருக்கூட்டத்தைக் கண்டு ஒருவாறு ஒதுங்கிச் சென்ற சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் கண்ணுற்றதும், ‘இவன் திருக்கூட்டத்தாரை வழிபடாது கோயிலுட் செல்கின்றாதானதால் திருக்கூட்டத்திற்கு இவனும் புறகு; இவனையாண்ட சிவனும் புறகு என்று கூறினார். விறன்மிண்டரது அடியார் பக்தித் திறத்தை அறிந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருவாரூர்க் கோயிலுட் புகுந்து தியாகராசப் பெருமானைக் கும்பிட்டு நிற்கும்போது “அடியேன் இவ்வடியார்க்கெல்லாம் அடியானாகும் நாள் என்று” வேண்டுதல் செய்தார். அப்பொழுது பெருமான் “நாம் அடியாருடன் உளோம்; அடியாரைப்பாடு என்றருளி “தில்லைவாழந்தணர்” என அடியெடுத்துக் கொடுத்தார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேசமெல்லாம் உய்வதற்கு காரணமானதும், சைவநெறியின் சீலம் விளங்கச் செய்வதுமான திருத்தொண்டத் தொகைத் திருப்பதிகத்தை “தில்லைவாழந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்பதை முதலாகக் கொண்டு பாடியருளினார்.

    இவ்வண்ணம் சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத்தொகை பாடுவதற்குக் காரணமாய் அமைந்த விறண்மிண்டநாயனார், பெருமாள் அருளால் திருவடி நிழலை அடைந்து கணநாதராய் விளங்கும் பேற்றினைப் பெற்றார்.

    சித்திரை - கிருத்திகை  இசைஞானியார் - ஏப்ரல் 29

    இசைஞானியார் என்பவர் சைவ சமயத்தில் நாயன்மார்கள் எனப்போற்றப்பெறும் அறுபத்து மூவரில் உள்ள மூன்று பெண்மணிகளுள் ஒருவராவார். இவர் சைவக்குரவரான சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்னை ஆவார். சுந்தரமூர்த்தி நாயனாரைப் பெற்றமைக்காகவும், சைவநெறியில் நின்றமைக்காகவும் அவரது பெற்றோர்கள் இருவரையுமே நாயன்மார்கள் பட்டியலில் சேக்கிழார் இணைத்துள்ளார்.


    தொன்மம்

    திருவாரூரில் வாழ்ந்த ஞான சிவாச்சாரியாருக்கு மகளாகப் பிறந்தார். இவர் கௌதம கோத்திரத்தினை சேர்ந்தவர். திருவாரூரில் உள்ள சிவபெருமானின் மீது பக்தி கொண்டவராக இருந்தார். இசைஞானியார் திருமணப் பருவத்தினை அடைந்ததும், ஞான சிவாச்சாரியார் சிவபக்தரான சடையநாயனார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார்.இசைஞானியார் - சடையநாயனார் தம்பதியினருக்கு மகனாக சுந்தரமூர்த்தி நாயனார் பிறந்தார்.


    சித்திரை  - சுவாதி - திருக்குறிப்புத்தொண்டர் - ஏப்ரல் 30

    கொய்த பன்மலர் கம்பைமா நதியில்
       குலவு மஞ்சனம் நிலவுமெய்ப் பூச்சு
    நெய்த ருங்கொழுந் தூபதீ பங்கள்
       நிறைந்த சிந்தையில் நீடிய அன்பின்
    மெய்த ரும்படி வேண்டின வெல்லாம்
       வேண்டும் போதினில் உதவமெய்ப் பூசை
    எய்த ஆகம விதியெலாம் செய்தாள்
        உயிர்கள் யாவையும் ஈன்றவெம் பிராட்டி.
                               - -திருக்குறிப்புத்தொண்டர் நாயனார்  (60)



    உயிர்கள் யாவையும் ஈன்றவரான உமையம் மையார், தாம் கொய்த பல மலர்களும், கம்பையாற்றில் எடுத்த நீராட்டு நீரும், ஒளிநிலவும் திருமேனிப் பூச்சாகும் சந்தனமும், நெய்விட் டேற்றிய செழுமைமிக்க சுடருடைய விளக்குகளும், நறுமணப் புகைகளும் ஆகிய இவையாவும் நிறைவுடைய சிந்தையில்,நீளப் பெருகிய அன்பினால், அங்கு உண்மையான வழிபாட்டிற்கு வேண்டிய பொருள் எல்லாவற்றையும் எம்பெருமாட்டியார் வேண்டியபோது அவரிடம் எடுத்துத் தோழியர் கொடுத்திட, அது மெய்ம்மையான வழி பாடாக விளங்கிட, ஆகமத்தில் சொல்லியவாறு எம்பிராற்குப் பூசனை செய்துவந்தார்.

    தொண்டைமண்டலத்திலே, காஞ்சீபுரத்திலே, ஏகாலியர் குலத்திலே, சிவனடியார்களுடைய திருக்குறிப்பையறிந்து அவர்களுக்குத் தொண்டு செய்கின்றமையால் திருக்குறிப்பையறிந்து அவர்களுக்கு தொண்டு செய்கின்றமையால் திருக்குறிப்புத்தொண்டர் எனப்பெயர் பெற்ற ஒரு பெரியவர் இருந்தார். அவர் மிகுந்த விருப்பத்தோடு சிவபத்தர்களுக்கு வஸ்திரம் ஒலித்துக் கொடுத்து வருங்காலத்திலே, ஏகாம்பர நாதசுவாமி குளிர்காலத்தில் ஒரு சிவபத்தர் வேடங்கொண்டு மெலிந்த சரீரத்தையுடைய ஒரு வறியவர் போலாகி, அழுக்கடைந்த கந்தையுடன் அவரிடத்திற் சென்றார். திருக்குறிப்புத்தொண்டநாயனார் அவரைக் கண்டு எதிர் கொண்டு வணங்கி, பல உபசார வார்த்தைகளைச் சொல்லி அவருடைய குறிப்பையறிந்து, "உந்தக் கந்தையைத் தந்தருளும்; ஒலித்துத் தருகின்றேன்" என்றார் சிவபத்தர் வேடங்கொண்ட கடவுள். "இந்தக் கந்தை அழுக்கு அதிகமாக ஏறப்பெற்றுத் தகுதியில்லாத தாயிருந்தாலும், குளிர் மிகுதியினால் வருத்த முறுகின்ற படியால் கைவிடுதல் கூடாது. அஸ்தமயனத்திற்கு முன் தருவீராகில், கொண்போய்ச் சீக்கிரம் ஒலித்துக்கொண்டு வாரும்" என்றார். திருக்குறிப்புத்தொண்டநாயனார் 'அடியேன் தாழ்க்காமல் ஒலித்து அஸ்தமயனத்திற்கு முன் கொண்டுவந்து தருகின்றேன்; தந்தருளும்" என்று சொல்ல; சுவாமி "விரைவிலே ஒலித்து உலர்த்தித் தராதொழிவீராயில், இந்தத் தேகத்துக்குத் துன்பஞ்செய்தீர்" என்று சொல்லி, அக்கந்தையை அவர் கையிற் கொடுத்தார்.

    திருக்குறிப்புத்தெகண்டநாயனார் அதை வாங்கிக்கொண்டு ஒரு குளத்திற்சென்று, முன் சிறிதழுக்குப் போக்கி வெள்ளாவியில் வைத்து, பின் ஒலிக்கப்புகுந்தார். அப்பொழுது பரமசிவனுடைதி திருவருளினாலே நண்பக லொழிந்து பின்பகல்போலத் தோன்றும் படி மேகங்கள் இருண்டு ஆகாயவெளியெல்லாம் மறைத்து மழைபெய்தன. அது கண்டு, திருக்குறிப்புத்தொண்டர் சிவபத்தருக்குத் தாம் வாக்குச் செய்ததை நினைந்து, "இனி நான் யாதுசெய்வேன்" என்று கவலையுற்று. விரைவிலே மழைவிடவுங் கூடுமென்று அங்கே தானே நின்றார். அது விடவில்லை. பின் இராக்காலம் வர, திருக்குறிப்புத்தொண்டர் "குளிரினாலே திருமேனி நடுங்குகின்ற சிவபத்தருக்கு நான்செய்யவிரும்பிய பணிவிடை, ஐயையோ! தவறிப்போயிற்றே" என்று கீழே விழுந்தார். மழைவிடாது; சிவபத்தர் சுட்டிய காலமோ நீங்கிற்று. முன்னேயே ஒலித்தது வீட்டிலே காற்றினல் உலரும்படி கட்டிவிட்டேனுமில்லை. சிவபத்தரது திருமேனி குளிரினால் வருந்தும்படி தீங்குசெய்த சிறியேனுக்கு இனியதுவே செயல்" என்று எழுந்தார். "வஸ்திரங்களைப் புடைக்கின்ற கற்பாறையிலே எனது தலையைச் சிந்தும்படி சர்வவியாபகராகிய பரமசிவனுடைய திருக்கரம் அந்தக் கற்பாறையின் பக்கத்திலே தோன்றி அவரைப் பிடித்துக் கொண்டது ஆகாயத்தினின்று சொரிந்த நீர்மழை நீங்கிப் பூமழை பொழிந்தது. பரமசிவன் உமாதேவியாரோடும் இடபாரூடராய்க் காட்சி கொடுத்தருளினார். திருக்குறிப்புத்தொண்டநாயனார் மிகுந்த அன்பினோடு விழுந்து நமஸ்கரித்து எழுந்து, அஞ்சலி செய்துகொண்டு நின்றார். பரமசிவன் அவரை நோக்கி, "உனது பத்திவலிமையை மூவுலத்தர்களுக்குந் தெரிவித்தோம். இனி நீ நம்முடைய உலகத்தையடைந்து பேரின்பம் பெற்று வாழ்ந்திரு" என்று திருவருள் புரிந்து சென்றருளினார்.

    திருச்சிற்றம்பலம்

    பங்குனி - சதயம் - தண்டியடிகள் - ஏப்ரல் 12
    சித்திரை - பரணி - சிறுத்தொண்டர் நாயனார்  - ஏப்ரல் 17
    சித்திரை - ரோகிணி - மங்கையர்க்கரசியார் - ஏப்ரல் 19
    சித்திரை - திருவாதிரை - விறன்மிண்ட நாயனார் - ஏப்ரல் 21
    சித்திரை - கிருத்திகை  இசைஞானியார் - ஏப்ரல் 29
    சித்திரை  - சுவாதி - திருக்குறிப்புத்தொண்டர் - ஏப்ரல் 30

    தேதியைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அருகில் உள்ள சிவாலயம் சென்று அடியார் பெருமக்கள் அருள் பெறுங்கள்.

    - மீண்டும் அடுத்த பதிவில் இணைவோம்.


    No comments:

    Post a Comment