Subscribe

BREAKING NEWS

18 April 2018

அளவிலா ஆனந்தம் தரும் அட்சய திரிதியை

நாம் தற்போது பல பண்டிகைகளை கொண்டாடி வருகின்றோம். ஆனால் அட்சய திரிதியை  என்றொரு நாள் பற்றி கடந்த ஐந்தாறு வருடங்களுக்கு மேலாக ஊடங்களால்  மிகையாக பேசப்பட்டு வருகின்றது. தங்கம் வாங்க இந்த நாளை உபயோகப்படுத்துங்கள் என்பது போன்ற செய்திகள் ஏராளமாக நம்மை சுற்றி வருகின்றன. அன்றைய தினம் எப்படியாவது கடனை வாங்கியாவது தங்கம் வாங்க வேண்டும் என்று நம்முள் ஆழ பதித்து விட்டார்கள். கடனை வாங்க உகந்த நாள் இதுவல்ல. அதனையும் தாண்டி புண்ணியம் சேர்க்க வேண்டிய நாள் இது. உண்மையில் இந்த நாளின் சிறப்பு என்ன?  இந்த நாளை நாம் எப்படி கொண்டாட வேண்டும்? என்பது போன்ற செய்திகளை ஜோதிடம், நம் முன்னோர்களின் வழி போன்ற பல நிலைகளில் இங்கே தர உள்ளோம்.




 அட்சய திருதியை என அறியப்படுவது இந்துக்களின்  புனித நாள் ஆகும். இது தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும்.முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாள் அட்சய திருதியை ஆகும்.

இந்து மதத்தில் குறிப்பிடப்படும் காக்கும் கடவுளான திருமாலால் ஆளப்படுவதாகும். மேலும் இந்து புராணங்களில் குறிப்பிடப்படும் முனிவரான பரசுராமரின் பிறந்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது, அவர் திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறார். இந்து இதிகாசங்களின்படி, அட்சய திருதியை நாளில் திரேதா யுகம் தொடங்கியது, மேலும் பகீரதன் தவம் செய்து இந்தியாவின் மிகப் புனிதமான புண்ணிய நதியான கங்கை நதி சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வரவழைத்தது இந்நாளில்தான் எனக் கூறப்படுகிறது.

"அட்சய" எனும் சொல் சமசுகிருதத்தில் எப்போதும் குறையாதது எனும் பொருளில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த நாள் நல்ல பலன்களையும் வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக மங்களகரமான நீண்டகால சொத்துக்களான தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் இதர விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு-மனைகள் போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது. அட்சய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் கொடுக்கும் எனக் கூறுகின்றனர். ஆகையால் ஒரு வணிகத்தினைத் துவங்குவது, கட்டடம் கட்ட பூமி பூசையிடுவது போன்ற புதிய முயற்சிகளை அட்சய திருதியை நாளில் செய்ய பலர் விரும்புகின்றனர்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி, இந்த நாளின் சிறப்பு பின்வருமாறு அறியப்பட்டு வருகின்றது.

இந்து மதத்தின் நல்ல நேரம் (முகூர்த்தம்) பார்க்கும் சோதிடத்தின் படி மூன்று பௌர்ணமி நாட்கள் (திதிகள் ) மிக மங்களகரமானவையாகக் கருதப்படுகின்றன. இவை மூன்றரை திதிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

அவை: சித்திரை மாத வளர்பிறையின் முதல் திதி புது வருட துவக்கமாகவும், ஆவணி மாதத்தின் வளர்பிறையின் பத்தாம் திதி விஜய தசமியாகவும், வைகாசி மாதத்தின் வளர்பிறையின் மூன்றாம் திதி ’’அட்சய திருதியை யாகவும்’’ (பரசுராமர் ஜெயந்தி) கொண்டாடப்படுகிறது. கார்த்திகை மாதத்தின் வளர்பிறையின் முதல் திதி அரை திதியாகக் கணக்கில் கொண்டு இவை "மூன்றரை (3 1/2) முழுத்தங்கள்" என்று அழைக்கப்படுகின்றன. முதல் மூன்று திதிகள் முழுமையான திதிகளாகவும் கடைசி திதி அரை திதியாகவும் கணக்கிடப்படுகின்றன. இவை மொத்தம் சேர்ந்து மூன்றரை முழுத்தத்தை வழங்குகின்றன. சோதிட சாத்திரத்தின்படி இந்நாளில் சூரியனும் சந்திரனும் சம அளவு உயரொளியுடன் விளங்கும் என நம்பப்படுகிறது.அட்சய திருதியை நவன்ன பர்வம் எனவும் அழைக்கப்படுகிறது. அட்சய திருதியை ரோஹிணி நட்சத்திரத்துடன் வரும் நாள் மிக மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.




 அட்சஷய திருதியை நாளன்றே வேதவியாசர் மகாபாரத இதிகாசத்தை விநாயகரிடம் எழுதச் சொல்லி கட்டளையிட்டார்.

    திருமாலின் அவதாரமான பரசுராமரின் பிறந்த நாளாகவும் கடைபிடிக்கப்படுகிறது.இன்றும் கோவாவும் கொங்கண் பகுதியும் பரசுராம சேத்திரங்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன.

    வைசாக மாதத்தின் வளர்பிறையின் மூன்றாம் நாளான அட்சய திருதியை வருடத்தின் மிகப் புனிதமான நாட்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

    பொதுவாக இந்த நாளில் திருமாலை நெல் அரிசியுடன் வணங்கியும் உண்ணா நோன்பிருந்தும் வழிபடுவர். இந்நாளில் கங்கை நதியில் நீராடுவது மிக மங்களகரமானது எனக் கருதப்படுகிறது.

    காசியில் அன்னபூரணித் தாயாரிடமிருந்து, சிவபெருமான் தமது பிட்சைப் பாத்திரம் நிரம்பும் அளவு உணவைப் பெற்றதும் அட்சய திருதியை அன்றுதான்.

    பாஞ்சாலியின் மானம் காக்க, கண்ணன் ’அட்சய’ என்று கூறி பாஞ்சாலியின் ஆடையை வளரச் செய்ததும் அட்சய திருதியை நாளன்றுதான்

    வேதத்தில் அட்சய திருதியை நாளில் அறிவு பெறுதல் அல்லது கொடையளித்தல் நல்ல பலனளிக்கும் எனக் கூறுகின்றன. இது புதிய வணிகத்தினையோ அல்லது முயற்சியையோ துவங்க வெகு நன்னாளாகக் கருதப்படுகிறது. பலர் இந்த நாளில் தங்கம் அல்லது சொத்து வாங்குகின்றனர்.

    மக்கள் இந்த நாளில் உண்ணாநோன்பும் பூசைகளும் கடைபிடிக்கின்றனர். விசிறி, அரிசி, உப்பு, நெய். சருக்கரை, காய்கறிகள், புளி, பழம், துணிகள் ஆகியவற்றை கொடையாக அளிக்கின்றனர். இந்த நாளில் திருமாலை வணங்குகின்றனர். தீப வழிபாடு செய்யும்போது சிலையின் மீது அல்லது அருகில் துளசி தீர்த்தம் தெளிக்கப்படுகின்றது.

அட்சய திருதியை திருமணங்களுக்கு ஏற்ற காலமாகவும் கருதப்படுவதால் அந்நாளில் பெரும் எண்ணிகையிலான திருமணங்களும் நடத்தப்படுகின்றன.

    செல்வத்திற்கு அதிபதியான குபேரரே செல்வமிக்க கடவுள் என நம்பப்படுகிறார். இந்த நாளில் குபேரர் கூட விஷ்ணுவின் மனைவியும் செல்வத்திற்கான தெய்வமான லட்சுமியை வணங்குவார் என லட்சுமி தந்தரம் எனும் நூல் கூறுகிறது. இந்த நாளில், குபேர லட்சுமி பூசை நடத்தப்படுகிறது. அதில் லட்சுமி உருவப்படத்துடன் குபேரரின் அடையாளமான சுதர்சன குபேர எந்திரமும் ஒன்றாக வைக்கப்பட்டு வணங்கப்படுகிறது.




இந்த தினத்திற்கு பல நிகழ்வுகளின் சிறப்பை கூறினாலும் முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுவது மஹாபாரதத்தில் வரும் யுதிஷ்டிரர் சூரியனிடம் அக்ஷய பாத்திரம் வாங்கும் நிகழ்வே ஆகும். சூதினால் அனைத்தையும் இழந்து பன்னிரண்டு வருட வனவாசத்திற்கு பாண்டவர்கள் தயாராகினர். பாண்டவர்களுடன் அவர்களின் மனைவியான திரௌபதி, பாண்டவர்களின் புரோகிதரான தெளமியர், அந்தணர்கள், ரிஷிகள் என பலர் அவர்களுடன் காட்டில் பயணம் செய்யத் துவங்கினர். அரசராய் இருந்த காலத்தில் அனைவருக்கும் உணவும், செல்வமும் தந்து மகிழ்ந்த தன்னால் இன்று பின்தொடர்வோரின் உணவுக்கு வழி செய்யக்கூட இயலவில்லையே எனும் எண்ணம் யுதிஷ்டிரரின் மனதை வாட்டி வதைத்தது.

தெளமியரிடம் இதைச் சொல்ல அவரும் ஆதவனின் 108 நாமகரணங்களை கூறி ஆதவனை வழிபடுமாறு யுதிஷ்டிரரை அறிவுறுத்தினார். யுதிஷ்டிரரும் கங்கையில் இறங்கி தன்னை சுத்தம் செய்து கொண்டு ஆதவனை நோக்கி மந்திரம் சொல்லி வேண்டி அக்ஷய பாத்திரத்தை அடைந்தார். தாமிரத்தால் ஆன அந்த பாத்திரமானது பன்னிரண்டு வருடங்களுக்கு அன்றைய தினம் கழுவி வைக்கும் வரை அள்ள அள்ள குறையாத உணவை வழங்கும்.

ஆக, அக்ஷய தினத்தில் சூரியனை வணங்கி ஏழைகளுக்கும், இயலாதவர்களுக்கும் உணவளித்து, கோவிலுக்கு நன்குடை வழங்குங்கள். அன்றைய தினம் தாங்கள் செய்யும் புண்ணியம் எனும் பொன்னானது பல மடங்கு பெருகும் என்பது ஐதீகம்.

இந்த நன்னாளில் தானம் செய்வது சிறந்தது. நம்மால் எப்படி என்ன வழியில் தானம் செய்ய இயலுமோ அந்த வழியில் செய்யுங்கள். ஒரு பிடி சோறு காகத்திற்கு வைக்கலாம். இதுவும் முடியாதவர்கள், நாட்டு சக்கரை வாங்கி, மர புற்றுகளில் உள்ள எறும்புகளுக்கு கொடுக்கலாம். பசுவிற்கு உணவு வழங்கலாம். நாளை அகத்திக்கீரை நல்ல விலைக்கு கிடைக்கும்.பசுக்கள் தான் பாவம்.ஒரே நாளில் எவ்வளவு அகத்தி கீரை தான் சாப்பிடும். இந்த நாளில் நாம் காட்டும் அக்கறையை மற்ற நாளிலும் தொடங்குவதே அட்சய திரிதியை நோக்கம் ஆகும். ஆனால் நாம் நாளை ஒரு நாள் மட்டும் வெறும் கடனே என்று செய்கின்றோம்..

நாளை ஒரு நாளாவது பண அட்டை கொண்டு கடைகளில் இழுக்காது, பணத்தை கொடுத்து வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குங்கள். மஞ்சள்,உப்பு,பலசரக்கு பொருள்கள், பூஜை சாமான்கள் என வாங்குங்கள். மங்கல பொருட்களை மனமொன்றி வாங்குங்கள். நடைபாதை கடைகளில் வாங்குவதானால், பேரம் பேசாமல் வாங்குங்கள்.

வருடத்தில் மூன்று நாட்களுக்கு நல்ல நேரம், தோஷம் போன்ற எவையும் பார்க்க தேவையில்லை. அது போன்ற பொன்னான நாட்கள் அவை. உகாதி, அக்ஷய திருதியை மற்றும் விஜய தசமி தான் அது.    அட்சய திரிதியை (18/4/2018) அன்று காலை ஆறு மணி முதல் மதியம் பன்னிரண்டு வரை மிக சிறப்பான முகூர்த்த நேரம்- திருதியை வழிபாடு செய்ய, தானங்கள் செய்ய, உங்களுக்கு தெரிந்த கலையை, கல்வியை  மற்றவருக்கு போதிக்க, மஹாலக்ஷ்மி அல்லது குபேர பூஜை அல்லது லட்சுமி நாராயண பூஜை மேற்கண்ட நேரத்தில் செய்ய  மிக சிறப்பு. 

மேலும் இந்த நாளில் புனித நீரில் நீராடுவது மிக சிறப்பான ஒன்று. முடியாதவர்கள், கையளவு கல் உப்பை நீரில் கரைத்து, கிழக்கு முகம் பார்த்து கங்கையை மனதில் தியானித்து குளிக்கலாம். அசைவம் முட்டை உட்பட, தோல் பொருட்கள் தவிர்ப்பதும் மிக அவசியம். இந்நாளில், எந்த அளவு தானம் செய்கிறீர்களோ, அந்த அளவு புண்ணிய பலனும் ஆத்மார்த்த திருப்தியும் வந்து சேரும்.  அன்னம், பணம் போன்றவை தானம் செய்ய செல்வ செழிப்பு மிக்க வாழ்வமையும். மேலும், திருமண தடை அல்லது திருமண வாழ்வில் பிரச்சனைகளை சந்தித்து வருவோர் இந்நாளில் சுமங்கலிப்பெண்களுக்கும், பன்னிரண்டு வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கும் தங்களால் முடிந்த புதிய ஆடை, மஞ்சள், வளையல்,தாம்பூலம்,மஞ்சள் லட்டு, தேங்காய் போன்றவையில் எவை முடிகிறதோ, எவ்வளவு நபருக்கு தங்கள் வசதிக்குட்பட்டு செய்ய முடியுமோ அதை தானம் செய்யலாம். முதியவர்களுக்கு தங்களால் ஆன உதவிகளை செய்வது மிக பெரும் நல்வாழ்வு அமைய வைக்கும். விரும்பிய தெய்வ உருவ படங்கள்,பொருட்கள் வைத்து வழிபாட்டினை செய்வதும் சிறப்பு தரும். 




பஞ்சபூத வழிபாட்டை வீட்டில்/கோயிலில் மண் அகலில் தீபமேற்றி வழிபாடு செய்யுங்கள்.
தற்போது எங்கு பார்த்தாலும் தண்ணீர் பஞ்சம். இன்று நாம் எதை வைத்து பூஜை செய்கிறோமோ அது பல மடங்கு பெருகும் என்பது ஐதீகம். தங்கம் வெள்ளி என்பது அவரவர்களுடைய தனிப்பட்ட விருப்பம். ஆனால் இன்றைய உடனடி தேவை என்பது தண்ணீர். போன முறை நாம் இதேபோல் செய்ததன் விளைவு மிகச்சிறப்பாக மழை பெய்து இன்று வரை தண்ணீரை அனுபவித்து வருகிறோம். எனவே அட்சய திரிதியை அன்று ஒரு குடம் அல்லது ஒரு செம்பு நிறைய தண்ணீரை இறைவன் முன்பு வைத்து நமக்கு குறைவில்லாத தண்ணீர் செல்வத்தை வழங்குமாறு பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த நன்னாளில் சூரிய உதயம் காணுங்கள். சூரிய வழிபாடு மேற்கொள்ளுங்கள்.நம்முடைய பாரம்பரியத்தில் சூரிய வழிபாடு மிக மிக இன்றியமையாதது. ஆனால் இன்று இந்த நாளை ஞாயிற்றுக் கிழமை என்று கூறி விடுமுறை தினமாக மாற்றி விட்டோம். சூரியனை தொழுது நாம் உழைக்க வேண்டிய தினமே அது. சரி..விடுங்கள். இந்த அட்சய திரிதியை  தினத்தன்று சூரியனுக்கு நன்றி சொல்லுங்கள்.

அனைவருக்கும் அட்சய திரிதியை நல்வாழ்த்துக்களை நம் தளம் சார்பாக இங்கே தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.

- அடுத்த பதிவில் மீண்டும் சந்திப்போம்.

No comments:

Post a Comment