Subscribe

BREAKING NEWS

17 April 2018

"திரு"விளையாடல்

இந்த பதிவும் அவனின் திருவிளையாடலே.

தற்போது திரைப்படம் மட்டுமே பொழுதுபோக்காய் விளங்கி வரும் அவல சூழ்நிலையில் நாம் வாழ்ந்து வருகின்றோம். ஆனால் பழமை என்றுமே பொன்னாய் தான் மின்னிக் கொண்டிருக்கின்றது. நம் கண்களுக்குத்  தான் மின்னிக் கொண்டிருக்கும் வைரங்கள் தெரிவதில்லை. என்னப்பா? எப்ப பார்த்தாலும் பழம்பெருமை என்று புளங்காகிதம் அடைய வேண்டாம். உண்ணும் உணவு, உடுக்கும் உடை, வசிக்கும் இடம் என என்ன தான் நாம் முன்னேறி இருந்தாலும், கேப்பைக் கூழுக்கும், சேலை தாவணிகளுக்கும், குடிசை வீடுகளிலும் வாழும் மனிதம் இன்று காண்பது அரிது. 1960 களில் இருந்த திரைப்படங்களிலும் வணிகத்தோடு பக்தி, வாழும் நெறி ,சேவை,தொண்டு போன்ற கருத்துக்களை சொன்ன திரைப்படங்களும் இருந்துள்ளது. அது போன்ற ஒரு பக்திக் காவியமான
திருவிளையாடல் என்ற திரைக்காவியத்தை நம் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் பக்தியோடு இங்கே தொடர விரும்புகின்றோம்.



திருவிளையாடல் புராணம் என்ற புராணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக திருவிளையாடல் புராணத்தில் உள்ள 4 தொகுதிகள் மட்டுமே இந்த காவியத்தில் உள்ளது. இதனைக் கண்டதும் நமக்கு திருவிளையாடல் புராணம் படிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டுள்ளது. ஒரு திரைப்படம் மூலம் நமக்கு இங்கே பல செய்திகள் கிடைக்க உள்ளன.

திருவிளையாடற் புராணம் என்பது சிவபெருமானது திருவிளையாடல்களைக் கூறும் பரஞ்சோதி முனிவர் எழுதிய நூல் ஆகும். சிவபெருமான் தன்னுடைய அடியார்கள் மீதும், சிற்றுயிர்கள் மீதும் கொண்ட அன்பினால் தாமே பூலோகத்திற்கு வந்து செய்த திருவிளையாடல்களின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது.

மதுரையில் சிவபெருமான் செய்த திருவிளையாடல்கள் பற்றி ஹாலாஸ்ய மகாத்மியம் என்னும் வடமொழி நூலில் சொல்லப்பட்டுள்ளது. வியாசர் இயற்றிய ஸ்கந்த புராணத்தில் இந்த லீலைகள் சொல்லப்பட்டுள்ளன. நந்தி தேவர் சனத்குமார முனிவருக்கு இந்த லீலைகள் பற்றி சொன்னார் என்றும், அதை வியாசருக்கு சனத்குமாரர் சொன்னார் என்றும், வியாசர் அதை ஸ்கந்தபுராணத்தில் எழுதினார் என்றும் வழங்கப்படுகிறது.

ஹாலாஸ்ய மகாத்மியத்தை பரஞ்சோதி முனிவர் தமிழில் மொழி பெயர்த்தார். அதை அப்படியே மொழி பெயர்க்காமல், தமிழுக்கே உரித்தான செய்யுள் நடையில் 3363 செய்யுள்களாக வடித்தார். இதில் முதல் 343 செய்யுள்கள் காப்பு, மதுரை நகர சிறப்பு உள்ளிட்டவற்றை உள்ளடக்கியது. 344 வது செய்யுள் முதல் தான் பெருமானின் திருவிளையாடல் துவங்குகிறது.

திருவிளையாடல் புராணம் மூன்று காண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன,.

மதுரைக்காண்டம் - 18 படலங்கள்
 கூடற்காண்டம் - 30 படலங்கள்
திருஆலவாய்க்  காண்டம் - 16 படலங்கள்



64 திருவிளையாடல்கள்

திருவிளையாடற்புராணத்தில் சிவபெருமானின் 64 திருவிளையாடல்களும் தனித்தனிப் படலங்களாக விளக்கப்பட்டுள்ளன.
  1.     இந்திரன் பழி தீர்த்த படலம்.
  2.     வெள்ளையானை சாபம் தீர்த்த படலம்.
  3.     திருநகரங்கண்ட படலம்.
  4.     தடாதகைப் பிராட்டியார் திருஅவதாரப் படலம்.
  5.     தடாதகையாரின் திருமணப் படலம்.
  6.     வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம்.
  7.     குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்.
  8.     அன்னக் குழியும் வைகையையும் அழைத்த படலம்.
  9.     ஏழுகடல் அழைத்த படலம்.
  10.     மலயத்துவசனை அழைத்த படலம்.
  11.     உக்கிரபாண்டியன் திருஅவதாரப் படலம்.
  12.     உக்கிர குமாரனுக்கு வேல்வளை செண்டு கொடுத்த படலம்.
  13.     கடல் சுவற வேல்விட்ட படலம்.
  14.     இந்திரன் முடிமேல் வளையெறிந்த படலம்.
  15.     மேருவைச் செண்டாலடித்த படலம்.
  16.     வேதத்துக்குப் பொருள்அருளிச் செய்த படலம்.
  17.     மாணிக்கம் விற்ற படலம்.
  18.     வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்.
  19.     நான் மாடக்கூடலான படலம்.
  20.     எல்லாம் வல்ல சித்தரான படலம்.
  21.     கல் யானைக்கு கரும்பு தந்த படலம்.
  22.     யானை எய்த படலம்.
  23.     விருத்த குமார பாலரான படலம்.
  24.     கால் மாறி ஆடிய படலம்.
  25.     பழியஞ்சின படலம்.
  26.     மாபாதகம் தீர்த்த படலம்.
  27.     அங்கம் வெட்டின படலம்.
  28.     நாகமேய்த படலம்.
  29.     மாயப்பசுவை வதைத்த படலம்.
  30.     மெய் காட்டிட்ட படலம்.
  31.     உலவாக்கிழி அருளிய படலம்.
  32.     வளையல் விற்ற படலம்.
  33.     அட்டமாசித்தி உபதேசித்த படலம்.
  34.     விடையிலச்சினை இட்ட படலம்.
  35.     தண்ணீர்ப் பந்தல் வைத்த படலம்.
  36.     இரசவாதம் செய்த படலம்.
  37.     சோழனை மடுவில் வீட்டிய படலம்.
  38.     உலவாக் கோட்டை அருளிய படலம்.
  39.     மாமனாக வந்து வழக்குரைத்த படலம்.
  40.     வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம்.
  41.     விறகு விற்ற படலம்.
  42.     திருமுகம் கொடுத்த படலம்.
  43.     பலகை இட்ட படலம்.
  44.     இசைவாது வென்ற படலம்.
  45.     பன்றிக் குட்டிக்கு முலை கொடுத்த படலம்.
  46.     பன்றிக் குட்டிகளை மந்திரிகளாக்கிய படலம்.
  47.     கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம்.
  48.     நாரைக்கு முத்தி கொடுத்த படலம்.
  49.     திருவாலவாயான படலம்.
  50.     சுந்தரப்பேரம் செய்த படலம்.
  51.     சங்கப்பலகை கொடுத்த படலம்.
  52.     தருமிக்குப் பொற்கிழியளித்த படலம்.
  53.     கீரனைக் கரையேற்றிய படலம்.
  54.     கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம்.
  55.     சங்கத்தார் கலகந்தீர்த்த படலம்.
  56.     இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம்.
  57.     வலை வீசின படலம்.
  58.     வாதவூர் அடிகளுக்கு உபதேசித்த படலம்.
  59.     நரி பரியாக்கிய படலம்.
  60.     பரி நரியாக்கிய படலம்.
  61.     மண் சுமந்த படலம்.
  62.     பாண்டியன் சுரம் தீர்த்த படலம்.
  63.     சமணரைக் கழுவேற்றிய படலம்.
  64.     வன்னியும் கிணறும் இலிங்கமும் அழைத்த படலம்.

மேலே சொல்லப்பட்டுள்ள ஒவ்வொரு படலமும் படித்து, நாம் உணர வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம். குருவருளும்,திருவருளும் நம்மை கூட்டுவிக்கட்டும். இந்த திருவிளையாடல் புராணம் மதுரை மாநகரின் தல புராணமாகவும் விளங்கி வருகின்றது.

சரி. வாருங்கள்...திருவிளையாடல் எனும் திரைக்காவியத்திற்குள் செல்வோம்.

ஆரம்பத்திலேயே திருவிளையாடல் புராணம் என்ற இதிகாசத்திலிருந்து சில படலங்களையும், ஈசனின் விளையாட்டெல்லாம் திருவிளையாட்டே என்ற கருத்தில் கொண்டு மற்ற புராணங்களில் இருந்து சில படலங்களையும் தொகுத்து திருவிளையாடல் என்ற திரைக்காவியம் தருவதாக சொல்லி திரைப்படம் ஆரம்பிக்கின்றது. "ஓம் நம சிவாய" என்ற நாமத்துடன் திரைப்படம் ஆரம்பம்.

கயிலை எப்படி இருக்கும்? நீங்கள் கற்பனை செய்து பார்த்து இருக்கின்றீர்களா? கயிலையை அப்படியே கண்ணுக்குள் மட்டுமல்ல, நம் நெஞ்சுக்குள்ளும் நிறுத்தி இருக்கின்றார்கள். வேதம் முழங்க, இசைக்கருவிகளின் இன்னிசையில், இடையில் நந்தியம்பெருமானின் இன்னிசை இசைக்கும் காட்சி என ஒவ்வொன்றாக இழைத்து, இழைத்து ..அட..இது தான் கயிலை ..என உணர்த்தி ஆரம்பம். அன்று இருந்த தொழில்நுட்ப வசதியில் மேளம்,தாளம் என இன்னும் அந்த இசை நம்முள் ஓடிக் கொண்டிருக்கின்றது. பஞ்ச பூத நாயகனுக்கு பஞ்ச வாத்தியங்கள் இசையில்..சம்போ மகாதேவா குரலில் நாரத மகரிஷி பாடுகின்றார். நாரதர் என்றாலே கலகம் என்று நாம் நினைப்பதோடு, நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இன்றும் பல நாரதர்களை நம் வாழ்க்கையில் சந்தித்து கொண்டிருப்போம். 

அடுத்து அன்னை பார்வதி அந்த பரமேஸ்வரனை நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க !! என்ற சிவபுராண அடிகள் பாடி துதிக்கின்றார். சிவ கணங்கள், பூத கணங்கள் என அனைவரும் சிவனை முழங்குகின்றார்கள். தியானத்தில் இருக்கும் சிவபெருமான் கண் திறந்து, அம்மையைப் புகழ்ந்து தன்னருகில் அமர்த்தி கயிலையின் வாசம் பற்றி கூறுகின்றார்.தமிழும் அழகும் கொண்ட வசனங்கள். அப்பப்பா தமிழின் விளையாட்டை இந்த திருவிளையாடல் திரையின் ஆரம்பத்திலே கேட்டோம். சொற்சுவை,பொருட்சுவை, அருட்சுவை என அறுசுவை தாண்டிய சுவையை நாம் உணர முடிகின்றது.

அடுத்து நாரதரின் கலகம் தான் ஆரம்பிக்கின்றது. அதனை அடுத்த படலம் படித்து இன்னும் பேசுவோம்.சுவாரஸ்யமான  செய்தியாக இந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஏ. பி. நாகராஜன் 'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்று கூறும் நக்கீரர் வேடத்தில் தோன்றினார் என்பதே.

- அந்த பரமேஸ்வரரின் திருவிளையாடல் இன்னும் வளரும்.

முந்தைய பதிவுகளுக்கு:-

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்- சித்திரைப் பெருவிழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_69.html

மதுரை திருக்கல்யாண விருந்து - சித்திரை 13 & 14 - http://tut-temple.blogspot.in/2018/04/13-14.html

சமயபுரம் மாரியம்மன் சித்திரைப் பெருந்திருவிழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_87.html




No comments:

Post a Comment