Subscribe

BREAKING NEWS

28 May 2018

தண்ணீர்... தண்ணீர்...

தண்ணீர்... தண்ணீர்..

நீரின்றி அமையாது உலகு. பஞ்ச பூதத்தில் மிக மிக இன்றியமையாதது, நீர் இந்த பூமியில்  இருப்பதால் தான் உயிர்கள் இங்கே வாழ முடிகின்றது. அதனால் தான் செவ்வாய் கிரகத்தில்  நீர் இருக்கின்றதா என்று பல ஆராய்ச்சிகள் இன்றும் தொடர்ந்து வருகின்றது.  உலகில் உயிரங்களின் தொடக்கமே இந்த நீரில் இருந்து தான் ஆரம்பமாகி உள்ளது. இந்த பூமியின் 71% பகுதி நீரால் மட்டுமே சூழப்பட்டுள்ளது.

அண்மையில் நாம் ஒரு காணொளி கண்டோம். அதுவே இந்தப் பதிவை நம்மை எழுத சொல்லி தூண்டியது. அந்த காணொளி பற்றி பின்னர் பார்ப்போம். தண்ணீர்...உலக நாடுகளை மிகப் பெரிய அளவில் அச்சுறுத்த தொடங்கிவிட்டது.. தென்னாப்பிரிக்கா, நைஜீரியா, சோமாலியா, சிரியாவைத் தொடர்ந்து இஸ்ரேல், ஈரான், இந்தியா என உலகின் பல நாடுகள் தண்ணீர் பஞ்சம் எனும் பேராபத்தில் சிக்கிக் கொண்டுள்ளன.தென்னாப்பிரிக்காவின் தலைநகர் கேப்டவுனில் ரேசன் முறையில் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. வரும் ஏப்ரல் மாதம் தண்ணீரே இல்லாத வறண்ட பூமியாகப் போகிறது கேப்டவுன்.

உலகிலேயே தண்ணீரே இல்லாத மிகப் பெரிய நகரம் என்ற அவலத்தை சுமக்கப் போகிறது கேப்டவுன். இதனால் தண்ணீரை பயன்படுத்துவதற்காக பல கட்டுப்பாடுகள் அங்கு விதிக்கப்பட்டுள்ளன.இதேபோன்ற நிலைமைதான் நைஜீரியா, சோமாலியா, சிரியாவிலும். இஸ்ரேலும் கூட தண்ணீர் பஞ்சத்தை எப்படி எதிர்கொள்வது என்பதில் தீவிரமாக இருக்கிறது.

ஈரானிலும் தண்ணீர் பற்றாக்குறை தலைகாட்டத் தொடங்கிவிட்டது. இந்தியாவின் முன்னோடி மாநிலம், வளர்ச்சி மாநிலம் என பில்டப் செய்யப்பட்ட குஜராத்தை காவு வாங்கப் போகிறது தண்ணீர் பஞ்சம். குஜராத் மட்டுமா? நம் இந்தியா முழுதும் தண்ணீருக்கு விதி விலக்கல்ல..

தமிழகம் முழுவதும் தண்ணீர் தேவைக்காக, மக்கள் பரிதவித்து அலைவதை பார்க்கும் போது, மனது பதைத்து போகிறது. கடும் வெயிலிலும், கால் கடுக்க, காலி குடங்களுடன் மக்கள் அலைந்து திரிவது, மிகவும் வேதனை தரும் விஷயம். நமக்கெல்லாம் குழாயைத் திறந்தவுடன் தண்ணீர் கிடைக்கின்றது.எனவே அடித்தட்டு மக்களைப் பற்றி நாம் சிந்திப்பதில்லை. நாமும் ஒரு நாள் தண்ணீருக்காக அலையும் நாள் வெகு தொலைவில் இல்லை. நாம் தப்பித்தாலும் கூட, நம் சந்ததி கண்டிப்பாக தப்பிக்காது.

நாடு முழுவதும், தண்ணீருக்கான தேவை பொதுப் பிரச்னையாகி விட்ட நிலையில், அரசும், பொது நல, சமூக, தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், தனி மனிதரும் சேர்ந்த கூட்டு முயற்சியாலேயே, பிரச்னைக்கு ஓரளவு தீர்வு காண முடியும்.

சென்னை போன்ற பெருநகரங்களில் மழை நீர் செல்வதற்கு கூட இடமில்லை.எங்கு பார்த்தாலும் சிமெண்ட் மற்றும் தார் சாலைகள். தீப்பெட்டி வீடுகள் அதான் அபார்ட்மெண்ட் வீடுகளில் நாம் மரம்,செடி கொடி வளர்ப்பது சற்று கடினமே. ஆனால் ஒவ்வொரு வீட்டில் இருப்போரும் முயற்சித்தால் முடியும். தனிவீடுகளில் வசிப்போருக்கு ஏராளமான சாத்தியக் கூறுகள் உள்ளன.

தனி வீட்டை சுற்றிலும், தென்னை, மா, பலா, வாழை, நெல்லி, வேம்பு, கொய்யா மற்றும் முருங்கை என, பல மரங்களை வளர்க்கலாம்.

வீட்டுக்கும், மதில் சுவருக்கும் இடைப்பட்ட, 10 அடி நிலப்பகுதியை, கற்கள், சிமென்ட் போட்டு மூடாமல், மண் தரையாக விட வேண்டும்.இது தான் முக்கியமான விஷயம். ஏனென்றால், இப்போது, தனி வீடு வைத்திருப்போர், கட்டுபவர்கள் கூட, பெரும்பாலும் இப்படி செய்வதில்லை.

அடுக்கு மாடிகுடியிருப்புகள் கட்டுவோரும், வணிக வளாகம் கட்டுவோரும், பூஞ்செடிகள் வளர்க்க மட்டும் சிறிது இடம் ஒதுக்கி, மீதி தரைப்பகுதி முழுவதையும், சிமென்ட் தளமாகவோ, கற்கள் பதித்தோ மூடி விடுகின்றனர்.

மண் தரையாக விட்டிருப்பதால், நிலத்தடி நீர் குறைவில்லாமல் இருக்கிறது; தண்ணீரும் நன்றாக இருக்கிறது. இதோ ஒரு அனுபவ பகிர்வு

மண் தரையாக விட்டிருப்பதால், கிடைத்த மிகப்பெரிய நன்மையை, 2015 டிசம்பர் பெரு வெள்ளத்தின் போதும், 'வர்தா' புயல், வெள்ளத்தின் போதும், அனுபவ பூர்வமாக உணர்ந்து கொண்டோம்.ஆம்... இடைவிடாது பெய்த பேய் மழையால், வீட்டை சுற்றி தண்ணீர் சூழ்ந்திருந்த போதும், வீட்டுக்குள் துளி தண்ணீர் புகவில்லை. ஏனெனில், மழையின் வேகம் சிறிது குறைந்ததும், அத்தனை மழை நீரும், அரை மணியில், பூமிக்குள் இறங்கி விடும்.

என் நண்பர்கள் வீடுகளிலும், அக்கம், பக்கத்திலும் தரையை மூடி விட்டதால், வெள்ள நீர் புகுந்து, கார்கள், மின் மோட்டார்கள் சேதமடைந்தன. நாங்கள், பூமித் தாயை அன்று குளிர்வித்ததன் பலனை, இந்த கோடையில், நிம்மதியாக அனுபவிக்கிறோம்.

மண் தரையாக விடப்பட்டிருப்பதில், சில குறைபாடுகள் இருக்கவே செய்கின்றன. ஆங்காங்கே, கல்லும், மண்ணும் சிதறி கிடக்கும்; மரங்களின் இலைகளும், தழைகளும் பரவி, வேலை வைக்கும். அந்த இலை, தழைகளையும், சமையலறை காய்கறி கழிவுகளையும், பூமிக்கு உணவாக, உரமாக ஆக்குகிறோம்.

எலி, பூனைகளின் நடமாட்டம் அதிகம் இருக்கும். அவற்றை, வீட்டுக்குள் வர விடாமல் தோட்டத்திலேயே, பால் வைத்து விட்டால், நமக்கு தொந்தரவு கிடையாது; எலிகளை அவை,
'கவனித்து' கொள்ளும்.பெரிய நன்மைக்காக, ஒரு சில குறைகளை அனுசரித்து தான் ஆக வேண்டும்.

மண்ணில், நிறைய மண் புழுக்கள் உருவாகியுள்ளன; அவற்றை உணவாக்கி கொள்ள வரும் சிட்டுக்குருவிகள், அணில், பட்டாம் பூச்சிகள் என, நிறைய உயிரினங்களை எங்கள் தோட்டத்தில் பார்க்கும் போது, குறைகள் பெரிதாக தெரிவதில்லை.

குடியிருப்பு, வணிக வளாகங்கள் கட்ட, திட்ட அனுமதி வழங்கும் போது, சில வரைமுறைகளை கட்டாயப்படுத்த வேண்டும். கட்டடத்தின் அளவு, விஸ்தீரணத்துக்கு ஏற்ப, மரங்கள் வளர்க்க, இட வசதி ஒதுக்க வலியுறுத்த வேண்டும். குறைந்த பட்சம், மரங்களை சுற்றியுள்ள மண் தரையே கூட போதுமானது.

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த கற்றுக் கொள்ளுங்கள். தத்தம் பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுங்கள்.

மின்சாரம் உபயோகிப்பதையும் சரிப்படுத்தவும் மின்சாரத்திற்கு தண்ணீருக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? கட்டாயம் தொடர்பு உண்டு. சூழலை சரி செய்யாது தண்ணீரை நாம் பயன்படுத்த இயலாது.

தண்ணீரை சேமிக்க கற்றுக் கொள்ளுங்கள். இப்போது யோசித்து பார்த்தாலும்,சிறு வயதில் மழை பெய்தால் போதும். வீட்டில் உள்ள அண்டா,பானை போன்றவற்றில் நீர் முழுதும் பிடித்து வைப்பார்கள். மழை நீர் அமிர்தம். இன்று தான் நாம் மிகப் பெரிய டேங்க் கட்டி வைத்து இருக்கின்றோம்?பிறகென்ன கவலை? என்ற நிலை.

நிலத்தடி நீர் சேமிப்பதும் நீரைக் காக்கும் ஒரு வழி. ஆனால் இன்று பிளாஸ்டிக் அரக்கன் விஸ்வரூபம் எடுத்து உள்ளான். எப்படி அழிப்பது ? அரசாங்கம் ஆணையிட்டு என்று விடிவது ? நாம் உணர்ந்தால் தான் விடியும். எப்படி சுத்தி வந்தாலும் இயற்கையை நாம் மீட்டெடுத்தால் தான் இந்த தண்ணீரை நாம் ருசிக்க முடியும். எப்போது கையில் ஒரு துணிப்பை வைத்துக் கொள்ளுங்கள். உணவகங்களுக்கு சென்றால் டிபன் பாக்ஸ் போன்ற பாத்திரங்களை கொண்டு சென்று வாங்குங்கள். பிளாஸ்டிக் பயன்பாட்டை குறையுங்கள்.

மிக மிக முக்கியம். நீரை விலை கொடுத்து வாங்காதீர்கள். குறைந்த பட்சம் பயணத்தின் போதாவது முயற்சி செய்யுங்கள். பாத்திரங்கள் போன்ற புட்டிகளை பயன்படுத்துங்கள். கௌரவ குறைச்சலாக எண்ணாதீர்கள். கையில் ஒரு வாட்டர் பாட்டில் கொண்டு பயணம் செய்தால் தான் பயணம் செய்வதற்கே மதிப்பு போலும். ஒவ்வொரு முறை பயணத்தில் ஒவ்வொரு பாட்டில் என்று கணக்கில் எடுத்துக் கொண்டாலும், வருடத்திற்கு சுமார் 20 வாட்டர் பாட்டில் என்றால் 20 வாட்டர் பாட்டிலும் அப்படியே மக்காத குப்பையாக தான் கணக்கில் சேரும்.இதுவே நீங்கள் ஒரே ஒரு சில்வர், செப்பு புட்டி வாங்கி உபயோகித்தால் நமக்கு மட்டுமல்ல, நமது சுற்றுப்புறத்திற்கே நன்மை தான்.



நீங்கள் ஒருவரைக் கொண்டு கணக்கு போடாதீர்கள்.ஒவ்வொரு வார விடுமுறை அன்று எத்தனை பேருந்து பயணம், ரயில் பயணம், விமான பயணம். அப்படி என்றால் எவ்வளவு பிளாஸ்டிக் சேர்கின்றது. நினைக்கவே பயங்கரமாக உள்ளது. எப்படி இதனை மாற்றுவது ? நாம் தான் மாற வேண்டும்? இதோ நாம் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த புட்டியைத் தான் நீருக்கு பயன்படுத்தி வருகின்றோம். எப்போது பயணம் என்றாலும், என் பயணத் தோழனாய் இவர் இருக்கின்றார்.இது போல சின்ன சின்ன விஷயங்களில் மாற்றம் செய்யுங்கள்.

குடியிருக்கும் வீட்டில் ஒழுகும் குழாய்கள் இருந்தால் , நீங்களே உங்கள் செலவில் மாற்றுங்கள். வீட்டின் உரிமையாளருக்காக காத்திருக்க வேண்டாமே.

அரிசி, காய்கறிகளை அலம்பும் நீரை பிடித்து, செடிகளுக்கு விடலாம்.பாத்திரம் அலம்பும் போது கிடைக்கும், சோப்பில்லாத கழிவு நீரை கூட பிடித்து, மரங்களுக்கு விடுகிறோம்.

மேற்கத்திய கழிப்பறைகள் பயன்படுத்தாமல், இந்திய கழிப்பறைகளை பயன்படுத்தலாம்.. இதனால், பெருமளவு தண்ணீரை மிச்சப்படுத்த முடியும்.

சரி இப்போது அந்த காணொளிக்கு வருகின்றோம். காணொளியில் பலதரப்பட்ட மக்களிடம் சென்று உங்கள் வாழ்விலேயே மிகவும் முக்கியமானது எது என்று கேட்கின்றார்கள்?


யுவன்களும், யுவதிகளும் கேட்ட உடனேயே பிட்சா, சிக்கன், பில்டர் காபி, மின்சாரம், பிரியாணி ,கரடி பொம்மை, செல்ல நாய்,  சூப்பர் பைக், வீடு, கார், மரங்கள், உணவு, பணம், அலைபேசி, நகைகள், காலணிகள், உடைகள், கணிப்பொறி என அடுக்கிக் கொண்டே போகின்றார்கள். இது போலவே நாம் மற்றொரு காணொளியும் பார்த்தோம், மிக மிக தேவையான தொழில் எது என்று? கடைசியில் விவசாயம் என்று முடியும். அது போல் இந்த காணொளியும் நம்மை ஈர்த்தது. மேற்சொன்ன அனைத்து பொருட்களும், தேவைகளும் கிடைக்க  அத்தியாவசியாமாக ஒன்று தேவை. அது.. தண்ணீர் மட்டுமே தான்.



1100 லிட்டர் நீர் இருந்தால் தான் ஒரு பிட்சா செய்ய முடியும். 2400 லிட்டர் நீர் கொண்டு தான் ஒரு கிலோ அரிசி உற்பத்தி செய்ய முடியும்.2600 லிட்டர் நீர் கொண்டு தான் ஒரே ஒரு மேல் சட்டை தயார் செய்ய முடியும். நாம் ஆசையாக சாப்பிடும் சிக்கன் இருக்கின்றதே..அந்த கோழி வளர்ப்பு மற்றும் இன்னபிற தேவைக்கு என 4300 லிட்டர் நீர் தேவை. 5200 லிட்டர் நீர் கொண்டு தான் ஒரு ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்க முடியும். 6800 லிட்டர் நீர் கொண்டு ஒரு கிலோ மாட்டுக்கறி உற்பத்தி செய்கின்றார்கள் .17000 லிட்டர்ட் நீர் கொண்டு சாக்லேட் கிரீம் தயார் செய்கின்றார்கள். ஒரு கார் தயாரிக்க 148000 லிட்டர் நீர் தேவைப்படுகின்றது.

நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களிலும் நீரின்றி அமையாது. இந்த நீரை நாம் எந்த ஒரு தொழிற்சாலையிலோ, ஆய்வகத்திலோ தயாரிக்க முடியுமா என்றால் அது முடியவே முடியாது. ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப என என்ன தான் நாம் முன்னேறினாலும் இயற்கையின் பிடியில் நாம் இருந்தாக வேண்டும். நிலம்,நீர்,காற்று,நெருப்பு,விண் என்ற இந்த ஐந்தையும் நாம் உற்பத்தி செய்ய இயலாது. அதனால் தான் இவை ஐம்பெரும்பூதங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.சரி விசயத்திற்கு வருவோம். இத்தகு அத்தியாவசிய நீரின் அளவு மிக மிக குறைவாகவே நமக்கு உள்ளது. இருக்கின்ற நீராதாரத்தை நாம் பாதுகாக்க வேண்டும். அதுவே நம் தலையாய கடமை.







 எனவே நமக்கு கிடைத்துள்ள நீரை அளவோடு தேவைக்காக பயன்படுத்துவோம். நீர் மட்டுமல்ல காற்று, மண் என பஞ்சபூதத்தை காத்து அவற்றை வழிபடுவோம். சித்த மார்க்கத்தில், இறை உணர்வில் உள்ள ஒவ்வொருவரும் வெறும் பூசை, வழிபாடு என்று மட்டும் இருந்தால் போதவே போதாது. சித்தர்களும்,மகான்களும் வெறும் வழிபாட்டை மட்டும் விரும்ப மாட்டார்கள். இது போன்றே இந்த பூமிக்கு 0.0001 சதவீதம் நம்மை மாற்றுவதைத் தான் அவர்கள் என்றும் விரும்புவார்கள். பத்திவைப் படிக்கும் அன்பர்கள் தங்களால் இயன்ற வழியில் மாற்றத்தை தன்னில் உருவாக்குங்கள்.



 இயற்கை மித்திரர்களின் ஏழு தீர்மானங்கள் 2018ஆம் ஆண்டில்.,

* ஒரு மரக் கன்றேனும் நடுவோம்🌳
* நெகிழி பைகளை தவிர்க்க, துணிப் பை கை வசம் வைத்திருப்போம் 🛍
* தண்ணீர் வைக்க நெகிழி அல்லாத பாத்திரங்களை உபயோகிப்போம் 🍯
* நெகிழி அல்லாத எழுதுக்கோலை முடிந்த வரை பயன்படுத்துவோம்🖊
* தினசரி குப்பைகளை பிரித்து; மக்கும் குப்பையை🍃🍂 உரமாக்குவோம், மறுசுழற்சி செய்ய முடிந்ததை🍶 அதன் கடையில் சேர்ப்போம்
* இயற்கை சார்ந்த உணவு பழக்கங்களை மேற்கொள்வோம் 🥗
* மிதிவண்டி அல்லது பொது போக்குவரத்தை முடிந்த வரை பயன்படுத்துவோம் 🚲🚌🚆

மாற்றமாக இருப்போம்! மாற்றுவோம்!

குழுவில் இணைய: https://www.facebook.com/eco.friends.community/

- அடுத்த பதிவில் மீண்டும் இணைவோம்.

No comments:

Post a Comment