Subscribe

BREAKING NEWS

03 July 2018

பாடல் பெற்ற தலங்கள் (3) - திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில்

இறை அன்பர்களே...

பாடல் பெற்ற தலங்கள் என்ற பதிவு நம் தலத்தில் கண்டு வருகின்றோம். அந்த வகையில் திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில், திருநெடுங்களம் என்று திருத்தலங்கள் பார்த்தோம். இன்றைய பதிவிலும் திருச்சியில் உள்ள தாயுமானவர் கோயில் பற்றி தான் உணர உள்ளோம். ஏற்கனவே நம் தளத்தில்  "பராபரக் கண்ணி தந்து ,எங்களுக்கு தாயும் ஆன பரமே போற்றி" என்ற பதிவில் தாயுமான சுவாமிகள் பற்றி குறிப்பால் அறிந்தோம். இந்த பதிவே ஒரு மீள்பதிவு போலத் தான். எத்துனை முறை படித்தாலும்,பார்த்தாலும்,கேட்டாலும் அந்த பரம்பொருள் நம்மை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகின்றார். அதனால் தானே மீண்டும் மீண்டும் ஆலய வழிபாடு. கிரிவலம், மலையேற்றம் என்று தொடர்ந்து வருகின்றோம்.



திருச்சி என்றால் மலைக்கோட்டை என்பதும், மலைக்கோட்டை என்ற உடன் உச்சிப் பிள்ளையார் கோயிலும் தான் நினைவிற்கு வரும். இவற்றைத் தாண்டி அங்கே நமக்குத் தாயாய் விளங்கும் தாயுமானவர் திருக்கோயில் அழகாய் பிரம்மாண்டமாய், நின்று பேசுகின்றது.

திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன் பெண்ணுக்கு மகப்பேறு காலத்தில் தாயாக வந்து உதவிய தலமென்பது ஐதிகம். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள ஆறாவது சிவத்தலமாகும்.


முதலில் சம்பந்தர்,திருநாவுக்கரசர் அருளிய பதிகங்களைப் படித்து விட்டு, நாம் தல வரலாறு காண்போம்.இத்தலம் திருப்புகழ் தலமும் கூட. அருணகிரிநாதரால் பாடப்பெற்ற தலம் என்பது கூடுதல் சிறப்பு. புற்றீசல் போல் புதிது புதிதாக முளைக்கும் கோயில்களுக்கு செல்வதை விட, சைவ,வைணவ, அடியார், அருளாளர் பெருமக்கள் பாடிய இது போன்ற தலங்களுக்கு செல்லுங்கள். இவ்வளவு வாகன வசதி இருந்தும், நாம் இது போன்ற தலங்களுக்கு செல்ல நம்மால் திட்டமிட முடியாது தவிக்கின்றோம். எந்த ஒரு வசதி வாய்ப்பு அற்ற பன்னெடுங் காலத்தில் கால் நடையாகவே சென்று உள்ளார்கள் நம் அருளாளர்கள் எனும் போது, அவர்கள் பாதம் பட்ட இடத்தில், அவர்கள் மூச்சு காற்று கலந்த காற்றில் நாமும் சென்று தரிசிப்பது நாம் செய்யும் புண்ணியமே ஆகும்.


திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த திருச்சிராப்பள்ளி தேவாரத் திருப்பதிகம்

திருச்சிராப்பள்ளி - திருக்குறுந்தொகை

         திருச்சிற்றம்பலம்

841 மட்டு வார்குழ லாளொடு மால்விடை
இட்ட மாவுகந் தேறும் இறைவனார்
கட்டு நீத்தவர்க் கின்னரு ளேசெயுஞ்
சிட்டர் போலுஞ் சிராப்பள்ளிச் செல்வரே. 5.85.1

842 அரிய யன்றலை வெட்டிவட் டாடினார்
அரிய யன்றொழு தேத்தும் அரும்பொருள்
பெரிய வன்சிராப் பள்ளியைப் பேணுவார்
அரிய யன்றொழ அங்கிருப் பார்களே. 5.85.2

843 அரிச்சி ராப்பகல் ஐவரா லாட்டுண்டு
சுரிச்சி ராதுநெஞ் சேயொன்று சொல்லக்கேள்
திரிச்சி ராப்பள்ளி யென்றலுந் தீவினை
நரிச்சி ராது நடக்கும் நடக்குமே. 5.85.3

844 தாயு மாயெனக் கேதலை கண்ணுமாய்ப்
பேய னேனையும் ஆண்ட பெருந்தகை
தேய நாதன் சிராப்பள்ளி மேவிய
நாய னாரென நம்வினை நாசமே. 5.85.4

  இப்பதிகத்தில் 5,6,7,8,9,10-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. 5.85.5-10

         திருச்சிற்றம்பலம்


 திருஞானசம்பந்தர் தேவாரம் - திருச்சிராப்பள்ளி - நன்றுடையானைத் 

திருச்சிராப்பள்ளி    
        
பண் -  குறிஞ்சி        
        
திருச்சிற்றம்பலம்        
        
        
    நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே    
    றொன்றுடையானை உமையொருபாகம் உடையானைச்    
    சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்    
    குன்றுடையானைக் கூறஎன்னுள்ளங் குளிரும்மே.    1.98.1
        
    கைம்மகஏந்திக் கடுவனொடூடிக் கழைபாய்வான்    
    செம்முகமந்தி கருவரையேறுஞ் சிராப்பள்ளி    
    வெம்முகவேழத் தீருரிபோர்த்த விகிர்தாநீ    
    பைம்முக நாகம் மதியுடன் வைத்தல் பழியன்றே.    1.98.2
        
    மந்தம்முழவம் மழலைததும்ப வரைநீழல்    
    செந்தண்புனமுஞ் சுனையுஞ்சூழ்ந்த சிராப்பள்ளிச்    
    சந்தம்மலர்கள் சடைமேலுடையார் விடையூரும்    
    எந்தம்மடிகள் அடியார்க்கல்லல் இல்லையே.    1.98.3
        
    துறைமல்குசாரற் சுனைமல்குநீலத் திடைவைகிச்    
    சிறைமல்குவண்டுந் தும்பியும்பாடுஞ் சிராப்பள்ளிக்    
    கறைமல்குகண்டன் கனலெரியாடுங் கடவுள்ளெம்    
    பிறைமல்குசென்னி யுடையவன்எங்கள் பெருமானே.    1.98.4
        
    கொலைவரையாத கொள்கையர்தங்கள் மதில்மூன்றும்    
    சிலைவரையாகச் செற்றனரேனுஞ் சிராப்பள்ளித்    
    தலைவரைநாளுந் தலைவரல்லாமை யுரைப்பீர்காள்    
    நிலவரைநீல முண்டதும்வெள்ளை நிறமாமே.    1.98.5
        
    வெய்யதண்சாரல் விரிநிறவேங்கைத் தண்போது    
    செய்யபொன்சேருஞ் சிராப்பள்ளிமேய செல்வனார்    
    தையலொர்பாகம் மகிழ்வர்நஞ்சுண்பர் தலையோட்டில்    
    ஐயமுங்கொள்வர் ஆரிவர்செய்கை அறிவாரே.    1.98.6
        
    வேயுயர்சாரல் கருவிரலூகம் விளையாடும்    
    சேயுயர்கோயிற் சிராப்பள்ளிமேய செல்வனார்    
    பேயுயர்கொள்ளி கைவிளக்காகப் பெருமானார்    
    தீயுகந்தாடல் திருக்குறிப்பாயிற் றாகாதே.    1.98.7
        
    மலைமல்குதோளன் வலிகெடவூன்றி மலரோன்றன்    
    தலைகலனாகப் பலிதிரிந்துண்பர் பழியோரார்    
    சொலவலவேதஞ் சொலவலகீதஞ் சொல்லுங்கால்    
    சிலவலபோலுஞ் சிராப்பள்ளிச்சேடர் செய்கையே.    1.98.8
        
    அரப்பள்ளியானும் மலருறைவானும் அறியாமைக்    
    கரப்புள்ளிநாடிக் கண்டிலரேனுங் கல்சூழ்ந்த    
    சிரப்பள்ளிமேய வார்சடைச்செல்வர் மனைதோறும்    
    இரப்புள்ளீரும்மை யேதிலர்கண்டால் இகழாரே.    1.98.9
        
    நாணாதுடைநீத் தோர்களுங்கஞ்சி நாட்காலை    
    ஊணாப்பகலுண் டோதுவோர்கள் உரைக்குஞ்சொல்    
    பேணாதுறுசீர் பெறுதுமென்பீரெம் பெருமானார்    
    சேணார்கோயில் சிராப்பள்ளிசென்று சேர்மினே.    1.98.10
        
    தேனயம்பாடுஞ் சிராப்பள்ளியானைத் திரைசூழ்ந்த    
    கானல்சங்கேறுங் கழுமலவூரிற் கவுணியன்    
    ஞானசம்பந்தன் நலம்மிகுபாடல் இவைவல்லார்    
    வானசம்பந்தத் தவரொடுமன்னி வாழ்வாரே.    1.98.11
        
        

    திருச்சிற்றம்பலம்.    

கர்ப்பிணிகளை இந்த தேவாரப் பதிகத்தை வாசிக்க/கேட்க சொல்லவும்.தாயாரின் உடல்நிலை குணமாகவும், சுகப்பிரசவம் அமைவதற்கும், உறவினர் – நண்பர்கள் நட்பு நன்கு அமையவும், மனை முதலியன திறம்படக் கட்டி முடிப்பதற்கும் ஓத வேண்டிய பதிகம்.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது; சுவாமி - தாயுமானேசுவரர்(மாத்ருபூதேசுவரர்), தேவி -மட்டுவார்குழலி 

இத்திருக்கோயிலின் தல வரலாறு கீழே

    எல்லா உயிர்க்கும் தந்தையாகவுள்ள இறைவன் ஒரு பெண்ணுக்கு மகப்பேறு காலத்தில் தாயாக வந்து உதவி செய்தமையால் தாயுமானவர் (தாயும் ஆனவர்) என்று பெயர் பெற்றார்.
    திரிசிரன் (மூன்று தலைகளை கொண்ட அசுரன்) வழிபட்ட இடமாதலின் இஃது 'திரிசிராப்பள்ளி ' என்று பெயர் பெற்றது.

    உறையூரைத் தலைமையாகக் கொண்டு சோழ மன்னன் ஒருவன் இப்பகுதியை ஆண்டு வந்தான். அவ்வேளையில் சாரமா முனிவர் என்னும் சிவபக்தர், இத்தலத்தில் நந்தவனம் உருவாக்கி, தினமும் சிவனுக்கு செவ்வந்தி மலர் படைத்து பூஜித்து வந்தார். ஒருசமயம் வணிகன் ஒருவன், முனிவரின் நந்தவனத்தில் மலர்களைத் திருடி, மன்னனுக்குக் கொடுத்தான். அம்மலர் மீது ஆசை கொண்ட மன்னன், தினமும் வணிகனை மலர் கொண்டு தரும்படி சொன்னான். எனவே அவன் நந்தவனத்தில் தொடர்ந்து திருடி வந்தான். இதனால், சாரமா முனிவரின் சிவபூஜை தடைபட்டது. அவர், மன்னனிடம் சொல்லியும் அவன் கண்டுகொள்ளவில்லை.

வருந்திய முனிவர், சிவனிடம் முறையிட்டார். அவருக்காக சிவன், மன்னனின் அரசவை இருந்த திசையை நோக்கித் திரும்பி, உக்கிரப்பார்வை பார்த்தார். இதனால் அப்பகுதியில் மண் மழை பொழிந்தது. தவறை உணர்ந்த மன்னன், சிவனை வேண்டி மன்னிப்பு பெற்றான். இவ்வாறு தவறு செய்பவர்களைத் தண்டிப்பவராக இத்தலத்து இறைவன் அருளுகிறார். செவ்வந்தி மலர் படைத்து வழிபடப்பட்டவர் என்பதால் இவருக்கு, "செவ்வந்தி நாதர்' என்ற பெயரும் உண்டு.

    தனகுத்தன் என்ற வணிகன் இவ்வூரில் வசித்தான். கர்ப்பிணியான அவனது மனைவி, உதவிக்கு தாயை அழைத்திருந்தாள். தாயும் அவளது வீட்டிற்கு கிளம்பி வந்தாள். வழியில் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் அவளால் வீட்டிற்கு வரமுடிய வில்லை. இதனிடையே, அவளுக்கு பிரசவ வலி உண்டானது. தன்னைக் காக்கும்படி திரிசிராநாதரிடம் வேண்டினாள் ரத்னாவதி. அப்போது, சிவன் அவளது தாயின் வடிவில் சென்று, பிரசவம் பார்த்தார்.

காவிரியில் ஒரு வாரம் வரையில் வெள்ளம் ஓடவே, அதுவரையில் சிவன், தாயின் இடத்திலிருந்து அப்பெண்ணிற்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்தார். வெள்ளம் வடிந்தபிறகு, ரத்னாவதியின் தாய் வீட்டிற்கு வந்தாள். அவளது வடிவில் மற்றொருவள் இருந்ததைக் கண்ட, இருவரும் அதிர்ச்சியடைந்தனர். அப்போது சிவன் இருவருக்கும் சுயவடிவில் காட்சி கொடுத்தருளினார். தாயாக இருந்து அருளியதால் இவர், "தாயுமானவர்' என்று பெயர் பெற்றார்.

வாயுபகவான், ஆதிசேஷனுக்கிடைய தங்களில் யார் பெரியவர் என போட்டி வந்தது. ஆதிசேஷனை மீறி, கைலாய மலையை வாயு பகவான் பெயர்ப்பது என அவர்களுக்கு போட்டி வைத்துக்கொண்டனர். அப்போது கைலாயத்தின் ஒரு பகுதி இத்தலத்தில் விழுந்தது. இம்மலையில், மூன்று தலைகளுடைய "திரிசிரன்' என்னும் அசுரன், சிவனை வேண்டி தவமிருந்தான். பல்லாண்டுகள் தவமிருந்தும் சிவன், அவனை சோதிப்பதற்காக காட்சி தரவில்லை. எனவே, அசுரன் தனது இரண்டு தலைகளை அக்னியில் போட்டுவிட்டு, மூன்றாவது தலையையும் போடத்துணிந்தான். அப்போது அவனுக்குக் காட்சி தந்த சிவன், இழந்த இரு தலைகளை மீண்டும் பெற அருள் செய்தார். பின்பு, அசுரனின் வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார்.

அசுரனின் பெயராலேயே, "திரிசிரநாதர்' என்று பெயர் பெற்றார். தலம் "திரிச்சிராமலை' என்று அழைக்கப்பட்டு, திருச்சி என மருவியது.

இத்தலத்தின் சிறப்புகள் ஒன்றா? இரண்டா? நீங்களே படித்துப் பாருங்கள். உங்களுக்கே புரியும்.

  •     இத்தலத்திற்கு தென் கயிலாயம் (தக்ஷிண கைலாசம்) என்றும் பெயருண்டு.
  •     மலையடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகரைத் தொழுதுதான் மலையேற வேண்டும்.
  •     வழியில் நூற்றுக்கால் மண்டபமுள்ளது. தொடர்ந்து ஏறிச் சென்றால் மலையின் நடுவிடத்தில் தாயுமானவர் திருக்கோயில் உள்ளது.
  •     மலையின் உச்சியில் "பிள்ளையார் " உச்சிப் பிள்ளையார் கோவில் உள்ளது.
  •     தாயுமானப் பெருமானைக் காண 258 படிகளைக் கடந்து செல்ல வேண்டும்.
  •     சந்நிதியில் சம்பந்தரின் பதிகம் சலவைக் கல்லில் பதிக்கப்பட்டுள்ளது.
  •     தாயுமானவர் இத்தலத்தில் வாழ்ந்தார். இவருடைய குருவே, மௌனகுரு சுவாமிகள்.
  •     சைவ எல்லப்ப நாவலர் இத்தலத்திற்குத் தல புராணம் (செவ்வந்திப் பிராணம்) பாடியுள்ளார்.

    கோயில்களில் சிவன் சன்னதிக்கு எதிரில்தான் கொடிமரம் இருக்கும். ஆனால், இக்கோயிலில் சிவனுக்கு பின்புறம் கொடிமரம் இருக்கிறது. முன்பு இக்கோயிலில் சிவன் சன்னதி, கிழக்கு திசையை நோக்கி இருந்தது. எனவே, பிரதான வாசலும், கொடிமரமும் கிழக்கு திசையில் அமைக்கப்பட்டது. சாரமா முனிவருக்காக, மன்னனைத் தண்டிக்க சிவன் மேற்கு திசை நோக்கித் திரும்பி விட்டதால், சன்னதி வாசலும், கொடி மரமும் அங்கேயே நிலைத்து விட்டது. சிவனுக்கு பூஜையின்போது சன்னதிக்குப் பின்புறத்தில்தான் (கிழக்கு திசையில்) மேளதாளம் வாசித்து, தேவாரம் பாடுகின்றனர்.





மட்டுவார்குழலி அம்பாள் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவளுக்கு சுகந்த குந்தளாம்பிகை என்றும் பெயருண்டு. வாசனையுடைய கூந்தலை உடையவள் என்பது இதன் பொருள்.கர்ப்பிணிப் பெண்ணின் வீட்டிலிருந்து யாராவது ஒருவர் வந்து, இந்த அம்பிகைக்கு 21 கொழுக்கட்டை, 21 அப்பம் படைத்து, ஒரு துணியில் மஞ்சள், குங்குமம், வெற்றிலையை கட்டி அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள். இதனால், சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.



""ஹே, சங்கர, ஸ்மரஹர! பிரமதாதிநாத
மன்னாத! ஸாம்ப! சசிசூட! ஹா! திரிசூலின்
சம்போ! ஸுகப்ரசவக்ருத! பவ! தயாளோ
ஸ்ரீமாத்ருபூத! சிவ! பாலய! மாம் நமஸ்தே!''

கர்ப்பிணிகள் தாயுமானவர், அம்பிகையை வேண்டி, மேலேயுள்ள ஸ்லோகத்தை தினமும் 3 முறை சொல்லி, வழிபட்டால் சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.


காவிரியின் தென்கரையில் அமைந்த இக்கோயிலில் சிவன், "ராட்சஷ லிங்க' வடிவில் (பெரிய லிங்கமாக) காட்சி தருகிறார். பங்குனி மாதம் 3 நாட்கள் மாலையில் சிவலிங்கம் மீது, சூரிய ஒளி விழுகிறது. இக்கோயிலில் காரணம், காமீகம் என இரண்டு ஆகமப்படி பூஜை நடக்கிறது. சித்திரையில் பிரம்மோற்ஸவம், பங்குனியில் தெப்பத்திருவிழா, ஆடிப்பூரம், நவராத்திரி என இங்கு நான்கு விழாக்கள் கொடியேற்றத்துடன் துவங்கி நடக்கிறது.

தை மாத, விசாகம் நட்சத்திரத்தன்று தாயுமானவர் குருபூஜை நடக்கிறது. சித்திரை பிரம்மோற்ஸவத்தின் போது நாகர், அறுபத்துமூவருக்கு சிவன் காட்சி தரும் வைபவம் விமரிசையாக நடக்கிறது. தமிழ் மாத பிறப்பு, அமாவாசை ஆகிய நாட்களில் சுவாமி புறப்பாடாகிறார்.

இங்கு தாயுமான சுவாமிகள் என்ற ஒரு மகான் எழுந்தருளி உள்ளார், அவரது வரலாறு கோயிலினுள் அழகிய வண்ண ஓவியங்களாக உள்ளது. உங்கள் பார்வைக்கு தருகின்றோம் 








ஒவ்வொரு ஓவியமும் அற்புதமாக அழகோட்டமாய் உள்ளது. கண்களில் ஒற்றிக் கொள்ளலாம் என்று இருந்தது. மேலும் உங்கள் பார்வைக்கு அறிய தருகின்றோம்.










 இது போன்ற ஓவியங்களை நாம் அண்மையில் எந்தக் கோயிலிலும் கண்டதில்லை. இது உண்மை..வெறும் புகழ்ச்சி இல்லை. இவற்றைக் காண்பதற்காகவே ஒரு முறை சென்று வரலாம். ஏற்கனவே தாயுமானவர் பற்றி சிறிது உரைத்துள்ளோம். இந்த கோயிலுக்கு நீங்கள் சென்றால், மலையடிவார மாணிக்க விநாயகர், எம் பெருமானாய் தாயுமானவர், மகான் தாயுமானவர், உச்சி பிள்ளையார் கோயில் என ஒன்றுள் பலவாய், பலவற்றுள் ஒன்றாய் உள்ள தரிசனம் பெற முடியும். ஏகப்பட்ட கண்கவர் கலைவண்ணங்களை கருத்தாய் கவரவும் முடியும்.

- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

மீள்பதிவாக :-

பாடல் பெற்ற தலங்கள் (2) - திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில் - http://tut-temple.blogspot.com/2018/06/2.html

பாடல் பெற்ற தலங்கள் (1) - திருநெடுங்களம் - http://tut-temple.blogspot.com/2018/05/1.html

No comments:

Post a Comment