Subscribe

BREAKING NEWS

05 June 2018

பாடல் பெற்ற தலங்கள் (2) - திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில்

அனைவருக்கும் வணக்கம்.

பாடல் பெற்ற தலங்கள் என்ற தொடர்பதிவில் அனைவரையும் இங்கே சந்திப்பதில் மகிழ்ச்சி. இதற்கு முந்தைய பதிவில் திருநெடுங்களம் பற்றி பார்த்தோம்.இதோ மீண்டும் திருச்சி திருவெறும்பூர் திருத்தலம் பற்றி காண இருக்கின்றோம்.

திருவெறும்பூர் என்று தற்போது அழைக்கப்பெறும் திருஎறும்பியூர் தமிழ் நாட்டின் பெரும் நகரங்களுள் ஒன்றான திருச்சிராப்பள்ளியிலிருந்து தஞ்சை செல்லும் பாதையில் 13 கி.மீ தொலைவில் உள்ள ஒரு சிவத்தலமாகும். திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில் திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது திருச்சி மாவட்டத்தில்அமைந்துள்ளது. இக்கோவில் ஒரு சிறு குன்றின் மீது உள்ளது. இந்திரனும் தேவர்களும் எறும்பு வடிவங் கொண்டு வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள ஏழாவது சிவத்தலமாகும்.




திருநெடுங்களம் தரிசனம் முடித்து திருச்சி நோக்கி திரும்பி வரும் வழியில் மலை மேல் கோயில் உள்ளதே என்று கண்டு, அங்கே சென்றோம். குன்றின் மேல் நாம் குமரனை தான் தரிசித்து உள்ளோம். மலை தரிசனம் வேறு, குன்று தரிசனம் வேறு; குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்: மலை இருக்கும் இடமெல்லாம் மகேஸ்வரன் இருக்கும் இடம். அந்த வகையில் குன்றில் மகேஸ்வரன் தரிசனம்.

இக்கோயிலின் தலபுராணம் கீழ்க்கண்டவாறு வழங்கப்படுகின்றது

தாரகாசுரன் என்ற அரக்கனின் காரணமாக தேவர்கள் மிகவும் துன்பப்பட்டனர். அவர்கள் நாரதரிடம் சென்று தாரகாசுரன் கொடுமைகளில் இருந்து மீள வழி சொல்லும்படி வேண்டினர். நாரதர் திருச்சிராப்பள்ளி அருகே உள்ள இத்தலத்திற்குச் சென்று சிவபெருமானை வழிபட்டு அவரிடம் முறையிடும்படி ஆலோசனை கூறினார். தேவர்களும் அதன்படி இங்கு வந்து அசுரன் கண்ணில் படாமல் இருக்க எறும்பு உருவம் எடுத்து இறைவனை வழிபட்டு வந்தனர். அச்சமயம் லிங்கத் திருமேனி மிகவும் வழுவழுப்பாக இருக்க எறும்பு உருவில் இருந்த தேவர்கள் அதன் மீதேறி இறைவனை வழிபட மிகவும் சிரமப்பட்டனர். இறைவன் அவர்கள் சிரமத்தைப் பார்த்து தன் லிங்க உருவை ஒரு எறும்புப் புற்றாக மாற்றிக் கொண்டார். எறும்புகள் மேலேறிப் பூசை செய்வதற்கு வசதியாகச் சொரசொரப்பான திருமேனியுடையவரானார். இதன் காரணமாக இத்தலம் எறும்பியூர் என்றும் இறைவன் எறும்பீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.





                                                         கோயிலின் நுழைவாயில் 



எறும்புகளுக்கும் அருள் ஈந்த ஈஸ்வரன் எழுந்தருளிய இடமாதலால், இத்தலம் எறும்பியூர் எனப்பட்டது.





இத்தலத்தில் ஆலயம் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்திருக்கிறது. கல்லில் வெட்டப்பட்டுள்ள சுமார் 125 படிகளின் மீதேறி ஆலயத்தை அடையலாம். கருவறை முற்றும் கற்களால் கட்டப்பட்டுள்ளது. கோவிலின் நுழைவு வாயில் வடக்கு திசையில் உள்ளது. இரண்டு பிரகாரங்கள் உள்ளன. கருவறை நுழை வாயிலின் இருபுறமும் விநாயகர், முருகன் ஆகியோரின் உருவச் சிலைகள் உள்ளன. கருவறை உள்ளே மூலவர் எறும்பீஸ்வரர் கிழக்கு நோக்கி காணப்படுகிறார். மூலலிங்கம் மண்புற்றாக உள்ளதால் நீர் படாமல் பாதுகாக்கப்படுகிறது. சிவலிங்கத் திருமேனி சற்று சாய்ந்தும், மேற்புறம் சொரசொரப்பாகவும் காணப்படுகிறது. கோஷ்ட மூர்த்தங்களாக, நர்த்தன விநாயகர், அழகான தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர் இருக்கும் இடத்தில் சங்கர நாராயணர் உருவம், விஷ்ணு, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. நவக்கிரக சந்நிதியில் சூரியன் திருவுருவம் இருமனைவியரோடும் நடுவில் உள்ளது. பைரவர் உள்ளார். இறைவி நறுங்குழல் நாயகியின் சந்நிதி வெளிப் பிரகாரத்தில் தெற்கு நோக்கி உள்ளது. உட்பிரகாரத்தில் சோமச்கந்தர், முருகன், கஜலக்ஷ்மி, காசி விஸ்வநாதர், லக்ஷ்மி, பைரவர் ஆகியோரின் உருவச் சிலைகள் காணப்படுகின்றன. பிரம்மா, இந்திரன், அக்னிதேவன், முருகர், அகத்திய முனிவர், நைமிச முனிவர் ஆகியோர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர்.



இக்கோவிலின் தலவிருட்சமாக வில்வமும், தீர்த்தமாக கோவில் எதிரில் உள்ள பிரம தீர்த்தமும் விளங்குகிறது.பிரம தீர்த்த மேலே உள்ள படங்களில் இணைத்துள்ளோம்.







சுமார் 125 படிகளில் மேலே ஏறி, கோயிலை அடைந்து விட்டோம். என்ன ஒரு ரம்மியமான காட்சி. எப்படி நம் மூதாதையர்கள் இது போன்ற இடங்களில் கோயிலை கட்டி வைத்து வாழ்ந்துள்ளார்கள் என்பது பிரமிப்பாய் இருந்தது. எப்படி கற்கள்,மணல் போன்ற பொருட்களை கொண்டு சென்றிருப்பார்கள்..நினைக்கும் போதே மலைக்க தோன்றுகின்றது.

அந்த இறைவன் வாழும் இடம், ஆன்மா லயப்படும் இடம் என்பதை நாம் உணர்ந்தோம். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.  லிங்கம் இடப்புறத்தில் சாய்ந்தபடி இருக்க, மத்தியில் ஒரு பிளவு இருக்கிறது. பார்வைக்கு லிங்கம் இரண்டு பகுதிகளாக பிரிந்திருப்பது போல இருக்கிறது. இதில் வலப்புறம் உள்ள பகுதியை சிவன் அம்சம் என்றும், இடப்புறத்தை அம்பாள் அம்சம் என்றும் சொல்கின்றனர். இந்த லிங்கத்திற்கு "சிவசக்தி லிங்கம்' என்ற பெயரும் உண்டு. சிவமும், சக்தியும் ஒன்று என்பதை இந்த வடிவம் உணர்த்துகிறது. தினமும் சுவாமிக்கு பூஜைகள் நடக்கும்போது கருவறையில் எறும்புகள் வரிசையாக ஊர்ந்து சென்று, நைவேத்தியப் பொருட்களை எடுத்துக்கொள்ளுமாம். இதனை சிவனே எறும்பு வடிவில் வருவதாக சொல்கிறார்கள்.





இதோ கோயிலினுள் உள்ளே செல்ல இருக்கின்றோம். 



தரிசித்து விட்டு, ஒரு சுற்று சுற்றினோம். கோயிலில் உள்ள ஒரு மணம் நம்மை தழுவியது. நம் புறம் மட்டுமல்ல, அகமும் ஆனந்தம் அடைந்தது.









திருநாவுக்கரசர் இத்தலத்து இறைவன் மேல் இரண்டு பதிகங்கள் பாடியருளியுள்ளார். கீழே உள்ள இப்பதிகம் 6-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. மற்றொரு பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

பன்னியசெந் தமிழறியேன் கவியேன் மாட்டேன்
எண்ணோடு பண்ணிறைந்த கலைக ளாய
தன்னையுந்தன் றிறத்தறியாப் பொறியி லேனைத்
தன்றிறமு மறிவித்து நெறியுங் காட்டி
அன்னையையும் அத்தனையும் போல அன்பாய்
அடைந்தேனைத் தொடர்ந்தென்னை யாளாக் கொண்ட
தென்னெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

பளிங்கினிழ லுட்பதித்த சோதி யானைப்
பசுபதியைப் பாசுபத வேடத் தானை
விளிந்தெழுந்த சலந்தரனை வீட்டி னானை
வேதியனை விண்ணவனை மேவி வையம்
அளந்தவனை நான்முகனை அல்லல் தீர்க்கும்
அருமருந்தை ஆமா றறிந்தென் னுள்ளந்
தெளிந்தெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

கருவையென்றன் மனத்திருந்த கருத்தை ஞானக்
கடுஞ்சுடரைப் படிந்துகிடந் தமர ரேத்தும்
உருவையண்டத் தொருமுதலை யோத வேலி
உலகினிறை தொழிலிறுதி நடுவாய் நின்ற
மருவைவென்ற குழன்மடவாள் பாகம் வைத்த
மயானத்து மாசிலா மணியை வாசத்
திருவெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

பகழிபொழிந் தடலரக்கர் புரங்கள் மூன்றும்
பாழ்படுத்த பரஞ்சுடரைப் பரிந்து தன்னைப்
புகழுமன்பர்க் கின்பமரும் அமுதைத் தேனைப்
புண்ணியனைப் புவனியது முழுதும் போக
உமிழுமம்பொற் குன்றத்தை முத்தின் றூணை
உமையவள்தம் பெருமானை இமையோ ரேத்துந்
திகழெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

பாரிடங்க ளுடன்பாடப் பயின்று நட்டம்
பயில்வானை அயில்வாய சூல மேந்தி
நேரிடும்போர் மிகவல்ல நிமலன் றன்னை
நின்மலனை அம்மலர்கொண் டயனும் மாலும்
பாரிடந்தும் மேலுயர்ந்துங் காணா வண்ணம்
பரந்தானை நிமிர்ந்துமுனி கணங்க ளேத்துஞ்
சீரெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

கார்முகிலாய்ப் பொழிவானைப் பொழிந்த முந்நீர்
கரப்பானைக் கடியநடை விடையொன் றேறி
ஊர்பலவுந் திரிவானை ஊர தாக
ஒற்றியூ ருடையனாய் முற்றும் ஆண்டு
பேரெழுத்தொன் றுடையானைப் பிரம னோடு
மாலவனும் இந்திரனும் மந்திரத்தா லேத்துஞ்
சீரெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

நீணிலவும் அந்தீயும் நீரும் மற்றை
நெறியிலங்கு மிகுகாலும் ஆகா சமும்
வாணிலவு தாரகையும் மண்ணும் விண்ணும்
மன்னுயிரும் என்னுயிருந் தானாஞ் செம்பொன்
ஆணியென்றும் அஞ்சனமா மலையே யென்றும்
அம்பவளத் திரளென்றும் அறிந்தோ ரேத்துஞ்
சேணெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

அறந்தெரியா ஊத்தைவாய் அறிவில் சிந்தை
ஆரம்பக் குண்டரோ டயர்த்து நாளும்
மறந்துமரன் திருவடிகள் நினைய மாட்டா
மதியிலியேன் வாழ்வெலாம் வாளா மண்மேற்
பிறந்தநாள் நாளல்ல வாளா வீசன்
பேர்பிதற்றிச் சீரடிமைத் திறத்து ளன்பு
செறிந்தெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

அறிவிலங்கு மனத்தானை அறிவார்க் கன்றி
அறியாதார் தந்திறத்தொன் றறியா தானைப்
பொறியிலங்கு வாளரவம் புனைந்து பூண்ட
புண்ணியனைப் பொருதிரைவாய் நஞ்ச முண்ட
குறியிலங்கு மிடற்றானை மடற்றேன் கொன்றைச்
சடையானை மடைதோறுங் கமல மென்பூச்
செறியெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

அருந்தவத்தின் பெருவலியா லறிவ தன்றி
அடலரக்கன் றடவரையை யெடுத்தான் றிண்டோள்
முரிந்துநெரிந் தழிந்துபா தாள முற்று
முன்கைநரம் பினையெடுத்துக் கீதம் பாட
இருந்தவனை ஏழுலகு மாக்கி னானை
எம்மானை கைம்மாவி னுரிவை போர்த்த
திருந்தெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.







பின்பு அம்மனின் அருள் பெற்றோம், சௌந்தரநாயகி, நறுங்குழல் நாயகி, மதுவனேஸ்வரி என்றெல்லாம் அழைக்கப்படும் தாயின் அருளில் திளைத்தோம் என்றே சொல்ல வேண்டும். இந்த மலை உச்சியில் எப்படி மரங்கள் வளர்கின்றன? எல்லாம் அவன் செயல் அன்றோ? அவன் நினைத்தால் பாறையிலும் மரம் வளரும். என்ன தவம் செய்தார்களோ..இங்கே பிறப்பெடுத்து இருக்கின்றார்கள் என்று நாம் நினைத்தோம். நீங்களே பாருங்கள்.  தன் வேர் பரப்பி, தன் இருப்பை உறுதி செய்யும் அழகிலே இது தெரிகின்றது.








இது போன்ற பண்டைய கால ஆலயங்களில் , சுவரின் மேலே நந்தியின் அழகை கண்டு உள்ளீர்களா? சும்மா ஏனோ தானோ என்று ஆலயமே சென்றால் நம் கண்களுக்கு இவை தெரியாது. நன்கு மனதை செம்மைப்படுத்தி, அகத்தையும்,புறத்தையும் ஒரே நேர்கோட்டில் ஒன்றி செல்லுங்கள், அவன் அருள் கிடைக்கும்.இது போன்ற நிலைகளும் தெளிவு பெறும். முதலில் ஆலயங்களுக்கு செல்லும் போது பேச்சை குறையுங்கள். பேச்சை குறைத்தாலே பாதி வேலை முடிந்து விடும். பின்னர் அவனே நம்மை ஆட்டுவிப்பான். அட..ஆடு..




கீழே இறங்கி வரும் போது ஆடுகளைக் கண்டோம். ஒன்றும் வாங்காது சென்று விட்டோம். அடுத்த முறை ஆலயத்திற்கு என செல்லும் போது  உணவு பொருட்களை குறைந்த பட்சம் வாழைப்பழம் போன்ற கனிகளைக் கொண்டு செல்ல முடிவு செய்திருக்கின்றோம்.

  • முற்றிலும் கற்களால் அமைக்கப்பட்ட கருவறை கொண்டது இத்தலம்.
  • மூலவர் லிங்கம் மண்புற்று வடிவில் அமைந்துள்ளது எனவே நேரடியாக அபிசேகம் செய்யாமல், நீர்புகாதவாறு கவசம் பொருத்திய பின் அபிசேகம் செய்யப்படுகின்றது.
  • வடபுறம் சாய்மானமாக உள்ள ஈசன் திருமேனி (எறும்புகள் ஊற இயலும் வண்ணம்) மேற்புறம் சொரசொரப்பாகவும் உள்ளது. சிவலிங்கத்தின் மீது எறும்புகள் ஊர்ந்த அடையாளங்களைக் காணலாம்.
  • இத்தலம், மும்மூர்த்திகளில் சிவன் தவிர்த்த இருவரான திருமால் மற்றும் பிரம்மா வழிபட்ட சிறப்புடைய தலம்.
  • இந்திரன் முதலான தேவர்களும் அகத்தியர் நைமிச முனிவர் ஆகிய முனிவர்களும் இத்தலத்தின் சிறப்பறிந்து இங்கு வழிபட்டனர்.
  • இது ஒரு பாடல் பெற்ற தலம். சிறப்பு மிக்க சிவனடியாரான திருநாவுக்கரசர், இப்பெருமானின் சிறப்புக்களை ஐந்தாம் திருமுறையில் பாடியருளியுள்ளார்.
  • இக்கோயிலில் சூரியானரின் திருவுரு நவக்கிரக சந்நிதியில் தமது இரு மனைவியரோடும் காட்சி தருவதாக அமைந்துள்ளது.
  • திருச்சி மலைக் கோட்டையில் திரிசிரன் வழிபட்டதைப் போன்று, அவனது சகோதரனான கரன் இங்கு எறும்பு உருக்கொண்டு வழிபட்டதாகக் கூறுவதுமுண்டு.

கீழே இறங்கி வந்து ,சாஷ்டாங்கமாக வணங்கி, அங்கிருந்து விடை பெற்றோம். இந்த  தலம் வரலாற்றுச் சிறப்பும் பெற்றது.


- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

மீள்பதிவாக:-

பாடல் பெற்ற தலங்கள் (1) - திருநெடுங்களம் - http://tut-temple.blogspot.com/2018/05/1.html


No comments:

Post a Comment