Subscribe

BREAKING NEWS

02 April 2018

வேலை வணங்குவதே நம் வேலை!

 வேலும் மயிலும் சேவலும் துணை என தொடங்கும் இந்த பதிவில் நாம் வேல் விருத்தம் பற்றி அறிய உள்ளோம். ஏற்கனவே இணையக் கடலில் உள்ள வேல் விருத்தத்தை ஒரே பதிவில் இங்கு அளிக்கின்றோம். முருகன் அருள் முன்னிற்க ... மேலும் பல தகவல்கள் கிடைத்தால் அவற்றை மேலும் அறிய தருகின்றோம். முருகன் என்றாலே வேலும்,மயிலும்,சேவலும் நம் நினைவிற்கு வருகின்றது அல்லவா? இந்த பதிவில் வேலை வணங்குவோம்.

வேலனே வேல், வேலே வேலன்: வேற்பூசையே குகன் பூசையாகும் என்று  வேல்அலங்காரம் கூறுகின்றது. கிருபானந்த வாரியார் இன்னும் ஒருபடி மேலே போய் வேலே ஞானம், ஞானமே வேல் என்று கூறுகின்றார். அறிவே உருவானது கந்தன் திருவடி; அறிவை அறியச் செய்வது வேல். அறிவு எப்படி இருக்க வேண்டும்? ஆழமாக, அகன்று, கூர்மையாக இருக்க வேண்டும்.அதே போல் தான் வேல் இருக்கின்றது. வேலின் அடிப்பகுதி ஆழமாக அமைந்துள்ளது.வேலின் இடைப்பகுதி விசாலமாக விளங்குகிறது.வேலின்நுனிப்பகுதி கூர்மையாகத் திகழ்கிறது.

அறியாமை இருள் அகற்றி அறிவொளி அருள்வது வேலாகிய திருவருட்சக்தியாகும். வேல் கொண்டு சூரனை சூரசம்ஹாரம் செய்தார் முருகன். வேல் அழிக்ககூடிய ஆயுதம் மட்டுமல்ல. அது யாவற்றையும் அளிக்கக்கூடிய திருவருட்சக்தி. அறிவை அறியச் செய்யும் அறிவாய் உள்ள திருவருளின் உருவமே பராசக்தி. பராசக்தியே வேல்வடிவமாகக் குமரன் மேவியிருப்பதாயிற்று. 


வேல் விருத்தம்


முருகப் பெருமானின் கை வேலின் புகழ் கூறுவதை மையமாக வைத்து அருணகிரிநாதர் பாடியது வேல் விருத்தம் ஆகும். விநாயகர் காப்பு ஒன்றும், 11 ஆசிரிய விருத்தங்களும் கொண்டுள்ளது. இது பன்னிருசீர் கழிநெடிலடி ஆசிரியவிருத்தங்கள் 10 கொண்டு அமைக்கப்பட்டது.



வேல் விருத்தம் - 1

கம்சத்வனி - கண்ட சாபு


மகரம் அளறிடை புரள உரககண பணமவுலி
மதியும் இரவியும் அலையவே

வளரெழிலி குடருழல இமையவர்கள் துயரகல
மகிழ்வு பெறும் அறு சிறையவான்

சிகரவரை மனை மறுகு தொறு ஞுளைய மகளிர் செழு
செனெல்களொடு தரளம் இடவே

ஜகசிர பகிரதி முதல் நதிகள்கதி பெற உததி
திடர் அடைய ஞுகரும் வடிவேல்

தகர மிருகமதம் என மணமருவு கடகலுழி
தரு கவுளும் உறு வள் எயிறுன்

தழை செவியும் ஞுதல்விழியும் உடைய ஒருகடவுள் மகிழ்
தரு துணைவன் அமரர் குயிலும்

குகரமலை எயினர்க்குல மடமயிலும் என இருவர்
குயமொடமர் புரியு முருகன்

குமரன் அறுமுகன் எதிரும் விருது நிசிசரர் அணிகள்
குலையவிடு கொடிய வேலே

(குமரன்விடு கொடிய வேலே அறுமுகவன் விடு கொடிய வேலே)


பெரிய சுறா மீன்கள் சேற்றில் புரளவும், ஆதிஷேசனின் கூட்டமான ஆயிரம் முடிகளின் மேல், சந்திர ஒளியும் சூரிய ஒளியும் சேர்ந்து தாக்கவும் பெரிதாக பரந்திருக்கும் மேகங்களின் உட் பாகம் சுழற்சி அடையவும், தேவர்களின் துன்பம் நீங்கவும், களிப்படைந்த, சிறகுகள் அறுக்கப் பட்ட, மலைகளின் சிகரங்களிலும், வீடுகளிலும், முச்சந்திகளிலும், மலை ஜாதிப் பெண்கள், செழுமையான நெல் தானியங்களுடன் முத்துக்களையும் உரலில் இட்டு குற்றவும், இந்த உலகில் முதன்மை ஸ்தானம் வகிக்கும் கங்கை முதலாகிய மற்ற நதிகள் பழைய படி தங்களுடைய ஓட்டத்தை ஆரம்பிக்கவும், சமுத்திரம் வற்றி மண் திடலாக போகும் படி, அந்த ஜலத்தை எல்லாம் உறிஞ்சிய, கூரிய வேலாயுதம் (அது யாருடையது என வினவினால்) வாசனைச் சாந்து, கஸ்தூரி (இவைகளின்) வாசனை கொண்டு நறு மணம் வீசும், ஊற்றுப் போல் பெருக்கெடுக்கும் மதநீர் தோன்றும், கபோலமும், உறுதியான திண்மை பொருந்திய (பற்கள்) தந்தமும், தழைந்துள்ள இரண்டு காதுகளும், நெற்றிக் கண்ணும், கொண்டு விளங்கும் ஒப்பற்ற விநாயகப் பெருமான், மகிழ்கின்ற சகோதரனும், தேவர்களால் வளர்க்கப்பட்ட குயில் போன்ற இனிய குரலுடைய தேவசேனை, குகைகள் நிறைந்துள்ள மலையின் வசிக்கின்ற, வேடர் குலத்தில் வளர்ந்த அழகிய மயில் போன்ற வள்ளிப் பிராட்டி, என்கிற இரு நாயகிகளின், மார்பகங்களை அணைக்கும், முருகப் பெருமான், பால சுப்ரமணியன், சண்முகன்ஆகிய முருகப் பெருமானை, எதிர்த்து, பல வெற்றிச் சின்னங்களுடன் வந்த, அரக்கர்களின், சேனைகளை, சிதறிப் போகும் படி செய்த, வீரம் மிகுந்த வேலே தான் அது.




வேல் விருத்தம் - 2 

மோகனம் - கண்ட சாபு


வெங்க் காள கண்டர் கை சூலமுன் திருமாயன்
வெற்றிபெறு சுடர் ஆழியும்

விபுதர் பதி குலிசமும் சூரன் குலங்க் கல்லி
வெல்லா எனக் கருதியே

சங்க்ராம நீஜயித்து அருளெனத் தேவரும்
சதுர்முகனும் நின்றிரப்ப

சயிலமொடு சூரனுடல் ஒருனொடியில் உருவியே
தனி ஆண்மை கொண்ட நெடுவேல்

கங்காளி சாமுண்டி வராகி இந்த்ராணி
கெளமாரி கமலாசன

கன்னி நாரணி குமரி த்ரிபுரை பயிரவி அமலை
கெளரி காமாக்ஷி சைவ

சிங்காரி யாமளை பவானி கார்த்திகை கொற்றி
த்ரியம்பகி அளித்த செல்வ

சிறுவன் அறுமுகன் முருகன் நிருதர்க்கள் குலாந்தகன்
செம்பொட்ற்றிருக்கை வேலே

(முருகன் திருக்கை வேலே அறுமுகவன் திருக்கை வேலே)


கொடிய ஆலகால விஷத்தை அடக்கிக் கொண்டிருக்கும் கழுத்தை உடைய சிவ பெருமானின் சூலாயுதமும், திருமாலின் வெற்றிச் சின்னமான ஒளி வீசுகின்ற சக்ராயுதமும், தேவர்களின் தலைவனான இந்திரனின் வஜ்ராயுதமும், சூரபத்மாவின் சுற்றம் முழுவதையும், அடியோடு பெயர்த்து, வெற்றி காணும் திறமை உடையன அல்ல, என்று நினைத்து, 'சிறந்த போர் வீரனே, நீ ஜெயித்து எங்களுக்கு அருள வேண்டும்' என்று, தேவர்களும் பிரம்மனும் வேண்ட, கிரவுஞ்ச மலையையும் சூரபத்மாவின் உடலையும் ஒரே நிமிடத்தில் உருவி அழித்து வெளி வந்த ஒப்பற்ற ஆண்மை கொண்ட நெடிய வேலாயுதம் (அது யாருடையது என வினவினால்) ஊழிகாலத்தில் தேவர்கள் முக்தி அடையும் பொருட்டு அந்த தேவர்களின் எலும்புக் கூட்டை மாலையாக போட்டுக் கொண்டவள், மகிஷாசுரனைக் கொன்று அவனின் எருமைத் தலைமேல் நிற்பவளும், சப்த மாதர்களில் ஒருவளான வராக மூர்த்தியின் சக்தியாக இருப்பவள், இந்திரனின் சக்தியானவள், குமார மூர்த்தியின் சக்தி, தாமரையை ஆசனமாகக் கொண்டிருக்கும் இளமை மாறாத கன்னி, காக்கும் சக்தியாகிய விஷ்ணுரூபிணி, பால்ய பருவத்தினள், மும் மூத்திகளுக்கும் மேலானவள், பைரவரின் சக்தி, மலம் அற்றவள், பொன்னிறமானவள், அடியார்களின் விருப்பங்களை நிறைவேற்றும் கண்களை உடையவள், சிவனுடைய தேவியாகிய பேரழகி, நீல நிறத்தவள், சம்சாரக் கடலை அகற்றுபவள், கார்த்திகை மாதர்களாக வருபவள், யுத்தகளத்திற்கு அதிபதி, முக்கண்ணுடையவள் ஆகிய தேவி, பெற்றருளிய உலகுக்கெல்லாம் முத்திச் செல்வத்தை கொடுக்கும் பாலகன் சண்முகன், ஞானசொரூபி, அரக்கர் குலத்தினை அழித்தருளிய கந்த பிரான், திருக்கையிலே விளங்கும் பொன்னொளி வீசும் அழகிய வேலாயுதமே அதுவாகும்.




வேல் விருத்தம் - 3

சாரங்கா - கண்ட சாபு


வேதாள பூதமொடு காளி காளத்ரிகளும்
வெகுளுறு பசாச கணமும்

வென் கழுகுடன் கொடி பருந்து செம் புவனத்தில்
வெம்பசி ஒழிக்கவந்தே

ஆதார கமடமுங்க் கணபண வியாளமும்
அடக்கிய தடக் கிரியெலாம்

அலைய நடமிடு நெடுன் தானவர் நிணத்தசை
அருந்தி புரந்த வைவேல்

தாதார் மலர்ச்சுவனி பழனிமலை சோலைமலை
தனிப்பரங்க் குன்றேரகம்

தணிகை செந்தூரிடைக் கழி ஆவினங்குடி
தடங்க் கடல் இலங்கை அதனிற்

போதார் பொழில் கதிர்க்காமத் தலத்தினை
புகழும் அவரவர் நாவினிற்

புந்தியில் அமர்ந்தவன் கந்தன் முருகன் குகன்
புங்கவன் செங்கை வேலே

(கந்தங்குகன் செங்கை வேலே முருகன் குகன் செங்கை வேலே)


முருகனின் சேனைகளான வேதாள கணங்களும் பூத கணங்களும், நச்சுப் பற்களை உடைய கொடிய நாக சர்ப்பங்களும், பசியால் சினங் கொண்டிருக்கும், பிசாசு கூட்டங்களும், கொடிய பருந்துகள், காக்கைகள், பருந்துகள் (இவைகளுடன்), செழிப்பான இவ்வுலகத்தில், கொடிய பசியைத் தீர்க்கும்படி போர்க் களத்தில் எழுந்தருளி, உலகத்தைத் தாங்கிக் கொண்டிருக்கும் கூர்ம ராஜனும், கூட்டமான படங்களை உடைய ஆதிஷேசனும், தாங்கி இருக்கும், பரந்த மலைகளில் எல்லாம், அங்கும் இங்கும் நடந்துகொண்டு துன்பத்தை விளைவித்த, பெரிய வடிவுள்ள அரக்கர்களின், கொழுப்பையும் மாமிசத்தையும், உணவாகக் கொண்டு, உலகத்தை எல்லாம் காப்பாற்றி அருளிய, கூரிய வேல், (அது எது என வினவினால்) மகரந்தப் பொடிகள் நிறைந்துள்ள பூஞ்சோலைகள் அருவிகள் விளங்கும், பழநி மலை, பழமுதிர்ச்சோலை, ஒப்பற்ற திருப்பரங்குன்றம், சுவாமி மலை, திருச்செந்தூர், திருவிடைக்கழி, திருவாவினன் குடி, பெரிய கடல் சூழ்ந்த இலங்கைத் தீவில், மலர்கள் நிறைந்த பூங்காக்கள் உள்ள, கதிர்காமப் பதியை, விரும்பித்துதிக்கின்ற அடியார்களின், நாவிலும், சித்தத்திலும், வீற்றிருக்கும், கந்தக் கடவுள், முருகப் பெருமான், குகன், புனித மூர்த்தியின், அழகிய வேலாயுதமே அது.




வேல் விருத்தம் - 4

மனோலயம் - ஆதி


அண்டர் உலகும் சுழல எண்திசைகளும் சுழல
அங்கியும் உடன் சுழலவே

அலைகடல்களும் சுழல அவுணர் உயிரும் சுழல
அகில தலமும் சுழலவே

மண்டல நிறைந்த ரவி சதகோடி மதி உதிர
மாணப் பிறங்கி அணியும்

மணி ஒலியினிற் சகல தலமு மருள சிரம
வகை வகையினிற் சுழலும் வேல்

தண்டம் உடனுங்க் கொடிய பாசம் உடனுங்க் கரிய
சந்தம் உடனும் பிறைகள்போல்

தந்தமுட ஞும் தழலும் வெங்கண் உடனும் பகடு
தன்புறம் வரும் சமனை யான்

கண்டு குலையும் பொழுதில் அஞ்ஜலென மெஞ்சரண
கஞ்ஜம் உதவும் கருணைவேள்

கந்தன் முருகன் குமரன் வண்குறவர் தம்புதல்வி
கணவன் அடல் கொண்ட வேலே

(கந்தன் அடல் கொண்ட வேலே
முருகன் அடல் கொண்ட வேலே)


வேல் வருகின்ற வேகத்தினால் நடந்தவைகள். தேவலோகம் சுழற்சி அடையவும், எட்டு திசைகளும் நிலை தடுமாறி சுற்றவும், எல்லாவற்றையும் நீறாக்கக் கூடிய அக்னி தேவனும் சுற்றவும், அலை வீசும் சமுத்திரம் கொதிப்படைந்து கொந்தளிக்கவும், அசுரர்களின் உயிர்கள் தமக்கு முடிவு காலம் வந்து விட்டதே என எண்ணி பதட்டத்தினால் சுற்றவும், எல்லா பிரபஞ்சமும் சுழலவும், வட்ட வடிவமாயுள்ள ஆயிரம் கோடி சூரியர்கள் போலவும், ஆயிரம் கோடி சந்திரர்கள் போலவும் (விளங்கிக் கொண்டு), அசுரர்களின் குருதி ஏராளமாக பெருக, தான் பூஷணமாக அணிந்திருக்கும் மணிகளின் சப்தத்தால் எல்லா உலகங்களும் மருட்சி அடையவும், ஆயுதப் பயிற்சியை படையில் பலவித நடைகளுடன் சுழன்று வருகின்ற வேலர்யுதம் (அது யாருடையது என வினவினால்) தண்டாயுதத்துடனும், கொடுமையான பாசக் கயிற்றுடனும், கருத்த நிறத்துடனும், சந்திர பிறை போல் வளைந்த கோரப் பற்களுடனும், தீக் கொப்புளிக்கின்ற கொடிய கண்களுடனும், எருமைக் கடாவில் ஏறி வரும், எமனை, நான் பார்த்து அச்சப்பட்டு நடுங்கும் போது, பயப்படாதே என்று, தன்னுடைய மிருதுவான தாமரை மலரன்ன திருவடித் தாமரையை தந்தருளும் கருணாமூர்த்தி, கந்தப் பெருமான், முருகப் பெருமான், குகப் பெருமான் வளப்பமான வாழ்க்கையை உடைய வேடர்களின், புத்திரியான வள்ளிப் பிராட்டியின், மணாளன், மிகவும் வளமையான வேலாயுதமே அது




வேல் விருத்தம் - 5 

பாகேஸ்ரீ - கண்ட சாபு


ஆலமாய் அவுணருக் அமரருக் அமுதமாய்
ஆதவனின் வெம்மை ஒளிமீது

அரியதவ முனிவருக் இந்துவில் தண்ணென்ற்
அமைந்த் அன்பருக்கு முற்றா

முலமாம் வினை அறுத் அவர்கள் வெம் பகையினை
முடித் இந்திரர்க்கும் எட்டா

முடிவில் ஆனந்த நல்கும் பதம் அளித் எந்த
முதண்டமும் புகழும் வேல்

ஏலமா யானையின் கோடதிற் சொரிமுத்தும்
இன்பணைகள் உமிழு முத்தும்

இனிவாடை மான் மதம் அகிலோடு சந்தனம்
இலவங்க நறவமாருன்

தாலமா மரமுதற் பொருள் படைத் திடும் எயினர்
தரு வனிதை மகிழ்னன் ஐயன்

தனினடம் புரி சமர முருகன் அறுமுகன் குகன்
சரவணக் குமரன் வேலே

(முதண்ட மும்புகழும் வேல்
சரவணக் குமரன் வேலே)


பகைவர்களாகிய அரக்கர்களுக்கு ஆலகால விஷத்தைப் போல் நின்று அவர்களை அழித்தும், (தன்னைத் துதித்த) தேவர்களுக்கு அமிர்தம் போல் புத்துயிர் கொடுப்பதாயும், சூரியனின் தேஜசை மீறியுள்ள வகையில், செயற்கரிய தவம் செய்து தவக்கினியால் ஜொலிக்கும் ரிஷிகளுக்கு, சந்திரனின் குளிர்ச்சியைப்போல் அவர்களின் தவ வெப்பத்தை சமப்படுத்துவதாய் அமைந்து, தன்னைத் துதிக்கும் அடியவர்களுக்கு, எப்பொழுதும் முற்றுப் பெறாத வகையில் மீண்டும் மீண்டும் கிளம்பி எழும் சஞ்சித பிராப்த வினைகளை அடியோடு ஒழித்து, அந்த அன்பர்களின் அகப்பகை புறப்பகை இரண்டையும் அடியோடு ஒழித்து, தேவர்களுக்குகூட கிடைப்பதற்கு அரிய அழிவில்லாத பேரின்பமாகிய சாயுச்ய பதவியைக் கொடுத்து, எல்லா அண்டங்களும் போற்றும் வேலாயுதம் (அது யாருடையது என வினவினால்) பொருந்தி இருக்கும் பெரிய யானைத் தந்தத்திலிருந்து உயிர்கின்ற முத்துக்களையும், இனிய மூங்கில்களில் இருந்து விழும் முத்துக்களையும், இனிய மணம் வீசும் கஸ்தூரி, அகில், சந்தனம், இலவங்கம் (கிராம்பு), தேன், இவைக¨ள் எல்லாவற்றையும், பனை, மா முதலிய மரங்களையும், தனது சொத்துக்களாக கொண்டிருக்கும், வேடர்களால் வளர்க்கப் பட்ட வள்ளி நாயகியுடன், மகிழ்ந்து மணந்த பெருமான், போர்க் களத்தில் ஒப்பற்ற நடனம் புரிந்த முருகன், ஆறுமுகன், குகன், ஸரவணபவன், குமாரக் கடவுளின், வேலாயுதமே



வேல் விருத்தம் - 6 

சிந்துபைரவி - கண்ட சாபு


பந்தாடலிற் கழங்க் காடலிற் சுடர் ஊசல்
பாடலினொ டாடலின் எலாம்

பழந்தெவ்வர் கட்கம் துணித் இந்திரர்க் அரசு
பாலித்த திறல் புகழ்ந்தே

சந்தாரு நாண்மலர் குழல் அரம்பையர்களும்
சசிமங்கை அனையர்த்தாமுன்

தன்னை அன்பொடு பாடி ஆடும் ப்ரதாபமும்
தலைமையும் பெற்ற வைவேல்

மந்தாகினித் தரங்க சடிலருக் அரிய
மந்த்ற்ற உபதேச நல்கும்

வரதேசிகன் கிஞ்சுகச் சிகா லங்கார
வாரணக் கொடி உயர்த்தோன்

கொந்தார் மலர்க் கடம்பும் செச்சை மாலையும்
குவளையும் செங்க் காந்தளும்

கூதாள மலரும் தொடுத்தணியு மார்பினன்
கோலத் திருக்கை வேலே

(தேசிகன் கோலத் திருக்கை வேலே)


பல விதமான பந்து ஆட்டங்களிலும், கழச்சிக் காய் ஆட்டங்களிலும், ஒளி வீசுகின்ற ஊஞ்சல் பாடலினோடு, மற்ற கும்மி கோலாட்டம் போன்ற ஆட்டங்களில் எல்லாம், பழைய பகைவர்களான அசுரர்களின் வாளையும் வீரத்தையும் அடக்கி, தேவேந்திரனுக்கு மீண்டும் அரசாட்சியைக் கொடுத்த திறமையைப் புகழ்ந்து, அழகு மிகுந்த புதிய மலர் மாலையை கூந்தலில் அணிந்திருக்கும் ரம்பை, ஊர்வசி, திலோத்தமை போன்ற தேவ மாதர்கள், இந்திராணி, அன்னையர் (முருகனைப் பெற்றெடுத்த கெளரி, கங்கை, கார்த்திகைமார்கள் அனைவரும்), தன்னை அன்போடு புகழ்ந்து பாடி நடனம் புரிகின்ற கீர்த்தியையும், ஆதிபத்யத்தையும், தன்னகத்தே பெற்ற கூரிய வேலாயுதம் (அது யாருடையது என வினவினால்) அலை வீசும் கங்கையை ஜடா முடியில் தரித்திருக்கும் சிவ பெருமானுக்கு, கிடைத்தற்கரிய பிரணவ உபதேசம் செய்த, சிறந்த ஆச்சார்ய மூர்த்தியும், சிவந்த நிறமுள்ள அழகான கொண்டையை உடைய, சேவற் கொடியை உயர்த்தி பிடித்திருப்பவனும், பூங்கொத்துக்கள் நிறைந்த கடப்ப மாலையையும் இருவாச்சி மாலையையும், நீலோர்பலமும் காந்தள் பூவையும், நீலச் சங்கு புஷ்பத்தையும், மாலையாகத் தொடுத்து அணிந்திருக்கும் திருமார்பினை உடைய முருகப் பெருமானின், அழகியத் திருக் கரத்தில் வீற்றிருக்கும் வேலாயுதமே!




வேல் விருத்தம் - 7

பீம்பளாச் - கண்ட சாபு


அண்டங்கள் ஒருகோடி ஆயினுங்க் குலகிரி
அனதமாயினு மேவினால்

அடைய உருவிப் புறம் போவதல் லது தங்கல்
அறியாது சூரனுடலை

கண்டம் படப்பொருது காலனுங்க் குலைவுறுங்க்
கடியகொலை புரியும் அது செங்க்

கனகா சலத்தைக் கடைந்து முனை யிட்டு
கடுக்கின்ற துங்க நெடுவேல்

தண்டன் தனுத் திகிரி சங்கு கட்கம் கொண்ட
தானவான் தகன் மாயவன்

தழல்விழிக் கொடுவரிப் பருவுடற் பற்றலை
தமனியச் சுடிகையின் மேல்

வண்டொன்று கமலத்து மங்கையும் கடல் ஆடை
மகையும் பதம் வருடவே

மதுமலர்க் கண்துயில் முகுந்தன் மருகன் குகன்
வாகைத் திருக்கை வேலே

(வாகைத் திருக்கை வேலே
குகன் வாகைத் திருக்கை வேலே)


கோடிக்கணக்கான உலகங்கள் எதிரே நின்றாலும், கணக்கில்லாத பெரிய மலைகள் எதிரே நின்றாலும், அவைகள் எதிர்த்தால், அவற்றிக்குள் நுழைந்து போய், பின்புறமாக வெளியே போவது அன்றி, தான் எடுத்துக்கொண்ட காரியத்தை முடிக்காமல் தங்கி நின்றது என்கிற சரித்திரமே இல்லாது, சூரபத்மாவின் தேகத்தை, போரில் துண்டு துண்டு¡க வெட்டி, எமனும் அச்சப்படும் வண்ணம், போர்களத்தில் கொடூரமான கொலைகளைச் செய்வதும், பொன் மயமான மேருமலையைக் கடைந்தது போல், கூரிய முனைபடைத்து, கோபம் கொண்டுள்ள, பரிசுத்தமான நெடிய வேல் (அது யாருடையது என வினவினால்) கெளமோதகி என்கிற கதை, சார்ங்கம் என்கிற வில், சுதர்சனம் சக்கரம், பாஞ்சசன்யம் என்கிற சங்கு, நாந்தகம் என்கிற வாள் (இந்த பஞ்ச ஆயுதங்களைக் கொண்டவனும்), அசுரர்களுக்கு எமன் போன்றவனும், மாயாரூபனும், நெருப்பைப்போல் எரியும் கண்கள், வளைந்த கோடுகள், பருத்த உடல், ஆயிரம் தலைமுடிகள் கொண்ட ஆதிசேடனின் பொன்நிறமான, படுக்கையின் மேல், வண்டுகள் மொய்க்கும் செந்தாமரையில் வாசம் செய்யும் ஸ்ரீதேவியும், கடலை ஆடையாகத் தரித்துள்ள பூ தேவியும், தன் திருப்பாதங்களை வருடிக் கொடுக்க, தேன் சிந்தும் தாமரை போன்ற அழகான கண்களை மூடிக் கொண்டு தூங்குகின்ற, மஹாவிஷ்ணுவின் மருமகனும், குக மூர்த்தியின் வெற்றியே காணும் வேலாயுதமே அது.




வேல் விருத்தம் - 8 

மாண்ட் - கண்ட சாபு


மாமுதல் தடிந்து தண் மல்குகிரி யூடு போய்
வலிய தானவர் மார்பிடம்

வழிகண்டு கமல பவனத்தனை சிறையிட்டு
மகவான் தனை சிறைவிடுத்து

ஓமவிருடித் தலைவர் ஆசிபெற்ற் உயர்வானில்
உம்பர் சொற்றுதி பெற்று நா

உடைய கீரன் தனது பாடல் பெற்றுலகு தனில்
ஒப்பில் புகழ் பெற்ற வைவேல்

சோம கலச ப்ரபா லங்கார தர ஜடா
சூடி காலாந்த காலர்

துங்க ரக்ஷக த்ரோண கட்க குலிசஞ்சூல
துரக கேசர மாம்பரச்

சேம வடவாம்புயப் பரண சங்காபரண
திகம்பர த்ரியம்பக மகா

தேவ நந்தன கஜானன சகோதர குகன்
செம்பொற்றிருக்கை வேல்

(ஒப்பில் புகழ் பெற்ற வைவேல்)


முதல்வனாய் நின்று மா மரமாய் மாறின சூரபத்மனை அழித்து, குளிர்ந்த ஏழு மலைகளையும் ஊடுருவிச் சென்று அந்த மலைகளில் வசித்த அசுரர்களின் வலிய மார்பினை, பிளந்து அப்புறமாகச் சென்றும், தாமரைப் பூவினில் வாசம் செய்யும் பிரமனை, பிரணவப் பொருளை தெரியாமல் இருந்த குற்றத்திற்காக சிறையில் அடைத்தும், நூறு அஸ்வமேத யாகம் செய்த இந்திரனை, சூர பத்மா அடைத்த சிறையினின்றும் விடுவித்தும், யாகங்கள் செய்யும் முனிவர்களின் வாழ்த்து பெற்று, மேலே சொர்க்கத்தில் தேவர்களால் செய்யப்பட்ட துதிகளைப் பெற்று, நா வன்னை உடைய கீரனின் துதி பாடல்களைப் பெற்று, இந்த உலகங்களில் யாருக்குமே இல்லாத வகையில் கீர்த்தியைப் பெற்ற கூரிய வேலாயுதம் (அது யாருடையது என வினவினால்) கிண்ணம் போன்ற பிறைச் சந்திரனின், ஒளிவீசும் அலங்காரத்தை, ஜடா முடியில் தரித்துள்ளவரும், எமனுக்கும் மரணத்தை விளைவிப்பவரும், பரிசுத்தம் வாய்ந்து உலகை பாதுகாக்கும் வில், வாள் வஜ்ராயுதம் சூலம் இவைகளைக் கொண்டுள்ளவரும் குதிரையின் உருவத்தைக் கொண்டு, சிங்கம் போன்ற கம்பீரத்துடன், சமுத்திரத்தை, பாதுகாத்து வரும், வடவாமுகாக்னியை, அபிஷேக நீராக, கொள்பவரும், வெண் சங்கை காதில் ஆபரணமாக கொண்டவரும், திக்குகளை ஆடையாகக் கொண்டவரும், முக்கண்ணரும் ஆகிய, சிவபெருமானின் குமாரனும், யானைமுகக் கடவுளான விநாயகப் பெருமானின் சகோதரனுமாகிய, முருக மூர்த்தியின், அழகிய பொன்போன்ற கரத்தில் தங்கும் வேலாயுதமே அது




வேல் விருத்தம் - 9

துர்கா - கண்ட சாபு


தேடுதற்க் அரிதான நவமணி அழுத்தியிடு
செங்கரனை அமுதம் வாய்கொள்

ஜயமளித் அருள் எனக் என உவப்பொடு வந்து
சேவடி பிடித்த தெனவும்

நீடுமைக் கடல் சுட்டதிற்க் அடைந்த் எழுகடலும்
நீயெமைக் காக்க எனவும்

நிபிடமுடி நெடியகிரி எந்தமைக் கா எனவும்
நிகழ்கின்ற துங்க நெடுவேல்

ஆடுமைக் கணபணக் கதிர்முடி புடை எயிற்று
அடலெரிக்- கொடிய உக்ர

அழால் விழிப் படுகொலைக் கடைய கட்செவியினுக்கு
அரசினைத் தனியெடுத்தே

சாடு மைப்புயல் எனப் பசுனிற சிகரியில்
தாய் திமித் துட நடிக்கும்

ஷமரமயில் வாகனன் அமரர்த்தொழு நாயகன்
ஷண்முகன் தங்கை வேலே

(ஷண்முகன் தங்கை வேலே
மயில் வாகனன் தங்கை வேலே)


தேடினாலும் கிடைப்பதற்கு அரிதான, கோமேதகம், நீலம், பவளம், மாணிக்கம், மரகதம், முத்து, புஷ்பராகம், வைடூரியம், வைரம் என்கிற நவ ரத்தினங்களை, தனக்குள்ளே கொண்டது போல் பிரகாசிக்கும், சிவந்த கிரணங்களை உடைய சூரியனை, மழை மேகம் மூடும் படியாக, களிப்புடன் வந்து, எனக்கு வெற்றியைத் தர வேண்டும் என பிரார்த்தித்து, வேலாயுதத்தின் திருவடிகளைப் பிடித்து எனவும், நெடிய இருண்ட சமுத்தரத்தைத் தனது சூட்டால் பொசுக்கினதற்காக, ஏழு கடல்களும் வேலாயுதத்தை சரண் அடைந்து, நீ எங்களைக் காக்க வேண்டும் எனவும், நெருங்கிய சிகரங்களை உடைய உயர்ந்த மலைகள், எங்களைக் காத்து ரட்சிப்பாய் என்று சொல்லவும், சிறப்புடன் விளங்கும் பரிசுத்தமுடைய வேல் (அது யாருடையது என வினவினால்) ஆடுகின்றதும், பசுமை பெருந்திய கூட்டமான, ஒளி வீசும் உச்சியான முடிகளைக் கொண்டதும், வாயின் 
பக்கத்தில் உள்ள பற்களில், வலிமையான கொடிய நெருப்பை வீசுவதும் நெருப்புக் கண்களைக் கொண்டதும், பெரிய கொலைகளை, செய்யக்கூடியதுமான சர்ப்ப ராஜாவான ஆதிசேஷனை, தனியாக எடுத்து, வேகமுடன் வீசும் கரிய புயல் மேகம்போல், பசுமை நிறைந்த மலை உச்சியில், தாவி மிதித்து, நடன தாளங்களுடன் நடிப்பினை செய்யும், போரில் வல்லமை கொண்ட மயில் வாகனக் கடவுள், தேவர்கள் வணங்கும் தலைவன் ஆகிய ஆறுமுகப் பெருமானின் திருக் கரத்தில் விளங்கும் வேலாயுதமே அது.




வேல் விருத்தம் - 10

மத்யமாவதி - கண்ட சாபு


வலாரி அலலாகுலம் இலாத் அகலவே கரிய
மாலறியு நாலு மறை ஞூல்

வலான் அலைவிலா நசிவிலான் மலைவிலான் இவர்
மனோலய உலாசம் உறவே

உலாவரு கலோல மகராலய ஜலங்களும்
உலோகனிலை நீர்னிலை இலா

ஒலாவொலி நிசாசரர் உலோகமதெலாம் அழல்உலாவிய நிலாவு கொலைவேல்

சிலாவட கலா வினொதவா சிலிமுகா விலொச
நா சின சிலா தணிவிலா

சிலாமலர் எலா மதிய மோதி மதி சேலொழிய
சேவக சராப முகிலாம்

விலாச கலியாண கலை சேர பசு மேலைமுலை
மேவிய விலாச அகலன்

விலாழி யினிலாழி அகல் வானில் அனல் ஆரவிடு
வேழம் இளைன்யன் கை வேலே

(வேலே, வேழம் இளைன்யன் கை வேலே
வேழம் இளைன்யன் கை வேலே)


வலாசுரனின் பகைவனாகிய இந்திரனின், துன்பங்களும், மன வருத்தங்களும், நீங்கும்படியும், மேக வண்ணனாகிய திருமாலும், அறியப்பட்ட நான்கு வேத சாஸ்திரங்களையும், ஓத வல்ல பிரம்மனும், அலைச்சல் இல்லாதவனும், அழிவு இல்லாதவனும், மேரு மலையை வில்லாக வளைத்தவனும் (ஆகிய சிவபெருமான்), இவர்களின், மனம் அமைதி அடைந்து மகிழ்ச்சி அடையவும், புரண்டு வரும், அலைகள் நிறைந்த, மகர மீன்களுக்கு இருப்பிடமான கடலின், இவ்வுலகத்தில் உள்ள உயிர்களும் நீரில் வாழும் உயிரினங்களும் அழிந்து போகும்படி, விகாரமான பேரொலி எழுப்பி (போரிட்ட), அசுரர்களின், வாழும் உலகங்களிலெல்லாம், நெருப்பு, பரவும்படி உலாவி வந்த, கொடிய கொலைகளை செய்த வேல் (அது யாருடையது என வினவினால்) வடக்கே உள்ள கந்தமாதன கிரியில் சகல கலா வல்லவனாகியும், (சிலா .. மலைகளை தனது இருப்பிடமாக கொண்டவனும், வட கலா விநோதவா .. வடமொழியாகிய சமஸ்கிருதத்தில் அதிக பிரியமுடையவன்), வண்டு ரூபம் எடுத்தவன், விஷேசமான (கருணை நிறைந்த) கண்களை உடையவரும், சினம் தணிந்து தணிகாசலத்தில் வீற்றிருப்பவரும், வில்லேந்திய வேலனும், சுனையிலுள்ள மலர்கள் எல்லாம், சந்திரன்மேல் உரசி, சந்திரனில் உள்ள சேல் மீன்கள் போன்ற களங்கம் அழியும்படி வீரத்தைக் காட்டிய போர் வீரனும், வள்ளி மலையில், சரப பட்சி போன்று மேக நிறமுடைய திருமால், அகன்ற மங்களகரமான, கலைமான் உருவெடுத்த மஹா லட்சுமியை சேர, முன் ஒரு காலத்தில், அப்போது தோன்றிய உயிராகிய வள்ளிப் பிராட்டியின் தனபாரங்களைத் தழுவிய அகன்ற திரு மார்புகளை உடையவனும், தனது துதிக்கையினால் நீரினால், சமுத்திரத்திலும், அகன்ற ஆகாயத்திலும், வெப்பத்தை, தணியும் படி பொழிந்த, யானைமுகக் கணபதியின், இளையோனாகிய முருகப் பெருமானின் கையில் உள்ள வேலாயுதமே அது.

- மீண்டும் அடுத்த பதிவில் இணைவோம்.


No comments:

Post a Comment