Subscribe

BREAKING NEWS

30 March 2018

ஓம் சுவாமியே ......சரணம் ஐயப்பா

ஓம் சுவாமியே ......சரணம் ஐயப்பா

என்னப்பா? ஐயப்பன் வணங்கும் காலம் முடிந்து விட்டது. ஆனால் இன்று ஓம் சுவாமியே ......சரணம் ஐயப்பா என்று பதிவா? என்று யோசிக்கின்றீர்களா? நாமும் முதலில் அப்படித் தான் நினைத்தோம். இன்று பங்குனி உத்திரம் (30/03/2018). ஐயப்பன் பிறந்த தினம். இந்த நன்னாளில் அவரைப் பற்றி சிந்திப்பது நலம் என்ற நோக்கில் தான் இந்த பதிவை தருகின்றோம்.

ஐயன் ஐயப்பன் தரிசனம் கடந்த 5 ஆண்டுகளாக கிடைத்து வருகின்றது. இது எப்படி? எங்கிருந்து ஆரம்பித்தது ..அதற்குள் 5 ஆண்டுகளாக தரிசித்து விட்டோமோ? என்று நாம் நினைத்தது உண்டு.கடந்த நான்கு ஆண்டுகளாக பம்பை (சின்ன பாதை ) முதல் சந்நிதி சென்று வந்தோம். ஆனால் கடந்த ஆண்டு எருமேலியில் இருந்து பெரிய பாதை வழியாக செல்ல வேண்டும் என்று ஆணை கிடைத்தது. வழக்கம் போல் விரதம்,வழிபாடு என தொடர்ந்தோம். நம்மைப் பொறுத்த வரை நாம் பெரிய அளவில் கூட்டமாக செல்வதில்லை. வீட்டில் தந்தை,தாத்தா என சேர்த்தால் மொத்தம் 4 பேர் அளவில் தான் செல்வோம். கடந்த இரண்டு முறை நாமும், என் சகோதரர் மட்டுமே சபரி மலை யாத்திரை சென்று வருகின்றோம். மூன்றாம் ஆண்டு முதலே குருசாமி என்று நம் ஐயப்பன் தான். வேறு யாரும் இல்லை.

ஆனால் நடைமுறையில் பார்க்கும் போது, பல செய்திகள் கண்டு வருகின்றோம். அந்த காலத்தில் இருமுடி வீட்டில் கட்டுவார்கள். வீட்டில் இருமுடி கட்டி, பூசை இட்டு, ஐயன் அருள் பெறுவார்கள். ஆனால் இன்று கோயில்களில் மட்டும் தான் இருமுடி கட்டப்படுகிறது. அதே போல் வீட்டில் இருமுடி கட்டி, பேருந்து நிலையம் செல்லும் வரை  ஓம் சுவாமியே ......சரணம் ஐயப்பா  என்று பாடிக் கொண்டே செல்வார்கள். ஆனால் இன்று வாகன வசதி..கோயிலில் இருமுடி கட்டி, அப்படியே வாகனத்தில் ஏறி,எளிதாக பம்பை வரை சென்று விடுகின்றோம். ஆனால் நாம் வீட்டில் கட்டி, அப்படியே சென்று பேருந்து நிலையம் செல்லும் வரை இயல்பாகவே சென்று வருகின்றோம்.

அப்புறம் இருமுடி கட்டி விட்டு சிலர் வேறு சில கோயில்களுக்கு சென்று,அப்புறமாக சபரி மலை செல்கின்றனர்.இது மிகப் பெரும் தவறு. அதே போல் தரிசனம் முடித்து சில பல கோயில்களுக்கு சென்று பின் வீடு திரும்புவதும், பம்பை வந்த உடனே மாலை கழட்டுவதும் போன்ற மாபெரும் தவறான செயல்கள் செய்வதை பார்க்கும்போது கண்ணீர் வருகின்றது. இப்படியான பயணத்தில் அனைவரும் நம்மிடையே பெரிய பாதை பற்றி கேட்பதுண்டு. சரி ..இந்த வருடம் பெரிய பாதை என தீர்மானம் செய்து விட்டோம். இம்முறை மகர ஜோதி தரிசனமும் பெற முடிவானது.

சரியாக வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி அளவில் இருமுடி கட்ட ஆரம்பித்தோம். நீங்கள் காணும் காட்சிகள் வீட்டில் இருமுடி கட்டும் பூசையில் எடுக்கப்பட்டவை.






இரண்டே இரண்டு இருமுடி. இதில் என் சகோதரர் மட்டும் வருடா வருடம் இரண்டு நெய் தேங்காய், நாம் ஒன்று தான். பக்கத்து வீட்டினர் வந்து கலந்து கொண்டார்கள். சரியாக மதிய உணவிற்கு முன்பாக கட்டி முடித்தோம். மதிய உணவு முடித்து, மாலையில் வீட்டிலிருந்து கிளம்பினோம். வீட்டில் இருப்பவர்கள் அணையா தீபம் ஏற்ற வேண்டும். சபரி மலை சென்று, அவர்கள் மீண்டும் திரும்பி வரும் வரை, தீபம் அணையாது பார்த்து கொள்ள வேண்டும். சபரி மலை செல்பவர்கள் வீட்டில் இருந்து செல்லும் போது, போய் வருகின்றேன் என்றும் சொல்லாகா. தேனியில் இருந்து குமுளி நோக்கி பேருந்தில் பயணம். மாலை 7 மணி அளவில் குமுளி அடைந்தோம். அங்கிருந்து எருமேலி நோக்கி பேருந்து பயணம். குமுளியில் இருந்து கேரளா எல்லை ஆரம்பம். இரவின் மடியில், குளிரின் தன்மை உணர்ந்து, அப்படியே பயணித்தோம்.






இந்த நன்னாளில் சபரிமலை ஏறிச்செல்லும் பாதை பற்றி அறிவோம். பாரம்பரியமாக மூன்று வழிகள் உண்டு – எருமேலிப் பாதை. வண்டிப்பெரியார் பாதை மற்றும் சாலக்காயம் பாதை.
பெரும்பாலானான ஐயப்பன்மார்கள், பெருவழி, பெரிய பாதை எனப்படும் எருமேலி வழியையே தேர்ந்தெத்து பயணிப்பார்கள். பெரியபாதை எனப்படும் வனப்பகுதியே ஐயப்பன் தன் யாத்திரைக்காக சென்ற வழி, எனவே அவ்வழியே சென்றாலே யாத்திரை பூர்த்தியாகும் என்று பழமலைக்காரர்கள் கூறுவர். இன்னும் ஒருபடி மேலே போய், பெரிய பாதையில் சென்று பதினெட்டாம்படி ஏறினால் மட்டுமே அது சபரியாத்திரையாகக் கணக்கில் கொள்ளப்படும் என்று கூறும் பழமைக்காரர்களும் உண்டு.

ஸாக்ஷாத் பகவான் மணிகண்டன் தன் மனித அவதார காலத்தில் பரிவார கணங்கள் சூழ தங்கிச் சென்ற பாதையாதலால், பெரிய பாதையில் ஒவ்வொரு கல்லுக்கும் கூட மஹத்துவம் உண்டு. பண்டைய வழக்கப்படி இந்த பெரிய பாதையில் ஒவ்வொரு முக்கியமான கேந்த்ரங்களிலும் இருமுடியை இறக்கி வைத்து, அங்குள்ள பூதகணங்களுக்கும், தேவதைகளுக்கும் பூஜைகள் நடத்திய பிறகே புறப்படும் வழக்கம் இருந்தது.

ஒவ்வொரு குன்றும் ஒரு கோட்டை என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு கோட்டையும் ஒரு ஆம்னாய தேவதையின் காவலில் இருக்கிறது. இதனால் தான் அந்தந்த தேவதையை வணங்கி உத்தரவு பெற்று அங்கிருந்து யாத்திரையை தொடர வேண்டும். அவர்களின் காவலை மீறிச் சென்றால் தேவதைகளின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்ற காரணத்தாலேயே பண்டைய குருஸ்வாமிகள் இரவில் யாத்திரை செய்வதை அனுமதிப்பதில்லை. (இன்றும் அந்த விதி பொருந்தும்)

1. எருமேலி
2. பேரூர் தோடு
3. காளைகட்டி
4. அழுதை
5. அழுதை நதி
6.கல்லிடுங்குன்று
7.இஞ்சிப்பாறை – உடும்பாறை
8.முக்குழி
9.கரிவலம் தோடு
10. கரிமலை
11. பெரியானை வட்டம்
12.சிறியானை வட்டம்
13. பம்பா நதி



வெள்ளிக்கிழமை அன்று பின்னிரவில் எருமேலி அடைந்தோம். எங்கே தங்குவது என்று இடம் தேடிக் கொண்டே இருந்தோம். பின்னர் எருமேலி கோயிலுக்கு சென்று தரிசனம் முடித்து, அங்கேயே இரவு தூங்கினோம். சனிக்கிழமை காலை விடிந்ததும், தாயாராகி காலை உணவை முடித்து விட்டு, பெரிய பாதை எங்கே தொடங்கும் ? என்று கேட்டோம். வாவர் மசூதியில் இருந்து வலப்புறம் செல்லும் பாதைதான் அது என்றார்கள். அப்படியே நடக்க ஆரம்பித்தோம். சரியாக மசூதி எதிரே உள்ள பாதையில் தொடங்கும் முன்பு, சிறு பிரார்த்தனை செய்தோம்.




ஐயனே..உம்மைக் காண பெரிய பாதையில் நாங்கள் இருவரும் வருகின்றோம். கூடவே இருந்து வழிகாட்டுங்கள் என்று பிரார்த்தனை செய்தது தான், உடனே அங்கே இரு அடியார் பெருமக்கள் வந்து, நம்மிடம் பெரிய பாதையா ? என்றனர். ஆம் என்றோம். சொன்னது தான் தாமதம், உடனே நம் கால்களை பிடித்து நீவி விட்டார்கள். கையில் சிறிது பணமும் கொடுத்தார்கள். மனதளவில் நன்றி சொல்லி நடையை தொடர்ந்தோம். வாகனம் செல்லும் மாதிரி தார் சாலை வழியே சென்று கொண்டிருந்தோம். அங்கங்கே அன்னதானம் செய்து கொண்டிருந்தார்கள். ஒரு நீரோடை தாண்டி வலப்புறம் திரும்பினோம்.இங்கிருந்து இமை மூடவில்லை.



























தார் சாலை என்று சொன்னோம் அல்லவா? அது பேரூர்த்தோடு. அதற்கப்புறம் உள்ளது ஐயனின் பூங்காவனம்.இங்கு நுழைந்து விட்டால், நாம் கொஞ்சம் சிரமப்பட்டு ஒரு சிவன் கோவிலை அடையலாம். இந்த யாத்திரையில் நாம் அதிகாமாக காட்சிகளை பதிவு செய்யவில்லை.கீழே நீங்கள் பார்ப்பது அந்த சிவன் கோயிலில் எடுத்த காட்சி. சுமார் 10 மணி அளவில் இங்கே தரிசித்தோம்.


இந்த சிவன் கோயில் தாண்டி இருப்பது ஒற்றையடிப் பாதை தான். காட்டு வழி தான். காளைகட்டி, அழுதா நதி, அழுதா மலை, கல்லிடும் குன்று, இஞ்சிப்பாறை கோட்டை, முக்குழி தாவளம், கரிவலந்தோடு, கரிமலை ஏற்றம், கரிமலை இறக்கம், பெரியானை வட்டம், சிறியானை வட்டம் இவற்றைக் கடந்து சென்றால் பம்பையை அடையலாம்.

இதனை இடங்களை கடக்க வேண்டும். குறிப்பாக சூரிய நாள் அன்று மாலை மகர ஜோதி தரிசனம் பெற வேண்டும் என்று எண்ணி வேகமாக நடக்க ஆரம்பித்தோம். அப்போது தான் நாங்க தள்ளாடி தள்ளாடி நடை நடந்து என்ற பாடல் நம் நினைவிற்கு வந்தது. சரணம் கோஷம் பாடிக் கொண்டே நடையைத் தொடர்ந்தோம். 


இங்கிருந்து ரப்பர் தோட்டத்தில் பயணம் தொடர்ந்தது. நேரம் செல்ல செல்ல, பாதையின் ஏற்றம் அதிகரித்தது.ஆனால் அங்கங்கே கடைகள் இருந்தது. இந்த கடைகளை விரி என்று சொல்வார்கள். நடையைத் தொடர்நது  கொண்டே இருந்தோம். கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என பாடிக் கொண்டே சென்றோம். இந்த பாதை மொத்தம் 48 மைல் என்றும் சொல்வார்கள். அழுதை நதி எப்போது வரும் என்ற ஏக்கப் பார்வையில் பயணித்தோம். முதல் முறையாக பெருவழிப் பாதை பயணம். ஒருவாறாக மதியம் 1 மணி அளவில் அழுதை அடைந்தோம்.


அலஸா என்று அழைக்கப்பட்ட நதியே இன்றைய அழுதை நதி.பம்பையின் ஒரு கிளை நதியான அழுதையில் ஸ்நாநம் செய்து அழுதை மலையை ஏறிக் கடக்க வேண்டும். அழுதையில் முழுகிக் கல்லை எடுத்துக் கொண்டு மடியில் காப்பாற்றி வைப்பது வழக்கம். ஆனால் நாம் கல்லெடுக்க மறந்து விட்டோம். குளியல் முடித்து ஒரு குட்டித் தூக்கம் போட்டோம்.அழுதை ஸ்னானம் செய்து இருமுடியை தலையில் வைக்கும் முன்பு குருநாதரை வணங்கி தக்ஷிணை கொடுத்து நமஸ்கரிக்க வேண்டும். மாலை 3 மணி அளவில் மீண்டும் நடை தொடர்ந்தோம். கல்லிடுங்குன்று நோக்கி மலை ஏற ஆரம்பித்தோம். மிக மிக அதிகமாக ஏற்றம். மூன்று, நான்கு முறை அமர்ந்து, அமர்ந்து தான் மலை ஏறினோம்.


அழுதா நதி தாண்டி நாம் ஏறும் மலை அழுதா மலை. உண்மையில் நம்மை அழ வைத்து விட்டது. செங்குத்தான மலை. பாறைகளும், பிரம்மாண்ட மரங்களின் வேர்களும்தான் படிக்கட்டுகள். ‘அழ வைக்கும் அழுதா’ என்று சொல்வதுண்டு. இந்த மலையில் ஏறுபவர்களுக்குத் தெரியும் இது எத்தனை உண்மை என்று. அழுதா மலை உச்சியில் கல்லிடும் குன்று உள்ளது. அழுதா நதியில் இருந்து எடுத்துவந்த கற்களை இங்கு போட்டு கன்னிசாமிகள் வழிபடுவர்.  அப்போது தான் நம் சகோதரர் ஒரு கல்லை கொடுத்தார். அதனை இங்கே போட்டு, அப்படியே வழிபட்டு நடந்தோம். அதன்பிறகு இஞ்சிப்பாறை கோட்டையை அடைந்தோம்.


இஞ்சி பாறைக்கோட்டையில் இருக்கும் போது மணி சுமார் 5 இருக்கும். அதிகமாக விரிகள் இருந்தது. இங்கே தங்கலாம் என்று முடிவு செய்தோம். இங்கு முழுதும் யானைககளை காணலாம். சரியாக 1 வாரம் முன்பு, யானை ஒருவரைக் கொன்ற சம்பவம் வேறு நம்மை பயத்தில் ஆழ்த்தியது. இந்த மேட்டு பகுதியான இஞ்சிப்பாறையே சரி முடிவெடுத்து அங்கேயே தங்கினோம். பரோட்டா, தோசை, புட்டு என உணவாக கிடைத்தது. 

ஓம் ஸ்ரீ ஹரிஹர சுதன்  ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பா


“நோன்பிருந்து,  புலன் அடக்கி   உள் அன்போடு ஐயனை அழைத்தால்
அஞ்சேல் என அருள் தருவான் அருகில் வந்து “

 சபரிமலை ஆலயம்: கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,000 அடி உயரத்தில் கேரள மாநிலத்தில் அமைந்துள்ளது. பெரும்பான்மையான யாத்திரிகர்கள் இன, மத பாகுபாடு இன்றி விரும்பிச் சென்று பிறவிப்பிணி போக்கும் ஐயனை தரிசித்து முக்தி என்னும் பெரும் பேற்றை நாடி வந்து கூடும் ஒரு முக்கிய தலமாக திகழ்கின்றது, சபரிமலை செல்லும் பாதை அரண்யத்தின் இடையில் அமைந்திருப்பதால் அங்கு செல்வது கடினமாக இருந்தாலும், ஐயப்பசாமிமார்கள் நோன்பிருந்து துளசி, உருத்திராக்க மாலை அணிந்து, ஐயனை வேண்டி ஐயப்ப சரணங்கள் சொல்லிக்கொண்டு மிக ஆனந்தமாக கடந்து செல்கிறார்கள்

 ஐயப்பன் சபரிமலையில் பிரமச்சாரியாக யோக முத்திரையில் அமர்ந்திருப்பதினால்; ஆண்களே பெரும்பாலும் தரிசிக்க செல்வது வழக்கம். ஆனால் “மாளிகாபுரம்” என்று அழைக்கப்படும் பெண் பக்தர்கள் 10வயதிற்கு உட்பட்ட சிறுமிகளாக அல்லது 50 வயதைத் தாண்டிய பெண்களாக இருப்போரும் தரிசிக்கச் செல்கின்றார்கள்.

மாலை அணிதல்:

 சபரிமலையில் கார்த்திகை (தமிழ்)முதலாம் திகதி மண்டல காலம் ஆரம்பமாகும். அன்று முதல் 41 நாட்கள் நடக்கும் பூஜை ஒரு மண்டலகாலம் எனப்படும். 41வது நாள் மண்டலபூஜை நடக்கும். சபரி மலைக்கு யாத்திரை சென்று சபரிமலை நாதனையும், மகர ஜோதியையும் தரிசிக்கச் செல்லும் பக்தர்கள், முதலில் மாலை அணிந்து கொள்கிறார்கள்.

 ஹரிஹர சுதனான ஐயப்பனைக்காண அணியும் மாலை: இம் மாலை மகாவிஷ்ணுவுக்கு உகந்த துளசி மாலையாக அல்லது பரமசிவனுக்கான உருத்திராட்சை மாலை 108 அல்லது 54 மணிகள் உள்ளதாக பார்த்து வாங்கி அத்துடன் ஐயப்ப திருவுருவப் பதக்கம் ஒன்றினையும் இணைத்து; பலமுறை (7-முறையாவது) முறையாக விரதம் இருந்து பெருவழிப் பாதைவழியாக சபரிநாதனச் தரிசித்து வந்த ஐயப்பன்மார் ஒருவரை குருவாக ஏற்று திருவிளக்கு முன்பாகவோ, திருக்கோயில்களிலோ குருநாதரை வணங்கி அவர் தம் திருக்கரங்களால் மாலையணிந்து கொள்ள வேண்டும். மாலையணிந்து கொண்டவுடன் குருநாதருக்கு தங்களால் இயன்ற குரு தட்சணையை கொடுத்து அடிவணங்கி ஆசிபெற வேண்டும்.

 மாலை அணிந்து கொண்டவர் பொருளாதார ரீதியாகவும் வயதிலும் எவ்வளவு சிறியவராக இருந்தாலும் அவரையும் மற்றவர்கள் ‘சாமி, சாமி’ என்று மரியாதையாக அழைத்து சரணம் சொல்லி வணங்குகிறார்கள். ஒருவரை ஒருவர் மதித்து, வணங்கும் கலாச்சாரம் இங்குதான் ஆரம்பமாகின்றது.எல்லோரையும் ஐயப்பனாகவே காண்கிறார்கள். சபரிமலை யாத்திரை செல்லும்போது இருமுடி அணிந்து செல்வார்கள்.

“இருமுடி” என்பது, இரண்டு முடிச்சுகளாகும். அதன் ஒரு முடிச்சில் இறைவனை அபிழ்ஷேகித்து பூஜிப்பதற்காக; உரித்த தேங்காயில் பெரிய கண்ணை துளையிட்டு அதனுள் இருக்கும் இளநீரை வெளியேற்றிய பின் அதனுள் சுத்தமான பசு நெய் நிரப்பி ஒழுகாது இருப்பதற்காக மெழுகினால் முத்திரையிடப்பெற்ற தேங்காயும்,  அபிழ்ஷேகத் திரவியங்களும் இருக்கும். தேங்காயாகிய முக்கண்ணன்) சிவனுக்குள்  நெய்யாகிய நாராயணமூர்த்தி நிறைந்திருப்பதனால், நெய் நிரப்பிய தேங்காய் ஹரிஹர புத்திரன் ஐயப்பனைக் குறிக்கின்றது.

 மற்றைய முடிச்சில் யாத்திரையின் போது பாவிப்பதற்கான பாவனைப் பொருள்கள் இருக்கும். இவை யாத்திரையின் இறுதியில் தீர்ந்துவிட எஞ்சி இருப்பது சிவனுக்குள் நிறைந்திருக்கும் நாராயணமூர்த்தியின் வடிவமான ஐயப்பன் மட்டுமே.
 இவ்வுலகில் இன்பம் போன்ற துன்பத்தை கொடுத்து நிலையான பேரின்பத்தை அடைய தடையாக இருக்கும், மும்மலங்களை எப்பொழுது ஆன்மா விட்டு விலகி நிற்கின்றதோ அப்பொழுது இறைவனை காணலாம் என உணர்த்துவதாகும். வேறு விதமாக கூறின் முன்முடிச்சு இறைவனை நாடிச் செல்ல பின்முடிச்சு கன்மவினைகளினால் பின்நோக்கி இழுக்கின்றது. எப்பொழுது பின்முடிச்சு அனுபவித்து வெறுமையாகின்றதோ அப்பொழுது இறைவனை அடையலாம் என்பதை உணர்துவதாக அமைகின்றது.

 இருமுடி கட்டும் முறை: நீலம், காவி அல்லது கருப்பு நிற துணியில் பூஜைபொருட்களை குருசாமி முன்னிலையில் நிரப்ப வேண்டும். துணியை இரண்டு பகுதியாக பிரித்து ஒரு பகுதியில் நெய் நிரப்பிய தேங்காய், பச்சரிசி, வாழைப்பழம், அவல், பொரி, சந்தனம், பத்தி, விபூதி, குங்குமம், மஞ்சள்பொடி, வெல்லம், கல்கண்டு, உண்டியல் காசு ஆகிய பூசைப் பொருட்களை வைக்க வேண்டும், பின் முடியில் தனக்கு தேவையான உணவுப் பொருள்களை வைத்துக்கொள்ள வேண்டும். முடிந்தவரை இருமுடி தலையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். மாலை அணிந்து இருமுடிதாங்கிச செல்லும் ஐயப்ப பக்தர்கள் மாத்திரம்; ஐம்பொன் தடு பதித்த 18 சித்திகள் நல்கும் 18படிகளினால் ஏறி ஐயப்ப தரிசனம் பெற முடியும்.

 மாலை அணியாது சபரிநாதரை  தரிசிக்க செல்வோர் அவர்களுக்கென தனியாக அமைக்கப் பெற்ற தனிப்பாதை வழியாக சென்று ஐயப்ப தரிசனம் பெற ஒழுங்குகள் செய்யப் பெற்றுள்ளன. 

சபரிமலை யாத்திரைப் பலன்கள்:

“அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது” என்ற முதுமொழிக்கேற்ப கிடைத்தற்கரிய மனிதப் பிறவி எடுத்த நாம் இப்பூவுலகில் வாழ்க்கையின் பல்வேறுபட்ட கோணங்களில் ஆட்பட்டு இயங்கி வருகிறோம். உலகின் பல சூழல்களில் மாட்டிக்கொண்டு பிறவிப் பெருங்கடலில் எதிர் நீச்சல் போட்டுக் கடந்து கரையேற முயன்று வருகிறோம்

 வாழ்வின் பல சிக்கல்களில் மாட்டிக் கொண்டு தினமும் அல்லல்பட்டு உழன்றுவரும் நாம் வருடத்திற்கு ஒரு முறையாவது சில நாட்களாவது தூய மனத்துடனும் மெய்யான பக்தியுடனும் நல்ல சிந்தையுடனும் மனதைக் கட்டுப்படுத்தி நோன்பிருந்து இருந்து, பூஜைகள், அன்னதானங்களை இயன்றவரை சக்திக்கேற்ப செய்ய நாமாக மேற்கொள்ளும் இந்த சபரிமலை யாத்திரை நோன்பு நமக்கு ஒரு நல்ல வாய்ப்பினைத் தருகிறது



அன்றிரவு  நாம் அங்கே தங்கினோம், பம்பை எப்போது அடைந்தோம், மகர ஜோதி தரிசனம் எப்படி இருந்தது என பல கேள்விகளுக்கு அடுத்த பதிவில் விடை தருகின்றோம்.

இன்றைய பங்குனி உத்திர நன்னாளில்((30/03/2018)) தான் ஐயப்பன் அவதரித்தார். இன்றைய தினம் அவரைப் பற்றி பேசுவது நாம் செய்த புண்ணியமே. அனைவருக்கும் முருகன் அருளும், ஐயனின் அருளும் பரிபூரணமாக கிடைக்க நாம் பிரார்த்திக்கின்றோம்.

அன்றிரவு  நாம் அங்கே தங்கினோம், பம்பை எப்போது அடைந்தோம், மகர ஜோதி தரிசனம் எப்படி இருந்தது என பல கேள்விகளுக்கு அடுத்த பதிவில் விடை தருகின்றோம்.

- அடுத்த பதிவில் சந்திப்போம்.




No comments:

Post a Comment