Subscribe

BREAKING NEWS

26 October 2017

தஞ்சமென்றடியார் தழைத்திட அருள்செய்! - கந்த சஷ்டி பதிவு (5)

முருகன் அருள் முன்னிற்க !

முந்தைய கந்த சஷ்டி பதிவில் திருச்சீரலைவாய் புகழ் முருகனின் சுவாரஸ்யமான 60 தகவல்கள் பற்றி அறிந்தோம். அனைத்தும் தேனில் ஊறிய பலாச்சுளை போன்றே இருந்தது. முருகனைப் பார்ப்பதும், முருகனைப் படிப்பதும் அதே இன்பம் தான். தேன் மிக மிக இனிப்பாக இருக்கும். பலாச்சுளையும் இனிப்பாக இருக்கும். இனிப்பான தேனில் இனிப்பான பலாச்சுளை ஊற வைத்து சாப்பிட்டால், தித்திக்கும் இனிப்பு..நாவில் நீர் ஊறுகின்றதல்லவா? இந்த இன்பச் சுவையை முருகனை தரிசிப்பதன் மூலமும், அவன் புகழ் பாடுவதன் மூலமும் பெறலாம். அதற்கு உதாரணமாக எத்தனையோ முருக பக்தர்கள், அடியார்கள் உள்ளனர்.

அருணகிரிநாதர் தொடங்கி தற்போது திரைப்பட பாடகர் T.M.S வரை சொல்லிக்கொண்டே போகலாம். சென்ற பதிவில் கூடுவாஞ்சேரியில் உள்ள நந்தீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கந்த ஷஷ்டி விழா பற்றி தொட்டுக் காட்டினோம். அன்றைய தினம் அபிஷேகம் கண்டோம், ஆனால் உற்சவர் அலங்காரம் காண முடியவில்லை. நாம் நினைப்பது அவனுக்குத் தெரியாதா என்ன? இதோ. உற்சவரை அடுத்த நாள் காலை சென்று கண்டோம். இது எப்படி நடந்தது? நாம் எதுவும் திட்டம் போடவில்லை. நம்மை அங்கே வரச் செய்தவர் சாட்சாத் அந்த முருகப் பெருமானே தான்.

அடுத்த நாள் காலை உழவாரப் பணியின் பொருட்டு, கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தில் அனைவரையும் வரச் சொல்லி இருந்தோம். நேரம் கிடைத்தது. திருமதி மாலதி, திருமதி சுபாஷினி, திரு.வினோத் ஆகியோர் சரியாக நாம் சொன்ன இடத்திற்கு வந்து விட்டார்கள். உடனே பாடல் வைப்புத் தலங்களில் ஒன்றான நந்தீஸ்வரர் தரிசனம் பெற விரும்பி சென்றோம். பின்பு தான் நமக்கு உற்சவர் தரிசனம் கிடைத்தது.இது தான் முருகனின் திருவிளையாடல் என்று எண்ணி எண்ணி மகிழ்ந்தோம்.













அப்படியே ஒரு ஆலய தரிசனம் பெற்றோம். TUT குழுவின் மூலம் இங்கே உழவாரப் பணி செய்ய விரும்பினோம். ஆனால் இன்று வரை நமக்கு இங்கே வாய்ப்பு கிடைக்கவில்லை. எப்போது வாய்க்குமோ? எப்போது அழைப்பாரோ? என்று ஏங்கிக் கொண்டு இருக்கின்றோம். இந்த சஷ்டியில் நாம் வைக்கும் பிரார்த்தனையும் இது தான்.

நக்கீரர் தமது திருமுருகாற்றுப்படையில் இவ்வாறு கூறுகின்றார்:

1. உலகைப் பிரகாசிக்கச் செய்ய ஒரு முகம்,
2. பக்தர்களுக்கு அருள ஒரு முகம்,
3. வேள்விகளைக் காக்க ஒரு முகம்,
4. உபதேசம் புரிய ஒரு முகம்,
5. தீயோரை அழிக்க ஒரு முகம்,
6. பிரபஞ்ச நன்மைக்காக வள்ளியுடன் குலவ ஒரு முகம்.

ஸரவணபவ – என்பது ஷடாக்ஷர மஹாமந்திரம் (6 எழுத்துகள்). இதன் மகிமை என்ன?

ஸ – லக்ஷ்மிகடாக்ஷம்
ர – ஸரஸ்வதி கடாக்ஷம்
வ – போகம் – மோக்ஷம்
ண – சத்ருஜயம்
ப – ம்ருத்யுஜயம்
வ – நோயற்ற வாழ்வு

ஆக, பிரணவ ஷடாக்ஷரம் கூறி இவ்வாறு பயன்களும் பெறலாம்.

ஆறுபடை வீடுகளும் ஆறு குண்டலினிகளாக விளங்குகின்றன.

திருப்பரங்குன்றம் – மூலாதாரம்

திருச்செந்தூர் – ஸ்வாதிஷ்டானம்

பழனி – மணிபூரகம்

சுவாமிமலை – அனாஹதம்

திருத்தணிகை – விசுத்தி

பழமுதிர்சோலை – ஆக்ஞை.

முருகப் பெருமானின் திருக்கரங்களை அலங்கரிக்கும் ஆயுதங்கள்:

சக்தி வேல், அங்குசம், பாசம், வில், அம்பு, கத்தி, கேடயம், வாள், சூலம், கரும்புவில், மலரம்பு, கதை, சங்கு, சக்கரம், வஜ்ரம், தண்டம், உலக்கை.












            மேலே நீங்கள் காண்பது நந்தீஸ்வரர் கோயிலின் அழகிய தோற்றம்.

அனைத்து முருகன் ஆலயங்களிலும் சூர சம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண வைபவம் நடந்து கொண்டிருக்கின்றது. அதிலும் சூரசம்ஹாரம் திருச்செந்தூரில் மிகவும் பிரபலம். சூரசம்ஹாரம் நடைபெறும் தினத்தில் திருச்செந்தூர் ஆலயக் கடல் நீரானது சம்ஹாரம் நடைபெறுவதற்கு வசதியாக செந்தில் ஆண்டவனின் அருள் கருணையால் உள் முகமாகச் சென்று சூரசம்ஹாரம் முடிந்து செந்தில் ஆண்டவர் இருப்பிடம் திரும்பும் போது கடலானது பழைய நிலைக்கு வருவதை காண முடிவதுடன் கருவறையில் உள்ள மூலவரின் முகத்தில் சூரசம்ஹார களைப்பினால் ஏற்பட்ட வியர்வைத் துளிகளையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

 படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு தக்கன், காசிபன் என்ற இரு புதல்வர்கள் உண்டு. இவர்களுள் தக்கன், சிவனை நோக்கி தவம் புரிந்து பல வரங்களைப் பெற்று சிவபிரானுக்கே மாமனாராகியும் அகந்தை காரணமாக இறுதியில் சிவனால் உரு வாக்கப்பட்ட வீரபத்திரரால் கொல்லப்பட்டான். காசிபனும் கடும் தவம் புரிந்து சிவனிடம் பல வரங்களைப் பெற்றான்.

ஒரு நாள் அசுர குரு சுக்கிரனால் ஏவப்பட்ட மாயை எனும் பெண்ணின் அழகில் மயங்கி தான் பெற்ற தவ வலிமையை இழந்தான். இதைத் தொடர்ந்து காசிபனும் மாயை எனும் அசுரப் பெண்ணும் முதலாம் சாமத்தில் மனித உருவத்தில் இணைந்து மனிதத் தலையுடைய சூரபத்மனும், இரண்டாம் சாமத்தில் சிங்க உருவில் இருவரும் இணைந்து சிங்கமுகமுடைய சிங்கனும், மூன்றாம் சாமத்தில் யானை உருவில் இணைந்து யானை முகமுடைய தாரகனும், நான்காம் சாமத்தில் ஆட்டுருவ த்தில் இணைந்து ஆட்டுத் தலையுடைய அஜமுகி எனும் அசுரப் பெண்ணும் பிறந்தனர்.



மாயை காரணமாகத் தோன்றிய இந்த நான்கு பேரும் ஆணவ மிகுதியால் மிதந்தனர். இவர்களுள் சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து 108 யுகம் உயிர் வாழவும் 1008 அண்டம் அரசாளவும் இந்திர ஞாலம் எனும் தேரையும்; சிவசக்தி அன்றி வேறொரு சக்தியாலும் அழிக்க முடியாது எனும் வரத்தையும் பெற்றான்.

இந்த வரத்தைப் பெற்ற சூரபத்மனும் அவனுடன் பிறந்தவர்களும் தம்மைப் போல் பலரை உருவாக்கி அண்டசராசரங்கள் எ ல்லாவற்றையும் ஆண்டு இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் சிறையிலடைத்தனர்.

அசுரர்களின் இந்தக் கொடுமையைத் தாங்க முடியாத தேவர்கள், கயிலாயம் சென்று சிவனிடம் முறையிட்டனர். சிவனும் அவர்களைக் காப்பாற்றும் நோக்குடன் தனது ஆறு நெற்றிக் கண்களைத் திறக்க (சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், ஞானிகளுக்கு மட்டும் தெரியக் கூடிய அதோ முகம் (மனம்) என்ற ஆறுமுகங்கள் உண்டு) அவற்றிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளையும் வாயு பகவான் ஏந்திச் சென்று சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்கள் மீது சேர்த்தான்.

அந்த தீப்பொறிகள் ஆறும் ஆறு குழந்தைகளாகத் தோன்றின! அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். தன் மைந்தர்களான அந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி கட்டி அணைக்க... அவர்கள் ஒரு மேனியாக வடிவம் கொண்டு ஆறு முகங்களும் இரு கரங்களும் கொண்ட முருகப் பெருமானாகத் தோன் றினர். இத் திருவுருவைப் பெற்றதால் ‘ஆறுமுகசுவாமி’ என்ற பெயர் முருகப் பெருமானுக்கு ஏற்பட்டது.

இந்த ஆறு திருமுகங்களும் ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம் புகழ் எனும் ஆறு குணங்களைக் குறிக்கிறது. பிரணவ சொரூபியான முருகனிடம் காக்கும் கடவுள் முகுந்தன், அழிக்கும் கடவுள் ருத்ரன், படைக்கும் கடவுள் கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடங்குவர். மேலும் முருகப் பெருமான் சிவாக்னியில் தோன்றியவராதலால் ஆறுமுகமே சிவம்- சிவமே ஆறுமுகம் என்பதுண்டு.முருகப் பெருமான் அசுரர்களான சூரபத்மன் மற்றும் அவனது தம்பியரை அழிக்கப் போர் புரிந்த திருவிளையாடலையே நாம் கந்த சஷ்டி விழாவாகக் கொண்டாடி மகிழ்கிறோம்.



முருகப் பெருமான் சூரபத்மனோடும் அவனது படையினருடனும். பத்து தினங்கள் நடந்த போரில் அசுரர்களை வென்று சூரபத்மனை மயிலாகவும், சேவலாகவும் மாற்றினார். மயில் முருகனுக்கு வாகனம் ஆகியது. சேவல் முருகனின் வெற்றிக்கொடி ஆகியது.

சூரசம்காரங்கள்  முடிந்த பின்னர், அமரேந்திரன் (இந்திரன்) தேவயானையை முருகப் பெருமானிடமே ஒப்படைக்க விழைகிறான். முருகனும் சரவணப் பொய்கையில் முன்னர் தாம் அருளிய வாக்கின் படியே, தேவானை அம்மையைப் திருப்பரங்குன்றில் மணக்கிறார். பின்னர், அவ்வண்ணமே வள்ளி அம்மையையும், திருத்தணிகையில் மணம் புரிகிறார்.

- இனிவரும் பதிவுகளில் திருப்புகழ், திருமுருகாற்றுப்படை என முருகன் அருள் பெற குருவாய் இலங்கும் அவரிடமே வேண்டுகின்றோம்.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!


முந்தைய பதிவுகளுக்கு :-

குன்றத்தூர் முருகனுக்கு அரோகரா - கந்த சஷ்டி பதிவு (3) - https://tut-temple.blogspot.in/2017/10/3.html

முருகன் 60 - கந்த ஷஷ்டி சிறப்பு பதிவு - (2) - https://tut-temple.blogspot.in/2017/10/60-2.html

சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_20.html

திருத்தலங்களின் சிறப்பு - சிவத்திரு.வேதகிரி அவர்கள் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_12.html

ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_18.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_5.html

வேலவனின் திருப்பாதத்தில் - வேல்மாறல் அனுபவம் - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_10.html

வேல்மாறல் அகண்ட பாராயணம் - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_12.html

வெற்றியைத் தரும் வேலவா போற்றி - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_6.html

சரணம் சரணம் சண்முகா சரணம்! - கூட்டுப் பிரார்த்தனை நிகழ்வின் துளிகள் - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_12.html

64 வது நாயன்மார் - http://tut-temple.blogspot.in/2017/06/64.html


No comments:

Post a Comment