Subscribe

BREAKING NEWS

27 June 2018

திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்

திருப்புகழை பாடப் பாட வாய் மணக்கும்
எதிர்ப்புகளை முருகா  உன் வேல் தடுக்கும்
நீ கொடுத்த தமிழ் அல்லவா புகழ்  எடுத்தது -அந்த
தமிழ் கொடுத்த அறிவல்லவா தலை சிறந்தது
முருகா முருகா முருகா.

நீ சிரித்த பிறகல்லவோ சிரிப்பு வந்தது
உன் நினைவிருக்கும் மனம் அல்லவோ பெருமை கொண்டது

சந்தனத்தில் நிறமெடுத்ததால் அழகன் ஆனவன்
சரவணத்தில்  உருவெடுத்ததால்  வேதமானவன்
முருகா முருகா முருகா

கந்தன் என்னும் பேரெடுத்ததால் கருணை ஆனவன்
அந்த கருணையினால் தொண்டருக்கும் தொண்டனானவன்

திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்
எதிர்ப்புகளை முருகா, உன் வேல் தடுக்கும்
முருகா…… உன் வேல் தடுக்கும்!




திருப்புகழின் திருப்புகழை இதை விட எளிதாக சொல்ல முடியுமா? திருப்புகழ் யார் பாடியது? இன்று குருபூஜையில் அருள் தரும் அருணகிரிநாதர் பாடியது. ஏற்கனவே அவரைப் பற்றி சிறிது பார்த்தோம். இன்றைய நன்னாளில் மீண்டும் திருப்புகழ் பற்றி சிந்திப்போம்.

திருப்புகழ் என்ற பெயரைப் பின்னால் யாரும் வைக்கவில்லை. அருணகிரியே ஒரு பாடலில் திருப்புகழ் என்று குறிப்பிடுகிறார்.

பக்கரை விசித்ரமணி பொற்கலனை இட்ட நடை
பட்சியெனும் உக்ர துரகமும் நீபப்
பக்குவ மலர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டருள்கை வடிவேலும்
திக்கது மதிக்கவரு குக்குடமும் ரட்சைதரு
சிற்றடியு முற்றிய பனிருதோளும்
செய்ப்பதியும் வைத்துயர் திருப்புகழ் விருப்பமொடு
செப்பென எனக்கருள்கை மறவேனே

'முருகக் கடவுளை முன்னிறுத்திப் பாடப்பட்டதுதான் திருப்புகழ்னாலும் கூட, அதில் மற்ற சுவாமிகள் பற்றியும் உருகி உருகிப் பாடியிருக்கார் அருணகிரிநாதர்.'' என்பது கூடுதல் சிறப்பு.

திருப்புகழில் இப்போது கிடைத்திருப்பது 1307 பாடல்கள்தான். இன்னும் பல்லாயிரம் பாடல்கள் இருந்ததாகவும் அவை மறைந்து போனதாகவும் கூறுகிறார்கள்.


திருப்புகழைப் பாடிய அருணகிரி அந்தப் பாடல்களை ஓலைசுவடிகளில்  எழுதி வைக்கவில்லை. யாத்திரையாக சென்று ஆலய தரிசனம் செய்த கோயில்களில்  இருக்கும் அன்பர்கள் அந்தப் பாடல்களை ரசித்து எழுதி வைத்தார்கள். அப்படி எழுதி வைத்த பாடல்கள்தான் இன்று தப்பிப் பிழைத்து நமக்குக் கிடைத்திருக்கின்றன.திருப்புகழை அருணகிரி அறிவால் பாடவில்லை. அறிவால் இப்படி பாட முடியுமா ?



முருகன் அருளால் பாடினார்.  அருளால் பாடியதால் தான் திருப்புகழ் இன்னும் அருள் தருகின்றது.தமிழில் எந்த நூட்களுக்கு திரு என்று பெயர் சேர்ந்து வருகின்றதோ, அவையெல்லாம் இறையால் அருளப்பட்டவை, திருக்குறள்,திருவாசகம், திருப்புகழ் என் கூறலாம். திருப்புகழை முருகன் அருணகிரியை வைத்து  பாட வைத்தான். அந்தப் பாடல்களில் எத்தனையெத்தனை சந்தநயம்! எத்தனை தாள வகைகள் உண்டோ அத்தனையும் திருப்புகழ் பாடல்களில் உள்ளனவாம். அத்தோடு அளவிட முடியாத கவிச்சுவை வேறு. சொல்,பொருள்,இன்பம் என அனைத்தும் ஒருங்கே பெற்றது திருப்புகழ்.

இது மட்டுமா?

வேதம் வேண்டாம்,சகல வித்தை வேண்டாம்
நாதம் வேண்டாம்,நாத நூல் வேண்டாம், ஆதி
குரு புகழை மேவுகின்ற கொற்றவன்தாள்
போற்றும் திருப்புகழை கேளீர் தினம்

என்பது ஆன்றோர் வாக்கு. சரி.வாருங்கள் மூழ்கி சில முத்தெடுக்கலாம்.



கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
     கப்பிய கரிமுக ...... னடிபேணிக்

கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
     கற்பக மெனவினை ...... கடிதேகும்

மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
     மற்பொரு திரள்புய ...... மதயானை

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
     மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே

முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
     முற்பட எழுதிய ...... முதல்வோனே

முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
     அச்சது பொடிசெய்த ...... அதிதீரா

அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
     அப்புன மதனிடை ...... இபமாகி

அக்குற மகளுட னச்சிறு முருகனை
     அக்கண மணமருள் ...... பெருமாளே.

விநாயகர் துதி யுடன் திருப்புகழ் தொடங்குகின்றது. இந்த பாடலில் ஒரு சிறப்பு உள்ளது. இத்திருப்புகழில் உள்ள உயிர் எழுத்துக்களை மட்டும் கூட்டினால் 200 எழுத்துக்கள் வரும். சில ஊர்களில் 100 என்பதை பிள்ளையார் என்று கூறுவது மறைவு.இங்கு 200 வருகின்றது..எனவே இத்திருப்புகழை "இரட்டைப் பிள்ளையார்" என்பார்கள்.



அட..ஆரம்பமே அருமையாக உள்ளது. நமக்குத் தெரிந்த வரை "முத்தைத்தரு பத்தித் திருநகை" சில முறை கேட்டிருக்கின்றோம். இன்று "நாத விந்துக லாதீ நமோநம" என்ற பாடல் கேட்டோம். இன்னும் ஒரு நிகழ்வோடு பதிவை முழுமை செய்வோம்.

முருகனை வழிபடும் அடியாரைக் கண்டால் எமனும் பயப்படுவார். அருணகிரிநாதருக்கு அப்படியே. முருகன் அருள் பெறுவதற்கும் முன் அப்படியே பயப்படுகிறார்.

தமர குரங்களுங் காரி ருட்பி ழம்பு
மெழுகிய அங்கமும் பார்வை யிற்கொ ழுந்தும் 
தழலுமிழ் கண்களுங் காள மொத்த கொம்பு
முளகதக் கடமாமேல் தனிவரு மந்தகன் பாசம் விட்டெ றிந்து
அடவரு மென்றுசிந் தாகு லத்தி ருந்து தமரழ 
மைந்தருஞ் சோக முற்றி ரங்க மரணபக் குவமாநாள்

என்று கூறுகின்றார். தமிழ்க் கடவுள் முருகன் அருள் பெற்ற பின்னர் எமனுக்கே சவால் விடுகின்றார்.

தண்டா யுதமுந் திரிசூல மும்விழத் தாக்கியுன்னைத்
திண்டாட வெட்டி விழவிடு வேன்செந்தில் வேலுனக்குத்
தொண்டா கியவென் னவிரோத ஞானச் சுடர்வடிவாள்
கண்டா யடாவந்த காவந்து பார்சற்றென் கைக்கெட்டவே.

என்று எமனையே முடிந்தால் என்கைக்கு எட்டும்படி வந்து பார் என்று சவால் விடுகின்றார் என்றால் அது முருகன் அருள் முன்னிற்கத் தான். இதன் மூலம் நாம் உணர்வது யாதெனின் வேலும் மயிலும் சேவலும் துணையிருக்க பயமேன்?

இது போன்ற திருப்புகழ் செய்திகளை இனிவரும் பதிவுகளில் அறிய முருகன் அருள் புரியட்டும். சொல்,பொருள்,இன்பம் என அனைத்தும் பொருந்திய திருப்புகழைப் பாட பாட வாய் மட்டுமா மணக்கும்? பாடுபவர்களின் வாழ்க்கையும் மணக்கும்.



கந்தனுக்கு அரோகரா!
கடம்பனுக்கு அரோகரா!! 
கதிவேலனுக்கு அரோகரா!!!

- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

மீள்பதிவாக :-

திருப்புகழைக் கேட்கும் செவி - ஸ்ரீமத் அருணகிரிநாதர் குருபூஜை விழா - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_54.html

அழகெல்லாம் முருகனே ... அருளெல்லாம் முருகனே... - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_47.html

தேனி சண்முகநாத மலை தரிசனம் (1) - http://tut-temple.blogspot.com/2018/06/1.html

வெற்றி வேல் வீர வேல் - தேனி சண்முகநாத மலை தரிசனம் - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post.html

இது சிவன் மலை ஆண்டவன் கட்டளை - உத்தரவுப் பெட்டி - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_19.html

சண்முகா சரணம் - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_84.html

முருகன் அருள் முன்னிற்க! பங்குனி உத்திரம் 2018 - http://tut-temple.blogspot.in/2018/03/2018.html

முருகன் அருள் முன்னிற்க! - பங்குனி உத்திரம் கொண்டாட்டம் - http://tut-temple.blogspot.com/2018/04/blog-post.html

நால்வரின் பாதையில்... திருப்புகழ் தலங்கள் - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_30.html

வேலை வணங்குவதே நம் வேலை! - http://tut-temple.blogspot.com/2018/04/blog-post_2.html

No comments:

Post a Comment