Subscribe

BREAKING NEWS

19 February 2018

ரோஹிணி நட்சத்திரத்தில் பிறந்தோர்க்கான ஆயுட்கால வழிபாட்டுத் தலம் - திருப்பாடகம்


திருப்பாடகம்!

பெயரிலேயே உயிர்ப்பு உள்ள ஊர். திரு என்றாலே உயர்ந்த, இறை ஆசி பெற்ற, கடவுள் வந்திறங்கி 
அருள் காட்டிய என்ற பொருள். எந்த ஊரின் பெயரோடு "திரு" என்று சேர்கின்றதோ அந்த ஊரில் சைவத்தலமாயின் சிவனும், வைணவத் தளமாயின் பெருமாளும் வந்திறங்கி அருள் காட்டிய ஊர் என்று பொருள். ஆனால் இவை கால ஓட்டத்தில் மறந்து வருகின்றது.

திருத்தணிகை 
திருச்செந்தூர் 
திருமயிலை 
திரு ஆலங்காடு 
திரு அண்ணாமலை 
திருப்பெரும்புதூர் 
திருமயிலை 
திருமுடிவாக்கம் 
திருஒற்றியூர் 

என்று சொல்லிக் கொண்டே போகலாம். அந்த வரிசையில் திருப்பாடகம் என்ற ஊரு. ஊரின் பெயர் கேட்டதும் இந்த ஊர் மிக மிக தொலைவில் உள்ளது என கருத வேண்டாம். சென்னைக்கு மிக அருகில் உள்ள காஞ்சிபுரத்தில் தான் இந்த திருப்பாடகம் திருத்தலம் உள்ளது. காஞ்சி சங்கர மடம் செல்பவர்கள் கண்டிப்பாக இங்கே சென்று வருவது மிகச் சிறப்பு ஆகும்.

திருப்பாடகம் பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இத்தலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்பாடகம் எனும் ஊரில் அமைந்துள்ளது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 49 வது திவ்ய தேசம் ஆகும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இத்தலத்திற்கு வந்து கிருஷ்ணனை தரிசித்து வந்தால் எந்தக் கஷ்டமாக இருந்தாலும் விலகிவிடும் என்பது நம்பிக்கை. கிருஷ்ணர் இத்தலத்தில் 25 அடி உயரத்தில், மூலஸ்தானத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சியளிப்பது சிறப்பம்சமாகும். 

சங்கர மடத்தில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் தான் உள்ளது.



கண்ணன் பஞ்சபாண்டவர்களுக்குத் தூதுவராக சென்றதால், இத்தல இறைவன் "பாண்டவ தூதப்பெருமாள் என" அழைக்கப்படுகிறார். இங்குள்ள கல்வெட்டுக்களில் இவரை "தூதஹரி" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.




எம் பெருமாளே என்று கன்னத்தில் ஒற்றிக் கொண்டு நடந்து சென்று கொண்டே இருந்தோம். கோபுரம் தரிசனம் கண்டதும் மிகவும் மகிழ்வுற்றோம். இத்தலத்தின் பெருமையாக சொல்லப்படுவது 

  •     திருதராஷ்டிரனுக்கு கண்பார்வை அளித்து தனது பெரிய விஸ்வரூப தரிசனத்தை கிருஷ்ண பகவான் இத்தலத்தில் காட்டியருளினார்.
  •     ரோகிணி தேவி கிருஷ்ண பகவானை வழிபட்டு சந்திரனை அடையும் பேறு பெற்றாள்.



பாரத யுத்தம் முடிந்த வெகுகாலத்திற்கு பின் ஜனமேஜயர் என்ற மகாராஜா, வைசம்பாயனர் என்னும் ரிஷியிடம் பாரதக் கதையை கேட்க வந்தார். அப்போது ராஜா, கிருஷ்ணர் தூது சென்றபோது நிலவறையில் அமர்ந்த கோலத்தில் எடுத்த விசுவரூப தரிசனத்தை நானும் தரிசிக்க வேண்டும். அதற்கான வழிமுறைகளை கூறுங்கள் என ரிஷியிடம் வேண்டினார். ரிஷி கூறிய அறிவுரையின் படி இத்தல தீர்த்தத்தில் அமர்ந்து தவம் செய்த ஜனமேஜய மன்னனுக்காக பெருமாள், தன் பாரத கால தூது கோலத்தை இத்தலத்தில் காட்டியருளினார்.



 காஞ்சிபுரத்தில் உள்ள வைணவத் திருத்தலங்களுள் கிழக்கு நோக்கியபடி அபூர்வமாக அமைந்துள்ள திருக்கோயில், இது ஒன்றே! ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்கு அருகில், தென்மேற்கே அமைந்துள்ளது. மூன்று நிலை ராஜகோபுரமும், ஒரு பிரகாரமும் கொண்ட அழகிய ஆலயம். காஞ்சிபுரத்தின் பாடகம் என்று அழைக்கப்படுகிறது.

 தூது சென்ற அந்த மாயவனின் 25 அடி உயரத் திருமேனியைக் கருவறையில் காணும்போது மெய்சிலிர்க்கிறது.அரவு நாள் கொடியோனவையுளாசனத்தை ஆஞ்சிடாதேயிட, அதற்கு பெரிய மாமேனி அண்டம் உடுறுவப் பெருந்திசையடங்கிட நிமிர்ந்தோன்! என்று திருக்கண்ணங்குடியில் திருமங்கையாழ்வார் செய்த பாசுரத்தில் குறிப்பிட்டிருப்பது போன்று பெரிய திருஉருவாய்க் காட்சி தருகிறார் பாண்டவதூதர்.அர்ச்சாவதாரங்களுள் இவ்வளவு பெரிய திருஉருவை வேறு எந்த திவ்ய தேசத்திலும் காண இயலாது.



பெருமான் தன்னுடைய ஸெளசீல்யம் எனும் குணத்தைப் பாண்டவர்களுக்காகக் காட்டிய தலமிது... அதனால் திருப்பாடகம் என்பர்.
பாடகத்துள் இருந்தானை ஏத்தும் என் நெஞ்சு என பூதத்தாழ்வாரும்.
மறைபாடக மனந்தன் வண்குழாய்க் கண்ணி இறை பாடியாய விவை என்று பேயாழ்வாரும்.
பாடகத்து மூரகத்தும் நின்றிருந்து வெஃகனைக் கிடந்தது என்ன நீர்மையே! என்று திருமழிசை ஆழ்வாரும் போற்றிப் பாடியுள்ளனர்.

மத்ஸ்ய தீர்த்தம், கோயிலின் பிராகாரத்தில் வடகிழக்கில் உள்ளது. ருக்மணித் தயார் தனிச் சந்நிதி கொண்டுள்ளார். உள்பிராகாரத்தில் விஷ்வக்சேனர், சுதர்சனர், கருடன், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், உடையவர், மணவாளமாமுனிகள் உள்ளனர்.


(இடம்: அருள்மிகு பாண்டவ பெருமாள் திருக்கோவில், திருப்பாடகம், 28,பி, பாண்டவ பெருமாள் கோவில் தெரு, காஞ்சிபுரம் 631502. தொலைபேசி எண் 044-27231899.)





இந்த திருத்தலம் தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும். மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் பக்தர்கள் வழிபாட்டுக்காக திறந்திருக்கும்.





ரோஹிணி தேவி இந்த தலத்து பெருமாளை வணங்கி வழிபட்டு, சந்திரனை மணவாளனாக அடையும் பேறு பெற்றாராம். சந்திரன், தனது 27 நட்சத்திர தேவியர்களில் முதன் முதலில் ஞான சக்தி பெற்ற ரோஹிணியையும், அக்னி சக்தி பெற்ற கார்த்திகையையும், மணமுடித்த பின்பே ஏனைய நட்சத்திர தேவியர் களை மணந்ததாக வரலாறு. தனக்கு ஞான சக்தியையும், விஸ்வரூப தரிசனமும் காட்டிய பெருமாளுக்கு வழிபாடு செய்ய, தினமும் சூட்சும வடிவில் வருவதாக ஐதீகம்.
அஷ்டமி திதி,8-ம் தேதியில்…எனவே, ரோகிணி நட்சத்திரக் காரர்கள் புதன், சனிக்கிழமை களிலும், அஷ்டமி திதி எட்டாம் தேதிகளில் இங்கு வந்து அர்ச்சனை செய்தால், அபரிமிதமான பலன்கள் கிட்டும்.





அங்கிங்கு ஓடிக் கொண்டிருந்த மனம் , 25 ஆதி உயர எம் பெருமாளை தரிசித்ததும் ஒடுங்கத் தொடங்கியது.

குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார்
      படு துயர் ஆயின எல்லாம்
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்
      அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற
      தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
      - நாராயணா என்னும் நாமம்         

என்று மனதில் பாடிக் கொண்டே கோயிலை வலம் வந்தோம்.









 நாராயணா என்னும் நாமம்   நெஞ்சில் ஏற்றுவோம். நாளும் நலம் பெறுவோம்.

- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் 

No comments:

Post a Comment