Subscribe

BREAKING NEWS

16 February 2018

அகத்தியரின் ஆசியுடன்... TUT ஆண்டு விழா

அன்பார்ந்த அன்பர்களே.

சென்ற வாரம் நம் குழுவின் இரண்டாம் ஆண்டு விழா சீரோடும், சிறப்போடும் வெகு விமரிசையாக நடைபெற்றது. விளக்கேற்றி வைத்து, இறை வணக்கம் பாடியது முதல் நன்றியுரை வரை விழா இறைவனின் கருணையால் மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் சுமார் 50 பேர் பங்கு பெற்று சித்தர்களின் ஆசி பெற்று இருக்கின்றார்கள் என்பது கண்கூடு. சதானந்த சுவாமிகளின் அதிஷ்டானத்தில் நம் பாதம் பட, நாம் மிகப் பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அன்று வந்த அனைவரும் பாக்கியவான்கள்.

விழாவினைப் பொறுத்த வரை நாம் முதல் நம் ஆண்டு விழா என்ற வரையில் தான் யோசித்தோம். ஆனால் பின்னர் நாம் சபரிமலை சென்று ஜோதி தரிசனம் பெற்ற போது, உள்ளுணர்வாய் அகத்திய ஜோதி பிரகாசித்தது. உடனே AVM மலேசியா குழுவிடம் நாம் இங்கே அகத்தியர் கீதம் வெளியிட அனுமதி கோரினோம். அவர்கள் அனுமதி கொடுத்தவுடன் மற்ற வேலைகள் ( அழைப்பிதழ் மாற்றம், ஒலித்தகடு அனுப்புதல் ) ஆரம்பமானது. சில நாட்களில் பாடலைப் பாடிய கௌரி அவர்களும் சென்னை வருவது உறுதியானது. இதனுடன் அகத்திய அடியார்களுக்காவே பிரத்தியேகமாய் ஒரு தளம் - அகத்தியர் வனம் இந்தியா (agathiyarvanamindia) வெளியிட அருள் தரப்பட்டது.

நமக்கு ஒலித்தகடு கிடைத்த உடன், நேரே கூடுவாஞ்சேரி வேலி அம்மன் ஆலயத்திலும், மாமரத்து விநாயகர் ஆலயத்திலும் கொடுத்து ஆசி பெற்றோம். பின்னர் விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்தேறியது. இந்த சூழ்நிலையில் சென்ற சனிக்கிழமை பாண்டிச்சேரி செல்வதற்காக உணர்த்தப் பெற்றோம். அப்படியே ஸ்ரீ லோபாமுத்திரை அகத்தியர் ஞானம் இல்லம் சென்று அங்கு ஆசி பெற விரும்பினோம்.இந்த செய்தியை வெள்ளிக்கிழமை அன்று தான் முடிவாக திரு.சுவாமிநாதன் ஐயாவிடம் சொன்னோம். இங்கு நடைபெறும் ஆயில்ய பூசை அலாதியானது, ஆற்றல் நிறைந்தது, அன்பின் ஆழம் உணர்த்துவது.

அடுத்த நாள் சரியாக காலை 10 மணி அளவில் ஸ்ரீ லோபாமுத்திரை அகத்தியர் ஞானம் இல்லம் அடைந்தோம். உபசரிப்பு என்றால் அப்படியொரு உபசரிப்பு. காலை உணவை உண்டு முடித்து, பின்னர் அகத்தியரை பார்க்க சென்றோம். பூசைக்கு தேவையான சில பொருட்களை வாங்கி சென்றோம். அனைத்தும் அகத்தியரிடம் கொடுக்கப்பட்டது.


ஏகப்பட்ட செய்திகளை அள்ளி வணங்கினார் திரு.சுவாமிநாதன் ஐயா. கேட்டுக்கொண்டே இருந்தோம். இனி எந்த கோவிலுக்கு சென்றாலும் அஷ்டதிக்கு விளக்கு போடுங்கள் என்று அறிவுரைத்தார். மேலும் சிவராத்திரிக்கு சிவபுராணம் அச்சிட்டு வழங்குங்கள் என்று வழிகாட்டினார். என்ன ஆச்சர்யம் ! நாம் சிவபுராணம் வழங்க ஏற்கனவே முடிவு செய்ததை சொன்னதும் மகிழ்ந்தார்.
சுமார் 1 மணி நேரம் கடந்திருக்கும். பூசை ஆரம்பமானது, மனதார பிராத்தனை செய்தோம். TUT குழுவின் ஆண்டு விழா சிறப்பாக நடைபெறவும், அகத்தியர் கீதம் அகிலமெங்கும் ஒலிக்கவும் வேண்டினோம்.

பிரார்த்தனை முடிந்ததும், அவருக்கே முதல் ஒலித்தகடும் ( நன்கு குறித்து வைத்துக் கொள்ளுங்கள் -அகத்தியரின் அருள் மெய் சிலிர்க்கும் ), அகத்தியர் வண்ணப்படமும் TUT சார்பாக வழங்கினோம்.
பின்னர் சில உயிர்நிலை கோயில்களில் தரிசனம் செய்து விட்டு சென்னை வந்து சேர்ந்தோம்.






விழா சிறப்பாக நடைபெற்றது. அகத்தியர் கீதம் வெளியீடும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. AVI -agathiyarvanamindia தளமும் வெளியிடப் பட்டது. நம் குழுவின் - தேடல் உள்ள தேனீக்களாய் பேனர் வெளியீடு, உழவராப் பணி, அன்னதானம் பேனர் வெளியீடு என விழா கொண்டாட்டமாக இருந்தது. விழாவினை பற்றிய பதிவுகள் நம் தளத்தில் காட்சிப் படங்கள் கிடைத்தவுடன் தொடரும். அதுவரை பொறுத்தருள்க.!

விழாவினை பற்றி நம் தளத்தின் உறவாம் திரு.சதீஷ்குமார் ஐயா அனுப்பிய வாழ்த்து செய்தி இங்கே மீண்டும் பதிக்க விரும்புகின்றோம். நன்கு வாசித்துப் பாருங்கள். சுவாமின்தான் ஐயா பற்றியும் எழுதி இருப்பார். ஏன்? எப்படி? என்பது எங்களுக்கும் தெரியவில்லை. ஆனால் அகத்தியரின் ஆசி, சித்தர்களின் பரிபூரண ஆசி என்று நமக்குத் தெரிகின்றது.

முத்தான முருகனருள் முன்னிற்க 
குறைவின்றி குருவருள் கூடிநிற்க 
சத்குரு சதானந்தர் குடில்தனிலே 
வித்தொன்று வந்துதித்த வேளைதனில் 
அன்புசார் மெய்ஞானம் ஓங்கிடுமே 
தேடல் உள்ளதேனீக்கள் எல்லாம் 
நுழைந்தது அகத்தியர் வனத்தினிலே 
முத்தான முருகனது  நாமம்கொண்டு 
வித்தக செயல்தன்னை செய்துவிட்டார்
சண்முகனாய் சுவாமிநாதனாய் வழிநடத்தி 
வனத்தை வரமாய் தந்தார் தேனீக்களுக்கு 
அன்புடனும் அன்னதானம் அறச்செயலும் 
அற்புதமாய் புரிந்திட ஆசிகோடி 
அபயமும் அளித்திட்டார் நம்ஆசான் 
பல்யுகமும் வாழ்க குருநாமம் 


குருவழி குருவடிபற்றி நிற்போம் 
சீரான அவர்பதம்அடையும் வரை  

வணக்கமும்,
வாழ்த்துக்களும் 
அகத்தியர் அடிமை 


விழாவினை சிறப்பித்த அனைவருக்கும் மீண்டும் இங்கே நம் தளம் சார்பாக மனம் கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அடுத்த பதிவில் சந்திப்போம்


No comments:

Post a Comment