Subscribe

BREAKING NEWS

26 February 2018

நம் கடன் உழவாரப் பணி செய்து கிடப்பதே

ஒவ்வொரு முறை உழவாரப் பணி செய்யும் போதும்  நாம் பெறுகின்ற அனுபவம் வார்த்தைகளில் சொல்ல இயலாத ஒன்று. நம் தளத்தில்  பணிகள்/ சேவைகள் செய்த அறிவிப்பு இல்லையே என்று ஏங்க வேண்டாம். அனைத்தும் குருவருளால் சிறப்புற நடைபெற்று வருகின்றது. நம் ஆண்டு விழா முடித்து விட்டோம், இந்த மாதம் அன்னசேவை சதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் செய்தோம். இன்று காலை அடுத்த மாதம் உழவாரப் பணி செய்வது பற்றிய தகவல் உறுதியானது.விரைவில் தனிப்பதிவில் அறிவிக்கின்றோம்.

திருநாவுக்கரசர் அருளிய  தேன் வழங்கும் தேவாரம் ' என் கடன் பணி செய்து கிடப்பதே"  என்று உரைக்கின்றது.

நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான்
தன்க டன்னடி யேனையுந் தாங்குதல்

என்க டன்பணி செய்து கிடப்பதே.

 இறைவனுக்கு என்று ஒரு கடமை இருக்கிறது. அது அடியார்களை தாங்குவது.  தாங்குதல் என்றால் கீழே விழாமல் பிடித்துக் கொள்ளுவது. தவறி விழுந்து விடாமல் தாங்கிப் பிடிப்பது.

இறைவா, உன் கடமை என்னை தாங்கிப் பிடிப்பது என்று . கட்டளையாகச் சொல்கிறார். நான் உன்னை வணங்கி, வேண்டி, பெற்றுக் கொள்ளுவது எல்லாம் தேவை இல்லை. என்னை தாங்க வேண்டியது உன் கடமை. நீ உன் கடமையைச் செய்.

அதையும்  சொல்லுகிறார் என்றார், அந்த முருகனைப் பெற்ற பார்வதியை இடப் பாகமாக கொண்டவனே, என்னை தாங்குவது உன் கடமை.

யாருக்கும், அவர்களின் பிள்ளை பேரை சொன்னால் கொஞ்சம் மனம் கனியும். அதோடு மனைவியின் போரையும் கொஞ்சம் சேர்த்து  கொண்டால் இன்னும் இனிமை சேரும்.

அப்படி இறைவனுக்கு கடமையை சொன்ன நாவுக்கரசர், அடிவர்களுக்கும் ஒரு கடமை உண்டு என்று சொல்கிறார். அது, எப்போதும் பணிசெய்வது. பணி செய்த பின் அதற்கு என்று கூலி எதுவும் எதிர் பார்க்காமல் சும்மா கிடப்பது. அது அடியவர்களின் வேலை. திருத் தொண்டு புரிவது.

நம் வேலை திருத் தொண்டு புரிவது தான். அந்த திருத்தொண்டில் உழவாரப் பணியும் உளது. இதை பெரியவா வாக்கில் காண்போம். ஏற்கனவே நம் தளத்தில் பதிவிட்டு இருக்கின்றோம். இருந்தாலும் நல்ல செய்திகளை மீண்டும் மீண்டும் சொல்வதும், பேசுவதும் நம் நிலை உணர்த்தும்.

”நம் கடன் பணிசெய்து கிடப்பதே” என்பதுதான் நம் வாழ்க்கையின் குறிக்கோளாக, Motto – வாக் இருக்க வேண்டும்.

கடன் என்றால், ‘கடனே என்று செய்தேன்’, ‘கடனிழவே என்று செய்தேன்’ என்றெல்லாம் சொல்லுகிறோமே, அந்த மாதிரி வேண்டா வெறுப்பாகச் செய்வது என்று அர்த்தமில்லை. கடன் என்றால் கடமை, Duty .அதை அன்போடு, ஆர்வத்தோடு ஹ்ருதய பூர்வமாகச் செய்ய வேண்டும்.
லோகத்தில் இத்தனை ஜீவராசிகள், பசு பக்ஷிகள், தாவர வர்க்கங்கள் இருக்கிறோமே, இதில் ஒன்றுக்கொன்று வாழ்வுக்கு அவசியமானவைகளைப் பரஸ்பரம் கொடுத்துக் கொண்டுதான் ஜீவிக்கிறோம். இதிலே மநுஷ்யர்களான நாம், நம் போன்ற ஸஹ மநஷ்யர்களிடமிருந்தும், மிருகங்கள், பக்ஷிகள், தாவரங்கள், இன்னும் inanimate என்கிற ஜடவஸ்துக்களிடமிருந்துங்கூட எத்தனையோ உதவி பெறுவதால்தான் ஜீவ யாத்திரையை நடத்திக்கொள்ள முடிகிறது. இதனால்தான் ஜடம் என்று நினைக்கிற பூமி, ஜலம், அக்னி இவற்றுக்குக்கூட நாம் செய்கிற பிரதியாக வைதிக மதத்தில் பலவிதமான சடங்குகள் இருக்கின்றன.

தாவரங்களுக்கு உயிர் இருக்கிறது, உணர்ச்சிகள் இருக்கின்றன என்று ஜகதீஷ்சந்திர போஸ்தான் கண்டு பிடித்தார் என்றில்லை. வனஸ்பதி, அச்வத்தம் என்கிற மாதிரியாக அதுகளையும் உயிரும் உணர்ச்சியும் கொண்டதாகப் பார்த்து மந்திரபூர்வமாக அவற்றுக்கும் நம் ப்ரத்யுபகாரமாக பூஜைகளைப் பண்ண சாஸ்த்திரம் இருக்கிறது. ‘தூர்வா ஸூக்தம்’, ‘ம்ருத்திகா ஸூக்தம்’ என்றெல்லாம் அருகம்புல், மண் முதலானவற்றிலிருக்கிற தெய்வ சக்தியைக்கூட ஆராதிக்க வேத மந்திரங்கள் இருக்கின்றன. தினமும் செய்கிற ‘ப்ரஹ்ம யஜ்ஞ’த்தில் சேதன-அசேதனங்கள் அத்தனையிலும் இருக்கிற சைதன்ய சக்திக்கு நம் நன்றியறிதலாகத் தர்ப்பனம் சொல்லியிருக்கிறது.


ஒரு காக்கை இருக்கிறது. எங்கேயோ ஒரு பழத்தைச் சாப்பிட்டுவிட்டு நம் தோட்டத்திலே வந்து எச்சமிடுகிறது. அந்தப் பழத்தின் கொட்டை இங்கே நம் வீட்டுத் தோட்டத்தில் விழுந்து மரமாகிறது. அந்தக் காக்கை நமக்கு ஓர் உபகாரம் பண்ணிவிட்டது. நாய் காவல் காக்கிறது. குதிரையை வண்டியில் கட்டி ஸவாரி பண்ணுகிறோம். கோமாதா நமக்கு பௌதிகமாகவும் ஆத்மார்தமாகவும் பண்ணுகிற உபகாரம் கொஞ்சநஞ்சமில்லை. இப்படி எல்லாரிடமும் உபகாரம் பெற்றுவிட்டு, மநுஷ்ய ஜன்மா எடுத்துள்ள நாம் பிரதி உபகாரம் பண்ணாமல் இருந்தால் பாபம் அல்லவா? ”நன்றி மறப்பது நன்றன்று”, ”எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு” என்றெல்லாம் மஹா பெரியவர், வள்ளுவர், இன்னும் மநு, வியாஸர் எல்லாரும் சொல்கிறார்களே!


சென்ற உழவாரப் பணியில் கிடைத்த அனுபவத்தை இங்கே பகிர்கின்றோம்.





மகளிர் அணி அதிரடி ஆரம்பம். ஆசிரமத்தில் உள்ள குப்பைகளை கூட்டித் தள்ள ஆரம்பித்து விட்டார்கள். சதானந்த சுவாமிகள் குரு பூஜை இருந்ததால், சுவாமிகளின் கோயில் இடப்புறம் இருந்த செடி,கொடிகளை வெட்டி அப்புறப்படுத்த சொன்னார்கள். நாங்கள் இருந்ததோ நான்கே நான்கு பேர். எண்ணிக்கை முக்கியமல்ல; எண்ணங்களே முக்கியம் என்ற கூற்றை மனதில் இருத்தி, அங்கிருந்த களைகளை வெட்ட ஆரம்பித்தோம். கணினி பிடிக்கும் கைகள் அன்று அரிவாள் பிடித்தது.








எங்களால் முடிந்த அளவில், குப்பைகளை அகற்றினோம்.



பின்னர் சற்று நேரத்தில், நாம் பொத்தேரி வரை சென்று நம் ஆண்டு விழாவிற்கு வரும் படி, சிறப்பு சொற்பொழிவாளர் சிவத்திரு வேதகிரி ஐயா மற்றும் நால்வரின் பாதையில் சுரேஷ் அவர்களை அழைப்பிதழ் கொடுத்து வர சென்றோம். ஆசிரம முன் பகுதியில் சற்று மண்ணைக் கொட்டி நிரப்பும் படி கேட்டார்கள். அதனை திரு.வினோத்குமார் அவர்களிடம் ஒப்படைத்து விட்டு நாம் பொத்தேரி சென்றோம்.


இருவரையும் அழைப்பிதழ் கொடுத்து அழைத்து விட்டு, நாம் மீண்டும் ஆசிரமம் வந்தோம், மதியம் சுமார் 1 மணி ஆகி இருந்தது. சுமார் 15 பேர் கொண்ட குழுவில் நாம் செய்த பணி, நமக்கு நிறைவைத் தந்தது. மதிய உணவு முடித்து, குழு ஒன்று கூடல் நிகழ்விற்கு தயாரானோம். வழக்கமாக பணியில் ஈடுபட்ட அடியார்களுக்கு தளத்தின் சார்பாக சிறு அன்பளிப்பு கொடுப்பது வழக்கம். இந்த முறை கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலின் தினசரி நாட்காட்டி கொடுக்க இறையருள் பணித்தது.








மேலும் அன்று காலை நாம் உழவாரப்பணிக்கு செல்கின்றோம் என்று சொன்ன போது , நம் நண்பர் வீட்டில் இருந்து உபயோகிக்க முடியாத பழைய துணிகளை கொடுத்தார்கள். அவற்றையும் நாம் கொண்டு வந்து, ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளிடம் கொடுத்தோம். இங்கே பழைய துணி, புதிய துணி என்று நாம் ஆராயத் தேவையில்லை. கொடுக்கும் எண்ணமே முக்கியம்.









நம் குழுவின் சார்பாக சதானந்த சுவாமிகள் குரு பூசைக்காக நம்மால் இயன்ற பொருளை கொடுத்தோம்.


வழி நடத்தும் குருவிற்கு நன்றி சொல்லி, அப்படியே நம் ஆண்டு விழாவிற்காக சில முன்னேற்பாடுகள் பற்றி பேசிவிட்டு, குருவருள் பெற்று சென்றோம். சதானந்த சுவாமிகள் அருளைபற்றி பேசினால் கண்டிப்பாக விநாயகர் பற்றி சொல்வார்கள். சுவாமிகள் அங்கிருந்த விநாயகரை மாற்றி ,ம் மாற்றி அமைத்து மழை வளம் பெற செய்தார்கள். அது போல் மூத்தோனை வணங்கு ! என்று இந்த தினசரி நாட்காட்டி வழியாக நமக்கு செய்தியை சொல்லி இருக்கின்றாரா என்று நாம் நம்புகின்றோம்.

- அடுத்த பதிவில் மீண்டும் இணைவோம்.

No comments:

Post a Comment