Subscribe

BREAKING NEWS

02 October 2018

நவ கைலாய திருத்தலங்கள்

அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

இன்றைய பதிவில் தோஷம் விலக்கும் நவ கைலாய திருத்தலங்கள்  பற்றி காண உள்ளோம். ஆலயங்கள் நம்மை வாழ்விக்கும் இடங்கள். எத்துணையோ ஆலயங்கள் . ஒவ்வொரு ஆலயங்களும் தத்தம் தனிச்சிறப்பைப் பெற்று வருகின்றன. சந்திரனை தொட்டோம். செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பினோம். ஆனால் இன்னும் தஞ்சை பெரிய கோயில் போல் ஒரு ஆலயம் எழுப்ப முடியுமா? இல்லை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்  போல் தான் ஒரு கோயிலை உருவாக்க முடியுமா? இதெல்லாம் ஒரு குறிப்புக்காக மட்டுமே. இத்தனையும் தாண்டி கரக்கோயில்.சிற்பக்கோயில், பரிகாரக்கோயில், அடியார்கள் வழிபட்ட கோயில் என வரிசை நீளுகின்றது. அந்த வரிசையில் இன்று நவ கைலாய திருத்தலங்கள்..

பொதிகை மலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ அகத்திய பெருமானின் முதல் சீடரான உரோமச முனிவர் சிவமுக்தி நிலையை அடைய வேண்டி சிவபெருமானை வணங்கினார். சிவபெருமான், மாமுனிவர் அகத்தியர் வழியே அவரது சீடருக்கு வழியைக் கூற விரும்பினார்.

பின்னர், தனது சீடரிடம் அகத்தியர் கூறுகையில், தாமிரபரணியில் 9 மலர்களை அனுப்புகிறேன். இந்த மலர் ஒவ்வொன்றும் எங்கு நிற்கிறதோ அந்த இடத்தில் சிவலிங்கத்தை வைத்து வழிபடு. நீ வணங்கும் சிவலிங்கம் ஸ்ரீகைலாசநாதர் என்றும், உமையாள் ஸ்ரீ சிவகாமி அம்மை என்றும் விளங்கும். அதன்பின்பு தாமிரபரணி சங்கமிக்கும் இடத்தில் நீராடினால் சிவமுக்தி பேறு அடையலாம் என்றார். அகத்தியரின் கூற்றுப்படியே அருள்தரும் நவகயிலாய கோயில்கள் தாமிரபரணி நதிக்கரையில் திருநெல்வேலி- தூத்துக்குடி மாவட்டப் பகுதிகளில் சிவபெருமானின் பேரருளால் உருப் பெற்றுள்ளன.

சரி..இனி நவ கைலாய திருத்தலங்கள் பற்றி குறிப்பால் காண்போம். திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களுக்கு செல்பவர்கள் அப்படியே இந்த தலங்களை கண்டு தரிசிக்கும் வண்ணம் கீழே காட்சிப்பதிவுகளும் தருகின்றோம்.




 முதல் கோயில் பாபநாசமாகும். இங்கு ஸ்ரீபாபநாச நாதர் என்ற ஸ்ரீகைலாசநாதர் - உலகம்மை கோயில் உள்ளது. சூரியபகவான் அம்சம் கொண்டது. திருநெல்வேலியில் இருந்து 45 கி.மீ. தொலைவில் பொதிகை மலையின் அடிவாரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. தாமிரபரணியின் முதல் தடுப்பணை அமைந்துள்ளதால் ஆண்டு முழுவதும் பக்தர்கள் நீராட வசதி பெற்ற திருத்தலம்.



இரண்டாவதாக சேரன்மகாதேவியில் உள்ள ஸ்ரீஅம்மைநாதர் என்ற கைலாசநாதர் -ஆவுடைநாயகி திருக்கோயில். திருநெல்வேலியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. சந்திரபகவான் அம்சம் கொண்ட தலம்.




 மூன்றாவதாக கோடகநல்லூரில் உள்ள கைலாசநாதர்- சிவகாமி அம்மை திருக்கோயில். திருநெல்வேலியில் இருந்து சேரன்மகாதேவி செல்லும் சாலையில் நடுக்கல்லூரியில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது. செவ்வாய்பகவான் அம்சம் கொண்ட தலம்.



 நான்காவதாக குன்னத்தூரில் உள்ள அருள்மிகு கோதை பரமேஸ்வரன் என்ற கைலாச நாதர்- சிவகாமசுந்தரி திருக்கோயில். திருநெல்வேலியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் மேலத்திருவேங்கடநாதபுரம் அருகே உள்ளது. ராகுபகவான் அம்சம் கொண்ட தலம்.


 ஐந்தாவதாக தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாட்டில் உள்ள அருள்மிகு கைலாசநாதர் -சிவகாமி அம்மை திருக்கோயில். திருநெல்வேலி- தூத்துக்குடி சாலையில் 17 கி.மீ. தொலைவில் உள்ளது. குருபகவான் அம்சம் கொண்ட தலம்.



 ஆறாவதாக ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள அருள்மிகு கைலாசநாதர்-சிவகாமி அம்மை திருக்கோயில். திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் 30 கி.மீ. தொலைவில் உள்ளது. சனிபகவான் அம்சம் கொண்ட தலம்.


 ஏழாவதாக தென்திருப்பேரையில் உள்ள அருள்மிகு கைலாசநாதர்-அழகிய பொன்னம்மை திருக்கோயில். திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் சுமார் 38 கி.மீ. தொலைவில் ஆழ்வார்திருநகரி அருகே அமைந்துள்ளது. புதன்பகவான் அம்சம் கொண்ட தலம்.


எட்டாவதாக ராஜபதியில் உள்ள அருள்மிகு கைலாசநாதர்-பொன்னம்மாள் என்ற சிவகாமி அம்மை திருக்கோயில். தென்திருப்பேரையில் இருந்து சுமார் அரை கி.மீ. தொலைவில் உள்ளது. கேது பகவான் அம்சம் கொண்ட தலம்.


 ஒன்பதாவதாக சேர்ந்தபூமங்கலத்தில் உள்ள அருள்மிகு கைலாசநாதர்-அழகிய பொன்னம்மாள் என்ற சிவகாமி அம்மை திருக்கோயில். தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் ஆத்தூரில் இருந்து புன்னக்காயல் செல்லும் சாலையில் சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. சுக்கிரன் பகவான் அம்சம் கொண்ட தலம்.



நவகைலாய கோயில்களில் பக்தர்கள் மிகவும் எளிமையாக வழிபட உதவும் வகையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி கோட்டம் சார்பில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்புப் பேருந்துகள் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. காலையில் புறப்படும் பயணிகள் அனைத்து ஆலயங்களிலும் தரிசனம் செய்துவிட்டு இரவில் திருநெல்வேலியை அடையலாம். இந்த வசதியைப் பயன்படுத்திக்கொண்டு மார்கழி மாத தரிசனம் பெறுவீர். நவகோள்களின் ஆசி பெறுவீர்.



இந்த பதிவினை நாம் ஏன் திடீரென அளித்தோம் என்று தெரியவில்லை. விரைவில் நலம் தரும் நவகோள்கள் என்ற தலைப்பில் தொடர்பதிவு தர குருவருள் புரிய வேண்டுகின்றோம்.

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

மீள்பதிவாக:-

நம்பிமலை யாத்திரையின்போது நாம் தரிசித்த ஆலயங்கள் பகுதி 4 - http://tut-temple.blogspot.com/2018/09/4.html

நம்பிமலை யாத்திரையின்போது நாம் தரிசித்த ஆலயங்கள் பகுதி 3 - http://tut-temple.blogspot.com/2018/09/3.html

நம்பிமலை யாத்திரையின்போது நாம் தரிசித்த ஆலயங்கள் பகுதி 2 - http://tut-temple.blogspot.com/2018/09/2.html

நம்பிமலை யாத்திரையின்போது நாம் தரிசித்த ஆலயங்கள் பகுதி 1 - http://tut-temple.blogspot.com/2018/09/1_22.html

No comments:

Post a Comment