Subscribe

BREAKING NEWS

14 October 2018

நதியைக் காப்போம்...முன்னோர் வழி நடப்போம்...


அனைவருக்கும் வணக்கம்.

எங்கு பார்த்தாலும் புஷ்கரம் என்றே கேட்டு வருகின்றோம். 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் திருவிழா. இதற்கு முன்னால் 1874 ஆண்டில் இந்த திருவிழா கொண்டாடப்பட்டு உள்ளது. அடுத்த தாமிரபரணி புஷ்கரம் இதே போல் 2162 ஆம் ஆண்டில் கொண்டாடப்படும் என்பது உறுதி. நாம் வாழ்கின்ற காலத்தில் இது போன்ற நதி வழிபாட்டை நாம் தவறவிட கூடாது. நாம் ஏற்கனவே கூறியது போல் இதுவும் பஞ்சபூத வழிபாட்டில் ஒன்றாகும். பஞ்சபூதங்களில் ஒன்றான நீரை நாம் வழிபடும் முறையே புஷ்கரம் ஆகும். இன்று நீர்நிலைகள் அருகி வருகின்றன.இருக்கின்ற நீர்நிலைகளில் இது போன்ற விழாக்களை நடத்தி நாம் நீரைப் பாதுகாக்க வேண்டும். இது பற்றி நாம் கட்டாயம் சிந்திக்க வேண்டும்.

இது போன்ற விழாக்களின் மேலெழுந்த வாரியான கொண்டாட்டத்தை விட, விழாக்களின் உள்ளார்ந்த காரணத்தை நாம் கண்டுபிடித்து கைக்கொள்ள வேண்டும்.ஏதோ.. நெல்லை சென்றோம்..தாமிரபரணியில் ஒரு முங்கு முங்கினோம் என்றல்லாமல், தாமிரபரணியை சீர்செய்திட நம்மால் முடிந்த அளவில் முயற்சி செய்ய வேண்டும். உதாரணத்திற்கு நெகிழி பயன்பாட்டை குறைக்க வேண்டும். சரி நீர் பற்றி சிறிது சிந்திப்போம்.

தண்ணீர்... தண்ணீர்..
நீரின்றி அமையாது உலகு. பஞ்ச பூதத்தில் மிக மிக இன்றியமையாதது, நீர் இந்த பூமியில்  இருப்பதால் தான் உயிர்கள் இங்கே வாழ முடிகின்றது. அதனால் தான் செவ்வாய் கிரகத்தில்  நீர் இருக்கின்றதா என்று பல ஆராய்ச்சிகள் இன்றும் தொடர்ந்து வருகின்றது.  உலகில் உயிரங்களின் தொடக்கமே இந்த நீரில் இருந்து தான் ஆரம்பமாகி உள்ளது. இந்த பூமியின் 71% பகுதி நீரால் மட்டுமே சூழப்பட்டுள்ளது.
தண்ணீர்...உலக நாடுகளை மிகப் பெரிய அளவில் அச்சுறுத்த தொடங்கிவிட்டது.. தென்னாப்பிரிக்கா, நைஜீரியா, சோமாலியா, சிரியாவைத் தொடர்ந்து இஸ்ரேல், ஈரான், இந்தியா என உலகின் பல நாடுகள் தண்ணீர் பஞ்சம் எனும் பேராபத்தில் சிக்கிக் கொண்டுள்ளன.தென்னாப்பிரிக்காவின் தலைநகர் கேப்டவுனில் ரேசன் முறையில் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. வரும் ஏப்ரல் மாதம் தண்ணீரே இல்லாத வறண்ட பூமியாகப் போகிறது கேப்டவுன்.
உலகிலேயே தண்ணீரே இல்லாத மிகப் பெரிய நகரம் என்ற அவலத்தை சுமக்கப் போகிறது கேப்டவுன். இதனால் தண்ணீரை பயன்படுத்துவதற்காக பல கட்டுப்பாடுகள் அங்கு விதிக்கப்பட்டுள்ளன.இதேபோன்ற நிலைமைதான் நைஜீரியா, சோமாலியா, சிரியாவிலும். இஸ்ரேலும் கூட தண்ணீர் பஞ்சத்தை எப்படி எதிர்கொள்வது என்பதில் தீவிரமாக இருக்கிறது.
ஈரானிலும் தண்ணீர் பற்றாக்குறை தலைகாட்டத் தொடங்கிவிட்டது. இந்தியாவின் முன்னோடி மாநிலம், வளர்ச்சி மாநிலம் என பில்டப் செய்யப்பட்ட குஜராத்தை காவு வாங்கப் போகிறது தண்ணீர் பஞ்சம். குஜராத் மட்டுமா? நம் இந்தியா முழுதும் தண்ணீருக்கு விதி விலக்கல்ல..
தமிழகம் முழுவதும் தண்ணீர் தேவைக்காக, மக்கள் பரிதவித்து அலைவதை பார்க்கும் போது, மனது பதைத்து போகிறது. கடும் வெயிலிலும், கால் கடுக்க, காலி குடங்களுடன் மக்கள் அலைந்து திரிவது, மிகவும் வேதனை தரும் விஷயம். நமக்கெல்லாம் குழாயைத் திறந்தவுடன் தண்ணீர் கிடைக்கின்றது.எனவே அடித்தட்டு மக்களைப் பற்றி நாம் சிந்திப்பதில்லை. நாமும் ஒரு நாள் தண்ணீருக்காக அலையும் நாள் வெகு தொலைவில் இல்லை. நாம் தப்பித்தாலும் கூட, நம் சந்ததி கண்டிப்பாக தப்பிக்காது.

நாடு முழுவதும், தண்ணீருக்கான தேவை பொதுப் பிரச்னையாகி விட்ட நிலையில், அரசும், பொது நல, சமூக, தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், தனி மனிதரும் சேர்ந்த கூட்டு முயற்சியாலேயே, பிரச்னைக்கு ஓரளவு தீர்வு காண முடியும்.

சென்னை போன்ற பெருநகரங்களில் மழை நீர் செல்வதற்கு கூட இடமில்லை.எங்கு பார்த்தாலும் சிமெண்ட் மற்றும் தார் சாலைகள். தீப்பெட்டி வீடுகள் அதான் அபார்ட்மெண்ட் வீடுகளில் நாம் மரம்,செடி கொடி வளர்ப்பது சற்று கடினமே. ஆனால் ஒவ்வொரு வீட்டில் இருப்போரும் முயற்சித்தால் முடியும். தனிவீடுகளில் வசிப்போருக்கு ஏராளமான சாத்தியக் கூறுகள் உள்ளன.

தனி வீட்டை சுற்றிலும், தென்னை, மா, பலா, வாழை, நெல்லி, வேம்பு, கொய்யா மற்றும் முருங்கை என, பல மரங்களை வளர்க்கலாம்.

வீட்டுக்கும், மதில் சுவருக்கும் இடைப்பட்ட, 10 அடி நிலப்பகுதியை, கற்கள், சிமென்ட் போட்டு மூடாமல், மண் தரையாக விட வேண்டும்.இது தான் முக்கியமான விஷயம். ஏனென்றால், இப்போது, தனி வீடு வைத்திருப்போர், கட்டுபவர்கள் கூட, பெரும்பாலும் இப்படி செய்வதில்லை.

அடுக்கு மாடிகுடியிருப்புகள் கட்டுவோரும், வணிக வளாகம் கட்டுவோரும், பூஞ்செடிகள் வளர்க்க மட்டும் சிறிது இடம் ஒதுக்கி, மீதி தரைப்பகுதி முழுவதையும், சிமென்ட் தளமாகவோ, கற்கள் பதித்தோ மூடி விடுகின்றனர்.

மண் தரையாக விட்டிருப்பதால், நிலத்தடி நீர் குறைவில்லாமல் இருக்கிறது; தண்ணீரும் நன்றாக இருக்கிறது. இதோ ஒரு அனுபவ பகிர்வு

மண் தரையாக விட்டிருப்பதால், கிடைத்த மிகப்பெரிய நன்மையை, 2015 டிசம்பர் பெரு வெள்ளத்தின் போதும், 'வர்தா' புயல், வெள்ளத்தின் போதும், அனுபவ பூர்வமாக உணர்ந்து கொண்டோம்.ஆம்... இடைவிடாது பெய்த பேய் மழையால், வீட்டை சுற்றி தண்ணீர் சூழ்ந்திருந்த போதும், வீட்டுக்குள் துளி தண்ணீர் புகவில்லை. ஏனெனில், மழையின் வேகம் சிறிது குறைந்ததும், அத்தனை மழை நீரும், அரை மணியில், பூமிக்குள் இறங்கி விடும்.

என் நண்பர்கள் வீடுகளிலும், அக்கம், பக்கத்திலும் தரையை மூடி விட்டதால், வெள்ள நீர் புகுந்து, கார்கள், மின் மோட்டார்கள் சேதமடைந்தன. நாங்கள், பூமித் தாயை அன்று குளிர்வித்ததன் பலனை, இந்த கோடையில், நிம்மதியாக அனுபவிக்கிறோம்.

மண் தரையாக விடப்பட்டிருப்பதில், சில குறைபாடுகள் இருக்கவே செய்கின்றன. ஆங்காங்கே, கல்லும், மண்ணும் சிதறி கிடக்கும்; மரங்களின் இலைகளும், தழைகளும் பரவி, வேலை வைக்கும். அந்த இலை, தழைகளையும், சமையலறை காய்கறி கழிவுகளையும், பூமிக்கு உணவாக, உரமாக ஆக்குகிறோம்.

எலி, பூனைகளின் நடமாட்டம் அதிகம் இருக்கும். அவற்றை, வீட்டுக்குள் வர விடாமல் தோட்டத்திலேயே, பால் வைத்து விட்டால், நமக்கு தொந்தரவு கிடையாது; எலிகளை அவை,
'கவனித்து' கொள்ளும்.பெரிய நன்மைக்காக, ஒரு சில குறைகளை அனுசரித்து தான் ஆக வேண்டும்.

மண்ணில், நிறைய மண் புழுக்கள் உருவாகியுள்ளன; அவற்றை உணவாக்கி கொள்ள வரும் சிட்டுக்குருவிகள், அணில், பட்டாம் பூச்சிகள் என, நிறைய உயிரினங்களை எங்கள் தோட்டத்தில் பார்க்கும் போது, குறைகள் பெரிதாக தெரிவதில்லை.

குடியிருப்பு, வணிக வளாகங்கள் கட்ட, திட்ட அனுமதி வழங்கும் போது, சில வரைமுறைகளை கட்டாயப்படுத்த வேண்டும். கட்டடத்தின் அளவு, விஸ்தீரணத்துக்கு ஏற்ப, மரங்கள் வளர்க்க, இட வசதி ஒதுக்க வலியுறுத்த வேண்டும். குறைந்த பட்சம், மரங்களை சுற்றியுள்ள மண் தரையே கூட போதுமானது.

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த கற்றுக் கொள்ளுங்கள். தத்தம் பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுங்கள்.

மின்சாரம் உபயோகிப்பதையும் சரிப்படுத்தவும் மின்சாரத்திற்கு தண்ணீருக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? கட்டாயம் தொடர்பு உண்டு. சூழலை சரி செய்யாது தண்ணீரை நாம் பயன்படுத்த இயலாது.

தண்ணீரை சேமிக்க கற்றுக் கொள்ளுங்கள். இப்போது யோசித்து பார்த்தாலும்,சிறு வயதில் மழை பெய்தால் போதும். வீட்டில் உள்ள அண்டா,பானை போன்றவற்றில் நீர் முழுதும் பிடித்து வைப்பார்கள். மழை நீர் அமிர்தம். இன்று தான் நாம் மிகப் பெரிய டேங்க் கட்டி வைத்து இருக்கின்றோம்?பிறகென்ன கவலை? என்ற நிலை.

நிலத்தடி நீர் சேமிப்பதும் நீரைக் காக்கும் ஒரு வழி. ஆனால் இன்று பிளாஸ்டிக் அரக்கன் விஸ்வரூபம் எடுத்து உள்ளான். எப்படி அழிப்பது ? அரசாங்கம் ஆணையிட்டு என்று விடிவது ? நாம் உணர்ந்தால் தான் விடியும். எப்படி சுத்தி வந்தாலும் இயற்கையை நாம் மீட்டெடுத்தால் தான் இந்த தண்ணீரை நாம் ருசிக்க முடியும். எப்போது கையில் ஒரு துணிப்பை வைத்துக் கொள்ளுங்கள். உணவகங்களுக்கு சென்றால் டிபன் பாக்ஸ் போன்ற பாத்திரங்களை கொண்டு சென்று வாங்குங்கள். பிளாஸ்டிக் பயன்பாட்டை குறையுங்கள்.

மிக மிக முக்கியம். நீரை விலை கொடுத்து வாங்காதீர்கள். குறைந்த பட்சம் பயணத்தின் போதாவது முயற்சி செய்யுங்கள். பாத்திரங்கள் போன்ற புட்டிகளை பயன்படுத்துங்கள். கௌரவ குறைச்சலாக எண்ணாதீர்கள். கையில் ஒரு வாட்டர் பாட்டில் கொண்டு பயணம் செய்தால் தான் பயணம் செய்வதற்கே மதிப்பு போலும். ஒவ்வொரு முறை பயணத்தில் ஒவ்வொரு பாட்டில் என்று கணக்கில் எடுத்துக் கொண்டாலும், வருடத்திற்கு சுமார் 20 வாட்டர் பாட்டில் என்றால் 20 வாட்டர் பாட்டிலும் அப்படியே மக்காத குப்பையாக தான் கணக்கில் சேரும்.இதுவே நீங்கள் ஒரே ஒரு சில்வர், செப்பு புட்டி வாங்கி உபயோகித்தால் நமக்கு மட்டுமல்ல, நமது சுற்றுப்புறத்திற்கே நன்மை தான்.

நீங்கள் ஒருவரைக் கொண்டு கணக்கு போடாதீர்கள்.ஒவ்வொரு வார விடுமுறை அன்று எத்தனை பேருந்து பயணம், ரயில் பயணம், விமான பயணம். அப்படி என்றால் எவ்வளவு பிளாஸ்டிக் சேர்கின்றது. நினைக்கவே பயங்கரமாக உள்ளது. எப்படி இதனை மாற்றுவது ? நாம் தான் மாற வேண்டும்? இதோ நாம் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த புட்டியைத் தான் நீருக்கு பயன்படுத்தி வருகின்றோம். எப்போது பயணம் என்றாலும், என் பயணத் தோழனாய் இவர் இருக்கின்றார்.இது போல சின்ன சின்ன விஷயங்களில் மாற்றம் செய்யுங்கள்.

குடியிருக்கும் வீட்டில் ஒழுகும் குழாய்கள் இருந்தால் , நீங்களே உங்கள் செலவில் மாற்றுங்கள். வீட்டின் உரிமையாளருக்காக காத்திருக்க வேண்டாமே.

அரிசி, காய்கறிகளை அலம்பும் நீரை பிடித்து, செடிகளுக்கு விடலாம்.பாத்திரம் அலம்பும் போது கிடைக்கும், சோப்பில்லாத கழிவு நீரை கூட பிடித்து, மரங்களுக்கு விடுகிறோம்.

மேற்கத்திய கழிப்பறைகள் பயன்படுத்தாமல், இந்திய கழிப்பறைகளை பயன்படுத்தலாம்.. இதனால், பெருமளவு தண்ணீரை மிச்சப்படுத்த முடியும்.

இத்தகு சிறப்புமிக்க நீரை எந்த தொழிற்சாலையில், ஆய்வகத்தில் தயாரிக்க முடியாது. நாம் தான் இருக்கின்ற நீரை பாதுகாத்து உபயோகிக்க வேண்டும்.



சரி. விசயத்திற்கு வருவோம். தாமிரபரணி புஷ்கரம் நோக்கம், நதியை சுத்தம் செய்வது,நாட்டு பசுவை காப்பது,மரம் வளர்ப்பது,இயற்கை விவசாயம் செய்து கிராம வளம் காப்பது ஆகும்.மொத்தத்தில் நம் முன்னோர் வழியில் நடப்பதே ஆகும்.



'தன்பொருனை' என அழைக்கப்படும் தாமிரபரணி ஆறு நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் தோன்றி தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் அருகே கடலில் கலக்கிறது. இவ்வாறு நெல்லை-தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைத் தீர்த்து , வேளாண்மைக்கும் பயன்பட்டு வருகிறது. பொதிகை மலையிலிருந்து உருவாகி பாண தீர்த்தம், கலியாண தீர்த்தம், அகத்தியர் தீர்த்தம் முதலிய புண்ணிய தீர்த்தங்களைக் கடந்து பாபநாசம் என்ற சிவ ஸ்தலத்தின் வழியாக வருகிறது தாமிரபரணி.



 கல்யாண தீர்த்தம்

முன்னொரு காலத்தில் கைலாயத்தில் சிவபெருமானுடைய திருக்கல்யாணத்தைத் தரிசிக்கச் சென்ற தேவர்கள் முனிவர்கள் முதலியோர் கூட்டத்தைத் தாங்கமாட்டாது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர அதைச்சமன் செய்யுமாறு திருவுளங்கொண்டு அகத்திய முனிவரை அழைத்து தென் திசைக்கு ஏகும்படிச் சிவபெருமான் கட்டளையிட, அவ்வாணையின்படி பொதிய மலைக்கு எழுந்தருளீய அகத்தியருக்கு கையிலையிலிருந்த தம்முடைய திருக்கல்யாணக் கோலத்தைக் காட்சி கொடுத்தருளியது பாபநாசம் என்னும் இத்தலத்தில் என கூறப்படுகிறது. பாபநாசத்திற்கு மேற்கே ஒரு மைல் தூரத்தில் உள்ள அருவி இதனால் 'கல்யாண தீர்த்தம்' என்று பெயர் பெற்றது.



தாமிரபரணி தமிழகத்தின் ஒரே, வற்றாத ஆண்டு முழுவதும் நீரோடும் ஆறாகும் . இது பொதிகை மலையில் உள்ள மூலிகைகளின் நற்குணங்களையும் கொண்டுள்ளது. வால்மீகி இராமாயணத்தில் கிட் கிந்தா காண்டம் 41 ஆம் சருக்கத்தில் சில சுலோகங்கள் உள்ளன. அதில் ஒன்று
அதஸ்யாஸ்னம் நகல்யாக்ரே மலயங்ய தாம்ரபரணம் க்ராஹ ஜிஷ்டாம்த்ரச்யத்

அதாவது மலை சிகரத்தில் (பொதிகை) அமர்ந்தவர் அகத்திய முனிவர். தாமிரபரணி ஆறு முதலைகள் நிறைந்தது என்று பொருளாகும்.



திருநெல்வேலி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கடந்த வருட துவக்கத்தில் மிகப் பழமை வாய்ந்த புதைந்து போயிருந்த நாகரிகத்தின் அடையாளங்கள் கண்டெடுக்கப்பட்டன; அவை, அந்த இடம் மக்கள் கூடி வாழ்ந்த நாகரிகம் செறிந்த ஊரின் எல்லா அடையாளங்களையும் கொண்டிருந்ததாக அறியப்பட்டது. பண்டைக்காலத்தில், 'பொருநை' ஆறு (தாமிரபரணி) தமிழர்களின் நாகரீகப் படிநிலைகளில் முக்கிய இடத்தைக் கொண்டிருந்ததை நமது பண்டை இலக்கியங்கள் வாயிலாகவும், வரலாற்றுக் குறிப்புகள் வாயிலாகவும் அறிய முடியும். குமரிக்கண்டம் கொடுங்கடல் கொள்ளப்பட்ட பிறகு 'பொருநை'வெளிதான் தமிழர்களின் தாயகமாக இருந்திருக்க வேண்டும்.





இத்தகு சிறப்பு மிக்க தாமிரபரணி மகா புஷ்கரத்திற்கு சென்று நீராடி அன்னையின் ஆற்றலை இந்த நவராத்திரியில் பெறுவோம்.


- மீண்டும் சிந்திப்போம்

மீள்பதிவாக:-

தாமிரபரணி தாயே போற்றி - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post_12.html

தாமிரபரணி புஷ்கரம் தீப ஆரத்தி பெருவிழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post.html

 இறை, சித்தர், தாமிரபரணி அருளை பெறுவதற்கு தாமிரபரணி புஷ்கரம் அழைக்கின்றது - http://tut-temple.blogspot.com/2018/07/blog-post_24.html

 நவராத்திரி 75 - முதல் நாள் தரிசனம் - http://tut-temple.blogspot.com/2018/10/75.html

நவராத்திரி விழா கொண்டாட வாருங்கள் - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post_10.html


நவராத்திரி சிறப்பு பதிவு - அம்மன் நெய்க்குளம் தரிசனம் (8) - https://tut-temple.blogspot.in/2017/10/8.html

TUT நவராத்திரி தரிசனம் - ஆறாம் நாள் (7) - https://tut-temple.blogspot.in/2017/09/tut-7.html
TUT நவராத்திரி 5 ம் நாள் தரிசனம் - https://tut-temple.blogspot.in/2017/09/tut-5.html
நவராத்திரி - 4 ம் நாள் தரிசனம் - (5) - https://tut-temple.blogspot.in/2017/09/4-5.html
TUT நவராத்திரி சிறப்புப் பதிவு(3) - https://tut-temple.blogspot.in/2017/09/tut-3.html
TUT நவராத்திரி சிறப்புப் பதிவு (2) - http://tut-temple.blogspot.in/2017/09/tut-2.html
TUT தளத்தின் நவராத்திரி சிறப்பு பதிவு (1) - https://tut-temple.blogspot.in/2017/09/tut-1.html
TUT தளத்தின் நவராத்திரி பதிவுகள் - https://tut-temple.blogspot.in/2017/09/tut.html
TUT தளத்தின் விநாயகர் சதுர்த்தி - சிறப்புப் பதிவு - https://tut-temple.blogspot.in/2017/08/tut.html
விநாயகர் சதுர்த்தி செய்தி - மண(ன)ப் பொருத்தம் - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_78.html


No comments:

Post a Comment