Subscribe

BREAKING NEWS

20 October 2018

உழவாரப் பணிக்கு இணையேது இவ்வுலகில் - பனப்பாக்கம் ஸ்ரீ அகத்திய முனிவ தம்பதிக்கு உருத்திராக்க மண்டபம் அமைக்கும் விழா

அனைவருக்கும் வணக்கம்...

இந்த மாதம் நடைபெற்ற உழவாரப்பணியின் நிகழ்வுகளை இன்றைய பதிவில் தொகுத்து தருகின்றோம்.ஏற்கனவே இரண்டு உழவாரப் பணி அனுபவம் தர வேண்டி உள்ளோம். ஆனால் இந்த பணியின் அனுபவத்தை நாம் இங்கே சொல்லியே ஆக வேண்டும். பணப்பாக்கத்தை சேர்ந்த அகத்திய அடியார் திரு.செந்தில் வேல் ஐயா அவர்கள் நம்மை பனப்பாக்கம் வந்து அகத்தியர் ஆசி பெறும்படி சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்து பணித்தார். ஆனால் நாம் காலம் தாழ்த்திக் கொண்டே இருந்தோம். ஏற்கனவே பலமுறை சொல்லியது போல் "காரணமின்றி காரியமில்லை " என்பதும் நமக்கு புலப்பட்டது. தனி ஒருவனாக சென்று நாம் ஆசி பெற அகத்தியர் விரும்பவில்லை போலும்..இதோ நம் "தேடல் உள்ள தேனீக்களாய்" குழுவின் மூலம் புறப்பாடானது.

உழவாரப்பணிக்கு நாம் அனுமதி பெற வேண்டும் என்றால் சுமார் 1 மாதமாவது கோயிலுக்கு சென்று அதிகாரிகளை பார்த்து பேசி என..நமக்கு  கேட்கும் போதே தலை சுற்றி விடும். சில கோயில்களில் தாமாகவே கேட்பதுண்டு.அது போன்ற கோயில்களைத் தான் நாம் தேர்வு செய்தும் வருகின்றோம். அலுவலக சுற்றுலாவாக டார்ஜிலிங் சென்றிருந்தோம். அப்போது செந்தில் வேல் ஐயா அவர்கள் நம் பனப்பாக்கம் கோயிலின் உத்திராக்கம் மண்டபம் அமைக்கும் பணி தள்ளிப்போகிறது.வந்து உழவராம் செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றார்.சுமார் 1 வார காலத்தில் நாம் அங்கிருந்து கொண்டே அலைபேசியில் பேசி, அனைத்தும் ஏற்பாடானது.



7/10/2018 ஞாயிற்றுக்கிழமை என்று தேர்வு செய்தோம். அன்றைய தினம் ரெட் அலெர்ட் வேறு கொடுத்திருந்தார்கள்.சமூக தளங்களில் நம் நல விரும்பிகள் எச்சரிக்கை செய்தனர். நாம் அன்றைய தினம் காலை மழையின் தீவிரம் பொறுத்து ஏற்பாடு செய்வோம் என்று கூறி மற்ற ஏற்பாடுகளில் இறங்கினோம். அன்றைய தினம் காலை சுமார் 6 மணி அளவில் வீட்டிலிருந்து கிளம்பி தாம்பரம் சென்று அங்கிருந்த அன்பர்களை வேனில் ஏற்றினோம். பின்னர் சுமார் 7 மணி அளவில் பூந்தமல்லி சென்று அங்கிருந்த அன்பர்களை ஏற்றுக் கொண்டு புறப்பட்டோம். போகும் வழியில் நம் அன்பர் திரு.மனோகரன் அவர்களை ஏற்றும் வண்ணம் மப்பேடு வழியாக சென்று,அவர்களையும் இணைத்துக் கொண்டோம். காலையில் அனைவரும் வெகு சீக்கிரமாக கிளம்பியதால் உணவு எடுக்க முடியவில்லை.ஆனால் சிரமேற்கொண்டு பரிமளம் அவர்கள் காலை உணவாக இட்லி தயாரித்துக்கொண்டு வந்தார்கள். மிக மிக சுவையாக இருந்தது காலை உணவு. உங்கள் பார்வைக்கு சில காட்சிகள்.








காலை உணவு முடித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டோம். சுமார் 9 மணி அளவில் பனப்பாக்கம் ஸ்ரீ மாயூரநாதர் திருக்கோயில்  அடைந்தோம். முதலில் கோயிலை ஒருமுறை சுற்றி பார்த்தோம். நம் அன்பர் செந்தில் வேல் ஐயா வந்து, நம்முடன் குருக்களை அறிமுகம் செய்து வைத்தார். சுவாமிகளின் வஸ்திரங்களை துவைத்து காய வைக்க ஒரு அணியினர் சென்றனர். கோயிலினுள் உள்ள பாத்திரங்கள், விளக்குகள் போன்றவற்றை தூய்மை செய்ய மற்றொரு அணி சென்றது. இப்படியாக வேலைகளை அனைவரும் பிரித்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.







கோயில் மிக மிக பழைமையான கோயில் என்று பார்க்கும் போதே தெரிந்தது. சிலர் கோயில் பிரகாரத்தை கூட்டி பெருக்கி, ஒட்டடை அடிப்பதாக சொல்லி அந்த பணிகளை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இப்படியாக உழவாரப் பணி ஆரம்பமானது. நாம் அப்படியே நம் அப்பன் அகத்தீசன் சன்னதி சென்று தரிசித்தோம். இரண்டாண்டு ஏக்கம். உங்களுக்கு அமைய உள்ள உருத்திராக்க மண்டபம் விழாவினை சார்ந்து நாங்கள் இங்கே உழவார செய்ய வந்துள்ளோம். எங்களை நீங்கள் தான் ஆசிர்வதிக்க வேண்டும் என்று வேண்டினோம்.




ஸ்வஸ்திக் சக்கரமே பார்க்க சிறப்பாக இருந்து நமக்கு ஆசி வழங்கியதைக் கண்டோம்.


அட..கோயில் நுழைவாயில் இங்கே..




புலியும் மயிலும் இங்கு வந்து வழிபட்ட தலம், சரி..உழவாரப்பணி அனுபவம் தொடரும் முன். இத்திருக்கோயில் பற்றி மீண்டும் மீள்பதிவாக சில செய்திகள் இங்கே பகிர்கின்றோம்.

  1.  விலாச காஞ்சி
  2. திருத்தலபுரி
  3. பனசையம்பதி
  4. மயூரபுரி
  5. புலியூர்
  6. இந்திரபுரி
  7. பிரம்மபுரி
  8. கய்யாணமாவூர்
  9. பாலாற்றின்வடகரை
  10. பனப்பாக்கம்

என்ற பத்து விதமான பெயர்களில் அழைக்கப்பட்டு வருகின்ற ஊர் தான் பனப்பாக்கம்.

 இத்தலத்தின் தல வரலாறு பற்றி கேள்விப்பட்டோம். இப்படியெல்லாம் நடைபெற காரணம் என்ன? கைலாயத்தின் முக்கியத்துவம் இங்கே உணர முடிகின்றது. தலைவரின் சொல்லே தரணி ஆளும் மந்திரம் என்றும் உணர்ந்தோம்.இதோ தல வரலாறு.

தலவரலாறு

ஒரு சமயம் சிவன் கயிலாயத்தில் உள்ள உத்தியான வனத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் தியானத்தில் இருக்கும் போது உமாதேவியும் நந்திதேவரும் அவ்விடத்தை விட்டு அவ்வனத்தின் பேரழகை கண்டனர். உமாதேவி அங்கு மயில் தோகை விரித்து ஆடுவதையும், நந்திதேவர்  அங்கு புலியின் விளையாட்டையும் கண்டு ரசித்துக்கொண்டிருந்தனர். சிவபெருமான் தியானத்திலிருந்து நீங்கி அங்கு உமாதேவியும் நந்திதேவரும் காணாததால் கயிலாயம் சென்றார். உமாதேவியும் நந்திதேவரும் திரும்பி வந்து பார்க்க சிவபெருமான் அங்கு இல்லாமையால் அவர்களும் கயிலாயம் சென்றனர். அங்கு சிவபெருமான் நீங்கள் இருவரும் என்னை மறந்து மயில் ஆட்டத்தையும், புலி விளையாட்டையும் பார்த்துக்கொண்டிருந்ததால் புவியில் மயிலாகவும், புலியாகவும் மாறுக என சபித்தார். இவ்விருவரும் சாபம் நீங்க வழியாதென வினவ பூவுலகில் தொண்டைநாட்டில் முக மண்டலம் போன்ற காஞ்சிக்கு ஒரு காத தொலைவில் பனசையம்பதியில் நம் திருவுருவமாக உள்ள சோதிவடிவாக உள்ள பெருமானை பூசிக்க இச்சாபம் விலகும் என்றார். இவ்விருவரும் இத்தலத்திற்கு வந்து பூசை செய்து வழிபட்டு சாபம் நீங்கப்பெற்றனர்.

மாயூரநாதர்

அன்று முதல் மயில் பூசித்ததால் அச்சோதிலிங்கப் பெருமானுக்கு மயூரநாதன் (மயூரம்-மயில்) என்றும் தல விருட்சம் பனை ஆதலால் பனசையம் பதி என்றும், பஞ்சதால மரங்கள் தோன்றியதால் தாலமா நகர் என்றும் பெயர் பெற்றது.இனி யாரெல்லாம் இங்கே வந்து வழிபட்டார்கள் என்று சுருக்கமாக காண்போம்.

உமாதேவி

மயிலாக சாபம் பெற்ற உமாதேவி பல வனாந்திரங்களைக்கடந்து சிவகங்கையில் நீர் அருந்த பூர்வ ஞானம் தோன்றி சோதிலிங்க பெருமானை அடைந்து பூசித்தார் . பூசனைக்கு மகிழ்ந்த சிவபெருமான் காட்சியளித்து வேண்டும் வரம் யாதென வினவ, ஐயனே என் சாபம் நீங்கப்பெற்றதை போன்று உம்மை பூசிக்கும் அடியார்களின் ஆணவபிணி நீங்கவும் இத்தலம் காஞ்சிக்கு அணித்தாக உள்ளதால் விசால காஞ்சி எனவும் பெயர்பெறவும் அருள் செய்தல் வேண்டும் என்றார். இறைவன் அவ்வாறே வரம் அளித்தார். உமையின் மயிலுருவத்தை அருளுடன் நோக்க அதிலிருந்து பாக்கு, பனை, தெங்கு, தாளிப்பனை, ஈந்து (ஈச்சை) ஆகிய ஐவகை மரங்களும் தோன்றின. உனது வடிவம் மிக்க வனப்புடன் இருப்பதால் உலகத்தார் சவுந்தரநாயகி என உன்னை அழைப்பார்கள். நீ என் இடப்பாகம் வந்து அமருவாய் என்று கூறி மறைந்தார்.

நந்திதேவர்

நந்தி தேவர் புலியுருவம் தாங்கி பனசைநகர் வந்து சேர தனது துர்குணங்கள்  நீங்கி சற்குணத்துடன் சோதிலிங்கப் பெருமானைப் பூசிக்க சிவபெருமான் சவுந்தரநாயகியுடன் காட்சி தந்து தன்னை விட்டு நீங்கா வரமும் தந்தார். நந்தி தேவர் புலி உரு கொண்டு இறைவனை பூசித்ததால் திருப்புலியீசன் என்றும் இத்தலம் சிவபுரத்திற்கு ஒப்பானதால் சிவபுரம் என்றும் வழங்கப்படுகிறது.

இந்திரன்

இராமபிரானால் சாபம் பெற்ற தன் மகன் சயந்தனின் சாபம் தீர மாயூரநாதரை வேண்டி சாப விமோசனம் பெற்று தென்மேற்கு திசையில் ஒரு சிவலிங்கம் அமைத்து பூசை செய்ய எம்பெருமான் சூரிய ஒளி போன்று காட்சி தந்ததால் அருணாசலேஸ்வரன் என்று பெயர் பெயரிட்டு வணங்கி தன் இந்திர உலகம் சென்றான்.

பிரம்மன்

கங்கா தேவியால் சிறகுகள் ஒடிக்கப்பட்ட அன்னப்பறவைக்கு மீண்டும் அதே பொலிவு பெற வேண்டி பிரம்மன் அன்னத்துடன் இத்திருத்தலம் வந்து மாயூரநாதரை வணங்கி புதுப்பொலிவு பெற்று திருக்கோயிலுக்கு தெற்கே அரைகடிகை தூரத்தில் ஒரு லிங்கத்தை அமைத்து பூசை செய்து அருள் பெற்றார். பெருமானுக்கு விரிஞ்சகேசன் என்று பெயரிட்டு தன் உலகம் சென்றார்.

திருமால்

திருமாலின் வாகனமான கருடனுக்கு வெப்பு நோய் ஏற்பட்டது. கருடன் திருமாலுடன் இங்கு வந்து மாயூரநாதரை வணங்க அந்நோய் தீரப்பெற்றது. எம்பெருமான் திருமாலை நோக்கி இன்று முதல் நீவீர் இலக்குமிநாராயணராக மேற்குதிசையில் அமர்வாய் என்றார். 

தக்கன்

தக்கனது யாகத்தை அழித்து அவனது தலையை கொய்த வீரபத்திரக்கடவுள் மீண்டும் அவனை ஆட்டுத்தலையுடன் உயிர்ப்பிக்க  சாப நிவர்த்தியாக இத்தலம் வந்து மாயூரநாதரை வணங்க சாப நிவர்த்தி பெற்று கீழ் திசையில் (ரெட்டிவலம்) தான்தோன்றி ஈசனையும் பெரியநாயகி அம்மனையும் ஸ்தாபித்து பூசை செய்து தன் உலகம் சென்றான்.

இராகவன்(இராமன்)

நாட்டிலுள்ளோர் பழிக்க, சீதையை காட்டில் விட்ட பாவம் தீர இராமன், வசிஷ்ட முனிவரின் அறிவுறுத்தலின் பேரில் தாலமா நகர் வந்து மாயூரநாதரை வணங்கி சாப நிவர்த்தி பெற்றார்.

மன்மதன்

சிவபெருமானின் மீது அம்பு தொடுத்த பாவம் தீர மன்மதன், மாயூரநாதரை வணங்கி கிழக்கே ஒரு லிங்க உருவத்தை அமைத்து வழிபட இறைவன் காட்சி தந்து சாப நிவர்த்தி அருளினார். மன்மதன், இறைவனுக்கு மதணேசன் என்றும் அம்பிகைக்கு திரிபுர சுந்தரி என்றும் அவ்வூருக்கு நல்ல நகர் என்றும் பெயரிட்டு வழிபட்டு இரதி தேவியுடன் தன் உலகம் அடைந்தனர்.

இயமன்
இயமன், சிவலிங்கத்தின் மீதும், மார்கண்டேயன் மீதும் பாசக் கயிற்றை வீசிய பாவம் தீர தாலமா நகர் வந்து மன்மதன் வழிபட்ட நல்லீசப் பெருமானை வணங்கி பின்பு மாயூரப்பெருமானையும், திருக்காளத்தி நாதரையும் வணங்கி பாவ நிவர்த்தி பெற்று தன் உலகம் சென்றனன்.

வீரபத்திரர்

தாலமா நகரின் மன்னன் வச்சிராங்கதனும் மக்களும் சைவத்தை மறந்து சமணத்திற்கு மாறுகின்ற சேதியறிந்த எம்பெருமான் வீரபத்திரரையும் பத்திரகாளியையும் அனுப்பி மன்னனையும் மக்களையும் சைவத்திற்கு திருப்பி அனைத்து ஆலயங்களையும் புதுப்பித்தனர். மன்னன் வச்சிராங்கதன் வீரபத்திரருக்கு கோயில் ஒன்று எழுப்பி வழிபட்டு மகிழ்ந்தான்.

அகத்தியர்

திருத்தணிகை வேலனிடம் தாலமாநகரின் வரலாற்றைக் கேட்ட அகத்தியர் தன் மனைவி லோபமுத்திரையுடன் தாலமா நகர் வந்து மாயூரநாதரை வணங்கி வட திசையில் (நெடும்புலி) லிங்க மூர்த்தியையும் அகிலாண்ட நாயகியையும் ஸ்தாபித்து பொதிகை மலைக்கு சென்றனர்.

வேதியர்

மகப்பேறு வேண்டி சிவராத்திரை பூசைக்கு காளத்தி யாத்திரை சென்ற இராமேஸ்வரத்து தம்பதியர் கர்ப்பவாதியான  மனைவியுடன் மயூரநாதரை வணங்கி தங்கியிருக்கும் போது அன்று இரவு ஆண் மகவு பெற்றதனால் காளத்திநாதனை இங்கேயே அமைத்து பூசித்து இராமேசுவரம் சென்றனர்.
மீண்டும் ஒருமுறை கோயிலின் தகவல்கள் சுருக்கமாக இக்கோயில் 5 நிலை ராஜகோபுரம், பிரகாரங்களுடன் மூலவர் சுயம்புலிங்கமாக உள்ளார். அம்மன் சௌந்தர்ய நாயகி. தலமரம் பனைமரம், ஆதலால் இவ்வூருக்கு பனப்பாக்கம் என்றும் உமையம்மை மயில் வடிவில் வழிபாடு செய்ததால் இறைவனுக்கு மயூரநாதர் என்றும் பெயர். இத்தலத்திற்கு திருத்தாலபுரி, மயூரபுரி, புலியூர், இந்திரபுரி, பிரமபுரி, கலியாணமாவூர் முதலிய பெயர்கள் இத்தலப்புராணமாகிய பனசைப் புராணத்தில் குறிக்கப்படுகிறது. நந்திதேவர், பிரமன், இந்திரன், அகத்தியர், முதலியோர் பூஜை செய்து பேறு பெற்றத் தலம். கல்வெட்டுக்கள் 2 உள்ளன. இறைவர் பெயர் புலியப்பர் என்றே குறிக்கிறது. நாள்தோறும் மூன்று கால பூஜை சித்திரை மாதத்தில் மகநட்சத்திரத்தில் பிரமோற்சவம் நடைபெறுகிறது.

கோயில் பற்றி தெரிந்து கொண்டோம் அல்லவா? இந்த இனி வரும் பதிவுகளில் நம் உழவாரப் பணி அனுபவத்தைத் தொடர்வோம். 

இத்தகு பெருமைமிக்க கோயிலில் வருகின்ற 22/10/2018 அன்று அருள்மிகு ஸ்ரீ லோபாமுத்ரா சமேத அருள்மிகு ஸ்ரீ அகத்திய பெருமானுக்கு உருத்திராக்க மண்டபம் அமைக்கும்விழா நடைபெறுகின்றது. இந்த விழாவில் அடியார்கள் கலந்து கொண்டு சித்தர்களின் அருளைப் பெறும்படி வேண்டுகின்றோம்.
விழாவிற்கு செல்லும் அன்பர்கள் முன்கூட்டியே சொன்னால் மதிய உணவு ஏற்பாடு செய்ய  நலமாக இருக்கும்.


வயிற்றிற்கு உணவு மட்டுமின்றி அன்றைய தினம் செவிக்கு உணவும் உண்டு. பொதிகை மாமுனி அகத்தியர்  என்ற தலைப்பில் காலை 11 மணிக்கு சென்னையை சேர்ந்த தி.வடிவுக்கரசி அவர்கள் சொற்பொழிவாற்ற உள்ளார்கள்.

மேலும் விபரங்களுக்கு: ரா.ராகேஷ்- 7904612352, திரு.சந்திரசேகரன் - 9677267266 & திரு.செந்தில்வேல், பனப்பாக்கம் - 8610640983

- மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம் 

மீள்பதிவாக:-

பனப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ மாயூரநாதர் திருக்கோயில் உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post_56.html

பனப்பாக்கம் ஸ்ரீ அகத்திய முனிவ தம்பதிக்கு உருத்திராக்க மண்டபம் அமைக்கும் விழா - http://tut-temple.blogspot.com/2018/09/blog-post_2.html

பனப்பாக்கம் - அகத்திய பெருமான் 108 கலச பூஜை விழா - http://tut-temple.blogspot.com/2017/12/108.html

துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெற - பனப்பாக்கம் வருக ! - http://tut-temple.blogspot.com/2017/11/blog-post_21.html

நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! - https://tut-temple.blogspot.in/2017/11/blog-post_39.html

ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_18.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_5.html

No comments:

Post a Comment