Subscribe

BREAKING NEWS

01 October 2018

தாமிரபரணி புஷ்கரம் தீப ஆரத்தி பெருவிழா அழைப்பிதழ்

அடியார் பெருமக்களுக்கு வணக்கம்.

நம் தளத்தில் ஏற்கனவே தாமிரபரணி புஷ்கரம் என்ற தலைப்பில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தோம்.இன்றைய பதிவில் தாமிரபரணி புஷ்கரம் தீப ஆரத்தி பெருவிழா அழைப்பிதழை அனைவருக்கும் இங்கே பகிர விருப்புகின்றோம். அன்பர்கள் அனைவர்க்கும் மீண்டும் ஒருமுறை புஷ்கரம் பற்றி பேசிவிட்டு, அழைப்பிதழை காண்போம்.

புஷ்கரம் என்பது ஒவ்வொரு வருடமும் ஒரு புனித நதியின் கரையில் நடைபெறும் ஆன்மிகத் திருவிழா. குரு ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதையொட்டி  இந்த விழா நடத்தப்படுகிறது. குரு எந்த ராசிக்குச் செல்கிறாரோ அந்த ராசிக்கு உரிய நதியில் புஷ்கர விழா கொண்டாடப்படுவது மரபு.

புராணப்படி, ஒவ்வொரு புண்ணிய நதிக்கும் ஒரு ராசி உண்டு. மேஷ ராசி கங்கைக்கும்; ரிஷப ராசி நர்மதைக்கும்; மிதுன ராசி சரஸ்வதிக்கும்; கடக ராசி யமுனைக்கும்; சிம்ம ராசி கோதாவரிக்கும்; கன்னி ராசி கிருஷ்ணா நதிக்கும்; துலாம் ராசி காவிரிக்கும்; விருச்சிக ராசி தாமிரபரணிக்கும்; தனுசு ராசி சிந்து நதிக்கும்; மகர ராசி துங்கபத்ரா நதிக்கும்; கும்ப ராசி பிரம்மபுத்ரா நதிக்கும்; மீன ராசி பரணீதா நதிக்கும் உரியதாக சொல்லப்பட்டிருக்கிறது.

குருபகவான் எந்த ராசியில் பிரவேசிக்கிறாரோ அந்த ராசிக்கு உரிய நதியில் புஷ்கரம் கொண்டாடப்படும். அந்த வகையில் குரு பகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு அக்டோபர் மாதம் இடப்பெயர்ச்சி அடைகிறார். இதனை முன்னிட்டு அதிதேவதையாக விளங்கக் கூடிய தாமிரபரணி நதிக்கு 10 நாட்கள் மகா புஷ்கர விழா நடைபெற உள்ளது. தாமிரபரணி மகாபுஷ்கர விழா புரட்டாசி 25ஆம் தேதி அக்டோபர் 11 அன்று தொடங்கி ஐப்பசி 7ஆம் தேதி அக்டோபர் 24 வரை நடைபெற உள்ளது. இது 144 வருடத்திற்கு ஒரு முறை நடைபெறக்கூடியதாகும்.

இந்த விழாவையொட்டி பாபநாசத்தில் தொடங்கி புன்னக்காயல் வரை தாமிரபரணிக்கு சிறப்பான வழிபாடுகள் நடைபெறும். தாமிரபரணி ஆற்றின் இருகரைகளிலும் உள்ள 200 புஷ்கரணி படித்துறைகள் (தீர்த்தக்கட்டம்) சீர் செய்யப்பட்டு, பொதுமக்களின் தீர்த்தமாடலுக்காக ஆயத்தப்படுத்தப்பட்டு வருகின்றன. பாபநாசம் தொடங்கி புன்னைக்காயல் வரை தாமிரபரணி ஆறு பாய்கின்ற 127 கிலோ மீட்டர் தூரத்துக்கு பக்தர்கள் தீர்த்தமாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மகா ஆரத்தி விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட உள்ளது.இந்த விழாவில் கலந்து கொண்டு தாமிரபரணி நதியில் புனித நீராட இந்தியா முழுவதும் இருந்து 1 கோடி பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.புஷ்கர விழாவுக்குப் பின்னால் ஒரு புராண சம்பவம் இருக்கிறது. இந்த புராண சம்பவம் பற்றி தனிப்பதிவில் காண்போம்.

புஷ்கர புண்ணிய காலத்தில் சிவன், விஷ்ணு, பிரம்மா, தேவர்கள், ரிஷிகள் போன்றோர் நதிகளில் வாசம் செய்வதால், இந்த புண்ணிய காலங்களில் நதியில் நீராடுவதால் மூன்றரை கோடி தீர்த்தத்தில் புனித நீராடிய பலன் கிடைக்கும். அன்னதானம், வஸ்திரதானம் போன்ற பல தானங்கள் செய்தால் பன்மடங்கு பலனை தந்து நம்மை மோட்சத்திற்கு போக வழி வகுக்கும். புஷ்கர புண்ணிய காலத்தில் நீராடி பிதுர்களுக்கு தர்ப்பணம் முதலிய சடங்குகள் செய்வதால் பிதுர்சாபம் நீங்கி நல்வாழ்க்கை வாழ வழி வகுக்கும் என்று நம்பப்படுகிறது.






இறை, சித்தர், தாமிரபரணி அருளைப் பெறுவதற்கு இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும். அதுவும் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நிகழ்வு என்றால்...பெறுதற்கரிய பேறாகும்.


தாமிரபரணி புஷ்கர் உதவி தேவை. அகத்தியர் அடியவர்கள் தொடர்புக்கு 09894269986 / 7904612352. அகத்தியர் அடியவர்கள் குழுக்களாக செல்வதாக இருந்தால் கொடுத்துள்ள எண்ணில் மேலதிக விபரங்கள் பெறலாம்.



- மீண்டும் அடுத்த பதிவில் இணைவோம்.

மீள்பதிவாக :-

இறை, சித்தர், தாமிரபரணி அருளை பெறுவதற்கு தாமிரபரணி புஷ்கரம் அழைக்கின்றது - http://tut-temple.blogspot.com/2018/07/blog-post_24.html


No comments:

Post a Comment