Subscribe

BREAKING NEWS

05 October 2018

எனைஇந்த உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே!

அனைவருக்கும் வணக்கம்.

நாம் ஏற்கனவே அறிவித்தது போல், இன்று காலை அகத்தியர் ஆயில்ய ஆராதனை சிறப்பாக நடைபெற்றது. மழை பெய்கிறதே என்று நாம் கவலைப்பட்டோம். ஆனால் மழை மட்டும் போதாது, எங்களின் அருள் மழையையும் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறியது இன்றைய பூசை. தமிழ் ஞானப் பரம்பரையின் மூவரை முருகப்பெருமான், அகத்தியர், வள்ளலார் என இன்று தரிசித்தோம். இன்றைய ஆயில்ய பூசையில் மூவர் தரிசனம் மனதிற்கு இதமாக இருந்தது. மழைச் சாரல் பெய்த போதும், இன்றைய பூசைக்கு வந்து கலந்து கொண்டு அருள் பெற்ற அனைவருக்கும் நன்றி, பூசைக்கு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. அட..இன்று ! வருவிக்க உற்றேன் என்று கூறிய வள்ளலாரின் அவதாரத் திருநாள். இன்று அவர் பற்றி கொஞ்சம் சிந்திப்போம்.





இந்த பிரபஞ்ச பரவெளியில் எத்தனை எத்தனை உயிர்கள் பிறந்து வருகின்றன. நாமெல்லாம் பிறப்பு,இறப்பு என்ற மாயையில் அடைபட்டு இருக்கின்றோம். நாம் பிறந்த நாள் என்று குறிப்போம். கர்ம பந்தத்தை கலைந்த மகான்கள் பிறப்பதில்லை. மாறாக அவர்கள் அவதாரம் செய்கின்றார்கள்.இவர்களையும் தாண்டி செல்லும் போது தான் வருவிக்க உற்றேன் என்ற நிலை நிகழ்த்தப் பெறும். உதாரணத்திற்கு வள்ளலார் மட்டுமே. அவரே சொல்கின்றார்.

அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும்
சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத் தடைவித் திடஅவரும்
இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந் திடுதற் கென்றே எனைஇந்த
உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே.

                                          
இன்னும் சற்று நோக்கினால், உள்ளத்தே கறுத்து அதாவது பேராசை,சினம்,கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி,வஞ்சம் போன்ற பஞ்சமா பாதகங்களை வைத்துக்கொண்டு வெளியே வெளுத்து பேசிக் கொண்டிருக்கும் உலக மக்கள் அனைவரையும் இந்த உலகிலே திருத்தி சன்மார்க்க சங்கத்தில் சேர்த்திடவும் இந்த பிறவியிலே கடவுளைக்  கண்டு  மகிழ செய்திடவும் வருவிக்க உற்றேன் என்கின்றார்.

வருவிக்க உற்றேன் என்றால் ஆங்கிலத்தில் deputation என்று சொல்வார்கள். deputation என்றால் ஏற்கனவே ஓரிடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்து வேறொரு விஷயமாக மற்றொரு வேலை பார்க்க சொல்வது. வள்ளலார் அந்த பரம்பொருளிடம் இருந்து deputation பெற்று நாம் அனைவரும் இந்த பிறவியிலே ஜீவன் முக்தி அடைய வருவிக்க உற்றார். வருவிக்க உற்றவர் தானே அந்த நிலையை அடைந்து காட்டி நமக்கெல்லாம் பிரகாசமாக உள்ளார். இறைவன் பிறப்பிக்கப் பிறந்தாலும் அவனுடைய திருவருள் பேறு இன்றியமையாது என்பதை வற்புறுத்த வேண்டி, “அருளைப் பெற்றேனே” என்று அறிவிக்கின்றார்.

வருவிகளை உறுதல் என்பது பற்பல பல்லாயிரம் கோடி ஆண்டுகளுளாக உடலினால் பிறவி எடுத்து அந்த ஆன்மா கடைசியில் இறையனுபூதி பெறுவது ஆகும்.அப்படி இருக்கும் ஆன்மாவை அழைத்து நீ சென்று இந்த காரியங்களை செய்து எம்மை அடைவீராக என்று கூறும். அது போன்று தான் வள்ளலார் நமக்காக மூன்று காரணங்களுக்காக வருவிக்க உற்றார்.

1. அகம் கறுத்து, புறம் வெளுத்தும் இருக்கும் நாம் அகமும் புறமும் ஒன்றாக இருக்கும்படி சொல்வதே வாழ்வாய் கடைபிடித்தால் 

2. அகமும் புறமும் ஒன்றாக்கிய பின்னர் அவர்களை சன்மார்க்க சங்கத்தில் இணைய செய்தல் 

3. சன்மார்க்க சங்கத்தில் இணைந்த மக்கள் இந்த பிறவியிலேயே அருட்பெருஞ்சோதி ஆண்டவரை அடைதல். அதாவது இறை உணர்ந்து அவரின் பாதம் அடைதல்.

இந்த மூன்றும் கைக்கொணர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் வள்ளலாரை இன்று நாம் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் தரிசித்தோம். சன்மார்க்க அன்பர்கள் அகவல் பாராயணம் செய்தனர். நாம் அகத்தியர் ஆயில்ய ஆராதனை செய்து கிளம்பினோம். கிளம்புவதற்கு முன்னர் குருக்கள் வள்ளலார் பூசை ஊன்று என்று சொன்னார். ஆனால் நமக்கு காதில் மட்டுமே அது விழுந்த்தது. கருத்தில் விழவில்லை. காலணி மாட்டும் சமயத்தில் தான் காதில் விழுந்த செய்தியை பற்றி யோசித்தோம். கறுத்து உள்ள அகம் நீக்கவாவது வள்ளலாரை காண ஓடோடி சென்றோம். ஆரத்தி பெற்றோம். ஒவ்வொன்றாய் இங்கே .




இப்பிறவி வாய்க்குமோ ? இல்லை எப்பிறவி வாய்க்குமோ? எப்பிறவி  வாய்த்தாலும் உற்ற துணையாய் நீர் வேண்டும் என்று .




நம் தல அன்பர்கள் அனைவரும் இந்த தரிசனம் பெற வேண்டியே இந்த பதிவை அளிக்கின்றோம். இப்போது வரை வேறு பதிவு அளிக்க வேண்டும் என்று தான் எண்ணினோம். ஆனால் இன்றைய தினம் வள்ளல் யார் என்று உணர்ந்து உணர்த்தவே இங்கு தருகின்றோம். வள்ளல் மலரடி வாழ்க. வாழ்க !!





 1. துனிநாள் அனைத்தும் தொலைத்துவிட்டேன் தூக்கம் தவிர்த்தேன் சுகம்பலிக்கும்
கனிநாள் இதுவே என்றறிந்தேன் கருத்து மலர்ந்தேன் களிப்புற்றேன்
தனிநா யகனே கனகசபைத் தலைவா ஞான சபாபதியே
இனிநான் இறையும் கலக்கமுறேன் இளைக்க மாட்டேன் எனக்கருளே.

2. அருளும் பொருளும் யான்பெறவே அடுத்த தருணம் இதுஎன்றே
தெருளும் படிநின் அருள்உணர்த்தத் தெரிந்தேன் துன்பத் திகைப்பொழிந்தேன்
மருளும் மனந்தான் என்னுடைய வசத்தே நின்று வயங்கியதால்
இருளும் தொலைந்த தினிச்சிறிதும் இளைக்க மாட்டேன் எனக்கருளே.

3. அருளே உணர்த்த அறிந்துகொண்டேன் அடுத்த தருணம் இதுஎன்றே
இருளே தொலைந்த திடர்அனைத்தும் எனைவிட் டகன்றே ஒழிந்தனவால்
தெருளே சிற்றம் பலத்தாடும் சிவமே எல்லாம் செய்யவல்ல
பொருளே இனிநான் வீண்போது போக்க மாட்டேன் கண்டாயே.

4. கண்டே களிக்கும் பின்பாட்டுக் காலை இதுஎன் றருள்உணர்த்தக்
கொண்டே அறிந்து கொண்டேன்நல் குறிகள் பலவுங் கூடுகின்ற
தொண்டே புரிவார்க் கருளும்அருட் சோதிக் கருணைப் பெருமனே
உண்டேன் அமுதம் உண்கின்றேன் உண்பேன் துன்பை ஒழித்தேனே.

5. ஒழித்தேன் அவலம் அச்சம்எலாம் ஓடத் துறந்தேன் உறுகண்எலாம்
கழித்தேன் மரணக் களைப்பற்றேன் களித்தேன் பிறவிக் கடல்கடந்தேன்
பழித்தேன் சிற்றம் பலம்என்னாப் பாட்டை மறந்தேன் பரம்பரத்தே
விழித்தேன் கருத்தின் படிஎல்லாம் விளையா டுதற்கு விரைந்தேனே.

6. விரைந்து விரைந்து படிகடந்தேன் மேற்பால் அமுதம் வியந்துண்டேன்
கரைந்து கரைந்து மனம்உருகக் கண்­ர் பெருகக் கருத்தலர்ந்தே
வரைந்து ஞான மணம்பொங்க மணிமன் றரசைக் கண்டுகொண்டேன்
திரைந்து நெகிழ்ந்த தோலுடம்பும் செழும்பொன் உடம்பாய்த் திகழ்ந்தேனே.

7. தேனே கன்னல் செழும்பாகே என்ன மிகவும் தித்தித்தென்
ஊனே புகுந்தென் உளத்தில்அமர்ந் துயிரில் கலந்த ஒருபொருளை
வானே நிறைந்த பெருங்கருணை வாழ்வை மணிமன் றுடையானை
நானே பாடிக் களிக்கின்றேன் நாட்டார் வாழ்த்த நானிலத்தே.

8. நிலத்தே அடைந்த இடர்அனைத்தும் நிமிடத் தொழித்தே நிலைபெற்றேன்
வலத்தே அழியா வரம்பெற்றேன் மணிமன் றேத்தும் வாழ்வடைந்தேன்
குலத்தே சமயக் குழியிடத்தே விழுந்திவ் வுலகம் குமையாதே
நலத்தே சுத்த சன்மார்க்கம் நாட்டா நின்றேன் நாட்டகத்தே.

9. அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும்
சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத் தடைவித் திடஅவரும்
இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந் திடுதற் கென்றே எனைஇந்த
உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே.

10. பெற்றேன் என்றும் இறவாமை பேதம் தவிர்ந்தே இறைவன்எனை
உற்றே கலந்தான் நானவனை உற்றே கலந்தேன் ஒன்றானேம்
எற்றே அடியேன் செய்ததவம் யாரே புரிந்தார் இன்னமுதம்
துற்றே உலகீர் நீவிர்எலாம் வாழ்க வாழ்க துனிஅற்றே. 






“அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி” 

- மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.

 மீள்பதிவாக:-

அற்றார் அழி பசி தீர்த்தல் - அன்னம்பாலிப்பு சிறப்புப் பதிவு - http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_17.html

அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் - http://tut-temple.blogspot.com/2018/07/blog-post_12.html

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன் ! - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_18.html

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு 21/05/2018 - http://tut-temple.blogspot.in/2018/05/21052018.html

திருஅருட்பா அமுது உண்போம் - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_23.html

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_22.html

அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை -புரட்டாசி -2017- http://tut-temple.blogspot.in/2017/09/2017.html

அகத்திய முனிவரின் பஞ்ச யாக ஷேத்திரம் - பஞ்செட்டி சதய பூஜை அழைப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_74.html



No comments:

Post a Comment