Subscribe

BREAKING NEWS

07 March 2018

ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே !

அனைவருக்கும் வணக்கம்.

முந்தைய பதிவில் தீர்த்தமலை யாத்திரை ஆரம்பித்தோம். தீர்த்த மலை ஏற்றத்தில் நந்தியெம்பெருமான் தரிசனத்தோடு நிற்கின்றோம். இன்றைய பதிவிலும் தீர்த்த மலை சம்பந்தமாக காண உள்ளோம். நாம் தீர்த்தமலை தரிசனம் முடித்து கீழே இறங்கிய பிறகு குருமண்டலம் அகஸ்தியர் ஆசிரமம் சென்றோம். அங்கே நமக்கு கிடைத்த அனுபவங்களை இந்த பதிவில் தொடர இருக்கின்றோம். தீர்த்தமலையில் இருந்து கீழே இறங்கியதும் அங்கே அகத்தியர் ஆசிரமம் உள்ளதா? என்று விசாரித்தோம். சிலர் அருகே இருப்பதாகவும், சிலர் தூரமாக இருக்கும் என்றும் கூறினார்கள். மதியம் 3 மணி அளவில் கீழே இறங்கி விட்டபடியால், சரி. குருமண்டலம் அகஸ்தியர் ஆசிரமம் செல்ல முடிவெடுத்து நடக்க ஆரம்பித்தோம்.

சுமார் 1  கி,மீ தொலைவில் ஆசிரமம் அடைந்தோம். அதற்கு முன்பாக,ஆசிரமத்தை நெருங்க, நெருங்க  சுவாமி வீரமணி தாசன் அவர்களை தொடர்பு கொண்டோம். அவரும் தாம் ஆசிரமத்தில் இருப்பதாகவும், கண்டிப்பாக வாருங்கள் என்று அருளாணை பிறப்பித்தார். சுவாமி வீரமணி தாசன் அவர்கள் பக்திப் பாடல் எழுதி பாடுவதில் வல்லவர். அவருடைய ஆன்மிக பயணத்தில் சுவாமி அவர்கள் திருஅண்ணாமலையில் அகஸ்தியர் ஆசிரமம் கட்ட உத்தரவானது. ஆனால் சில காலங்களுக்கு பின் அது மீண்டும் தீர்த்தமலையில் அமையும் என்று அருளாணை பிறப்பிக்கட்டு, இதோ எங்கள் கண் முன்னே அகஸ்தியர் ஆசிரமம்.

இந்த பதிவில் சுவாமிகள் பாடிய பாடலின் வரிகளை அங்கே அங்கே தூவி விட்டுள்ளோம். படித்து இன்புறுக.





ஓம் அகஸ்த்திய நாதனே 
ஸ்ரீ சற்குரு நாதனே 
ஓம் குருமுனி தேவனே 
ஸ்ரீ குருமண்டல தெய்வமே 










தீர்த்தமலை தரிசனம் முடித்து கீழே இறங்கினோம். நல்ல வெயில். தீர்த்த மலையை பார்க்கும் போது, அதன் ஒரு பகுதி வேறொரு வண்ணமாக இருக்கும். ஒரு பகுதி பசுமையாக இருக்கும். நன்கு உற்றுப் பாருங்கள்.




தீர்த்தமலை அடிவாரம் அடைந்தோம்.சுமார் 1 கி.மீ தூரம் நடந்து வந்திருப்போம். இது தீர்த்தமலையில் இருந்து திருஅண்ணாமலை செல்லும் பாதையில் நடந்து வர வேண்டும். அப்போது சரியாக ஆசிரம அறிவிப்பு கண்டோம். அதுவும் அகத்தியர் பெருமான் நம்மை அழைப்பது போல் இருந்தது. உச்சி குளிர்ந்தது என்றே சொல்ல வேண்டும்.






ஆசிரமம் நோக்கி உள்ளே சென்றோம், வெட்ட வெயிலில் நடந்து சென்றோம். அப்பொழுது செல்லப்பன் அண்ணன் எப்படி வெறுங்கையில் செல்வது? ஏதாவது வாங்கிக்கொண்டு செல்லலாம் என்றார். நாம் உள்ளே ஆசிரமம் சென்று பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறி சமாளித்து ஆசிரமம் நோக்கியே நம் கவனம் இருந்தது.




பக்கத்தில் செல்ல,செல்ல தீர்த்தகிரியின் தித்திப்பு நம் நெஞ்சில் தேன் போல் இருந்தது. இங்கு தான் நாம் காலையில் சென்று வந்தோமா என்று தோன்றியது. அவ்வளவு பிரம்மிப்பு இன்னும் நம்முள் உள்ளது. ஆசிரமம் அடைந்ததும் உள்ளே நுழைந்தோம். நேரே சென்று வீரமணிதாசன் சுவாமிகளைக் கண்டு,ஆசிர்வாதம் பெற்றோம். அவரும் நம்மை அன்போடு வரவேற்று, அகத்தியர் சந்நிதி நோக்கி அழைத்துச் சென்றார். அங்கே சென்றதும் நம் கண் முன் கடன் தொல்லை தீர அகத்தியர் அருளிய பாடல் தெரிந்தது. நம் தள அன்பர்களுக்காக இங்கே பகிர்கின்றோம்.



இந்த பாடலை தினமும் தினசரி பூசையில் மனமுருக பாடி வரவும். இல்லையேல் இதனை ஒரு பிரதி எடுத்து, மஞ்சள் தடவி வீட்டின் பூஜை அறையில் வைக்கவும்.தினசரி பூஜையில் தூபம் தீபம் காட்டி வரவும். கண்டிப்பாக அருளாதாரம் பெற்று பொருளாதாரத்தில் மேன்மை அடைவது உறுதி.



ஆசிரமத்தின் ஒரு பக்கம் பார்த்து மெய் உருகினோம். சும்மா இரு என்று உணர்த்திய ரமணர், சேஷாத்திரி , நாம மகிமை ஊட்டும் யோகி ராம் சூரத் குமார் என கண்டு, அருளில் திளைத்தோம். அருட்கடலில் நீந்திக் கொண்டு இருந்தோம் என்றே சொல்ல வேண்டும்.


மறுபுறத்தில் சித்தர் காப்பு பாடல் காணக் கிடைத்தது.

காப்பான கருவூரார் போகநாதர்
கருணையுள்ள அகத்தீசர் சட்டைநாதர்
மூப்பான கொங்கணரும் பிரம்மச்சித்தர்
முக்கியமாய் மச்சமுனி நந்திதேவர்
கோப்பான கோரக்கர் பதஞ்சலியார்
கூர்மையுள்ள இடைக்காடார் சண்டிகேசர்
வாப்பான வாதத்திற்கு ஆதியான
வாசமுனி கமலமுனி காப்புதானே.

-மகான் ரோமரிஷி

இந்த 14 ஞானிகள் அடங்கிய பாடலை காலையிலும் மாலையிலும் படித்து பாராயணம் செய்தும், பூசை செய்தும் வந்தால் ஞானிகளின் அருள் நிச்சயம் கிடைக்கும். இது போன்ற சித்தர் காப்பு பாடலை தினசரி காலையிலும், மாலையிலு ஓதுவது மிகவும் நன்று. போற்றினால் தானே நம் வினை அகலும்.

அப்படியே அங்கே அமர்ந்து சற்று அகம் நோக்கி திருப்பினோம். வீரமணிதாசன் சுவாமிகள் உள்ளே சென்று பூசைக்கு தயார் செய்து கொண்டிருந்தார். நாங்கள் வெளியே அமர்ந்து ,ஆசிரம அழகை கவனித்துக் கொண்டிருந்தோம். அப்போது செல்லப்பன் அண்ணா நான் வெளியே சென்று ஏதாவது வாங்கி வருவதாக சொன்னார்கள். சுவாமிகள் பூசைக்கு தயார் செய்து நம்மை உள்ளே அழைத்தார். நாம் செல்லப்பன் அண்ணன் வெளியே சென்றிருப்பதாக கூறினோம்.









என்ன ஒரு அமைதியான இடம். அமைதி மட்டுமல்ல..ஆனந்தமும் கூடவே. இது போன்ற இடங்களுக்கு வந்தால் ஓரிரு நாள் தங்கினால் தான் இன்னும் நம்முள் நம்மை நாம் உணர முடியும்.
ஆசிரம இடம் மட்டும் விரிந்து கிடைக்கவில்லை. இங்கே அருளும் விரிந்து தான் கிடக்கின்றது.சுமார் 20 நிமிடத்தில் செல்லப்பன் அண்ணன் வந்து சேர்ந்ததும், சுவாமிகளை அழைத்து பூசைக்கு தயாரானோம்.

பதிவின் ஆரம்பத்தில் உள்ள இரண்டாவது தரிசனம் யாம் பெற்றோம். மிகவும் பொறுமையாக பூசை நடந்து தீபாராதனை காட்டினார். அகத்தியர் அருள் பெற்றோம்.பின்னர் சந்நிதியை சுற்றி வந்தோம். அட..சித்தர்களின் லோகத்தில் நாம் இருக்கின்றோம் என்ற உணர்வை தந்தது. நீங்களே பாருங்கள். ஒவ்வொரு சித்தர்களின் அருள் நிலையை.


சட்டைமுனி,கூர்மமுனி போகருடன்.


ராம ராம ராம என்று நெஞ்சார துதித்தோம். ராமனின் கால் பட்ட தீர்த்தமலையில் ஆஞ்சநேயர் தரிசனம் 


இரு கண்கள் போதவில்லை 




ஓம் கிரியா பாபாஜி நம ஒளம் 


சதாசிவ பிரம்மமே போற்றி.






என்னை ஆளும் பெருமாளே போற்றி.போற்றி.!!


ஒரே திருத்தலத்தில் எத்துனை சந்நிதிகள். சித்தர் பெருமக்கள். கண்ணில் மட்டுமல்ல.கருத்திலும் ஒற்றிக் கொண்டோம். மீண்டும் ஒரு முறை தரிசனம் பெற ஆவல் கொண்டோம். ஆனால் அது நம் உள்ளுணர்வில் மட்டும் இருந்தது. பின்னர்பிரசாதம் வாங்கி வெளியே வந்து, ஆசிரம குடிலில் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அன்பர்கள் ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்காக மீண்டும் ஒரு முறை பூசைக்கு சென்றோம்.



எப்படியோ. நாம் மீண்டும் தரிசிக்க நினைத்தது அந்த எம் பெருமாளுக்கு கேட்டிருக்கும் என்று நம்புகின்றோம்.இதோ மீண்டும் ஒரு தரிசனம்.


தரிசனம் முடித்து வெளியே வந்து, குடிலில் வீரமணிதாசன் சுவாமிகளிடம் அளவலாவிக் கொண்டிருந்தோம். ஏகப்பட்ட செய்திகள்,சுவாமிகளிடம் பேசியபோது நேரம் போனதே தெரியவில்லை. நேரம் மாலை 5 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. மீண்டும் நாம் தீர்த்தமலை அடிவாரத்தில் அருள்பாலிக்கும் தீர்த்தகிரீஸ்வரர் தரிசனம் பெற வேண்டி இருப்பதால், சுவாமிகளிடம் விடை பெட்ரி,ஆசி பெற்று அங்கிருந்து நகர்ந்தோம். பதிவின் நீளம் கருதி ஓம் அகஸ்த்திய நாதனே ! பாடல் தொகுப்பை தனிப் பதிவாக தருகின்றோம்.

- தீர்த்தமலை யாத்திரை மீண்டும் தொடர்வோம்.

No comments:

Post a Comment