Subscribe

BREAKING NEWS

07 July 2018

வாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (12)

அனைவருக்கும் வணக்கம்.

மாதத்தின் துவக்கத்தில் ஐந்தாறு நாட்களை கடந்து விட்டோம். எப்படி நமக்கு அன்னதானம் போன்ற பதிவுகள் மாதத்தை ஆரம்பித்து வைக்கின்றதோ, அதே போல் வாழ்வாங்கு வாழ தொடர் பதிவு இன்றி நாம் கடக்க இயலாது. வாழ்வாங்கு வாழ என்ற தொடர்பதிவு இன்று பனிரெண்டாம் பதிவை எட்டி உள்ளது. இந்த தொடர்பதிவை தொடர்ந்து வாசித்து அதனை கருத்தில் கொள்பவர்கள் கண்டிப்பாக ஆன்மிகத்தில் புதிய நிலை தொடுவார்கள் என்பது உறுதி. ஆன்மிகத்தில் மட்டுமல்ல, நடைமுறை வாழ்க்கையிலும் புது நிலை அடைவார்கள். நாமும் இங்கேதான் உளியால் செதுக்கப்பட்டு வருகின்றோம். இன்றைய பதிவில் நாம் நம் நடைமுறை வாழ்வியல் சார்ந்த கேள்விகளை பார்ப்போம். 

கேள்வி - எதை எண்ணுகிறாயோ அதுவாகவே ஆகிறாய். எதை விரும்புகிறாயோ அதை அடைவாய் என்று சொல்லுகிறார்கள். யார்தான் துன்பத்தை விரும்புவார்கள்? நானும் துன்பத்தை விரும்புவதில்லை. ஆனால் என் வாழ்க்கை துன்பத்தின் மொத்த வடிவமாக இருக்கிறது. ஏன் இவ்வாறு உள்ளது?

இராம் மனோகர் - பதிலை நீங்களே சொல்லி விடுகிறீர்கள். பிறகு என்னிடமும் அந்த பதிலுக்கு ஒரு கேள்வியை கேட்கிறீர்கள். நான் என்ன சொல்வது ? அதையேதான் சொல்ல முடியும் !! நீங்கள் துன்பத்தை விரும்புவதில்லை. ஆனால், துன்பத்தைப் பற்றியே இடைவிடாது எண்ணிக் கொண்டும், கவலைப்பட்டுக் கொண்டும் இருக்கிறீர்கள். ஆக நீங்கள் எதை அழுத்தமாக எண்ணுகிறீர்களோ அதன் வடிவமாகவே (துன்பமாகவே) வாழ்க்கை இருக்கிறது. இன்பம் வேண்டுமென்றால் இன்பத்தை எப்படி அடைவது என்று மட்டும்தான் நீங்கள் யோசிக்க வேண்டும்.


ஆனால், அதனால் மட்டுமே இன்பம் கிடைத்து விடுமா என்று கேட்டால், கிடைக்கும்.... ஆனால்... கிடைக்காது என்று வடிவேல் பாணியில்தான் பதில் சொல்ல முடியும். ஏனெனில் அதிக இன்ப நாட்டமே நமக்குத் துன்பத்தை ஏற்படுத்தி விடுகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை. இன்பமோ, துன்பமோ இரண்டுமே நம் செயல்களின் விளைவுகள்தாம். பாவம் செய்தவன் துன்பத்தை அனுபவிக்கிறான், புண்ணியம் செய்தவன் இன்பத்தை அனுபவிக்கிறான் என்பது கோட்பாடு. இதை நாம் அனைவருமே அறிந்து வைத்திருக்கிறோம்.

ஆனால் வெறுமனே அறிந்து மட்டும் வைத்துக் கொண்டிருக்கிறோமே தவிர, நடைமுறையில் அதன் நுட்பம் உணர்ந்து செயல்படுவதில்லை. சரி, நமக்குத் துன்பம் வந்தால் நாம் என்ன செய்கிறோம் ? அந்தத் துன்பத்தை எப்படிப் போக்குவது, அதிலிருந்து எப்படி விடுபடுவது என்று யோசிக்கிறோம். அது போலவே இன்பமும் வருகிறது என்று வைத்துக் கொள்வோம், அப்பொழுது என்ன செய்கிறோம் ? அந்த இன்பத்திலிருந்து எப்படி விடுபடுவது என்று யோசிக்கிறோமா ? இல்லையே ? இன்னும் இன்னும் வேண்டும் என்று அதன் பின்னால் நாயாய் அலைகிறோம்.
அதனால்தான் துன்பம் வந்து விடுகின்றது. எப்படித் துன்பத்தால் பாவம் தொலைகிறதோ, அது போலவே இன்பத்தால் நம் புண்ணியமும் தொலைகிறது. இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டுமே தடைதான். இரு வினைகளையும் கடப்பதுதான் நம் பிறவியின் நோக்கமாக அமைந்திருக்கிறது. ஆனால், நாம் என்ன செய்கிறோம் ? இன்பத்தை எப்படியாவது அடைந்து விட வேண்டுமென்று அறிந்தோ அறியாமலோ நிறைய பாவங்களைச் செய்து விடுகிறோம். விளைவு வாழ்வே துன்பமாக ஆகி விடுகின்றது.

எனவே நாம் இன்பம் மட்டுமே வேண்டுமென்று நினைத்தால், புண்ணிய காரிங்களை மட்டுமே செய்ய வேண்டுமே தவிர, இன்பத்தைத் தேடி அலையக் கூடாது. அது மீண்டும் பாவத்தில் தள்ளி விடும். எது புண்ணியம் ?
''துன்பநும்மைத் தொழாதநாள்க ளென்பாரும்
இன்பநும்மை யேத்துநாள்க ளென்பாரும்
நும்பினெம்மை நுழையப்பணியே யென்பாரும்
அன்பனாரூ ராதிரைநாளா லதுவண்ணம்.''

இறைவனை வணங்குவதும், அவன் அடியார்களுக்கு (பிற உயிர்களுக்கு) தொண்டு செய்வதுமே புண்ணியம்.



கேள்வி - தேவலோகம், தேவர்கள் இதெல்லாம் உண்மையா ?

இராம் மனோகர் - உண்மைதான். நாம் சிறுவர்களாக இருக்கும் பொழுது நிலாவில் பாட்டி வடை சுட்ட கதையை கேட்டோம். வளர்ந்த பிறகு அது பொய் என்பதைத் தெரிந்து கொள்கிறோம். எனினும் கூட அதே பொய்யான கதையையே மீண்டும் நாம் நம் குழந்தைகளுக்குச் சொல்கிறோம். பாட்டி வடை சுட்டது வேண்டுமானால் பொய்யாக இருக்கலாம், ஆனால் நிலா பொய்யல்ல. அது இருக்கிறது என்பது நிஜம். கதை கேட்கும் பொழுது நிலவுக்குப் போக வேண்டும் என்ற ஆசை குழந்தைகளுக்கு வருகிறது. ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக வடிவெடுத்த அந்த ஆசை மனிதனின் சித்தத்தில் பதிவாகி வலிமை அடைந்த காரணத்தால்தான் இன்று அது நிஜமாகி விட்டது. இது ஒரு மிகப் பெரிய உண்மையாகும். இன்றைய நவீன விஞ்ஞான கண்டுபிடிப்புகளெல்லாம் ஏற்கனவே, பண்டைய புராணங்களிலோ, கதைகளிலோ சொல்லப்பட்ட விஷயங்களேயாகும். காலகாலமாக அந்தப் புராணங்களைக், கதைகளைப் படிக்கும் பொழுது மக்கள் மனதில் எழும் ஆவல்தான் சித்தத்தில் பதிவாகி பின்பு உண்மையாக வடிவெடுக்கிறது. பரிணாம மாற்றம் என்பது கூட இவ்விதத்தில்தான் நிகழ்கிறது. ஒரு உயிரின் தேவையும், அதனால் எழும் இச்சையும் சித்தத்தில் பதிவாகி மரபு வழியாகத் தொடர்ந்து வந்து அழுத்தம் பெரும் பொழுதுதான் புதிய உயிரினம் பரிணமிக்கின்றது. அது போல தேவலோகம், தேவர்கள் போன்ற கருத்துகளிலும் உண்மையும், பொய்யும் கலந்தே காணப்படுகின்றது. ஆனாலும், அதன் மூலமாக மனிதன் மனதில் ஏற்படுத்த நினைத்த மாற்றங்கள் நடந்து விட்டன. மனிதன் கற்கால மனிதனில் இருந்து மாறி மாறி பரிணமித்து இன்று தேவ நிலையை அடைந்து விட்டான். ஆனால், தேவ நிலை என்றால் என்ன என்பதைப் பற்றிய உணர்வு அவனிடத்தில் இல்லை அவ்வளவுதான். அதைப் பற்றி இப்பொழுது பார்ப்போம்.

அதாவது நமது ஆன்மாவுக்கும், புறப்பொருட்களுக்கும் இடையிலான தொடர்பே அறிவாகும். இந்த ஆன்மா நேரடியாக எந்தப் புறப்பொருளோடும் தொடர்பு கொள்ள முடியுமா என்று கேட்டால், முடியாது. இடையில் மனம் என்ற ஒன்று வேண்டும். மனம் மட்டும் இருந்து விட்டால் போதுமா ? போதாது. அந்த மனம் புறப்பொருளின் வடிவத்தை எடுக்க வேண்டும். எந்தப் பொருளைப் பற்றி நாம் அறிய முற்படுகிறோமோ, அந்தப் பொருளின் உருவை நம் மனமானது எடுக்கிறது. மனதின் இந்த நிலையையே விருத்தி என்கிறார்கள். ஆன்மாவின் ஒளி அந்த விருத்தியாகிய எண்ண அலையின் மீது விழும் பொழுதுதான் அறிவு உதயமாகிறது. இப்படி அறிந்து கொண்ட ஒரு விஷயத்தை கண்களை மூடிக் கொண்டு நாம் எப்பொழுது வேண்டுமானாலும் நினைவு கூற முடியும். காரணம் விருத்தியாகிய எண்ண அலைகள் சித்தத்தில் பதிவாகி இருப்பதினால்தான். இப்படிப்பட்ட எண்ண அலைகள் பலவகைப்படும். நம்முடைய இந்த வாழ்க்கை என்பதே எண்ண அலைகளால் ஆனதே. நம் வாழ்க்கையானது ஒரு உலகம், அந்த உலகத்திற்குள் ஒரு உலகம், அதற்கும் உள்ளே மற்றோர் உலகம் என்று அடுக்கடுக்கான சூக்கும சக்திகளாலான உலகங்களால் ஆனது. உள்ளும், புறமும் இது போலப் பல சூக்கும, நுண்ணிய உலகங்கள் உள்ளன. மனதை அவற்றை நோக்கிச் செலுத்தினால் , அவற்றைப் பற்றி நாம் அறிந்து கொள்ள முடியும்.

மனதின் அத்தகைய உருமாற்றங்கள் அனைத்தும் விருத்தியாகிய எண்ண அலைகள்தான். விருத்தியின்றி அறிவு உதயமாவதில்லை. தூங்கும் ஒருவனுடைய மனமானது அஞ்ஞானத்தின் வயப்பட்ட தமஸில் மூழ்கிக் கிடப்பதால், அதில் எந்த விருத்தியும் எழுவதில்லை என்று சொல்வார்கள். ஆனால், பதஞ்சலி மகானும், சில அத்வைதிகளும் நித்திரையிலும் நிர்திரை விருத்தி என்ற விருத்தி உண்டு என்கிறார்கள். அதாவது உணர்வு கடந்த நிர்விகல்ப ஸமாதியில் மனமானது ஆன்மாவில் ஒடுங்கி விடுகின்றது. அப்பொழுது ஆன்மா மட்டுமே இருக்கிறது. இது ஒரு அறிவு நிலையல்ல. இது இருப்பு நிலை. இரண்டற்ற நிலையாகும் இது. இரண்டற்ற நிலையான இந்த அனுபவ நிலை ஒன்றைத் தவிர பிற எல்லா அறிவு நிலைகளும் விருத்திகளாலேயே உண்டாகின்றன. அது சாதாரண உணர்ச்சியாக இருந்தாலும் சரி, மகோன்னதமான ஆன்மீகக் காட்சிகளாக இருந்தாலும் சரி அங்கு எண்ண அலைகள் இருந்தே தீரும் என்பது கோட்பாடு.
அறிவின் நிலையே பிரமை எனப்படுகிறது. பிரமை எனும் பொழுது சரியான அறிவும் உண்டு, தவறான அறிவும் உண்டு. சரியான அறிவை ஏற்படுத்தும் எண்ண அலைகளை பிரமாணம் என்பார்கள். தவறான அறிவைத் தரும் எண்ண அலைகளை விபர்யம் என்று சொல்வார்கள். பற்று, வெறுப்பு, பயம் போன்ற உணர்ச்சிகளெல்லாம் விபர்ய விருத்திகளின் விளைவுகளே. இன்னும் ஒரு அறிவு இருக்கிறது. இது சரியானதுமல்ல, தவறானதுமல்ல எனப்படுகிறது. இதை விகல்பம் என்பார்கள். உதாரணமாக ஒரு தெய்வத்தின் உருவத்தை நாம் தியானிக்க முற்படும் பொழுது எழும் அறிவு உண்மை அறிவல்ல. ஏனென்றால், அந்த தெய்வத்தை அப்பொழுது நேரில் காண்பதில்லை. எனினும் அது தவறான அறிவு என்று சொல்லி விடவும் முடியாது. ஏனெனில் அது இல்லாத ஒன்றைப் பற்றிய கற்பனையுமல்ல. இத்தகைய நிலையையே விகல்பம் என்பர். ஆரம்பகால தியானம் விகல்ப நிலையில் நடக்கிறது. தொடர்ந்த முயற்சியாலும், பயிற்சியாலும் நாம் இஷ்ட தெய்வத்தின் காட்சியை அனுபவிக்கும் பொழுது விகல்பமானது உண்மை அறிவான பிரமாணம் ஆகி விடுகின்றது. புலன் கடந்த உண்மையைப் பற்றிய உண்மை அறிவே அனுபூதி எனப்படுகிறது. இதை அடைவதுதான் தியானத்தின் இலட்சியமாகும்.

இப்படி மனதின் பல அடுக்குகள் அல்லது நிலைகளிலும் ஒவ்வொரு நிலைக்கும் குறிப்பிட்ட விருத்திகள் உள்ளன. புற அடுக்குகளில் எழும் எண்ண அலைகள் ஸ்தூலமானவை. மனதின் ஆழ்நிலை அடுக்குகளின் விருத்திகள் நுட்பமானவை. இந்த நுட்பமான, சூக்கும விருத்திகளின் மூலமே ஆன்மீக உலகின் புலன் கடந்த உண்மைகள் அறியப்படுகின்றன. தூல நிலையில் உள்ள அடுக்களை மட்டுமே அறிந்திருக்கிற நமக்கு ஆழ்நிலை விருத்திகளை அறிய முடிவதில்லை. புறவுலகில் இருந்து மனதைப் பிரித்து தூய்மைப்படுத்துவதன் மூலமாகவும், தியானத்தின் மூலமாகவும்தான் ஆழ்நிலை பகுதிகளுக்குச் செல்ல முடியும். எண்ண அலை ஆன்ம ஒளியை பிரிதிபலிப்பதே அறிவு என ஏற்கனவே சொன்னேன். அதன்படி ஸ்தூல விருத்திகள் மிகக் குறைந்த அளவு ஒளியையே பிரிதிபலிக்கின்றன. எனவே அதில் தன்ன்றிவும் குறைந்த அளவே உள்ளது. ஆழ்நிலையில் உள்ள சூக்கும விருத்திகளே அதிக ஒளியைப் பிரிதிபலிக்கின்றன. எனவே அறிவும் தன்னறிவு மிக்கதாக விளங்குகிறது. மன ஆழங்களில் மூழ்க மூழ்க ஒருவன் ஆன்மாவை நெருங்கிக் கொண்டேயிருக்கிறான். அதனால் ஆன்ம ஒளியை அதிகமாகப் பெற்று அறிவில் தெளிவும், ஞானமும் பெறுகிறான்.

எல்லோரிடத்திலும் ஒரே ஆன்மாதான் உள்ளது. மனதில் எழும் எண்ண விருத்திகள்தான் ஒருவருக்கொருவர் வேறுபாட்டை உருவாக்குகின்றன. அனைத்து ஆன்மாக்களும் தெய்வீகமானவைகள்தான். ஆனால், தெய்வீகம் வெளிப்படுகின்ற அளவு மனிதருக்கு மனிதர் வேறுபடுகின்றனர். அதிக ஆன்ம ஒளியை பிரிதிபலிப்பவர்களையே தேவர்கள் என்பார்கள். தேவர்கள் என்ற சமஸ்கிருத வார்த்தையின் பொருள் ஒளிர்பவர்கள். என்பதுதான். தியானத்தால் ஒவ்வொருவரும் இந்த தேவ நிலையை அடைந்திட முடியும். அத்தகைய நிலையை ஒருவர் அடைந்து விட்டால் இவர் இருக்கும் இடம் தேவ லோகம்தான்.அனைத்து சமயங்களும் தேவர்கள் இருப்பதாகதான் சொல்கின்றன. ஆன்மாவே இல்லை என்று சொல்கிற பௌத்த சமயம் கூட ஒளியுடல், ஒளியுடல் உலகம் என்று இதை விளக்குகிறது.

கேள்வி - எனக்கு எந்த குருவின் மீதும் நம்பிக்கை வரமாட்டேன் என்கிறது. நான் என்ன செய்வது ?

இராம் மனோகர் - முதலில் உங்கள் மீது உங்களுக்கு எந்த அளவுக்கு நம்பிக்கை இருக்கிறது என்று ஆராய்ந்து பாருங்கள். தன் மீது நம்பிக்கையும், தன்னைப் பற்றிய புரிதலும் இல்லாதவர்களுக்குத்தான் மற்றவர்களுடைய உதவி தேவைப்படுகிறது. ஒரு குழந்தையைப் பாருங்கள் அது முதலில் குப்புறப் படுக்கிறது, பிறகு தவழ்ந்து செல்கிறது, பிறகு மண்டியிட்டு விலங்கு போல ஊர்ந்து செல்கிறது, பிறகு நிற்க முயற்சி செய்கிறது, இரண்டு எட்டு எடுத்து வைக்கிறது, பொத்தென்று கீழே விழுகிறது, வலி பொறுக்க மாட்டாமல் ஓ... அழுகிறது, எனினும் பாருங்கள் அது தன் முயற்சியை நிறுத்துவதில்லை. மீண்டும் மீண்டும் முயற்சி செய்து, விழுவதும், எழுவதுமாக முடிவில் நடக்க ஆரம்பித்து விடுகிறது.

ஆனால், நீங்கள் என்ன செய்கிறீர்கள். வலிக்கு பயப்படுகிறீர்கள். நீங்கள் விழுவதற்குத் தயாராக இல்லை. விழுந்து விடுவோமோ என்று பயந்து செயலற்ற நிலைக்குள் ஒடுங்கிக் கொள்கிறீர்கள். எதிர் கொள்ளவும், ஏற்றுக் கொள்ளவும், செயல்படுத்தவும் நீங்கள் தயாராக இல்லாத பொழுது உங்கள் காரியங்கள் எப்படி நடக்கும் ? எனவேதான் உங்களுக்கு வேறொருவரின் உதவி தேவைப்படுகிறது. முன்னேறுவதற்கான அடிப்படை அறிவு, நுட்பம், ஆற்றல் யாவும் உங்களிடமே இருக்கிறது. ஆனால், நீங்கள் அதைப் பயன்படுத்துவதில்லை. எனவே அதை வேறு ஒருவர் பயன்படுத்திக் கொள்கிறார். ஒரு கட்டத்தில் நீங்கள் இதை உணரும் பொழுது அவர்கள் நம்பத் தகுந்தவர்கள் இல்லை என்று முடிவு செய்கிறீர்கள்.

அவர்கள் எத்தகையவர்களாக இருந்தால் நமக்கென்ன ? நாம் ஏமாறத் தயாராக இல்லாத பொழுது யார் வந்து நம்மை ஏமாற்ற முடியும். உங்களை நீங்களே மறுத்துக் கொள்கின்ற பொழுது, உங்கள் உள்ளுணர்வுக்கு நீங்களே உங்கள் எண்ணங்களால் எதிர் வினை செய்து கொள்ளும் பொழுது உங்களால் ஏமாற்றத்தைத் தவிர்க்க முடியாது. உங்கள் முன்னேற்றத்திற்கு நீங்களே முட்டுக் கட்டைகளை ஏற்படுத்திக் கொண்டு, பிறரின் உதவியை நாடுகிறீர்கள். அவர்கள் அதைப் பயன்படுத்திச் செல்வந்தர்களாகி விடுகிறார்கள். உங்கள் அடிப்படைத் தேவைக்குக் கூட நீங்கள் அல்லாடும் பொழுது உங்கள் குருநாதர்கள் ஆடிக் காரில் அழகாக வலம் வருகிறார்கள். தனக்குத் தானே கிரீடம் சூட்டிக் கொள்கிறார்கள், தங்கத்தால் அபிஷேகம் செய்து கொள்கிறார்கள், சுகபோக சௌகர்யத்துடன் வாழ்கிறார்கள்.

யோசித்துப் பாருங்கள்!!! இதற்கு யார் காரணம் ? அவர்கள் வந்து உங்கள் வீட்டில் பீரோவில் வைத்திருந்த பணத்தையெல்லாம் கொள்ளையடித்து விட்டுப் போனார்களா ? அல்லது உங்களிடம் வழிப்பறி செய்தார்களா ? நீங்களாகத்தானே கொண்டு போய் கொட்டுகிறீர்கள். எனக்கு பதில் நீங்கள் தியானம் செய்யுங்கள், என் குண்டலினியை ஒரே நாளில் ஏற்றி விடுங்கள், என்னைத் தொட்டு ஆசிர்வதியுங்கள் என்றெல்லாம் சொல்லி உங்கள் செல்வத்தை மட்டுமல்ல, உங்களையே நீங்கள் அவர்களிடம் ஒப்படைத்து விடுகிறீர்கள். உங்களது சோம்பேறித் தனத்தை, முட்டாள் தனத்தை, ஏமாளித் தனத்தை நீங்கள் உணராத வரை எத்தகைய நல்ல குரு வந்தாலும் உங்களுக்கு அவர் மேல் நம்பிக்கை வராது.

முதலில் உங்களை நீங்கள் முற்றிலுமாக உணருங்கள், புரிந்து கொள்ளுங்கள். அறிவாற்றலைப் பயன்படுத்தி உங்கள் நிறை குறைகளை உணர்ந்து வாழ்வை செம்மைப்படுத்துங்கள். எண்ணங்களால் உங்கள் உள்ளுணர்வுக்கு எதிர்ச் செயல் புரிவதை நிறுத்துங்கள். இயற்கையோடு இயைந்த விவேகமான இயக்கத்தை மேற்கொள்ளுங்கள். செயல் வீரராக மாறுங்கள். உங்கள் முழு நம்பிக்கைக்குப் பார்த்திரமானவராக நீங்களே மாறுங்கள். அதற்குப் பிறகுதான் யார் நம்பத் தகுந்த குரு என்பது உங்களுக்குத் தெரியும். ஒரு வேளை நீங்களே கூட அத்தகைய குருவாக இருப்பதற்கான வாய்ப்பும் இருக்கிறது. நல்ல சீடனாக இருக்க வேண்டும் என்கிற எண்ணமும், முயற்சியும் உங்களையே நம்பத் தகுந்த ஒரு நல்ல குருவாக உயர்த்தி விடவும் கூடும்.


நன்றி : திரு.இராம் மனோகர் ஐயா 

மீள்பதிவாக :-

 வாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (11) - http://tut-temple.blogspot.com/2018/06/11.html

வாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (10) -http://tut-temple.blogspot.com/2018/05/10.html

வாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (9) - http://tut-temple.blogspot.in/2018/04/9.html

வாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (8) - http://tut-temple.blogspot.in/2018/02/8.html

வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (7) - http://tut-temple.blogspot.in/2018/01/7_22.html

 வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (6) - http://tut-temple.blogspot.in/2017/12/6.html

வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (5) - http://tut-temple.blogspot.in/2017/11/5.html

வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (4) - https://tut-temple.blogspot.in/2017/10/4.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (3) - https://tut-temple.blogspot.in/2017/09/3.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (2) - http://tut-temple.blogspot.in/2017/08/2.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (1) - http://tut-temple.blogspot.in/2017/07/1.html


No comments:

Post a Comment