Subscribe

BREAKING NEWS

13 July 2018

நீள நினைந்து அடியேன்

அனைவருக்கும் வணக்கம்.

ஜூலை மாத அடியார்கள் பூசையில் ஆடி - சுவாதி நட்சத்திரத்தில் சுந்தர மூர்த்தி சுவாமிகள் குருபூஜை பற்றி தகவல் சொல்லி இருந்தோம். அன்றைய நாள் மேலும் ஒரு சுவையாக மற்றுமொரு நிகழ்வு இணைகின்றது. அது பற்றிய அறிவிப்புக்காகத் தான் இந்த பதிவு. இருப்பினும் அடியாரைப் பற்றி பேசுவதும், கேட்பதும் நாம் செய்த புண்ணியமே. நாயன்மார்கள் வாழ்விலிருந்து நாம் உணர வேண்டிய செய்திகள் இதோ.




அடுத்து..சுந்தர மூர்த்தி சுவாமிகள் பற்றி அறிவோம்.சுந்தரமூர்த்தி நாயனார் என்பவர் சைவசமயத்தில் போற்றப்படும் நால்வரில் ஒருவரும், அறுபத்து மூன்று நாயன்மாரில் ஒருவரும் ஆவார். இவர் திருமணம் செய்துகொள்ள இருந்தபோது சிவபெருமான் கிழவனாக சென்று தடுத்தார்.பின்பு சுந்தரரின் பிறவி நோக்கம் சிவபெருமானை புகழ்ந்து பாடுவது என புரியவைத்தார். இதனை தடுத்தாட்கொள்ளுதல் என சைவர்கள் கூறுகிறார்கள். இவர் இறைவன் மீது பல தலங்களுக்குச் சென்று பாடியுள்ளார். இப்பாடல்களை திருப்பாட்டு என்று அழைக்கின்றனர். திருப்பாட்டினை சுந்தரர் தேவாரம் என்றும் அழைப்பர். [திருமணத்தினை தடுத்து சுந்தரரை அழைத்துவந்த சிவபெருமானே பரவையார், சங்கிலியார் என்ற பெண்களை திருமணம் செய்துவைத்தார்.



இவர் வாழ்ந்தது கி. பி. எட்டாம் நூற்றாண்டளவிலாகும்.இவர் பாடிய தேவாரங்கள் 7 ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன.  இவர் இயற்றிய திருத்தொண்டத் தொகை என்னும் நூலில் 60 சிவனடியார்கள் பற்றியும், 9 தொகை அடியார்கள் பற்றியும் குறிப்புகள் உள்ளன. இந்நூலின் துணை கொண்டே சேக்கிழார் பெரியபுராணம் எனும் நூலை இயற்றினார். அதில் சுந்தர மூர்த்தி நாயனாரையும், அவரது பெற்றார்களான சடையனார், இசை ஞானியார் ஆகிய மூவரையும் இணைத்து சிவதொண்டர்களின் எண்ணிக்கையை 63 என கையாண்டார்.

சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய பாடல்களை சுந்தரர் தேவாரம் என்று அழைக்கின்றனர். இப்பாடல்களை திருப்பாட்டு என்றும் அழைப்பது வழக்கம். இப்பாடல்களை பன்னிரு திருமுறைகளிலும், தேவாரத்திலும் இணைத்துள்ளார்கள்.

இவர் சிவபெருமான் மீது பாடிய பாடல்கள் 38000 என்று கூறுகின்றனர். இவை பண்களோடு அமைந்துள்ளன. அதனால் பண் சுமந்த பாடல்கள் என்றும் கூறுகின்றனர். இவற்றில் 100 பதிகங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் 17 பண்கள் இடம்பெற்றுள்ளன.தேவாரங்களில் செந்துருத்திப் பண் கொண்டு பாடல்பாடியவர் இவரே. தேவாரங்களைப் பாடிய மற்ற ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் இந்தப் பண்ணில் பாடல்களை பாடவில்லை. 

சுந்தரர் அருளிய திருப்பதிகங்களை ’திருப்பாட்டு’ என்று அழைப்பது மரபு. இவர் அருளியவை முப்பத்து எண்ணாயிரம் அவற்றில் கிடைத்த பதிகங்கள் 101.

சுந்தரமூர்த்தி நாயானார் திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருநாவலூர் எனும் ஊரில் சடையனார் - இசைஞானியார் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவர் ஆதி சைவர் எனும் குலத்தினை சேர்ந்தவர்.  இவரது இயற்பெயர் நம்பியாரூரன் என்பதாகும்.நம்பியாரூரன் என்பதை ஆரூரன் என்று சுருக்கி அழைப்பர். இவருடைய அழகினைக் கண்டு சிவபெருமானே சுந்தரர் என்று அழைத்தமையால், அப்பெயரிலேயே அறியப்படுகிறார். 

சுந்தரர் சிறுவயதில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திருமுனைப்பாடி அரசர் நரசிங்கமுனையார் கண்டார். சிறுவன் சுந்தரனை அரண்மனைக்கு அழைத்துச் சென்று இளவரசனைப் போல அனைத்துக் கலைகளையும் கற்றுத் தந்தார்.

மணப்பருவம் அடைந்தபோது சுந்தரருக்கு புத்தூரில் உள்ள சடங்கவி சிவாச்சாரியாரின் மகளை திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. மணநாளன்று முதியவர் ஒருவர் வடிவில் அங்கு வந்த இறைவன், சுந்தரருடைய பாட்டனார் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட ஒரு ஓலையைக் காட்டிச் சுந்தரரும், அவர் வழித்தோன்றல்களும் தனக்கு அடிமை என்றார். திருமணம் தடைப்பட, சுந்தரரை அழைத்துக்கொண்டு கோயிலுள் நுழைந்த வயோதிகர் திடீரென மறைந்தார். இறைவனே வந்து தன்னைத் தடுத்தாட் கொண்டதை உணர்ந்த சுந்தரர், "பித்தா பிறை சூடி" என்ற தனது முதல் தேவாரப் பதிகத்தைப் பாடித் துதித்தார். பாடல்களின் மூலமாக இறைவனை தன்னுடைய நண்பனாக்கிக் கொண்டார். சிவத் தலங்கள் தோறும் சென்று தேவாரப் பதிகங்கள் பாடி இறைவனைப் பணிந்தார். இறைவன் பால் இவர் கொண்டிருந்த பக்தி "சக மார்க்கம்" என்று சொல்லப்படுகின்ற தோழமை வழியைச் சார்ந்தது. இறைவனைத் தனது தோழனாகக் கருதித் தனக்குத் தேவையானவற்றை எல்லாம் கேட்டுப் பெற்றுக்கொண்டார். "நீள நினைந்தடியேன்" என்று தொடங்கும் அவர் பாடிய தேவாரப் பதிகம் மூலம், குண்டலூரில் தான் பெற்ற நெல்லை தனது ஊர் கொண்டு சேர்க்க இறைவனிடம் உதவி கேட்பதைக் காணலாம்.

அரசரான சேரமான் பெருமாள் இவருக்கு நண்பராயிருந்தார்.

இறைவனும் இவர் மற்றொருவரிடம் பொருள் பெற அனுமதித்ததில்லை.சேரமான் பெருமானை இவர் சந்தித்து திரும்பும் போது, அம்மன்னர் பொன்,பொருள்,மணியிழைகள்,ஆடைகள் போன்ற பல பொருட்களையும் இவருடன் அனுப்பி வைத்தார். திருமுருகன்பூண்டியில், இறைவன் அவற்றை எல்லாம் தமது பூதகணங்களை வேடர்களாக மாற்றி அவர்களைக் கொண்டு பறித்துக் கொண்டார். சுந்தரர் ’கொடுகு வெஞ்சிலை வடுகவேடுவர்....’ எனத்துவங்கும் பதிகம் பாடி இறைவனிடம் இருந்து பொருட்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.திருமுருகன்பூண்டி சிவபெருமான் கோவிலில் பைரவர் சந்நிதி அருகிலுள்ள குழியில் தான் சுந்தரரிடமிருந்து கவர்ந்த பொருட்களை இறைவன் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.


சுந்தரர் தனது 18 ஆவது வயதில் சிவனடி சேர அடைந்திட பதிகம் பாடினார். சிவபெருமான் வெள்ளை யானை சுந்தருக்கு அனுப்ப, அதில் ஏறி கைலாயம் சென்றார். அங்கிருந்த சிவனும் பார்வதியும் வரவேற்று முக்தியளித்தனர்.

நீள நினைந்து அடியேன் 

சுந்தர மூர்த்தி நாயனாரின் குருபூஜை விழா மிகச் சிறப்பாக சென்னை தியாகராய நகர் தருமபுர ஆதீன மடாலய தேவாலய சமயப் பிரசார நிலையத்தில் 21/7/2018 சனிக்கிழமை மாலை 6 மணி முதல் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் நீள நினைந்து அடியேன் என்ற தலைப்பில் சைதாப்பேட்டை திருமுறைச் செல்வர் திரு.வேதகிரி ஐயா அவர்கள் அருளுரை தர உள்ளார்கள். வேதகிரி ஐயா அவர்களைப் பற்றி எழுதுவது தேனில் ஊறிய பலா போன்ற சுவை தரும். நம் ஆண்டுவிழா நிகழ்வில் வந்து ஆற்றிய உரை, இன்னும் நம்மை மகிழ்ச்சியில் திளைக்க செய்கின்றது. அவரைப் பற்றி நம் தலத்தில் சில பதிவுகள் எழுதி உள்ளோம். மீள்பதிவில் சென்று பார்க்கவும்.


வாய்ப்புள்ள அன்பர்கள் நேரில் கலந்து கொண்டு அடியார்க்கு அடியார் என்ற வாக்கியத்தை மெய்ப்பிக்கவும்.

மீள்பதிவாக:-

ஜூலை மாத அடியார்கள் பூசை - http://tut-temple.blogspot.com/2018/07/blog-post_11.html

மே மாத அடியார்கள் பூசை - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_11.html

மார்ச் மாத அடியார்கள் பூசை - http://tut-temple.blogspot.in/2018/02/blog-post_28.html

திருத்தலங்களின் சிறப்பு - சிவத்திரு.வேதகிரி அவர்கள்  - http://tut-temple.blogspot.com/2017/10/blog-post_12.html

 இனிதே நடைபெற்ற "தேடல் உள்ள தேனீக்களாய் (TUT)" இரண்டாம் ஆண்டு விழா - http://tut-temple.blogspot.com/2018/02/tut_20.html

No comments:

Post a Comment