Subscribe

BREAKING NEWS

11 July 2018

முன்னோர்களின் ஆசி பெற மறைமதி வழிபாடு

மறைமதி வழிபாடு என்றவுடன் என்னமோ என்று குழம்ப வேண்டாம். அமாவாசை வழிபாடு தான் அது. நம் முன்னோர்கள் இதனை சிறப்பாக கொண்டாடி உள்ளார்கள்.அதுவும் குறிப்பாக
ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் புரட்டாசி அமாவாசை . தமிழ் மாதங்கள் அனைத்திலும் அமாவாசை வந்தாலும், தை, ஆடி, புரட்டாசி அமாவாசை மிக பிரசித்தி பெற்றது. பௌர்ணமி வழிபாடு குறிப்பாக இல்லறத்தின் தேவைகளுக்காக செய்ய வேண்டிய ஒன்றாகும். அமாவாசை வழிபாடு முக்தி போன்ற மறைபொருள் தேவைகளுக்கு செய்ய வேண்டியது. அதற்காக அமாவாசை வழிபாடு பற்றி அஞ்ச வேண்டாம். நம் முன்னோர் அருள், பித்ரு தோஷம் போன்றவற்றிற்கு அமாவாசை வழிபாடு சிறப்பாக அமைகின்றது.

நம்மைப்  பொறுத்தவரை அமாவாசை வழிபாடு நம் TUT குழுவின் உதவியின் மூலம் அன்னதானமாக நடைபெற்று வருகின்றது. முதலில் நாம் அகத்தியர் வனம் மலேஷியா குழுவினர் துணையோடு அன்னதானம் செய்ய ஆரம்பித்தோம். கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுப்புறங்களில் செய்த அன்னதானம், பின்பு சென்னை வேளச்சேரி மற்றும் சுற்றுப்புறங்களில் விரிந்தது.அனைத்தும் குருவருளால் மட்டுமே. நாம் இப்படித் தான் செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிடுவதில்லை. ஆனால் நடப்பவை அனைத்தும் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இது அன்னதானத்தில் மட்டும் அன்று, உழவாரப் பணி ஆகட்டும், அகத்தியர் ஆயில்யம் பூஜை ஆகட்டும், தல யாத்திரை ஆகட்டும். அனைத்தும் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

இவ்வாறு தொடங்கிய அன்னதான சேவை, நம் குழுவின் உறவுகளால், அமாவாசையில் செய்தாலும் நன்றாக இருக்கும் என்ற வேண்டுகோளுக்கிணங்க, அமாவாசை தோறும் அன்னசேவை எங்களால் முடிந்த ஒரு 10 பேருக்கு செய்து வருகின்றோம். இனிமேல் நாம் அன்னதானம் என்ற வார்த்தையை உபயோகிக்க மாட்டோம். மாற்றாக அன்னம்பாலிப்பு, நாராயண சேவை என்று பயன்படுத்துவோம்.நம் உடலை எடுத்துக் கொண்டால் தலைப்பகுதி சிவம், வயிற்றுப்பகுதி விஷ்ணு, அடிப்பகுதி பிரம்மன் என்று பார்த்தால், வயிற்றுப்பகுதி நாராயண சேவையே ஆகும்.

அடுத்த மாதம் ஆடி அமாவாசை வர இருக்கின்றது. நம் குழுவின் சார்பில் மிக மிக உயரிய பூசை அன்று குருவின் அருளாலும், சித்தர்களின் ஆசியாலும் ஆரம்பிக்க உள்ளோம். விரைவில் நம் தளத்தில் அறிவிப்புசெய்ய உள்ளோம். அதுவரை பொறுமை காக்கவும்.

பொதுவாக அமாவாசை அன்று நம் முன்னோர்களுக்காக விரதம் இருக்கலாம். முன்னோர்களுக்காக திதி,தர்ப்பணம் செய்யலாம், இவற்றையும் தாண்டி ஏதேனும் ஒரு புண்ணிய காரியங்களில் ஈடுபடலாம். நம் வீட்டின் அருகே உள்ள மரம்,செடி கொடிகளுக்கு நீர் ஊற்றலாம், சூரிய வழிபாடு செய்யலாம், கோயிலுக்கு சென்று நம்மால் முடிந்த கைங்கர்யத்தில் ஈடுபடலாம். குறைந்தது 1 நபருக்கு அன்னம்பாலிப்பு செய்யலாம். நம் தளம் சார்பில் மாதந்தோறும் அமாவாசை அன்று குறைந்தது சுமார் 15 நபர்களுக்கு அன்னம்பாலிப்பு செய்து வருகின்றோம். இந்த அன்னம்பாலிப்பு செய்யும் போதே, ஆலய தரிசனமும் நடைபெற்று விடும். கூடுவாஞ்சேரி வேலி அம்மன் ஆலயம், மாமரத்து விநாயகர் ஆலயம், வள்ளலார் கோயில், நந்தீஸ்வரர் கோயில் என ஆலய தரிசனம் இணைவது நமக்கு இன்னும் சிறப்பாக இருந்து வருகின்றது.

நம்மை பெற்று, வளர்த்து ஆளாக்கி மறைந்த தாய், தந்தையரையும் முன்னோர்களையும் நினைத்து, அவர்கள் செய்த நல்ல காரியங்களையும் நம்மை ஆளாக்குவதற்கு அவர்கள் பட்ட சிரமங்களையும் ஒவ்வொரு அமாவாசையும் நினைவுகூர்ந்து தர்ப்பண சடங்கு நிறைவேற்றுவது மிகவும் புண்ணிய காரியமாக சொல்லப்படுகிறது. 

முதியவர்கள் இருவருக்காவது உணவும், ஆதரவற்றவர்களுக்கு துணிமணியும் வயிறார உணவளியுங்கள். அமாவாசையில் குல மூதாதையர்களை நினைத்து செய்யும் தான தர்மங்கள் அவர்களை சந்தோஷப்படுத்துவதுடன் நோய் நொடிகள் அகலும், நீண்ட ஆயுளும், நிறைந்த செல்வமும், மங்காத புகழும் அமையும்.இப்பூஜையால் தீராத கடன் ஒழியும். தீர்க்க முடியாத வியாதிகள் குறையும். யார் விட்ட சாபமோ என அஞ்சிய வாழ்க்கை அகலும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். நாமும் நம்முன்னோர்களுக்கு மகாளய அமாவசை தினத்தன்று பூஜை செய்து அவர்களின் ஆசி பெறுவோம்.

வசதி இல்லாதவர்கள் நம் முன்னோர்களை மனதில் நினைத்து பசு மாட்டிற்கு அகத்திக் கீரையை உணவாகத் தந்தாலே போதும். அமாவாசையில் அவர்களை நினைத்து செய்யும் தான தர்மங்கள் அவர்களை சந்தோஷப்படுத்துவதுடன் செல்வம், புகழ், நீண்ட ஆயுளைத் தரும்.

நாளை அமாவாசை அன்னம்பாலிப்பு வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் கூடுவாஞ்சேரி பகுதியில் நடைபெற உள்ளது. மேலும் ஒரு அழைப்பிதழ் இங்கே இணைத்துளோம்.

 மருதமலை க.எழில் பாண்டியன், '' அருள்மிகு அகத்தியர்/18 சித்தர்கள்  ஆலயம்,''
ஐஓபி காலனி, மருதமலை, கோயம்புத்தூர், அருள்மிகு பட்டி விநாயகர் திருக்கோயில் வளாகத்தில்

மூதாதையர்களின் நல்லாசி அனைவருக்கும் கிட்ட ''அமாவாசை வழிபாடு'' ஏற்பாடு செய்துள்ளனர்.

நாள்:12-07-2018 வியாழக்கிழமை மாலை 5 மணி

ஆன்மீக மெய்யன்பர்கள் பங்கு பெற்று சித்தர்கள் அருள் பெறுக.

 அகத்தியர் திருவடிகள் போற்றுதும்!!!

அகத்தியர் மெய்யன்பர்கள் குழு,
 ஐஓபி காலனி,
மருதமலை, கோயம்புத்தூர்.
அலைபேசி:+91 8610733409.                               



வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு, ஆசி பெறுக !

மீள் பதிவாக:- 

முன்னோர்களின் ஆசி பெற 2018 ல் மறைமதி வழிபாடு - http://tut-temple.blogspot.com/2018/01/2018_13.html

வாழ்வில் பூரணம் பெற 2018ல் முழு நிலவு வழிபாடு  - http://tut-temple.blogspot.in/2018/01/2018.html


No comments:

Post a Comment