Subscribe

BREAKING NEWS

04 July 2018

ஜீவனில் சிவத்தை காணும் சித்தர்கள் - பதினெண் சித்தர்கள் தரிசனம் பெறலாமே

இன்றைய வாழ்க்கை ஓட்டத்தில் ஆன்மிக வழியில் மிக மிக பிரபலம் சித்தர்கள். சுமார் ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன், அங்கொன்றும் இங்கொன்றுமாய் சித்தர்கள் பற்றி பேசுவார்கள். ஆனால் இன்று எங்கும் சித்தர்கள் பற்றி பேச்சாக இருக்கின்றது. இன்று ஏகப்பட்ட பூட்டிக் கிடந்த ஆலயங்கள் திறக்கப்பட்டது சித்தர்களால் தான். பல ஆலயங்களில் சித்தர்கள் இருப்பை உணர முடிகின்றது.
!

 அகத்தியர் அனந்த சயனத்திலும் (கேரளா பத்பநாதபுரம்), அகப்பேய் சித்தர் எட்டக்குடியிலும், திருமூலர் சிதம்பரத்திலும், நந்தீசர் திருவாவடுதுறை ஆதினத்திலும், போகர் பழனியிலும், ராமதேவர் அழகர்மலையிலும், இடைக்காடர் திருவண்ணா மலையிலும், சட்டமுனி சீர்காழியிலும், கமலமுனி திருவாரூரிலும், மச்சமுனி திருப்பரங்குன்றத்திலும், கொங்கணவர் திருப்பதியிலும், பதஞ்சலி ராமேஸ்வரத்திலும், பாம்பாட்டிச்சித்தர் திருக்கடவூரிலும், சுந்தரானந்தர் மதுரையிலும், குதம்பைச் சித்தர் மயிலாடுதுறையிலும், கரூவூரார் தஞ்சாவூரிலும், கோரக்கர் திருக்கழுக்குன்றத்திலும், தன்வந்திரி வைத்தீஸ்வரன் கோவிலிலும் ஐக்கியமாகியுள்ளனர். எனவே தான் அந்த தலங்கள் எல்லாம் சிறப்புபெற்றவையாகிறது. இவர்களின் இருப்பால் தான் மேற்சொன்ன கோயில்கள் பிரபலமாகி, மக்களின் துயர் துடைக்கும் ஆலயங்களாக மாறி விட்டன.

இந்த நிலையில் நாம் ஒவ்வொரு இடத்திலும் தனித்தனித்தாயாக தான் சித்தர்களின் திருவுருவங்கள் கண்டிருக்கின்றோம். 18 சித்தர்களின் தரிசனத்தை நாம் தாம்பரம் அருகே உள்ள மாடம்பாக்கத்தில் பெற்றுள்ளோம். அதுவும் அவசர கதியில் தான். மீண்டும் என்று வாக்குமோ? என்று தெரியவில்லை. இதுபோல் 18 சித்தர்களின் ஆலயம் ஒன்றை தற்போதைய திருஅண்ணாமலை கிரிவலத்தில் கண்டோம்.

இதற்கு 18 சித்தர்கள் குடில் என்று பெயர் வைத்துள்ளார்கள். நாம் ஏற்கனவே கூறியவாறு புற்றீசல் போல் புதிதாய் முளைக்கும் ஆலயங்களை நாம் விரும்புவதில்லை. இந்த பதினெட்டு சித்தர்கள் குடிலில் என்ன செய்யப் போகின்றார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அங்கிருந்த சித்தர்கள் தரிசனம் நம்மை இங்கே எழுத சொன்னதே தவிர, வேறொன்றும் நாம் அறியவில்லை.



இன்னும் பதினெட்டு சித்தர்கள் குடில் கட்டி முடிக்கப்பட வில்லை.  வெட்ட வெளியில் தான் சித்தர்கள் தரிசனம் தருகின்றார்கள். ஜீவனில் உள்ள சிவத்தை உணர்ந்தவர்களை ஓரிடத்தில் நாம் ஒடுக்க இயலுமா என்ன? சித்து வேலை செய்பவர்கள் சித்தர்கள் அல்ல; இந்த பூவுலகில் மனிதனை பண்படுத்த அவர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த கலையே சித்து.

 சித்தர்கள் அழியாத உடம்பைப் பெற்றவர்கள். இரும்பை தங்கமாக்கும் வித்தையை கற்றவர்கள். கூடுவிட்டு கூடுபாயும் சக்தி கொண்டவர்கள். முக்கால நிகழ்வுகளையும் அறியக் கூடியவர்கள். நினைத்தவுடன் நினைத்த வடிவம் எடுத்துக்கொள்வார்கள். நீரிலும் நெருப்பிலும் வானத்திலும் நடந்து செல்லும் வல்லமை பெற்றவர்கள். உலகம் முழுவதையும் தன் வசப்படுத்தி நடத்தி செல்லும் ஆற்றல் பெற்றவர்கள். ஜீவ சமாதி, உயிர்நிலை கோயில்கள் என்று நாம் அடிக்கடி கூறுகின்றோம்..அப்படி என்றால் என்ன?

சாதாரணமாகக் கோவில்களில் யந்திரங்களை ஸ்தாபிதம் செய்து அதன் மேல் விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்வார்கள். அதன் சக்தி குறைந்தால் மீண்டும் ஆகம நெறிப்படி குடமுழுக்குச் செய்வர். ஆனால் சித்தர்கள் ஐக்கியமாயிருக்கும் கோவில்களுக்கு குட முழுக்குத் தேவையில்லை. ஜீவன் முக்தர்களின் உயிர்சக்தியின் இயக்கம் எப்போதும் அலை இயக்கமாக அங்கே பரவி நிற்கிறது. இதனை நாம் பெருங்களத்தூர் சதானந்த சுவாமிகள், மயிலாப்பூர் குழந்தைவேல் சுவாமிகள், மருதேரி பிருகு மகரிஷி குடிலம் போன்ற கோயில்களில் உணரலாம்.

அகத்தியர் ஆயில்ய பூசையின் போது நாம் அகத்தியர் துதி மட்டும் பாடாது, சித்தர்கள் போற்றித் தொகுப்பை நாம் படிக்கின்றோம். ஏனெனில் உலகத்தவரின் துன்பங்கள் நீங்க வேண்டும் என்ற சத்தியத்தோடு ஆதியுடன் சமம்  பெற்றவர்கள். அந்தக் காரியத்தைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருப்பார்கள்.இவர்கள் வினை காரணமாகப் பிறவி எடுப்பவர்கள் அல்ல. உலகை உய்விக்க வந்து தோன்றியவர்கள். இவர்களை நினைத்துப் போற்றினால் இவர்களின் அருளும் அதன் மூலம் இறையருளும் நமக்குக் கிடைக்கும். அதனால் தான் ஒவ்வொரு ஆயில்ய பூசையிலும் சித்தர்கள் போற்றித் தொகுப்பை படித்து வருகின்றோம்.





போற்றினால் நமது வினை அகலுமப்பா..சித்தர்களை, மகான்களை,குருமார்களை  போற்றுங்கள்.கடவுளைக் காண முயல்கின்றவர்களை பக்தர்கள் என்றும் கண்டு தெளிந்தவர்களைச் சித்தர்கள் என்றும் தேவாரம் கூறுகிறது.

திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில் நமக்கு தரிசனம் தரும் சித்தர் பெருமக்களை பற்றி குறிப்பால் காண்போம். முதலில் 18 சித்தர்களையும் ஒருங்கே கண்டோம். 18 சித்தர்கள் யார்? என்று பட்டிமன்றமே நடத்தலாம் போலிருக்கின்றது. பதினெண் சித்தர்கள் பட்டியல் பற்றி ஆராய்வதை விடுத்து, சித்தர்களை பிடியுங்கள். அழகாய் ஒரு தலைகீழ்  "U"  வடிவில் தரிசனம் பெற்றோம். மேலே உங்களுக்காகவும் இணைத்துள்ளோம்.

முதன் முதலாய் நாம் தரிசித்தது...சித்தருக்கெல்லாம் தலைமை சித்தராய் விளங்கும் அகத்தியர் பெருமானை. திருநீற்று சின்னங்களுடன் உருத்திராக்கம் அணிந்து, கமண்டலத்துடன் ஒய்யாரமாக அமர்ந்த நிலையில் பார்த்தோம்.




அகத்தியர் பற்றி நாளெல்லாம் பேசிக் கொண்டே இருக்கலாம். அன்பின் ஆழம் அவர். கருணையின் காந்தம் அவர். அவரது பரிபூரண ஆற்றல் நம்மை இன்னும் வழிநடத்திக் கொண்டிருக்கின்றது. கூடுவாஞ்சேரி ஆயில்ய பூசை இதனை எடுத்துரைக்கும்.

அடுத்து திருப்பரங்குன்றத்தில் அருள் பாலிக்கும் "மச்ச முனி". மச்சமுனி காகபுசுண்டரின் சீடராவார். சிவபெருமான் ”காலஞானத்தை” உமாதேவியாருக்கு உபதேசிக்கும் பொது இடையில் அவர் தூங்கி விட்டாராம். ஆனால் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரையில் கேட்டுக் கொண்டிருந்த மீன் ஒன்று, மீதி ஞானத்தை தெரிந்து கொள்ள பூமியில் பிறந்ததாகவும் அதுவே மச்ச முனி என்கிற புராணகால கதை ஒன்றும் சொல்லப் படுகிறது. மச்சமுனி சித்தர் மீனாக நீந்தும் தலம் மதுரை திருப்பரங்குன்றத்தில் இருக்கின்றது. அண்மையில் சென்று வந்தோம். தனிப்பதிவாக தர குருவருள் வேண்டுகின்றோம்.



மச்சமுனி சூத்திரம் 21 தொடங்கி சுமார் சுமார் இருபது நூல்கள் உள்ளது. மேலே சில நூற்கள் தான் கூறப்பட்டுள்ளது.

"பதஞ்சலி" நம்மை அடுத்து ஆட்கொண்டார்.பதஞ்சலி இன்று உலகெங்கும் பிரபலமாகப் பின்பற்றப்படும் யோகக் கலையினை முறையாக வகுத்துக் கொடுத்தவர் ஆவார். இவரது யோக சூத்திரங்கள் இந்திய வேத தத்துவ தரிசனங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.இவர் இயற்றிய பதஞ்சலி யோக சூத்திரம் எனும் நூலே யோகக் கலைக்கு அடிப்படையாக விளங்குகிறது.


அடுத்து சட்டைமுனி என்றும், சட்டைநாதர் என்றும் அழைக்கப்படும் சித்தரின் அருள் பெற்றோம்.சட்டைமுனி என்பவர் பதினெண் சித்தர்களில் ஒருவராகக் கணிக்கப்பட்டவர். இவர் ஆவணி மாதம் மிருகசீரிடம் மூன்றாம் பாதத்தில் பிறந்தார் என்று கூறும் போகர் இவரைத் தமது சீடராக அறிமுகப்படுத்தி இவரது வரலாற்றையும் தெரிவிக்கிறார்.




சட்டைமுனியின் பெற்றோர் விவசாயக் கூலிகளாகத் தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர். சட்டைமுனி கோவில்களில் தட்டையேந்தி யாசகம் பெற்று தாய்தந்தையர்க்கு உதவி வந்தார். ஒருநாள் கோவில் வாசலில் வடநாட்டிலிருந்து வந்த சங்கு பூண்ட ஒரு சித்தரைக் கண்டு அவரிடம் ஏதோ ஓர் அபூர்வ சக்தி இருப்பதை உணர்ந்து சட்டைமுனி அவருடனே கிளம்பிவிட்டார். போகருடைய சீடராக வாழ்ந்த காலத்தில் கொங்கணர், கருவூரார் முதலான பல சித்தர்களின் தொடர்பு அவருக்கு ஏற்பட்டது.

சட்டைமுனி ஊர் ஊராகச் சுற்றி வரும் காலத்தில் தூரத்திலிருந்து தெரியும் திருவரங்கர் கோவில் கலசங்களை கண்டு பேரானந்தம் கொண்டார்.

இக்கோவில் நடைசாத்துவதற்குள் அரங்கனை தரிசித்து விட வேண்டுமென ஆவலாக நடந்தார். ஆயினும் பூசை முடிந்து கோவில் கதவுகள் அடைக்கப்பட்டு விட்டன. ஏமாற்றத்துடன் சட்டைமுனி, கோவில் வாசலில் நின்று அரங்கா! அரங்கா! அரங்கா! என்று கத்தினார். உடனே கதவுகள் தாமாகத் திறந்தன. அரங்கனின் தரிசனம் சட்டைமுனிக்குக் கிடைத்தது. அரங்கனின் ஆபரணங்கள் ஒவ்வொன்றாக கழன்று சட்டைமுனியின் மேல் வந்து சேர்ந்தன. சட்டைமுனி “அரங்கா!” என்று கதறிய சப்தம் கேட்டு திரண்டு வந்த ஊர்மக்கள் வியந்து நின்றனர். அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இறைவனுடன் ஒன்றாய்க் கலந்தார் சட்டைமுனி. சித்தரின் சமாதி இன்றும் திருவரங்கத்தில் இருப்பதாய் கூறப்படுகிறது.

அடுத்து "கமலமுனி" தரிசனம்.இவர் போகரிடம் சீடனாய் சேர்ந்து யோகம் பயின்று, சித்தர் கூட்டத்துள் ஒருவராய்ப் புகழ்ப் பெற்றார். "கமலமுனி முந்நூறு'' என்னும் மருத்துவ நூல், ரேகை சாஸ்திரம் முதலிய நூல்களை இவர் செய்துள்ளதாகத் தெரிகின்றது. காப்பான கருவூரார் என்று தொடங்கும் காப்புப்பாடல் கமலமுனி அருளியது.

             தமிழகத்திலுள்ள தேர்களிலேயே திருவாரூர் தேர் தான் மிகவும் பெரியதாகவும், அழகாகவும் இருக்கும். இதனால் தான் "திருவாரூர் தேரழகு' என்பார்கள்.திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் தமிழகத்தின் புகழ்பெற்ற தலம். இந்தக் கோயிலை சுற்றிப் பார்க்க வேண்டுமானால், முழுமையாக ஒருநாள் ஆகும். என்னப்பா ? திடீரென திருவாரூர் என்கின்றீர்களா? கமலமுனி ஐயா திருவாரூரில் தான் அருள் புரிந்து கொண்டிருக்கின்றார்.





சித்தர்களின் தரிசனம் நம்மை பக்தியில் ஆழ்த்தியது. அடுத்து நம்மை அழைத்தவர் சிவவாக்கியர்.பதினெண் சித்தர்களில் ஒருவராக இவர் எண்ணப்படுகிறார். அவர் எந்நாட்டைச் சேர்ந்தவர் என்பதற்கு ஆதாரங்கள் அறியக் கிடைக்கவில்லை.

அவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் என்னும் கருத்து பரவலாக உள்ளது. அவர் சித்தர் பாடல்கள் திரட்டில் இதுவரை 526 பாடல்கள் கிட்டியுள்ளன. இவருடடைய பாடல்களே மிக அதிகம் என்போரும் உண்டு. இவரைப் பற்றிய குறிப்புகள் அபிதான சிந்தாமணியிலும் தி.வி. சாம்பசிவம் பிள்ளை அவர்கள் எழுதிய தமிழ்-ஆங்கில மருத்துவ அகராதியிலும் உள்ளன. ஆனால் இவை இரண்டும் முற்றிலும் வேறுபடுகின்றன என்பதாலும் இக்கதைகளுக்குத் தக்க ஆதாரங்கள் ஏதும் இல்லை என்பதாலும், இவர் இயற்றிய பாடல்களை மட்டும் போற்றுகின்றனர்.

அவர் வாழ்ந்த காலமும் தெளிவாய்த் தெரியவில்லை. அவரது காலம், கி.பி.9ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் எனவும், அவரின் செய்யுள் நடை பலவிடங்களில் திருமூலரை ஒத்துள்ளது எனவும் திரு.டி.எஸ்.கந்தசாமி முதலியார் கூறியுள்ளார். "இல்லையில்லை; அவர், கி.பி.10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவரின் செய்யுள் நடை பலவிடங்களில் திருமழிசை ஆழ்வாரை ஒத்துள்ளது; ஆகவே, அவரும் திருமழிசை ஆழ்வாரும் ஒன்றே" என விவாதிப்பவரும் உண்டு. அவர் காலம் என்ன? அவர் சமயம் என்ன? இவ்வினாக்களுக்கு விடை தேடுவது காலவிரயம்.

சமணம், பௌத்தம், சைவம், மாலியம்(வைணவம்) ஆகிய சமயங்களை ஆழ அகழ்ந்தறிந்து தம் பாக்களில் பிழிந்து தந்துள்ளார். இவருடைய பாக்களில் ஒரு வித துள்ளல் ஓசையும், ஞானக் கருத்துக்களும், கேள்விகளும்(வினாக்களும்) இருப்பது சிறப்பு. எடுத்துக்காட்டாக, புறவழிபாடாக கடவுள் வழிபாடு செய்பவர்களைப் பார்த்து அடுக்கடுக்காய் வினாக்கள் தொடுக்கின்றார்.
சிவவாக்கியார்

"கோயிலாவ தேதடா குளங்களாவ தேதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களு மனத்துளே
ஆவது மழிவது மில்லையில்லை யில்லையே."

பூசைபூசை யென்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்
பூசையுன்ன தன்னிலே பூசைகொண்ட தெவ்விடம்
ஆதிபூசை கொண்டதோ வனாதிபூசை கொண்டதோ
ஏதுபூசை கொண்டதோ வின்னதென் றியம்புமே!




திருமூலர் தரிசனம் அடுத்துப் பெற்றோம்.இவர் பதினெண் சித்தர்களில் ஒருவரும் ,63 நாயன்மார்களுள் ஒருவரும் ஆவார். திருமூலர் எழுதிய பாடல்கள் பல கோடி...நம் கையில் இப்போது கிடைத்திருப்பது மூவாயிரத்துச் சொச்சம். 3000 மந்திரங்கள் அடங்கிய 9 தந்திரங்களுக்கு  திருமூலர் உரை எழுதியுள்ளார் ....அது கிடைக்கவில்லை.இந்த 3000  மந்திரங்களும் வரிசைக்கிரமமாகக் கிடைக்கவில்லை 
இப்போது நம் வசம் இருக்கும் திருமந்திரம் பல இடைக்குச்செருகல்களுடன் கலந்து கிடக்கின்றது.




அடுத்து நாம் பெற்றது "பாம்பாட்டி சித்தர் " தரிசனம்.இவர்  பதினெண் சித்தர்களுள் ஒருவராவார். பாம்புகளை கையாளுவதில் திறன் கொண்டவர் என்பதால் பாம்பாட்டிச் சித்தர் என்று பெயர் பெற்றதாகக் கூறுவர். யோக நெறியில் குண்டலினி என்பதை பாம்பு என்ற குறியீட்டினால் குறிப்பிடுவதால், குண்டலினி யோகத்தில் சிறந்தவர் என்பதால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. மனம் என்னும் பாம்பை ஆட்டிவைக்க வேண்டும் ௭ன பாடல்களைப் பாடியவர் பாம்பாட்டிச்சித்தர்.




பாம்பாட்டி சித்தர் பாம்பு பிடித்து அதை ஆட்டிவைப்பது அதோடு விளையாடுவது இவற்றில் எல்லாம் அதிசிறந்தவராகத் திகழ்ந்தார்.வாழ்வின் நிலையாமை, உடலின் தன்மை, உறவின் தன்மை, உலகமாயை, நிலையானவை எவை, நிலையற்றவை எவை என்று பல்வேறு பாடல்களைப் பாடினார்.எளிய தமிழில் கருத்தைச் சொல்லி... அந்தக் கருத்தின் நிமித்தம் மகிழ்ந்து ஆடுபாம்பே... என்று அவர், தன் எதிரில் இருக்கும் பாம்புக்குச் சொல்வதுபோலவே, மனதுக்குள் இருக்கும் பாம்புக்கும் உபதேசம் செய்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

அடுத்து "கோரக்கர்" ஐயாவிடம் சென்று அருள் பெற்றோம்.

பதினெண் சித்தரில் ஒருவரும், நாத சைவம் எனும் சைவப் பிரிவின் நிறுவுநரும் ஆவார். இவரை வடநாட்டில் "நவநாத சித்தர்" எனும் சித்தர் தொகுதியின் தலைமைச்சித்தராகப் போற்றுகின்றனர். அங்கு கோரட்சநாதர் என்பது அவரது பெயர். வட இந்தியாவிலும் நேபாளத்திலும் தமிழகத்திலும் இவர் மிகப்பிரபலமானவராகத் திகழ்கின்றார். வடநாட்டில், கோரக்கரின் சீடர் கொடிவழியில் வந்தோர் கோரக்கநாதியர், தர்சனியர், கண்பதர் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றனர். இவர் வாழ்ந்த காலம் பொதுவாக 11ஆம் 12ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் எனக் கொள்ளப்படும் போதும், அவர் இறப்பை வென்றவர் என்ற நம்பிக்கை அவரை வழிபடுவோர் மத்தியில் காணப்படுகின்றது.

சித்தரியல், போர்க்கலை, சித்த மருத்துவம், யோகம் போன்றவற்றில் குறிப்பிடத்தக்க பங்காற்றிய கோரக்கர் புகழ் இந்தியா முழுக்கப் பரந்து காணப்பட்டது. அவர் காலத்தில் ஏற்பட்ட முகலாயர் ஆதிக்கத்தை வெல்வதற்கான வல்லமையைப் பெற்றிருப்பதற்கு இந்துக்களுக்கு அவர் பேருதவி புரிந்திருந்தார்.






அடுத்து "போகர் " பெருமானிடம் சென்று அருள் பெற்றோம்.பதினெண் சித்தர்களுள் ஒருவர் ஆவார். இவர் பிறப்பால் தமிழ் வண்ணார். தமிழ்நாட்டில் பிறந்து பின்னர் சீனா சென்றவர் என்று சிலர் கூறுகின்றனர். இவர் நவசித்தர்களுள் ஒருவரான காளங்கி நாதரின் சீடர் ஆவார். போகரின் சீடர் புலிப்பாணி ஆவார். சீனாவில் போகர் போ-யாங் என்று அறியப்படுகிறார். போகர் ஏழாயிரம், 700 யோகம், போகர் நிகண்டு மற்றும் 17000 சூத்திரம் ஆகிய நூல்கள் போகரால் இயற்றப்பட்டவை என்று கருதப்படுகின்றன.

பழநி முருகனின் மூலத்திருவுருவச் சிலை போகரால் செய்யப்பட்டது என்று நம்பப்படுகிறது. இச் சிலை நவபாடாணங்களைக் கொண்டு செய்யப்பட்ட நவபாடாணச் சிலை என்று கருதப்படுகிறது. இச்சிலை தற்போது சேதமடைந்து விட்டது. எனவே இச்சிலைக்கு அபிடேகம் நடைபெறுவதி‌ல்லை. நவ பாசான சிலை சேதமடைய காரணம் சிலையின் பாடாணம் மருத்துவக் குணமுள்ளதால், பூசை செய்பவர்கள் சிலையைச் சுரண்டி சித்த மருத்துவர்களுக்கும் பிறருக்கும் பணத்திற்கு விற்றதாக பரவலாகப் பேசப்படுகிறது.




" ராம தேவர் " தரிசனம் அடுத்துப் பெற்றோம். பதினெட்டு சித்தர்களில் ஒருவர் பகவான் ராம தேவர் சித்தர் ஆவார். மதுரை மாவட்டம், அழகர் கோவில் மலை மேல் மலையேற்றமாக சென்றால் பகவான் ராம தேவர் சித்தர் ஜீவ சமாதி அமைந்துள்ளது.பழமுதிர்சோலை அடுத்து ராக்காயி தீர்த்தத்திற்கு செல்வோம்.இது வரை மட்டுமே பொதுவாக மக்கள் செல்வார்கள்.ராக்காயி தீர்த்தம் அடுத்து மேலே சென்றால் வனப்பகுதியில் செல்லலாம். 2 கி.மீ பயணித்தால் மலை உச்சியில் பகவான் ராம தேவர் சித்தர் சமாதி காணலாம்.குறுகலான மலைப் பாதை வழியாக சென்றால் மலை உச்சியில் பகவான் ராம தேவர் சித்தர் ஜீவ சமாதி அமைந்துள்ள இடத்தை அடையலாம்.அவ்விடம் குளுமையாக இருக்கும். தியானம் செய்ய உகந்த இடம் ஆகும். மலையேற்றம் உடலுக்கும் உள்ளத்திற்கும் உற்சாகத்தை தரும். மெக்கா நகர மக்களே! நான் ஒரு சித்தன். உங்கள் அரபு நாட்டில் காயகல்ப மூலிகைகள் இருப்பதை அறிந்து, அவற்றைப் பற்றி ஆய்வு செய்து, மருந்துகள் தயாரித்து மனித குலத்தின் நோய் தீர்க்கவே இங்கு வந்தேன். என்னைத் தவறாகக் கருதாதீர்கள். எனக்கு மத வேறுபாடெல்லாம் கிடையாது. நான் எல்லா மதங்களையும் நேசிப்பவன், என்றார் ராமதேவர்.



தன்வந்திரி நம்மை அழைத்தார். இதோ நீங்களும் தரிசித்துக் கொள்ளுங்கள்.


அடுத்து "குதம்பை சித்தர்"

அருள்மிகு ஸ்ரீ குதம்பை சித்தர்
பிறந்த மாதம் : ஆடி
பிறந்த நட்சத்திரம் : விசாகம்
வாழ்ந்த காலம் : 14-15 ம் நூற்றாண்டு
ஜீவ பீடம் : மயிலாடுதுறை
உகந்த நாள் : வெள்ளி கிழமை



குதம்பை என்பது பெண்களின் காதிலே அணியும் தொங்கட்டான் நகை. இவர் பாடல்களில் குதம்பை அணிந்த பெண்ணை குதம்பாய் என்று அழைக்கிறார். இதனால் இவரை குதம்பைச் சித்தர் என்றே அனைவரும் அழைத்தார்கள். இவர் 32 பாடல்களைப் பாடியுள்ளார். யாதவ குலத்தில் கோபாலர் தம்பதிகளுக்கு ஆடிமாத விசாக நட்சத்திரத்தன்ற்ய் மிக அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அது ஆண் குழந்தையாக இருந்தாலும் அதன் அழகு பெண் குழந்தையைப் போலிருக்கவே அக்குழந்தையின் காதில் அசைந்தாடும் குதம்பை என்னும் நகையை அணிவித்தாள் குழந்தையின் தாய். குதம்பையின் தினசரி நிகழ்ச்சி காலையும், மாலையும் கோவிலுக்கு சென்று இறைவனை வணங்குவது தான். குதம்பைச் சித்தருக்கு பதினாறு வயதாகும் போது அவருக்கு ஞான உபதேசம் செய்வதற்காக மாதவர் ஒருவர் வந்தார். வந்தவரை வணங்கி நின்றார் குதம்பை. மாதவர் குதம்பைக்கு அருளுபதேசம் செய்தார். “மாதவ குருவே உபதேசம் செய்த உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன்!” என்றார் குதம்பை மாதவரோ குதம்பையை மெல்ல தடவிக்கொடுத்து“குதம்பை நீ போன பிறவியில் உய்வடையும் பொடுட்டு கடுந்தவம் செய்தாய். ஆனால் தவம் முழுமை அடையும் முன்பே உன் காலம் முடிந்து நீ இறந்து போனாய். அந்தத் தவத்தின் பயனால் தான் நீ என்னிடம் உபதேசம் பெற்றாய். நான் உபதேசித்ததை அனுபவத்தில் கொண்டு வெற்றி பெறுவாய்” என்றார்.

ஒரு நாள் இரவு குதம்பைச் சித்தர் யாருக்கும் தெரியாமல் எழுந்து ஒரு காட்டிற்குள் புகுந்தார். அங்கிருந்த ஒரு மரப்பொந்தில் நுழைந்து தவ நிலையில் ஆழ்ந்தார். தம் அனுபவங்களைப் பாடல்களாக எழுதினார். அந்தப் பாடல்கள் தான் குதம்பைச் சித்தர் பாடல்களாக உள்ளன. குதம்பைச் சித்தர் மயிலாடுதுறையில் சித்தி பெற்றதாக சித்தர் நூல்கள் கூறுகின்றன.

 அடுத்து  "கருவூராரை" வணங்கி அருள் பெற்றோம். கருவூரில் வாழ்ந்த சித்தர்களில் ஒருவர். கருவூரார் பூசாவிதி என்னும் நூலைச் செய்தவர். இவர் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.




விளையாடும் பருவத்திலேயிருந்து ஆர்வத்துடன் ஞான நூல்கலைக் கற்றார். கருவூராரின் பெற்றோர்கள் ஊர் ஊராகச் சென்று கோவில்களில் விக்ரகங்கள் செய்து கொடுத்து வாழ்ந்தார்கள். போகர் திருவாவடுதுறைக்கு வர அங்கு சென்ற கருவூரார் தம்மை அவருடைய சீடராக ஏற்றுக்கொள்ள வேண்டினார்.

போகர், கருவூராரே உன் குலதெய்வம் அம்பாள், தினந்தோறும் அவளை வழிபடு. அவள் உனக்கு வழிகாட்டுவாள் என்று வழிபாட்டு நெறிகளை உபதேசித்தார். அம்மனை உள்ளம் உருக வழிபட்டு சித்துகள் புரியும் ஞானம் பெற்றார். சிவாலயங்களில் தங்கத்தால் சிவலிங்கங்களை உண்டாக்கி வைத்தார் கருவூரார். காசிக்குச் சென்று விசுவநாதர் ஆலயத்திலும் தாமிரத்தில் வேதை செய்து தங்கமயமான லிங்கத்தை உண்டு பண்ணி வைத்தார். கருவூர் சித்தரும், திருமாளிகைத்தேவரும் போகரின் சீடர்கள்.

இரணிய வர்ம சோழன் தீர்த்த யாத்திரையாக தில்லை வந்து சிவகங்கைத் தீர்த்த குளத்தில் குளிக்கும்போது தண்னீருக்குள் ஓங்கார ஓசை கேட்க மீண்டும் நீரில் மூழ்கி நடனத்துடன் கூடிய ஓங்கார ஒலியை உறுதிப் படுத்திக் கொண்டான். தான் கண்டு கேட்டு அனுபவித்ததை அனைவரும் கண்டுகளிக்க என்ன செய்யலாம் என சிந்தித்தான். இறுதியில் சொக்கத்தங்கத்தில் விக்ரகமாகச் செய்து எல்லோரும் தரிசனம் செய்யும்படி வைக்கலாம் என முடிவு செய்தனர்.

கலப்படமில்லாத சொக்கத்தங்கத்தில் 48 நாட்களுக்குள் செய்திட சிற்பிகளுக்கு ஆணை பிறப்பித்தார். சிற்பிகளால் என்ன செய்தும் குறையின்றி விக்ரகத்தை செய்து முடிக்க முடியவில்லை. 47 நாட்கள் ஆனது. விபரம் அறிந்த போகர் சிற்பிகள் கஷ்டப்படுவதால் கருவூரா நீ போய் அதை செய்து முடி என்றார். 48 நாள் முடிவில் சிற்பிகள் தங்கள் இயலாமையால் மரணபயத்துடன் இருக்க கருவூரார் அங்கு சென்றார். அந்த அறைக்குள் நுழைந்து கதவைத் தாளிட்டுக்கொண்டார்.

நம்பிக்கையில்லாமல் வெளியில் காத்திருந்த சிற்பிகள் ஒருமணி நேரத்தில் கதவு திறந்து கருவூரார் வெளியில் வந்து உள்ளே சென்று பாருங்கள் உங்கள் எண்ணப்படியே விக்ரகம் செய்தாயிற்று என்றார். நம்ப முடியா ஆச்சரியத்தில் உள்ளே சென்ற சிற்பிகள் அங்கிருந்த சிலையைப்பார்த்து அதிசயப்பட்டனர். வெளியே வந்து கருவூரரை வணங்கினர்.

மறுநாள் சூரியோதயத்திற்கு முன் நீராடி மன்னர் திருநீற்றுக்கோலத்துடன் சிற்பிகளைப் பார்க்க வந்தான். சிலையின் அற்புத ஒளியில் மயங்கினார். தான் வரைந்த ஓவியத்தில் இல்லாத அருள்சக்து விக்ரகத்தில் இருப்பதை உணர்ந்தார். சிற்பிகளே அற்புதம். உங்களுக்கு தக்க சன்மானம் கொடுக்கப்போகிறேன் என்றார். அமைச்சர் சிலையிலிருக்கும் தங்கத்தை சோதித்து பின் வெகுமதி அளிக்கலாம் என்றார். சிலை செய்யும்போது சிந்தியிருக்கும் தங்கத்துகல்களை கொண்டுவந்து சோதனை செய்தபோது மன்னரின் முகம் இருண்டது.

சுத்தமான தங்கத்தில் செய்யும்படிநான் உங்களிடம் கூறியிருந்தேன். செம்பைக் கலந்து என்னை மோசடி செய்து விட்டீர்களே எனக் கடுமையாகக் கேட்டார். சிற்பிகள் பய்ந்து நடுங்கினர். மன்னா எங்களால் 47 நாட்களாக சிலை செய்ய முடியவில்லை. நேற்று அடியார் ஒருவர் வந்தார். அவர்தான் இதை செய்தார் என்றதும் மன்னர் திகைத்து அவரை கூட்டி வாருங்கள் என்றார். கருவூராரை அழைத்து வந்ததும் இவரை சிறையில் இடுங்கள். நான் நாளை என் தீர்ப்பை கூறுகிறேன் என்றார். விக்ரகத்தை தன்னுடன் கொண்டு சென்றார்.

விக்ரகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவர் கண்ணில் நீர் வழிந்தது. அவர் எதிரே போகர் தோன்றினார். அவர்பின்னால் ஐந்து சீடர்கள் தலையில் தங்க மூட்டையுடன் நின்றிருந்தனர். ஒருவரிடம் சிறிய தராசும் இருந்தது. ஒன்றும் புரியாமல் அவரைப் பார்த்து வணங்கினார் மன்னர். போகர். மன்னா நீ சிறையில் அடைத்திருக்கும் கருவூரர் என் மாணவன். இனி எந்தக் கருவிலும் ஊர்தல் செய்யாத தகுதி கொண்ட அவனைச் சிறையில் அடைத்து விட்டாய். இதுதான உன் ஆட்சி முறை என்றார், மன்னர் சுத்த தங்கத்தில் விக்ரகம் செய்ய சொன்னால் செம்பு கலந்து செய்ததால் அந்த தண்டனை என்றார் மன்னன்.

சுத்த தங்கத்தில் விக்ரகம் செய்ய முடியாது. சுத்த தங்கத்திலிருந்து விக்ரகம் செய்தால் அதிலிருந்து கிளம்பும் ஒளி நாளடைவில் பார்ப்பவர் கண்களை குருடாக்கிவிடும். எனவே அதில் செம்பு கலக்கச் சொன்னேன். இந்த அறிவியல்முறை உனக்குத் தெரியாதா என்றார். என்மாணவன் செம்புடன் பலவிதமூலிகை சாறுகளைச்சேர்த்து செய்திருக்கின்றான். போனது போகட்டும். இந்தா நீ கொடுத்த அதே சுத்தத் தங்கம். சிலையைக்கொடு என தரசில் நிறுத்தி சிலையை எடுத்துக் கொண்டு செல்ல முயன்ற போகரின் கால்களில் வீழ்ந்தான் மன்னன்.

நடராசப்பெருமானை உங்களிடம் தருகின்றேன். என் சீடனை என்னிடம் கொடுங்கள் என்றார் போகர். போகர் அழைக்க சிறையிலிருந்து வெளியே வந்தார் கருவூரார். கோவில் அமைய வேண்டிய முறை எந்தெந்த வடிவங்கள் எங்கெங்கு வைக்கவேண்டும் எனவும் நடராசரை எப்படி பிரதிஷ்டை செய்து பூஜை செய்யவேண்டும் என்றும் சொல்லி மறைந்தார் கருவூரார்.

கருவூரார் திருவிடைமருதூர் தலத்தை அடைந்து இறைவனை நோக்கிக் குரல் கொடுக்க இறைவன் தன் தலையை சிறிது சாய்த்து கருவூரார் குரலைக்கேட்டு பதில் தந்தார்.தஞ்சை கோவில் கும்பாபிசேகம் தடைபட்டு நிற்பதைக் கண்ட கருவூரார் உடனே கருவறை சென்று எளிய அஷ்ட பந்தனம் செய்து குபாபிஷேகமும் செய்துவைத்தார். தஞ்சையிலிருந்து திருவரங்கம் சென்ற கருவூரரை அபரஞ்சி என்ற தாசி சந்தித்தாள். வணங்கி வழிபட்டாள். ஞான சாதனையில் தன்னுடைய சந்தேகங்களைச் சொல்லி விளக்கம் கேட்டாள். அவள் சந்தேகங்களை விளாக்கினார். மறுநாள் அரங்கனிடம் சென்று அபரஞ்சிக்கு பரிசளிக்க நவரத்னமாலை ஒன்றை வாங்கி அதை அவளிடம் தந்தார். விடை பெறுகையில் அவள் வருந்தவே நீ எப்போது நினைத்தாலும் நான் வருவேன் எனக் கூறி விடைபெற்றார்.

மறுநாள் காலை திருவரங்கன் மேனியிலிருந்த நவரத்ன மாலை களவுபோய்விட்டது என்ற செய்தி அறிந்தவர்கள் அது அபரஞ்சி கழுத்திலிருப்பதை கண்டு திகைத்தனர். பஞ்சாயத்து கூடியது. பள்ளிகொண்டபெருமான் சார்பாக கருவூரார் கொடுத்தபரிசு என அபரஞ்சி சொல்ல கருவூரார் எங்கே என்றனர். அபரஞ்சிதா மனதார கருவூரரை நினைக்க, அதுசமயம் எல்லோருக்கும் கேட்கும் வண்ணம் நீங்கள் எனக்கு அலங்காரம் செய்ய நினைகின்றீர்கள். நான் என் அடியார்களுக்கு அலங்காரம் செய்து பார்க்க விரும்புகிறேன். நான்தான் அபரஞ்சிக்கு நவரத்னமாலையை கருவூரார் மூலம் அளித்தேன் என அசரீரி கேட்க ஊரார் அபரஞ்சியிடம் மன்னிப்பு கேட்டனர்.

அரசு செல்வாக்கும் ஊரார் செல்வாக்கும் கருவூரருக்கு இருப்பதைக் கண்ட அந்தணர்கள் பொறாமையினால் மதுவையும் மாமிசத்தையும் கருவூரார் வீட்டில் ஒளித்து வைத்து மன்னரிடம் கூறினார். கருவூராரின் வீட்டைச் சோதனையிட்ட காவலர்கள் ஏதுமின்றி வந்தது கண்டு அந்தணர்கள் மீது மன்னன் கோபம் கொண்டான். அவமானம் அடைந்ததனால் கடும் சினம் ஏற்பட அவர்காள் கருவூரரை கொலைசெய்ய திட்டமிட்டனர். அதையறிந்த கருவூரார் அவர்களுக்குப் பய்ந்து ஓடுவதுபோல் திருஆனிலையப்பர் கோவிலுக்குள் ஒடினார்.

கோவிலுக்குள் ஓடிய கருவூரார் “ஆனிலையப்பா, பசுபதீஸ்வரா” எனக் கூறி சிவலிங்கத்தை தழுவினார். இனி எந்தக் கருவிலும் ஊரல் இல்லாத கருவூரார் இறைவனுடன் இரண்டறக் கலந்து விட்டார். கருவூராரைத் துரத்தி வந்தர்கள் இந்த தெய்வீக காட்சியைக் கண்டனர். தங்கள் தவறுக்குப் பரிகாரமாக ஆனிலையப்பர் கோவிலில் கருவூராருக்குத் தனிசன்னதி அமைத்து வழிபட்டனர்.

கருவூரார் வாதகாவியம், வைத்தியம், யோகஞானம், பலதிட்டு, குரு நரல் சூத்திரம், பூரணஞானம், மெய் சுருக்கம், சிவஞானபோதம், கட்ப விதி முப்பு சூத்திரம், அஷ்டமாசித்து (மாந்திரீகம்) ஆகியநூல்களை எழுதினார்.

அடுத்து  "வான்மீகர் " தரிசனம் பெற்றோம்.வான்மீகர் முனிவர் புரட்டாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் அவதரித்தார். 

இவர் வாழ்ந்த காலம் 700 ஆண்டுகள் 32 நாள் ஆகும்.வடமொழியில் இராமாயணம் பாடிய வால்மீகி முனிவர் தான் தென்னகத்தில் வான்மீகர் என அழைக்கப் படுகிறார்..வான்மீகரைப் பற்றி போகர் முனிவர் புகழ்ந்து பாடியுள்ளதால் இவரை சித்தர் வரிசையில் இடம் பெறுகிறார் ...

போகர் 7000 -எனும் நூலில் பாடல் 5834 ல் வான்மீகர் எழு நூருக்கும் மேற்பட்ட காலம் வாழ்ந்ததாகவும் ..உலகிற்கு இராமாயணத்தை தந்தவர்..தமிழ் புலமை மிக்கவர் காய சித்திகொண்டு அகத்தூய்மையோடு வாழ்ந்தவர் என்றும் கூறுகிறார் ..

வான்மிக சித்தர் தமிழ் நாட்டில் திருவாரூர் மாவட்டம் எட்டுக்குடியில் உள்ள முருகன் கோவிலில் ஜீவசமாதியடைந்தார்.



"சுந்தரானந்தர்" நம்மை சுண்டி இழுத்தார்.சுந்தரானந்தர் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சித்தர். போகமுனி என்னும் சித்தரின் மாணாக்கர்.கிஷ்கிந்தையில் வாழ்ந்த நவகண்ட ரிஷியின் பேரன் என்றும், கள்ளர் குலத்தை சேர்ந்தவர் என்றும் போகர் சொல்கிறார்.இவர் மிகவும் அழகான தோற்றத்தைக் கொண்டிருந்ததால் சுந்தரானந்தர் என்று அழைக்கப் பட்டார். இவருக்கு வல்லப சித்தர் என்கிற பெயரும் உண்டு. இவர் தனது இளமைக்காலத்தில் பெற்றோர் விருப்பப்படி இல்லறவாழ்க்கையை மேற்கொண்டார் என்றும், சட்டை முனியால் ஆட்கொள்ளப் பட்டு பின்னர் அவருடனே சென்றதாகவும் சொல்லப் படுகிறது.இவர் அகத்தியர் பூசித்த லிங்கத்தை வாங்கி அதை சதுரகிரியில் பிரதிட்டை செய்து வழிபட்டுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.இவர் மதுரையிலே சமாதியடைந்ததாக சொல்லப் படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இவருக்கு தனி சந்நிதி அமைந்திருக்கிறது.



அடுத்து "கொங்கணர் " அருள் தரிசனம் பெற்றோம்.எழில் கொஞ்சும் கேரளத்தின் கொங்கண தேசத்தில் சித்திரை மாதத்தில் உத்ர நட்சத்திரத்தில் புளிஞர் குடியில் கொங்கணர் பிறந்தார் என்று அகத்தியர் பனிரெண்டாயிரமும் போகர் ஏழாயிரமும் தெரிவிக்கின்றன. கொங்கணரின் குரு போகர் ஆவார். கொங்கணர் சிறந்த அம்பிகை பக்தர்.அம்பிகையை வழிபடும் முறையையும் மந்திரங்களையும் போகர் கொங்கணருக்கு உபதேசித்துள்ளார்.கொங்கணர் நூல்கள் பல உள்ளன.அவற்றுள் சில நூல்களே அறியப்பட்டுள்ளன. தம் குருவான போகரை அணுகி ஆசி பெற்றார். அப்போது அவர், “திருமாளிகைத் தேவன் சாதகம் செய்வதில் கெட்டிக்காரன். நீ அவனிடம் போ, உனக்கு அமைதி கிடைக்கும்” என்று வழியனுப்பினார்.பின்னர் போகர் கட்டளைப்படியே திருமாளிகைத் தேவரை சந்தித்தார். கொங்கணரை எதிர்கொண்டழைத்து உபசரித்த திருமாளிகைத் தேவர், அவருக்கு பல இரகசியமான சாதனை முறைகளை உபதேசித்து சமய தீட்சை நிர்வாண தீட்சை முதலியனவற்றையும் உபதேசித்தார். அதன்பிறகு கொங்கணர் திருவேங்கட மலை சென்று தவம் செய்தார். அப்போது வலவேந்திரன் என்னும் சிற்றரசன் கொங்கணரைச் சந்தித்து அவர் சீடராக ஆனான். பலப் பல ஞான அனுபவ விவரங்களைக் கொங்கணரிடம் இருந்து அறிந்தான். அம்மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க கொங்கணர் பல பாடல்களை எளிமையான முறையில் இயற்றி அருளினார். இறுதியில் கொங்கணர் திருவேங்கடத்தில் சித்தியடைந்தார்.


"இடைக்காடர்" தரிசனம் இன்பத்துள் இன்பமாக கிடைத்தது.இவர் இடைக்காடு என்றவூரில் வாழ்ந்தவர். இடையர் குடியிலே பிறந்தவர். இதனால் இடைக்காடுச் சித்தர் எனப் பெயர் பெற்றார். இடைக்காடு - முல்லை நிலம். இங்கு ஆடு மாடு மேய்ப்பவர் - இடையர் - கோனார் எனப்படுவர். இக்கோனாரையும் ஆடுமாடுகளையும், முன்னிறுத்தி பாடியதால் இப்பெயர் பெற்றார் என்பர். பதினெண் சித்தர் வகைக்குள் இவரும் அடங்குவார்.

இவரது வரலாறு துணியப்படவில்லை. இவர் கொங்கணர் என்பாரின் சீடர் என்றும் சித்தர்கள் காலம் எனப்படும் கிபி 10-15 ஆம் நூற்றாண்டினர் என்றும் கூறுகின்றனர். சங்க காலத்தினர் என்ற கருத்தும் நிலவுகிறது. இவரது பாடல்கள் இடைக்காட்டுச் சித்தர் பாடல் என்ற நூலிலே இடம்பெறுகின்றன. இடைக்காடரின் ஞானசூத்திரம் 70 என்ற நூல் மிகவும் சிறப்புடையது. இவர் திருவண்ணாமலையில் சமாதியடைந்தார். ஜனன சாகரத்தில் சமாதியடைந்தார் என்று போகர் கூறுகிறார். 



இடைக்காடர் தரிசனம் முடித்து மீண்டும் ஒரு முறை அனைத்து சித்தர் பெருமக்களையும் வணங்கினோம்.





சித்தர் தரிசனம் முழுமை பெற்றதும், மீண்டும் ஒரு முறை அண்ணாமலையாரை வேண்டினோம். நம் அன்பர்களுக்காக அண்மையில் சென்று வந்த கிரிவலத்தின் காட்சிகள் இங்கே பகிர்கின்றோம்.
















அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...
உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்தோனே...

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

மீள்பதிவாக:-

மீண்டும் மீண்டும் கருணையாம் அருணையிலே... - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_7.html

கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_31.html 

கிரிவலம் - திருஅண்ணாமலை சிறப்புப் பதிவு (2) - http://tut-temple.blogspot.com/2017/11/2.html

திருஅண்ணாமலையாருக்கு அரோகரா ! - http://tut-temple.blogspot.com/2017/11/2.html

No comments:

Post a Comment