Subscribe

BREAKING NEWS

09 October 2018

வல்வினை நீக்கும் வல்லக்கோட்டை முருகா சரணம்

அடியார் பெருமக்களுக்கு வணக்கம்.

சற்று இடைவெளி விட்டு அனைவரையும்  இங்கே சந்திப்பதில் மகிழ்ச்சி. சனிக்கிழமை அன்று திருஅண்ணாமலை சித்தாஸ்ரமத்தில் மகேஸ்வர பூசை, கிரிவலம் என செய்தோம். ஞாயிற்றுக்கிழமை அன்று நம் TUT குடும்பத்தின் உழவாரப்பணி பனப்பாக்கத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாயூரநாதர் திருக்கோயிலில் மிக சிறப்பாக நடைபெற்றது. உழவாரப் பணி என்று அறிவித்ததும் நம் நல விரும்பிகள் "ரெட் அலெர்ட்" என்று கூறி நம்மை எச்சரித்தனர். நாம் அன்றைய தினம் காலை மழையின் தீவிரம் பார்த்து மேற்கொள்ளலாம் என்று நினைத்தோம். முருகன் அருளால் "ரெட் அலெர்ட்" ஆனது நமக்கு "கிரீன் அலெர்ட் " ஆக நமக்கு கொடுக்கப்பட்டது. அன்றைய தினம் அருமையான தரிசனமும் வாய்க்கப் பெற்றது. நேற்று மோட்ச தீப வழிபாடு பற்றி சொல்லிக் கொண்டே இருக்கலாம். புது புது அன்பர்கள் கலந்து கொண்டு TUT குழுவில் புது புது அர்த்தங்களை சேர்த்துள்ளார்கள். வெகு விரைவில் மூன்று நிகழ்வுகளின் பதிவுகளை நம் தலத்தில் அளிக்க குருவருள் வேண்டுகின்றோம்.

நவராத்திரி விழா நாளை முதல் கொண்டாடப்பட உள்ளது. இன்றைய நாள் முருகனருள் பெற நாம் இங்கு சிந்திப்போம். எந்த ஊர் முருகன்? வேறு யார்? நம் வல்லக்கோட்டை முருகப் பெருமான் தான்.நம் குழுவில் உள்ள திரு ஆதி ஐயா அவர்களின் தொடர்பினால் நேற்று நமக்கு முருகனின் அருள் பிரசாதம் கிடைத்தது. நம் குழுவினரும் நம்பிமலை சென்ற போது அருமையான தரிசனத்தை திருச்செந்தூரில் பெற்றார்கள். இதற்கும் வல்லக்கோட்டை முருகன் குழுவினரே காரணம். நாம் இன்னும் நேரில் சென்று தரிசனம் பெறவில்லை. எப்போ அழைப்பாரோ என்று ஏக்கத்துடன் வல்லக்கோட்டை முருகன் தரிசனம் பெற உள்ளோம்.

வல்லகோட்டை என்ற இடம் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ளது. வல்லக் கோட்டை ஆலயம் சென்னை நகரின் புறப் பகுதியான தாம்பரத்தில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவிலும், ஸ்ரீபெரும்புதூரின்  தெற்குப் பகுதியில் இருந்து சுமார் பன்னிரண்டு கிலோ தொலைவில் ஸ்ரீபெரும்புதூர் - செங்கல்பட்டு வழித் தடத்தில் உள்ளது. அருணகிரிநாதர் இயற்றியப் பாடல்களில் வல்லக் கோட்டையை கோட்டை நகர் , கோட்டையாம் பட்டி, கோடை எனும் பட்டி , மற்றும் கோட்டை என்றெல்லாம் கூறி உள்ளார். அருணகிரிநாதர் இந்த ஆலயத்தைப் பற்றி பல பெயர்களில் எழுதி இருந்தாலும் அந்த ஆலயத்தை வல்லக்கோட்டை என்றே தற்போது அழைக்கின்றார்கள். அந்த ஆலயத்திற்கு அந்தப் பெயர் வந்ததற்கான பல காரணங்கள் கூறப்பட்டாலும் அவற்றில் ஒரே ஒரு காரணம் மட்டும் ஏற்றுக் கொள்ளும் வகையில் உள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் வல்லக் கோட்டைக்கு அருகில் உள்ள திருப்பட்டியில் ஒரு முருகன் ஆலயம் வல்லம் என்ற பெயரில் இருந்தது. அதனால்தான் அந்தப் பெயரையும் சேர்த்தே பண்டையக் கால மக்கள் வல்லம் என்ற இருந்த இடத்தில் உள்ள கோட்டை என்பதை மருவி வல்லக்கோட்டை என அழைத்தார்கள். எது எப்படி இருந்த போதிலும் முருகனுக்கு ஆலயம் அமைத்த பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அதாவது எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து இருந்த அருணகிரிநாதரின் காலத்துக்கும் முன்பே அந்த ஆலயம் இருந்து இருக்க வேண்டும் என்பதின் காரணம் அந்த ஆலயத்தின் பெருமையை அருணகிரிநாதர் தான் இயற்றிய ஏழு பாடல்கள் மூலம் கூறி உள்ளார். (பாடல்கள் 707 முதல் 713 வரை, பாகம்-4 . அருணகிரிநாதரின் திருப்புகழ்: வெளியிட்டோர் சைவ சித்தாந்தக் கழகம்)

அந்த ஆலயத்தில் உள்ள சிற்பங்களில் முக்கியமாக நிற்கும் நிலையில் வடிவமைக்கப்பட்டு உள்ள வள்ளி மற்றும் தெய்வானை பல்லவ நாட்டுக் கலைவண்ணத்தை எடுத்துக் காட்டும் வகையில் அமைந்து உள்ளது. சிவன் மற்றும் விஷ்ணுவிற்கு பல்லவர்கள் பல இடங்களிலும் ஆலயங்களை எழுப்பி உள்ளார்கள். ஆராய்ச்சியில் கிடைத்த ஆவணங்கள் மூலம் கோட்டை நகரில் உள்ள வல்லம் ஆலயமும் அவற்றில் ஒன்று எனத் தெரிகின்றது. பல்லவர்களின் சிற்பக் கலை எப்படி இருந்தது என்றால் அவர்கள் எழுப்பிய ஆலயங்கள் அனைத்துமே பாறைகளைக் குடைந்து , அதில் இருந்த பாறைகளின் மீதே சிற்பங்கள் செதுக்கப்பட்டு உள்ளன. மேலும் அவற்றை செதுக்குவதற்கு கற்களையோ, ஜல்லிகளையோ அல்லது மற்ற எந்த விதமான உலோகங்களையோ அவர்கள் பயன்படுத்தவில்லை. அப்படிப்பட்ட பொருட்களை பயன்படுத்தாமல் சிற்பங்களை எப்படி வடிவமைத்தார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் எனில் வல்லக்கோட்டை ஆலயத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தமது ஆராய்ச்சியில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு வலுவான காரணம்,அந்த குகை சிற்பங்களை செய்ய பயன்படுத்தியதாக கூற அப்படிப்பட்டப் எந்தப் பொருட்களுமே ஆராய்ச்சியாளர்களுக்கு இதுவரைக் கிடைக்கவில்லை. பழுதடைந்து இருந்த ஆலயம் தற்போது புதுப்பிக்கப்பட்டு விட்டதினால் அங்கு பக்தர்களும் பெருமளவில் வருகின்றார்கள் என்பதில் இருந்தே அந்த ஆலயம் எந்த அளவு மகிமைப் பெற்று இருந்திருக்கும் என்பதை தெரிந்து கொள்ள முடியும் .

 'தனி நபர்களின் நன்கொடையினால் மட்டும் அந்த ஆலயத்தை புதுப்பிக்க முடியாது. அதற்கு பெரும் அளவு நன்கொடைகள் வேண்டும்' என்பதினால் கிருபானந்தவாரியார், மயிலை ரத்னகிரி முருகன் அடிமை ஸ்வாமிகள் மற்றும் சுவாமி ராமதாஸ் போன்றவர்கள் பெரும் முயற்சிகளை எடுத்துக் கொண்டு அதைப் புதுப்பித்து கும்பாபிஷேகமும் செய்தார்கள். எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னால் அந்த ஆலயத்தின் பெருமையை அருணகிரிநாதர் பாடி உள்ளார் என்பதினால் அந்த ஆலயம் நிச்சயமாக எழுநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருந்திருக்க வேண்டும். அவர் அந்த ஆலயம் உள்ள இடத்துக்கு சென்றபோது அந்த ஆலயத்தின் தல விருத்ஷமான பாட்டரி என்ற மரத்தின் அடியில்தான் அவர் முருகனின் அருளைப் பெற்றார். அப்போது ஆலயம் போன்று தோற்றம் தரும் எதுவுமே அங்கு இல்லை.


இலஞ்சி  ராஜ்யத்தின் மன்னனான பகீரதன் என்பவனே அந்த ஆலயத்தை நிர்மாணித்து உள்ளார். ஆனால் அந்த மன்னன் ஆண்ட காலம் என்பது தெரியவில்லை. அவர்தான் கங்கையை பூமிக்கு கொண்டு வந்த பகீரதனா என்பதும் தெரியவில்லை. இலஞ்சி என்பது மிகச் சிறிய ராஜ்ஜியம். அப்படி என்றால் அத்தனை தொலைவில் இருந்து அவர் ஏன் இங்கு வந்து பல்லவர்கள் ஆண்ட பூமியில் ஆலயத்தை நிர்மாணித்து இருக்க வேண்டும்? அதற்கு ஸ்தல புராணத்தில் விடை உள்ளது. பகீரதன் மிகவும் கர்வம் பிடித்தவன். ரிஷி முனிவர்களை மதித்தது இல்லை. ஒருமுறை நாரதர் அவனிடம் வந்தபோது அவரை உட்காரச் சொல்லாமல் தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டானாம். அதனால் நாரத முனிவர் வருத்தம் அடைந்தார். அப்போது எதிர் திசையில் இருந்து கோரன் எனும் அசுரன் பெரும் படையுடன் வந்து கொண்டு இருந்தான். நாரதரைக் கண்ட அவன் எந்த விதமான கர்வமும் இன்றி அவர் அருகில் சென்று அவரை வணங்கினான். ஆகவே அவன் மூலமே பகீரதனுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என நாரதர் எண்ணினார்.

கோரனிடம் நாரதர் அந்த பெரும் படையுடன் அவன் எங்கு செல்கிறான் எனக் கேட்க அவனும் தான் ஒரு அஸ்வமேத யாகம் செய்ய உள்ளதினால் அதற்கு முன் நூறு மன்னர்களை வெல்ல வேண்டி உள்ளது என்றும் அதற்காக அவன் படையுடன் செல்வதாகக் கூற, அதைக் கேட்ட நாரதர் அவனை இலஞ்சி நாட்டு மன்னன் மீது படையெடுத்து அவனை வென்றப் பின் பின் மற்ற நூறு மன்னர்களையும் வென்று அஸ்வமேத யாகத்தை நடத்துமாறுக் கூற அவனும் நாரதரின் அறிவுரையை ஏற்று பகீரதன் மீது படை எடுத்து அவன் நாட்டைப் பிடித்துக் கொள்ள பகீரதனும் நாட்டை விட்டு தப்பிச் சென்று என்ன செய்வது எனப் புரியாமல் அங்கும் இங்கும் அலைந்தான். ஒருநாள் வழியில் அவன் நாரத முனியைக் கண்டான். ஓடோடிச் சென்று அவர் கால்களில் விழுந்து தான் செய்த அவமரியாதைக்கு மன்னிப்புக் கோரி அவரை தனக்கு உதவுமாறு வேண்டினான். அப்போது அவனது கர்வமும், ஆணவமும் முற்றிலும் அழிந்து போய் இருந்தது. ஆகவே அவன் மீது கருணைக் கொண்ட நாரதரும் அவனிடம் துர்வாச முனிவரை சந்தித்து அவரிடம் அதற்கு வழி கேட்குமாறுக் கூறி அனுப்பினார்.

அவனும் தயங்காமல் அங்கிருந்து கிளம்பிச் சென்று துர்வாச முனிவரிடம் தான் இழந்த வீடுகளையும் நாட்டையும் திரும்பிப் பெற தனக்கு உதவுமாறுக் கூற அவரோ அவன் இழந்து விட்ட ராஜ்ஜியத்தை மீண்டும் திரும்பப் பெற வேண்டும் எனில் அப்படியே தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட திசை வழியே சென்று கொண்டு இருந்தால் ஒரு இடத்தில் முருகன் தனது இரண்டு மனைவிகளுடன் ஒரு பாதிரி  மரத்தின் கீழ் வாசம் செய்வதைக் காண முடியும் என்றும், அங்கு சென்று வெள்ளிக் கிழமைகளில் விரதம் இருந்து அவரை வழிபட்டால் விடிவு காலம் பிறக்கும் என்றார். பகீரதனும் அவர் கூறியபடியே அங்கும் இங்கும் சுற்றியப் பின் கோட்டை நகரை அடைந்தார். துர்வாச முனிவர் கூறிய அனைத்து அடையாளங்களும் அங்கு இருந்தன. ஆகவே அவன் முனிவர் கூறியபடியே அங்கு தவம் இருந்து முருகனின் அருளினால் தான் இழந்த அனைத்தையுமே சில காலங்களில் திரும்பப் பெற்றான். அதனால் மனம் மகிழ்ந்து அவன் அந்த இடத்தில் முருகனுக்கு ஆலயம் ஒன்றை அமைத்தான்.



அந்தக் கட்டத்தில்தான் திருபோரூரில் இருந்து திருத்தணிக்கு சென்று கொண்டு இருந்த அருணகிரிநாதர் முருகனின் இருப்பிடமான பாதிரி  மரம் இருந்த இடத்தை அடைந்தார். அதன் அருகில் இருந்தக் குளத்தின் அருகில் இருந்த இன்னொரு மரத்தின் அடியில் சென்று உறங்கியவர் 'என்னை மறந்து விட்டாயா அருணகிரி?' என்றக் குரல் கேட்டு எழுந்தார். அந்தக் குரல் மூன்று முறை ஒலித்தது. எழுந்தவர் குரல் கொடுத்தவரைத் தேடினார். அருகில் யாருமே தென்படவில்லை. அப்போது அவர் பாதிரி  மரத்தின் அடியில் அமர்ந்து இருந்த முருகனைக் கண்டு ஆனந்த கூத்தாடி அவர் மீது ஏழு பாடல்களைப் திருப்புகழ் என்ற பெயரில் பாடினார். வல்லக் கோட்டை ஆலயத்தை கோட ஆண்டவர் ஆலயம் என்று அழைத்தார்கள். அந்த ஆலயத்தில் உள்ள முருகனின் சிலைக்கு ஈடாக தமிழ் நாட்டில் வேறு எங்குமே ஒரு சிலை கிடையாது. கடந்த பத்து ஆண்டுகளாக இந்த  ஆலயம் புகழ் பெற்று விளங்குகிறது.



முன்னர் அந்த ஆலயத்திற்கு  மக்கள் செல்ல வாகன வசதிகள் இல்லாத நிலையில் இருந்ததினால் இன்று உள்ளதைப் போல  அப்போது பிரபலம் அடையவில்லை. ஆனால்  இப்போதோ அந்த ஆலயத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள் செல்ல முடிகின்றது. அங்குள்ள இரண்டு மீட்டர் உயரமுள்ள முருகனின் சிலையைக் கண்டு மக்கள் பரவசம் அடைகிறார்கள்.




ஞாயிற்றுக் கிழமைகளில் மகாபிஷேகம் நடைபெறுகின்றது. சென்னையில் இருந்தும் அதை சுற்றி உள்ளப் பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் விடுமுறை நாட்களிலும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் இங்கு வருகிறார்கள். அப்போது  அன்னதானமும் நடை பெறுகின்றது. தமிழ் புத்தாண்டு, கிருத்திகை, சஷ்டி போன்ற தினங்களில் விசேஷ பூஜை நடைபெறுகின்றது. 1997 ஆம் ஆண்டு முதல் சில பக்தர்கள் ஒன்றிணைந்து அந்த ஆலயத்தை சுத்தம் செய்து அங்கு வரும் பக்தர்களுக்கு பயனுள்ள முறையில் ஆலய வளாகத்தை மாற்ற முயற்சிகளை எடுத்து வந்துள்ளனர். அந்த முயற்சியின் முதல் கட்டமே ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் நடைபெறும் அன்னதான நிகழ்ச்சி. முன்பெல்லாம் அந்த ஆலயத்துக்கு வருகை தரும் மக்கள் ஆலய தரிசனம் செய்த பின் தமக்கும் தமது குழந்தைகளுக்கும் உணவு அருந்த நல்ல உணவகம் இருக்குமா என்று கவலைப்படுவது உண்டு. அந்தக் குறையைக் களையவே பூஜை முடிந்ததும் அன்னதானம் நடைபெறும் இடத்தில் சென்று உணவு அருந்தி விட்டுப் போக வேண்டும் என அங்கு வருகை தருபவர்கள் அனைவரையும் ஆலய நிர்வாகிகள் அழைப்பார்கள். ஆகவே தங்களை ஒரு விருந்தாளி போலவே நினைத்து உணவு தருவதாக மக்கள் நினைக்கின்றார்கள்.







7 அடி உயரத்தில் கிழக்கு நோக்கிய திருமேனி முருகனுக்கு எதிரே இரட்டை மயில் காண கண் கோடி வேண்டும்.







கோடை ஆண்டவர் தரிசனம் பெற்றீர்களா? இங்கு கிருத்திகை தோறும் கிடைக்கும் மலர் எ;அலங்கார முருகன் தரிசனம் மிக மிக பிரசித்தம். வெகு விரைவில் நேரில் கண்டு இன்புற வேண்டுகின்றோம்.


இதோ.. வல்லக்கோட்டை முருகன் கோயிலில் நடைபெற உள்ள நவராத்திரி விழா அழைப்பிதழ் இணைத்துள்ளோம். வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவும்.




இன்னும் வல்லக்கோட்டை முருகன் புகழ் தொடரும். 



நேற்று அழகான பரிசாக கிடைத்த முருகப்பெருமானின் பாதம் தொட்டு பதிவை முழுமை செய்கின்றோம். முருகனருள் முன்னிற்க மீண்டும் சந்திப்போம்.

மீள்பதிவாக:-

சிவன்மலை கந்தன் பாதம் கனவிலும் காக்கும் - http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_20.html

இது சிவன் மலை ஆண்டவன் கட்டளை - உத்தரவுப் பெட்டி - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_19.html

கந்தனுக்கு அரோகரா... ஆடிக் கிருத்திகை தரிசனம் - http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_7.html
ஆடிக் கிருத்திகை - மாற்றம் அதை தந்திடுவான் மீஞ்சூரான் - http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_3.html 

திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_27.html

திருப்புகழைக் கேட்கும் செவி - ஸ்ரீமத் அருணகிரிநாதர் குருபூஜை விழா - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_54.html

அழகெல்லாம் முருகனே ... அருளெல்லாம் முருகனே... - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_47.html

தேனி சண்முகநாத மலை தரிசனம் (1) - http://tut-temple.blogspot.com/2018/06/1.html

வெற்றி வேல் வீர வேல் - தேனி சண்முகநாத மலை தரிசனம் - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post.html

இது சிவன் மலை ஆண்டவன் கட்டளை - உத்தரவுப் பெட்டி - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_19.html

சண்முகா சரணம் - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_84.html

முருகன் அருள் முன்னிற்க! பங்குனி உத்திரம் 2018 - http://tut-temple.blogspot.in/2018/03/2018.html

முருகன் அருள் முன்னிற்க! - பங்குனி உத்திரம் கொண்டாட்டம் - http://tut-temple.blogspot.com/2018/04/blog-post.html

நால்வரின் பாதையில்... திருப்புகழ் தலங்கள் - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_30.html

வேலை வணங்குவதே நம் வேலை! - http://tut-temple.blogspot.com/2018/04/blog-post_2.html

No comments:

Post a Comment